Monday 2 May 2022

கப்பலுக்கு புறப்பட்டேன்

 கப்பலுக்கு புறப்பட்டேன் (2022 SINGAPORE ENERGY)

   இம்முறை கப்பலுக்கு புறப்படும் முன் நிறைய தடைகள் இருந்ததால் எனது விடுமுறை மிக நீண்டு விட்டது. ஏழரை மாதங்கள் ஆகி விட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி ஊருக்கு வந்தேன் ஜனவரியில் மீண்டும் கப்பல் செல்ல விருப்பம் தெரிவித்து டிசம்பர் முதல் எனது கப்பல் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டு கொண்டே இருந்தேன்

  பிப்ரவரி எட்டாம் தேதி  tristar ruby எனும் கப்பலில் ஒப்புதல் வந்துள்ளது எனது மும்பை அலுவலகம் தகவல் சொன்னார்கள். அன்று அந்த கப்பல் கன்னியாகுமரி அருகில் சைனாவை நோக்கி சென்றுகொண்டிருந்தது.

  அந்த கப்பலின் ஆசியா வருகைக்காக காத்திருந்தேன்.மலேசியாவில் கப்பல் சரக்கு நிறைக்க வந்தபோது அங்கு எழு நாட்கள் கட்டாய தனிமைபடுத்தல் இருந்ததை கோலாலம்பூர் அலுவலகம் திட்டமிட தவறியதால் அப்போது செல்ல முடியவில்லை.பிப்ருவரி 25 ஆம் தேதி மும்பை அலுவலகம் மார்ச் பன்னிரெண்டாம் தேதி கப்பலில் சேர வேண்டும் மருத்துவ சோதனையை முடித்துவிட்டு 26ஆம் தேதி முதல் வீட்டு தனிமையில் இருக்க சொன்னார்கள்.

   மார்ச் மூன்றாம் தேதி காலை பத்துமணிக்குமேல் மும்பை அலுவலகம் என்னை போனில் அழைத்து ஜப்பான் செல்லும் முன் பத்து நாட்கள் விடுதியில் தனிமை படுத்தல் இருப்பதால் இன்று மாலையே தில்லி செல்ல வேண்டும். இரவு விமானம் தயாராகு என்றார்கள். விடுதியறை,விமான சீட்டு என மின்னஞ்சல்கள் வந்து கொண்டே இருந்தது .அவரசமாக பயணப்பையை தயார் செய்து தயாரானேன்.நண்பர் சுப்ரமணி என்னை திருவனந்தபுரம் விமானநிலையம் அழைத்து செல்ல வீட்டிற்கு வந்திருந்தார்.மாலை நான்கு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பும்போது போன் வந்தது தில்லி செல்வது ரத்தாகி விட்டது என. 

     மார்ச் பதினைந்தாம் தேதி மதியம் மும்பை அலுவலகத்திலிருந்து போன் “ஷாகுல் உன்னை சிங்கப்பூர் எனெர்ஜி எனும் கப்பலுக்கு மாற்றியுள்ளேன் இருபதாம் தேதி மலேசியாவில் கப்பலில் இணைய வேண்டும் தயாராகு என”

 இந்த கப்பலுக்கான ஆவணங்கள் மற்றும் மருத்துவ சான்றிதழ்கள் சில தயார் செய்யும்படி வேறு அலுவலர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல்கள்  எனக்கும் வந்து கொண்டே இருந்தது.மறுநாள் இந்த கப்பலுக்காக பணி ஒப்பந்தம் மற்றும் வேறு சில ஆவணங்கள் கையொப்பமிட்டு அனுப்பினேன்.

முந்தைய கப்பலில் இருந்த சமையல்காரர் டேவிஸ் இந்த கப்பலில் இருந்தார்.அவரை தொடர்பு கொண்டேன்.மலேசியாவில் ஏழு நாட்கள் விடுதியில் தனிமைபடுத்தலும் உள்ளது என்றார்.

 மறுநாள் முதல் எந்த தகவலும் இல்லை.டேவிஸ் கப்பல் மலேசியா செல்வது ரத்தாகி பனாமா செல்கிறது.மிக மெதுவாக செல்வதால் ஒரு மாதம் ஆகும் என்றார்.உத்தேசமாக கணக்கிட்டு பார்தேன் ஏப்ரல் பதினைந்தாம் தேதிக்கு முன் கப்பல் செல்வது வாய்ப்பே இல்லை.

    விடுமுறையில் இருக்கும்போது சம்பளம் கிடையாது என்பதால் கப்பல் காரனுக்கு பொருளாதாரம் கொஞ்சம் கடினம்தான். ஏப்ரலில் ராமலான் நோன்பு காலம் “நோம்பு முடிஞ்சி போனா போராதா”என சுனிதா கேட்டாள். “அது முடியாதுல்லா,இந்த கப்பலுக்கு பிளான் பண்ணி மெடிக்கல் முடிச்சாச்சி,இந்த சான்ச விட்டா பொறவு எவ்வளவு நாள் ஆவுமுன்னு தெரியாது”

மீண்டும் காத்திருந்தேன்.கடந்த பதினான்காம் தேதி மும்பை-பாரிஸ் வழியாக பனாமாவிற்கு விமான சீட்டும் ஆவணங்களும் வந்தது.பனாமா நாட்டிற்கு பலமுறை சென்றிருக்கிறேன் 2008,2012 ஆம் ஆண்டுகளில் இங்குள்ள பல்போவ மற்றும் மன்சினிலோ துறைமுகங்களுக்கு வருபோதேல்லாம் ஊர் சுற்றியிருக்கிறேன்.இங்கிருந்து இருமுறை இந்தியாவிற்கு பயணித்துள்ளேன்.நன்கு பழகிய ஊர் இது. நண்பன் மில்டனிடம் சொன்னேன்.அமெரிக்க விசா,ஐரோப்பிய கூட்டமைப்பு அல்லது கனடா விசா   இல்லாமல் பாரிஸ் வழி பயணிக்க மும்பையில் அனுமதிக்கமாட்டார்கள் என்றான்.


                        திருவனந்தபுரம்


 அன்று சனிக்கிழமை மாலை விமான சீட்டு அனுப்பி தந்த என அலுவலக அதிகாரியை அழைத்தேன்.விசாரித்துவிட்டு உறுதி செய்வதாக சொன்னார்.பதினைந்தே நிமிடத்தில் அழைத்தார். “நீ சொன்னது சரிதான் வேறு டிக்கெட் பார்த்துவிட்டு சொல்கிறேன்” என்றார்.

 மீண்டும் பதிமூன்றாம் தேதி மதியம் திருவனத்தபுரம்-மும்பை-துபாய்-இஸ்தான்புல் வழியாக பனாமவிற்கு புதிய விமான சீட்டு வந்தது.

பதிமூன்றாம் தேதி மதியம் பன்னிரெண்டரை மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து விமானம்.காலை ஏழரை மணிக்கு முன்பே சுனிதாவின் தாய்,சகோதரிகள் வீட்டிற்கு வந்திருந்தனர்.நண்பர் ஸாம் என பயணத்திற்காக கர்த்தரிடம் மன்றாடியபின் என்னை அவரது காரில் வடசேரியிலிருந்து பஸ் ஏற்றி விட்டார்.

 பனமா விசா மற்றும் காரண்டி லெட்டர் நான் திருவனந்தபுரம் நெருங்கும்முன் மெயிலில் வந்தது.விமானநிலையத்தில் பணிபுரியும் தம்பி ஜானகியிடம் அவற்றை நகல் எடுத்து வைக்க வேண்டினேன்.

  நண்பர் சுப்ரமணி காரில் வந்து என்னை அழைத்துசென்றார்.ஜானகியின் இல்லம் சென்று ஆவணங்கள் பெற்றுக்கொண்டு விமானம் ஏறினேன்.எனக்கான சிற்றுண்டி முன்பதிவு செய்யபட்டிருந்தது நோன்பு வைத்திருந்ததால் அருகிலிருந்த பெங்காலி இளம்பெண் அமியிடன் வாங்கிக்கொள்ள சொன்னேன். வேக வைக்காமல் நூடுல்ஸ் பாக்கெட்டை கேட்டு பைக்குள் வைத்தபின் “நன்றி” என்றாள்.

               
                             மும்பை

     

  விமானம் மும்பையில் தரையிறங்கியபின் பயண பைகளை எடுத்துகொண்டு அமியிடம் விடைபெற்று.பன்னாட்டு விமான நிலையத்திற்கு சென்றேன்.அக்பர் ட்ராவல்ஸ் அறுநூறு  ரூபாய் என்றார்கள்.அருகிலிருந்த  மற்றொரு சேவை இருநூற்று இருபத்திஐந்து ருபாய் குளிரூட்டி இல்லாமல் என்றார்கள்.அதில் பணம் செலுத்தி சென்றேன்.

எனது மும்பை அலுவலக அதிகாரி உனது காரண்டி லெட்டரில் தவறுதலாக பாரிஸ்-பனமா விமான விபரங்கள் அச்சிடப்பட்டுள்ளது.விரைவில் சரியான கடிதம் வந்ததும் அனுப்புகிறேன் என்றார்.

  மும்பை விமான நிலையத்தில் உம்ரா (மெக்கா)செல்லும் பயணிகள் அதிகமிருந்தனர். ஏர் இந்தியா கவுண்டரில் சென்றபோது எனது கப்பல் ஆவணங்கள் அனைத்தையும் அந்த பெண் கேட்டு சரிபார்த்தபின் தனது உயரதிகாரியிடம்கேட்டு உறுதி செய்த பின் என்னை அனுமதித்தாள்.

   அடுத்து குடியுரிமை அதிகாரியின் முன் நின்றேன்.எனது பழைய பாஸ்போர்டை கேட்டார்.அது கிழிந்து போனதால் புதியது மாற்றினேன் கொண்டு வரவில்லை என்றேன்.

 “உனது பனமா விசா பழைய பாஸ்போர்ட் எண்ணில் இருக்கிறது” என்றார். அதிர்ச்சியாக இருந்தது.மற்ற ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருப்பதை பார்த்துவிட்டு என்னை தனது உயரதிகாரியிடம் அழைத்துச்சென்றார்.

அவர் விபரங்களை கேட்டபின் “எத்தனை வருடங்களாக கப்பல் பணியில் இருக்குறீர்கள்”

   “பதினேழு  வருடங்கள்” என்றேன். 

“அங்கிருந்து உன்னை திருப்பி அனுப்பினால் நான் பொறுபேற்க முடியாது, நீ போக விரும்புகிறாயா”என கேட்டார்.

“அங்கெ பனாமா முகவர் பார்த்துகொள்வார்,ஏதும் பிரச்னை வராது” என்றேன்.

“போய் வா” என்றார் .



  மும்பை அலுவலக அதிகாரியை அழைத்து விபரம் சொன்னேன்.உடனே பனாமாவுக்கு மெயில் அனுப்புவதாக சொன்னார்.

  விமான நிலையத்தில் இருந்த தொழுகை கூடத்தில் தொழுதுவிட்டு காத்திருந்தேன்.உம்ரா செல்லும் பெண் பயணி ஒருவர் தந்த பேரீச்சை,வாழை பழத்துடன் கதிரணைந்தபின்  நோன்பு திறந்துவிட்டு அங்கேயே மக்ரிப் தொழுதுவிட்டு இட்லி வாங்கி சாப்பிட்டேன்.

நேரம் நெருங்கியிருந்தது.மும்பை நண்பர்கள் மற்றும் காட்சன் சாமுவேலுடன் பேசிவிட்டு விமானத்தில் ஏறிகொண்டேன்.சரியான நேரத்தில் எட்டரை மணிக்கு அந்தேரி கடலுக்குமேலே வட்டமடித்து விமானம் பறக்க தொடங்கியது.



      நான்கு மணி நேரத்தில் துபாய் விமான நிலையத்தில் வந்து சேர்ந்தேன்.அடுத்த விமானத்துக்கான போர்டிங் கார்டுகள் கிடைக்காதாதால் துர்கிஷ் ஏர்வேஸ் கவுண்டருக்கு சென்றேன்.காபூலிலிருந்து ஐரோப்பா செல்லும் பயணிகள் நிறையபேர் நின்றுகொண்டிருந்தனர்.


                    துபாய்



 என் முறை வந்தபோது துர்கிஷ் விமான ஊழியர் எனது ஆவணங்கள் அனைத்தையும் பார்த்தபின். “முன்பு பனாமா போயிருக்கிறாயா” எனக்கேட்டார்.

“நம்பர் ஆப் டைம்ஸ்” என்றேன்.

“வாட் நோ சீல் இன் பாஸ்போர்ட்”

“இட்ஸ் நியூ பாஸ்போர்ட்” என்றேன்.

“ஷோ மீ யுவர் ஓல்ட் பாஸ்போர்ட்”

“கொண்டுவரவில்லை” என்றேன்.

அவரது உயரதிகாரியை போனில் அழைத்து  பேசினார்.

என் முன்னாள் ஒருஇந்தியாவை சேர்ந்த பயணி பனாமா நாட்டிற்கு கப்பலில் சேர செல்வதாக கூறினார்.

என்னிடம் கொஞ்சம் காத்திரு போர்டிங் கார்ட்,பாஸ்போர்ட் பின்னர் தருகிறேன் என்றார் .

அரை மணி நேரத்திற்குப்பின் என்னை அழைத்து போனில் பேச சொன்னார்.மறுமுனையில் பேசியவர் “ஏன் துபாய் வழியாக பனாமா செல்கிறாய் என கேட்டுவிட்டு நீங்கள் தமிழா மலையாளமா?” என கேட்டபின் தமிழிலேயே பேசி எனது விபரங்களை தெரிந்தபின் பயணிக்க அனுமதித்தார்.

 அங்கே இருந்த காபி ஷாப்பில்  மசாலா சாயா கிடைக்கும் என எழுதியிருந்தது. கடையிலிருந்த லைலா எனும் ஆப்பிரிக்க பெண் சாயா நன்றாக இருக்கும் என்றாள்.சுவையான டீ அது சலாமும் நன்றியும் கூறி தொழுகைக்கான இடத்தை கேட்டறிந்தேன்.


                  நான்காவது விமானத்தில்


  அங்கேய இஷா தொழுதுவிட்டு துபாய் நேரப்படி நள்ளிரவு இரண்டுமணிக்கு இஸ்தான்புல் விமானத்தில் ஏறினேன்.அதிகாலை ஐந்துமணிக்கு துருக்கியின் இஸ்தான்புல் விமானநிலையத்தில் முதல் முறையாக இறங்கினேன்.அடுத்த விமானம் பத்துமணிக்கு,அதிகாலை தொழுகைய நிறைவேற்றியபின் பனாமா செல்லும் வாயிற் எண் எட்டுமணிக்கு மேல் அறிவிப்பதாக இருந்ததால் பயணிகள் காத்திருப்பு இருக்கை அருகில் தரையில் துண்டை விரித்து,பையை தலைக்கு வைத்து தூங்கினேன்.



 எட்டு மணிக்குமேல் எழுந்தபோது நல்ல பசி எனக்குகந்த உணவேதும் அங்கே இல்லை. சிக்கன் பிரஸ்ட் ஒன்று வாங்கி சாப்பிட்டுவிட்டு பனாமா செல்லும் விமானம் புறப்படும் நுழைவு வாயில் நோக்கி நடந்தேன்.கொஞ்சம் தூரம்தான் பத்து நிமிடங்களுக்கு மேலானது.

 போர்டிங் துவங்கவில்லை பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.அங்கும் பனாமா விசா மற்றும்  ஸீமேன் ஆவணங்கள் சரிபார்த்தபின் தான் விமானத்தில் ஏற அனுமதித்தார்கள்.எனது பயண பைகள் விமானத்தில் ஏறிவிட்டதா என உறுதி செய்துகொண்டேன்.

மொத்தம் பதினேழு மணி நேர பயணம் இடையில் கொலம்பியா நாட்டின் பகோட்ட எனும் ஊரில் ஒரு மணிநேரம் நின்று செல்லும் விமானம் அது.துர்கிஷ் பீப் காபப் மற்றும் ரைஸ் மிக சுவையாக இருந்தது.நல்ல கவனிப்பும் உணவுகளும் வழங்க பட்டது.


           பனாமா வில் 

  பனாமா நேரப்படி வியாழன் மாலை ஆறரை மணிக்கு 93வது  முறையாக நான் பயணித்த  விமானம் பத்திரமாக தரையிறங்கியது.அங்கே குடியிரிமை அதிகாரியின் முன் நிற்கையில் இந்தியாவிலிருந்து வேறு விமானத்தில் வந்த,கேரளாவின் ராமு குட்டியான்,கோவாவின் பெர்னாண்டஸ்,எனது விமானத்தில் வந்திருந்த மலேசிய,இந்தோனேசியா பணியாளர்களை கண்டேன்.




 குடியுரிமை அதிகாரியின் கையில் எனது புதிய பாஸ்போர்ட் என்னுடன் விசா நகல் இருந்ததால் எந்த சிக்கலுமின்றி எளிதாக வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டேன்.

 இரவு விடுதியறையில் தங்கிவிட்டு மறுநாள் காலை படகு மூலம் பசிபிக் கடலில் நின்றுகொண்டிருந்த சிங்கப்பூர் எனெர்ஜி எனும் கப்பலில் பணியில் இணைந்தேன் .