மே மாதம் பன்னிரெண்டாம் தேதி அதிகாலை மூன்று மணி மும்பை சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலையத்தில் அறை நண்பர்கள் சாலமோனும், பாலாவும் கட்டியணைத்து உள்ளே அனுப்பிவைத்தனர்.
குடியிரிமை அதிகாரி “முதல் முறையாக கப்பலுக்கு போகிறாயா?” எனக் கேட்டார்.
“எஸ் ஸார்”
“டிரைனிங் எங்க பண்ணீங்க, சென்னையா”
“ஆமா”
“ஷோ மீ யுவர் சிடிசி (Continuous Discharge Certificate)”
எனது சிடிசியை உற்று பார்த்தபின் நம்பிக்கை வந்தவராக, பாஸ்போர்ட்டில் முத்திரையை பதித்தார்.
அவ்வாறாக 2005ல் கப்பல் பணியில் இணைந்து இன்று (மே மாதம் பன்னிரெண்டாம் தேதி) இருபது ஆண்டுகள் ஆகிறது.
மும்பைக்கு 1997ல் வந்த நான் தினசரி அறுபது ரூபாய் சம்பளத்தில் சிறிய கம்பனியில் வேலை செய்து, பொங்கல் வீட்டில் தங்கியிந்ருதேன். ஹிந்தி மாலும் நஹி, சமாளிக்கும் ஆங்கிலம். பதினோரு மாதத்தில் ஆசியாவின் மிகப்பெரிய வேவ் பூல் உடைய வாட்டர் கிங்டம் எனும் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது. நீச்சல் குளத்தில் முக்கால் நிர்வாணமாக வரும் பெண்களால் நிறைந்திருக்கும் அங்கே மெயிண்டடன்ஸ் டெக்னீசியன் வேலை. முன்பை விட ஆயிரம் ரூபாய் சம்பளம் அதிகம். முதல் ஒரு மாதத்திலேயே அந்த வேலை பிடிக்கவில்லை.
பறக்கும் ஆசை அப்போதே எதிலும் திருப்தியில்லை. வேலையை விடப்போவதை பற்றி என் மேலதிகாரி நம்பியாரிடம் சொன்னேன்.
“வட்டா நிங்கள் ஸீ டீவி குரூப் ஆ இது, துபாய், ஆப்ரிக்கா, ஈரோப் ஸ்தலத்தில் வேற ப்ராஞ்கள் உண்டு, டோன்ட் லீவ் திஸ் ஜாப்”
அதாவது மூன்று மாதத்திற்குப்பின் நிரந்தரமாகிவிடும் லைப் செட்டில் என்றார். அப்போது இருபத்தியிரண்டு வயதான எனக்கு அது புரியவே இல்லை. ஜட்டியுடன் வரும் பெண்களை பார்த்து ஒரு மாதத்தில் சலித்துபோய், இது என் இடம் அல்ல என ஒரு அகப்போராட்டத்திற்கு பின் வேலையை துறந்தேன். நம்பியார் “நல்ல வேலையை விட்டதற்காக பின்பு ஒருநாள் வருந்துவாய்” என்றார்.
தினசரி எழுபது ருபாய் சம்பளத்துக்கு சேர்ந்த கம்பனியில் காலை ஒன்பது மணி முதல் இரவு எட்டரை வரை வேலை செய்து மகிழ்ச்சியாக இருந்தேன்.
2000வது ஆண்டு கப்பல் வேலைக்கு செல்லவேண்டுமென அதற்கான பயிற்சிகளை சென்னையில் முடித்துவிட்டு மும்பைக்கு வந்தேன்.
வேலை கிடைக்காததால் இரு முறை ஈராக் போய் வந்தேன். திருமணத்திற்கு பின் மும்பை வந்த ஒரே மாதத்தில் கப்பலில் ஏறினேன். அந்த நாள் நினைவிருக்கிறது. “நியு மும்பை வாசியில் ஒரு முகவர் துபாய் கப்பலுக்கு அனுப்புவார் கட்டணமும் மிக குறைவுதான்” என நான் தங்கியிருந்த மாட்டுங்க லேபர் காம்ப் ஏரியாவில் சொன்னதை வைத்து அங்கு சென்றேன்.
என் ஆவணங்களை பார்த்துவிட்டு “எல்லாம் ஒரிஜினல், எக்ஸ்பீரியன்ஸ் மட்டும் இல்ல” என சொல்லிவிட்டு தனது உதவியாளரிடம் கொடுத்தார் அந்த அலுவலகத்தின் உரிமையாளர் ஸ்ரீனிவாச ராவ். கப்பலில் முதன்மை இஞ்சினியராக இருந்து பணி நிறைவு செய்தவர் அவர்.
அலுவலக உதவியாளர் என் ஆவணங்கள் பார்த்துவிட்டு “வேண்டியதை நான் செய்கிறேன் ஓகே ஆயிரும், ஆல் டாக்குமென்ட் ஒரிஜினல்” என்றார்.
“நாற்பதாயிரம் ரூபாய் சர்வீஸ் சார்ஜ், ஐஞ்சி பைசா இப்ப தராண்டாம் இந்த கையில டிக்கெட்டும், விசாவும் அப்ப அந்த கையில பைசா. ஒரு ரூவாயும் குறைக்க கூடாது. 250 டாலர் சம்பளம், பதினோரு மாசம் காண்ட்ராக்ட். சம்மதம்னா நாளைக்கே உன் டாக்குமென்ட் துபாய் போகும்” எனச் சொன்னார்.
“சரி” என்றேன்.
இரு தினங்களுக்குப் பின் போனில் அழைத்தார் சீனிவாச ராவ். என்னை துபாய் நிறுவனம் தேர்வு செய்துவிட்டது. பயணிகள் கப்பலில் வேலை விரைவில் புறப்பட வேண்டும். விசா வரும்போது சொல்கிறேன் என்றார். ஒரு ரூபாயும் என்னிடம் அவர் கேட்கவேயில்லை. ஆனாலும் அவரின் பதிலுக்காக காத்திருந்தேன்.
அடுத்த இருதினங்களில் மீண்டும் அழைத்தார் சீனிவாச ராவ். வியாழக்கிழமை அலுவலகம் வருமாறு அழைத்தார். உன் பயணம் உறுதியாகிவிட்டது, இரவில் நன்றாக தூங்கிவிட்டு மறுநாள் காலையில் ஒரு டிராவல் ஏஜண்டிடம் போய் ஆறாயிரத்தி எண்ணூறு ரூபாய் கொடுத்து எனக்கான துபாய் செல்லும் விமான டிக்கெட் வாங்கியபின், விக்டோரியா டெர்மினஸ் அருகிலுள்ள மெடிக்கல் சென்டரில் மருத்துவ சோதனை முடித்து அதன் சான்றதழுடன் வரும்போது மீதி தொகையை கொண்டு வரச்சொன்னார்.
காலையில் விழித்து முந்தையநாள் இரவில் துவைத்து காய வைத்த துணிகளை அயர்ன் செய்பவரிடம் கொடுத்துவிட்டு, கிங் சர்க்கிள் ஸ்டேசனிலிருந்து மின்சார ரயிலில் ஏறி வி.டியில் (விக்டோரியா டெர்மினஸ்) உள்ள ட்ராவல் ஏஜென்டிடம் துபாய் செல்லும் டிக்கெட்டை பெற்றுக்கொண்டேன். செக் லீப் போல அட்டையும் உள்ளே தாள்களும் இருந்தது. என் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. அதனால் டிக்கெட் ஒரிஜினல் என உறுதியாகியது. மருத்துவ பரிசோதனையும் முடித்து சான்றிதழ் பெற்றேன்.
அங்கிருந்து வாஷி செல்லும் ரயிலில் மீதி பணத்துடன் ரயில் ஏறினேன். சுனிதா தனது நகையை வங்கியில் அடமானம் வைத்து பணம் அனுப்பியிருந்தாள். மதியம் ஒரு மணிக்கு முன்பாக சென்றுவிட்டேன். சீனிவாச ராவ் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவரது உதவியாளர் விமான சீட்டையும், மருத்துவ சான்றிதழையும் பெற்றுகொண்டார்.
இரண்டு மணிக்கு ஸ்ரீனிவாச ராவ் “கீழ ஒரு கட இருக்கு ஹால்ப் பிளேட் ரைஸ் பத்து ரூவாதான் சாப்பிட்டுட்டு வா” என்றார். மீண்டும் மாடியில் உள்ள அலுவலக நாற்காலியில் அமர்ந்திருந்தேன். மிக நீண்ட காத்திருப்பாக அமைந்தது. இருமுறை கட்டிங் சாயா மட்டும் வாங்கி தந்தார். இருள் கவ்வி விளக்குகள் எரிய தொடங்கியதும் “நாளை துபாயில் விடுமுறை இன்றே உனது விசா வந்துவிடும்” என்றார்.
இரவு எட்டு மணிக்கு என் விசா பேக்ஸ்ல் வந்தது. ஐக்கிய அமீரக முத்திரையுடன் என் பெயர், பாஸ்போர்ட் எண் எல்லாம் இருந்தது. எனது ஒப்பந்த படிவம், விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிக்கு கடிதம் ஆகியவற்றை அதன் பின்னரே தயார் செய்து அச்சுபிரதி எடுத்து தந்தார். விமான சீட்டுக்கு கொடுத்தது போக மீதி தொகையை கேட்டார். ஐநூறு ரூபாய் குறைவாக கொடுத்தேன். விமான நிலையம் செல்ல டாக்ஸிக்கு அந்தப் பணம் வேண்டுமென சொன்னேன். அலுவலக உதவியாளர் இருவரும் எங்களுக்கு ஏதாவது தாருங்கள் எனக் கேட்டனர். நூறு வீதம் கொடுத்தேன். ராவ் “காலை ஏழுமணிக்கு பிளைட் நாலு மணிக்கு ஏர்போர்ட் போய்விடு, இமிகிரேஷன் முடிஞ்சதும் எனக்கு போன் பண்ணு” என்றார்.
அங்கிருந்து இரு மின்சார ரயில்கள் மாறி அறைக்கு வரும்போது மிக தாமதமாகிவிட்டது. காலையில் அயர்ன் செய்ய கொடுத்த துணிகள் நினைவில் வந்தது. அவரது போன் நம்பரை வாங்கி அழைத்தோம் இருபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அவரது வீட்டிலிருந்து வந்து துணிகளை தந்தார். அதன் பின்னரே பயண பைகளை தயார் செய்தேன்.
மாலையிலேயே போன் பண்ணி அறையில் சொல்லியிருந்தேன். இரவு எனக்கு விமானம். கோழிக்குழம்பு சமைத்துக்கொளுங்கள் நான் வந்து பணம் தருகிறேன் என. பாலா எனக்காக சாப்பிடாமலே இருந்தார். இரவு தூங்காமலே அதிகாலை அறை நண்பர்கள் பாலாவும், சாலோமோனும் நித்யாவின் காரில் உடன் வந்து சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் பன்னாட்டு விமான நிலையத்தில் விட்டனர்.
குடியுரிமை அதிகாரி “முதல் முறையாக கப்பலுக்கு போறீங்களா? ட்ரைனிங் சென்னையில் முடித்தீர்களா?” என கேட்டுவிட்டு எனது கப்பல் ஆவணமான சி.டி.சியை நன்றாக உத்து பார்த்தார். மும்பை முகவரின் கடிதத்தை கேட்டார். பின் நம்பிக்கை வந்தவராக முத்திரையை பதித்து பாஸ்போர்ட்டை கையில் தந்தார்.
“Depature 12th May 2005 Airport Authority Mumbai” என.
மேலும். . . . .
No comments:
Post a Comment