Saturday, 24 May 2025

இருபது ஆண்டு நிறைவு 13 -கொரியாவில்

   


  ஹார்மொனி ஏஸ் பகுதி ஒன்று 

           லியோ லீடரிலிருந்து ஜூலை மாதம் விடுமுறைக்கு வந்தபோது 2010 இல் புதிய ரெகுலேசன் வந்ததால் எனது சான்றிதல்கள் புதுப்பிக்க வேண்டி வந்தது. சென்னை மாரிடைம் கல்லூரியில் பதிமூன்று நாட்கள் வகுப்புக்கு சென்றேன். இளையவன் தீபன் திருவான்மியூர் இருந்த அறையிலும் நண்பர் அசோக்கின் தாம்பரம் வீட்டிலுமாக தங்கியிருந்து புரசைவாக்கம் கல்லூரிக்கு போய்வந்தேன்.

       ஆகஸ்ட் மாதமே நண்பன் ஜெகன் அழைத்து அக்டோபர் மாதம் இமயமலை பயணம் இருக்கிறது என்றார். உடனே பணம் செலுத்தி பதிந்துகொண்டேன். நண்பன் ஜெகன், பரமேஸ்,அமுதா,வெற்றி செல்வியும் உடன் வந்தனர். நூறுபேர் கொண்ட குழு பதினாறு கவனகர் கனக ராம சுப்பு ரத்தினம் தலைமையில் சென்றோம்.

 சென்னையிலிருந்து புறப்பட்டு தில்லி,கதகோடம் வழியாக நைனிதால் சென்று அங்கிருந்து இந்தியாவின் கடைசி கிராமமான மானா வில்லேஜ் மற்றும் ரிஷிகேஷ்,ஹரிதுவார்,ஜோஷி மட்,பாபாஜி குகை என பன்னிரண்டு நாட்கள் சுத்திவிட்டு வந்தோம். மொத்தம் பத்தாயிரம் ருபாய் கட்டணத்தில். 

   பனிபடர்ந்த மலை முகடுகள், குளிரில் காற்று பனிகட்டியாகி வெண்மலையாக காட்சி தரும், பனி உருகி கீழிறங்கி தெளிந்த நீரோடையாகி,பாகீரதி,அலாக் நந்தா எனும் ஆறுகளாகி இரண்டும் ஒன்றாகி கங்கை எனும் பெரும்நதியாக அனைத்துயிர்களுக்கும் பயன்தரும் நீராகிறது. வேதாத்ரி மகரிஷியின் பிரபஞ்ச தன்மாற்ற சரித்திரம் நூலில் அனைத்துயிர்களும் தோன்றுவது நீரிலிருந்து என படித்திருந்தேன்.அரூபமான காற்று குளிர்ந்து ரூபமான நீராகி அனைந்துயிர்களுமாகி .... அகம் பிரம்மாஸ்மி எனபதை புரிந்த தருணம்.

 மலையில் பயணிக்கதக்க வண்டிகளில் அந்த மலையிலேயே பிறந்து வளர்ந்த தேர்ந்த ஓட்டுனர்கள் அவர்கள் மட்டுமே அங்கே வண்டியோட்ட முடியும்.  வளைந்து,வளைந்து மலையுச்சியில் ஏறி மறுபுறம் இறங்கி அடுத்த மலை ஏறி என வளைந்து வளைந்து மலை காடுகளுக்குள் சென்றுகொண்டே இருந்தோம். மலைகாட்டில் பசுமை நிறைந்த மரங்களுக்கு நடுவில் அமர்ந்து சும்மா இருத்தல் எனக்கு  சாத்தியமானது. 

   மனிதனாக பிறந்தவர்கள் ஒரு முறை இமயமலைக்கு போய் வரவேண்டும் என சொன்ன சத்குரு ஜக்கி வாசுதேவுக்கும்,இமயமலை பயணத்தை ஒருங்கிணைத்து அழைத்து சென்ற கவனகர் மற்றும் வேதாத்ரி மகரிஷியின் பிரபஞ்ச தந்துவங்களை புரியும்படி வகுப்பெடுத்த குரு ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி கூறிக்கொண்டேன் 

    அக்டோபர் மாதம் பணியில் இணைய தயாராக இருப்பதாக சொல்லியிருந்தேன். அப்போதே மும்பை அலுவலக மேனேஜர் பிராசாந்த் நிறைய வெயிட்டிங் இருக்கு இப்ப ஆறுமாதங்கள் ஆகலாம் என சொன்னார். இம்முறை வேலை தேடி மும்பை செல்வதில்லை என முடிவு செய்தேன். சும்மா இருக்க முடியாது. வருமான இல்லாத நாட்கள் மிக கடினம். வீட்டு வாடகைக்கும்,உப்பு,புளிக்காவது ஆகட்டும் என ஒரு வேலையை எதிர்பார்த்தேன்.

      தோல்வியாதிக்கு எனக்கு சொந்தமாக மருந்து தயாரித்து,உடலில் எண்ணெய் தேய்த்து, மூலிகை கலந்த நீராவி குளியலும் தந்து என்னை நலம் பெற வைத்தவர் என் யோக மையத்தின் நண்பர் முத்துகுமார். கப்பலுக்கு செல்ல இன்னும் நிறைய நாட்கள் ஆகும் என்பதை சொன்னபோது அவரது நண்பரின் காற்றாலை பழுதுபார்க்கும் கம்பனியில் வேலை வாங்கி தந்தார். தினசரி இருநூறு ருபாய் சம்பளம் தோவாளையில் அந்த நிறுவனம் இருந்தது. தினசரி போய்வர பெட்ரோலுக்கு ஐம்பது ரூபாய்க்கு மேல் ஆகும்.காலை ஒன்பதுக்கு போய் பணி முடிந்த பின் தான் வரமுடியும்.

     ஆரல்வாய்மொழி,பழவூர்,பணகுடி பகுதிகளில் உள்ள மின்சாரம் தயாரிக்கும் காற்றலையில் மெயிண்டனன்ஸ் வேலை. அவ்வபோது புதியதையும் நிறுவும் பணிஇருக்கும். அந்த நிறுவனம் சொந்தமாக காற்றலைகள் வைத்திருக்கும் பெரிய நிறுவனங்களிளிருந்து ஒப்பந்த அடிப்படையில் வேலையை வாங்கி செய்து கொடுக்கும்.30 மீட்டர் உயரமுள்ள கோபுரத்தின் உச்சி மீதமர்ந்து மகேந்திரகிரி மலையையும்,முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையையும் ஐந்தில் நான்கு நிலங்களையும் தன்னகத்தே கொண்ட குமரியின் நிலக்காட்சிகள் பேரின்பத்தை தந்தது.

  மூன்று பங்குதாரர்கள் அலுவலக பணியில் இருவர் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட வேலையாட்கள் இருந்தனர். அங்கே அதிகபட்ச ஊதியம் எட்டாயிரம் ரூபாய் வாங்கியவர் மூவர். அந்த அனுவபம் வாய்ந்த மூவரில் ஒருவருக்கு வெல்டிங் தெரியாது,இருவருக்கு லேத் இயந்திரம் இயக்க தெரியாது,மூவரில் இருவருக்கு வண்டியோட்டி பழக்கம் இல்லை. நான் அங்கே சென்ற ஒருமாதத்தில் அனைத்துவேலையையும் செய்யும் ஒரு ஆளாக மாறியிருந்தேன். நான் படித்த ஐடிஐ படிப்பும், வேலை பார்த்த பதினைந்து ஆண்டுகால அனுபவமும் வீணாகவில்லை என உறுதியானது.

   ட்ரைவர் வராத நாட்களில் 407 டெம்போவில் முழு லோடு ஏற்றி பணியாளர்களுடன் வண்டியோட்டி செல்வேன். லேத் மிஷினும்,வெல்டிங்கும் கப்பலில் நிறையவே செய்த வேலைகள். புதிய காற்றாடிகள்நிறுவும்போது அதிகாலையே வேலையை துவங்குவோம்.அனைவருக்கும் மதிய உணவு காற்றலையில் கீழ் உள்ள மரத்தடியில் அடுப்பு மூட்டி வெள்ளை சாதமும்,குழம்பும் சமைத்தபின் அவர்களுடன் பணியில் சேர்ந்துகொள்வேன். 

   2011 ஜனவரியில் மும்பை அலுவலகம் எனது அமெரிக்க விசா காலவதியாக ஐந்து மாதங்களே இருப்பதால் விசாவை புதுபிக்க சொன்னார்கள். கொச்சி அலுவலகம் சென்று விண்ணப்பித்து சென்னை அமெரிக்க துணை தூதரகத்தில் நேர்காணலுக்கு சென்றேன். 

  நேர்காணலில் முடிவில் சீட்டு எழுதி தந்து வேறு கவுண்டருக்கு போக சொன்னார் அமெரிக்க பெண் அதிகாரி. குறிப்பிட்ட கவுண்டரில் என்னை சந்தித்த இந்திய பெண்ஊழியர் இதுவரை சென்ற நாடுகள்,படிப்பு ஆகியவற்றை கேட்டு குறித்துக்கொண்டார். உங்கள் சான்றிதழ்கள் விசாரணைக்குப்பின் உறுதிசெய்யபட்ட பின்னரே உங்களுக்கு விசா வழங்குவோம். அதிகபட்சம் மூன்று வாரம் ஆகலாம் என்றார். பாஸ்போர்ட் தேவையென்றால் இப்போதே பெற்றுசெல்லலாம் எனக்கூறினார்.

         விசா வருவதற்காக காத்திருந்தேன்.மும்பை அலுவலகம் மீண்டும் லியோ லீடருக்கு போக சொல்லி அழைத்தது. பாஸ்போர்ட் கையில் இல்லாததால் காத்திருப்பு நீண்டது.

  2011 மார்ச் மாதம் புகுஷிமா சுனாமி ஜப்பானை புரட்டிபோட்டது. ஜப்பானிய தொழிற்சாலைகள் முடங்கி ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டதால். ஏற்றுமதிக்கு பெரிதும் உதவும் கப்பல்கள் கடலிலேயே நிறுத்திவைக்கபட்டிருந்தது.

    மார்ச்மாத இறுதியில் விசா வழங்கப்பட்டு எனது பாஸ்போர்ட் கிடைத்தது. மும்பை அலுவலகத்திற்கு  அழைத்து சொன்னேன். இப்போதைக்கு வேகன்சி இல்லை,நாங்களே அழைப்போம் என்றார்.

   ஏப்ரல் மாத இறுதியில் ஹார்மொனி ஏஸ் எனும் கப்பலுக்கு போகும் தகவலை கொச்சி அலுவலகம் அழைத்து சொல்லி மருத்துவ சோதனைக்கு செல் என்றது. ஏப்ரல் மாதம் இருபதாம் தேதி கொச்சியிலிருந்து மும்பை-தாய்லாந்து வழியாக தென்கொரியாவின் புசானில் இறங்கினேன்.

புசான் விமான நிலையம் 



  மலைகளுக்கு இடையே கடல் அதை இணைக்க பாலங்களும்,சுரங்கபாதைகளும் இயற்கையை மனிதன் தன்வசபடுத்தியிருக்கும் அதிசயத்தை பார்த்தவாறு காரில் ஒன்றரை மணிநேரம் பயணித்தோம். இலங்கையை சார்ந்த காப்டன்,இரண்டாம் அதிகாரி,நான்காம் இஞ்சினியர்,கோவாவை சார்ந்த சமையல்காரர் உடன் வந்தனர். 

காப்டனுடன் 


   நங்கூரம் பாய்ச்சி நின்றிருந்த கப்பலில் படகில் சென்று ஏணிவழியாக ஏறினோம். லேசான அலையில் கப்பலும்,சிறுபடகும் அணைவதில் ஒத்திசைவு அமையவில்லை. வயதான சமையல்காரர் மற்றும் நூறு கிலோவுக்கு மேலிருந்த காப்டன் ஏணியில் ஏறுவதில் மிக சிரமப்பட்டனர். படகில் சென்று ஏணியில் ஏறி கப்பலுக்குள் செல்வது எனக்கு முதல் அனுபவம். பயண பைகளை,கயிற்று வலையில் கட்டி கிரேன்மூலம் மேலேற்றினார் ஆந்திராவின் போசன் குருமூர்த்தி.

   

பாஸ்கர் இடது புறம் 

    கப்பலுக்குள் சென்றதும் மோட்டார்மேன் பாஸ்கரிடம் கேட்டேன் அடுத்த பயணம் எங்கே என. “ரெண்டு மாசமா இங்க தான் நிக்கோம்,எங்கயும் போவாது கப்பல்” என்றார்.

    லியோ லீடரிலிருந்து இறங்கி ஒன்பது மாதங்கள் கழிந்து ஹார்மொனி ஏஸ் கப்பலில் இணைந்தேன்.

  

  நாஞ்சில் ஹமீது,

  25-may-2025.

sunitashahul@gmail.com

   

2 comments: