Sunday, 24 May 2026

கடல் – வாசிப்பனுவம்

   

 


ஆசிரியர் ஜெயமோகன் எழுதிய கடல் நாவலை ஞாயிறு ஓய்வாக இருந்தபோது மதியம் வாசிக்க துவங்கினேன் ஒரே நாளில் முன்னூற்றியைம்பது பக்கங்கள் வாசித்து விட்டேன். பின்பு வேலைநாட்களாக இருந்ததால் இரவில் தூங்க செல்வது வரை கொஞ்சம் வாசிப்பு என வியாழன் இரவில் முடித்தேன்.

   கையில் எடுத்தபின் கீழே வைக்கவே முடியாதபடி விறுவிறுப்பான நாவல் மொத்தம் 555 பக்கங்கள்.

சாம் எனும் பாதிரியாரை நாற்காலியில் கையில் துப்பாக்கியுடன் அசையாமல் இருக்க சொல்லி தாமஸ் சொல்லுமிடம் தான் துவக்கம்.

  பெரும் வணிகரான ஜேம்ஸ் பெர்னாண்டோ மற்றும் மணப்பாடு சாலோம் மாளிகையில் வாழ்ந்த தம்பதிக்கு தங்க தொட்டிலில் பிறந்து வளரும் பணக்கார பணியடிமை சாம் பெர்னாண்டோ.வேலைகாரியின் குழந்தையை வெயிலில் சிமெண்ட் தரையில் போடுவதை பார்த்து தந்தையை வெறுக்கிறார். 

 கல்விபயில சென்னைக்கு செல்லும் சாம் கிறிஸ்தவ மதகுருவாக முடிவெடுத்து செமினரியில் சேருகிறார். அங்கே கடும் தவங்களை செய்து தான் ஒரு புனிதராக மாற விரும்புகிறார். புனிதர் என்றே தன்னை நம்புகிறார்.

 தான் பணிபுரிந்த சர்ச்சில் இறந்துவிட்டதாக கருதப்பட்ட அக்னீஸ் மேரியின் குழைந்தையை காப்பாற்றியபின் அந்த ஊரில் புனிதராகவே வலம் வருகிறார். காலில் விழுந்து ஆசி பெற்ற அவ்வூர் மக்களே அவரை அடித்து காறிதுப்பி சிறைக்கு அனுப்புகின்றனர். இறைவனை நம்பிய பாதர் சாமின் மனம் அமைதியின்றி ஊசலாடுகிறது. 

 கடற்கரையின் மகன் தாமஸ். தாய் சாகயமேரிக்கு அந்த சமூகம் தரும் கொடுமைகளை,கீழ்மைகளை காண்கிறான். தாய் இறந்த அன்றே அனாதையாகிவிடும் தாமஸ் தாயின் அடக்கத்திற்குபின் வந்து பார்க்கும்போது குடிசையே காணாமல் போய்விட்டது. பட்டினி போராட்டத்தில் வளர்ந்தபின் எதையும் செய்ய துணிகிறான். அன்றாடத்தில் வாழ்பவன் கடலின் மகன். மீன் பிடிப்பதிலும்,சுறா வேட்டையிலும்,பெர்க்மான்சுக்காக செய்யும் கடத்தல் வேலைகளிலும் உள்ளூர உணர்ந்து தெளிவாக செயல் புரிகிறான். அலைபாயாத மனம் கொண்ட அவனால் கடலையை வசப்படுத்தியது போல் பயமின்றி செய்கிறான் செயல்களை. எதுவும் பாவம் இல்லை அவனுக்கு. ஊர் மக்கள் அனைவரும் அவனை பாவத்தில் பிறந்தவன் என்று வெறுக்கிறது.

  செமினரியில் வகுப்பெடுக்கும் பெர்க்மான்ஸ் சாமினால் பாவத்தின் பக்கம் வருகிறார். அறிவாளி,இசை,ஓவியம்,அழகியல் என ஒரு ஆளுமை ஆவர். செய்யும் அனைத்து பாவ செயல்களனைத்தையும் தெளிவாக செய்கிறார். தன்னை சாத்தானின் பக்கம் திருப்பிய சாமையும் நினைத்து கொள்கிறார் புனிதரை சாத்தானின் மூலம் வீழ்த்துவதே வெற்றி என நம்புகிறார்.

பியா ஷணத்தில் வாழ்பவள். மனதில் எதையும் நினைவாக சேமிக்காததால் அவள் தான் புனிதர். மருத்துவம் செய்யும் செவிலி பெண்ணாக வரும் பியாவை ஊர் மக்களனைவரும் புனிதராகவே நம்புகின்றனர். எந்த இறப்பும் அவளை பாதிப்பதே இல்லை.

 கடலில் கட்டுமரம் அடித்து இறந்துபோகும் இளைஞரின் மரணம் பற்றி தாமஸ் கேட்கும் இடம் “உங்களுக்கு வருத்தமே இல்லியா”

“எதுக்கு” 

“ஒருத்தன் செத்து போயிருக்கான்இல்ல?”

“அவன் ஆண்டவன் கூடத்தானே இருப்பான்” என என பியா சொல்லுமிடம்.

 கடலிலிருந்து கடல் நாவலை வாசித்தேன். கடந்த வாரங்களில் ஏழாம் உலகம்,அனல் காற்று என நாவல்களை வாசித்திருந்தேன். ஒவ்வொன்றும் வேறு,வேறு உலகங்களை சொல்லும் படைப்புகள்.

 கடலில் நடக்கும் ஆயுத கடத்தல்கள்,கப்பல்கள் படகுகள் என விவரணைகள் மிக துல்லியம்.குறிப்பாக எதிர்பாராத திருப்பங்களுடன் திரில்லர் நடையில் இருப்பதால் கடல் நாவலை கையில் எடுத்தபின் கீழே வைக்கவே முடியவேயில்லை.

  பாவமும்,புண்ணியமும் மனித மனதை பொறுத்தே,பாவம்,புண்ணியம் என இருக்கிறதா எனும் கேள்வியை இறுதியின் தந்தது கடல் நாவல்.

இருபத்தியொரு ஆண்டுகளாக கடலிலேயே இருக்கிறேன். கடலம்மா கருணை காட்டவில்லை என்றால் எதுவும் நடக்காது. அவள் எப்போது சீறுவாள்,எப்போது சாந்தமாவாள் என்பது யாரும் கணிக்க முடியாது. அவ்வகையில் நாவலில் பிடித்த வரிகள் என ஏராளம். கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களின் வரிகள் 

“லே கடலுக்குள்ள வந்துட்டியண்ணா,பின்ன உனக்கு ஒரு மனுசனும் கூட்டு இல்ல பாத்துக்க.நீயும் கடலும் மட்டுமாக்கும்,கடலம்மோன்னு விளிசிட்டு கைவிரிச்சி நிக்க வேண்டியதுதான். அவ வளத்தணுமானா வளத்துவா கொல்லனுமான கொல்லுவா”.

 “கடலம்ம அள்ளிகுடுப்பா ஆத்திரம் வந்தா அள்ளி வாயிலயும் போட்டுகிடுவா”

  இவை உண்மையும் கூட.

ஷாகுல் ஹமீது.