Wednesday 30 September 2020

பயர் ஆன் தெமிஸ் லீடர்

 கப்பல் காரன் டைரி,

                                                       பயர் ஆன் தெமிஸ் லீடர்        

   

   அது 2015 டிசம்பர் கைலான் (வியத்னாம்)எனும் துறைமுகம் அருகில் நங்கூரம் பாய்ச்சி  நின்றிருந்தோம்.தெமிஸ் லீடர் எனும் கார்களை ஏற்றும் கப்பல் அது.2010ஆம்  கட்டப்பட்டது.ஐந்தாண்டுகளே ஆன புதிய கப்பல்( 14 DECK).பதினான்கு அடுக்குகளை கொண்டது.199மீ மீளமும்  32மீ அகலமும் கொண்டது.இந்த நீள,அகலம் உள்ள கப்பல்கள் தான் பனாமா கால்வாயை கடக்க இயலும் . ஒரே நேரத்தில் 6500 கார்களை இதில் ஏற்ற முடியும். கடந்த பத்தாண்டுகளில் நான் பணிபுரியும் புதிய கப்பல் இதுவே.

                                                    கப்பலின் உள்ளே கார்கள்
 

                                                   தெமிஸ் லீடர் சிங்கப்பூரில்

   எனது நண்பர் கேரளாவின் புருசோத்தமன்  நான் கடந்த ஜூலையில் நான் வரும்போது இங்கிருந்தார் .அறுபது வயது பூர்த்தியாகி கடந்தமாதம் பணி ஓய்வு பெற்றார்.

 
                                                    நண்பர் புருசோத்தமன்

  நான்  ஜூலையில் நோன்பு பெருநாளுக்கு மறுநாள் அமெரிக்காவின் பால்டிமோர் எனும் துறைமுகத்திலிருந்து இந்த கப்பலில் ஏறினேன் .அமெரிக்காவில் ஒரு மாதம் சுற்றிவிட்டு ஜப்பான் சென்றோம்.அங்கிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன்,போர்ட் காண்ட்லா,மெல்பெர்ன் துறைமுகங்களுக்கு சென்று விட்டு (அங்கு திடீரென அடித்த காற்றில் கப்பலை கட்டி வைத்திருந்த ஆறு கயிறுகள் அறுந்ததை தனியாக எழுத வேண்டும்)மீண்டும் ஜப்பான் .அங்கிருந்து அரேபியாவின் மஸ்கட் ,தோஹா,ஜெத்தா,தமாம்,பஹரின்,துபாய் ,ஜபெல் அலி ,அபுதாபி பின் தாய்லாந்தின் லாம்ச்சபாங்  சென்றுவிட்டு  இறுதியாக கைலான்.

       

                              பட்டாயா கடற்கரை. தாய்லாந்து .



 

 

   இரு தினங்களுக்கு முன் மிக சிறப்பாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியிருந்தோம் .அன்று அது ஞாயிறு  மதியத்திற்குமேல் கப்பல் துறைமுகம்  செல்லும் என்றனர் .


                                                          கிறிஸ்துமஸ்

   


        வலது புறம் அமர்திருப்ப்வர் சீப் இஞ்சினியர்  பண்டாரே சதாசிவ்  தத்தா

  உடன் பணிபுரிந்த நண்பர் கைத்தனோ பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே ஊரில் ஆறு மாதங்கள் இருந்ததாகவும்.மிக அழகான ஊர், இங்கே அவருக்கு ஒரு தோழி இருப்பதாகவும் சொன்னார். நான் வியத்னாம் வருவது இதுதான் முதல் முறை .கப்பல் கரையணைந்ததும் வெளியில் செல்லலாம் என உற்சாக மனநிலையில் இருந்தோம்.மாலை நான்கு மணிக்குமேல் கரையணையும் என சொல்லியிருந்தனர் .

   ஞாயிறுகளில்  மதியம் பிரியாணி உண்டபின் அரை நாள் ஓய்வு கிடைக்கும்.எந்த அவசர வேலையும் இல்லை என்றால் மட்டுமே. அன்றைய ஓய்வில் அறையில் இருந்து ஆசிரியர் ஜெயமோகனின் வெண்முரசின் வெண்முகில் நகரம்  வாசித்துகொண்டிருந்தேன் .

 மூன்று மணிக்கு சற்று முன்பாக அவசரகால  மணி ஒலித்தது . அறையிலிருந்து வெளியே வந்தேன் எனது பக்கத்துக்கு அறையில்  இருந்தது போசன், கேரளாவின் குட்டி.அவர்  வாக்கி டாக்கியுடன் வெளியே வந்து “பயர் அலாரம் ,இயந்திர அறையில் தீ” என்றார்.அவசரமாக உடை மாற்றி காலனி அணியாமல் வேகமாக ஓடினேன் கப்பலின் பின்புறம் இயந்திர அறையை நோக்கி.


                                              GENERATOR

   வழக்கத்தைவிட அதிகமாக வெண்புகை புகைபோக்கியிலிருந்து வந்து கொண்டிருந்தது.படிகட்டுகளில் விரைந்தேன் இயந்திர அறைவரை  நூறுக்கும் மேற்பட்ட படிகள்.நான் இயந்திரஅறைக்குள் நுழைந்தபோது போது மூன்றாம் இஞ்சினியர் சந்தீப் ஜெனேரேட்டர்  இருக்கும் தளத்தில் நின்றுகொண்டிருந்தான். மூன்றாம் ஜெனேரேட்டரில் எதோ பிரச்னை என சைகையால் சொல்லிவிட்டு கட்டுபாட்டு அறைக்குள் சென்றான் அதிகமாக புகை வந்து கொண்டிருந்தது  .

                      சந்தீப் ,ராஜ முந்தரி ,ஆந்திரா .

   நான் ஜெனேரேட்டர் இருக்கும் தளத்தை நெருங்கும்போது மூன்றாம் ஜெனேரேட்டர் வெடித்து சிதறியது மிக பெரிய தீப்பிளம்புடன். ஜெனேரேட்டர் தளத்திலிருந்து ஒரு ஆறடி தூரத்தில் நான் நெருங்கும்போது அது வெடித்தது .மிக உயரமாக ஆக்ரோஷத்துடன்  தீ பற்றி எரியதொடங்கியது எனது கைக்கெட்டும் தூரத்தில் தீ அணைப்பான் .அதை எடுத்து இயக்கி அணைக்க முயற்சித்தேன் இயலவில்லை .



 

ஜெனேரேட்டரின் மறுபுறம் கழிவு எண்ணெய் தொட்டி அதிலிருந்த ஒரு வால்வ் ம் தீ பற்றிகொண்டது,அது வெடித்தால் மிகப்பெரிய ஆபத்து கையிலிருந்த தீயணைப்பானால் அதை அணைத்தேன் அதற்குள் கப்பலின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு  விளக்குகள் அணைந்து(black out)முழு இருளாகி   சில வினாடிகளில் மீண்டும் விளக்குகள் எரிய தொடங்கின .அழைப்பான்கள்(alarm)தொடர்ந்து அடித்துகொண்டேயிருந்தது .

               இதுதான் வெடித்து சிதறிய பகுதி
 

   என் கையிலிருந்த தீ அணைப்பான் முழுவதும் தீர்ந்துவிட்டது.கரும்புகையும் பயங்கர தீயும் என்ன செய்வது என தெரியவில்லை.மிக பெரிய தீ சிறிய அணைப்பானால் அணைக்க இயலாது என உள்ளுணர்வு சொன்னது.இயந்திர அறையை முழுமையாக பூட்டிவிட்டு கார்பன்டைஆக்சைடை திறந்துதான் அணைக்க வேண்டியிருக்குமென நினைத்தேன்.பின் புறமாக ஓடி ஸ்டீயரிங் அறையில் இருந்து காப்டனுக்கு அழைத்தேன் ஜெனேரேட்டரில் பயங்கர தீ என .பின்னர் தீயணைக்கும் தண்ணீர் குழாயை(fire hose) வால்வில் பொருத்தினேன்.இயந்திர அறையில் தீ எரிந்துகொண்டிருந்தது .

 படிக்கட்டுகளில் ஏறி ஆறாம் டெக்கில் வந்தபோதுதான் நினைவு வந்தது சந்தீப் உள்ளே மாட்டிகொண்டான். என் மனம் பதறியது.ஆறாம் டெக்கிலிருந்து நேரடியாக  கட்டுபாட்டு அறைக்கு செல்லும் செங்குத்தான ஏணியில் இறங்கி கட்டுப்பாட்டு அறையை அடைந்தேன் சந்தீப் அங்கேயில்லை கட்டுப்பாட்டு அறை கண்ணாடி வழியாக பார்த்தேன் இயந்திர அறை முழுவதும் பயங்கர புகை எதுவும் தெரியவில்லை .

   ஆபத்தை உணர்ந்து சந்தீப் எனக்கு முன்பே வெளியேறி இருப்பானோ? என எண்ணி அதே ஏணியில் ஏறி ஆறாம் டெக்கிற்கு  வந்து குடியிருப்பு பகுதிக்கு வந்து காலனியை அணிந்துவிட்டு மஸ்டர் ஸ்டேஷன்(ஆபத்து காலங்களில் அனைவரும் கூடும் இடம் ) சென்றேன் .கார்பன்டை- ஆக்சைடை திறக்கவேண்டுமேன்றால் அனைவரும் வெளியில் இருப்பதை காப்டன் உறுதி செய்தபின்தான் அதற்கு உத்தரவிட முடியும் என்னை அவர்கள் தேடிக்கொண்டிருக்கலாம் என்ற எண்ணத்தில் மஸ்டர்  ஸ்டேஷன் சென்றேன் .

  மஸ்டர் ஸ்டேஷனில் யாரும் இல்லாததால் மீண்டும் ஓடினேன் ஸ்ட்ரீயங்  அறைக்கு சென்றபோது தீ யை அணைக்க பிராண வாயு நிரப்பிய குப்பிகளை முதுகில் சுமந்தபடி இயந்திர அறைக்குள் செல்ல தாயராகி இருந்தனர். நான் சந்தீப்பை தேடினேன் .அவன் அங்கும் இல்லாதது எனக்கு அதிர்ச்சியளித்தது. அப்போதும் உள்ளே  தீ எரிந்துகொண்டிருக்கும் என எண்ணினேன்.

    இயந்திர அறையிலிருந்து ஒருவர் வெளியே வந்தார் .வந்தவர் தீ அணைந்து விட்டது என்றார் .நான் அவசரமாக உள்ளே ஓடினேன் தீ முழுவதுமாக அணைக்கபட்டிருந்தது . ஜெனேரேட்டருக்கு மேலிருந்து தண்ணீர்  ஒழுகிகொண்டிருந்தது .அதிக வெப்பத்தினால் தானாகவே இயங்கி தண்ணீரை பீய்ச்சியடிக்கும் கருவியிலிருந்து தண்ணீர் (hyper mist)ஒழுகிகொண்டிருந்தது .

 கட்டுபாட்டு அறைக்குள் சென்றபோது அங்கே முதன்மை இஞ்சினியர் பண்டாரே சதாசிவ் தத்தாவும்,சந்தீப்பும் நின்றுகொண்டு இருந்தனர். அவன் “நீ எங்கு என்றாய் உன்னை காணாமல் தவித்துவிட்டேன்”  என்றான் .

   “என்னாயிற்று எப்படி தீ அணைந்தது” என கேட்டேன். “முதன்மை இஞ்சினியர் இரண்டு தீ அணைப்பான்களை உபயோகித்து அணைத்தார்”என்றான். அவரால் எப்படி சாத்தியமாயிற்று என எண்ணினேன். .

   சந்தீப் சொன்னான்  “கடும் புகை,எதுவுமேதெரியவில்லை , அவரது கையை பிடித்து இழுத்தேன், வாருங்கள் தப்பித்து விடலாம்  என ஆனால் அவர் விடாபிடியாக பெரும் முயற்சியடன் துணிச்சலாக அதை செய்தார்”என்றான் சந்தீப்.

  இருபத்தைந்து ஆண்டு கால கப்பல் அனுபவம் உறுதியான மனம்  அவர் அதை அப்போது அணைக்கவில்லை என்றால் மிகபெரும் பொருட்சேதம் ஏற்பட்டிருக்கும் .

  முதன்மை இஞ்சியரிடம் கேட்டேன்.நான் ஓடியதும் அடுத்த பத்து வினாடிக்குள் அவர் இயந்திர அறைக்குள் நுழைந்திருக்கிறார் அது மிக சரியான நேரம் இல்லையெனில் தீ வேகமாக பரவி கட்டுபடுத்த முடியாமல் போயிருக்கும்.அவர் பலமுறை சொல்லியிருக்கிறார்  தீ பற்றி விட்டால் முதல் ஏழு நிமிடங்கள் மிக முக்கியமானவை அதற்குள் செயல் படவேண்டும் .அதாவது தீயை அணைத்தாக வேண்டும் இல்லையெனில் நம்மால் கட்டுபடுத்த முடியாது என.

வெடித்து சிதறிய ஜெனேரேட்டரின் எடை கூடிய பல பாகங்கள் வெளியே சிதறி கிடந்தது .கவுண்டர் வெயிட் ,கனெக்டிங் ராட்,பிஸ்டன் என, ஜெனேரேட்டர் தளம் முழுவதும் எண்ணெய் படலம் . நல்ல வேலையாக யாருக்கும் காயம் இல்லை .ஞாயிறு அரை நாள் ஓய்வு என்பதால் தான் அது தவிர்க்கபட்டிருந்தது. இல்லையெனில் எப்போதும் இயந்திர அறையில் பணியாளர்கள் இருப்போம் .வெடித்து சிதறிய ஜெனேரேட்டர் அருகிலேய இயந்திரஅறையின் கழிப்பறையும் இருந்தது .

                பிஸ்டன் ,கவுண்டர் வெயிட்,கனெக்டிங் ராட்

  கப்பல் கைலான் துறைமுகத்திற்குள் செல்வதற்கு உத்தரவு கிடைத்து தயாராகிகொண்டிருந்தது .நாங்கள் ஜெனேரேட்டர் தளத்தில் இருந்த எண்ணெய் படலத்தை சுத்தம் செய்ய துவங்கினோம் .தண்ணீரும் கலந்திருந்தது .


                   கப்பலில் ஏற்ற காத்திருக்கும் கார்கள்

  துறைமுகத்தில் கப்பல் கட்டப்பட்டு கார்கள் இறங்கதொடங்கியது .இரவு பத்து மணிவரை தொடர் பணி .இடையில் உணவுக்கு மட்டும் சென்று வந்தோம் .பத்து மணிக்கு முதன்மை இஞ்சினியர் பணியை நிறுத்த சொன்னார்.  ஓய்வு எடுத்துவிட்டு காலை ஆறு மணிக்கு வருமாறு அழைத்தார். கரும்புகை படிந்த சுவர்களையும்,எண்ணையும் தண்ணீரும் கலந்து  படர்ந்திருந்த தரையையும் அனைவரும் ஒன்றாய் இணைந்து  சுத்தபடுத்தினோம் .

  மறுநாள் காப்பீடு நிறுவன அதிகாரி ஒருவர் வந்து இயந்திர அறையை சோதனையிட்டு சென்றார். ஜெனேரேட்டர் முழுமையாக சேதமடைந்துவிட்டது .முழுவதும் மாற்றத்தான் வேண்டும் .ஜப்பானை நோக்கி கப்பல் மறுநாள் பயணத்தை துவக்கியிருந்தது.

   

                                                     புத்தாண்டு வந்தது
 

    அடுத்த இருதினங்களில் புத்தாண்டு,காப்டன் நடந்ததை மறப்போம் புதிய ஆண்டு எந்த இடர்களும் இல்லாமல் துவங்கட்டும் .நாம் எளிமையாக புத்தாண்டை கொண்டாடுவோம் என்றார் .

     ஜப்பானுக்கு ஜனவரி மாதம் சென்று சேர்ந்தோம் ஜெனேரேட்டர் தயாரித்த நிறுவனத்திலிருந்து உயரதிகாரிகள்,இஞ்சினியர்கள் ,காப்பீடு நிறுவனம் என பல விசாரணைகள் நடந்தது . பத்தாம் தியதி ஜப்பானின் கடைசி துறைமுகத்தில் கார்களை ஏற்றினோம் .அங்கு பணியாளர்கள் பலர் வந்து புதிய ஜெனேரேட்டர் பொருத்துவதற்கும் ,சேதமானதை கழட்டவும் உரிய வெல்டிங் வேலைகளை செய்தனர் .சேதமடைந்த அனைத்து பாகங்களுக்கும் புதிய பகாங்களை கப்பலில் ஏற்றினர் . ஜெனேரேட்டரை முழுமையாக அகற்றிவிட்டு புதியதை பொருத்தவேண்டும் என்பதே திட்டம்.

                  புதிய  ஜெனரேட்டரின் BLOC

 
                                                     புதிய உதிரி பாகங்கள்

 அடுத்து கப்பல் செல்வது அமெரிக்காவிற்கு எங்களுடன் நான்கு ஜப்பானிய பொறியாளர்கள் அமெரிக்காவரை பயணித்தனர் .அவர்கள் காலை எட்டு முதல் மாலை ஆறு மணிவரை பணி செய்தனர் .நாங்களும் அவர்களுடன் இணைந்து பணிசெய்தோம் .கப்பல் ஊழியர்களுக்கு இரவும்,பகலும் பணி இருந்தது.நல்ல குளிர் அதனால் இயந்திர அறையில் வெப்பமில்லை வியர்வையும் வராது ,அதனால் களைப்படையாமல் நீண்ட நேரம் வேலை செய்வது குளிர் காலங்களில் சாத்தியம் .எனக்கு காலை நான்கு முதல் பனிரெண்டு வரையும் பின்பு மாலை நான்கு முதல் எட்டு வரை இரண்டாம் இஞ்சிநியருடன் பணி.


                      ஜப்பானியர்கள்

  இருபத்தி ஐந்தாம் தியதி கப்பல் அமெரிக்காவை அடையும் முன் ஜெனேரேட்டர் முழுமையாக தயாராகிவிட்டது .அமெரிக்காவின் முதல் துறைமுகத்திலிருந்து ஜப்பானிய பொறியாளர்கள் ஜப்பான் புறப்பட்டு சென்றனர் .தோராயமாக ஐம்பது கோடி ஆகியது என்றனர் புதிய ஜெனெரேட்டரை நிறுவ .

 கப்பலின் இயந்திர அறையில் மூன்று ஜெனேரேட்டர் இருக்கும்.கப்பல் கரையணையும் போதும்.துறை முகப்பில் சரக்கு ஏற்றும் ,இறக்கும்போதும் மூன்று ஜெனரேட்டரும் இயங்கி கொண்டிருக்கும்.இயந்திர அறையில் உள்ள மூன்று ஜெனரேட்டரும் ஏதாவது காரணத்தால் இயக்க முடியாமல் போனால்(கடல் நீர் புகுதல்,இயந்திர அறைதீ பிடித்தல் ) அவசர காலத்திற்கு ஒரு ஜெனேரேட்டர்(EMERGENGY GENERETOR) கப்பலின் மேல் தளத்தில் இருக்கும்.

ஷாகுல் ஹமீது,

01 OCT 2020.


navication bridge or wheel house 

 





                                                   நீச்சல் குளம் 





                                              சிங்கப்பூர் நண்பர் மணிவண்ணனின் வீடு மற்றும் அருகே உள்ள முருகன் கோவில்.

Sunday 27 September 2020

குண்டும் குழியும்

நாகர்கோவிலில் ஒரு ரோட்டிலும் நடந்தோ,சைக்கிளிலோ வாகனத்திலோ செல்ல முடியவில்லை. “எல்லா ரோட்டையும் பைப்பு போட தோண்டி போண்டுருக்கானுவோ எப்போ பார்த்தாலும் எதுக்காவது தோண்டிகிட்டே தான் இருக்கானுவோ,ஒருத்தன் கேபிள் போட தோண்டி,கொஞ்சநாள்ல வேற ஒருத்தன் தோன்டான். பயித்தியாற பயலுவோ தோண்டி மூடாம விட்ட குண்டுல,மூணு பேராவது விழுந்து கை,கால் முறிஞ்ச பொறவுதான் அதை மூடாவோ,வேலையை முடிக்கவோ செய்யானுவோ” என பெருசு ஒன்று புலம்பியது .

ஆம் மூன்று மாதங்களுக்கும் மேலாக பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டும் பணி துவங்கியது.எங்கும் கடும் தூசு .ஊரடங்கு காலத்தில் வாகன போக்குவரத்து குறைவாக இருந்தபோதும் எங்கும் தூசு படலம் தான் .பத்து நாட்களுக்கு முன் தோண்டி மூடியபின் செம்மண் தூசு வீடெங்கும் நிறைந்து கிடக்கிறது.

 

    கடந்த பத்து நாட்களாக மழை பெய்வதால் தூசு கொஞ்சம் குறைவு. ஆனாலும் ரோடு ,சளு,புளுன்னு கிடக்கிறது. நான் இருக்கும் வீடு சாலையிலிருந்து நூறடிக்கு மேல் தள்ளி இருந்தாலும் முழு வீடும் கடும் தூசியாக இருக்கிறது.

       எனது வீடு அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடி சாலையை விட இந்த நிலப்பகுதி தாழ்வாக இருப்பதால்.சாலையும் எனது வீடும் சமமான உயரத்தில் இருக்கிறது. வாகனங்கள் சென்றுகொண்டே இருப்பதால் அத்தனை தூசியும் வீட்டிற்குள் தான். பகலில் நான் எண்ணெய் மில்லுக்கு எண்ணெய் ஆட்ட செல்வதால் இங்குள்ள தூசியை நான் சுவாசிப்பதில்லை.ஆனால் வீட்டிலிருப்பவர்களின் நிலைமை மிக கஷ்டம். 

      எனது மாமா சொன்னார் “நம்மள எல்லாம் மனுசனாவே நெனக்க மாட்டானுவளா இந்த பயலுவோ” என. நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் இதே நிலைதான் .கடைகரர்களின் பாடு பெரும்பாடு .நண்பர் ஒருவர் மனிமேடையில் கடை வைத்துள்ளார் .தலையும்,காதும் மூடியது மாதிரி தொப்பி ஒன்றை அவரே செய்து அணிந்து அமர்ந்துள்ளார் . 

      

           வீட்டிலிருந்து புறப்பட்டால் எங்கும் நேராக சென்று விடமுடிவதில்லை .கிருஷ்ணன் கோவிலுக்கு போகவேண்டும் எனறால் .ஆனந்தா சூப்பர் மார்க்கெட்க்கு முன் சாலை திரும்பி புதுக்குடியிருப்புக்கு திருப்பி விடுவார்கள். வடசேரிக்கு போக வேண்டும் என்றால் எங்கே சாலை அடைத்து வைகபட்டுள்ளது ,எப்படி செல்வது என எதுவும் யூகிக்க முடியாது .இங்கு மணல் எடுக்க உயர்நீதிமன்ற தடை உள்ளது .எங்கும் மணல் எடுக்க முடியாது. குழாய் பதிக்க மூன்றடி பள்ளம் தோண்டினால் போதுமானது ஆனால் ஆறடிவரை தோண்டுகிறார்கள் .அந்த மணல் எங்கு செல்கிறதோ? 

     ஒழுகினசேரிக்கு செல்ல வேண்டும் என புறப்பட்டேன் .வடசேரி மேட்டில் ஒழுகினசேரி செல்லும் சாலையில் செல்ல முடியவில்லை,ஸ்டேடியம் ,கலைவாணர் கலையரங்கம் வழியாக ,தலைமை தபால் நிலையம் செல்லும் சாலையில்வந்தபோது அங்கும் தடை தட்டு தடுமாறி மணிமேடைக்கு வந்தால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி போக வேண்டிய இடத்துக்கு போய் சேர நீண்ட நேரமாகிறது .நாகர்கோவில் அப்படி ரொம்ப பெரிய ஊர் இல்லை .கோட்டார் முதல் வடசேரி ,அந்த பக்கம் ஒழுகினசேரியிலிருந்து –வடிவீஸ்வரம் ,செட்டிகுளத்தில் இருந்து மத்தியாஸ் வார்டு ,வேப்பமூட்டிலிருந்து டதி பள்ளி –மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலை அரை மணி நேரத்திற்குள் சுற்றி வந்துவிடலாம் .

ஆனால் ராமவர்மா மகாராஜா இருந்தப்போது இருந்த அதே குறுகலான சாலைதான் இப்போதும் இருக்கிறது .நூறு ஆண்டுகளில் எவ்வளவு வாகனங்கள் பெருகிவிட்டன .சாலைகள் விரியவில்லை .யாரவது சாலையை விரிக்க முயற்சி எடுத்தால் போராட்டம் செய்து தடுக்கும் அரசியல் இருக்கும் வரை ,தோண்டிய குண்டுகளில் விழுந்து கால் முறியும் அப்பாவி ஜனங்கள் தப்ப முடியாது .

நேற்று காலை ஆட்சியர் அலுவ லகம் –டதி பள்ளி சாலையில் வந்தபோது கவனித்தேன் .இரவோடு ,இரவாக அந்த சாலையை போட்டுள்ளார்கள் .மாண்புமிகு முதல்வர் எடப்பாடியார் அடுத்த வாரம் நாஞ்சில் நகருக்கு வருகை புரிவதால் இந்த தயார் எடுப்பு என அறிந்தேன் .மனதுக்குள் நினைத்தேன் மாண்புமிகு முதல்வரின் பாதம் அடிக்கடி இந்த குமரி மண்ணில் பதியட்டும் என. கொட்டும் மழையில் இரவிலும் சுசீந்திரம் அருகே சாலை பணி நடைபெறுகிறது .எத்தனை நாள் தாங்குமோ. 

ஷாகுல் ஹமீது, 

18-09-2020

Tuesday 8 September 2020

அய்யன் மலை

                              அய்யன் மலை 

நேற்று மாலை அய்யன் மலைக்கு சென்றிருந்தேன் .முன்பு மருத்துவமலைக்கு செல்லும்போது ஒரு குகையில் ஒரு அம்மா இருப்பார்கள்.பின்பு அந்த குகை பூட்டியிருந்தது .மீண்டும் ஒருநாள் அந்த குகை திறந்திருந்தது ஆம் அந்த அம்மா அங்கே இருந்தார்கள் .

“உங்கள காணல்ல கொஞ்ச நாளா” எனக்கேட்டேன் .

“மக்களே ஞான் இப்போ அய்யன் மலையில இரிக்கேன்,ஞாறாட்ச மாத்ரம் தான் இங்க வருவன் .புன்னார்குளம் அய்யன் மலைக்கி வாங்கோ அங்க அன்ன தானம் உண்டு” என்றழைத்தார் .

ஐந்து ஆண்டுகள் இருக்கும் அய்யன் மலைக்கு போகவே இல்லை.எனக்கு பிடித்தது மருந்துவாழ் மலை தான் .அனுமார் மூலிகை மலையை கையில் ஏந்தி பறந்து செல்கையில் பிய்ந்து விழுந்த ஒரு துண்டு தான் மருந்துவாழ் மலை என சொல்கிறார்கள்.

ஊரில் இருக்கையில் மாதம் ஒரு முறையாவது மருந்துவாழ் மலையில் ஏறிவிடுவேன்.பள்ளிவாசலில் அதிகாலை தொழுகை முடிந்து வைகறையில் எனது சுசுகி பைக்கை கிளப்பினால் கதிரேழுவதற்கு முன் பொத்தையடி மருந்துவாழ் மலை அடிவாரத்தில் இருப்பேன் .

கையில் எதுவும் இருக்காது வேகமாக ஏறி நாற்பது நிமிடங்களுக்குள் பிள்ளைதடத்தை அடைவேன் .பிள்ளை தடம் என்பது ஸ்ரீமன் நாராயண குரு தவமியற்றிய குகை,அதற்கும் மேலே ஒரு குன்று ஏறினால் அங்கே ஆஞ்சநேயர் சிலை ஒன்று இருக்கும்.ஞாயிறுகளில் அங்கே செல்லும் பக்தர்களுக்கு பிராசதமாக ஒரு மோரிஸ் பழம் கிடைக்கும்,குடிக்க தண்ணீரும்.

  அதிலிருத்து ஒரு பாறையை ஏறிவிட்டால் அதுதான் மலையின் உச்சி. கடல் மட்டத்திலிருந்து ஆயிரத்தி முந்நூறு அடிக்கு மேலே நின்றுகொண்டிருப்பேன். முக்கடலும் சங்கமிக்கும் குமரி முனையை அங்கிருந்து மட்டுமே காணாமுடியும்.சுவாமி விவேகானந்தரும்,அய்யன் திருவள்ளுவரும் நின்றுகொண்டுஇருப்பார்கள். வெள்ளையாக தெரியும் மணக்குடி கோயிலில் இருந்து


ஞாயிறுகளில் பாதிரியாரின் ஜெப வார்த்தைகளை காற்று  நம் காதில் கொண்டு போடும் “ஆண்டவர் நம்மோடு இருப்பாராக” என  ஆமென் மட்டும் சொன்னால் போதும் .   



குறிஞ்சியில் நின்றுகொண்டு,முல்லை,மருதம்,நெய்தல் நிலத்தை ஒருசேர காணக்கிடைக்கும் பாக்கியம்.அடிவாரத்திலிருந்து துவங்கும் வயல்கள் மற்றும் தென்னையோலையின் பச்சையை தொடர்ந்து எல்லையில்லாமல் நீண்டு கிடக்கும் கடல் .வலமாக திரும்பினால் பச்சையும் மலை தொடர்களும் .வடக்கில் மலைகளும் கடும் பச்சையும் .மேலே நின்றால் நாள் முழுவதும் அங்கே நிற்கதோன்றும் மன மயக்கம் வந்துவிடும்.அதற்கு ஒப்பு கொடுக்காமல் கீழே இறங்கி விட்டால் நல்லது .



முப்பந்தலை ஒட்டிய பகுதியில் மின்சாரம் தயாரிக்கும் காற்றாடிகள் ஒரு கோடியை நெருங்கிவிட்டது . குமரியின் இந்த முனைதான் இத்தனை காற்றையும் இங்கே கொண்டு வருகிறது போல . இனிமேல் காற்றாடிகள் வைக்க இங்கே இடமே இல்லை என நான் முன்பு பணி செய்த காற்றாடி நிறுவன முதாலாளி ஆறுமுகம் சொல்லி கேட்டிருக்கிறேன் .

  கடந்த வாரம் கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக அய்யன் மலையில் ஒரு மூலிகை தியான மண்டபம் மும்மத ஆன்மீக தலைவர்களுடன் சேர்ந்து திறப்புவிழா அறிவிப்பை கண்டேன் .

கலப்பை மக்கள் இயக்க தலைவரின் செய்தி குறிப்பு இவ்வாறு இருந்தது  மருத்துவாழ் மலையை ஒட்டிய மூலிகை மலை. இங்கு துவங்கும்  மேற்கு தொடர்ச்சி மலை இமையமலையில் முடிகிறது  இந்த தியான மையத்தை மக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என இருந்தது.

நேற்று மாலை அய்யன் மலைக்கு சென்றிருந்தேன்.மருத்துவமலையின் பின்புறமுள்ள பொட்டல்குளத்தில் இருக்கிறது .கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் கண்டுபிடித்தேன் அய்யன் மலையை .கொட்டாரம் ,மருத்துவமலை அருகில் வசிப்பவர்கள் யாருக்கும் தெரியவில்லை  அய்யன் மலை எங்கிருக்கிறது என .

 நான் செல்லும்போது அய்யன் மலையை பாதுகாக்கும் பெரியவர் தியாகராஜர் கீழே இருந்தார் .என்னை கண்டதும் அவரது மனைவியிடம் தியான மண்டபத்துக்கான சாவியை வாங்கி விட்டு மேலே ஏற தொடங்கினோம் .

பெரியவரிடம் என்னை அறிமுகபடுத்திக்கொண்டேன். “எங்க இருந்து வாறிய” என கேட்டார் .

 “நாரோல்”,

“தாமசம் எங்க”

“ கிருஷ்ணன் கோயில்”

அய்யன் மலை குமரியின் சபரிமலை என பாதகை வைத்திருந்தார் .மணிகண்ட சித்தர் புலிமேல் அமர்ந்து செல்லும் சிலை ,பதினெட்டாம் படி தாண்டி ஐயப்பன் கோவில் இருக்கிறது .ஐயப்பன் கோவில் நடை சாத்தியிருந்தது. ஊரடங்கு தளர்வு அறிவித்த பின்பும் ஒரு பக்தர் கூட இல்லை. இங்கே கேளிக்கை ஏதும் இல்லை .முழுமையான தேடல் உள்ளவர்கள் மட்டுமே இந்த இடத்திற்கு வரமுடியும் என தோன்றியது ..



  பெரியவர் கையில் நான்கு சாவிகளை வைத்து மாத்தி,மாத்தி திறந்து பார்த்தார் .கதவு திறக்கவில்லை .என்னை அழைத்து “துறக்க மாட்டேங்கது”என்றார் .நான் சாவிகளை வாங்கி திறக்க முயற்சித்தேன் ஒரேயொரு சாவி மட்டும்தான் பொருந்தியது எனினும் திறக்கவில்லை . “இதுக்கு இதான் சாவியா,வேற சாவி இருக்கா?”என கேட்டுவிட்டு.நான் வெளியில் நின்று தென்னை மரங்களின் அடர்பச்சையை பார்த்துக்கொண்டிருந்தேன்.

 அருகில் இருந்தும் அய்யன் மலைக்கு வரவில்லையே எனும் எண்ணம் தோன்றி மறைந்தது .மருத்துவ மலையில் சந்தித்த  அம்மாவை கேட்டேன் . “அவங்க கொஞ்சம் களியாம இருந்தாவோ,கொஞ்ச நாளுக்கு முன்ன மேல போயிட்டாவோ” என்றார் .

 மீண்டும் மீண்டும் இருவருமாக கதவை திறக்க முயற்சித்தோம்.

“இதுதான் சாவி, இதுதான் சாவி” என உறுதியாக சொன்னார். “கப்பல் காரனுக்கு ஒரு கதவ கூட திறக்க முடியலியே” என,எனக்குள் இருந்து அந்த ஷாகுல் சொல்வது கேட்டது .

சும்மா கதவை தள்ளினேன் திறந்துவிட்டது .முதலிலேயே திறந்து தான் இருந்திருக்கிறது . ஒரு பெரிய அறை உள்ளே எந்த உருவமும் இல்லை .சுவரில் முழுநிலவுடன் வானம் பிராகசித்து கொண்டிருந்தது.

  அறையின் மறுபுறமுள்ள கதவை திறக்கபோனேன்.  “பாத்து தொறோங்கோ காத்து தள்ளிரும்” என்றார். காற்று வேகமாக அறைந்து சென்றது கீழே வயல்களின் இளம் பச்சையும் ,கிரிவல பாதையும்,மருத்துவ மலையும்.



“மருத்துவ மலையில உள்ள அவ்வளவு மூலிகை காத்தும் இங்க தான் வரும்,இங்குன நின்னா ஒரு நோயும் வாரது” என்றார்

அறையின் வெளியே சென்று அங்கிருந்த பாறையில் அமர்ந்தோம்.

 பெரியவரின் கைபேசியில் ஒரு பெண்மணி அழைத்தார் .”நான் மலையில இருக்கேன் இங்க வா”என சொன்னார் .

செல்லும் வழியில் மயில் ஒன்று


  சிறிது நேரத்தில் நடுவயதை தாண்டிய ஒரு தம்பதி வந்தார்கள்.அந்த பெண் மட்டும் எங்கள் அருகில் வந்து பெரியவரை பார்த்து சுவாமி என வணங்கினார் .

நான் தியானம் செய்வதற்காக அறைக்குள் சென்றேன் .அந்த பெண்மணியின் கணவர் மேல் சட்டையை கழற்றிவிட்டு கண்மூடி அமர்ந்திருந்தார் .நான் தியானம் கலைந்து வெளியே வரும்போது.பெரியவருடன் அந்த தம்பதியர் பேசிக்கொண்டிருந்தனர்.

“ஒரு நாலாயிரம் பேருக்கு வேலை கொடுக்க ப்ராஜெக்டாக்கும்” என்பது என் காதில் கேட்டது .இருட்ட தொடங்கியதும் .கீழே போகலாம் என்றார் .அந்த பெண்மணி பெரியவரிடம் சுவாமி “நாங்கோ,செய்யலாமா”

“உனக்கு நம்பிக்க இருந்தா செய்” என்றார் பெரியவர் .

கீழே வந்ததும் பெரியவரின் அறையில் அமர்ந்து அரை மணி நேரம் பேசிகொண்டிருந்தேன்.

அய்யன் மலை உருவாக்கம் பற்றி சொன்னார் .மீண்டும் அங்கு சில பணிகளை செய்ய பொருளுதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.



மீண்டும் ஒரு நாள் அதிகாலை இங்கருந்து கதிரேழுவதை பார்க்கவேண்டும் .

கடந்த செப்டம்பர் மூன்றாம் தேதி அய்யன் மலைக்கு போயிருந்தேன் .

ஷாகுல் ஹமீது ,

09 sep 2020