Friday, 2 May 2025

10.ஹாங்காங்கில்

  என் எஸ் ப்ரண்டியர் நாட்குறிப்புகள் 2025

              தைவானிலிருந்து புறப்பட்டு முப்பது மணிநேர பயணத்தில் ஹாங்காங்கில் எண்ணெய் நிரப்புவதற்காக கப்பலை நிறுத்தினோம். மலைக்குன்றுகள்சூழ அருகருகில் நிறைய கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சி நின்றுகொண்டிருந்தது.கடலம்மா சாந்தமாக இருந்தாள். முன்பும் இங்கு பலமுறை வந்திருக்கிறேன். 

ஹாங்காங் சைனாவை ஒட்டியிருக்கும் மிகச்சிறிய நாடு. மலைகளும் அதை இணைக்க கடலுக்குள் செல்லும் பாலமும்,உச்சியில் நின்றால் கைக்கெட்டும் தூரத்தில் வானத்தை முட்டிவிடும்  கட்டிடங்களும் காட்சியாயின. சன்னி ஜாய் கப்பலில் 2020ஆம் ஆண்டு சைனாவின் யூ லியான் வந்தபோது இங்கே வசிக்கும் ஜெகதீஸ் யூ லி யான் தீவு அருகில்வரை வந்து எங்கள் கப்பலை தனது மகன்களுக்கு காண்பித்து படம்பிடித்து அனுப்பினார்.

      இப்போதும் ஜகதீசுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். ஐந்து நிமிடத்தில் வாட்சப்பில்  அழைத்தார். “ஷாகுல் இருக்குமிடத்தை லொக்கேசன் ஷேர் பண்ணுங்க” என்றார்.

கப்பலிலிருந்து 

ஜெகதீஷ் வீட்டிலிருந்து எடுத்த படம் 



  கடல் பார்த்த அவரது அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து எடுத்த படத்தை அனுப்பினார். அவரது வீட்டிலிருந்து பதினைந்து மைல் தூரத்தில் நான் இருப்பதாகவும் மிக அருகில் வந்துவிட்டு பார்க்காமலே செல்கிறீர்கள் எனவும் சொன்னார். படத்தில் கண்ட அவரது  வீட்டு ஜன்னல் தெரிகிறதா எனத்தேடினேன்.எங்கு சென்றாலும் எனக்கு நண்பர்கள் உண்டு எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகன் ஆனபின் உலகம் முழுவதும் நண்பர்கள் அமைந்தது ஒரு நல்லூழ்.

ஹாங்காங்கில் நிறுத்தும் முன் நடந்த பங்கர் கூட்டத்தில் காப்டன் “இங்கு பங்கர் எப்படி  யாருக்காவது அனுபவம் உள்ளதா” எனக்கேட்டார். “நீட் பங்கர் காப்டன் சாப்,மிகச்சரியாக தருவார்கள்,பத்து ஆண்டுகளுக்கு முன் இங்கே பங்கர் எடுத்திருக்கிறேன்”என்றேன். 

“பத்து வருசத்துல ரொம்ப மாறியிருக்கும்” என்றார்

  மாலை ஆறு மணிவாக்கில் கப்பலை நங்கூரம் பாய்ச்சியபின் எண்ணெய் தரும் கப்பல் அருகணைந்தது மிகச்சிறிய பார்ஜ் அது. மொத்தம் எண்ணூற்றி ஐம்பது மெட்ரிக் டன் எரிஎண்ணெய் நிரப்பும் பொருட்டு பங்கர் பார்ஜின் குழாய் கப்பலுடன் இணைத்து எண்ணெய் கப்பலின் தொட்டிகளுக்குள் விழுந்துகொண்டிருந்தது.

   இஞ்சின் ரூம் டீம் இம்முறை என்னை அழைக்கவேயில்லை.எட்டரை மணிக்கு டெக்கில் பணியிலிருந்த சாகரிடம் கேட்டேன். எல்லாம் சீராக போய்க்கொண்டிருக்கிறது பதினொரு மணிக்கு பங்கர் முடிந்துவிடும் என்றான்.நான் இரவு ஒன்பது மணிக்கே தூங்கிவிட்டேன். இரவில் கப்பல் பலமாக ஆடத்தொடங்கியது.அதனால் ஏற்பட்ட ஓசை,அறைகளில் கட்டி வைக்காத பொருட்கள் உருண்டோடி எழுந்த சப்தத்தினால் பதினோரு மணி,ஒரு மணி,மூன்று மணி என பலமுறை விழித்துக்கொண்டேன். நான்கு மணி விழிப்பில் கண்ணாடி ஜன்னல் வழியாக விளக்குகள் எரிவது தெரிந்தது  கப்பல் நின்றுகொண்டே இருந்தது. ஏன் கப்பல் புறப்படவில்லை எனும் எண்ணத்திலேயே எழுந்து பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டேன்.

   நங்கூரம் உருவி இன்ஜினை இயக்கும் அதிர்வில் கப்பல் புறப்பட்டது என உணர்ந்து எழுந்தபோது மணி ஐந்தாகியிருந்தது.அதிகாலை தொழுகையை நிறைவேற்றியபின்  அடுமனையில் சமையல்காரரை சந்தித்தேன். “இரவில் தூங்கவேயில்லை கடுமையான ஆட்டம்” என்றபோது.

“உனக்கு விஷயம் தெரியாதா, ராத்திரி பங்கர் பார்ஜ் கப்பலைவிட்டு ரொம்ப விலகி போயிட்டு,நல்ல வேளை பங்கர் ஹோஸ் கட்டாவல்ல,எப்டியோ பெரிய பிரச்னை கிட்ட வர வந்து தப்பிட்டு” என்றார். 

  இரவு பணியிலிருத்த அனைவரும் துயிலில் இருக்க காலை எட்டுமணிக்கு இயந்திர கட்டுபாட்டு அறையில் முதன்மை இஞ்சினியரை நானும்,பத்திசாபும் சந்தித்தபோது அவர் விளக்கினார் என்ன நடந்தது என.

   எண்ணூற்றி ஐம்பது மெட்ரிக்டன் எண்ணெயை தர எங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனம் அனுப்பிய கப்பலில் அறுநூறு டன்கள் மட்டுமே எண்ணெய் இருந்தது. மீதியை வேறொரு பார்ஜ் தரும் என்றார்கள்.

குழாய் பொருத்தப்பட்டு எண்ணெய் நிறைக்கும் பணி துவங்கிய இரு மணிநேரத்தில் லேசான அலைகளுடன் கப்பல் ஆடத்தொடங்கியது அப்போதே இன்னொரு பங்கர்பார்ஜ் முதல் பார்ஜ்டன் கட்டப்பட்டது. ஐநூறு டன் எண்ணெய் கப்பலுக்கு வந்தபின் ஏற்பட்ட கால நிலை மாற்றம்,மூன்று மீட்டருக்கு மேல் எழுந்த அலைகளால் எண்ணெய் தரும் சிறு கப்பல்கள்(பங்கர் பார்ஜ்)மேலும்,கீழுமாக,வலமிடமாக அலைக்கழிக்கபட்டு  பத்து மீட்டருக்குமேல் விலகி சென்றுவிட்டது.இணைக்கப்பட்டிருந்த ரப்பர் குழாய் இழுபட்டு,அறுபடும் நிலையில் பங்கர் ஆப்ரேசன் நிறுத்தபட்டது. பார்ஜை கப்ப்லுடன் கட்டியிருந்த கயிறுகள் அறுந்து தெறிந்தபோது பங்கர் பார்ஜ் மேலும் விலகி சென்றது. 

   பங்கர் ஆப்ரேசனில்  ஒரு துளி எண்ணெய் கூட கடலில் சென்றுவிடக்கூடாது.பாதுகாப்பு விதிமுறைகள்,சட்டங்கள் மிக கடுமையாக இருக்கிறது.கரையிலோ,கடலிலோ கப்பல்கள் எண்ணையை கொட்டினால் அதில் சம்பந்தபட்டவர்கள் மீதி வாழ்வை ஜெயிலில் கழிக்க வேண்டும்.கப்பல்கள் கரைக்கு வரும்போதெல்லாம் கப்பலிலிருந்து கடலில் தண்ணீர் வெளியேற்றும் குழாய்களை கப்பலுக்குள் வரும் ஆய்வாளர்கள் சோதித்து உறுதி செய்வார்கள். கப்பலில் எண்ணெய் கலந்த தண்ணீரை OWS(oily water seperetor) எனும் இயந்திரம் மூலம் பிரிக்கப்பட்டு 15ppm (15parts per millon) அதாவது பத்துலட்சம் லிட்டர் நீரில் பதினைந்து துகள் அளவுக்கு மட்டுமே எண்ணெய் கலந்த நீரை வெளியேற்ற முடியும். 

  அப்படி லேசாக எண்ணெய்கலந்த நீரை  OWS இயந்திரத்தை இயக்கி பிரித்து 15ppm  அளவுக்குள் உள்ள நீரை வெளியேற்றும் முன் காப்டனிடம் அனுமதி பெற்று கப்பல் பயணிக்கும் இடம், நீர் வெளியேற்ற துவங்கிய நேரம்,முடிந்த நேரம்  ஆகியவை குறிக்கப்பட்டு அந்த ஆவணங்கள் பாதுகாக்க வேண்டும். நீர் வெளியேற்றும் முன் சீல் செய்து பூட்டி வைத்திருந்த வால்வுகள் முதன்மை இஞ்சினியரால் திறக்கபட்டு,நீர் வெளியேற்றும் பணி முடிந்த பின் முக்கிய குழாய்கள் மீண்டும் சீல் செய்யப்பட்டு அதன் எண்கள் ஆவணத்தில் பதிந்து கொள்ள வேண்டும். அவை எங்கு வேண்டுமென்றாலும் சோதனைக்கு உள்ளாகும்.

முதன்மை இஞ்சினியர் மற்றும் காப்டன் நீண்ட ஆலோசனைக்குப்பின் மீதியுள்ள எண்ணையை வாங்குவதில்லை  என முடிவு செய்து கம்பனிக்கு பலமுறை முயற்சித்து நள்ளிரவில் போனில் விசயத்தை தெரியபடுத்திவிட்டு. பெரும் சிரமத்திற்குபின் பார்ஜின் ரப்பர் குழாயை விடுவித்துள்ளனர்.

  சரியாக சொன்னால் பேராபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது. இஞ்சின் பிட்டர் ராஜேஷ் “ஜெயில் வாசல் வர போயிட்டு தப்புதனாக்கும் என்றார்.

  கடலில் காற்றின்வேகம்,பேரலைகள் எப்போது உக்கிரமாகும் என கணிக்கவே இயலாது. கடலம்மா நினைத்தால் சீறிவிடுவாள்.

  அடுத்து சரக்கு நிறைக்க கப்பல் ஆஸ்திரேலியாவின் டாம்பியர் துறைமுகத்தை நோக்கி பயணத்தை தொடங்கியிருந்தது.

நாஞ்சில் ஹமீது,

02 May 2025.

sunitashahul@gmail.com

No comments:

Post a Comment