Wednesday, 21 May 2025

ஷாகுல் ‘ஜி’

    

Ship notice board 

1999 - 2000 வது ஆண்டுகளில் மும்பையில் வேலைசெய்யும்போது உடன் பணிபுரிந்த அஜய் இப்படி அழைப்பான் ‘ஷாகுல் ஜி’ என. ஹிந்தியில் பெயருடன் ஒரு ஜி போட்டால் மரியாதையான வார்த்தை ஆகிவிடும்.

நான் ட்ரஸ்ட்டியாக இருக்கும் கிளப் டென் அறக்கட்டளை நிறுவனரின் அக்கா சுமதி ஷாகுல்ஜி என கூப்பிடுவார். திருப்பூர் கார்மெண்ட்ஸ் கம்பனி நிர்வாக மேலாளர் நண்பர் ரகு பேசும்போது ஷாகுல்ஜி என அழைப்பார். 

2003 -2004 ஈராக் போர்முனையில் அமெரிக்க ராணுவத்துடன் பணிபுரிகையில் எனது மேலாளர்கள் அனைவரும் அமெரிக்கா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியுசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளை சார்ந்தவர்களாக இருந்தனர். 

   ஸார் என அழைத்தால் மை நேம் இஸ் எரிக் பிளீஸ் கால் மீ எரிக் என்றார் எனது ப்ரொஜெக்ட் மானேஜர். நூற்றியிருபது பேருக்கு மேல் வேலை செய்த, தினமும் பத்தாயிரம் உணவு வழங்கும் எங்கள் கேம்புக்கு அவர்தான் தலைமை.

ஊரில் யாரையும் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது. மரியாதை குறைவாம். என் மாமா பீர்முகமது அவரது கடையில் இருக்கும்போது Mr போட்டு பேர எழுதுடே, பெயர் சொல்வதிலும், எழுதுவதிலும் எந்த தவறும் இல்லை என்பார்.

திருமணமான புதிதில் சுனிதா என்னை ஷாகுல்லமீதே என அழைத்ததை கேட்டு அவளுடைய உம்மும்மா (அம்மாவின் அம்மா) “கெட்டுனவன பேரு சொல்லி விளிக்கபிடாது” என கடிந்து கொண்டார். 

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்காளதேஷ் அதிகாரிகளுடன் பணி செய்வது கொஞ்சம் கடினம், முன்பே அமெரிக்க, ஐரோப்பியர்களுடன் வேலை செய்த அனுபவம் உள்ளவர்களுக்கு.

கப்பலில் வயதில் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் பதவியில் உயர்ந்தவர்கள் கீழ் பதவியில் உள்ளவர்களை பெயர் சொல்லி அழைக்கலாம். ஆனால் வயதான ஒருவர் இளம்வயது அதிகாரியை பெயர் சொல்லி அழைக்ககூடாது. இந்திய மனநிலை. மரியாதை குறைவாம்.
 

கப்பலில் என்னை யாராவது ஸார் என கூப்பிட்டால் ஷாகுல் என்று அழைக்கசொல்வேன். என்னை விட வயதில் அதிகமான சிலர் இந்திய சூழலில் பழகிவிட்டதால் “ஸார் என வாயில் வருவதை தவிர்க்க இயலவில்லை ஸார்” என்று சொல்கிறார்கள். இருபது ஆண்டுகால கப்பல் பணியில் பயிற்சி பிட்டராக பணியை துவங்கி காஸ் பிட்டராக இருக்கிறேன் எல்பி ஜி, எல் என் ஜி கப்பல்களில்.

பிட்டர்களை கொஞ்சம் மரியாதையாக அழைத்தே ஆக வேண்டியது சூழலின் கட்டாயம். யாராலும் முடியாத கடினமான வேலையை இறுதியாக செய்து கொடுப்பது பிட்டர். 

இது நாள் வரை பணிபுரிந்த எல்லா கப்பல்களிலும் காப்டன், சீப் இஞ்சினியர், எலக்ட்ரிகல் அதிகாரிகள் வயதிலும் அனுபவத்திலும் பெரியவர்களாக இருப்பார்கள். 

ஆனால் இப்போதெல்லாம் இளம் வயது காப்டன், சீப் இஞ்சினியர், சீப் ஆபிசர்கள் வந்துவிட்டார்கள். முப்பத்தியைந்து வயதுக்குள்ளாக உயர் பதவியை எட்டி விடுகிறார்கள்.

எலக்ட்ரிகல் அதிகாரிகள் முன்னாள் விமான படையில் பணிநிறைவு செய்து கப்பலுக்கு வரும்போது ஐம்பது வயதை தாண்டியவர்களாக இருப்பார்கள்.

பயிற்சி பிட்டராக பணியில் இணைந்த நான் இப்போதும் அதே இளவயது மனநிலையில் அலைகிறேன். இந்த கப்பலின் காப்டனுக்கு முப்பத்திஎட்டு வயது, சீப் இஞ்சினியருக்கு மே இரண்டாம் தேதி நாற்பது பூர்த்தியானது. காடட் மற்றும் ஜூனியர் இஞ்சினியருக்கு இருபத்தி ஐந்து வயது தான் ஆகிறது. நாற்பதை கடந்தவர்கள் நானும் இஞ்சின் பிட்டர் சவுகான், லீமேனும் மட்டுமே. மற்ற அனைவரும் இளையவர்கள். கப்பல் பணியாளர்களின் சராசரி வயதை கணக்கிட்டோம். மொத்தமுள்ள இருபத்தி மூன்று பணியாளர்களின் வயதை கூட்டி இருபத்தி மூன்றால் வகுத்தோம். சராசரி வயது முப்பத்தி ஐந்தாக இருக்கிறது.

இங்கே அனைவரும் என்னை அழைப்பது ஷாகுல் ஜி என்றே. அதிசயமாக இந்த கப்பலில் சீனியர் நான்தான். எனது பிறந்தநாள் இன்று கொண்டாட பட்டது. May 20 2025.

இந்தியாவில் இருபதாம் தேதி துவங்கும் நள்ளிரவு பன்னிரெண்டு மணி பசிபிக் கடலில் ஜப்பானை நோக்கி பயணிக்கும் எனது கப்பலின் பத்தொன்பதாம் தேதி காலை ஒன்பது மணியாக இருந்தது. அப்போதே ஆட்டோ ஜெனரேட் இ மெயில் வந்தது. ஷாகுல் ஹாப்பி பர்த்டே என கப்பலுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தும் சென்னை மாரிடைம் கல்லூரி. கூடவே “பிறந்தநாள் பரிசாக 501 ரூபாய் தருகிறோம். நீங்கள் அடுத்து படிக்கபோகும் கட்டணத்தில் தள்ளுபடி. ஆனால் முன்பதிவு இன்றே செய்யவேண்டும்”. வாயிலேயே வடை சுடுவதன் அர்த்தம் புரிந்தநாள். எனது வங்கியும், எனது கப்பல் நிறுவனத்தின் கோலாலம்பூர் கிளையும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி மின்னஞ்சல் அனுப்பியது. 

கிஃப்ட் பாக்ஸ் 

காப்டனின் மனைவி துருவி கப்பலில் இருப்பதால் அனைத்து பண்டிகைகளும் கொண்டாட்டம்தான். பணியாளர்கள் அனைவரின் பாஸ்போர்ட்டில் உள்ள பிறந்ததேதியை கவனித்து கேக் வெட்டி பரிசுகள் வழங்கி மகிழ்விக்கிறார்.

 

அறைக்கதவில் 

பிறந்தநாளான இன்று ஐம்பது வயது நிறைவுற்றது. கேக் வெட்டும்முன் சொன்னேன் “இஸ்லாமிய காலண்டர் படி ஹிஜ்ரி ஆண்டை கணக்கிட்டால் ஹிஜ்ரி 1395 துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் பிறையில் பிறந்த எனக்கு ஐம்பத்திஒன்று முடிந்து ஐம்பத்தியிரண்டு வயது துவங்கும் வரும் துல்ஹஜ் மாதம். அது ஆங்கில காலண்டர் படி வரும் ஜூன் ஆறாம் தேதி என்றேன். இந்த எண்களில் என்ன இருக்கிறது. எனக்கு ஐம்பது வயது ஆக போகிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.மனதில் இன்னும் அந்த மணவாளகுறிச்சி கிராமத்தின் சிறுவனாகவே எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

 


இருபதாம் தேதி துவங்கும் நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து அட்டையை என் அறையின் கதவில் ஒட்டி, சாக்லேட்டுகள், இரு டின் இஞ்சி சாறு டானிக் (பீரும், 7up, பெப்சி, கோக் நான் குடிப்பதில்லை) பாதாம், முந்திரி சேர்ந்த மிக்சட் நட்ஸ், சிப்ஸ் பாக்கெட்டுகள், குக்கிஸ் அடங்கிய பரிசு பொருட்களை வைத்துசென்றார் காப்டனின் மனைவி. கப்பலின் அறிவிப்பு பலகையில் happy birth day shahul ji என எழுதி ஒட்டப்பட்டிருந்தது.

 


என்னைவிட பதினைந்து வயது இளையவரான சீப் ஆபிசர் சவுத்ரிக்கு எனது பிட்னெஸ்ஸில் எப்போதும் பொறாமை உண்டு. “ஷாகுல் ஜி ய பாரு அம்பது வயசு ஆக போவுது இன்னும் தொப்பையே இல்ல, எவ்வளவு ஒல்லியா இருக்கார்” என மூன்றாம் இஞ்சினியரிடம் சொல்வார்.

பனாமா கால்வாயை கடக்கும்போது வந்த பணியாளர்களில் பெண்ணொருத்தி இருந்தாள். கறுப்பின பெண்ணான அவள் தான் இந்திய வம்சாவளியை சார்ந்தவள் என என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது சவுத்ரி குறுக்கிட்டு “ஹீ இஸ் பிப்டி இயர்ஸ் ஓல்ட்” என்றார். “இப்ப அவ என் வயச கேட்டாளா?” எனக் கேட்டேன்.

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் “ஷாகுல் ஜி பிப்டி” என்பதை நினைவுபடுத்துவார். அதிகாலை மகராசனம் செய்துகொண்டிருக்கும்போதே உடன் பணிபுரியும் சாகர் உடற்பயிற்சி கூடத்தில் வந்து வாழ்த்து சொல்லிவிட்டு சென்றார். கப்பலில் உடன் பணிபுரியும் அனைவரும் வாழ்த்தி மகிழ்ந்தனர். சமையல்காரர் காலையில் இட்லி சாம்பார் செய்தார். நான் கோழி இறைச்சி சாப்பிடாததால் இரவுணவுக்கு மீன் பொரித்து தருகிறேன் என்றார். கம்ப்ரேசர் அறையில் இன்று சற்று பெரிய பணி. ஐந்தேகாலுக்கு, நாளை தொடருவோம் என முதன்மை இஞ்சினியர் சொன்னதால் அனைத்தையும் கட்டி வைத்துவிட்டு வந்தோம்.

வார இறுதி இல்லாமல் பணிநாளாக இருப்பதால் மாலை ஆறு மணிக்கு சிறு பார்ட்டி வைத்தார் காப்டன். எனக்கு பிறந்தநாள் பரிசாக கிடைத்த சாக்லேட்கள், சிப்ஸ் பாக்கெட்கள், பாப்கார்ன் என அனைத்தயும் அதை சாப்பிடுபவர்களுக்கு கொடுத்து விட்டேன். இரண்டாம் அதிகாரி கட்டியணைத்து வாழ்த்தும்போது “ஐம்பது, நூறிலும் இதுபோல் உன்னை காண வேண்டும்” என்றார். “அவ்ளோ நாள் இருக்க கூடாது, எவ்ளோ நாள் இருக்கோமோ அவ்ளோ பாவம் செய்வம்மில்லா” என்றேன். “ஆமா அதும் செரிதான்” என சிரித்தார்.

பிளஸ் டூ மாணவர்கள், அல்லது கல்லூரியில் முதல் இரண்டாம் வருடம் படிக்கும் பிள்ளைகளை காணும்போது என்னை தந்தையாக உணர்கிறேன். நண்பர்கள் பலரும் பிள்ளைகளின் பூ நூல் சூட்டு விழா, பிறந்தநாள், திருமணத்திற்கு வாழ்த்தும், ஆசீர்வாதமும் கேட்கும்போது அதற்கு தகுதி இருக்கிறது என்றே என் ஆழுள்ளம் சொல்கிறது.

இன்னும் பத்து ஆண்டுகளில் கப்பல் பணியில் இருந்து ஓய்வு என்பதில் உறுதியாக இருக்கிறேன். விரைவில் புறச்செயல்களில் இருந்து விடுபட எண்ணியிருக்கிறேன். 2036 ஆம் ஆண்டு முதல் சமூக சேவைகள் பயணங்கள், பேச்சு, அலைச்சல் அனைத்தையும் முழுமையாக விட்டுவிட்டு ஆன்மீக வாழ்வில் முழுமையாக வாழ இருக்கிறேன். கடந்த ரமலான் முதல் அதற்கான பயிற்சிகளை தினமும் செய்ய துவங்கிவிட்டேன். நான் அமரும் இடமும் முடிவாயிற்று.

மகன்களுக்கு நல்ல கல்வி மற்றும் சுனிதாவின் வாழ்வுக்கு தேவையான பொருள் சேர்த்தல் மட்டுமே அடுத்த பத்து ஆண்டுகளுக்கு. வேறு பெரிய கனவுகள் சாதிக்க வேண்டியவை என எதுவும் இல்லை. திருமணமாகி சுனிதாவுடன் நான் தங்கவேயில்லை எனும் மனக்குறை அவளுக்கு உண்டு. மீதி நாட்கள் அவளுக்காகவும் தான்.

 நாஞ்சில் ஹமீது,

20 May 2025.

தொடர்புடைய பதிவுகள்:

 

1. இஃப்திகாப் நாட்கள் 

2. இஃப்திகாப் நாட்கள் - 2

1 comment:

  1. Hello shagul jee😁, belated b' day wishes. நடுவுல மே 21ல்வந்த கட்டுரையை மட்டும் படித்து விட்டேன்...அன்றைய நிகழ்வுகளை சலிப்படைய வைக்காமல் விவரிப்பதில் வல்லவர்....வழக்கம் போல அருமை. திடீரென வாய்விட்டு சிரித்த(பொது இடத்தில்) இடம்.. கறுப்பின பெண்ணிடம் உங்கள் வயதை சொன்னவரிடம் "இப்ப அவ கேட்டாளா" என்பது. வயதுக்கேற்ற பக்குவத்தை காட்டும்விதமாக... அணுகும் அனைவருக்கும் வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும் தரும் தகுதி பெற்றதை உணர்ந்தது... வாழ்க! வளர்க! மற்ற கட்டுரைகளை படித்துவிட்டு feedback தருகிறேன்.

    ~சுமதி திருப்பூர்

    ReplyDelete