Saturday, 30 May 2026

பக்ரீத்


        கப்பலில் முன்பெல்லாம் பண்டிகைகளே தெரியாது. இம்முறை சென்னையில் வாழும் இளையவள் கிருத்திகா குறுஞ்செய்தி அனுப்பி கேட்டாள். “அண்ணா பக்ரீத் எப்போது” என. “இன்றும், நாளையும் என பதிலனுப்பினேன்”. இம்முறை ஒரு நீண்ட பக்ரீத் பெருநாளாக இருக்கிறது.

3rd  officer Asad 

Chief officer Dinesh 


  இருபத்தி ஏழாம் தேதி புதன்கிழமை அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியாவில் தியாகத்திருநாள் (பக்ரீத் பண்டிகை) கொண்டாடப்பட்டது. புருனே, தாய்லாந்து மற்றும் இந்தியாவில் கேரளா தவிர மற்ற பகுதிகளில் வியாழக்கிழமை பக்ரீத்தாக இருந்தது.

   என் வீடு இருக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள பள்ளிவாசலில் புதன்கிழமை பக்ரீத் தொழுகை காலை ஏழு மணிக்கு நடந்தது. சுனிதா அருகிலுள்ள பள்ளியில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினாள். மகன்கள் இருவரும் வியாழக்கிழமை பெருநாள் தொழுகைக்கு சென்றனர். அவர்களுக்கும் ஊரிலிருந்த உறவினர், நண்பர்களுக்கும் வியாழக்கிழமை தான் பாண்டிகை நாளாக இருந்ததது.

  கப்பல் கடந்த ஞாயிறு மாலையில் ஹாங்காங் அருகிலுள்ள சீனாவின் சுகாய் துறைமுகத்திலிருந்து ஆஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்டது. பூமத்தியரேகையையொட்டிய பயணம் ஆதலால் கடும் வெப்பம்.

Main engine air cooler 



  துல்கஜ் மாதம் பத்தாம் நாள் தான் பக்ரீத் பண்டிகை. துல்கஜ் ஒன்பதாம் நாள் ஹாஜிகள் நோன்பிருந்து சௌதியின் அரபாவிலுள்ள மினா மைதானத்தில் இரவு தங்கிவிட்டு மறுநாள் காலை காபாவை நோக்கி சென்று ஏழு முறை தவாப் செய்து ஹஜ் கடமையை நிறைவேற்றுவர் ஹாஜிகள். உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் துல்கஜ் ஒன்பதாம் நாளில் நோன்பிருப்பர்.

  கப்பலில் இந்தோனேசியாவை சார்ந்த மூன்றாம் இஞ்சினியர் செய்னல் அன்று காலையில் என்னிடம் கேட்டார் “நோன்பு வைத்திருக்கிறாயா” என. கடும் வெப்பமாக இருந்ததால் நான் நோன்பு வைக்கவில்லை.



    கடந்த ஞாயிறு துறைமுகம்விட்டபின் திங்கள்கிழமை ஓய்வுநாள். கப்பலின் முக்கிய இயந்திரத்தின் காற்று குளிர்விப்பானில் நன்னீர் ஒழுகல் இருந்ததை மூன்று வாரங்களுக்கு முன் கண்டுபிடித்தோம்.


  கப்பலை நிறுத்திதான் அந்த பணியை செய்யமுடியும். அதற்கு கப்பல் முதலாளி மற்றும் மேனேஜர், சரக்கை கையாளும் நிறுவனத்திடம் அனுமதிபெறவேண்டியது கட்டாயம். முக்கியமாக கப்பல் முதலாளிக்கு தினசரி வாடகை தரும் சரக்கு நிறுவனம் அனுமதி தரவேண்டும்.

  கப்பலை பாதுகாப்பான இடத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி பணியை துவங்கி முடிக்க குறைந்தது ஒரு நாளுக்கு மேலாகும். இந்த கப்பல் இரட்டை இன்ஜின்களை கொண்டது. ஒரு இஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும் பழுதான இன்ஜினின் பணி செய்ய இஞ்சின் தயாரிப்பு நிறுவனம் ஒத்துகொள்ளவில்லை.

  இறுதியாக சரக்கை கையாளும் நிறுவனம் இருபத்தி நான்கு மணிநேரத்துக்கு மட்டும் கப்பலை நிறுத்த அனுமதி வழங்கியது. அதற்கு மேல் ஆகும் நேரத்திற்கு கப்பலின் வாடகை தரமாட்டோம் என உறுதியாக சொல்லிவிட்டார்கள். சீன துறைமுகத்துக்கு வெளியே நங்கூரம் பாய்ச்சி நின்றால் பணம் கட்ட வேண்டும். எனவே காப்டன் பாதுகாப்பான இடத்தில் நங்கூரம் பாய்ச்சாமல் கப்பலை நிறுத்துவோம் என்றார்.

  சீனாவிலிருந்து புறப்பட்டு இரண்டு நாள் பயணித்த பின்னரே போக்குவரத்து இல்லாத பாதுகாப்பான இடம் வரும். பண்டிகை தினமான அன்று கப்பலை நிறுத்தும் நாளும் வந்தது. முந்தையநாள் பணி விவாதத்தின் போது கொரியாவின் முதன்மை இஞ்சினியர் சூன் லீ “காப்டன் இதுதான் பாதுகாப்பான இடம் என சொல்கிறார் எனவே நாளை கப்பலை நிறுத்தி கூலர் பணியை செய்வோம் உனக்கு ஏதாவது பிரச்னை இருக்கிறதா” எனக்கேட்டார்.

  புதன்கிழமை காலை எட்டு மணிக்கு கப்பலை நிறுத்தி இரு குழுவாக பிரிந்து வேலையை துவங்கினோம். வியாழன் காலை ஐந்து மணிக்கு பணி முடிந்து இஞ்சின் இயக்கப்ட்டு கப்பல் நகர்ந்தது. நான் அதிகாலை நான்கரைக்கே அறைக்கு வந்து குளித்து ஜன்னல் வழியாக பார்த்தபோது அடிவானம் வெளுக்க துவங்கியிருந்தது. காலை நேர பஜர் தொழுகையை நிறைவேற்றியபின் கதிரெழும் நேரம் ஐந்து மணி நான்கு நிமிடம் என காபாவின் திசை மற்றும் தொழுகை நேரத்தை காட்டும் ஆப் சொல்லியது. 



   கதிரெழுவதை பார்த்துவிட்டு உறங்க சென்றேன். ஒன்பதரைக்கு மேல் விழித்து மீண்டும் குளித்து பெருநாளுக்காக வைத்திருந்த புதிய சட்டையை அணிந்து இரண்டு ரக்காத் சுன்னத் தொழுது இரண்டு பேரீச்சைபழம் மட்டும் சாப்பிட்டேன். பிரிட்ஜில் மூன்றாம் அதிகாரி ரத்னகிரியின் அசத். அவருக்கு வாழ்த்து சொல்ல பிரிட்ஜில் சென்றேன். 

முதன்மை அதிகாரி மலேசியாவின் தினேஷ் “அண்ணே எல்லாரும் டயர்டா இருப்பீங்க, நாளைக்கி பெருநாள் ஹாலிடே, மத்தியானம் மட்டன் பிரியாணி செய்ய சொல்லீருக்கேன்.” என்றார். “இன்னும் தூங்காமல் என்ன செய்கீர்கள்” எனக்கேட்டார். பன்னிரண்டு மணி மதிய உணவுக்குப்பின் மூன்று முதல் ஐந்துவரை தூங்கினேன். முழுநாளும் தூக்கத்திலேயே கழிந்தது.









  வெள்ளிகிழமையன்று காலை பத்துமணி மீட்டிங் முடிந்தபின். அடுமனை சென்று சமையலுக்கு கொஞ்சம் உதவினேன். மதிய உணவாக மட்டன் பிரியாணி, பப்படம், வெங்காய ரைத்தா. பிலிப்பினோ, கொரியர்களும் இருப்பதால் ஆவியில் வேகவைத்த சாலமன் மீன், நண்டும், கணவாயும் சேர்ந்த கறி, நூடுல்ஸ், சிக்கன் நகட்ஸ், வெஜ் ரோல்ஸ், ரோஸ்ட்ட் போர்க், பீப் மின்ஸ், கிம்ச்சி, வாழைப்பழம், திராட்சை ஆகியவையும் இருந்தது. குடிபிரியர்களுக்கு பெருத்த ஏமாற்றம். இம்முறை சைனாவில் வாங்கி பீர்கள் அனைத்தும் ஆல்கஹால் இல்லாத (NON ALHAHOL ) வையாக சப்ளை செய்துவிட்டார்கள்.




  மதிய உணவவிற்குப்பின் விளையாட்டு போட்டிகள் துவங்கியது, மூன்று அணிகளாக பிரிந்துகொண்டோம். வாயில் கவ்விய கரண்டியில் திராட்சை பழத்தை வைத்து நடந்து இலக்கை எட்டியபின் சக அணியிலுள்ளவரின் வாயிலிருக்கும் கரண்டியில் திராட்சையை கைதொடாமல் மாற்ற வேண்டும்.




 இரு கால்களிலும் சாக்கு பையை நுழைத்து அமர்ந்த நிலையில் இலக்கை தொட்டு திரும்புதல். கப்பலின் பாகங்களை எழுதிய துண்டு நெற்றியில் ஒட்டப்படும் சக அணியை சேர்ந்தவர் எதிரில் இருப்பார். அவரிடம் இதுவா,இதுவா எனக்கேட்டுகொண்டே வந்து சரியான விடையை கண்டுபிடிப்பது. அவர் ஆம்,இல்லை,இருக்கலாம் என்று மட்டுமே பதிலளிக்க வேண்டும்.




  மூன்று மணிக்கு மேல் மேஜை பந்து விளையாட்டு துவங்கியது. மொத்தம் பத்து அணிகள். ஒவ்வொரு அணியும் ஐந்து போட்டிகளில் விளையாடவேண்டும். மொத்தம் இருபத்தியைந்து போட்டிகள். பதிமூன்று போட்டிகள் மாலை ஆறு மணிவரை நடந்து முடிந்தது. நானும், முதன்மை அதிகாரியும் ஓரணி. விளையாடிய மூன்று லீக் போட்டியிலும் வென்றோம்.



  இன்று சனிக்கிழமை வேலைகள் மட்டுமே. அரை நாள் விடுமுறை. அலாரம் டெஸ்ட் செய்வது மட்டுமே என் பணி. மதியம் மூன்று மணிக்கு மேல் மீதமுள்ள லீக் போட்டிகள் நடந்தது. அனைத்து லீக் போட்டியிலும் வென்று அரையிறுதிக்கு என் அணி தகுதி பெற்றது. நாளை ஞாயிறு பத்துமணிக்குமேல் அரையிறுதி போட்டியும், இறுதி போட்டியும் நடக்கும். 

  புதன்கிழமை அரபுவளைகுடா, மலேசிய, சிங்கப்பூர் உறவுகள், சுனிதாவுக்கு பக்ரீத் பெருநாள், மறுநாள் உலகின் பிறபகுதியிலுள்ளவர்கள் கொண்டாடினர். எனக்கும் அன்றுதான் பக்ரீத். வேலை காரணமாக பக்ரீத் கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை அதை தொடர்ந்த போட்டிகள் ஞாயிறு வரை தொடர்வதால். இம்முறை ஐந்து நாட்கள் பக்ரீத் பண்டிகையாக இருக்கிறது. வழக்கமாக கப்பல்களில் பண்டிகைகள் கடந்து செல்வதே தெரியாது குறிப்பாக அன்றும் பணி நாளாக இருக்கும்.



  இம்முறை பக்ரீத் வாழ்த்து அனுப்பியவர்கள் ஆட்டின் படத்துடன் ஸ்டிக்கர் அனுப்பியிருந்தனர். இப்ராஹீம் நபி இறைவனின் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு வயதான காலத்தில் பெற்ற குழந்தையை பலியிட தயாராவார். அப்போது இறைவனின் அசரீரி ‘உம்மை சோதித்தோம், மகனை பலியிட வேண்டாம், ஒரு ஆட்டையோ, மாட்டையோ, ஒட்டகத்தையோ பலியிட்டு ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் பங்கிட்டு நீங்களும் உண்ணுங்கள்’ என கேட்கும். 

அவரது தியாகத்தை எல்லோரும் நினைவு கூர்வதே தியாக திருநாளாக கொண்டாடபடுகிறது.

நாஞ்சில் ஹமீது,

30 may 2026.

sunitashahul@gmail.com 

Sunday, 24 May 2026

கடல் – வாசிப்பனுவம்

   

 


ஆசிரியர் ஜெயமோகன் எழுதிய கடல் நாவலை ஞாயிறு ஓய்வாக இருந்தபோது மதியம் வாசிக்க துவங்கினேன் ஒரே நாளில் முன்னூற்றியைம்பது பக்கங்கள் வாசித்து விட்டேன். பின்பு வேலைநாட்களாக இருந்ததால் இரவில் தூங்க செல்வது வரை கொஞ்சம் வாசிப்பு என வியாழன் இரவில் முடித்தேன்.

   கையில் எடுத்தபின் கீழே வைக்கவே முடியாதபடி விறுவிறுப்பான நாவல் மொத்தம் 555 பக்கங்கள்.

சாம் எனும் பாதிரியாரை நாற்காலியில் கையில் துப்பாக்கியுடன் அசையாமல் இருக்க சொல்லி தாமஸ் சொல்லுமிடம் தான் துவக்கம்.

  பெரும் வணிகரான ஜேம்ஸ் பெர்னாண்டோ மற்றும் மணப்பாடு சாலோம் மாளிகையில் வாழ்ந்த தம்பதிக்கு தங்க தொட்டிலில் பிறந்து வளரும் பணக்கார பணியடிமை சாம் பெர்னாண்டோ.வேலைகாரியின் குழந்தையை வெயிலில் சிமெண்ட் தரையில் போடுவதை பார்த்து தந்தையை வெறுக்கிறார். 

 கல்விபயில சென்னைக்கு செல்லும் சாம் கிறிஸ்தவ மதகுருவாக முடிவெடுத்து செமினரியில் சேருகிறார். அங்கே கடும் தவங்களை செய்து தான் ஒரு புனிதராக மாற விரும்புகிறார். புனிதர் என்றே தன்னை நம்புகிறார்.

 தான் பணிபுரிந்த சர்ச்சில் இறந்துவிட்டதாக கருதப்பட்ட அக்னீஸ் மேரியின் குழைந்தையை காப்பாற்றியபின் அந்த ஊரில் புனிதராகவே வலம் வருகிறார். காலில் விழுந்து ஆசி பெற்ற அவ்வூர் மக்களே அவரை அடித்து காறிதுப்பி சிறைக்கு அனுப்புகின்றனர். இறைவனை நம்பிய பாதர் சாமின் மனம் அமைதியின்றி ஊசலாடுகிறது. 

 கடற்கரையின் மகன் தாமஸ். தாய் சாகயமேரிக்கு அந்த சமூகம் தரும் கொடுமைகளை,கீழ்மைகளை காண்கிறான். தாய் இறந்த அன்றே அனாதையாகிவிடும் தாமஸ் தாயின் அடக்கத்திற்குபின் வந்து பார்க்கும்போது குடிசையே காணாமல் போய்விட்டது. பட்டினி போராட்டத்தில் வளர்ந்தபின் எதையும் செய்ய துணிகிறான். அன்றாடத்தில் வாழ்பவன் கடலின் மகன். மீன் பிடிப்பதிலும்,சுறா வேட்டையிலும்,பெர்க்மான்சுக்காக செய்யும் கடத்தல் வேலைகளிலும் உள்ளூர உணர்ந்து தெளிவாக செயல் புரிகிறான். அலைபாயாத மனம் கொண்ட அவனால் கடலையை வசப்படுத்தியது போல் பயமின்றி செய்கிறான் செயல்களை. எதுவும் பாவம் இல்லை அவனுக்கு. ஊர் மக்கள் அனைவரும் அவனை பாவத்தில் பிறந்தவன் என்று வெறுக்கிறது.

  செமினரியில் வகுப்பெடுக்கும் பெர்க்மான்ஸ் சாமினால் பாவத்தின் பக்கம் வருகிறார். அறிவாளி,இசை,ஓவியம்,அழகியல் என ஒரு ஆளுமை ஆவர். செய்யும் அனைத்து பாவ செயல்களனைத்தையும் தெளிவாக செய்கிறார். தன்னை சாத்தானின் பக்கம் திருப்பிய சாமையும் நினைத்து கொள்கிறார் புனிதரை சாத்தானின் மூலம் வீழ்த்துவதே வெற்றி என நம்புகிறார்.

பியா ஷணத்தில் வாழ்பவள். மனதில் எதையும் நினைவாக சேமிக்காததால் அவள் தான் புனிதர். மருத்துவம் செய்யும் செவிலி பெண்ணாக வரும் பியாவை ஊர் மக்களனைவரும் புனிதராகவே நம்புகின்றனர். எந்த இறப்பும் அவளை பாதிப்பதே இல்லை.

 கடலில் கட்டுமரம் அடித்து இறந்துபோகும் இளைஞரின் மரணம் பற்றி தாமஸ் கேட்கும் இடம் “உங்களுக்கு வருத்தமே இல்லியா”

“எதுக்கு” 

“ஒருத்தன் செத்து போயிருக்கான்இல்ல?”

“அவன் ஆண்டவன் கூடத்தானே இருப்பான்” என என பியா சொல்லுமிடம்.

 கடலிலிருந்து கடல் நாவலை வாசித்தேன். கடந்த வாரங்களில் ஏழாம் உலகம்,அனல் காற்று என நாவல்களை வாசித்திருந்தேன். ஒவ்வொன்றும் வேறு,வேறு உலகங்களை சொல்லும் படைப்புகள்.

 கடலில் நடக்கும் ஆயுத கடத்தல்கள்,கப்பல்கள் படகுகள் என விவரணைகள் மிக துல்லியம்.குறிப்பாக எதிர்பாராத திருப்பங்களுடன் திரில்லர் நடையில் இருப்பதால் கடல் நாவலை கையில் எடுத்தபின் கீழே வைக்கவே முடியவேயில்லை.

  பாவமும்,புண்ணியமும் மனித மனதை பொறுத்தே,பாவம்,புண்ணியம் என இருக்கிறதா எனும் கேள்வியை இறுதியின் தந்தது கடல் நாவல்.

இருபத்தியொரு ஆண்டுகளாக கடலிலேயே இருக்கிறேன். கடலம்மா கருணை காட்டவில்லை என்றால் எதுவும் நடக்காது. அவள் எப்போது சீறுவாள்,எப்போது சாந்தமாவாள் என்பது யாரும் கணிக்க முடியாது. அவ்வகையில் நாவலில் பிடித்த வரிகள் என ஏராளம். கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களின் வரிகள் 

“லே கடலுக்குள்ள வந்துட்டியண்ணா,பின்ன உனக்கு ஒரு மனுசனும் கூட்டு இல்ல பாத்துக்க.நீயும் கடலும் மட்டுமாக்கும்,கடலம்மோன்னு விளிசிட்டு கைவிரிச்சி நிக்க வேண்டியதுதான். அவ வளத்தணுமானா வளத்துவா கொல்லனுமான கொல்லுவா”.

 “கடலம்ம அள்ளிகுடுப்பா ஆத்திரம் வந்தா அள்ளி வாயிலயும் போட்டுகிடுவா”

  இவை உண்மையும் கூட.

ஷாகுல் ஹமீது.