Thursday, 22 May 2025

இருபது ஆண்டு நிறைவு 11

லியோ லீடர் பகுதி மூன்று 

மிஷுஷிமா மலையில்...



மும்பையில் இருந்து கப்பல் ஏறும்முன் மூன்றாம் இஞ்சினியர் ராஜு “இந்த கப்பல்ல முன்பு வேல பாத்தீங்களா, அப்ப எல்லாம் தெரியும் உங்களுக்கு! எக்ஸ்பீரியன்ஸ் பிட்டர்!” என்றபோது இரண்டாம் இஞ்சினியர் ஷமீர் சிரித்துக்கொண்டே “ஷாகுலுக்கு எல்லாம் தெரியும்” என சொன்னார். ஷமீர் “ஏன் இவ்வளவு நாள் கப்பலுக்கு போகல, இவ்ளோ நாள் எப்டி வீட்ல இருக்க முடியுது” எனக் கேட்டார். விடுமுறையில் வந்த நான் மும்பை அலுவலகத்திற்கு அடுத்த இரண்டு மாதத்தில் தயார் என சொன்னபோது நிறுவனத்தின் ஐம்பத்தி மூன்று கப்பல்கள் வேறு நிறுவனத்திற்கு கைமாறிவிட்டது. ஒரு நீண்ட காத்திருப்பு இப்போது உள்ளது. ஆறு மாத்திற்கு நீ வேறு ஏதாவது சிறிதாக வேலை பார்த்துக்கொள் என தெளிவாக சொன்னார்.

எண்ணெய் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட பெரும் விபத்தில் பிட்டரும், முதன்மை அதிகாரியும் உயிரிழக்க, எண்ணெய் கடலில் கொட்டி அதனால் ஏற்பட்ட கடல் மாசு அதற்கு பொறுப்பேற்று மில்லியன் டாலர்களில் அபராதம் கட்டியபின், எண்ணெய் கப்பல்களை இனி நிர்வகிக்க வேண்டாம் என முடிவு செய்து துபாயை மையமாக கொண்டு செயல்பட்ட நிறுவனத்தை வேறு கம்பெனிக்கு கொடுத்துவிட்டது. இரண்டு மாதம் ஊரில் இருந்த நான் மும்பைக்கு வேலை தேடிச் சென்றேன். மீண்டும் கையில் பைல்களுடன் அலைந்தேன். 


    மீண்டும் தோல் வியாதி லேசாக எட்டிப்பார்த்தது. உணவில் புளி என்பது தோல் வியாதிக்கு முக்கிய எதிரி என்பதும், சமைத்த உணவுகளை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது எனது தோல் வியாதியை அதிகப்படுத்துகிறது என்பதையும் கண்டுபிடித்தேன். அறையில் இருந்த நண்பன் கடலூர் கண்ணன் சமைக்கும்போது சாம்பார், மீன் குழம்பு ஆகியவற்றில் புளிகரைசலை சேர்க்கும் முன் எனக்காக எடுத்து வைத்தார். “ஷாகுல் அண்ணா கவலை படாதீங்க” என்பார். என்னை நேசிக்கும் உள்ளங்கள்.

    இத்தாலியை மையமாக கொண்டு செயல்படும் கோஸ்டா எனும் உல்லாச கப்பல் நிறுவன அதிகாரி ஸ்கைப் மூலம் நடத்திய தேர்வில் பயணிகள் கப்பலில் பிட்டராக தேர்வானேன். பிரேசில் பரானகுவாவில் சந்திப்போம் என்றார் என்னை நேர்காணல் செய்த அதிகாரி ஆலன் குக். தற்போது இருப்பதை விட முந்நூறு டாலர்கள் சம்பளம் அதிகம். அவர்கள் யூரோவில் சம்பளம் தருவதாக சொன்னார்கள். கோஸ்டாவின் மும்பை முகவர் ஹைதராபாத்தில் உல்லாச கப்பலில் பயணிகளிடம் நடந்து கொள்ளும் முறைகள் பற்றிய ஐந்துநாள் வகுப்பு ஒன்று உள்ளது என்று சொல்லி அதில் என்னை பங்கேற்க சொன்னார்.

      கேட்டரிங் படித்த நண்பர்கள் முப்பத்தியைந்தாயிரம் ரூபாய் செலுத்தி அதை படித்தால்தான் அவர்களின் விண்ணப்பத்தை கப்பல் கம்பனிகள் ஏற்றுக் கொள்வார்கள். எனக்கு இலவசமாக அந்த வகுப்பில் கலந்து கொள்ள சொன்னார்கள். அரை மணி நேரத்தில் மீண்டும் அழைத்து “உனது ஜாய்னிங் மிக விரைவில் இருக்கிறது. உன் வீட்டிற்கே டிக்கெட் அனுப்புவோம். ஊருக்கு போகலாம். தேதி பின்னர் சொல்வோம்” என்று சொல்லி நரிமன் பாய்ண்டில் உள்ள ஒரு ஆய்வுக்கூடத்தில் சின்னம்மை நோய்க்கான சோதனைக்கு ரத்தம் கொடுத்துவிட்டு கிளம்ப சொன்னார்கள்.

ஊருக்கு வந்தபின் அதே கோஸ்டா நிறுவனத்தில் இணைய சொல்லி மும்பையிலிருந்து வேறு முகவர் அழைத்தார். நான் தேர்வாகி பணியில் இணையும் தேதிக்காக காத்திருக்கிறேன் என்றேன். பதினைந்து நாட்கள் கழித்து எனது ரத்த சோதனை அறிக்கையில் சின்னம்மை வருவதற்கான நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது. முதல் தடுப்பூசி செலுத்தி ஒரு மாதத்திற்கு பின் இரண்டாம் தடுப்பூசி செலுத்தியபின் மருத்துவ சான்றிதழ் அனுப்பினால்தான் கப்பலேற முடியும் என்றார்கள். 

      முதல் தடுப்பூசியை போட்டு முப்பது நாட்களுக்குப்பின் இரண்டாம் தடுப்பூசி செலுத்தி மருத்துவ சான்றிதழுக்கு மருத்துவர் ஜார்ஜ் எம் டி யின் வாயிலில் காத்திருக்கும்போது, நான் பணியிலிருக்கும் நிறுவன மும்பை அலுவலகம் அழைத்து “மீண்டும் லியோ லீடர். மூன்று மாதத்தில் அசிஸ்டெண்ட் பெட்டி ஆபிசரிலிருந்து பெட்டி ஆபிசராக பதவிஉயர்வு” என்றார். அதே வேலைதான் சம்பளம் கூடுதல் கிடைக்கும். அப்போதே கோஸ்தா உல்லாச கப்பல் மும்பை அலுவலக அதிகாரி லாவண்யாவை அழைத்தேன். “முதலில் வந்த தேதி உங்கள் சின்னம்மை நோய் தடுப்பு கவுன்ட் கம்மியா இருந்ததால போயிட்டு, அடுத்த தேதி எப்போது என சொல்ல முடியாது” என்றார். இவ்வாறு நான் மீண்டும் லியோ லீடர்க்கு வந்ததை ஷமீர் மற்றும் ராஜுவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். 



ராஜு தனது மனைவி ஹிமா, மகளை கப்பலுக்கு அழைக்கும் முயற்சியில் இருந்தார். ஐரோப்பாவிலிருந்து வளைகுடாவின் பஹ்ரைன் சென்றபோது சுனிதாவின் அண்ணனை கப்பலுக்கு வரவைக்க காப்டனிடம் பேசி முகவர் விபரங்களை அனுப்பினேன். முகவர் பதிலேதும் சொலவில்லை என சுனிதாவின் அண்ணன் சொன்னார். பஹ்ரைனில் கப்பல் கரையணைந்ததும் கப்பலுக்கு வந்த முகவரை கண்டு கேட்டேன். “புதிய டெர்மினல் நேற்று தான் துவக்கவிழா முடிந்தது. இன்னும் அலுவலகத்தில் அதிகாரிகள் பொறுப்பேற்கவில்லை. என்னால் உங்க மச்சானை கப்பலுக்கு வரவைக்க உதவ இயவில்லை” என்றார். கார்கள் இறங்கிக் கொண்டிருக்கும்போது டெக்கில் சென்றேன். மொத்தம் ஆறுமணிநேரத்தில் கார்கள் இறக்கும் பணி முடியும். இங்கே அனேகமாக இந்திய பணியாளர்கள். அவர்களின் மேற்பார்வையாளர் ராஜேஷ் மலையாளி. என்னிடம் “உனது மச்சானை கேட்டில் கூப்பிடு. நீ அங்கே போய் பார்க்கலாம்” என்றார். மச்சானை அழைத்தேன். அவரது கசின் மாஹினுடன் வந்துவிட்டார். ராஜேஷ் தனது போனை என் கையில் தந்து “சரக்கு இறக்கும் பணி முடியும்போது சொல்கிறேன். போய் வா” என்றார். இரண்டாம் இஞ்சினியர் ஷமீர் அனுமதி தந்தார். துறைமுக வாயிலில் காவலர்கள் யாரும் இல்லை. நான் வெளியில் சென்று மச்சான்களுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மாஹீன் மச்சான் “கப்பல்ல ஒருக்கா வந்து பாக்க முடியாதா” எனக் கேட்டார். அங்கே மிக அருகில் புதிய கட்டிடம் ஒன்று இருந்தது. அதனுள் போய் அலுவலக அதிகாரியை கண்டு பேசினேன். “இவர்கள் என் உறவினர்கள், நான் அந்த கப்பலில் வேலை செய்கிறேன், எனவே உள்ளே அழைத்து செல்ல விரும்புகிறேன்” என்றேன். “நீ எப்படி இங்கே வந்தாய். இப்போது நீ சட்டவிரோதமாக பஹ்ரைனில் இருக்கிறாய்” என சொல்லிவிட்டு அங்கிருந்த காவலர் ஒருவரை அழைத்து “என்ன டூட்டி பாக்குறீங்க?” என கடிந்து காரில் ஏற்றி உடனே கப்பலில் கொண்டு விடச் சொன்னார்.

அங்கிருந்து சவுதியின் ஜெத்தா, தமாம், கத்தாரின் தோஹா, அமீரகத்தின் அபுதாபி பின் ஓமானில் மஸ்கட் சென்றோம். அங்கு சலலாஹ் தோபார் யூனிவர்சிட்டியில் பணிபுரிந்து கொண்டிருந்த தம்பி ஷேய்க் மஸ்கட் வந்திருந்தார். கப்பலுக்குள் வர துறைமுகம் அனுமதி கொடுக்காததால் நான் வெளியே சென்று சந்தித்தேன். மஸ்கட்டில் ஓட்டுனராக இருந்த இளைய தந்தையின் மகன் ஷேய்க்கும் வந்திருந்தான்.அடுத்து மும்பை துறைமுகத்தில் கார்களை இறக்க நிறுத்தினோம். எனக்கு பணி இருந்தது. வெளியில் செல்ல வாய்ப்பே இல்லை என எண்ணியிருந்தேன். முதன்மை இஞ்சினியர் சித்திக் என்னை வெளியே அனுப்புமாறு இரண்டாம் இஞ்சினியர் ஷமீரிடம் சொன்னார். மும்பையில் தாராவி, மாட்டுங்கா சென்று நண்பர்களை பார்த்துவிட்டு மஸ்கட்டில் வாங்கிய விளையாட்டு பொருட்களை பார்சலில் வீட்டுக்கு அனுப்பினேன். இரவு ஒன்பது மணிக்கு கப்பல் புறப்படுவதாக இருந்தது. விவசாயத்திக்கான ஒரு வண்டி ஸ்டார்ட் ஆகவேயில்லை. டெக்னிசியன்கள் வந்தார்கள். இரவு முழுவதும் முயற்சித்தும் இயலவில்லை. பின் மதிய வேளையில் கப்பல் சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது. ஹரியானாவில் விவசாய வேலைக்கு செல்ல வேண்டியது. ஜெர்மனியில் இருந்து டெக்னிசியன் ஒருவர் விமானத்தில் சிங்கை வந்து அதை ஸ்டார்ட் செய்தார். அந்த வண்டி சிங்கையில் இறக்கப்பட்டது. மீண்டும் மும்பை செல்லும் வேறு கப்பல்களில் லாஜிஸ்டிக் நிறுவனத்தினர் அனுப்பி வைப்பார்கள்.



சிங்கையில் கப்பல் காலியாகிவிட்டது. கார் டெக்கில் பாட்மிண்டன் கோர்ட் வரைந்து மாலை ஐந்து முதல் ஆறு வரை விளையாடினோம். ஜப்பான் செல்லும் வழியில் கப்பலில் வந்தமர்ந்த பந்தய புறாக்கள் செல்லவே இல்லை. தானாக வந்தவை தானாக சென்றுவிடும். கப்பல் பணியாளர்கள் தங்கள் பங்குக்கு, அரிசியும் தானியங்களும் கொடுத்தனர். அறிவிப்பு பலகையில் ‘don’t feed pigeons’ என எழுதி வைத்திருந்தார். குளிரில் மொத்தமிருந்த எட்டு புறாக்களும் உடல் ஒட்டி சேர்ந்தமர்ந்து உடல் வெப்பத்தை பகிர்ந்துகொண்ட அதன் அறிவு ஆச்சரியமாக இருந்தது. ஜப்பானின் மிஷிசுமா துறைமுகத்தில் கார்கள் ஏற்றும்போதும் புறாக்கள் பறந்து செல்லாததால் காப்டன் போசனிடம் சொல்லி ஒரு புறாவை பிடித்து ஜெட்டியில் சென்று பறத்திவிட சொன்னார்.

     மிசுஷிமாவில் இரண்டாயிரம் கார்கள் ஏற்றியபின் ஜப்பானின் சீபாவில் நான்காயிரம் கார்கள் ஏற்ற வேண்டும். மாலையில் உணவுக் கூடத்தில் நாளை முதல் இங்கே புதிய முகங்கள் இருக்கும் என்றேன். மூன்றாம் இஞ்சினியர் ராஜுவின் மனைவி, மகள் கப்பலுக்கு வருவது உறுதியானது.

இரவு எட்டுமணி வாக்கில் கப்பல் புறப்பட்டது. கப்பலுக்கு சில புத்தகங்களை கொண்டு செல்வேன். அறையில் தனிமையில் என்னால் அமரமுடியாது. இரவுணவு முடிந்து ஏழு முதல் ஒன்பது வரை சினிமா பார்ப்பது அல்லது சீட்டு விளையாடுவது. தூங்க மட்டும்தான் அறைக்குள் செல்வது. ஒன்பது மணிக்கு அறைக்கு வந்து உறக்கம் வருவது வரை மட்டுமே வாசிக்க புத்தகங்கள். கள்ளிகாட்டு இதிகாசம், தண்ணீர் தேசம், பாலகுமாரன் நூல்கள், எஸ் ராமகிருஷ்ணனின் தேசாந்தரி, கதாவிலாசம், துணைஎழுத்து, கேள்விக்குறி ஆகியவைதான் அந்நாட்களில் நான் அறிந்தவை.

மிஷுஷிமாவிலிருந்து புறப்பட்டடு அரை மணிநேரம் ஆகியிருந்தது. மலைகளுக்கு நடுவில் வளைந்து, நெளிந்து செல்லும் பயணம் அது. அறையில் அமர்ந்து மலையாள மனோரமாவின் இயர் புக்கை புரட்டிகொண்டிருந்தேன். சமையற்காரர் பிரபீஸ் கிருஷ்ணா அறைக்கு வந்தார். “எந்தா ஷாஹுலே இத்ற புஸ்தகங்கள் கொண்டு சொமக்குந்து, இப்ப இ புக்ஸ் வருந்துண்டு, பென்ட்ரிவிலே கேற்றிகோ, இதக்க வாயிசிட்டு எந்து பிரயோஜனம்” என சொல்லுபோது கப்பலில் முன்பகுதியில் இருந்து பயங்கர சப்தம் வந்தது. காப்டன் எமர்ஜென்சி என ரேடியோவில் அலறினார். லைப் ஜாக்கெட்டை அணிந்து அறையைவிட்டு வெளியே பாய்ந்து ஓடினேன். கப்பல் ஒரு மலைமீது நின்றுகொண்டிருந்தது.



நாஞ்சில் ஹமீது,

22-May-2025.

sunitashahul@gmail.com


No comments:

Post a Comment