Sunday 29 October 2023

அயன் பாக்ஸ்



             

     1990களுக்குமுன்னரே நான் பிறந்து வளர்ந்த காந்தாரிவிளை தெருவிலும் மணவாளக்குறிச்சி கிராமத்திலிருந்தும் அனேகம்பேர் சவூதி அரேபியா,கத்தார்,பஹ்ரைன்,துபாய்,மஸ்கட்,குவைத் போன்ற அரபு வளைகுடா நாடுகளுக்கு சென்றிருந்தனர்.

பெரும்பாலும் பத்தாம் வகுப்பில் தோல்வி அல்லது அதற்கு முன்பே பள்ளிபடிப்பை பூர்த்தி செய்யாதவர்கள்.டெய்லர்,ட்ரைவர்,கொத்தனார்,பிளம்பர் கடைகளில் சேல்ஸ்மேன் (வாகனம் ஓட்டுனர் என்ற விசாவில் சென்று ஒட்டகம்,ஆடு மேய்த்தவர்களும் உண்டு) போன்ற எளிய பணிகள்.நான் சிறுவனாக இருக்கும்போது சறபுதீன் சொல்வார் “கோளிக்க பீய வாரி போடசொன்னாலும் நான் ரெடி,ஒரு விசா கிட்டுனா போரும்” என பாஸ்போர்ட் எடுத்து எப்படியாவது வெளிநாடு சென்றுவிட்டால் போதும் எனும் கனவில் இளைஞர்கள் இருந்த காலம். அப்படி சென்றவர்களின் வீடுகளில் செழிப்பை கண்டேன் நான். 

   குவைத் சென்ற உறவினர் ஒருவர் சொல்வார் “அறபிக்கி நாலு பொண்டாட்டி,நாப்பத்தஞ்சி புள்ளையளு,நாலு பொண்டாட்டிக்கும் தனித்தனி பங்களா அது ஒண்ணுல காலத்த ஒருக்கா,அந்திக்கி ஒருக்கா மோட்டர் சுவிட்ச போட்டு ரெண்டு மட்டம் டேங்குல தண்ணி நிறக்கணும் அதுதான் வேல”என்றார்.

   அப்போது ஜப்பானின் நேஷனல் அயன் பாக்ஸ்,மஞ்சள் நிற டார்ச் லைட் போன்றவை ஒரு அடையாளம்.அது போன்ற வெளிநாட்டு பொருட்கள் இருக்கும் வீடுகளில் மகன்,கணவன் அல்லது உறவில் ஒருவர் அரபு தேசத்தில் இருப்பார்.

   எனது தாய்மாமா ஷாகுல் ஹமீது  எங்கள் குடும்பத்திலிருந்து முதன் முதலில் வெளிநாடு சென்றவர்.பின்னர் எனது மூதாப்பவின் மகன் பாபுஜி (பாபு ஹுசைன்). அப்படி என் வீட்டிலும் ஜப்பானின் நேஷனல் அயன் பாக்ஸ் ஒன்று வந்து சேர்ந்தது. சரியான எடை,மின் இணைப்பை துண்டிக்காமலே தேவையான அளவு வெப்பத்தை கூட்டி,குறைக்கும் வசதி,வெண்ணிற கைப்பிடியுடன் அழகாகவும் இருந்தது. அதை கையாளவும் மிக எளிது.இப்படி நண்பர்கள் உறவினர்கள் வளைகுடா சென்ற அனேக வீடுகளில் நேஷனல் அயன் பாக்ஸ் தான் இருந்தது அல்லது அதுதான் என் கண்ணிற்குபட்டது.

     2003 ஆம் ஆண்டு நான் ஈராக் போர்முனையிலிருந்து விடுமுறைக்கு வந்தபோது நீண்ட உழைப்பை தந்த அந்த நேஷனல் அயன் பாக்ஸ் தன் பணியை நிறுத்திக்கொண்டது.திங்கள்நகரில் உறவு பெண்ணொருத்தி பணிபுரிந்த ஷார்ஜா பேன்சி எனும் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கு சென்றிருந்த போது அங்கே நேஷனல் அயன் பாக்ஸ் விற்பனைக்கு இருப்பதை கண்டு ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி வந்தேன். “ஆயிரத்திஅம்பது ரூவா வில குட்டியாப்பக்கு அம்பது குறைச்சிதாரேன்” என்றாள். 

    திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்குப்பின் 2009ல் நான் தனிக்குடித்தனம் செல்லும்போது தம்பி ஷேய்க் “ஷாகுலண்ணே அயன் பாக்ஸ நீ கொண்டு போ” என்றான்.  

    நான் மட்டுமே அதை உபயோகித்து கொண்டிருந்தேன்.சுனிதா அரிதாக திருமண வீடுகளுக்கு செல்லும் போது பட்டு சேலை கட்டினால் பிளவுசை அயன்பாக்சில் தேய்த்து கொள்வாள். ஸாலிம் பள்ளி செல்ல துவங்கியவுடன் அவனது சீருடைகளை சுனிதா தேய்த்து கொடுத்துகொண்டிருந்தாள்.அதன் வயர் மட்டும் திருகி,திருகி அறுந்து வீணானபின் இருமுறை தெரிந்தவர்களிடம் கொடுத்து புதிய வயர் மாற்றிவைத்திருந்தாள்.

  பின்பு சல்மான் பிறந்து பள்ளி செல்ல துவங்கும்போது ஸாலிமும் அயன்பாக்ஸை கையாளும் அளவிற்கு வளர்ந்த சிறுவனாக இருந்தான்.  அப்படி நேஷனல் அயன் பாக்ஸ் மேசையிலிருந்து கீழே விழுந்து,விழுந்து அதன் கைப்பிடிகள்  உடைந்தது. சுனிதாவின் வாப்பா கடிகாரம் பழுதுபார்ப்பதில் நிபுணர் எண்பது வயதை தாண்டிய அவர் தனது பத்தொன்பதாவது வயதில் தொடங்கி இதுவரை ஒரே தொழிலை செய்பவர் அறுபது ஆண்டுகளாக. லட்சங்களில் விலையுள்ள ரோலெக்ஸ் மற்றும் ரேடோ கைக்கடிகாரங்களை சர்வீஸ் செய்ய அமெரிக்காவிலிருந்து விடுமுறையில் வரும்போது தரும் வாடிக்கையாளர்கள் அவருக்கு உண்டு.



“மணிமேடைல உள்ள ஸ்பெயின் நாட்டு கிளாக் ரிப்பேர் ஆனா முனிசிபாலிட்டி எனக்க வாப்பாயதான் கூட்டிட்டு போவானுவோ செரி செய்ய” என அவ்வப்போது நெஞ்சு நிமிர்த்தி சொல்வாள் சுனிதா. அது உண்மையும்கூட .

  அவரின் நுணுக்கமான புத்தி சுனிதாவிடமும் இருக்கிறது . கைப்பிடி உடைந்த அயன் பாக்சை ஐந்து ரூபாய் பெவிகுவிக் வாங்கி ஒட்டி சரி செய்து உபயோகிக்க தொடங்கினாள். “கீழ உளுந்தா சோலி முடிஞ்சி அயன்பாக்ஸ் யூஸ் பண்ணுனா ஒழுங்கா வெக்கணும்”என உரத்த குரலில் ஸாலிமிடம் சொல்வாள். நான் வீட்டிலிருக்கையில் அதே குரலில் என்னிடமும். “புதுசு வாங்கணும்னா இப்ப மூவாயிரம் ரூவா இல்லாம முடியாது” என்பாள்.

 பின்பு  சல்மானும் அயன்பாக்சை கீழே போட்டதில் அதன் உடல் பாகங்கள் மேலும் சில துண்டுகளாக சிதறிவிட்டது. மீண்டும் பத்துரூபாய் செலவு செய்து இரு பெவிகுவிக் வாங்கி சுனிதா தன் நுண்ணறிவை காட்டி வைத்திருந்தாள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நான் ஊருக்கு வந்தபின் சட்டையை தேய்க்கும்போது அயன்பாக்சில் கைப்பிடி அதன் உடலுடன் சரியாக பொருந்தாமல் ஆடிக்கொண்டிருந்தது. சுனிதா “ஒரு கணக்கு வேணுமில்லா எத்ர மட்டம் அத கீழ போடுது,ரெண்டண்ணத்த பெத்து வெச்சிருக்கியோ இல்லா,புள்ளயாளாட்டா வளருதுவோ அதுவோ,ஒரு சொல்லுவளி கிடையாது”.என சீறினாள்.ஸாலிம்,சல்மான் பிறந்ததில் தனக்கு ஒரு சம்பந்தமும் இல்லாதது போல்.

   என்னிடம் அயன்பாக்ஸை சரி செய்ய சொன்னாள். நான் விடுமுறையில் ஊருக்கு வந்தால் செம பிஸி. ஆடிக்கொண்டிருக்கும் அதே அயன்பாக்ஸை தொடர்ந்து உபயோகித்துக்கொண்டிருந்தேன். “அத செரி பண்ணீர கூடாது,அது இனி கை வேற கால் வேறயா வாறது வர அத வெச்சி தேப்பாரு நானும் பாத்துட்டு தானே இருக்கேன்”

“நான்  என்ன எலக்ட்ரீசியனா எனக்கு இதெல்லாம் தெரியாது எப்டி நான் செரிபண்ணுவேன்”

 “அத களத்தி பாக்குலாம்லா அப்பல்லா தெரியும்,ஒன்னுக்கும் களியாது கப்பல்ல எப்டி தான் வேலக்கி வெசிருக்கானுவளோ,நான் மட்டும் செகண்ட் இன்ஜினியரா இருந்தேன்.முதல்ல உம்மள தான் டிஸ்மிஸ் பண்ணுவேன்” என ஒரு அதட்டலை தொடர்ந்து “உங்கள கொண்டு வீட்டுக்கு ஐஞ்சி பைசாக்கு பிரோயஜனம் கிடையாது,ஊருக்குதான் உபகாரம்,வக்கேசனுக்கு வந்தா  சுக்கிரி,ஜெயமோகன்,விஷ்ணுபுரம் ன்னு சுத்துக்கு மட்டும் கொள்ளாம்”என்றாள்.

      

சுனிதா என்னை கொஞ்சம் சீண்டிவிட்டாள் பதிலுக்கு சப்தம் போட்டால் ரொம்ப கஷ்டமாயிரும் என தெரியும் என்பதால் அமைதியாக இருந்தேன்.உண்மையில் எனக்கு அயன்பாக்ஸ் போன்றவற்றை சரி பண்ணவும் தெரியாது.அதில் ஆர்வமும் இல்லை சுனிதாவின் தொடர் நச்சரிப்புக்குப்பின் இரண்டு பெவிகுவிக் வாங்கி பத்திரமாக வைத்திருந்தேன் ஒருநாள் ஓய்வாக வீட்டிலிருந்தபோது ஸ்க்ரூ ட்ரைவரை எடுத்து அதை திறந்தேன் மின் வயரை தனியாக பிரித்தேன். “இன்னக்கிதான் மூர்த்தம் வந்துருக்கு சாருக்கு” என சொல்லிவிட்டு தன் செல்ல பூனை புஜ்ஜியுடன் கொஞ்சலுக்கு சென்றுவிட்டாள்.

  கைப்பிடியும்,அதன் உடலும் பேக்கலைட்டால் ஆனது நான்கு துண்டுகளாக சிதறியது,எடையுடன் கூடிய இரும்பு பிளேட்டை சூடாக்கும் தெர்மோஸ்டேட் பொருத்தபட்டிருந்தது அதை தனியாக வைத்து விட்டு.  உடைந்த பாகங்களை ஓட்டினேன்,கைப்பிடி எதிர்பார்த்ததைவிட  பலமாக ஒட்டிகொண்டது.உள்ளுக்குள் சக்சஸ் என வந்த சிரிப்பை அடக்கிகொண்டேன்.சுனிதா எனக்கே தெரியாமல் என்ன செய்கிறேன் என பார்த்துக்கொண்டுதானிருப்பாள்.



   கைப்பிடியை இரும்பு பாகத்துடன் இணைத்து வயரை இணைத்தால் வேலை முடிந்தது.ஆனால் கழற்றும்போதே உள்ளே ஒரு மெல்லிய நுனி சற்று வளைந்த ஒரு கம்பி இருந்தது அது எங்கே இணையும் என்று தெரியவில்லை தடுமாறி சுனிதா என்ன சொல்வாள் என கைகள் உதற நிற்கும்போது “யூ டியூப் ல அடிச்சி பாருங்கோ சாரே” எனும் குரல் கேட்டது சுனிதாதான்.

  யூ டியூபில் தேடியதும் ஹிந்தியில் சில விடியோக்கள் இருந்ததில் ஐந்து நிமிடம் உள்ள ஒன்றை தேர்வுசெய்து பார்த்தேன். அந்த கம்பிதான் அயன்பாக்சின் சூட்டை கூட்டும்,குறைக்கும் நாபுடன் இணைவதை தெளிவாக சொன்னான் பையாகாரன்.

குஷியாகி அதை சரியான இணைக்கும்போது சுனிதாவும் உதவிக்கு வந்துவிட்டாள்.இறுதியில் கைப்பிடி உடலுடன் இணையும் இரும்பு தகடில் இருந்த இரு சிறு துவாரங்கள் சரியாக பொருந்தவில்லை பெவிகுவிக்கால் ஓட்டும்போது கொஞ்சம் விலகி விட்டிருந்தது தெரிந்தது. நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.ஒரு விஞ்ஞானியை போல ஆராய்ச்சி செய்தபின் சுனிதா சொன்னாள் “அத ஒழுங்கா ஓட்ட தெரியல்ல வந்துட்டாரு”

 “ஒட்டுனத உடச்சிட்டு திருப்பி ஒட்டுவோம் பத்து ரூவாக்கு பச செலவு மட்டும் கூடும்”என்றேன்.

“மனுசா அத உடைக்கலாமா இனி என” கேட்டவள் தனது பெரிய கையால் பலங்கொண்ட மட்டும் முயற்சித்தாள் பெவிகுவிக் ஸ்ட்ராங் என்பதை நிருபித்தது.

  அந்த இரு துவாரங்கள் ஒரு மூன்று மில்லிமீட்டர் மட்டுமே விலகிஇருந்தது.ஸாலிமை டியுசனில் விட்டு விட்டு வரும்போது கோட்டார் வாவா ஹார்ட்வேரில் ஒரு நீடில் பைல் செட் ஒன்றை வாங்கினேன் நூற்றி முப்பது ரூபாய்க்கு,மீண்டும் அயன்பாக்ஸை பிரித்து அரத்தால் ராவி துளையை பெரிதாக்கி இணைத்தேன்.பைல் செட்டை சுனிதாவுக்கு தெரியாமல் என் அலமாரியில் மறைத்து வைத்தேன்.

 இனி ஜப்பானின் நேஷனல் அயன்பாக்ஸ் ஸாலிமின் மனைவி சொல்லி அவன் சரி செய்யும் வரை தாங்கும் .

இரு தினங்களுக்குப்பின்  சுனிதா கேட்டாள் “அந்த பைல் செட் எத்ர ரூவா சாரே” என.

29october 2023.

நாஞ்சில் ஹமீது.

 

   

Sunday 22 October 2023

படம் சொல்லும் கதை


இந்த கப்பலில் வந்த சில தினங்களிலேயே உணவுக்கூடத்தில் ஒட்டியிருந்த இந்த படத்தை பார்திருந்தபோதும் அதில் இருக்கும் விவரணைகளை கூர்ந்து கவனிக்க தவறியிருந்தேன்.

   மிக தாமதமாக அதிலுள்ள படங்களை பார்த்தபோது அதற்குள் ஒரு கட்டுரை(கதை) ஒளிந்திருப்பதை உணர்ந்தேன். இந்த நிறுவனத்தில் 2006 ஆம் ஆண்டு பணியில் இணைந்தபின்  தோல் வியாதியால் தொடர்ந்து பணி செய்யமுடியாமல் இரண்டே மாதத்தில் கப்பலிலிருந்து இறங்கிவிட்டேன்.

  முதலில் தோல் மருத்துவ நிபுணரின் மருந்துகள். ஒரு மாதத்திற்குப்பின் நண்பர் மணவை ஸஜி மெடிக்கல் ஷாஜி அண்ணனின் பரிந்துரையின் பேரில் அலோபதி டாக்டர் சகாயத்தை பார்த்தேன். கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த சித்த மருத்துவ நண்பரிடம் விபரங்களை கூறி அவர் பரிந்துரைத்த மருந்துகளை சில மாதங்கள் எடுத்தேன். பின்னர் ஆயுர்வேதம்,நாட்டு மருத்துவம் எதற்கும் பிடி கொடுக்காமல் தோல் வியாதி என்னை வதைத்தது.திருமணமாகி மகன் பிறந்து ஒன்றரை வயதாகியிருந்தது.எப்போது பணிக்கு செல்வேன் என்பதில் எந்த உறுதியும் இல்லாமல் நாட்கள் நீண்டுகொண்டே சென்றது. முதல் முறை தந்த வாய்ப்பிலேயே உடல்நலமின்றி இறங்கிவிட்டதால் கப்பல் நிறுவனமும் திரும்பி என்னை சேர்த்து கொள்ள யோசித்தது.எனக்கு தோல் வியாதி முழுமையாக குணமாகாமல் கப்பல் நிறுவனத்துடன் பேசவும் முடியாத சூழ்நிலை.

  மனைவி,குழந்தை,எனது வைத்தியம் என செலவு மிகுந்த நேரம் வருமானமோ,சேமிப்போ இல்லாமல் நெருக்கடிக்கு ஆளாகியிருந்தேன். உம்மா சவுதியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த என் கடைசி தம்பியிம் “வீட்டு செலவுக்கு அவன்ட்ட பைசா கேக்க முடியாது,அவனுக்கும் சேத்து வீட்டு செலவ பாத்துக்கோ”என சொல்லியது பெரிய விடுதலையாக இருந்தது.

  குழந்தையின் மருந்துகள்,பால் பவுடர்,எதற்கும் ஆசைபடாத மனைவயின் சில அத்தியாவசிய தேவைகள் சில இருந்தன. எல்லாத்துக்கும் பொருள் வேண்டும்.என்னாலும் நீண்ட நாட்கள் சும்மா இருக்கவும் முடியாது.வாப்பா பணிபுரிந்த எனது மணவாளக்குறிச்சி கிராமத்திலுள்ள இந்திய அபூர்வ மணல் ஆலையில் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் பேசி தற்காலிக வேலை வாங்கி தந்தார்.

அவித்த முட்டை ரோஸ்டுடன், உம்மா தரும் புளித்தண்ணி விரவிய சோத்துகட்டை சுமந்து ஆறரை மணிக்கே புறப்பட்டு இரு பேருந்துகள் மாறி எட்டுமணிக்கு மணவாளக்குறிச்சி மணலாலை போய்விடுவேன்.வாப்பா அப்போது பணி ஓய்வுபெற்று மணலாலையின் முன் இருந்த நாசர் ஹோட்டலின் முன் கடை விரித்திருந்தார். சென்ட்வகைகள்,ராணி சோப்,சாரம்,டவல்,ஜட்டி,பாரின் பிரா,நைட்டி,செருப்பு,வாட்ச்,கவரிங் நகைகள்,சிகரெட் லைட்டர் போன்றவை வியாபார பொருட்கள்.அதுபோக “பாய் கல்யாண பாய் வேணும்” ஐயப்பன் மலைக்கு போகும் சாமிகளுக்கு இடுப்பில் கட்ட பெல்ட்,பந்தி பாய் வேண்டும் என யார் என்ன கேட்டாலும் வாங்கி கொடுப்பார் கடனாக.

வாப்பா பதினோரு மணிக்கு இருநூறு ரூபாய் கலெக்சன் அல்லது பெரியவிளை கடற்க்கரையிலிருந்து  வரும் கும்பாரி கொண்டு வரும் மீனை நல்ல சகாய விலையில் வாங்கிவிட்டால் உடனே கடையை மூடிவிட்டு  வீட்டுக்கு பஸ் ஏறிவிடுவார். மொத்த கடையையும் ஒரு பைக்குள் அடைத்து நாசர் ஹோட்டலுக்குள் வைப்பது வழக்கம்.

  மூன்று தினங்களே அங்கு வேலை செய்தேன். அந்த பணியாளர்களின் உலகில் என்னை பொருத்திக்கொள்ள இயலவில்லை. காலை முதல் சந்திப்பின் அவர்களின் முதல் விளி “லே தள்ளையயோளி” அதற்கு பதிலாக “நேத்து எங்கல போனா புண்டாமொனே” என்பதாக இருந்தது. சிறுநீர் கழிக்க அங்குள்ள கழிப்பறையை அதிகாரிகள் தவிர வேறு யாரும் உபயோகிப்பதே இல்லை.

    தினத்தந்தியில் வேலைக்கு ஆள்கள் தேவை என கண்ட விளம்பரத்தில் இருந்த எண்ணில் போனில் அழைத்தேன் நேரில் வரச்சொன்னார்கள்.அந்த நிறுவனத்தின் விளம்பரத்தை அடிக்கடி நான் பார்ப்பதுண்டு. நாகர்கோயில் ராமன்புதூர் திருக்குடும்ப ஆலயத்தின் முன் இருக்கும் ஆர்கே ஏஜென்சியில் சேல்ஸ்மேன் வேலை.

  நேர்முக தேர்வுக்கு சென்றிருந்தேன்.அலுவலக்கத்தில் இருந்த ராகிணி கண்களை பார்த்து புன்னைகையுடன் “கொஞ்சம் இருங்க ஒண்ற்,இப்பம் வருவாரு”என்றாள். மாநிறத்தை விட சற்று நிறம்,ஒல்லியான தேகம் மிக நேர்த்தியாக புடவைகட்டி,சுருட்டையான கூந்தலில் மிக குறைவாக பூ வைத்து,சிரித்த முகத்துடன் அமர்ந்து எதோ எழுதிக்கொண்டிருந்தாள்.வாயிற்கதவில் ஒரு லாரி நுழையும் அகலம் இருந்தது.உள்ளே சென்றால் லாரியையும் நிறுத்தி இரு ஒரு மகேந்திரா வேன்,கூண்டு கட்டிய ஒரு 407 டெம்போவில் அடைபெட்டிகளையும்,தகர டின்களையும் ஆண்கள் ஏற்றிக்கொண்டிருந்தனர்.ஒரு கூண்டு ஆட்டோவும் நின்றிருந்தது.கணக்கு புத்தகம்,சில்லறை காசுகள் அடங்கிய பையை வாங்கியபின் வண்டியில் ஏற்றிய பொருட்களின் பட்டியலை சரி பார்த்து ராகிணியிடம் கொடுத்தபின் வண்டிகள் ஒவ்வொன்றாகபுறப்பட்டு சென்றது.

    அங்கே காத்திருந்த  சிறிது நேரத்தில் தெரிந்தது ராகிணிதான் முதலாளி இல்லாத நேரத்தில் அனைத்துக்கும் பொறுப்பு என.அலுவலகத்திலும் வெளியிலும் இருந்த பெண்கள் வேலையில் மும்மூரமாகினர். கறுப்புகண்ணாடி அணிந்து ஹீரோ ஹோண்டா ஸ்லீக் பைக்கிலிருந்து இறங்கியவர் அலுவலகத்துக்குள் சென்ற இரண்டாவது நிமிடம் என்னை ராகிணி உள்ளே அழைத்தாள்.

    நேர்முகத்தேர்வில் தேர்வாகிவிட்டேன். பாண்டும் சட்டையும் போட்டு இன் செய்து போயிருந்ததால் அந்த வேலை எனக்கு கிடைக்காதோ என சந்தேகத்துடன் இருந்தேன்.அது பாமாயில் கம்பனி மலேசியாவில் இருந்து கப்பல்களில் வரும் பாமாயில் எண்ணையை இந்த நிறுவனத்துக்கு சொந்தமான பதினாறாயிரம் லிட்டர் கொள்ளவுள்ள டாங்கர் லாரி ஒன்று தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கொண்டு வரும்.

  இங்கே உள்ள எண்ணெய் தொட்டியில் மாற்றப்பட்டு பதினாறு கிலோ தகர எண்ணை டப்பாக்கள் மற்றும் ஒரு லிட்டர் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு பன்னிரண்டு பாக்கெட்டுகளை ஒரு அட்டைப்பெட்டி வீதம் அடுக்கி இங்கிருந்த வண்டிகளில் ஏற்றி திங்கள்கிழமை திங்கள்நகர்,செயவ்வாய்கிழமை செங்கவிளை,புதன்கிழமை புத்தன்துறை,கருங்கல்,பள்ளியாடி,வியாழன் தாமரைக்குளம்,சுசீந்திரம்,கன்னியாகுமரி,வெள்ளிக்கிழமை வெள்ளிச்சந்தை,வெள்ளிகோடு,சனிக்கிழமை மயிலாடி என மொத்த விற்பனைக்கு மாவட்டம் முழுவதும் எடுத்து செல்லப்படும்.

  எனக்கு உதவி சேல்ஸ்மேன் வேலை.காலை எட்டு மணிக்கு பாமாயில் கம்பனிக்கு செல்ல வேண்டும் ஏதாவது ஒரு வண்டியில் சேல்ஸ்மேனுடன் பாமாயில் டின்கள்,பாக்கெட்டுட்கள் அடங்கிய அட்டைபெட்டிகளை ஏற்றியபின் வண்டியின் முன் இருக்கையில் அமர்ந்து கொள்ளலாம் தக்கலை,பத்மனாபபுரம்,அழகியமண்டபம்,மேக்காமண்டபம்,வேர்கிளம்பி,பூவன்கோடு,மணலிக்கரை,சித்திரங்கோடு,முட்டைகாடு,திருவட்டாறு,திற்பரப்பு,களியல்,கடையல்,பொன்மனை,குலசேகரம் என சென்று திரும்பும் ரூட்டில் கடைகளில் ஆர்டர் எடுத்தபின் பாமாயில் டின் மற்றும் அட்டைபெட்டிகளை தோளில் சுமந்து கடையில் வைக்கவேண்டும் பில் கொடுத்து காசை சேல்ஸ்மேன் வாங்கிகொள்வார்.

  மழையில்லாத நாட்களில் ஏதாவது மர நிழலில் வண்டியை நிறுத்தி சோற்றுகட்டை பிரித்து சாப்பிட்டபின் அங்கேயே பேப்பர் விரித்து அரை மணிநேரம் கண் மயங்குவோம்.மாலையில் ஏழு மணிக்கு கம்பனிக்கு திரும்பி வந்தால் தினசரி சம்பளமான நூறு ரூபாயில் ஐம்பதை கையில் வாங்கிகொண்டு வீட்டுக்கு செல்வேன்.

  அங்கே சேல்ஸ்மேன்,ட்ரைவர்கள் தவிர பணி செய்த அனைவரும் நடுவயதை தாண்டிய பெண்கள் தினசரி சம்பளம் ஐம்பது ரூபாய் அவர்களுக்கு.பணிநேரம் காலை ஒன்பதரை முதல் நான்கரை வரை காலை,மாலை டீ கம்பனிக்கே வந்துவிடும்.மாதசம்பளம் வாங்கும்போது ஒரு லிட்டர் பாமாயில் ப்ரீ.அலுவலகத்தில் ராகிணியுடன் சுடிதார் அணிந்த அழகான சிறு வயது பிராமண பெண்ணொருத்தி அக்கவுண்டன்ட் ஆக இருந்தாள்.

   முதல் நாள் நேர்முகதேர்வுக்குப்பின் காலை பதினோரு மணிக்கி எண்ணை தொட்டியிலிருந்து தகர டின்னில் எண்ணையை நிறைக்கும் நடுவயது பெண்ணுக்கு உதவ சொன்னார்கள்.காற்று போன பொம்மையில் துணியை சுற்றியது போலிருந்த அவளின் முகத்தில் கண்ணாடி மட்டும் பெரிதாக இருந்தது  தராசில் காலி டின்னை வைத்தபின் பூஜ்யத்தை செட் செய்தபின் அந்த பெண் எண்ணெய் குழாயை திறப்பாள் பதினாறு கிலோ அளவு காட்டும்போது குழாயை மூடி விடுவாள் அதை தூக்கி பத்தடி தள்ளிவைத்தால் இந்திராகாந்தி படம் இருக்கும் ஐந்து ரூபாய் நாணயத்தின் அளவுள்ள சிறு வட்ட தகர துண்டை வைத்து இரு கொல்லர்கள் ஈயத்தை உருக்கி டின்னின் ஓட்டையை அடைப்பார்கள்.பின்னர் டின்னில் என் ஆர் கோல்ட் எனும் பெரிய படம் உள்ள ஸ்டிக்கர் ஒட்டி சேல்ஸக்கு தயாராகிவிடும். ஐந்து நிமிடத்திற்கு ஒரு டின் என நாள் முழுவதும் எண்ணெய் டின்னை தூக்கி வைத்து கைஓய்ந்து வீட்டிற்கு சென்றேன்.

மறுநாள் காலை பணிக்கு வந்தபோது என்னை பற்றிய புகார் ஒன்று இருந்தது.இந்து எனும் வேறொரு நடுவயது பெண் “தம்பி நீங்க அவளுக்க கிட்ட நெருங்கி நிக்காதீங்க,அவளுக்கு கூச்சமா இருக்காம்”என அதன் பின் அங்கே பணியிலிருந்த நாட்களில் எண்ணெய் நிறைக்கும் தராசு அருகில் செல்லவேயில்லை.

  

  22-10-2023,

நாஞ்சில் ஹமீது.

பின் குறிப்பு. அலுவலகத்தில் இருந்த அந்த அழகான பிராமண பெண் மீனா கல்லூரியில் Mcom வரை படித்துவிட்டு பணிக்கு வந்தவள்.வீட்டிலிருந்து பணிக்கு வந்த மீனாவை காணாமல் பெற்றோர் பாமாயில் கம்பனிக்கு தேடிவந்த அன்று சேல்ஸ்மேன் சுயம்புவும் பணிக்கு வரவில்லை.பளபளக்கும் கரிகட்டை நிறத்தில் இருந்த சுயம்புவுடன் சுசீந்திரம் கோயிலில் மாலை மாற்றி கொண்டதாக சொன்னார்கள். 

Sunday 15 October 2023

கரைக்கு செல்லும் கப்பல்கரான்

 


ஷோர்-லீவ் (shore leave)

                     

                 முதல் முதாலாக கப்பலுக்கு செல்லும் முன் உறவினர் ஒருவர் கேட்டார் “மச்சான் கொச்சிக்கு கப்பல் வந்தா என்ன செய்வியோ” “வீட்டுக்கு வந்துட்டு,பெயிரலாம் மச்சான்” என்றேன்.

  முதல் பயணமாக குவைத்துக்கு சென்று அப்தலி பாலைவனத்தில் முதல் ஒரு மாதம் கழிந்த பின் தான் மிர்காப் நகருக்கு போகும் வாய்ப்பு கிடைத்து.பின்னர் ஈராக் போர்முனையில் பணிபுரிந்தபோது ஒவ்வொரு வினாடியும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருந்த நாட்கள்.முகாமை விட்டு வெளியே சென்றால் பிடித்திவைத்திருக்கும் உயிரை தானாக விட்டுவிட வேண்டியதுதான்.

 முதல் கப்பல் துபாயில் இணைந்தபோது துபாய்,அஜ்மன்,ஷார்ஜா புஜைரா கடற்கரை என சுற்றும் வாய்ப்பு கிடைத்தது. என் திருமணத்தில் கலந்தகொள்ள இயலாமல் போன சுனிதாவின்  அக்கா கணவர் ஜாஹிரை சந்தித்தது தேரா துபையில்.சோனாப்பூரிலுள்ள மாமி மகன் பைசலை நீண்ட இடைவெளிக்குப்பின் கண்டதும் அங்கேதான்.

   கப்பல் காரர்களுக்கு கப்பல் செல்லும் நாடுகளில் வெளியே செல்ல வாய்ப்புகிடைகிறது. கப்பல் கரையணைந்தபின் குடியுரிமை அதிகாரிகள் வந்து ஷோர் பாஸ் தருவார்கள். வெளியே செல்வதற்கான அனுமதி சீட்டு அதைக்கொண்டு கப்பல் காரன் வெளியே சென்றுவிடமுடியும்.ஆஸ்திரேலியா,அமெரிக்கா நாடுகளுக்கு விசா வைத்திருக்கவேண்டும்.விசா இருந்தால் மட்டுமே ஷோர் பாஸ் கிடைக்கும்.

Melbourne 



  சில நாடுகளில் ஷோர் பாஸ் முன்னரே விண்ணப்பிக்கவேண்டும்.சில நாடுகளில் குறிப்பிட்ட தேசத்தை சார்ந்தவர்களை அனுமதிப்பது இல்லை.இஸ்ரேலில் மலேசியர்களுக்கு அனுமதியில்லை,ஆப்ரிக்காவின் டோகோவில் இலங்கையர்களுக்கும்,ஈகுவாடர் நாட்டில் இந்தியர்களும் கால் வைக்க முடியாது.

 சிலர் கேட்பதுண்டு சிங்கபூர்ல ட்ரைன போனியா,அமெரிக்காவுல வெளிய போவ முடியுமா அப்புடி உடுவாங்களா? சும்ம ரீல் உடாதடே என.

   நீண்ட கடல் பயணத்திற்குப்பின் கப்பல் கரையணைந்தபின் கப்பல்காரர்கள் வெளிய சென்றுவர கப்பல் நிறுவனங்களும்,அந்த நாடுகளும் ஊக்குவிக்கின்றன. உலக பொருளாதார வளர்ச்சியில் நீர்வழிபோக்குவரத்தின் உயிர் நாடியாக இருப்பது கப்பல் பணியாளர்கள்.

ஏதாவது துறைமுகங்களில் கப்பல் நிற்கும்போது சுனிதா கேட்பாள் “வெளிய போவல்லையா”என. வெளியில் போய் சுற்றிவிட்டு வந்தபின் “என்னா சாரே கண்ண கழுவியாச்சா” என சிரித்துக்கொண்டே அடுத்த கேள்வி.



                    மெக்ஸிகோவில் கண்ணை கழுவும் கப்பல் காரன்                                                  

மாதக்கணக்கில் உடன் பயணிக்கும் சக ஜீவிகளையன்றி வேறு முகங்களை பார்க்கும் வாய்ப்பே இல்லாத  கப்பல்காரனுக்கு நிலத்தில் வேறு,வேறு முகங்களும்,மலையும்,நிலகாட்சிகளையும் காணும்போது பெரும் மகிழ்ச்சியை தரும். என் யோகா குரு சொல்வார் “இயற்கையில் எல்லாம் அழகு,மனிதன் இன்னும் அழகு அதில் பெண்ணுக்கு ஒரு ஆணும்,ஆணுக்கு ஒரு பெண்ணும் பேரழகு. தென்னமெரிக்காவின் பிரேசில்,மெக்ஸிகோ,வெனிசுலா,உருகுவே,அர்ஜென்டினா,கொலம்பியா  .....போன்ற நாடுகளில்  அழகு பெண்களை கண்டபோது குரு சொன்னது உறுதியானது.

 


   

 கப்பல் துறைமுகப்பில் கட்டப்படுவது சரக்கு ஏற்றவும்,இறக்கவும் மட்டுமே.அதை எவ்வளவு வேகமாக செய்ய முடியுமோ அப்படி செய்து முடித்து கப்பலை சீக்கிரம் வெளியேற்றவே துறைமுகம் மும்மூரமாய் இயங்கும். ஏனெனில் வேறு கப்பல் உள்ளே வர தயாராக நங்கூரமிட்டு காத்திருக்கும். தாமதமாகும் ஒவ்வொரு நொடிக்கும் கோடிகளில் கணக்கு. இடம் காலியானால் அதே இடத்தில் உடனே வேறு கப்பல் கட்டப்பட்டு சரக்கு பரிவர்த்தனை. அவ்வேளையில் தான் கப்பலுக்குக்கான தேவையான உதிரி பாகங்கள்,உணவு பொருட்கள்,எண்ணெய் நிரப்புதல் ஆகியவற்றுடன் அத்தியாவசிய பழுதுபார்க்கும் பணிகளும் நடக்கும்.



 இதெல்லாம் முடிந்து நேரம் இருப்பின் கப்பலின் மூத்த அதிகாரிகள் அனுமதித்தால் பெரும் களைப்பிலிருக்கும் கப்பல்காரன் கரைக்கு போய் சுற்றிவிட்டு வரமுடியும். வாட்ச் கீப்பர்களாக இருந்தால் பணிநேரம் முடிந்தபின் வெளியில் செல்ல வேண்டும். ஓய்வு நேரத்தில் வெளியே போய் வந்தபின் பணி நேரம் துவங்கியிருக்கும் உடனே பணியில் இணையவேண்டியதுதான்.

  ஐரோப்பா,அமெரிக்கா,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கப்பல் கரையில் கட்டப்பட்டதும் ஸீ மேன் கிளப் தன்னார்வலர்கள் வாகனத்தில் வந்து வெளியே அழைத்துச்சேள்வார்கள்.வெளியே வணிக வளாகங்கள்,சுற்றுலா தளங்கள்,ஆன்மீக மையங்கள்,கேளிக்கை விடுதி,சிவப்புவிளக்கு பகுதி,பார்கள் என ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்து சுற்றி விட்டு வரலாம்.

 கப்பல் புறப்படுவதற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்பி வந்துவிட வேண்டும்.கப்பல் காரன் வெளியே செல்லும்போதே திரும்பி வரவேண்டிய நேரம் தெளிவாக காப்டனால் சொல்லப்பட்டிருக்கும்.(shore leave expire ).உலகின் முக்கியமான இடங்களை நினைத்தாலும் போய்வரவே முடியாத இடங்கள்,பெரும் செல்வந்தர்கள் மட்டுமே போகும் இடங்களை காணும் வாய்ப்பு இந்த பணியால் தான் எனக்கு கிடைத்தது. 

Honalulu 


 அப்படி என் பாதம்பட்ட முக்கியமான இடம் ஹவாய் தீவு. மிகப்பெரிய பசுபிக் கடலின் மையத்தில் அமைந்துள்ள ஒரு குட்டி தீவு.(இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் ஆறு கப்பல்களை ஜப்பான் குண்டுவைத்து மூழ்கடித்தது இங்குள்ள பேர்ல் ஹார்பரில்)இங்குள்ள ஹோனலுலு நகரில்  செல்ல ஒரு மணிநேரம் மட்டுமே அனுமதி கிடைத்தது.

  




 பிரேசிலின் ரீயோ-டி-ஜெனிரோவின் மலைமேலுள்ள இயேசு மகான் சிலை,அமெரிகாவின் சுதந்திர தேவி சிலை,பிலே டெல்பியாவிலுள்ள வரலாற்று மீயுசியங்கள்,பார்சிலோனாவில் பிக்காசோ வாழ்ந்த வீடு,மீசியம்,ரோமன் கட்டிடகலையின் உச்சத்தை பறைசாற்றும் தேவாலங்கள்,போர்சுகீசில் இந்தியாவை உலகுக்கே காட்டிகொடுத்த வாஸ்கோடகாமாவின் வீடு,சிலை என நான் சென்ற இடங்களின் பட்டியல் மிக நீண்டது.

  


எனது கிராமத்தை சார்ந்த பால்ய நண்பர்களான ராஜா,வேலுப்பிள்ளையை பத்து ஆண்டுகளுக்குப்பின்,கலிபோர்னியாவில் சென்றபோது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.ஈராக் போர்முனையில் என்னுடன் பணிபுரிந்த நண்பன் திருச்சி விஜயகுமாரை பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகும் என்னுடன் பள்ளியில் படித்த கிருஷ்ணமூர்த்தியை  சிங்கப்பூரிலும் பார்த்தேன். 



   கப்பல் கரையணைந்ததும் வெளியே செல்ல வாய்ப்பு உள்ளதா எனத்தெரிந்து கொண்டு நான் முந்திக்கொள்வேன்.



கப்பலில் பணியில் இணையும்போது அல்லது பணிமுடிந்து திரும்பும்போது விடுதியறைகளில் தங்கும் வாய்ப்புகிடைத்தால் பையை அறையில் போட்டுவிட்டு ஊர் சுற்ற போய்விடுவேன். “டயர்டா இருக்கு,ராத்திரி ஆயிட்டு என சொல்பவர்களை சேர்ப்பதே இல்லை. அப்படிதான் கொழும்பு,சிங்கப்பூர்,மெக்ஸிகோ,துருக்கியில் தனியாக கிளம்பி பன்னிரண்டு மணிக்கு மேல் நள்ளிரவு நடை போய் வந்திருக்கிறேன்.ஒரு ஊரில் பாதம் பதிக்கும் போது அங்கு மீண்டும் வருவேன் என எப்பொதும் உறுதிகிடையாது என்பதால். கிடைத்த வாய்ப்பில் முடிந்தவரை அந்த ஊரை பார்த்துவிட துடிப்பேன்.


Uploading: 5387375 of 11150653 bytes uploaded.


   ஜப்பான்,ஆஸ்திரேலியா,இத்தாலி,பிரேசில் சென்ற குறிப்புகளை மட்டும் எழுதியுள்ளேன். இன்னும் எழுதாமல் விட்ட பதிவுகளே அதிகம்.



   2019 இல் கடைசியாக ஐரோப்பாவின் நெதர்லாந்தில் வெளியே போய்வந்தேன்.அதன்பின் நோய் தோற்று எங்களை கப்பலுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தது.



இந்த ஆண்டுதான் நிலைமை கொஞ்சம் சீராகி கப்பல்காரர்கள் நிலம் தொட அனுமதி கிடைக்கிறது.இம்முறை நான் கப்பல் வரும்முன் இருதினம் மும்பை விடுதியறையில் தனிமை பின்னர் பனாமாவில் ஐந்துதினம்  தனிமைபடுத்தபட்டு மும்பையிலும்,பனாமாவிலும் நோய் தோற்று இல்லை என சோதனையில் உறுதியானபின் தான் கப்பலுக்குள் வந்தேன்.

  தற்போது நான் பணியிலிருக்கும் எல்.பி.ஜி டாங்கர்களில் வெளியே செல்வது என்பது மிக,மிக அரிதானது.கப்பல் சரக்கு நிறைக்க பெரும்பாலும் அரபு வளைகுடா நாடுகளுக்கு செல்லும்.அங்கே அனுமதியே இல்லை. பாதுகாப்பு காரணங்களால் எல்.பி.ஜி டெர்மினல்கள் கரையிலிருந்து வெகுதூரத்தில் அமைத்திருகிறார்கள்.

 அமெரிக்கா,ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் கப்பல்கரார்கள் வெளிய செல்ல அனுமதியுண்டு. இம்முறை நான் பணியில் இணைந்தபின் வியட்னாமில் வெளியே செல்ல முடிந்தது.அங்கிருந்து கன்னியாகுமரி முட்டம்,சூயஸ் கால்வாய் வழியாக மத்தியதரை கடலுக்குள் புகுந்து ஜிப்ரேல்டர் முனையை தாண்டி அட்லாண்டிக் கடலில் நுழைந்து அமெரிக்காவின் ஹூஸ்டன் துறைமுகப்பை அடைந்தபோது பன்னிரெண்டாயிரம் மைல்களை கடக்க முப்பத்தியாறு நாட்கள் கடலில் பயணித்திருந்தோம்.

  

 ஹூஸ்டன் வரும் முன்னே பலரும் வெளியே செல்லும் கனவில் இருந்தனர்.ஜப்பானின் சோஹே கப்பல் பணியில் இணைந்தது நோய் தோற்று காலத்தில் இதுவரை எந்த அந்நிய மண்ணிலும் வெளியே சென்றதில்லை. வியட்நாமில் அனுமதிசீட்டு வேண்டுபவர்களின் பெயரை எழுத சொல்லி அறிவிப்பு பலகையில் எழுதியிருந்தது அதை ஷோஹே பார்ப்பதற்கு முன் அனுமதி சீட்டு விண்ணப்பம் துறைமுக அதிகாரிகளுக்கு சென்று விட்டது.கடந்த மாதம் வியட்நாமில் பணியில் இணைந்த பிலிப்பினோ பயிற்சி இஞ்சினியரும் முதன்முதலில் அந்நிய மண்ணில் பாதம்பதிக்க ஆர்வத்துடன் இருந்தனர்.

ஹூஸ்டனில் கரையணைந்த அன்று மாலையில் குடியுரிமை அதிகாரிகள் கப்பலுக்கு வந்து அமெரிக்க விசா இல்லாத இருவரைத்தவிர அனைவருக்கும் ஷோர் பாஸ் வழங்கினார்.

  துறைமுகம் வரும்முன் ஒருநாள் நங்கூரம் பாய்ச்சி நின்றதால் இயந்திர பணியாளர்கள் சில பராமரிப்பு பணிகளை செய்து முடித்து வெளிய செல்ல தயாராயினர். கப்பலுக்கான எண்ணையும் நிரப்பப்பட்டது.

  கப்பலில் எப்போதும் ஐம்பது சதமானம் பணியாளர்கள் இருந்தாக வேண்டியது கட்டாயம். முதல் குழுவில் பதினோரு பேர் காலை ஒன்பதுமணிக்கு புறப்பட்டு சென்றனர்.அதில் நான்குபேர் நாசா அறிவியல் மையத்துக்கு சென்று வந்தனர்.

  கப்பலில் சரக்கு நிறைக்கும் பணி துவங்கவில்லை.காஸ் பிளாண்டில் எனக்கும் காஸ் இன்ஜினியருக்கும் ஆறு மணிநேரம் வேலை,ஆறு மணிநேரம் ஓய்வு. எனக்கு காலை ஆறு முதல் பன்னிரண்டு மணிவரையும் பின்னர் இரவு ஆறு முதல் பன்னிரண்டு.

 காஸ் இஞ்சினியர் காலையிலேயே போய்விட்டு இரவு ஏழுமணிக்குத்தான் வந்தார். அவரது வேலைநேரத்தை நான் கவனித்துக்கொண்டேன். நன்றாக தூங்கிவிட்டு இரவு பன்னிரண்டு மணிக்கு வந்து என்னை விடுவிக்க சொன்னேன்.

  இரவு பன்னிரெண்டரை மணிக்குமேல் அறைக்கு வந்து நீராடி,தொழுதுவிட்டு சுனிதாவிடம் பேசிவிட்டு இரண்டு மணிக்கு படுத்து மூன்றரை மணிநேரம் தூங்கி காலை ஆறுமணிக்கு பணிக்கு சென்றுவிட்டு காஸ் இஞ்சினியரை பத்தரை மணிக்கு வந்து என்னை விடுவிக்க சொன்னேன்.


 




 பலமுறை ஹூஸ்டன் துறைமுகப்புக்கு வந்தும் நாசாவின் அறிவியல் மையத்துக்கு (Houstonspace center) செல்லும் வாய்ப்பு கிடைக்கவேயில்லை.இம்முறை மூன்றாம் அதிகாரி ரஹீம் உல்லாவும்,சமையற்காரர் கோம்சும் வருவதாக சொன்னார்கள். நாசா விண்வெளி அறிவியல் மையத்துக்கு போய்விட்டு,பெஸ்ட் பை மின்சாதன கடையில் எனக்கொரு போன் வாங்கிவிட்டு வால்மார்ட் வணிக வளாகத்தில் காத்திருந்த ரஹீம் உல்லா,கோம்ஸ் உடன் திரும்பி கப்பலுக்கு வருகையில் இரவு ஒன்பது மணியாகிஇருந்தது.




   அப்படியே பணியில் இணைந்து காஸ் இஞ்சினியரை விடுவித்தேன்.அதிகாலை இரண்டு மணிக்கு அவர் என்னை விடுவித்தார். நல்ல களைப்பு அஞ்சால் அலுப்பு மருந்து குடித்தபின் இன்றும் மூன்று மணிநேரம் தூங்கிவிட்டு காலை ஆறு மணிக்கு பணிக்கு சென்றேன்.

 இன்றும் காலையில் ஜப்பானியர் மூவரும் முதன்மை இஞ்சினியரும் வெளியே புறப்பட்டு சென்றனர். காலை பத்தரை மணிக்கு இதுவரை வெளியில் செல்லாத,இரண்டாம் அதிகாரி ஒலாஸ்கி,மோட்டார்மேன் உஸ்மான்,சென் குப்தாவுடன் சமையற்காரர் கோம்ஸ்ம் வெளியே செல்ல தயாராகினர்.முதன்மை அதிகாரி என்னிடம் “ஷாகுல் வெளிய போயிட்டு வா என்னமும் வாங்கணும்னா போ” என்றார்.



“ரெண்டு நாளா உறக்கம் இல்ல  இன்னைக்கும் உறங்க முடியாது,நா போவல்ல” என்றேன்.

“என்னைக்குமா போறா,இனி அடுத்த சான்ஸ் எப்போன்னு தெரியாது,கோ மேன்,கோ”என்றார். காஸ் இஞ்சினியரை அழைத்து என்னை விடுவிக்க சொன்னேன் சரி என்றார்.

 பத்து நிமிடத்திற்குள் தயாராகி நானும் வெளியே செல்பவர்களுடன் இணைந்து கொண்டேன்.சென் குப்தாவும்,ஒலாஸ்கியும் வால்மார்ட் கடையிலிருந்து பிரிந்து சென்றனர்.

 நாஞ்சில் ஹமீது,

  13 october 2023.

sunitashahul@gmail.com


Uploading: 884250 of 2204288 bytes uploaded.



   

  

கப்பல் காரனின் விடுமுறை

 

கடந்த ஆண்டு சிங்கை சாங்கி விமான நிலையம் 

        https://nanjilhameed.blogspot.com/2019/08/blog-post_15.html?m=0

https://nanjilhameed.blogspot.com/2019/08/blog-post.html?m=0

கப்பலுக்கு வந்து ஐந்து மாதங்கள் தாண்டிவிட்டது. எனது பணிஒப்பந்தம் ஏழு மாதம் டிசம்பர் ஏழாம் தேதி முடிவடையும். விடுமுறை குறித்து மிக விரிவாக முன்பே மூன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதியிருப்பதை இந்த கட்டுரை எழுதும்முன் வாசித்து பார்த்தேன்.கப்பல் காரனின் விடுமுறையும் எவ்வளவு கடினமானது என சொல்கிறது அவை.

   எல்லா வருடமும் டிசம்பர் மாதம் எனக்கு மிக முக்கியமானது. நவம்பர் இறுதி ஷாலிம் பிறந்தநாள்,டிசம்பர் பன்னிரெண்டு எனது பிறந்தநாள்,டிசம்பர் பதினாறு சுனிதா என்னை கைபிடித்த நாள்,ஜனவரி இரண்டு சுனிதாவின் பிறந்த நாள் கூடவே விஷ்ணுபுரம் விழா டிசம்பரில் வருவதால் டிசம்பர்(“அவுரு ஊருக்கு வாறது விஷ்ணுபுரம் விழாக்கு கணக்கு பண்ணிதான்,பொண்டாட்டி புள்ளையள பாக்குதுன்ன சும்மா சொல்லுவாரு”இது சுனிதா)  மாதம் நான் நான் ஊரில் இருப்பது வெகுசிறப்பு. ஆகவே இம்முறையும் பணி ஒப்பந்தம் முடியும் தருவாயில் அதாவது டிசம்பர் முதல் வாரத்தில் கப்பல் ஏதாவது துறைமுகத்தில் இருக்கவேண்டுமென எண்ணிக்கொண்டேன்.

 செப்டெம்பர் மாத இறுதியில் நடந்த மாதந்திர கூட்டத்தில் காப்டன் நவம்பர்,டிசம்பர் மாதத்தில் பணி ஒப்பந்தம் முடியும் தருவாயில் உள்ளவர்களின் பெயர்களை ஒன்றாக இணைத்து ஊருக்கு அனுப்பும் பட்டியலை அலுவலகத்துக்கு பரிந்துரைப்பதாக சொன்னார். கப்பல் சைனாவை நோக்கி சென்றுகொண்டிருந்தது.

இம்முறை இங்கே காஸ் பிட்டராக இருக்கிறேன்.என்னுடன் திருச்சி ஸ்ரீரங்கத்தை சார்ந்த காஸ் இஞ்சினியர் ஒருவரும் உள்ளார்.நாங்கள் இருவரும்தான் காஸ் பிளாண்டை பார்த்துக்கொள்கிறோம்.அவருக்கும் ஆறு மாத பணி ஒப்பந்தம் டிசம்பர் முதல் வாரத்தில் முடிவடைகிறது.  

   சைனாவை நெருங்கும் முன் நடந்த கூட்டத்தில் காப்டன் சூயஸ் கால்வாயை கடக்கும்போது ஊருக்கு செல்லவிரும்புபவர்களின் விருப்பத்தை கேட்டார். பின்னர் அமெரிக்காவிலிருந்து ஊருக்கு செல்லும் விருப்ப பட்டியலில்  காஸ் இன்ஜினியரும்,நானும் கையுயர்த்தியபோது,காப்டன் காஸ் பிளாண்டில் உள்ள இருவரையும் ஒன்றாக அனுப்ப முடியாது என்றார். வரும் நவம்பர்மாதம் முதல் வாரத்தில் சூயஸ் கால்வாயிலிருந்து ஊருக்கு செல்லும் நால்வர் குழுவில் உன்னையும் இணைத்து விடவா என காஸ் இஞ்சினியரிடம் காப்டன் கேட்டபோது. இல்லை நான் அமெரிக்காவிலிருந்து போகிறேன் என்றார். காப்டன் என்னிடம் “தென் ஷாகுல்  கப்பல் அமெரிக்கா விட்டபின் ஏழு நாட்களுக்குப்பின் பனாமாவில் வாய்ப்பு கிடைச்சா இறங்கலாம்,இல்லேன்னா கப்பல் டிஸ்சார்ஜ் போர்ட் வர  நீ இருந்தாக வேண்டும்” என்றார்.

    இங்கிருந்து அமெரிக்க சென்று நவம்பர் மூன்றாவது வாரத்தில் சரக்கை நிறைத்தபின் அங்கிருந்து ஆசியாவிற்கு வர ஒரு மாததிற்கு மேலாகும்.அது டிசம்பர் மாதம் நான் ஊரில் இருக்கவேண்டுமென நினைப்பதை கனவாக ஆக்குவது. அது என்னால் இயலாது டிசம்பர் முதல் வாரம் நான் ஊரில் இருந்தே ஆக வேண்டும். 

  சைனாவை நெருங்கும்முன் சென் குப்தா என்னிடம் கேட்டான் “ஷாகுல் பாய்,அமெரிக்காலருந்து நீ வீட்டுக்கு போவேன்னு சொன்னா,இப்ப காஸ் இஞ்சினியரும் போறேன்னு சொல்லத்துல,நீ ஏன் வாய மூடிட்டு இருந்தா” 

  “தாதா  ஹூஸ்டன்ல இருந்து உன் கூட ஒண்ணா பிளைட்ல வருவேன் கத்தார் ஏர்வேய்ஸ் வயா தோஹா திருவந்த்ரம்  எழுதி வெச்சிக்கோ” என்றேன். மனதில் அமெரிக்காவிலிருந்து நான் போயே ஆக வேண்டும் எனும் எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது.சீனாவில் சரக்கை இறக்கியபின் காப்டனிடம் பேச வேண்டுமென இருந்தேன்.

 காஸ் இஞ்சினியரிடம் பத்து நாட்களுக்கு முன் சொன்னேன். “நவம்பர்மாசம் அமெரிக்காலேருந்து நான் போயே ஆகணும், எனக்கு டிசம்பர் பதினஞ்சாம்  தேதி நாரோல் கோயம்புத்தூர் டிக்கெட் போட்டாச்சி,அங்க ரெண்டு நாள் விழா இருக்கு” என்றேன்.

“எனக்கும் பிறந்தநாள்,கிறிஸ்மஸ் எல்லாம் இருக்கு டிசம்பர்ல”.

“செரி கேப்டன்ட்ட  பேசுவோம்,அமெரிக்கா போன பொறவு இப்ப நீ இறங்க முடியாது இன்னும் ஒரு மாசம் இரின்னு சொன்னா என்னால இருக்க முடியாது,இப்பமே பேசி முதல்ல போறதா இருந்தா சூயஸ்ல பெயிருங்க”என்றேன்.

“இப்ப கேப்டன்ட்ட பேசண்டாம் பொறவு பாக்குலாம்” என்றார். 

ஒரு எண்ணத்தை வளர்த்து அதை உறுதியாக்கி யாருக்கும் பாதகமில்லாமல் நான் நினைத்ததை நிறைவேற்றும் வல்லமை எனக்குண்டு.

 சீனாவில் இரு துறைமுகங்களில் சரக்கை இறக்குதல் கப்பல் கரையணைதல்,நங்கூரம் பாய்ச்சுதல் விடுமுறையில் ஊருக்கு செல்பவர்கள் என பத்து நாட்களுக்கும் மேலாக அனைவருக்கும் ஓய்வின்றி பணி. காலில் அடிபட்டிருந்தாலும்,கடும் பணி,ஓய்வுக்கு மத்தியிலும் நவம்பர் இருபத்தி நான்காம் தேதி நான் ஹூஸ்டனிலிருந்து ஊருக்கு செல்லும் எண்ணத்தை வளர்ப்பதை விடவில்லை.

   நேற்று காலை காப்டனை சந்தித்து பேச வேண்டும் என்றேன். 

“சொல்லு ஷாகுல்”

  “டிசம்பர்ல நான் ஊர்ல இருந்தாகணும்,அமெரிக்கா போன பொறவு அடுத்த போர்ட்ன்னு சொன்னா என்னால இருக்க முடியாது”

 “நான் லிஸ்ட் அனுப்பிட்டேன்,அடுத்தது பனாமால சான்ஸ் உண்டு”

“கப்பல் சவுத் ஆப்ரிக்கா வழியா வந்தா” எனசொன்னபோது ஒரு மாததிற்கு மேல் வாய்ப்பே இல்லை என்பதை புரிந்துகொண்டு தலையசைத்தார்.

“நான் லெட்டர் தரனுமுன்னா சொல்லுங்க”

“எஸ் நீ தா நான் அனுப்பிரேன்”என்றார். 

பத்துமணிக்குள் கணினியில்  அலுவலக சாப்ட்வேரிலிருந்து விடுமுறை கடித்ததை நிரப்பி அச்சு நகல் எடுத்தேன், காஸ் இஞ்சினியர் “லெட்டர் குடுக்கீயளோ” 

“ஆமா எனக்கு போனுமில்லா” என்றேன்.

 முதன்மை இஞ்சினியரிடம் பன்னிரெண்டு மணிக்கு மேல் போய் லீவ் லெட்டரை  நீட்டினேன்.

கையில் வாங்கியவர் “எப்ப போறதுக்கு,நவம்பர் தேர்ட் வீக்கா, காண்ட்ராக்ட் எப்ப முடியும்”


“டிசம்பர் ஆறு,பொறவு நீங்க ரெண்டு பேரயும் ஒண்ணா அனுப்ப முடியாதுன்னா சொன்னா” என்றதும் 

அவர் உதடு பிரியாமல் புன்னகைத்து “நான் ரெண்டுபேரையும் ஒண்ணா உட மாட்டேன்”என்றார்.

நானும் சிரித்துவிட்டு அவர் கையெழுத்து போட்டு தந்த பேப்பரை வாங்கி வந்து ஒரு மணிக்கு பிரிட்ஜில் சென்றேன் காப்டன் அவரது மேஜைக்கு வரவில்லை,அவரது கணினியின் மௌசுக்கு கீழே வைத்துவிட்டு,இரண்டாம் அதிகாரியிடம் சொல்லி விட்டு பணிக்கு சென்றேன்.மீண்டும் இரண்டு மணிக்கு சென்ற போது காப்டன் அமர்ந்திருந்தார். 

2014 இல் ஜப்பான் டோய காஷி துறை முகம் 


“ஸார் சைன் ஆப் லெட்டர்’என்றேன்

“பாத்துட்டேன் ஷாகுல்” என்றார்.

மாலையில் காப்டனின் முத்திரையும்,கையொப்பமும் இட்ட எனது விடுமுறை கடிதத்தை காடட் அஞ்சுமன் கொண்டு வந்தான். “ஷாகுல் பாய் இது நீங்க கையெழுத்தே போடாமே குடுத்துரீக்கீங்க”

 வாங்கி பார்த்தேன் உடனே கையொப்பம் இட்டு கொடுத்தேன்.

நாஞ்சில் ஹமீது,

15-10-2023