Sunday 10 May 2020

கப்பல் காரன் டைரி

கப்பல் காரனின் தனிமை நாட்கள் 

  இந்த தனிமை நாட்கள் என் போன்ற கப்பல்காரனுக்கு பெரிய கடினம் இல்லை .அங்கேயும் வாழ்க்கை இப்படி தானிருக்கும் .கூடவே வரக்கூடிய எதிர்பாராத கடும் பணி ,பெரும்புயல், இடி மின்னலுடன் கொட்டும்  மழையையும் சமாளித்தே ஆக வேண்டும் . எங்களூரை சார்ந்த நண்பர் காப்டன் பீட்டரை போனில் அழைத்தபோது “நமக்கு இது ஒன்னும் ஒரு பிரச்சனையுமில்லியே நாமோ எப்படி எல்லாம் சமாளிப்போம்”என்றார்.
240 மீ நீளமுள்ள  lpg கப்பலின் முன் பகுதி


    கப்பலின்  நீளம்,அகலம் எவ்வளவோ அதுக்குள்ளேதான் அவன் நகர முடியும். கரையணையும் போது வாய்ப்பு கிடைத்தால் மட்டும் நிலத்துல காலு வைக்கலாம்.காஸ் டாங்கர் ,எண்ணெய் ஏற்றும் (very large gas carrier and oil tanker,ultra large  gas tanker and oil tanker) பெரும் கலங்கள் என்றால் .பணிக்கு சேர்ந்து ஆறு மாதமோ எட்டு மாதமோ கழிச்சி வீட்டுக்கு வரத்துலதான் கால் நிலத்தில் பதியும் .
  
இரு கப்பல்கள் இணைத்து கட்டப்பட்டு சரக்கு பரிமாற்றம் செய்யபடுகிறது 
      எட்டு மணி வேலைக்கு ஏழு ஐம்பத்தி ஐந்துக்கு அறையில இருந்து இறங்குனா போதும், உண்மையில் அவன் அதிர்ஷ்டகாரன்,மிக குறைந்த நேரத்தில் தங்குமிடதிலிருந்து பணியிடத்திற்கு செல்பவன் கப்பல் காரன்  மட்டுமே. ரயில் ,பஸ்ஸில் மணிக்கணக்கில் பயணம் இல்லை, கூட்டத்துல இடி படாண்டாம் ஐம்பது அடி தூரத்தில் கொண்டு போய் நிறுத்தப்படும் பேருந்தை நோக்கி மாரத்தான் ஓடவேண்டாம்.பதினோரு ரூபாய் ஐம்பது காசு பயண சீட்டுக்கு “சில்லறை இல்லேன்னா பஸ்ல  ஏன் வாரியறு ஒய் கீழ இறங்கும்” என கண்டக்டரிடம் திட்டு வாங்க வேண்டாம். ரயிலில் கூட்டத்தில் சகலம் தள்ளி இரி என சொல்லிவிட்டு நம் தொடைமேல் அமரும் பெரிய புட்டத்தை உடைய சக பெண் பயணியை சுமந்து செல்லும் சிரமம் கிடையாது .

      காலையில் சர்பிரைஸ் தரும்  டயர்  பஞ்சர்,கார் டிரைவர் வரல ,இன்னைக்கு ஹர்த்தால் என எந்த எந்த பிரச்னையும் இல்லை.என்னை போல டே டியூட்டி யில் உள்ளவர்கள் அவசர வேலை ஏதும் இல்லைனா மாலை ஆறு  மணிக்கு முன்பே அறைக்கு வந்து நீராடி இரவுணவையும் முடிச்சிட்டு .மெஸ் ரூம்லே இருந்து கூட்டமா ஒரு படம் இல்லேன்னா அறையில போய் சொந்த மடி கணினியில் படம் பாக்குலாம் .

    டெக்கில் வேலை செய்பவர்கள் கொஞ்சம் அதிகமாக நகர்பவர்கள்.கப்பலின்  நீளம் இருநூற்றி நாற்பது மீட்டர் என்றால் இருநூறு மீட்டர் வரை போய் வரலாம் .அகலம் முப்பது மீட்டர்.அவர்களுக்கு கரையை ஒட்டிய பயணங்களில் மலையும்,காடும் உள்ள இயற்கையை ரசிக்கவும் முடியும் .
கதிரெழுதல்
கதிரணையும் ஆபூர்வ காட்சி  கார் மேகங்கள்  சூழ்ந்திருக்கையில்

    இரவுகள் இன்னும் இனிமையானவை. கப்பல் கவிந்து விடுவது போன்ற  புயல்,முன்னர் நிற்பவர் தெரியாத அளவிற்கு சுழற்றியடிக்கும் மழை உடலை ஊடுருவி செல்லும் கடுங்குளிரோ இல்லண்ணா முழுநிலவை ஒட்டிய நான்கைந்து நாட்களில் ஒளி வீசும் கடல் பரப்பு,நீச்சம் குளம் போல காட்சியளிக்கும்.  கரு நிலவு நாட்களில் வானில் கொட்டி கிடக்கும் எண்ணிலா நட்சத்திரங்களும், அதில் தினமும் நாம் பார்க்கும்  குறிப்பிட்ட நட்சத்திரங்கள் காண்கையில் ஏற்படும் அகமகிழ்வும்  கரைலிருப்பவர்களுக்கு வாய்ப்பே இல்லை.
     
    இரவில் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு கும்மிருட்டில் பயணிப்போம் .நிலத்தில் நம்மை சுற்றிலும் வெளிச்சம் இருப்பதால் கருநிலவு நாளில்  நான் சொன்ன வானில் கொட்டி கிடக்கும் நட்சத்திரங்கள் மிஸ்ஸிங் ஈரட்டி,அட்டகட்டி அருகில் உள்ள சத்சதன் போன்ற காட்டு பகுதிகளில்  கரு நிலவு நாளில் இரவு தங்குபவர்கள் அறைகளின் மின் விளக்குகளை அணைத்துவிட்டு அதை பார்த்தால் அதை உணர முடியும் .
  இஞ்சினில் வேலை செய்பவர்கள் இன்னும் குறைவாகவே நகர முடியும். இஞ்சின் காரனுக்கு சூரிய ஒளியே கிடைக்காது அதனால கை,கால், இணைப்பில் வலி உள்ளவர்கள் நிறையபேர் உண்டு .சூரிய ஒளி படா நம் வீட்டு மங்கையர் பலரும் இதுபோல் வலியுடனே வாழ்கிறார்கள் .

 கரை தொடா நீண்டபயணத்தில் சுற்றிலும் நீர் மட்டுமே எல்லையில்லாமல் விரிந்து கிடக்கும்.சில பயணங்களில் எட்டு முதல் பத்து நாட்கள் வரை எந்த கப்பலும் எதிரிலோ,அருகிலோ கடந்து செல்லாது.உலகமே இப்போது அறைகளில் முடங்கி கவலையுடன் நாட்களை யுகம் போல் கழிக்கிறார்கள்  கொள்கிறது,
கப்பல் காரனின் மிக சிறிய அறை

கப்பல் காரனின் அறை மிக சிறியது. எட்டுக்கு நான்கடியில் உள்ள தங்கும் அறை . தடுப்புடன் கூடிய ஒரு  கட்டில்,படுத்த பொறவு ரோல்லிங்கில் கீழ உளபிடாதுல்லா. ஒரு சோபா,ஒரு நாற்காலி,ஒரு மேசை . அதுக்குள்ளேயே குளியலறையும்,கழிப்பறையும்.ரேங்க் ஐ பொறுத்து காப்டன் முதல் பயிற்சி சீ மேன் வரை அறையின் சைசும் ,அதில் உள்ள பொருட்களும் மாறுபடும்.
  
சீப் இன்ஜினியரின்  ரூம் (very large bulk carrier)இரண்டரை லட்சம் டன்  சரக்கு ஏற்றும் மிகப்பெரிய கப்பல் முன்னூற்றி இருபது மீட்டர் நீளமும் ,ஐமபத்தி நான்கு மீட்டர்  அகலமும் உடையது  முந்நூறு  சதுர அடி கொண்டது 
     
காப்டனுக்கும் ,சீப் இன்ஜினியருக்கும் டே ரூம் ஒன்னும் ,நைட் ரூம் ஒன்னும் 
சீப் இன்ஜினியரின்  படுக்கை அறை நூறு சதுர அடியில் 


இருக்கும்.அவர்களின் அறையே அவர்களுக்கு அலுவலகமும் கூட .அங்க ஒரு பெரிய தொலைக்காட்சி பெட்டி மேஜை ,கணினி,ஐந்தாறு பேர் அமரும் வகையில் நாற்காலிகளும் இருக்கும் .உடனே அத ஒரு கொட்டாரம் போல கற்பனை செய்யாண்டாம் .அறையின் சைசு எட்டுக்கு பத்துதான்,தூங்கும் அறை அதைவிட சின்னதுதான்.
.
     நைட் ரூமில் பொருட்கள் வைக்க அறையுடன் கூடிய மேஜை,துணி வைக்க அலமாரி,காபி, டீ போடுவதற்கு  தண்ணீர் கொதிக்க வைக்கும் மின்சார கேத்தல்,சக்கரை,பால் பொடி தேயிலை,காப்பி ,கிரீன் டீ வகையறாக்கள் இருக்கும் .காப்டனுக்கு கூடுதலா நேவிகேஷன் மானிட்டரும் ,ஒரு கூடைல கொஞ்சம் பழமும் .குளியலறை பாத் டப் உடன் இருக்கும்.(எல்லா கப்பல்லயும் பாத் டப்  இருக்குமுண்ணு சொல்ல முடியாது ,சில கப்பல்ல எல்லா அறையிலும் பாத் டப் இருக்கும்) பின்னே அவ்வோ அறைகளை தினமும் சுத்தம் செய்ய ஆள் உண்டு.

      காலையில எந்திரிச்சி குளிச்சி (குளிக்காமலும் வேலைக்கு போற கேஸுகள்உண்டு )உணவுகூடத்துக்கு சாப்பிட போகணும்னா அதிகபட்சம் ஒரு நிமிஷம்.காலத்தே எழும்பி பெரும்பாலும் எல்லாரும் போறது அடுமனைக்குதான் மெட்ராஸ் பாபு ஹுசைன் ,செங்கனூர் ஸ்ரீ குமார் போல உள்ள செப்பாக இருந்தா அங்க போய் கொஞ்ச நேரம் பேசி சிரிச்சி இந்த நாள் இனிய நாள் என துவங்கும் .பரேரா  போல உள்ள குட் பிரைடேக்கள் செப்பாக இருந்தால் அடுமனை கிட்ட யாரும் எட்டியே பார்க்கமாட்டோம்.
 
செங்கனூர் ஸ்ரீ குமார்

     கப்பல்ல கேலி (galley) நியுஸ் ரொம்ப முக்கியம் .காப்டன் உட்பட எல்லாரும் அடுமனைக்கு வாரதுனால எப்ப கப்பல் நிக்கும் ,போவும் ,சம்பளம் கூடுமா ,டிரில் உண்டா ,சனிக்கிழமை யாருக்க பார்டி,கரையணைந் பின்  அந்த ஊரில் எங்கு செல்வது ,எப்படி போனும்.மெக்ஸிகோவின் அக்கபுல்கோவில்  வெளிய செல்பரிடம் எனக்கு ஒரு மெஸ்கல் வாங்கி வந்துரு என சக ஊழியரிடம் சொல்லும் இடமும் அதுதான் .ஆனால் கேலி நியுஸ்ல நிறைய பொய் தான் இருக்கும் .
  
 பின்ன சாப்பாடு. பயணத்தை முன் கூட்டியே கணக்கிட்டு தேவைக்கு அதிகமான பொருட்களை எப்போதுமே ஸ்டாக் வெச்சிருக்கணும்.நீண்ட பயணத்துல பச்சகறிதான் கஷ்டம் தக்காளி பதினைந்து நாள்,மல்லி இலை,புதினா,லெட்டுஸ் ஏழு நாளு(லெட்டுசில் மேலே உள்ள அழுகிய இலையை மட்டும் தினமும் பார்த்து நீக்கி விட்டால் பத்து நாள் இருக்கும்) ஒரு மாசத்துக்கு பொறவு வெங்காயம் இல்லாமதான் சமையல் கலைஞன் ரொம்ப கஷ்டபடுவான். நீண்ட பயணத்துக்கு பிறகு இன்னும் இரண்டு நாளில் உணவு பொருட்கள் வந்துவிடும் என்றிருப்போம் . கப்பல் கரையணைவதில் தடங்கல்கள் வரும்போது பொருட்கள் கிடைப்பது இன்னும் தாமத மாகிவிடும் .

   சாப்பாட்டின் சுவை காப்டன்,செப்பை பொறுத்தது நல்ல சுவையாக சமைக்கும்  செப் காப்டன் தரும் குறைவான,தரமற்ற பொருட்களால் வாயில் வைக்க முடியாமல் போகும்.தரமுள்ள நல்ல பொருட்கள் கிடைத்தாலும்உணவு தயாரிப்பை பெரும் பணியாக நினைத்து சமைக்கும் சமையல் காரனின் உணவு பெருமளவு வீணாகிவிடும். நல்ல சுவையாக சாப்பிட தெரிந்த, எங்களின் மேல் அக்கறையுள்ள சில காப்டன்கள் உணவு பொருட்களை பார்த்து பார்த்து வாங்குவார்கள்  பஞ்சாபின் திலாவர் சிங்,அசுதோஷ்,எஸ்தீப் சௌத்ரி,இலங்கையின் பெர்னாண்டோ,பங்களாதேசின் பிப்லோப் ஆகியோர் நல்ல உணவு தந்தவர்கள் .

    பதினஞ்சி வருஷம் பத்தொன்பது கப்பல் ல வேல பாத்ததுல மங்களூர் செட்டி,கோழிகோடு பிரபீஷ் கிருஷ்ணா,கோவா வின் மெல்வின்,லிவிஸ்லி டயாஸ்,பரேரா,காசர்கோடு பக்கியார ராஜன் சென்னை பாபு ஹுசைன் ஆகயோரின் சுவை மட்டுமே நாவில் எஞ்சியுள்ளது.
2015  புத்தாண்டு கொண்டாட்ட  உணவு  வகைகள்

கை காட்டுபவர்  செப் காசர்கோடு பக்கியார  ராஜன்

  தனிமை நாட்கள் ஆரம்பித்த முதல் பதினைந்து நாட்கள் வீட்டிலிருந்தேன் .சுனிதா தேவையான பொருட்கள் கொஞ்சமாக வாங்கி வைத்திருந்தாள்.உறுதியாக எதற்கும் வெளியே செல்ல கூடாது என என்னிடம் ஆணையிட்டாள்.அதிகாலை ஸுபுஹ் தொழுகைக்கு முன் எழுவது குடும்பமாய் தொழுகையை நிறைவேற்றுவது .பின்னர் மொட்டை மாடியில் இளைய மகன் சல்மானுடன் கதிரெழுவதை பார்த்துக்கொண்டே யோகா பயிற்சிகள் செய்வது.
     
பின்னர் நீராடி காலை உணவு.சிறுது ஓய்வுக்கு பின் வீட்டில் எதாவது ஒரு பகுதியை மகன்களுடன் சுத்தம் செய்வது ,துணிகளை துவைப்பது சமையல் பாத்திரங்களை கழுவுவது .மாலையில் மொட்டை மாடியில் சல்மானுடன் சின்ன விளையாட்டு . மக்ரிப்  தொழுகைக்குப்பின் குரான் ஓதுதல் இஷா தொழுகை,இரவுணவு பத்துமணிக்கு ஆழ் துயில்  என நாட்கள் கழிந்தன .
  
ஏழாவது
நாள் இரவு சல்மான் சப்பாத்தியும் முட்டை கறியும் வேண்டுமென்றான் . “இன்னும் மூணு உள்ளி தான் இருக்கு இன்னக்கி   முட்டை கறி செய்தா உள்ளி தீந்துரும் ,நாளைக்கி வாப்பா வெளிய போவனும் ,அதுனால ரெண்டு நாளு கழிச்சி செய்து தாரேன்” என்றாள்.பத்தாவது நாள் தான் வெங்காயம் உட்பட அத்தியாவசிய பொருட்கள் தீர்ந்தால் வெளியே சென்று பொருட்கள் வாங்கி வந்தேன் .
   திருவனந்தபுரத்திலிருந்து
சென்றது முதல் தினமும் அழைப்புகள் வந்துகொண்டே இருந்தது .உங்கள் எண்ணையை உபயோகித்த பின் வேறு எண்ணையில் சமைக்க முடியவில்லை எப்போது கடை திறப்பீர்கள் என அழைத்ததில் அனேகம்பேர் பெண்கள்.

எனது எண்ணை கலப்படமில்லாத,சுத்தமானது அதனால் ஏப்ரில் பதினொன்றாம் தியதி இங்கு வந்து கடையை திறந்தேன் .எண்ணை ஆலையில் நானே எண்ணையை தயாரித்து வினியோகிக்க துவங்கினேன்.ரசயானம் கலவாத தேங்காய் கொப்பரைகள் வீணாவதிலிருந்து தப்பித்தது .
வேலை சரியாக இருக்கிறது .தொலைக்காட்சி,பத்திரிகை சமூக ஊடகங்களிருந்து முழுமையாக விலகி இருப்பதால் .நாட்டில் நடப்பவை ஏதும் தெரியவில்லை .நேற்று அமெரிக்காவிலிருந்து தீபன் அழைத்திருந்தார் .இந்தியாவிலிருந்து உறவினர்களும் நண்பர்களும்  அவரை போனில் அழைத்து அங்கே நிலைமை மோசமாக உள்ளது என சொல்கிறார்களாம் .தம்பி தீபனுக்கு அமெரிக்க செய்திகள் ஏதும் தெரியவில்லை அவரும் தொலைக்காட்சி பார்ப்பதில்லை . “தீபன் அங்கே எத்தனை பேர் இறந்துள்ளனர்” என கேட்டேன். “தெரியாது” என்றார்.  

   கணவனும் மனைவியும் வீட்டிலிருந்து வேலைசெய்கிறார்கள்.ஆறு ,மூன்று வயதில் இரு பெண்குழைந்தைகள் .மகிழ்ச்சியாக இருக்கும் அவரை இங்கிருந்து போனில் அழைத்து பீதியை கிளப்ப முயற்சிகிறார்கள் பயத்தில் இருப்பவர்கள் .
        ஈராக் போர்முனையிலும் மிக குறுகிய வட்ட்திலேதான் வாழ்ந்தேன் .ராணுவ முகாமை விட்டு வெளியே செல்ல இயலாது .முகாமில் உள்ள முகங்களை தவிர வேறு யாரையும் பார்க்கவும் முடியாது .   

    இன்று முதல் இனி வரும் எல்லா ஞாயிற்றுக்கிழமையும். கேரளாவில் முழு ஊரடங்கு அறிவித்துள்ளார் முதல்வர் பிரனாயி விஜயன் .இன்று கடையும் ,எண்ணை ஆலையும் திறக்கவில்லை       

.இங்கு வந்து ஒரு மாதத்தில் ஓய்வே கிடைக்கவில்லை .அதிகாலை நோன்பு வைக்க மூன்று மணிக்கு எழுந்து சோறு வடித்து,கடுகு,கறிவேப்பிலை,வத்தல் போட்டு  வெங்காயம் வதக்கி,இஞ்சி,பூண்டு இடித்து சேர்த்து,இரவே ஊற வைத்த கொண்டை கடலையுடன் மல்லி,மிளகு,கரம் மசாலா, உப்பு கலந்து கொதிக்க வைத்து மல்லி இலை தூவிய கடலைகறியுடன்,வெள்ளரிக்காய் சின்ன வெங்காயம் ,தக்காளியுடன் எலுமிச்சை சாறும், உப்பு சேர்த்து சலாடுடன் சாப்பிட்டு நோன்பு வைத்தேன் .

   அதிகாலை   தொழுகைக்குப்பின் ஆறரை மணிக்கு துயில சென்றுவிட்டு எட்டரைக்கு எழுந்து ஒன்பது மணிக்கு எழுத துவங்கினேன் .ஆயிரத்தி நூறு வார்த்தைகள் எழுத நான்கு மணி நேரமாகியுள்ளது .
இன்று அதிகம் நகர இயலாது முழுநாளும்  எழுபத்திரண்டு சதுரஅடியுள்ள   சிறிய அறைதான் ,அடுமனையும் ,குளியலறையும் தனியாக உள்ளது .   

 2011 ஆம் ஆண்டு நியூயார்க்–மும்பை  பதினான்கு மணிநேர விமான பயணத்தில் குறிப்பிட நேரத்தில் தரையிரங்குவோம் என தெரிந்த பின்பும் என்னருகில் இருந்தவர் “கப் ஆயாக ,கப் ஹம் உத்ரேகா” என கேட்டுகொண்டே இருந்தார். நான் ஊரில் இருக்கும்போது எப்போதும் சுற்றி அலைபவன் இப்போது இயல்பாகவே சிறிய அறைகளில் இருக்க மனம் பழகிகொண்டது .
ஷாகுல் ஹமீது ,
10 May 2020