Friday 28 January 2022

உம்மா 4

     உம்மாவின் ஆதார் அட்டை விலாசத்தில் உள்ள வீட்டிற்கு சுகாதார மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் சென்று கொரோனா தொற்று பாதித்த வீடு எனும் ஸ்டிக்கர் ஒட்டி,கிருமி நாசினி தெளித்தால் காந்தாரிவிளை தெருவில் ஒரு பரபரப்பு. அதன் பின் தான் ஜாகிர் அண்ணனும் இன்னும் சிலரும் போனில் விசாரித்தனர்.

ஜாகிர் அண்ணனிடம் “உம்மா சும்ம இருக்கா,ஒன்னுமில்ல டெஸ்ட் பண்ணுனா பாசிட்டிவ்ன்னு வந்துட்டு அதான் இங்க கூட்டிட்டு வந்தேன் இன்னைக்கு காலத்த வார்டுக்குள்ளேயே உம்மா வாக்கிங் போனா”என்றேன்.

“லே தம்பி உம்மா மிந்தி ஒருக்க காய்ச்சல்ன்னு ஆசுபத்திரிக்கு போனா பாத்துக்கோ,டாக்டரு அட்மிட் பண்ணிருவோம்னு சொல்லி எழுதி குடுத்தாரு,இவா அங்க போனா அது கொரோனா வார்டுனு பாத்ததும்,கல்ப் பதறி டாக்டர்ட,வாப்பா மரிச்சிபோச்சி நான் நாளைக்கி வந்து அட்மிட் ஆவேன்னு சொல்லிட்டு ஓடி வந்தா இப்ப புடிச்சி போட்டுட்டானுவோ”என சொல்லி சிரித்தான்.

         நாங்கள் கன்னியாகுமரி மாமா எனச்சொல்லும் பீர் முகம்மது மாமா தினமும் காலை ,மாலை இரு வேளையும் போனில் விசாரித்தார்  “மருமொனே,உம்மாக்கு இப்ப எப்படி இருக்கு,அங்க வந்து பாக்க முடியாதே,நான் துவா செய்யேன் எல்லாம் செரியாவும்  அல்லாஹ் பெரியவன்” என்பார்.

   அன்றிரவும் எனக்கு சரியான தூக்கமின்றி கழிந்தது அதிகாலை விழிக்கையில் லேசான சளியும்,தொண்டை வலிப்பதுபோலவும் இருந்தது.இரவு காவலர் பணி மாறியபின்  உம்மாவுக்கு சாயா வாங்கி கொடுத்துவிட்டு குளத்திற்கு சென்று துணிகளை துவைத்து குளிக்கையில் தோன்றியது இன்று குளிப்பது தவறு என.காய்ச்சலுக்கான அறிகுறிகளை உடல் எனக்கு சொல்ல தொடங்கியது.

     வார்டுக்கு அருகிலேயே துணிகளை காயபோடும் கயிறை இரு மரங்களுக்கிடையில்  யாரோ கட்டியிருந்தார்கள்.துணிகளை காயப்போடும் போது காவலர் கேட்டார் “குளிச்சாச்சி போல”என. வார்டில் இருந்த இரு பெண்கள் “டெய்லி இங்க உள்ள சாம்பார சாப்பிட முடியல,எனக்கு ரெண்டு ஆப்பம்,என் புருசனுக்கு நாலு இடியப்பம் வாங்கித்தர முடியுமா” எனக்கேட்டாள்.ஆரல்வாய்மொழி ரோஸ்மேரி. முதலில் ரோஸ் மேரியின் அம்மா,அப்பாவுக்கு  தொற்று உடனிருந்து கவனித்து கொண்டதில்,ரோஸ்மேரிக்கும் தொற்று வந்து அனுமதிக்கபட்டார் வீட்டிற்கு போகலாம் என மருத்துவர் எழுதிகொடுப்பதற்கு முதல் நாள் ரோஸ்மேரியின் கணவர் கொரோனா வார்டுக்கு வந்து சேர்ந்தார்.

    மருத்துவமனை வாயிலுக்கு வெளியே மஞ்சு உணவகம் இருப்பதை பார்த்தேன்.அது ஒரு வீடு அங்கேயே சமைத்த சூடான ஆப்பமும்,கடலை கறியும் சாப்பிட்டுவிட்டு பார்சல்களும் வாங்கிகொண்டேன்.

  இளம் கர்பிணிகள் மூவர் அனுமதிக்க பட்டனர்.இரவில்  கொஞ்சம் அபாயகரமான நிலையில் ஒரு பெண் வந்து சேர்ந்தாள்.இருபத்தி மூன்றே வயதான அபர்ணா “தம்பி என் புருசன காணல்ல கொஞ்சம் பாருங்க” என்றாள்.

 அபர்ணாவின் வீட்டிற்கு வெளியே கொரோனா சோதனை நடந்து கொண்டிருந்தது வெளியே சப்தம் கேட்டு எட்டிப்பார்த்த அபர்ணாவை சோதித்த போது பாசிட்டிவ் இங்கே கூட்டி வந்துவிட்டார்கள். “நான் சும்ம இருந்தேன்.வெளிய எட்டி பாத்தத்துக்கு இங்க கொண்டு வந்திட்டவா”என்றாள்.

அவளது கணவனுக்கு சோதனையில் நோய் தொற்று இல்லை என வந்தது.பகல் முழுவதும் மனைவியை அருகிலிருந்து கவனித்து கொள்ளும் அவளது கணவன் இரவில் பனியில் அமர்ந்து மொபைல் போனில் நேரம் கடத்தியபின் போண் பேட்டரி தீர்ந்து அங்கேயே கண்ண்யர்ந்ந்து விட்டான்.ஐந்து மாத கர்ப்பிணியான அபர்ணாவுக்கு திருமணம் ஆகி ஆறு மாதம் ஆகிறது. 

      இன்று வெளியே அமர்ந்துகொண்டு வார்டுக்குள் போவதை தவிர்த்தேன்.லேசான தலைவலியும், முதுகு தண்டுவட வலியும் தொடங்கியது அமரவே முடியவில்லை.கட்டன் சாயாவில் ஒரு அஞ்சால் அலுப்பு மருந்து போட்டு குடித்தேன்.பதினோரு மணிக்கு ரொம்பவே முடியவில்லை. நண்பரை ஸாம் பிரின்சை அழைத்தேன். “ஸார் மூணு நாள் ஆண்டி பயோடிக்,வாங்கி தாரேன்,வண்டி ஓட்ட முடியுமா,இங்க வாங்க” என்றார்.

  மருத்துவ தோழியை அழைத்து என் உடல்நிலை பற்றி சொன்னேன். “ஒன்னும்   பயப்படாண்டாம்,இந்த மருந்துகள்  போதும் முடியாமல் ஆனால் மட்டும் சொல்லுங்க”என்றார்.

  மாலையில் அமரவே முடியவில்லை  நான் தொழுகையை நிறைவேற்றும் திண்ணையில் போய் பாய் விரித்து படுத்து கொண்டேன்.ஒரு மணிநேரம் தூங்கிய பின் கட்டன் சாயாவில் மீண்டும் ஒரு அலுப்பு மருந்து போட்டு குடித்தேன்.

 உம்மா என்னிடம் “உன்ன கொஞ்ச நேரமா காணல்ல”

“வெளிய இருந்தேன்”என்றேன் .

“நான் வாசல்ல வந்து பாத்தேன் உன்ன காணல்ல”

“சாயா குடிக்க போயிருப்பேன்”என்றேன் .

உம்மாவிடம் எனக்கு உடல் நலமில்லாமல் இருப்பதை சொல்லவேயில்லை.

இன்றும் வெளியில் அமர்திருந்த நேரம் துப்புரவு பணி செய்யும் சொர்ணாவிடம்  பேசிக்கொண்டிருந்தேன். எனது பணி, குடும்பம் பற்றி விசாரித்தாள் ‘தாயன்பு’ (https://nanjilhameed.blogspot.com/2016/08/blog-post_14.html)கதையை சொன்னேன். “ அதான் தள்ளக்க கிட்டஇருந்து விலவாம பாக்குது தம்பி”என அருகிலிருந்த ரேவதியிடம் சொன்னபின்  தன் கதையை சொன்னாள் சொர்ணா.

   “அவரு கொத்தனாரு,மிந்தி கேரளத்துக்கு சோலிக்கி பெய்ருவாரு,ஒரு மொவனும்,மொவளும் எனக்கு.அவரு வந்தாதான் கைல பைசா கிடைக்கும்,நான் ஏதாவது வேலக்கி போவேன்,ஒரு பாக்கெட் சேமியா வாங்கி மூணு நேரமும் கிண்டி குடுப்பேன்.அந்த புள்ளயளு ஒன்னும் சொல்லாம தின்னுட்டு படுத்துகிடும் பாத்துகிடுங்க,மீனு வாங்க பைசா இருக்காது,தக்காளியும்,புளியும் போட்டு ஒரு குளம்புபோல வெச்சி குடுப்பேன்”.

“புள்ளயளு இப்ப என்ன செய்யிது” எனக்கேட்டேன்.

மொவன் இஞ்சினியரு படிச்சிட்டு,அந்த காலேஜில இப்ப வேலக்கி போறான்,மொவ நேள்ஸ் படிச்சிருக்கா”

அருகிலிருந்த ரேவதி “அவுரு குடிக்காத்ததுனால கொள்ளாம்,புள்ளயள நல்ல நிலமைக்கி கொண்டு வர முடிஞ்சது”என்றாள்.

“அப்ப மொவன் வேலக்கி போனா சொர்ணாக்காக்கு ரெஸ்ட் கிடைக்கும் இல்லியா”

“மொவள ஒருத்தனுக்க கையில புடிச்சி குடுத்துட்டேன்னா நிம்மதியாயிரும்”

நான் கவனித்ததில் தாயில்லா குழைந்தைகள் கல்வியை கூட பூர்த்தி செய்வதில்லை.தந்தையில்லா பிள்ளைகள் படித்து,நல்ல நிலையை அடைகிறார்கள்.தாய் களின் தியாகம்,உழைப்பு,அவமானங்கள் அதன் பின்னால் இருக்கிறது.அம்மாக்கள் எப்போதும் உயர்வானவர்களே ......

மேலும் 

Sunday 23 January 2022

உம்மா 3

 

            நள்ளிரவில் கோவிட் பாசிட்டிவ் நோயாளிகள் இருவர்  வந்தனர்.செவிலியர் அப்போதும் அவர்களை சோதனை செய்து அட்மிட் செய்தனர்.இரவு காவலர்  தூங்காமல் விழித்தே இருந்தார்.அவ்வப்போது வார்டுக்குள் வந்து பார்த்துக்கொண்டும் இருந்தார்.நான் பலமுறை விழித்துக்கொண்டேன் அப்போதெல்லாம்  உம்மாவை அருகில் போய் பார்த்து வந்தேன்.

 அதிகாலை ஐந்துக்கு முன்பாக எழுந்துவிட்டேன் விடிந்தபின் உம்மாவுக்கு கட்டன் சாயா வாங்கி கொடுத்தேன்.காலை ஆறரை மணிக்கே வார்டில் இருக்கும் நோயாளிகளுக்கு மட்டும் இட்லி,சாம்பார் வழங்கப்பட்டது. “நேத்து உள்ள இட்லிய எறிஞ்சா மண்ட உடஞ்சிரும்,இன்னிக்கு கொஞ்சம் பரவாயில்ல”என பெண் ஒருவர் சொல்வது காதில் விழுந்தது.நான்  பார்வதிபுரம் ஆற்றில் போய் குளித்து ஆடை மாற்றிக்கொண்டேன்.

 காலை மருத்துவர் வந்து ஒவ்வொரு நோயாளியாக பார்த்தார்.உம்மாவின் சி டி ஸ்கேன்,ஜெயசேகரன் மருத்துவமனை டிஸ்சார்ஜ் சம்மரி ஆகியவற்றையும்  பார்த்தபின் இங்கே நர்சுகள் சோதித்து எழுதிய ரத்த அழுத்தம், காய்ச்சல்,ஆக்சிஜன் அளவின் குறிப்புகளையும் பார்த்தபின் “இப்போ ஏதாவது கஷ்டம் இருக்கா”எனக்கேட்டறிந்தார்.

முந்தைய தினம் அட்மிட் ஆன ஒரு பெண் “டாக்டர் நான் இன்னைக்கு வீட்டுக்கு போலாமா?” எனக்கேட்டாள்.

“நேத்து தானே வந்தது அதுக்குள்ள வீட்டுக்கு போணுமா பிளட் டெஸ்ட் ரிப்போர்ட் வரணும்,இருந்து பாத்துட்டு போங்க” என கடிந்து கொண்டார்.வேறு சில நோயாளிகளுக்கு வீட்டிற்கு செல்ல அனுமதியளித்தார்.



பதினோரு மணிக்கு பிரட்,கசாயம்,இரு அவித்த முட்டைகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. நோயாளிகள் குறைந்த பட்சம் ஒரு தட்டு,ஒரு மூடி போட்ட பாத்திரம்,இரு டம்ளர்கள் வைத்து கொள்வது நல்லது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள கேண்டீன் அருகில் உள்ள கடையில்,தட்டு,டம்ளர்,நைட்டி,துண்டு,பிளாஸ்டிக் வாளி போன்ற தேவையான அனைத்தும் கிடைப்பது என்னை ஆச்சரியபடுத்தியது.

நேற்று வார்டுக்குள்ளேயே தொழுகையை நிறைவேற்றினேன்.இன்று திறக்கபடாத புதிய கட்டிடம் ஒன்றில் சுத்தமான வராண்டாவை கண்டுபிடித்தேன் தொழுகைக்காக.ஆக்சிஜன் பிளாண்டின் அருகில் இருந்த தண்ணீர் குழாய் ஒளு செய்ய வசதியாக இருந்தது.

மதியம் டார்வின் மனைவியை பணிக்கு அழைத்து வரும்போது மதிய உணவை கொண்டு வந்தார்.எனது தந்தையின் சகோதரி சரிபா மாமி கொடுத்தனுப்பிய வெள்ளை சாதம்,பொரித்த மீன்,வறுத்து அரைத்த மீன் குழம்பு,அவியல் என சுவையாக இருந்தது.உம்மாவும்,நானும் சாப்பிட்டபின் உணவு மீதமிருந்தது.

 உம்மா சொன்னாள் “அங்க பாரு இப்ப வந்த புள்ள அந்த சாப்பாட சாப்பிட முடியாம வெச்சிட்டு இருக்கு,அவள்ட்ட இத குடு”

“மீன் குழம்பும் சோறும் இருக்கு தின்னுதியளா”என கேட்டேன்.சிரித்துக்கொண்டே வாங்கி கொண்டாள்.

நான் அவ்வப்போது உம்மாவை வார்டில் சென்று பார்த்து கவனித்து கொண்டு  வார்டுக்கு வெளியே மரத்தடி நிழலில் அமர்ந்து அனைத்தயும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

கொரோனா வார்டுக்கு வெளியே


  இங்கே பணி துப்புரவு பணியில் இருப்பவர்கள் பெரும்பாலும் பெண்கள்.கொரோனாவோடு இரண்டாண்டு அனுபவம் அவர்களுக்கு நோய்பற்றிய எந்த அச்சமும் இப்போது அவர்களுக்கு இல்லை.இங்கே கொரோனா வார்டு மற்றும் நோயாளிகள் உபயோகிக்கும் கழிப்பறையை சுத்தம் செய்வது,வெளியே புல் வெட்டுவது,நோயாளிகளுக்கு உணவு,கசாயம் வழங்குவது எல்லாம் அவர்கள்.

 மதிய உணவுக்கு அனைவரும் ஒன்று கூடி சாப்பிட்டபின் சிறிது நேரம் ஓய்வு. பெண்கள் மட்டுமே இருக்கும்போது அவர்களின் சுதந்திரம் உரையாடல்களில் வெளிப்படுகிறது.

“ராத்திரி வீட்டுக்கு போனா புள்ளையளுக்கு சாப்பிட செய்து குடுத்திட்டு,பத்து மணிக்கு நல்லா உறங்கலாம்”என்றாள் ஒரு பெண்.

“ஒன்னு தோசை வேணும்னு கேக்குவு,ஒன்னொரு புள்ளக்கி சப்பாத்தி வேணும் அத எல்லாம் செய்து குடுத்துட்டு படுக்க நேரம் ஆயிரும்”

அப்போது இடை மறித்து ஐம்பது வயதை தாண்டிய அம்மையார் “ஆமா பத்து மணிக்கு மேல உறங்க உடானுவோ” என்றாள்.அந்த இடமே பெண்களின் சிரிப்போசையால் அதிர்ந்தது.

நான் சிரிப்பை அடக்கி கொண்டதை கவனித்த பெண் ஒருத்தி அந்த அம்மையாரிடம் “வாய மூடிட்டு போ”என்றாள்.

 இரண்டு மணி பணிக்கு வந்த காவலர் ரமேஷ் மரத்தடியில் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

அவரிடம் பெண்ணொருத்தி “எறும்பா உளுது தள்ளி இருக்கபிடாதா”என்றாள்.

அம்மையார் “லே ரமேசு இறுக்கமா ஜட்டி போட்டிருக்கியா,இல்லேன்னா வசக்கேடா கடிச்சிரும் பாத்துக்கோ”என்றாள்.

ரமேஷ் பதிலேதும் சொல்லவில்லை.

  எழுபத்தி ஐந்து வயதான ஆறுமுகம் பாட்டி என்னிடம் “மக்கா என்னய வீட்டுக்கு போவ சொல்லியாச்சி,ஒரு ஆட்டோ புடிச்சு தருவியா வடசேரிக்கு போவணும்”என்றார்.

 “பாட்டி வந்து எத்ர நாளாச்சி”எனக்கேட்டேன்.

“முந்தா நாள் வந்தேன் நேத்தே போவ சொல்லியாச்சி,ஊரடங்கு இல்லா அதான் நேத்து போவல”

மருந்து சீட்டை வாங்கி ஐந்து நாட்களுக்கான மருந்தை வாங்கியபின் கேண்டீன் அருகிலுள்ள டீக்கடையில் சொன்னபோது ஆட்டோ கொரோனா வார்டுக்கே வந்துவிட்டது.ஆறுமுகம் பாட்டி ஆட்டு குட்டியை போல துள்ளி குதித்து உள்ளே ஏறியபின் டாடா காட்டிவிட்டு, “அம்மைய பாத்துக்க லே  மக்கா” என கூறி சென்றாள்.

உம்மா


நான்கு  சுண்டல்,பால்,கஷாயம் வழங்கப்பட்டது. அன்று பகலிலும்,இரவிலும் கோவிட் நோயாளிகள் வந்து கொண்டே இருந்தனர்.ரொம்பவே முடியாமல் வந்த ஒருவரை முதற்கட்ட சோதனைகளை செய்துவிட்டு வேறு கோவிட் வார்டுக்கு அனுப்பிவைத்தனர் செவிலியர்.இன்று வந்தவர்களில் இருவர் இளம் கர்ப்பிணி பெண்கள்.

மேலும் 

Friday 21 January 2022

உம்மா 2

            
            தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் கடந்த ஆண்டு கோவிட் வந்து ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரியில் சிகிச்சை எடுத்த பின் அதை பதிவு செய்திருந்தார்.செயவிலியர்களின் கவனிப்பு, மிகச்சிறந்த உணவு என அது மனதில் பதிவாகியிருந்ததால் நான் முடிவு செய்தேன் உம்மாவை ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்வது என. மருத்துவ தோழி மகேஸ்வரியை அழைத்து சொன்னேன்.நான் என்ன செய்ய வேண்டும் என கேட்தறிந்தேன். ஜி ஹெச் கொண்டு போகிறேன் எனவும் சொன்னேன்.அவர் “ரொம்ப நல்லது ஜி ஹெச்சில் பார்த்துக்கொள்வார்கள், நீங்க கூட இருந்ததால உங்களுக்கும் வந்திருக்கும்.அம்மா வீட்டில் இருந்ததால் சுனிதா,குழந்தைகளுக்கும் இருக்கும்”என சொன்னார்.சுனிதாவை போனில் அழைத்து விசயத்தை சொன்னேன்.
                 
           காலை உணவை பையில் வைத்து வெளியே வைக்க சொன்னேன். வெறிச்சோடிய சாலையில் வீட்டிற்கு சென்று வெளியேயிருந்த இட்லி,சாம்பார் பையை எடுத்துகொண்டு மீண்டும் மருத்துவமனை சென்றேன்.உம்மாவிடம் "காப்பி குடிம்மா" என சொல்லி தட்டில் இட்லி,சாம்பாரை எடுத்து வைத்துவிட்டு “மெடிக்கல் காலஜ் போவோம்”என்றேன். நான் அங்கேய குளித்து உணவுண்ண தயாராகும்போது மூன்று நர்சுகளுடன் மருத்துவர் உள்ளே நுழைந்தார்.அப்போது தான் விசயத்தை சொன்னேன் “அம்மாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது,நான் மெடிக்கல் காலேஜிக்கு மூவ் பண்ணுகிறேன்”என்றேன் மருத்துவரிடம்.அவர் “டிஸ்சார்ஜ் தருகிறேன்” என்றார். அப்போது தான் உம்மாவுக்கு தெரியும் தனக்கு கொரோனா என.கண்ணீர் விட்டு அழுதாள் “என்னை நல்ல ஆசுபத்திரிக்கு கொண்டு போய் காட்டு மக்களே,அண்ணனுக்கு மெசேஜ் குடு”என்றாள். “நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றேன். 


          சுனிதா உம்மாவிடம் பேசிவிட்டு என்னை அழைத்து “மாமிய ஆசாரிபள்ளம் கொண்டு போறது அவ்வளுக்கு தெரியுமா?”. “நான் இன்னும் சொல்லவில்லை” “பேசண்டுட்ட எங்க ட்ரீட்மெண்ட்க்கு போறோம்னு சொல்லது முக்கியம் அவங்ககிட்ட கேட்டுகிடுங்கோ” என்றாள். மருத்துவமனை பில் தயாராகி வர பதினோரு மணியை தாண்டிவிட்டது.பன்னிரண்டு மணிக்கு ஆம்புலன்சை அழைத்து உம்மாவை அமரவைத்து நான் எனது இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தேன்.கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி ஆசாரிப்பள்ளம் நுழைவாயிலை கண்டதும் உம்மா ஆம்புலன்சை நிறுத்திவிட்டாள் “மொவன் என்ன கிம்சுக்கு கொண்டு போறேன்னு சொன்னான்”என்றிருக்கிறாள்.

   

             ஆம்புலன்ஸ் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி வாயிலில் திரும்பி நின்றிருந்தது. நான் வந்ததும் ஆம்புலன்சை உள்ளே போக சொன்னேன்.உம்மாவின் ஆதார் அட்டையை வாங்கி சில ஆவணங்களை பூர்த்திசெய்துவிட்டு உடலில் ஆக்சிஜன் அளவை பரிசோதனை செய்துவிட்டு கோவிட் வார்டுக்கு அனுப்பிவைத்தனர். அங்கு காலியாக இருக்கும் ஒரு படுக்கையை தேர்வு செய்ய சொன்னார் செவிலிப்பெண்.வயதானவர் என்பதால் நான் உடனிருக்க முடியும் என்றனர். போர்வையை விரித்து உம்மமாவை படுக்கவைத்தேன்.
  
      பெண்களுக்கும்,ஆண்களுக்கும் படுக்கைகளை ஒரு தட்டி வைத்து பிரித்துவைத்திருந்தனர்.ஒரு ஒன்பதுமாத குழந்தை,எட்டுமாத கர்ப்பிணிப்பெண்,அறுபதுவயதான மூன்று பெண்கள்,நடுவயதை உடைய ஒரு ஒருவர் இளம்வயது பெண் ஒருவரும் இருந்தனர். மதிய உணவு நோயாளிகளுக்கு வழங்கிகொண்டிருந்தனர். 
நோயாளிகளுக்கு உணவு வழங்கபடுகிறது 


    
     உம்மாவுக்கு ஈசிஜி மற்றும் ரத்த சோதனை செய்தனர்.மருத்துவமனை உணவகத்திலிருந்து சைவ சாப்பாடு வாங்கி சாப்பிட்டோம். மேலும் “தனியார் மருத்துவமனையிலிருந்து ஏன் இங்கே கொண்டுவந்தீர்கள்” என கேட்டாள் செவிலிப்பெண். “இங்கே கடந்த ஆண்டு அனுமதிக்கப்ட்டிருந்த வி ஐ பி ஒருவர் இங்குள்ள சிகிட்சை முறை,உங்களின் கவனிப்பு பற்றி எழுதியிருந்தார்”என்றேன். உம்மா சுனிதாவிடம் போனில் “எனக்க எழுவத்திரண்டு வயசுல இதையும் பாக்கனும்னு இருக்கு,எனக்க மூத்த மொவன் என்னய எங்க போனாலும் ஏ சி ரூமுல தான் தங்கவெப்பான்,ஏ சி ரயில்ல தான் கூட்டிட்டு போவான் இவன் என்னய இங்க கொண்டு போட்டுட்டான்”என . 
       
    நான் உம்மாவிடம் சொன்னேன் “கொரானாவுக்கு இங்கதான் நல்ல மருந்து உண்டு,அரசாங்க ஆசுப்பத்திரி மட்டும்தான் காப்பத்த முடியும்” என்றேன் இரு மணிநேரத்தில் எதிர்படுக்கையிலிருந்த பெண்ணை உம்மா அடையாளம் கண்டு கொண்டு பேச்சு கொடுத்தாள். கர்ப்பிணி பெண்ணையும்,கைக்குழந்தையையும் கண்டபின் கொஞ்சம் இயல்புக்கு நிலைக்கு மாறியது உம்மாவின் மனம்.

           மாலையில் கசாயம்,சுண்டல்,பால் கொடுத்தார்கள். நண்பர் அருட்பணி காட்சன் சாமுவேல் போனில் அழைத்தபோது விபரம் சொன்னேன் .உம்மாவிடம் பேசி விரைவில் நலம்பெற ஜெபித்தார்.கடந்த ஆண்டு கோவிட் வந்து மீண்ட தோழிகள் மற்றும் நண்பர்கள் அழைத்தபோது உம்மாவிடம் பேசி தைரியாமாக இருக்க சொன்னார்கள்.

             இரவு ஏழு மணிக்கு முன்பாக பணியிலிருந்த செவிலிப்பெண் “அண்ணா சுனிதாக்க ஹஸ்பண்டா நீங்க,சுனிதா போன் பண்ணி சொன்னா” என்றாள். அவர்கள் சுனிதாவின் சகோதரிகளின் நெருங்கிய நண்பர்கள்.அந்த செவிலி பெண்ணின் கணவன் டார்வின் நிறைய உதவிகள் செய்பவர்.நான் மற்றும் சுனிதாவின் இரு சகோதரிகளின் கணவன்களும் வெளிநாட்டில் இருப்பதால் எதாவது அவசரம் என்றால் ஓடி வருபவர் டார்வின்.தனியார் வங்கியில் மேலாளராக இருக்கிறார்.
  
            2019 ஆண்டு ஜூலை மாதம் சுனிதா நிமோனியாவால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தாள்.என் இரு மகன்களும் சுனிதாவின் சகோதரிகளின் வீட்டில்.சுனிதாவுக்கான உணவை தயார் செய்து கொடுத்தால்மருத்துவமனை சென்று படுக்கையில் இருக்கும் சுனிதாவிற்கு டார்வின் உணவை பிரித்து தட்டில் வைத்து அவள் உண்பதுவரை காத்திருப்பார்.சொந்த சகோதரியை போல் பார்த்துகொண்ட நல்ல உள்ளம் அது.

      இரவு பணிமுடிந்து மனைவியை அழைத்துச்செல்ல வந்தார் டார்வின்.சந்தித்து பேசிக்கொண்டோம்.மறுநாள் முதல் மதியம் ஒரு மணிக்கு மனைவியை அழைத்து வரும்போது எனக்கும் உம்மாவுக்கும் மதிய உணவும்,இரவு பணிமுடிந்து செல்கையில் இரவுணவும் வீட்டிலிருந்து வாங்கி வருகிறேன் என்றார்.பெரிய உதவி அது.டார்வினின் மனைவி இரவு பணியில் உள்ள செவிலியிடம் உம்மாவை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு சென்றாள். 
 
ஆண்கள் வார்டு


     உம்மாவின் அருகில் இருந்த இரு படுக்கைகள் காலியாக இருந்தது அந்த இடைவெளியில் தரையில் பாய் விரித்து படுத்துக்கொண்டேன்.இரவு பத்து மணிக்கு பணிக்கு வந்த காவலர் “இது லேடிஸ் வார்டு இங்க ராத்திரி இருக்ககூடாது வெளிய போங்க” என்றார்.பாயை சுருட்டிக்கொண்டு ஆண்கள் வார்டில் வந்தேன் கட்டில்கள் நிறைய காலியாக இருந்தது பாயை விரித்து படுத்துக்கொண்டேன் . 


 மேலும்

Thursday 20 January 2022

உம்மா

 

உம்மா  இப்போதெல்லாம் மணவாளக்குறிச்சியில்தான் அதிகமாக இருக்கிறாள்.

நான் பிறந்து வளர்ந்த காந்தாரி விளையில் உள்ள எங்கள்  பழைய வீட்டை வாங்கி  இடித்து  புதிய வீடு கட்டியிருக்கிறாள் அக்காவின் மகள் அப்ரிதா உம்மா பெரும்பாலும் அவள் பேத்தியின் வீட்டில் தான்.

அக்காவின் வீடும் மிக அருகில் இருக்கிறது.உம்மா எப்போதாவது தான் என் வீட்டிற்கு  வருவதுண்டு.

நான்கு தினங்களுக்கு முன் அக்கா,மருமகள், மகன், பேத்தி என அனைவரும் வெளியூர் செல்ல. நான் உம்மாவை அழைத்தேன் என் வீட்டிற்கு வருமாறு.

"நல்ல காய்ச்சல்,இருமல், சளி், மூச்சு முட்டல் இருக்கு ஆசுபத்திரி போய்ட்டு சாயங்காலம் வாரேன் மக்களே" என்றாள்.

அன்று மாலை வீட்டிற்கு வந்து இரவு தூங்கி காலையில் எழும்போது .

" இன்னைக்கு கொஞ்சம் கொள்ளாம்" என்றாள். அவ்வப்போது இருமி சளி வெளியே வரவில்லை என சிரமபட்டாள்.

மறுநாள் காலை படுக்கையிலிருந்து தாமதமாக எழுந்து "முடியவில்லை ஆசுபத்திரி போவோம்" என்றாள் உம்மா.

ஜெயசேகரன் மருத்துவமனையில்  தான் கடந்த பல ஆண்டுகளாக சிகிட்சை .இரு மூட்டுகளும் அறுவை சிகிட்சை செய்து மாற்றபட்டுள்ளது. சுகர், பிரசர் ஆஸ்துமா எல்லாம் உண்டு இது போக கொஞ்சம் இதய கோளாறும்.

மருத்துவமனைக்கு வந்து டாக்டர் சதீசை பார்த்தோம். அவர் எந்த சோதனையும் செய்யமால் சார்ட்டில்  நர்ஸ் எழுதியிருந்த விபரங்களை பார்த்துவிட்டு உம்மாவிடம் “என்ன செய்யுது”என  கேட்டு விட்டு .

“ரெண்டு நாள் அட்மிட் ஆகி பாருங்க” என்றார்.

உடனே ஈஸிஜி ,எக்ஸ்ரே எடுத்துவிட்டு  அறைக்கு சென்றோம் . ஊசி,மருந்து, குளுகோஸ் ஏற்றப்பட்டது. மாலையில் கொரோனா சோதனைக்கு சளி எடுத்து சென்றனர்.

நுரையீரல் நிபுணர் வந்து எக்ஸ ரே வை பார்த்துவிட்டு சி டி ஸ்கேன் எடுக்க சொன்னார்.

அவர் உம்மாவிடம் “தடுப்பூசி போட்டீர்களா” எனக்கேட்டார்.

"இல்லை"

"ஏன் போடவில்லை, அரசாங்கம் இவ்வளவு முயற்சி எடுக்குது , நீங்க ஆஜாக்கிரதையா இருக்கீங்க"

"டாக்டர் வீட்டு கிட்ட எல்லாரும் பயம் காட்டினாங்க" என்றாள்.

"இப்ப ஏன் இங்க வந்தீங்க அந்த அறிவாளிகள் கிட்ட கேட்டு அங்கேயே டிரீட் மெண்ட் எடுக்க வேண்டியது தானே?"

"இல்ல டாக்டர் இப்ப வீட்டுக்கு போனதும் ஊசி போடேன்"என்றாள் உம்மா.

நான் மருந்து வாங்க லிஃப்ட்ல் கீழிறங்கி வரும்போது மருத்துவரும் உடன் வந்தார்.

"எக்ஸ்ரே கொஞ்சம் டவுட் இருக்கு அதான் சி டி ஸ்கேன் எழுதினேன் பாத்துருவோம்" என்றார்.

இரவு ஏழு மணிக்கு கேரளத்து அலுவலக பெண்மணி வந்து விவேக் லாபில் இரவு பத்துமணிக்கு கோவிட் ரிப்போட் வாங்க சொல்லி ரசீது  கொடுத்து விட்டு சென்றாள்.

இரவு பணியில் இருந்த நர்ஸ் டிரிப்ஸ்ஸை எடுத்து விடுவோம் அம்மா நல்லா தூங்கட்டும் என சொல்லி கையில் குத்தி வைத்திருந்த குளுகோஸ் குழாயை உருவி விட்டாள்.

நானும் உம்மாவும் எட்டரை மணிக்கே தூங்கி விட்டோம். இதற்கு முன் உம்மா மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட போதெல்லாம் நான் ஊரிலேயே இல்லை. இதுதான் உம்மாவுடன் நான் முதல் முறையாக மருத்துவ மனையில் இருக்கிறேன்.ஓரிரு தினங்களில் வீட்டிற்கு சென்று விடலாம்.இரவில் மனம் கொந்தளிப்பாகவும்,தொடர்ச்சியான  எதிர்மறை எண்ணங்களினாலும் தூக்கம் இல்லை.

அதிகாலை ஐந்து மணிக்கு முன்பாக விழித்து விட்டேன். உம்மா ஐந்தே காலுக்கு எழுந்தாள் கட்டன் சாயா போட்டு கொடுத்தேன். அதை குடித்து விட்டு இயல்பாக என்னிடம் பேசிக்கொண்டிருந்தாள்.ஆறு மணிக்கு முன்பே செவிலி பெண் வந்து சோதனைகளை செய்துவிட்டு இரவில் நிறுத்திவைத்திருந்த ட்ரிப்சை மீண்டும் செலுத்திவிட்டு போனாள்.சி டி ஸ்கேன் ரிபோர்ட்டை வாங்கி எனது மருத்துவ தோழிக்கு அனுப்பினேன்.அவர் அந்த அதிகாலையே பதிலளித்தார். “ல்ங்கஸ்ல கொஞ்சம் இன்பெக்ஷன் இருக்கு,பயப்படாண்டாம்,ஹாஸ்பிட்டல இருக்கதுனால அவங்க பாத்துப்பாங்க”என்றார்.

CT SCAN 


ஆறரை மணிக்கு சயாவும்,உண்ணியப்பமும் வாங்கி கொடுத்துவிட்டு பணியில் உள்ள நர்ஸிடம் வீட்டிற்கு போய் வருவதற்கு அனுமதி சீட்டு கேட்டேன். அன்று ஞாயிறு முழு ஊரடங்கு அறிவித்திருந்தது அரசு.

pass 







மருத்துவரிடம் கையொப்பம் பெற்று வெளியில் சென்றுவரும் சான்றிதழை  ஏழரை மணிக்கு செவிலி பெண் என்னிடம் தந்தாள்.ஒரு மணிநேரம் உம்மாவை பார்த்துகொள்ளுங்கள் என சொல்லிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டேன்.அருகில்தான் விவேக் ஆய்வகம். அங்கு போய் உம்மாவின் கோவிட் ரிப்போர்ட்டை கேட்டேன்.சில நிமிடங்களில் அச்சுபிரதி ஒன்றை கையில் கையில் தந்தாள் அங்கிருந்த பெண்.உம்மாவுக்கு கொரோனா பாசிட்டிவ் என அந்த காகிதம் சொன்னது.



  எந்த எண்ணங்களுமின்றி செய்வதறியாது சில நிமிடங்கள் வெறிச்சோடி கிடந்த சாலையை பார்த்துக்கொண்டிருந்தேன்.



மேலும்