காப்டன் திலாவர் சிங் |
தோல் வியாதியால் முழு சைவமாக மாறியிருந்த நான் மீன் சாப்பிட்டு பார்த்தேன். ஒன்றும் ஆகவில்லை. இறைச்சி வகைகளைத் தவிர்த்து விட்டேன். தவறாமல் ஐவேளை தொழுகை, உடற்பயிற்சி, தியானம், காலை வெறும் வயிற்றில் எண்ணெய் கொப்பளித்தல் ஆகியவை செய்வதால் நோய் கட்டுக்குள் இருந்தது. குரு ராதாகிருஷ்ணன் அவர்களின் சத்சங்கம் தினசரி கேட்பது ஆகியவற்றால் மிகுந்த மனவலிமையை அடைந்தேன்.
ரமலான் துவங்கிய பதினைந்தாவது நாள் காப்டன் ஹலீம் இரு மாத விடுமுறையில் செல்ல, அவரை விடுவிக்க வந்தவர் பஞ்சாபின் திலாவர் சிங். மிக ஸ்ட்ரிக்டான கணக்கு வாத்தியார். கப்பல் பராமரிப்பு பணிக்கு நேரமேயில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. பராமரிப்பு செய்தே ஆக வேண்டும் என அனைவரின் வேலை நேரத்தையும் இரு மணிநேரம் கூட்டினார். எனக்கு அதிகாலை ஆறுக்கே பணி துவங்கியது. உதவிக்கு ட்ரைனிங் ஒ எஸ் ரஞ்சிஸ்.
காப்டன் திலாவர் சிங்குக்கு ஒவ்வொரு வேலையும் முழுமையாக உயர்தரத்தில் செய்திருக்க வேண்டும். சிறு குறையையும் கண்டு திரும்ப செய்ய சொல்வார். சிங்கை, மலேசியாவில் சூரிய உதயம் ஏழுமணிக்குத்தான். ஆறு மணி இருட்டிலேயே என் பணி தொடங்கிவிடும். கப்பலின் சைடில் நின்று பணிசெய்கையில் நிழல் போல நான் அறியாமலே பார்த்துச்செல்வார் காப்டன். கிழே விழுந்து விடாமல் இருக்க பெல்ட் அணிந்திருக்கிறேனா, காலையில் வேலையை எத்தனை மணிக்கு துவங்கினேன் என பார்ப்பதும்தான்.
ஸ்டேயிட்ஸ் வென்சரில் குழாய்களை வெல்டிங் அடிக்கவும், அதை வளைக்கவும் கற்றுக்கொண்டேன். பிலாண்டரில் மூத்த பிட்டர் கான் மிக திறைமையானவர். தொண்ணூறு டிகிரிக்கு குழாயை வளைக்கும் பணி ஒருநாள் இருந்தது. நானும் அவரும் பணி செய்து கொண்டிருக்கும்போது என்னை இயந்திர அறைக்கு சென்று டூல்ஸ் எடுத்துவர சொன்னார். நான் வந்து பார்க்கையில் நாற்பது மில்லி மீட்டர் அளவுள்ள குழாய் மிக சரியாக வளைக்கப்பட்டு இருந்ததை கண்டு கேட்டேன்.
“இத எப்டி செய்தீங்க”
“கேஸ் சூடாக்கி வளச்சா போரும்” என்றார்.
“வளைக்கும் போது இது சப்பிருமே” எனேகட்டேன்.
“ஒன்னும் ஆவாது” எனச்சொன்னார்.
அவர் அந்த குழாயை வளைக்கும் முறையை என்னிடம் மறைக்கிறார் என தெரிந்தது. தனக்கு தெரிந்த வித்தைகளை சிலர் பிறருக்கு கற்றுக்கொடுப்பதே இல்லை.
இங்கே அந்த வேலைகளை நான் கற்று செய்ய தொடங்கியிருந்தேன். மிக பழைய கப்பல்களில் வேலை நிறைய. ஆனால் கப்பலை பற்றி எதுவும் தெரியாதவர்களுக்கு அது பயிற்சி மையமும் கூட. அடுமனையின் கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை போசன் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. காப்டன் என்னை அழைத்தார். “மூணு பிராஞ்ச் போகுது இதுல தான் எங்கயோ அடைப்பு, இத கட் பண்ணி மத்தானும்” முன்பு அதைபோன்ற குழாயை பார்த்தாலே தலை சுற்றும். வேலை தெரிந்தபின் அது எளிதாகி விட்டது. ஜோன்ஸ்ம் நானும் இணைந்து ஒரே நாளில் அதை செய்து முடித்தோம்.
மறுநாள் காப்டன் பார்த்துவிட்டு “ஹமீத் பாய் அத இன்னும் பெயின்ட் அடிக்கல்ல, ஒரு மாசமா நான் என்ன சொல்லி தாரேன். மிந்தி எங்க வேல பாத்தா, அங்க திரும்பி போ, டெல் போசன் டு பெயின்ட் திஸ் பைப் பை டுடே. அது ஐந்து நாள் உயிர் வாழுமென்றால், ஒரு நாள் லைப் போயிட்டு” என்றார்.
ரமலான் பண்டிகை நாளான்று கப்பல் துறைமுகத்தில் சரக்கு இறக்கிக் கொண்டிருந்தது. மதியத்திற்குப்பின் கப்பல் புறப்பட்டதும் காப்டன் பார்ட்டி கொடுத்தார். கப்பலில் நோன்பு வைத்திருந்தேன். முதன்மை அதிகாரி மலேசியாவின் உஸ்மான், பங்காளதேஸ் இரண்டாம் அதிகாரி சக்காரியா என நால்வர் இஸ்லாமியர்களாக இருந்தோம்.
காப்டன் திலாவர் சிங் வந்தபின் நடந்த சூழியல் ஆய்வில் கப்பலுக்கான சான்றிதழ் புதுப்பிக்கப்பட்டது. அதற்காக எங்களுக்கு வழங்கபட்ட பணியை இரவு பகலாக செய்தோம். அதிக பட்சமாக பதினான்கு மணிநேரத்துமேல் உழைத்தோம். சூழியல் ஆய்வு முடிந்தபின் நடந்த கூட்டத்தில் “ரிபெரிங் டீம் குட் ஜாப்” என எனக்கும் என்னுடன் இருந்த ஜோன்ஸ்க்கும் நன்றி கூறி முழுநாளும் ஓய்வு எடுக்க சொன்னார்.
காலை பத்துமணி தேநீர் இடைவேளைக்கு செல்லும்போது வெல்டிங் மிஷினை ஆப் செய்தாயா, மதிய உணவுக்குப்பின் ஒரு மணிக்கு டெக்கில் யாரெல்லாம் வேலைக்கு வரவில்லை என கப்பலின் அனைத்து அசைவுகளையும் கவனிப்பார். “வெல்டிங் மிஷின் ஆப் செய்யாம நீ டீ குடிக்க போவா, உனக்கு வேறவேலை வந்து, வேறு ஆள் வெல்டிங் கேபிளை சுருட்டும் போது, கரண்ட் ஷாக் அடிச்சி சாவ வாய்ப்பிருக்கு, டீ குடிக்க இருவது நிமிஷம்தான்னாலும் ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டு போ” இப்படி நிறைய கற்றுகொடுத்தார்.
பெயின்ட் ஸ்டாருக்கு வெளியே உள்ள குழாயை மாற்றுவதற்காக காஸ் கட்டிங் முறை மூலம் அதை வெட்டியபோது பெயின்ட் ஸ்டோர் தீப்பிடித்தது. உடனே ஜோன்ஸ் தீயணைப்பானை இயக்கி அணைத்தார். உரிய பாதுகாப்பு முறைகள் அனைத்தும் செய்து பெயிண்ட் ஸ்டாரின் கதவையும் அடைத்து வைத்திருந்தோம்.
தீ எப்படி பற்றியது எனும் விசாரணையில் பெயிண்ட் ஸ்டோரின் உள் பக்கம் இருந்த தின்னர் பக்கட் மட்டுமே தீ பற்றியது. தீ பிடித்த ஒரு நிமிடத்தில் அணைக்கவும் செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என காப்டன், முதன்மை அதிகாரி மற்றும் முதன்மை இஞ்சினியர் முடிவுக்கு வந்தனர். “இப்டி தான் வேல செய்வியா, எங்க இருந்து வந்தா, மண்டைல ஸ்பனாராலே அடிப்பேன்” என சொன்ன முதன்மை இஞ்சினியரை காப்டன் திலாவர் சிங் கடுமையாக கடிந்து கொண்டார்.
ஆறு மாதம் நெருங்கும்போது விடுமுறை விண்ணப்பம் கொடுத்தேன். காப்டன் திலாவர் சிங் “எதுக்கு இப்ப போறா இன்னும் ரெண்டு மாசம் இரு, இந்த வயசுல தான் காசு சம்பாரிக்கனும்” என்றார்.
“ஸார் தம்பி கல்யாணம் இருக்கு போணும்” என்றேன்.
சில வேலைகளை சொன்னார் “இத எல்லாம் முடிச்சியன்னா உன்ன அனுப்பேன்” என்றார். அது முடிய இரண்டு மாதங்கள் ஆகும் பெரிய பணிகள்.
நான் கொடுத்த விடுமுறை விண்ணப்பத்தை மறுநாளே கம்பனிக்கு அனுப்பினார். சில தினங்களுக்குப்பின் “ஹமீத் பாய், ரெடியாயிக்கோ, லீவ் சாங்கன் ஆயிட்டு” என்றார்.
கப்பல் மீண்டும் போர்ட் கெலாங்க் வரும்போது எங்கள் விடுமுறை உறுதியானது. நான்கு மாத பணி ஒப்பந்தத்தில் வந்த இலங்கையின் இரண்டாம் இஞ்சினியர் நீண்ட நாட்களாக மாற்று பணியாள் கிடைக்காமல் விடுமுறை தள்ளிப் போய்கொண்டே இருந்தது. அவரை மாற்று பணியாள் இல்லாமலே காப்டன் விடுவித்தார்.
போர்ட் கெலாங்க் வந்த அன்று காலையில் காப்டன் ஹலீம் மட்டும் வந்தார். காப்டன் திலாவர்சிங்கை விடுவிக்க. எனக்கும், இரண்டாம் இன்ஜினியருக்கும் மாற்று பணியாள் இல்லை. இரண்டாம் இஞ்சினியருக்கு அடுத்த துறைமுகத்தில் ஆள் வருவதாக சொன்னார்.
முகவர் எங்களை காலை பத்துமணிக்கே துறைமுக குடியுரிமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள முறைமைகள், ஆவணங்கள் எல்லாம் முத்திரையும், கையொப்பமிடவும் துறைமுக அதிகாரிகள் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டனர். மதியம் இரண்டு மணி வாக்கில் கப்பலுக்கு திரும்பி வந்தோம். ஏழுமணிக்கு காப்டனுக்கு மொஹாலி செல்லும் விமானம். சாப்பிடாமலே பைகளை காரில் போட்டுவிட்டு விரைந்தோம் விமான நிலையம் நோக்கி.
கப்பலை விட்டு இறங்கும்முன் காப்டன் சிறிய பை ஒன்றை கையில் தந்தார். விமான நிலைய குடியுரிமை சோதனை முடிந்தவுடன் காப்டன் திலாவர்சிங் “எனக்கு தில்லி பிளைட்க்கு நேரம் ஆயிட்டு, நான் போகிறேன்” என்றவர், என்னிடம் தந்த பையை கேட்டார். அதில் மூவருக்கும் சாண்ட்விட்சும், தண்ணீர் பாட்டிலும், கோக்கும் இருந்தது. நல்ல பசியில் இருந்த நாங்கள் அதை சாப்பிட்டோம். காப்டன் மிக விரைந்து சென்றார் தில்லி விமானம் புறப்படும் வாயிலை நோக்கி.
வீட்டுக்கு வந்த மறுநாள் மதியம் தூங்கிகொண்டிருக்கும் போது போன் வந்தது. “லஞ்ச் டைம் முடிஞ்சது இன்னும் டெக்ல காணல” என கேட்டதும் கனவா என நினைத்தேன். ஆனால் போனை கையில் தந்தது சுனிதா. மறுமுனையில் காப்டன் திலாவர்சிங் “வீட்டுக்கு பத்திரமா போய் சேந்தீயா ஹமீத் பாய், செகண்ட் இன்ஜினியருக்கும் போன் பண்ணினேன்” என்றார்.
பாதுகாப்பு முறைகளும், திறமையாக வேலை செய்யவும் கற்றுகொடுத்ததும் அந்த கடினமான கேப்டன் தான். இரு மாதங்களே பணி செய்தாலும் காப்டன் திலாவர் சிங் குரு இடத்தில் இருக்கிறார். இப்போதும் அவருடன் தொடர்பில் இருக்கிறேன். பணி ஓய்வுபெற்று மகன்களுடன் அமெரிக்காவில் வசிக்கும் அவரை பத்து தினங்களுக்கு முன் அமெரிக்காவின் ஹூஸ்டன் போயிருந்தபோது அழைத்து பேசினேன்.
நாஞ்சில் ஹமீது,
15 May 2025
sunitashahul@gmail.com
No comments:
Post a Comment