Friday 17 April 2020

பக்கரு -சிறுகதை

பக்கரு –சிறுகதை

  அதிகாலை வடசேரி பள்ளியில் *ஸுபஹ் தொழுகைக்கான பாங்கு காற்றில் மிதந்து வந்தது அல்லாஹ் அக்பர்,அல்லாஹ் அக்பர்.பக்கரின் வீட்டுக்காரி வியாத்தகண்ணு பக்கருடைய  கழுத்து, ,நெற்றியில்  கை வைத்து  பார்த்துவிட்டு  “தீ போல கொதிக்குது நீங்கோ இன்னைக்கு கடைக்கி போவாண்டாம்”என்றாள் பக்கரிடம்.

  “ராத்திரியே நல்ல காய்ச்சலாத்தான் இருந்துது.கடையிலயிருந்து வரும்போது ஒரு அஞ்சால் அலுப்பு மருந்த கட்டன் சாயால கலந்து குடிச்சிட்டுத்தான் வந்து படுத்தேன்.காலத்த செரி ஆவுண்ணும் நினேச்சன்.நீ போய் தண்ணி போட்டு கொண்டுவா” என வியாத்தகண்ணுவிடம் சொல்லிவிட்டு இடப்புறமாக சரிந்து கையை ஊன்றி மெதுவாக எழுந்து பாயில் அமர்ந்தார் பக்கர்.வியாத்தகண்ணு சுக்கும்,மிளகும்,கொத்தமல்லியும்,ஜீரகமும் சேர்த்து இடித்து சுக்குகாப்பிக்கு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி ,துண்டு கருப்பட்டியை போட்டு அடுப்பை பத்தவைத்தாள்.
    
  
    உம்மா,வாப்பா வைத்த பெயர்  அபூபக்கரா இருந்தாலும்,அவரை அனைவரும் அழைப்பது பக்கரு என்றுதான் .ரேஷன்கார்டுக்கு பேரு எழுதும்போதுதான் தன் பெயர் அபூபக்கர் என அவருக்கே நினைவுக்கு வரும் .
  
   பக்கரு பதினெட்டு வருடமாக வேலை செய்வது நாகர்கோயிலில்   மணிக்கூண்டு அருகில் உள்ள அசன் மொதலாளி நடத்தும் அம்ஸா சைவ,அசைவ ஹோட்டலில் .அம்ஸா ஹோட்டல் என்று சொன்னால் மாவட்டத்திலும் ,அருகில் உள்ள கேரளாவிலும்  தெரியாதவர்கள் கிடையாது . "நல்ல பேரு கேட்ட ஹோட்டலாக்கும் நாக்குக்கு ருசியான கோழி பிரியாணி,ஆட்டிறைச்சி பிரியாணி இல்லானக்க நல்ல புரோட்டாவும்,மாட்டிறைச்சியும்,எறச்சி சால்னா ஊத்தி,முட்டையும் போட்டு கொத்துன கொத்துப்புரோட்டா தின்னனும்னாக்க அம்ஸா ஹோட்டலுக்குதான் போனும்னு" சுவை அறிந்தவர்கள் சொல்வதுண்டு.
  

    பக்கரு பிறந்தஊர் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகிலுள்ள துலுக்கப்பட்டி. தனது திருமணத்திற்கு பிறகு வருமானம் போதாமால் இவ்வூருக்கு வந்தார் .வடசேரி ஓட்டு பெரைத்தெருவில் வசித்தபோது பக்கத்துவீட்டு பாத்திமுத்துவின் வீட்டுகாரர் தனது செல்வாக்கை பயன்படுத்தி பக்கரை அம்ஸா ஹோட்டலில் வேலைக்கு சேர்த்துவிட்டார்.
 பக்கர் எண்பத்தைந்தில் அம்ஸா ஹோட்டலில் பணிக்கு சேரும்போது தின சம்பளம் பனிரெண்டு ரூபாய், வெளியூர் ஆட்கள் சாப்பிட வந்தால் ஐம்பது பைசா,ஒரு ரூபாய் என  கைமடக்கு கிடைத்தால்  ஒரு ஐஞ்சு முதல்  ஏழு ரூபாய் கிடைக்கும்.ஒன்னும் கிடைக்காத  நாட்களும் நிறைய  உண்டு. அப்போது  பெரிய முதலாளி அன்வர் கடையில்  இருந்தார் அவர் மாத சம்பளம் தரும்போது கணக்கு பாக்காமல் புள்ள,குட்டிகாரன்னு ஐஞ்சி ரூபாய் கூட அதிகமாக தருவார்
  
    அன்வர் முதலாளி எண்பத்தேழில் மரித்தபின்   அவருடைய  மச்சினன் அசன் முதலாளி தான் கடையை நடத்துகிறார்.இவுரு கொஞ்சம் முசுடு ,எல்லாவற்றுக்கும்  கணக்கு பார்ப்பார் .வாயில் வந்தது போல பணியாளர்களை திட்டுவதால், யாரும் இங்கே அதிக நாட்கள் பணியில் தாக்கு பிடிப்பதில்லை .பக்கரும் இன்னும் சிலரும் மட்டும் குடும்ப சூழல் கருதி எதையும் காதில் வாங்குவதில்லை.

    அம்ஸா ஹோட்டலின் அசைவ பிரிவில் தற்போது பக்கர் கவனிக்கும் நான்கு மேசைகளும் அவர் பணிக்கு சேர்ந்தபுதிதில் இப்ராகிம் தான் இருந்தார். 'இப்ராகிம் கஸ்டமர்ட்ட  ரெண்டு சிக்கன் பிரை,ஒரு பிளேட் மட்டன  குடுத்துட்டு  ஒரு முட்டைகறிக்கு மட்டும் பில் போட்டு கைமடக்கு வாங்கத்துல ரஹீம் பிடிச்சு போட்டாரு,அதனால முதலாளி இப்ராகிம நிருத்திடாரூ"  என ராமச்சந்திரன் சொன்னார். பொறவு அங்க நின்னது ஐயப்பன் ,அவன் கோயிலு கொடைக்கு முதலாளிட்ட ஆயிரம் ரூவா வாங்கிட்டு போனவன் திரும்பி வரல .அப்போதுதான் அசன் முதலாளி பக்கரை அழைத்து  “நீ அந்த பேமிலி முறிக்க கிட்ட உள்ள மேசைல நில்லுடே”என்றார்.
  
     அன்று பக்கர்,மனைவி வியாத்தகண்ணுவிடம் “இன்னேலேருந்து எனக்க டேபிளு மாத்தமாக்கும் என்னமும் சில்லற படியறும் அதுல”என முகத்தை கோணலாக்கி சிரித்தார்.பக்கர் இருப்பாதாலேயே அம்ஸா ஹோட்டலுக்கு பல நிரந்தர வாடிக்கையாளர்கள் உண்டு.அம்ஸா ஹோட்டல் பரபரப்பாக இயங்கும் மதிய வேளைகளில் பக்கர் மூன்று ப்ளேட் பிரியாணி,இரண்டு சிறிய ப்ளேட் சிக்கனை வலது கையிலும்,இடக்கையில் ஒரு பிளேட்டுமாக கொண்டு செல்வதை வாடிக்கையாளர்கள் கண்கள் விரிய பார்ப்பதுண்டு.
   
        நெய்யூர் ஆஸ்பத்திரி டாக்டர் கீயுபட் நாகர்கோயிலுக்கு வந்தால் அம்ஸாவில்  ஒரு பிரியாணி தின்னுட்டுத்தான் செல்வார்  .அன்று சனிக்கிழமை டாக்டர் கீயுபட் வந்திருந்தார் .
“என்ன பக்கரே சொகமா இருக்கீரா”
“டாக்டர் வரணும் நல்லா இருக்கேன் ,நீங்கோ சொகந்தானா? ஒருவாரமா கை முட்டுல லேசா வலி”என்றார் பக்கர் 
 “அடி என்னமும் பட்டுதா ஓய்” என சட்டைபைலிருந்து கண் கண்ணாடியை எடுத்து போட்டுவிட்டு பக்கரின் கையில் அழுத்தி பார்த்தார் டாக்டர் கியூபட் .
 “ ரெத்தகெட்டு இருக்குவோய்,இதுக்கெல்லாம்  இங்க்லீஷ் மருந்து வேண்டாம்,கோபால் ஆசான்ட்ட சொல்லி ஆலம் பால் தைலம் வாங்கி ஒருவாரம் போடும் அடுத்த வாரம் நான் வரத்துல பாக்குலாம்” என்றார்.
   


        "இன்னைக்கி பிரியாணி மாஸ்டர் மாத்தமாக்கும் சுலைமான் பாய் மொவளுக்கு கல்யாணம்ன்னு கடையநல்லூருக்கு போயிட்டாரு, சுபைராக்கும் இன்னைக்கி மாஸ்டரு , நெய்சோறும் கறியும் சாப்புடுங்கோ நல்லா இருக்கும் ,இல்லன்னா உங்களுக்கு பிடிச்ச பொரிச்ச நெய்மீன் இருக்கு,காலத்த சூசை கன்னியாமரியிலருந்து கொண்டு வரத்துல துடிச்சிட்டு இருந்தது”.என்றார் பக்கர். “சரி நீரு சொன்ன பொறவு நான் பிரியாணி தின்னபுடாது,பொரிச்ச மீனும் நெச்சோறும் தாரும்” என்றார் டாக்டர் .  நிரந்தர வாடிக்கையாளர்களின் நாவின் ருசி அறிந்தவர் பக்கர் .

   வியாத்தகண்ணு தந்த ஆவி பறக்கும் சுக்குகாப்பிய கையில வாங்கி ஒரு மடக்கு ஊறிஞ்சி குடிச்ச  பக்கரு மூணு  வருசத்துக்கு முந்தைய நினைவில் மூழ்கினார்.  ஒருநாள் சாயங்ககாலம்  “மொலாளி பயல இஞ்சினியரிங் காலேஜில சேக்கணும் ஒரு முப்பதாயிரம் ரூவா கடனா வேணும் காலேஜி பீசடைக்க” எனக்கேட்டார் அபூபக்கர் . “பக்கரே உனக்க தகுதிக்கு போல ஆசைப்படு ,இஞ்சினியருக்கு படிக்க வைக்க உனக்கு முடியுமா டே,வேற என்னத்தையாவது சின்னதா படிக்க வை”என்றார் அசன் முதலாளி பக்கரிடம்.
  
மகனுக்கு பிளஸ்டூவில் நல்ல மதிப்பெண் அவன் இஞ்ஜினியர்தான் படிப்பேன்னு சொன்னான்.முதலாளி ரூவா இல்லைன்னு சொன்னதால வியாத்தக்கண்ணுக்க ஒரு மாலையையும்,கையில கிடந்த இரண்டு சின்ன காப்பையும் வித்து வெச்சிருந்தேன்.மொவன் அவனுக்கு பிரண்டுக்க கூட இராமநாதபுரம் செய்யது அம்மாள் காலேஜில் இடம் இருக்குன்னு போயிட்டு மறுநாள் போண் பண்ணினான்.  உச்ச* நேரம் போன் வந்தத அசன் முதலாளி மூணு மாணிக்க மேலதான் பக்கரிடம் சொன்னாரு “ஒய் பக்கரு மொவன் போன் பண்ணினான் நாளைக்கு காலைல காலேஜில பீஸ் கெட்டினால் இடம் கிடைக்குமாம்,இல்லேன்னா அந்த இடத்த வேறு யாருக்காவது கொடுத்துரு வாங்களாம்” என சொல்லி நிரறுத்திகொண்டார் .
    
        அசன் மொதலாளி பைசா தரமாட்டுருன்னு தெரியும் .அப்பத்தான் வில்லுக்குறி விஜயா பைனான்ஸ்,ஓறும* வந்தது. அப்போது மணி ஐந்தாகி இருந்தது. சின்ன பயல கூப்பிட்டு “மக்களே ஒனக்கு பிரண்டு பிரான்சிஸ்க்க ஸ்கூட்டர் வாங்கிட்டு வா,வாப்பா கேட்டுதுன்னுசொல்லு” என ,கையில் முப்பது ரூபாயை  பெட்ரோல் போட கொடுத்து அனுப்பினார் .வில்லுக்குறி விஜயா பைனான்ஸ்க்கு போய் சேரும்போது மணி ஆறாகி விட்டது.விஜயன் வெளியே நின்றுகொண்டு இருந்தார் .பணிப்பெண் கதவை பூட்டிக்கொண்டு இருந்தாள்.பக்கரை கண்டதும் “ஓய் பக்கர் சாயிப் வாரும் ,என்ன விஷயம்” என கேட்டார் விஜயன் .பக்கர் அவரது காதில் ரகசியம்  பேசுவது போல “ஒரு அர்ஜெண்டு முப்பதாயிரம் ரூவா வேணும் ,பயல காலேஜில சேக்கணும்” என்றார் பக்கர்.இரியும் என அங்கிருந்த மர பெஞ்சை காட்டிவிட்டு,பணிப்பெண்னிடம் அலுவலக கதவை திறக்க சொல்லிவிட்டு ,அருகிலிருந்த அவரது வீட்டிலிருந்து பணம் எடுத்து வர சொன்னார் விஜயன் .
   
    சில ஆவணங்களில் கையொப்பம் வாங்கிகொண்டு,சாட்சி யாக பக்கரின் இளைய மகனிடமே கையொப்பம் பெற்றுகொண்டார். அன்றிரவே இளையமகன் பணத்துடன் ராமநாதபுரத்திற்கு சென்றான் .  பயல காலேஜில சேத்து மூணு வருஷம் ஓடி போச்சி .இன்னும் ஒரு வருசத்த படிப்புதான் அதுவர கடிச்சி ,புடிச்சி எப்படியாவது ஓட்டணும் என யோசித்த வாறே சுக்கு காப்பி குடித்த எவர்சில்வர் கப்பை கீழே வைத்துவிட்டு மீண்டும் பாயில் படுத்துக்கொண்டார் பக்கர் .
 பக்கரின் வாழ்க்கை ஓய்வு,தூக்கத்திற்கு வீடும்,வேலைக்கு கடையும் என்பதாக குறுகிபோயிருந்தது.எதையும் வாங்க வேண்டும்,எங்காவது செல்ல வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் மனதில் எழுவதே .கடையில் சாப்பிட வருபவர்களை திருப்தியாக சாப்பிட கொடுத்து அனுப்புவதிலேயே குறியாக இருப்பார்.
   
       கண்களை மூடியதும்  மனதில் எண்ணங்கள் ஓடின .இன்னைக்கி கடைக்கி போவல்லன்னா தனது எடம் போயிரும் .நான் நிக்க மேசையில் ராமச்சந்திரன் வருவான்.நாளேலேருந்து என்னை சைவ சாப்பாட்டு சைடுக்கு போடுவாரு சூப்றேசரு .அங்க கைமடக்கு ஒரு எளவும் கிடைக்காது .எவனாவது வெளியூர் காரன் எப்பாவாவது ஒரு இரண்டு ரூவா தந்தா உண்டு .எனக்க டேபிள்ல்ல மூணு பேரு புரோட்டாவும் ,ஒரு சில்லி சிக்கனும் ,மட்டன் ரோஸ்டும், பீப் பிரையும்  வாங்குனா இருநூறு  ரூவா பில்லு வரும் கண்ணை மூடிகிட்டு பத்து ரூவா கைமடக்கும் கிடைக்கும்.


  மாச சம்பளத்துல பயலுக்கு அனுப்பி குடுத்துட்டு ,கைமடக்கு கிடைக்க பைசாலதான் வீட்டு பாடு கழியுது.பைனான்ஸ்ல வாங்குன ரூவா வட்டி தெவஞ்சி நிக்கிது என எண்ணியவாறே பக்கர் வியாத்தகண்ணிடம் “நீ அந்த சட்டையை எடு காய்ச்சலுன்னு பாத்த ஒக்காது கேட்டியா நான் கடைக்கி போறேன்” என்றார். வியாத்தகண்ணு பக்கரை தடுக்கவில்லை ,அவர் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு நடக்க இயலாமல் செல்வதை வாசலில் நின்று பார்த்துக்கொண்டே இருந்தாள்.

முற்றும் .
ஷாகுல் ஹமீது.

Wednesday 1 April 2020

கக்கூஸ்




கப்பல் காரன் டைரி                         
                            

கக்கூஸ்
“பி டெக்கில் உள்ள ஸ்பெயர் கேபினில் கக்கூஸ் ப்ளஷ் வேலை செய்யவில்லை மாற்றவேண்டும் உனக்கு தெரியுமா”என இரண்டாம் இஞ்சினியர் பிராங்கி என்னிடம் கேட்டார். “தெரியாது” என்றேன்.
          
கப்பலின் தங்கும் அறையிலுள்ள குளியலறை

   கடந்த ஆண்டு பணியிலிருந்த கப்பல் யோயோ.பிப்ரவரியில் பணிக்கு சேர்ந்தேன்.மார்ச் மாதம் கப்பலின் குடியிருப்பு பகுதியில் உள்ள இரண்டாம் தளத்திலிருந்த இருந்த அறையின் கக்கூஸ் வேலை செய்யவில்லை.அதை சரி செய்யவேண்டுமென பிராங்கி சொன்னார்.அதற்கு இருதினங்களுக்கு முன்  அமெரிக்காவின் பிலேதெல்பியாவில் கப்பல் கரையணைந்த போது புதிதாக பணிக்கு சேர்ந்த இரண்டாம் அதிகாரி கார்த்திக் இரவில் அந்த அறையில் தங்கியிருந்தான்.காலையில் கக்கூஸ் போய்விட்டு ப்ளஷ் பட்டனை அழுத்தியபோது வேலை செய்யவில்லை.அப்படியே விட்டு விட்டு சென்றுவிட்டான் .


     இரு தினங்களுக்கு பின் முதன்மை அதிகாரி மங்களூர் லோரன்ஸ் பிராங்கியிடம் அதுபற்றி சொல்ல.கக்கூஸ் பணி இயந்திர அறைக்கு வந்து சேர்ந்தது.கப்பலில் உள்ள அனைத்து தொழில்நுட்ப வேலைகளும் முதன்மை இன்ஜினியரின் தலைமையில் இயந்திர (engine dept) அறை துறைக்குத்தான் வரும் .எனவே உறுதியாக சொல்வேன் கப்பலுக்கு தலைவன் காப்டனாக இருந்தாலும் .கடவுள் முதன்மை இஞ்சினியர்தான் .கப்பலின்  பொறியியல் சார்ந்த அனைத்து பிரச்சனைக்கும் அவரே பொறுப்பு .
seawage treatment plant

  
                               
     
 காலை எட்டு மணி பணி ஆலோசனை கூட்டத்தில் கக்கூஸ் பணியை செய்வதென முடிவு செய்யப்பட்டது .கப்பலில் இருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட தங்கும் அறைகளில் உள்ள கழிப்பறைகளிலிருந்து வெளியேற்றபடும் கழிவுகளை அப்படியே கடலில் கொட்டிவிட முடியாது .seawage treatment plant இல் முறையாக சுத்திகரிக்கப்பட்டு ஆழ் கடலில் மட்டுமே அந்த நீரை மட்டுமே வெளியேற்ற வேண்டும்.

                              

       இயந்திர அறையில் கழிவறை சுத்திகரிப்பு தொட்டி ஒன்று இருக்கும் .அது மூன்று அடுக்குகளால் ஆனது .கப்பலில் உள்ள அனைத்து கழிப்பறைகளிலிருந்தும் வெளியேற்றபடும் கழிவுகள் அந்த தொட்டியின் முதல் அறையில் வந்து சேரும். அதில் Gayamyzne 700FN எனும் ரசாயனம் வெதுவெதுப்பான நீரில் கலந்து ஊற்றி வைத்தால்,அதில் மனித கழிவுகளை சாப்பிட்டு வாழும் கிருமிகள் உருவாகி உள்ளேயே வாழ்ந்துகொண்டு இருக்கும்.கிராமங்களில் கழிப்பறை தேக்க தொட்டிகளை கட்டும்போது அதில் கழுதை விட்டையை போடுவார்கள் அதுவும் அந்த கிருமிகளை உருவாக்கும் . உள்ளே வரும் மனித கழிவுகளை அது சாப்பிட்டு உயிர் வாழும் .அதனால் தான் சோப்பு தண்ணீர் உட்பட வேறு எந்த ரசாயனமும் கழிப்பறைகளில் ஊற்ற கூடாது .அது அந்த கிருமிகளை கொன்றுவிட்டால் .கழிப்பறை தேக்க தொட்டி வெகு விரைவில் நிரம்பிவிடும் .
                        


    கப்பலின் கழிப்பறை தேக்க தொட்டியில்,முதல்,இரண்டாம் நிலை தாண்டி மூன்றாம்நிலை அறைக்கு வரும் நீரில் குளோரின் கலந்து கடலில் வெளியேற்றபடும்.அந்த தொட்டியில் பொருத்த்பட்டிருக்கும் உயர்நிலை சென்சாரை தண்ணீர் தொட்டவுடன் அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் மின் மோட்டார் தானே இயங்கி கழிவு நீரை வெளியேற்றும்.அதனால் அந்த கழிவு தேக்க தொட்டி ஒருபோதும் நிரம்பி வழிய வாய்ப்பில்லை. எனது முதல் கப்பல் (2005) முப்பது ஆண்டு பழமையானது அதில்  கழிப்பறை சுத்திகரிக்கும் தொட்டியில் உள்ள உயர்நிலை சென்சார் வேலை செய்யாது .ஒவ்வொரு நான்கு மணிநேரத்திற்கும் கழிவுநீர் வெளியேற்றும் மின் மோட்டரை பத்து நிமிடத்திற்கு இயக்கவேண்டும் .ஒருநாள் ஒருவேளை அதை இயக்க மறந்ததால் அந்த அறை முழுவதும் கழிவுநீர் வழிந்தோடியது . மிக சிரமப்பட்டு பின்னர் அந்த தளம் சுத்தம் செய்யபட்டது .
                 

   
       எர்னாகுளம் கோபகுமார் அந்த கக்கூஸ் சரி செய்யும் பணியை முந்தைய கப்பலில் செய்ததாக சொன்னார். இரண்டாம் இஞ்சினியர் பிராங்கி முதலில் உதிரி பாகங்கள் இருக்கிறதா என பார்த்தபின் பணியை தொடங்குவோம் என்றார்.கப்பலில் எந்த பணியையும் துவங்கும் முன் தேவையான உதிரி பாகங்கள் இருக்கிறதா என பார்த்துவிட்டே பணியை துவங்க வேண்டும்.
பழைய கப்பல்களில் உள்ள கழிப்பறைகளில்  தண்ணீரை வேகமாக அடித்து வெளியேற்றும் அமைப்புதான் இருக்கும் .இப்போதைய நவீன கப்பல்களில் vacum flush கழிப்பறைகள் வந்துவிட்டன.vacum கழிப்பறைகள் இருக்கும் கப்பல் களில் தண்ணீர் செலவு மிக,மிக குறைவு தினசரி நான்கு முதல் ஆறு டன்கள் மட்டுமே .

         நான் ,பிராங்கி,கோபகுமார் மூவரும் உதிரிபாகங்கள்,மற்றும் உபகரணங்களுடன் சென்றோம்.காலையிலேயே டெக் பணியாளர் ஒருவர் “டாய்லட்டை சுத்தம் செய்து லோசன் ஊத்தி வெச்சிருக்கேன்” என சொன்னார் .

      முதலில் vacum சுவிட்ச் வேலை செய்கிறதா என பார்த்தோம் சுவிட்ச் வேலை செய்தது .ஆனால் வெற்றிடம் உருவாகி நீர் வெளியேறவில்லை .வெற்றிடத்தை உருவாகும் டயாப்ரம் கிழிந்து இருக்கலாம் என்பதை உறுதி செய்தோம் .சுவரில் அமரும் கோப்பையை கழற்றிஆக வேண்டும் தண்ணீர் மற்றும் ,காற்று இணைப்புகளை முன்பே நிறுத்தியிருந்தோம்.எம் 16 அளவுள்ள நான்கு போல்டு,நட்டுகளை கழற்றிவிட்டு கோப்பையை தனியாக எடுத்து கழிந்திருந்த ரப்பர் டயாப்ரம் மாற்றி கோப்பையை பொருத்தி இயக்கி பார்த்தோம் .மீண்டும் வேலை செய்யவில்லை.

      உள்ளே இருக்கும் control mechanism பாக்ஸ்ஐ மாற்றுவோம் என முடிவெடுத்தோம் .மீண்டும் கழற்றினோம் மிகச்சிறிய  போல்ட்டுகள்.allen key யை போட்டு கழற்ற போதுமான இடமில்லாததால் அந்த கண்ட்ரோல் பெட்டியை கழற்ற அதிக நேரம் ஆனது .புதிய கண்ட்ரோல் பெட்டியை பொருத்தியபின் கோப்பையை மீண்டும் பொருத்தி இயக்கி பார்த்தோம் vacum flush வேலை செய்தது .
இயந்திர அறையில் கம்ப்ரசர் ஒன்று ஓடி காற்றை நிரப்பி வைத்திருக்கும் .கழிப்பறையில் உள்ள சுவிட்ச் ஐ அழுத்தியதும்,கண்ட்ரோல் மெக்கானிசம் சமிக்ஞ்சையை பெற்று இயக்கும் போது சிறிது நீர் பீய்ச்சி அடிக்கும் அதே நேரம் டயாப்ரம் வேலைசெய்து வெற்றிடத்தை உருவாக்கும்போது கோப்பையில் உள்ள கழிவுகள்,நீர் மிக வேகமாக உள்ளிளுத்து கொள்ளும் .கண்டிப்பாக இது போன்ற கழிப்பறைகளில் பேப்பர் உட்பட எதையும் போடகூடாது .
  
   இரண்டாம் இஞ்சினியர் பிராங்கி இன்னும் ஒரு கண்ட்ரோல் பாக்சும்,ஒரு டயாப்ரமும் இருக்கிறது என்றார்.நான் பிராங்கியிடம் “நான்கு வருடம் இஞ்சினியரிங் ,ஒரு வருடம் கப்பலுக்கான மேற்படிப்பு,பயிற்சிகள் ,கிளாஸ் 2 சான்றிதழ் போன்ற பெரிய கல்வி தகுதி ,பணி அனுபவங்களுக்கு பின் கடைசில கக்கூஸ் வேல செய்ய வேண்டியதாயிற்றே”என்றேன் .சிரித்துக்கொண்டே “ஜகாஜ் கா நௌக்கிரி சப் குச் கர்ணா படுத்தா ஹ”என்றார் சிகரெட் துண்டு ,பேப்பர் போன்றவற்றை போட்டால் மொத்த கழிப்பறைகளும் உபயோகபடுத்த முடியாத நிலை ஆகிவிட்டால் காலையில் வயிற்றை பிடித்துகொண்டு சரியாவது வரை காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை .

     கழிவுகள் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படும் .ஒவ்வொரு குழாயாக கழற்றி  மனித கழிவுகளை சுத்தம் செய்த அனுபவங்களை கேட்டிருக்கிறேன் .குழாய் அடைப்பு ஏற்படாமல் இருக்க உயிரியல் ரசாயனங்களை ஒவ்வொரு மாதமும் எல்லா கழிப்பறைகளிலும் போட்டு குழாய்கள் அடைப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் சில மூன்றாம் இஞ்சினியர்கள் இருக்கிறார்கள்.

  ஷாகுல் ஹமீது ,
      1st april 2020