Monday, 12 May 2025

இருபது ஆண்டு நிறைவு - 2



அபுதாபி வழியாக துபாய்க்கு பயணம். இம்முறை மும்பை விமான நிலையம். இங்கிருந்துதான் இருமுறை ஈராக் போர்முனைக்கு சென்றேன். அங்கிருந்து திரும்பி வருகையில் அபுதாபியில் நான்கு மணிநேரம் காத்திருப்பும் என முன் அனுபவங்கள் இருந்ததால் விமான பயண படபடப்பு எதுவும் இல்லை.

அதிகாலை ஐந்துமணிக்கு சீனிவாச ராவை எழுப்பினேன். “பத்திரமாக போய் வாருங்கள், பாதுகாப்பாக வேலை செய்யுங்கள்” எனச் சொன்னார். பதினோரு மணி வாக்கில் துபாயில் இறங்கினேன். முகவர் என் பெயரெழுதிய அட்டையுடன் காத்திருந்தார். காரில் செல்லும்போது அவரிடம் போனை வாங்கி நண்பன் ஹபீப் மற்றும் சுனிதாவின் அக்கா கணவர் ஜாகிர் அண்ணனை அழைத்து பேசினேன். ஜாகிர் அண்ணன் “ஜும்மா உண்டுமா சாப்பாடு எங்க” எனக் கேட்டார். என்னிடம் பதில் இல்லை.

துபாய் போர்ட் ரஷீத் துறைமுக வாயிலில் முகவர் என்னை அமர சொல்லிவிட்டு சென்றுவிட்டார். நீண்ட நேரம் காத்திருந்தேன் யாருமே வரவில்லை. நல்ல பசி, இரவில் தூக்கமின்மையால் அமர்ந்தே தூங்கிவிட்டேன். கனவில் சுனிதாவுடன் போனில் பேசிக்கொண்டிருக்கையில், தோளில் ஒரு கை வந்தமர்வதை உணர்ந்து விழித்தபோது என் விசா காப்பி மற்றும் ஆவணங்களுடன் ஒருவர் அருகில் நின்றுகொண்டிருந்தார்.

எனது பாஸ்போர்ட் மற்றும் சி டி சியை (CDC –Continuous discharge certificate) வாங்கி கொண்டு சென்றார். துறைமுகத்தில் நுழையும் அனுமதி சீட்டுடன் மூன்றரை மணிக்கு வந்து என்னை காரில் அழைத்து சென்றார். நூற்றி எழுபது மீட்டர் நீளமுள்ள (Ro-Ro) மெர்டிப் -3 எனும் பெயர்கொண்ட ரோ ரோ வகை கப்பல் பதினாறாம் எண் ஜெட்டியில் நின்றுகொண்டிருந்தது. அங்கே இறக்கிவிட்டார். “பயணிகள் கப்பல் என்றார்களே” எனக் கேட்டேன்.

“இந்த கப்பல்தான் போட்டுருக்கு” என சொல்லிவிட்டு அவசரமாக போய்விட்டார். கப்பலின் வாயிலில் நின்றிருந்த தான்சானியாவின் மாலுமி என்னை கப்பலின் உள்ளே அழைத்துச்சென்றார். மெஸ் ரூமில் நின்றிருந்தவரிடம் சாப்பிட ஏதாவது என சைகையால் கேட்டேன். வெள்ளிகிழமை கப்பலில் பிரியாணி செய்வார்கள் போல. வயிறு நிரம்ப சாப்பிட தந்தார். பின்னர்தான் மங்கிய கண்கள் தெளிய தொடங்கியது. எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் ஜன்னலே இல்லை. இந்த அறையில் நான் தங்க முடியாது என்றபோது வேறு அறையே கப்பலில் இல்லை என்றார்கள். ஜன்னல் இல்லாத அடைத்த சதுர இரும்பு பெட்டிக்குள் பதினோரு மாதம்... என்னால் இயலாது என்றேன்.

யாரை சந்திப்பது, யாரிடம் பேசுவது என எதுவும் தெரியவில்லை. முதல் முறையாக கப்பலை பார்த்த பிரமிப்பு. மிக அவசரமாக என்னை நோக்கி வந்தவர் “தமிழா?” எனக் கேட்டார்.

சேலம் பாலா அங்கே எலக்ட்ரிக்கல் அதிகாரியாக இரு மாதம் முன் பணியில் இணைந்ததை சொன்னார். என் அறையை காட்டினேன். என் பையில் ஒன்றை எடுத்துக்கொண்டு அவரது அறைக்கு அழைத்துச் சென்றார். பெரிய அறை. உள்ளேயே குளியலறையும், கழிப்பறையும், ஒரு பெரிய கட்டிலும் ஒரு சோபாவும் இருந்தது. இரவில் சோபாவில் படுத்துக் கொள்கிறேன் என்றேன். இயந்திர அறைக்கு அழைத்துச் சென்று இரண்டாம் இஞ்சினியரிடம் அறிமுகப்படுத்தினார். ஒரு குழாயில் கீறல் வெல்டிங் அடிக்க சொல்லி அப்போதே பணியை தந்தார்.

முப்பது ஆண்டு பழைய கப்பல். குளிரூட்டி வேலை செய்யாது. சில மிஷனரிகள் வேலை செய்யாது. கப்பலின் இரு இஞ்சின்களில் எப்போது வேண்டுமென்றாலும் நடுக்கடலில் நின்று போகலாம். குறிப்பாக கப்பலின் பயணம் துபாய் டூ ஈராக் மட்டுமே.

ஆறு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தபோது மீண்டும் ஈராக் போர்முனைக்கு செல்லவே மாட்டேன் என உறுதியாக இருந்தேன். விதி எனக்கு முதல் கப்பல் ஈராக் போர்முனைக்கே கொண்டு சென்றது.

கப்பல் ஏறிய முதல் நாள் இரவு ஏழுமணிக்கு மேல் பாலாவும், மதுரையை சார்ந்த நான்காம் இன்ஜினியர் சுதாகரும் துறைமுகத்திலிருந்த காண்டீன் அழைத்து சென்று முப்பது திர்காம் தந்து போன் கார்டு ஒன்று வாங்கி வீட்டிற்கு அழைக்க சொன்னார்கள். மூன்று மாத கர்ப்பிணியான சுனிதா சோர்ந்துபோயிருந்தது குரலில் தெரிந்தது. அடுத்த பதினோரு மாதத்திற்கான பிரிவை தாங்கிகொள்ளாத இயலாமை.

இந்தியர், பாகிஸ்தானி, தான்சானியன், எகிப்து மற்றும் பிலிப்பினோ பணியாளர்கள் இருந்தனர். மார்கோ ஷிப்பிங் எனும் அந்த நிறுவனத்துக்கு நான்கு கப்பல்கள் இருந்தன. துபாய் அரபி ஒருவர் அதன் முதலாளி. இரு கார்கோ மற்றும் இரு பயணிகள் கப்பல் இருந்தன. நான்கும் துபாய்க்கும் – ஈராக்கின் உம்காசர் துறைக்கு மட்டுமே ஓடிக்கொண்டிருந்தன.

நான் படித்திருந்த ஐடிஐ பிட்டர் படிப்பும் பணிபுரிந்த அனுபவமும் தந்த அடிப்படை அறிவு, கப்பலை பற்றி எதுவும் தெரியாமல் சென்ற எனக்கு பேருதவியாக இருந்தது.

துபாயில் சுனிதாவின் அக்கா கணவரை முதன்முதலாக ஷார்ஜா சென்று சந்தித்தேன். துபாய் தேரா பள்ளிவாசலில் பக்ரீத் பெருநாள் தொழுகைக்குப்பின் அஜ்மானில் வாழும் நண்பன் ஹபீபுடன் முழுநாளும் இருந்தேன். ஜுமைரா பீச், சோனப்பூரில் தங்கியிருந்த மாமா மகன் பைசலை நீண்ட நாட்களுக்குப்பின் சந்தித்தேன்.

பாலாவுடன் எனக்கு வேறு அறை கிடைக்கும்வரை மூன்று மாதம் அவருடன் இருந்தேன். கடும் வெப்பமான நாட்களில் இரவில் மெஸ் ரூமில் படுத்துக்கொள்வோம். அங்கே குளிரூட்டி இருந்தது.

பாலாவுடன் ஒருமுறை ஷோர் லீவ் செல்லும்போது பிரம்மாண்ட கப்பல் ஒன்றிலிருந்து ஆயிரக்கணக்கில் விலையுர்ந்த கார்கள் இறங்கிகொண்டிருந்தது. மனதை கவரும் நிறத்தில் NYK என எழுதியிருந்தது.

பாலா “ஷாகுல் நாம எப்ப இதுபோன்ற கப்பல்ல வேலைக்கு போறது?” எனக் கேட்டார்.

“சீக்கிரம் போய்விடலாம் பாலா” என்றேன்.

ஆறு மாதத்தில் மெர்டிப்- 4 கப்பலில் இருந்து, மெர்டிப்-3 எனும் கப்பலுக்கு ஜெட்டி பதினான்கிலிருந்து, பதினைந்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டேன். கப்பலில் நுழைந்ததும் பாஞ்சாபின் மோட்டார்மேன் “தமிழ் நாடா ஹிந்தி தெரியுமா?” எனக் கேட்டார். “நல்லா தெரியும்” என்றேன்.

இரண்டு மாதத்தில் இருமுறை முதன்மை இஞ்சினியர் கட்கரியுடன் வாக்குவாதம் ஏற்பட்டு பணி ஒப்பந்தம் முடியும் முன்னே எட்டாவது மாதத்தில் விமான சீட்டுக்கு சொந்த பணம் கொடுத்து வீட்டிற்கு வந்தேன்.

சுனிதாவின் தாய் “இது என்ன மோனே, ஒரு ஆத்துர, அவசரத்துக்கு, விளிக்க ஒக்கல, தண்ணீல கிடக்கிதியோ, ஈரக்கொல பதறுது இங்கினோட ஏதும் ஜோலி பாருங்கோ, இல்லேன்னா பஹ்ரின்ல மொன்ட்ட சொல்லி ஒரு விசா ஏற்பாடாக்கி தாரேன், பாஸ்போர்ட் ஓலைய தாருங்கோ அனுப்பிகுடுக்கேன்” என்றார்.

இஸ்லாம் சொல்லும் குடும்பம் எப்படி அமைய வேண்டுமென்றால். இறையச்சமுள்ள நல்ல குணமான கணவன், மனைவி. அந்த ஆணுக்கு பொருள் தரும் வேலை வீட்டுக்கு அருகில் அமைவது சிறப்பு என.

மேலும். . . . .

நாஞ்சில் ஹமீது.

11-May-2005

No comments:

Post a Comment