Friday 29 March 2019

குடை

                                   குடை
“இந்த கொடய செரியாக்ககூடாதா”?என சுனிதா சொல்லி கொஞ்ச நாளாச்சி .அத டி வி ஸ்டாண்டுல வாங்கி வச்சேன் .அத பாக்கத்துல எல்லாம் சுனிதா சொன்னது ஓறும வரும் .நேற்று மாலை அஸர் தொழுகைக்காக செல்லும் முன் கையில் கொடைய எடுத்த்துகொண்டேன் .மணிமேடையில் தான் குடை தைப்பவர் இருக்கிறார் ,அதனால் அஸர் தொழுகைக்கு கலாச்சாரா பள்ளிக்கு போயிட்டு குடையை தைக்க கொடுக்கலாம் என மாலை மூன்றே முக்காலுக்கு வீட்டிலிருந்து புறப்பட்டேன் .
 
தொழுகை முடிந்ததும் பொடி நடையாய் மணிமேடை தபால் அலுவலகம் எதிரில் உள்ள குடை தைப்பவரை தேடி சென்றேன்.பழைய குடைகள் சில கடையின் முன் தொங்கி கொண்டிருந்தது ,தைக்கும் ஊசி ,சில கருவிகள் அந்த கடையின் முன்னால் இருந்தது ஆளை காணவில்லை.பக்கத்திலிருந்த ஒரு கடையில் உறவினர் ஒருவர் இருக்கிறார் அவரை பார்த்து “கொடய தக்க வந்தேன் ஆளை காணல” என்றேன்.  “அவனுட்ட கொள்ளை இங்க பக்கத்துல வேற கட இருக்கு அங்க போ”என்றார். “மக்கா இது போப்பி கொட இல்லா” “ஆமா உங்க கடையில வாங்குனதுதான்” என்றேன். 
 
   குடையின் பயன்கள் நிறையவே இருக்கு,சுமாரான மழைக்கு நனையாமல் இருக்க,வெயிலின் தாக்கத்திலிருந்து தப்ப.சிறு வியாபாரிகள் குடையை தலைகீழாக பிடித்து பொருட்களை விற்பனைக்கு  வைத்திருப்பார்கள் .மழை பெய்து முடிந்தபிறகு நம்மூர் சாலைகளில் நடக்கும்போது தேங்கி இருக்கும் அழுக்கு தண்ணீர் நமது உடைகளில் படாமல் இருக்க,வயதானவர்களுக்கு வாக்கிங் ஸ்டிக் ஆக ....................

  அருகிலிருந்த அந்த கடையிலும் ஆள் இல்லை.பஸ்ஸ்டாண்ட் கிட்ட ஒரு ஆளிருக்கிறது என்றார்கள்.அங்கிருந்து பொடி நடையாக பாட்டா காலனிகடை அருகில் ரோட்டை தாண்டி மறுப்பக்கம் சென்றேன் .வேப்பமூடு அருகில் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவாளி ஒருவர் போக்குவரத்தை மாற்றிஇருந்ததால் இப்போது அங்கு போக்குவரத்து போலீசும் இல்லை, வாகனங்களும் தடையின்றி சென்றுகொண்டிருக்கிறது .
 
பழமையான சுந்தர் ரேடியோஸ்,முத்து லெதர் வொர்க்ஸ்,சிங்கார் ஆடையகம் தாண்டி சென்றபோது நாகர்கோயிலின் பழைய அடையாளங்கள் மாறியிருந்தன .அங்கே இருந்த ஒரு புத்தக கடையும்,ஜவுளிக்கடைகள் சிலதும் காணவில்லை .

  ஆவின் பாலகம் அருகிலிருந்த செருப்பு தைப்பவரிடம் “கொட தைப்பியளா” என  கேட்டேன். “பஸ் ஸ்டாண்டுகுள்ள படிஇறங்கி போங்கோ ஒரு ஆளு இருக்காரு” என்றார்.படியிறங்கி போனேன். படிக்கட்டில் கண்தெரியாத ஒருவர் ஒலிபெருக்கியை கையில் வைத்து போவோமா ஊர் கோலம் என்ற சின்னத்தம்பி திரைப்பட பாடலை பாடிகொண்டிருந்தார்.படியில் இறங்கும் பெண்கள் அவரது உண்டியலில் சில்லறைகளை போட்டுசென்றனர். சுரங்க பாதையின் வாயிலை ஒட்டி சுவரோரமாக அமர்ந்திருந்தார் குடை தைப்பவர்.மீசை இல்ல்லாமல் நல்ல கரிய நிறத்தில் ஆப்பிள் வடிவ  தொப்பையுடன் . “கொட தக்கணும்” என்றேன்.வேகமாக வாங்கிகொண்டார் குடையை.
 
அவர் அமர்ந்திருந்த சுவரில் மும்மத பக்தி படங்களை வைத்து புதிதாக கொஞ்சம் பிச்சி பூவும் அதில் மாட்டியிருந்தார்.சுரங்க பாதை வாயிலில் பூட்டு ஒன்று தொங்கி கொண்டிருந்ததை பார்த்து “ராத்திரி பூட்டி விடுவார்களா?”என கேட்டேன் . “ஆமாண்ணே ஒம்பது மணிக்கு பூட்டிட்டு காலைல ஆறு மணிக்குத்தான் திறக்கும். இல்லேன்னா இங்க ராத்திரி எல்லா கும்மாளமும் நடக்கும்” என்றார்  அருகிலிருந்த சீப்பு வியாபாரி ..குடைக்காரரிடம் “மழ வந்தா இங்குன இருக்க முடியாதே”என கேட்டேன் ஆமா மேலே இந்த கட்டடத்துல உள்ள எல்லா தண்ணியும் இங்க தான் வரும்”என்றார்.
 பள்ளி கல்லூரி முடிந்து மாணாக்கர்கள் வந்துகொண்டே இருந்தனர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவரிடம் பேசியது நினைவுக்கு வந்தது. இங்கே  மாணவர்கள் சாலையை கடக்கும்போது நிறைய விபத்துகள் நடக்கிறது ஆகவே பள்ளி நேரங்களில் இங்கு ஒரு காவலரை நிறுத்தி மாணவர்கள் சிரமமின்றி சாலையை கடக்க உதவவேண்டுமேன்றேன்.சுரங்க பாதை அமைப்பதுதான் நிரந்தர தீர்வு உரியவர்களிடம் பேசி அதற்காக முயற்சிசெய்யுங்கள் என்றார் .அது இப்போது சாத்தியமாகி உள்ளது .
 
  குடைக்காரர் குடையை தைக்கதொடங்கியதும் பதிமூன்று வயதிருக்கும் பள்ளி மாணவி ஒருத்தி காலிலிருந்த செருப்பை கழட்டி “இத தக்கனும்” என்றாள். “நாற்பது ரூபாய் ஆகும்” என்றார். “முப்பது தான் இருக்கு பத்து  நாளை தருகிறேன்”என்றாள் அந்த சிறுமி .சரி என ஒத்துக்கொண்டு அந்த செருப்பை தைக்க ஆரம்பித்தார் .என்னிடம் “ஸார் கொஞ்சம் நின்னுகிடுங்க  அந்த புள்ள பஸ்சுல போனும்லா” என்றார் .நான் ஆச்சரியமாய் அந்த சிறுமியை பார்த்தேன் கையில் போதிய பணமில்லாத போதும் கடன் சொல்லி என தைத்துகேட்டது .தினமும் இதே சுரங்க பாதை வழியாக,இதே பேருந்து நிலையத்திற்குள் தினமும் வருபவள் .செருப்புதைப்பவரையும் தினமும் பார்த்திருப்பாள் அவள்.விளையும் பயிர் முளையிலேயே தெரிந்தது .
  நண்பன் சுரேஷ் பிரதீப் இங்கிருந்தால் இதையே ஒரு சிறுகைதையாக எழுதியிருப்பான் .
 
   ஆனால் நான் குடை பத்தி சொல்ல வருவது வேறொரு முக்கியாமான விஷயம் .எனது உறவுக்கார பெண்ணொருத்தி என்வயது தான் அவளுக்கும் .கணவருடன் ஹீரோ ஹோண்டாவில் பின்னிருக்கையில் அமர்ந்துபோகும் போது தக்கலை அருகே வந்தபோது லேசாக மழை பெய்யது .அவள் தன் கைப்பையிலிருந்த குடையை வேகமாக எடுத்து கணவனுக்கும் சேர்த்து  பிடித்தபடி பயணத்தை தொடர்ந்துள்ளனர் .
 
  குடை பிடித்தபடி இருசக்கரம் ஓட்டுவது பெரும் ஆபத்தானது .ஆம் அடித்த காற்று குடையுடன் அவளையும் கீழே தள்ளியது.முன்பும் இதுபோல் நடந்த சம்பவங்கள் பத்திரிகைகளில் நிறையவே வந்துள்ளது.மழை பெய்யும்போது எப்போதும் ஒருசிலர் குடை பிடித்தபடி செல்லத்தான் செய்கிறார்கள் கடந்த சில நாட்களுக்கு முன்  நாகர்கோயில் சி எஸ் ஐ பள்ளி அருகே பைக்கில் குடையுடன் சென்ற ஒருவரை நிறுத்தி இப்படி செல்லாதீர்கள் என்றேன் .உறவுக்கார பெண்ணின் அக்காவின் வீட்டிற்கு பின்பு ஒருமுறை சென்றபோது.அவளது மூன்று குழைந்தைகள் அரபி வகுப்பு முடிந்து மதராசாவிலிருந்து வந்தனர். தாயில்லாத குழந்தைகளை அக்காவின் வீட்டில் இருப்பதாக அறிந்தேன் .
 
    அப்போதுதான் நினைத்தேன் இதை கண்டிப்பாக எழுத வேண்டும் என .இருசக்கரத்தில் செல்லும்போது கண்டிப்பாக குடை வேண்டாம் .
       
   குடை தைப்பவர் சிறுமியின் செருப்பை தைத்ததும் முப்பது ரூபாயை கொடுத்துவிட்டு சென்றாள்.அவள் கையில் இன்னுமொரு பத்து ரூபாய் இருந்தது பஸ் டிக்கட்டுக்கு இருக்குமோ என   நினைத்துக்கொண்டேன்.குடைகாரரிடம் “வீடு எங்க”என கேட்டேன் தின்னவேலி என்றார் .டெய்லி போயிட்டு வந்தா கட்டுபடியாகதே 
“கல்யாணம் பண்ணினது இங்க ஒழுகினசேரில டிரைனுக்கு பாஸ் வச்சிருக்கேன் ட்றேன்ல தான் போறது”என்றார்  . குடைகாரர் எனது குடையை மூன்று இடத்தில் தைத்தார் ,வேறொரு பழைய குடையிலிருந்து ஒரு கம்பியை எடுத்து எனது குடையின் கம்பியை அகற்றிவிட்டு அதில் வைத்து தைத்தார்.அறுபது ரூபாய் என்றார் .பணத்தை கொடுத்தேன். “ஸார் பேக்,செருப்பு எது இருந்தாலும் கொண்டு வாங்கோ என்றார் .
 

    மீண்டும் நடந்து மனிமேடையில் நிறுத்தியிருந்த எனது பைக்கில் குடையை வைத்துவிட்டு கிளம்பியபோது லேசாக மழை பெய்யதொடங்கியது.

ஷாகுல் ஹமீது.

Sunday 10 March 2019

உறவுகளும் ,நட்புகளும்

உறவுகளும் ,நட்புகளும்

 “சொந்தகாராங்க நிறைய இருக்காங்க ஆனா நான் அங்க போறதில்ல,ஹோட்டல்ல ரூம் போட்டுருக்கேன்”
             இப்படி சிலர் சொல்வதை கேட்டிருப்போம் .

நான் எந்த ஊருக்கும் சென்றாலும் அந்த ஊரில் இருக்கும் உறவினர் அல்லது நண்பர்களை முன்பே தொடர்பு கொள்வேன். அப்போதே தெரியும் அவர்களை நம்பி தேடி செல்லலாமா என .
   இப்போதெல்லாம் நான் சென்னைக்கு சென்றால் தாம்பரத்திலிருக்கும் நண்பர் அசோக் வீட்டில் தங்கியே ஆக வேண்டிய கட்டாயம் .இருபது ஆண்டு நட்பு .ஒருமுறை இலவச சீட்டு ஒன்று கிடைத்தது சென்னையின் மூன்று நட்சத்திர விடுதியில் இரு இரவுகள் தங்குவதற்கு .ஆனாலும் அசோக்கின் வீட்டிற்கே சென்றேன் .அப்போது உணர்ந்தேன் நண்பனின் வீட்டில் கிடைத்த ,அன்பும் ,உபசரிப்பும்  நட்சதிரவிடுதியில் கண்டிப்பாக கிடைக்காது என .இப்போது மூன்றாண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டது சென்னை பெருநகருக்கு சென்று .


அது போல் விமான நிலையத்திலும்,ரயில் நிலையத்திலும் எனக்காக நேரம் ஒதுக்கி நான் காத்திருக்கும் கொஞ்ச நேரத்திலும் கூட என்னை சந்தித்து செல்லும் நட்புகளும் உறவுகளும் பல.
 
  பத்தாண்டுகளுக்கு முன் மும்பை- நாகேர்கோயில் பயணத்தில்  சேலம் அருகே செல்லும்போது நண்பன் சேலம் பாலாவை அழைத்தேன்.பாய் பார்த்து வருடங்கள் ஆகிவிட்டது ரயில் வரும் நேரத்தை சொல்லுங்கள் வருகிறேன் என்றார் .சேலம் சந்திப்பில் வண்டி நின்ற பத்து நிமிடத்திற்கு என்னை சந்தித்தார் .இரவுணவுக்கு கையில் தோசையும் கொண்டு வந்திருந்தார் .

   2010 ஆம் சிங்கப்பூரில் கப்பலிலிருந்து இறங்கினேன். இரவு நான் தங்கியிருந்த விடுதிக்கு வந்திருந்தார் சிங்கப்பூரில் வசிக்கும் நண்பர் மணிவண்ணன். லிட்டில் இந்தியாவில் உள்ள முஸ்தபாவில் பொருட்களை வாங்கிவிட்டு அவருடைய வீட்டிற்கு செல்லும்போது  அதிகாலை இரண்டு மணி .நண்பரின் மனைவி அப்போதும் எழுந்து காபி போட்டுதந்தார்கள். நான் கேட்டேன் ஒரு வீட்டுக்கு வாற நேரமா இது என .நண்பனின் மனைவி எப்போதும் நீங்கள் வருவதில்லை நாம் சந்தித்தே இரண்டாண்டுகள் ஆகிவிட்டது .உங்களை சந்தித்ததே மகிழ்ச்சிதான்  என .

   ஒரு முறை மனைவி குழந்தைகளுடன் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தை தவறவிட்டேன் .அங்கிருந்து நண்பர் மணியை அழைத்தேன் .அவர் சிங்கை விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார் எங்களை அழைத்து செல்வதற்காக .நான் விமானத்தை தவற விட்டதை சொன்னவுடன் .ஷாகுல் கவலை வேண்டாம் அடுத்த விமானம் அல்லது பேருந்து ,ரயிலில் வந்துவிடுங்கள் என்றார் .

  இரவு பனிரெண்டுமணி விமானத்தை பிடித்து சிங்கையில் இறங்கும்போது மணி நள்ளிரவு ஒன்றை தாண்டியிருந்தது அப்போதும் நண்பர் மணி விமானநிலையத்தில் எங்களுக்காக காத்துகொண்டிருந்தார் .வீடு சென்று சேரும்போது மணி இரண்டை தாண்டியிருந்தது.மூன்று நாட்கள் அவர் வீட்டில் தங்கி ,உண்டு ,உறங்கி சிங்கப்பூரை சுற்றிப்பார்த்தோம்.

   மலேசியாவில் உறவினர் சையதலி அண்ணின் வீட்டில் எட்டு நாட்கள் தங்கியிருந்தோம் .அவர்களின் அன்பு மறக்க இயலாதது .
 
   மாகியில் என்னுடன் கப்பலில் பணிபுரிந்த நண்பரின் மனைவியும் ,மகளும் அழைத்திருந்தார்கள். நண்பர் அப்போது கப்பலில் இருந்தார் .நான் குடும்பத்துடன் மாகி ரயில் நிலையம் சென்று சேரும்போது இருட்டதொடங்கியிருந்தது,பெருமழை பெய்துகொண்டிருந்தது.நண்பரின் மகள் எங்களை அழைத்துச்செல்ல ரயில் நிலையம் வந்திருந்தார் அவர் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்திருந்தவர் .தாய்ப்பால் அருந்தும் இருமாத சிறு மகவை தன் அன்னையிடம்  ஒப்படைத்துவிட்டு வந்திருந்தார் அந்த பெருமழையில் .

    இரண்டாண்டுகளுக்கு முன் பாண்டி செல்லுமுன் தோழி ஒருவருக்கு அழைத்தேன் .கண்டிப்பாக வீட்டிற்குதான் வரவேண்டுமென்றார் .நான் அங்கு வந்து சேரும்போது அதிகாலை ஐந்து மணி அல்லது அதற்கு முன்பாக கூட இருக்கலாம் என்றேன் .இரவு ஒருமணி என்றாலும் பத்து நிமிடத்திற்கு முன் சொல்லுங்கள் நீங்கள் இறங்குமிடத்தில் நாங்கள் இருப்போம் என்றாள்.அங்கு செல்லும்போது காலை ஆறு மணி தோழி தன்னுடைய காரில் வந்திருந்தார் .கணவர் அதிகாலை தான் பணி முடிந்து வீட்டிற்கு வந்து தூங்கி கொண்டிருக்கிறார் .நீ ஓய்வெடுத்து விட்டு குளித்து தயாராகு என்றார். தூங்கி எழுந்து வந்த  நண்பர் அவரது பல்சர் பைக்கை என்னிடம் தந்துவிட்டு இங்கிருக்கும் இரு நாட்களும் இதை உபயோகித்து கொள்ளுங்கள் என்றார் .

 நண்பர்கள் ,உறவினர்களின் வீட்டுக்கு செல்லும்போதும் எனக்கு தயக்கம் ஏதும் இருக்காது .எங்காவது சென்று அங்கிருக்கும் நண்பர் அல்லது உறவினரை சந்திக்காமல் வந்துவிட்டால் .என்னை போனில் அழைக்கும்போது “என்னா நீ இப்போ நம்மள மறந்துட்டியே எங்க வீட்டுக்கு வராம போயிட்டியே” என கேட்பார்கள் .

   திருச்சி எனது இரண்டாவது ஊர் எனலாம். 1997 இல் பெல்லில் தொழில் பழகுனர் பயிற்சியில் ஓராண்டு அங்கிருந்தேன் .அப்போது உதவி செய்த நண்பர் குடும்பத்துடன் இப்போதும் தொடர்பிலிருக்கிறேன்.
 
   இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ஜெகனின் நட்பும்,பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த நண்பர் ஸாமும் இப்போது என குடும்பத்தில் ஒருவராகவே மாறிவிட்டனர் .

 பால்ய நண்பர்கள் ராஜாவும் ,வேலுப்பிள்ளையையும் அமெரிக்காவில் அவர்கள் வசிக்கும் நகருக்கு அருகில் நான் சென்றபோது என்னை தேடி வந்து சந்தித்தனர் .பல ஆண்டுகளுக்குப்பின் நாங்கள் அப்போது சந்தித்தோம் மகிழ்ச்சியான தருணம் அது .


   நண்பர் கோலப்பன் தற்போது தொழில் காரணமாக சென்னையில் வசிக்கிறார்.நாகர்கோயில் வரும்போதெல்லாம் நான் ஊரில் இருந்தால் என்னை வீட்டிற்கு வந்து சந்திக்க தவறுவதில்லை .

     தெரியாத ஊரில் நண்பர் அல்லது உறவினர்ஒருவர் இருந்தால் நாமும் அவ்வூரில் ஊள்ளூர்வாசியாக ஆகிவிடுவோம்.நாம் சென்றிருக்கும் வேலை விசயமாக ஒரு இடத்திற்கு செல்லுமிடத்தில் அவர்களுக்கு தெரிந்தவர் ஒருவர்அங்கு இருப்பார்.அதனால் எளிதாக சில பணிகள் முடிந்துள்ளன.             

   நட்பையும்,உறவுகளையும் பேணுவதால் அவர்களின் நெருக்கமான அன்பு மட்டுமல்ல உதவிகளையும் தான் பெற்றுகொள்கிறோம் .
தொடரும் .........

புயல் நடுவே பயணம்


                        புயல் நடுவே பயணம் .
கடந்த பத்தொன்பதாம் தியதி நெதர்லாந்தின் தெனுசன் துறைமுகத்திலிருந்து அமெரிக்காவின் பிலேடெல்பியா அருகிலிருக்கும் மார்க்ஸ் ஹூக்க்கு கப்பல் புறப்பட்டது .சரக்குகளை இறக்கிவிட்டதால் இப்போது கப்பல் காலியாக இருக்கிறது .பத்து நாள் பயணம் மார்கஸ் ஹூக் செல்ல.
   
புறப்பட்ட அன்றே இரவு கப்பல் ஆடத்தொடங்கியது அருகில் எங்கோ புயல் இருப்பதாக நினைத்தோம். வழக்கமாக  கடல் சீற்றம் இருக்கும்போது அதிக பட்சம் நான்கு நாட்கள் இருக்கும். எப்போது முதல் கடல் கொந்தளிப்பாக இருக்கும் எப்போது கடல் சாந்தமாகும் என்பதை வானிலை அறிக்கைகள் எங்களுக்கு சொல்லிவிடும் .

  இம்முறை ஒன்றன் பின் ஒன்றாக புயல்கள் வந்துகொண்டே இருந்தது .புயலின் திசையை கணித்து கப்பலின் பாதையையும் மாற்றிகொண்டே இருந்தார்கள்.ரோல்லிங்குடன் பிச்சிங்கும் சேர்ந்ததால் கப்பல் சுழற்றி, சுழற்றி அங்குமிங்குமாக அலைகழிக்கப்பட்டதால் கப்பல் ஊழியர் அனைவரும் தூக்கம் இழந்தோம் அதிகபட்சம் ஒன்பது மீட்டருக்கு மேல் அலைகளும் ,பதினைந்து டிகிரிவரை பக்கங்களில் சாய்ந்து கொண்டும் இருந்தது .

   பெரும் அலைகளில் கப்பலின் முன் பகுதி சாயும்போது பின்பகுதியின் ப்ரோப்பல்லர்  தண்ணீருக்கு மேலே வந்ததால் அதிக வேகம் காரணாமாக (engine trip due to over speed) கப்பல் வழியில் எட்டுமுறை நின்று போனது .இப்படி கடல் சீற்றமாக இருக்கையில் இஞ்சின் நின்றுபோவது பேராபத்தை விளைவிக்கும் .

   எட்டு நாட்களுக்கு பிறகு என்ஜினில் ஒரு கோளாறு .கப்பலை நிறுத்திதான் சரி செய்யவேண்டும். கடல் கொஞ்சம் சாந்தமாகட்டும் என காத்திருந்தோம் ஒருநாள் முழுவதும் .அவள் சாந்தமாகவேயில்லை. கப்பலை எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படும் .அனைத்தையும் இறுக்கமாக கட்டியே வையுங்கள் என அறிவிப்பு பலகையில் பெரிய எழுத்துகளால் எழுதியிருந்தனர் .

  மறுநாள் கிடைத்த வாய்ப்பில் கப்பலை நிறுத்தி நாற்பது நிமிடங்களில் கோளாறை சரி செய்து மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம் .கடும் காற்றும் மழையும்,குளிரும் .குளிர் காலங்களில் அட்லாண்டிக் கடல் இப்படித்தானிருக்குமாம்.குடியிருப்பை விட்டு வெளியே செல்லவேயில்லை .சூரியனையும் காணவில்லை. பெரும்பாலும் குடியிருப்பை விட்டு வெளியே செல்லாமல் கப்பலின் உள்ளேயே பணிகள் வழங்கப்பட்டன .மூத்த சகோதரி மத போதகர் கரோலின் அவர்களுக்கு செய்தி அனுப்பினேன் கடுமையான பயணமாக இருக்கிறது என .கடவுள் வழிநடத்துவார் .நான் பிரார்த்திக்கிறேன் என்றார்கள் .

   கப்பலின் அடுமனை பணியாளர்கள் ஒரு கட்டாயத்திற்குட்பட்டவர்கள் .கப்பல் தலைகீழே கவிழ்ந்தாலும் மதியம் பனிரெண்டு மணிக்கு எனக்கு சாப்பாடு தா என ஒருவன் வயிற்றை பிடித்தபடி வருவான் .இந்த கடுமையான சூழலிலும் எல்லாவேளையும் உணவு தந்தார்கள் .கூர்மையான கத்தி,கொதிக்கும் தண்ணீர்,பால் ,தெறிக்கும் எண்ணை, சூடான அடுப்பு  போன்றவற்றை தேர்ந்த சர்கஸ்காரனால் கூட கையாள இயலாது.இதிலும் கைத்தவறி விழும் அதிகப்படியான ஊப்பு ,காரத்திற்கும் அவர்கள் பொறுபேற்க வேண்டும் .மொத்தம் இருபத்தியொரு பேருக்கும் மூன்று வேளை உணவை தவறாமல் தந்தார்கள் .இதில் இரு உக்ரைன் நாட்டை சார்ந்தவர்களுக்கு தனியுணவு. இரவுணவாக.ஒருநாள் மாசால தோசையும் வேறொருநாள்  ஆப்பமும் தந்தார்கள் .

  கடந்த சனியன்று கடல் சாந்தமாயிற்று,ஞாயிறு மாலை கிரிக்கெட் விளையாடினோம் .அன்றிரவே மீண்டும் அடுத்த புயல் என்றார்கள் .அமெரிக்காவை சென்று சேரும் முன் இன்னும் இரண்டு புயல் என்றது வானிலை அறிக்கை .ஒன்றாம் தியதி வந்து சேரவேண்டியது .இன்று அதிகாலை அதாவது ஆறாம் தியதி வந்து சேர்ந்தோம்  மார்க்ஸ் கூக்க்கு.

  எங்களூரில் கடல் தொழிலுக்கு செல்லும் எனது மீனவ நண்பர்கள் கடலை கடலம்மா என்பார்கள் .அவள் எப்போதும் தன் பிள்ளைகளை கைவிடுவதில்லை .
ஷாகுல் ஹமீது ,
05 march 2019 .

Monday 4 March 2019

கப்பலுக்கு புறப்பட்டேன்

 கப்பலுக்கு புறப்பட்டேன்

இம்முறை ஜனவரி பத்தாம் தியதிக்குமேல் கப்பலுக்கு செல்ல தயாராக இருந்தேன்.அழைப்பு வரவே இல்லை. யூயோ எனும் கப்பலில் ஜனுவரி இருபத்தைந்தாம் தியதி அல்லது  பிப்ரவரி இரண்டாம் தியதி செல்லவேண்டியிருக்கும் என மும்பை அலுவலகத்தில் உள்ள எனது மேலாளர் அனிதா தாக்கூர் சொல்லியிருந்தாள்.
 
 இருபத்திஎட்டாம் தியதி கொச்சி அலுவலக்கதை தொடர்பு கொண்டபோது தவகல் எதுவும் இல்லை .மூன்றாம் இனிஜினியர் ஒருவர் இரண்டாம் தியதி விமான சீட்டு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக சொன்னார்.

   முப்பத்திஒன்றாம் தியதி காலை பத்து மணிக்கு முன் கொச்சியிலிருந்து தாமஸ் அழைத்தார் .நான்காம் தியதி திங்கள்கிழமை அதிகாலை உங்கள் விமானம் என .சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அலுவலகம் விடுமுறையாதலால் வெள்ளிக்கிழமை வந்து விமானச்சீட்டு மற்றும் இதர ஆவணங்கள் பெற்றுச்செல்லுமாறு அழைத்தார். அமெரிக்காவின் மார்கஸ் ஹூக் எனுமிடத்திலிருந்து கப்பலில் ஏற வேண்டும் .

அப்போது ஷாலிமின் மிதிவண்டியை சரி செய்வதற்காக கடையில் கொடுத்துவிட்டு முடி வெட்டுவதற்காக பெண்கள் கல்லூரி சாலையிலுள்ள விஜயதா மண்டபத்தை ஒட்டிய சரவணனின் கடைக்கு சென்றுகொண்டிருந்தேன் .வீட்டிற்கு வந்த பின் வடசேரி சென்று  வத்தல் மிளகாய்,கொத்தமல்லி,பெருஞ்சீரகம்,மஞ்சள் வாங்கி வந்து வீட்டின் மொட்டை மாடியில் காய வைத்தேன் .நல்ல காற்று அடித்து கொண்டிருந்தது .வழக்கமாக எப்போதும் வத்தல் மிளாகாய் மொட்டை மாடி முழுவதும் சிதறி கிடக்கும் .நல்ல காற்று அடிக்கும் நாளில் என்னவாகுமோ .காற்றில் பறக்காதவாறு வெயில் படும்படியாக வைத்துவிட்டு வந்தேன்.

நீராடிவிட்டு  லுகர் தொழுகைக்கு வடசேரி பள்ளிவாசல் சென்று விட்டு ஆசிரியர் ராதாகிருஷ்ணன் ஐயாவை சந்திக்க சென்றேன் .மதிய வேளை உணவுண்ண சொன்னார்.
  இந்த விடுமுறையில் இருமுறை சாப்பிட வருவதாக சொல்லிவிட்டு ஏமாற்றி விட்டதை சொன்னார்.வீட்டில் காலையிலேயே எனக்கான உணவை சுனிதா சமைத்துவிட்டு சென்றுவிடுவாள் .அதை சாப்பிடாமல் வெளியில் எங்காவது சாப்பிட்டால் அவள் திட்டி தீர்த்துவிடுவாள் அது நினைவுக்கு வந்ததும்  வேண்டாமென மறுத்துவிட்டேன் .இரண்டு முட்டையில் கீதா அம்மா ஆம்ப்ளேட் போட்டு தந்தார்கள்.சுமித்  மற்றும் ராதாகிருஷ்ணன் சாருடன் உணவு மேஜையில் அமர்ந்து சாப்பிட்டேன் .
 
     காயவைத்த ,வத்தல்மிளகாய் ,மசாலாக்களை பொடிக்க கொடுத்தேன் .மறுநாள் வெள்ளிக்கிழமை ஆதலால் ஜும்மா தொழுகைக்கு செல்லும் பொருட்டு அதிகாலை நான்கு இருபதுக்கு மங்களூர் செல்லும்  பரசுராம் வண்டியில் கொச்சி செல்ல முடிவுசெய்தேன் .

    அதிகாலை எழுந்து காலை உணவுக்கு கொஞ்சம் சிறு பயறு அவித்து,சூடு பாத்திரத்தில் கொஞ்சம் சுலைமானியும் போட்டு எடுத்துக்கொண்டேன்.காலை வேளைகளில் குளிர்ந்த நீரில் நீராடுவது ஒரு சுகம் .  நான்கு மணிக்கு சுனிதாவை எழுப்பி போய்வருகிறேன் என சொல்லிவிட்டு  இரு சக்கரவாகனத்தை ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு பொதுபெட்டியில் ஏறி படுத்துக்கொண்டேன்.இம்முறை ஆறுமணிக்கு முன்பாகவே வண்டி திருவனந்தபுரம் சென்றுவிட்டது .அருகிலிருந்த நடைமேடையில் கோழிக்கோடு செல்லும் ஜன் சதாப்தி நின்றுகொண்டிருந்தது.
இறங்கி அந்த வண்டியில் ஏறிக்கொண்டேன்.நான் அமர்ந்திருந்த இருக்கையிலேயே ஆள் வாராததால் ஐம்பதுருபாய் கட்டணம் பெற்றுகொண்டு இருக்கையை உறுதிசெய்து பயண சீட்டில் ரசீதுடன் எழுதித்தந்தார் டிக்கெட் பரிசோதகர் .காலையில் சாப்பிட பயறுடன் கருப்பட்டி கலந்து வைத்திருந்தேன் .எவர்சில்வர் பாத்திரம் எனது பையில் கவிழ்ந்து இருந்ததால் இனிப்பு மட்டும் நீராக வெளியேறிவிட்டது .
 
    ஒன்பதுமணிக்கு கொச்சி அலுவலகத்திலிருந்து தாமஸ் அழைத்தார். “எங்கே இருக்கிறாய்” என “நெருங்கிவிட்டேன் இன்னும் அரைமணி நேரத்தில் அங்கிருப்பேன்” என்றேன். “உனது பயண பைகள் உன்னுடன் இருக்கிறதா” என கேட்டார். “இல்லை” என்றேன் . இன்றிரவே உனக்கு விமானம் திருவனந்தபுரத்திலிருந்து விமான சீட்டு பதிவு செய்தால் இரவு ஒருமணிக்குள் உன்னால் செல்ல முடியுமா என கேட்டார்.
 
    பத்துமணிக்குள் அலுவலகம் சென்றுவிட்டேன் .விரைவாக அனைத்து ஆவண பணிகளையும்  முடித்து தந்தார்கள். விமான சீட்டு மட்டும் மின்னஞ்சலில் அனுப்புகிறோம் என்றார் தாமஸ் .

     அலுவலக உதவியாளர் சாஜு எல்லாம் பெட்டந்து மாறியெல்லோ வேகம் விடு என்ற பணி எல்லாம் கழிஞ்சு என கைகுலுக்கி அனுப்பி வைத்தார் .நண்பன் பீட்டரை அழைத்திருந்தேன் .ஐந்து நிமிடத்தில் வந்து சேர்ந்தார் .அவரது ஹோண்டா ஆக்ட்டிவாவில் முதலில் ஜங்சன் ரயில் நிலையம் சென்றேன் இரண்டு மணிக்கு மேல்தான் ரயில் என்றார்கள்.கொச்சி மெட்ரோ ரயில் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது .அடுத்தமுறை வரும்போது இங்கிருந்தே மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய முடியும் என நினைத்துகொண்டேன் .
 
     அங்கிருந்து  கேஎஸ்ஆர்டிசி பேருந்து நிலையம் சென்றேன் குளிரூட்டி வசதியுடன் பேருந்து ஒன்று திருவனந்தபுரதிற்கு புறப்பட தாயராக இருந்தது .எப்போது அங்கு போய் சேருமென ஓட்டுனரிடம் கேட்டேன் .மாலை ஐந்தரைக்கு மேலாகும் என்றார் .அதில் செல்ல விரும்பாமல் .மீண்டும் டவுண் ரயில் நிலையம் வரும்போது மணி பதினொன்றரை தாண்டி விட்டது .பனிரெண்டரைக்கு திருவனந்தபுரம் செல்லும் ரயில் இருந்தது.அப்போது தான் நான் காலையில் புறப்பட்ட பரசுராம் வண்டி எர்னாகுளம் வந்து சேர்ந்தது.பீட்டர் விடை பெற்று சென்றான்.நாகர்கோவில் வரை பயணசீட்டு(நூறு ருபாய்) எடுத்துவிட்டு மீன்கறியும் சோறும் பார்சல் வாங்கி கொண்டேன் .

        ரயில் கொஞ்சம் தாமதமாக பனிரெண்டு ஐம்பதுக்கு வந்தது அதற்குள்  எனது விமான சீட்டு வந்திருந்தது  கத்தார் ஏர்வேஸ் இன் தளத்தில் சென்று எனது இருக்கைகளை உறுதி செய்துகொண்டேன் .அதிகாலை மூன்று நாற்பத்தியைந்துக்கு விமானம் .ஒன்றரைக்குள் போய் சேர்ந்தால் போதும். ரயிலில் அருகில் இருந்த நடுவயது பெண் இயல்பாக தன்னை அறிமுகம் செய்துகொண்டு எங்கு செல்கீறீர்கள்,என்ன பணி என சிறிது நேரம்  உரையாடிவிட்டு   யூ டீபில் படம் பார்க்க ஆரம்பித்தாள் நான் புனத்தில் குஞ்சப்துல்லாவின் மீஸான் கற்களில் மூழ்கினேன். அருகிலிருந்த மற்ற பயணிகள் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தனர். நண்பர் சாமுக்கும்,சுனிதாவிற்கும் காலையிலிருந்து தகவல்களை சொல்லிகொண்டிருந்தேன் .

    ஆறுமணிக்கு திருவனந்தபுரம்,அங்கிருந்து அடுத்த பாசஞ்சர் ரயில் ஆறு இருபதுக்கு கிளம்பியது .எட்டேகாலுக்கு நாகர்கோவில் எனது சுசுகியை எடுத்துகொண்டு விரைந்தேன் .வழியில் ஆனந்தா ஸ்டோர்ஸில் தேவையான சில பொருட்களை வாங்கிகொண்டு. ராதாகிருஷ்ணன் சாரை போனில் அழைத்து வாழ்த்து பெற்று  போய்வருகிறேன் என்றேன் .
   
எனது உம்மா சனி, ஞாயிறு வீட்டிற்கு வருகிறேன் ,சனி காலை வந்து அழைத்து செல் என சொல்லியிருந்தாள்.நான் இன்றே புறப்படுகிறேன் என்றதும் உம்மாவும் ,சுனிதாவின் உம்மா,வாப்பாவும் வீட்டிற்கு வந்து விட்டார்கள் .
 
      ஒன்பது மணிக்கு வீட்டிற்கு வந்து பயண பைகளில் பொருட்களை அடுக்கிவிட்டு நீராடி,இஷா தொழுதுவிட்டு இரவுணவு சாப்பிட்டேன்.இம்முறை பனங்கற்கண்டு,காயதிருமேனி எண்ணெய்,கப்பலில் போடும் செருப்பு என பல பொருட்கள் வாங்க முடியாமல் ஆயிற்று .நண்பர் ஸாம் வீட்டிற்கு வந்தார். முன்பே அழைத்திருந்தார் காரை எடுக்க முடியவில்லை எப்படி செல்வது என .பைக்கிலேயே போய்விடலாம் என்றேன் .பத்தரைக்கு வீட்டிலிருந்து புறப்பட்டோம் .
     
இப்போதெல்லாம் நான் கப்பலுக்கு போகும்போது எந்த நேரமாக இருந்தாலும் வழியனுப்ப அவர் தான் வருகிறார் .வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து கேரள அரசின் பேருந்து புறப்படுமுன் எனது விமான பயணம்,கப்பல் பணி எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டி கண்களை மூடி  ஜெபித்தார் சகோதரர் ஸாம்.

       பதினொன்றுக்கு பேருந்து புறப்பட்டது ஜன்னலோர இருக்கை வீட்டை தாண்டித்தான் செல்லும் சுனிதாவை அழைத்தேன் .வீட்டிற்கு வெளியே வந்து கையசைத்து சென்றாள்.பனிரெண்டரைக்கு தம்பானூர் ,அங்கிருந்து கட்டணம் செலுத்தும் ஆட்டோவில் வானூர்தி நிலையம் .(பஸ் கட்டணம் அறுபத்தி நான்கு + கட்டண ஆட்டோ நூற்றி நாற்பத்திஒன்பது )


       ஒருமணிக்குள் விமான நிலைய வாயிலில் அமர்ந்து வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த சுலைமானியை குடித்துகொண்டிந்ருதேன் .நண்பன் சேலம் ஜானகிராமன் உள்நாட்டு விமான நிலையத்தில் பணி புரிகிறான் .என்னை சந்திக்க வந்தான் .விமான நிலையத்திற்குள் குடியுரிமை பகுதியை தாண்டி அவனால் வரமுடியாது .இரண்டரை மணிவரை அங்கிருத்து பேசிகொண்டிருந்தோம் .குடியுரிமை அதிகாரி ஒருவர் என்னை அணுகி “எந்த விமானம்” என்றார். “தோஹா செல்லும் விமானம்” என்றேன் “நேரமாகிவிட்டது விரைந்து செல்லுங்கள் கூட்டம் வந்துவிடும்” என்றார் .பத்து நிமிடம் கழித்து ஜானகியிடம் விடைபெற்று குடியுரிமை சோதனைகளை முடித்துவிட்டு அங்கிருந்த தொழுகை அறையில் இரண்டு ரக்காத் பயண தொழுகை தொழுதுவிட்டு விமானம் ஏறினேன் .

      ஜானகிராமன் கண்காணிப்பு காமிராவில் பார்த்துவிட்டு சார் நீங்கள் செல்வதை நான் பார்த்துவிட்டேன் .ஹாப்பி ஜெர்னி என குறுஞ்செய்தி அனுப்பினான்.
 
     ஐந்தேகால் மணிநேர பயணம் காலை உணவு தந்தார்கள் .சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் தூங்க முயற்சி செய்தேன் .கண்விழித்து இருபத்தி நான்கு மணிநேரத்திற்கும் மேலாகியிருந்தது .கத்தாரின் தோஹா நகரில் இறங்கும்போது மணி ஆறு இருபது அங்கிருந்து அடுத்த விமானம் ஏழு ஐம்பதுக்கு விமான நிலையத்தில் கழிப்பறை சென்று,பல் தேய்த்து அமெரிக்காவின் பிலேடெல்பியா செல்லும் விமானத்தின் வாயிற்எண்ணை தேடி விரைந்து சென்றேன். இங்கிருக்கும் கழிப்பறைகளில் தண்ணீர் இருப்பது பெரும் நிம்மதி..மூன்றாம் இஞ்சினியர் அமித் எங்கிருக்கிறாய் என குறுஞ்செய்தி அனுப்பினார் நெருங்கிவிட்டேன் வருகிறேன் என்றேன் .அவரும் பத்திசாபும் மும்பையிருந்து ஒன்றாக பயணித்தவர்கள்,ஆலம் என ஒருவர் அவர்களுடன் பயணித்தார் அவர்கள் அவனை சந்திக்கவேயில்லை என்றனர் .கொச்சியிலிருந்து கோபகுமார் என ஒருவர் வந்திருக்க வேண்டும்,ஜூனியர் அமித் என ஒருவரும் மும்பையிலிருந்து வரவேண்டியவர் .

     தோகா-பிலேடேல்பியா பதினான்கரை மணிநேர பயணம் .கத்தார் ஏர்வேசின் நெடுந்தூர விமானங்கள் நன்றாக இருக்கும். பயணத்தில் இருவரிடம் கேட்டேன் “நீங்கள் கோபகுமாரா” என. “இல்லை” என்றனர். இம்முறை வெத்திலை பாக்கு போலில்லாமல் நல்ல உணவு கிடைத்தது .விமானம் புறப்பட்டவுடன் பிரஞ்சும்,(காலை உணவும் ,மதிய உணவும் சேர்ந்தது பிரன்ச்) பின்னர் சாண்ட்விட்சும் ,இறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் இரவுணவும் தந்தார்கள் .பிலேதேல்பியாவில்இறங்கும்போது மதியம் இரண்டரைமணி யாகியிருந்தது .இரவு பகலாகி இருந்தது .வெப்பநிலை மைனஸ் நான்கு டிகிரியாக இருந்தது.குடியுரிமை அதிகாரி கப்பலில் உனக்கு என்ன பணி என்று ஒரு கேள்வி மட்டும் கேட்டார்.சாலையோரம் முழுவதும் பனிக்கட்டிகளாக நிறைந்து கிடந்தது. எங்களை அழைத்து செல்லும் ஓட்டுனர் ஒரு மணிநேரம் தாமதமாகவே வந்தார். அவரது போனில் அழைத்தோம் பதிலளிக்கவில்லை . உக்ரைனை சேர்ந்த மூன்றாம் அதிகாரியாக வந்த ஒருவர் எங்களுடன் வந்த மூன்றாம் இஞ்சினியர் அமித்தை அடையாளம் கண்டுகொண்டார் முன்பே ஒன்றாக பணியாற்றியவர்கள் யூயோ வா என கேட்டுவிட்டு எங்களுடன் இணைந்து கொண்டார் .

       பதினான்கு மணிநேரம் பயணம் செய்த  விமானத்தில் சந்திக்காத ஆலமும்,கோபகுமாரும் வந்து சேர்ந்தனர் .சேர்வ்லோட்டின் மிகப்பெரிய வண்டியை கொண்டு வந்திருந்தார் ஓட்டுனர் அனைவரின் பயணபைகளையும் ஏற்றிவிட்டு பனிக்கட்டிகள் நிறைந்து கிடந்த சாலையோரங்களை வியப்புடன் பார்த்தபடி மார்கஸ் கூக் துறைமுக அலுவலகத்தை அடைந்தோம் .எங்களது கடவு சீட்டுகளுடன் துறைமுக அதிகாரியை ஒவ்வொருவராக சந்திக்க சொன்னார்.அவரிடமிருந்த ஆவணத்துடன் எங்களது கடவுசீட்டை ஒப்பிட்டு பார்த்ததும் .போய் வாருங்கள் பாதுகாப்பாக பணி செய்யுங்கள் என வாழ்த்தி அனுப்பிவைத்தார் .
 
     எங்களது ஓட்டுனர் தானியங்கி கதவுகளை தன்னிடமிருந்த அட்டையை பயன்படுத்தி திறந்து கப்பல் நின்றுகொண்டிருந்த ஜெட்டி அருகே காரை நிறுந்தினார்.அங்கிருந்து பயண பைகளும்,காலனிகளும் மாவு போலிருந்த பனித்துகள்களில் புதைய எண்ணூறு மீட்டர் தூரம் கடுங்குளிரில் நடந்து ,பதினைந்து மீட்டர் உயரமுள்ள படிகளில் ஏறி யூயோ கப்பலில் பாதம் பதித்தேன் .அடுத்த ஏழு மாதங்கள் இங்கு தான் வாழ்க்கை .



கடந்த பெப்ருவரி ஒன்றாம் தியதி வீட்டிலிருந்து புறப்பட்டு மிக நீண்ட பயணத்துக்குப்பின் யூயோ கப்பலுக்கு வந்த பதிவு இது .
Shahul hameed
25 feb 2019.