Friday 10 December 2021

கப்பல் காரன் நாட்குறிப்புகள்

உல்லாச கப்பல்
உல்லாச கப்பல் 


 நண்பர்களுக்கு ,

    கடந்த 2020 வருடம் அக்டோபர் பத்தாம் நாள் மீண்டும் நான் கப்பல் பணியில் இணைந்தேன் .அன்று முதல் தினமும் அந்தந்த நாட்களின் டைரி குறிப்புகளாக உள்ளதை உள்ளபடியே  எழுதினேன் .அதில் பன்னிரெண்டாவது நாளின் டைரியான கப்பாடியாவுக்கு கொரோனாவா எனும் பதிவை படித்தபின் நண்பர் கணேஷ் பெரியசாமி கப்பல் காரன் நாட்குறிப்புகளுக்கு  என தனியாக ஒரு வலைப்பூ  தொடங்கி நிர்வகித்து வருகிறார்.




        எனது இந்த வலைபூவுக்கு வரும் நண்பர்கள் சிலர் இதில் பதிவுகள் ஏதும் இல்லாமல் ஏமாற்றமடைவதாகவும் நீங்கள் ஏன் குறைவாக எழுதுகிறீர்கள் எனவும் கேட்டு கடிதம் எழுதினர்.கப்பலில் இணைந்த பின் இணைய வேகம் மிக குறைவாக இருப்பதால் எனது வலைபக்கத்தை திறக்கவோ,அதில் பதிவுகள் வெளியேற்றம் செய்யவோ முடியாது.



கப்பல் காரன் நாட்குறிப்புகள் இன்று வரை 87 பதிவுகள் வந்துவிட்டது.கப்பல் காரர்களின் வாழ்வு அவர்களை தவிர யாரும் அறியாமல் உள்ளது என அதை படித்த வாசகர்கள் எழுதிய கடிதங்கள் சொல்கின்றன.இந்த நாட்குறிப்புகள் கப்பல் பற்றியும்,அந்த பணியாளர்களின் சாகச வாழ்வுபற்றியும் பேசுகிறது.புதிதாய் கப்பல் பணியில் இணைய விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இது இருக்கும் .

அதன் சுட்டியை இங்கே இணைக்கிறேன் நண்பர்கள் கப்பல் காரன் நாட்குறிப்புகளை படிக்கலாம் .

https://kappalkaran.wordpress.com/




ஷாகுல் ஹமீது ,

10-12-2021

ஈராக் போர்முமுனை அனுபவங்கள் கடிதம் 2

 அன்புள்ள ஷாகுல் அண்ணா,

 

வரலாறு முழுவதும் மாபெரும் வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் எளிய மனிதர்கள் இயங்கிக்கொண்டே இருக்கிறார்கள். வெல்லக்கட்டிகளை தூக்கிச் செல்லும் எறும்புகள் போன்ற மனிதர்கள். எதேச்சையாக ஒரு நிமிடம் அந்த காட்சியை பார்ப்பவர்களுக்கு வெல்லக்கட்டிகள் தானே மிதந்து செல்வதாகவே தோன்றலாம். ஆனால் உற்று நோக்கினால் அதன் அடியில் அந்த வெல்லக்கட்டியின் நூற்றில் ஒரு பங்கு எடை கொண்ட எறும்புகளின் பெருந்திரள் ஒன்று அந்த வெல்லக்கட்டியை நகர்த்திச் சென்றுகொண்டிருப்பதை காணலாம். அந்த எறும்புகள் இல்லையேல் அந்த வெல்லக்கட்டிகள் நகர்வதில்லை. அதுபோல் வரலாறு அதனுள் இயங்கும் சாமானியர்களால் இயக்கப்படுவது. நீர்வழிப்படூஉம் புனைபோல் மனிதர்கள் ஊழின் ஒழுக்கில் அடித்துச் செல்லப்படும்போதும் அவர்கள் அந்த அடித்துச் செல்லும் நீரின் விசைகளின் ஒரு பகுதியாகவே மாறிவிடுகிறார்கள். ஒரே சமயத்தில் அடித்துச் செல்லப்படும் இலைகளாகவும் அடித்துச் செல்லும் நீரின் ஒரு பகுதியாகவும் செயல்படுகிறார்கள். வரலாற்றின் அத்தனை பெருநிகழ்வுகளுக்கும் இது பொருந்தும். ஆனால் அந்த பெருந்திரளின் குரல்கள் மிகக்குறைவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஒரு காலத்தில் எந்த குரல்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படவேண்டும் என்பதையும் அந்த காலத்தின் மாய ஒழுக்கே முடிவுசெய்கிறது. அந்த பிரதிநிதிகளை அடுத்து வரும் காலங்கள் மாற்றியும் மறுத்தும் புதிய பிரதிநிதிகளை உருவாக்குவதும் உண்டு. ஆனால் எத்தனை பிரதிநிதிகள் வந்தபோதும் மறைந்தபோதும் அந்த வரலாற்றின் பின் மெளனமாக செயல்படும் பெருந்திரள் இருக்கும். அதன் குறைவான சொற்கள் முழுமையாக வெளிப்படும் களமாக வரலாறு முழுவதும் நாட்குறிப்புகளும் பயணக்குறிப்புகளுமே இருந்து வருகின்றன.



 

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை ஒரு சமூகத்தின் அன்றாட வாழ்வை பதிவு செய்யும் முக்கிய வரலாற்று ஆவணங்களாக நாட்குறிப்புகளும் பயணக்குறிப்புகளும் இருந்தன. ஆனந்தரங்கன் முதல் ஆன்னே ஃப்ராங்க் வரை மார்க்கோ போலோ முதல் ஃபா ஹியான் வரை இதைச் செய்திருக்கிறார்கள். அவர்களின் குறிப்புகள் வழியாகவே நாம் அந்த காலகட்டத்தின் அதிகாரப்பூர்வ வரலாற்றை மீறிய சித்திரங்களை அடைகிறோம். அவை அந்த காலத்தின் வரலாற்றில் மெளனமாக பெரும் பங்காற்றிய மனிதத்திரளின் வாழ்வு. அவை தரும் வரலாற்றின் சித்திரம் அதிகாரப்பூர்வ பெருஞ்சித்திரத்துக்கு  (macroscopic picture) எதிராக அமைதியான அன்றாட வாழ்வின் நுண்சித்திரங்களை (microscopic view) முன்வைப்பவை. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் செய்தித்தாள்களும் பிறகு வானொலி தொலைகாட்சி போன்ற ஊடகங்களும் குறிப்புகளின் இடத்தை எடுத்துக்கொண்டன. அவை ஒரு நூற்றாண்டில் பெருவணிகங்களாகவும் நுகர்வுக் கலாச்சாரத்தின் மையங்களாகவும் வளர்ந்தபொழுது ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் ஊடகமாக இணையம் உருவெடுத்தது. ஊடகங்களின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக இணையம் அதன் இயல்பிலேயே கட்டற்ற சுதந்திரத்தையும் ஜனநாயகத் தன்மையையும் கொண்டிருந்தது. பல்வேறு சமூக ஊடக முயற்சிகளுக்குப் பின் 2000த்தின் முற்பகுதியில் Blogger பெரும் வரவேற்பை பெற்றது. Blog தளங்கள் செய்தி ஊடகங்களின் செய்தி வடிவங்களுக்கு எதிராக நாட்குறிப்பின் வடிவத்தையே கொண்டிருந்தது. 2010களில் Blogகள்வணிகமயமாக்கப்படுவதற்கு முன் எழுதப்பட்ட சில Blogகள் இன்றும் இணையத்தில் உள்ளன. அவற்றை பார்க்கும்பொழுது ஏற்படும் முதல் உணர்வு அவற்றின் இயல்பான தன்மையும் (candidness) கட்டற்ற தன்மையும்தான். வரலாற்றின் பாரமின்றி அன்றாடத்தின் இயல்பை ரசிக்கக்கூடிய பதிவுகள் அவை. இன்றைய Facebook, Instagram இணையத்தில் அப்படிப்பட்ட பதிவுகள் சகஜமாக புழங்கக்கூடிய சூழல் இருந்தது என்பதை கற்பனை செய்து பார்ப்பதே கடினமான செயல்தான்.

 

அத்தகைய Blogகளின் தன்மையிலேயே ஈராக் போர்முனைக்கு குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வின் பின் இருந்த சொல்லப்படாத குரல்களின் பதிவாக இந்த குறிப்புகள் வெளிப்படுகின்றன. ஈராக் போர் பற்றிய ஆயிரக்கணக்கான செய்திகளும், புத்தகங்களும் கட்டுரைகளும் எழுதப்பட்டிருந்தாலும் அவை பெரும்பாலும் சார்பு நோக்குடனோ  அல்லது ஆய்வு நோக்குடனோதான் எழுதப்பட்டிருக்கின்றன. இணையத்தின் கட்டற்ற வெளிகளில் எழுதப்பட்ட இந்த குறிப்புகள் ஈராக் போரையோ அதன் தார்மீக கேள்விகளையோ மதிப்பிட முற்படுவதில்லை. போரில் எந்த தரப்பிற்கும் சார்பாகவும் எதிராகவும் வாதாடவில்லை. அவற்றின் நிலைப்பாட்டிற்கேற்ப மாற்றப்படவும் இல்லை. மாறாக இந்த குறிப்புகள் போர்முனையின் காட்சிகளை ஒரு சாதாரண புலம்பெயர் பணியாளரின் பார்வையில் ஆவணப்படுத்துகிறது. போரின் இரு தரப்போடும் எந்த விதமான சார்பும் அற்ற ஒரு இந்திய புலம்பெயர் பணியாளரின் குறிப்புகளாக இவை இருப்பதனால் இவை இயல்பான புறவயத்தன்மையோடே போரை அணுகுகின்றன. சதாம் ஹுசைனின் கைதையும், அமெரிக்க படையெடுப்பின் தார்மீக அநீதியையும் ஒரே அளவிலேயே இவை ஆவணப்படுத்துகின்றன. மாறாக அமெரிக்க ராணுவத்தின் உணவுப் பழக்கங்களையும், போர் முனையில் வாழும் இந்தியர்களின் இன்ப துன்பங்களையும், போர் இல்லாமல் இருந்திருந்தால் உலகின் முன்னேறிய நாடுகளில் ஒன்றாக இருந்திருக்க வேண்டிய ஈராக்கின் சிதைந்த ஏழிலையுமே இவை பிரதானப்படுத்துகின்றன. போரின் நாடகீயத் தருணங்களையும், தார்மீக சிக்கல்களையும் விடுத்து அதன் எதார்த்தங்களை நோக்கியே இந்த குறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன.

 

இந்த குறிப்புகளின் சிறப்பம்சம் அதன் தன்முனைப்பற்ற தன்மையே. போர்முனைக்குச் செல்ல காரணமாக இருந்த பசியும் வேலையில்லா திண்டாட்டமும் எந்த விதத்திலும் பிரதானப் படுத்தப்படாமல் அவற்றின் பொதுத்தன்மையிலேயே விவரிக்கப்படுகின்றன. மும்பையில் அது ஒரு சகஜமான நிலை என்ற அளவில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணியாளர்களாக ஈராக் செல்ல காரணமாக இருந்த அந்த பொதுப்பசி மட்டுமே பிரதானப்படுத்தப்படுகிறது. தன வயிற்றை தனியாகப் பிரித்து அதன் பசிக்கான தனிக்குமுறல்கள் என்ற அளவில் ஒரு வரிகூட எழுதப்படவில்லை. அதற்கு மாறாக ஈராக்கின் பெரிய பணியாளர் திரளின் மத்தியிலும் ஆவணங்கள் தீ விபத்தில் அழியும்பொழுது நீங்கள் அழும் காட்சியிலும், திருமணம் நெருங்கும்பொழுதும் நாடு திரும்ப இயலாமல் அவதிப்படுவதன் சித்தரிப்புகளிலும் வெளிப்படுவது புலம்பெயர் பணியாளர்களின் கைவிடப்பட்ட தனிமையே. போர் முனையின் சரி தவறுகளை தொகுத்து அதன் வழியே அந்த போரையோ அதன் சூழல்களையோ நீங்கள் மதிப்பிட்டு உங்களை முன்னிறுத்த முயலவில்லை. மாறாக அவை அந்த தருணங்களில் ஆவணப்படுத்தப்படுகிறது. அவற்றின் மதிப்பீடுகளை வாசகரின் சிந்தனைக்கு விட்டுவிடுகிறீர்கள். போர்முனையின் அன்றாட காட்சிகளை விவரித்தாலும் வரலாறு அக்காட்சிகள் பின்னணியில் ஒரு மௌனசாட்சியாக எப்போதும் இருக்கிறது. சதாம் ஹுசைனின் கைதையும் அவர் தூக்கிலிடப்பட்டதையும் ஈராக்கின் ஷியா பிரிவினரும் குர்திஷ் பிரிவினரும் கொண்டாடினார்கள் என்ற வரியையும் அமெரிக்கா ஈராக்கின் எண்ணெய் வளங்களை எடுத்துக்கொண்டதன் பின்னணியை பற்றிய சிறு பகுதிகளையும் ஈராக் போருக்கு பிந்தைய இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு வாசிக்கையில் ஏற்படும் உணர்வு அசாத்தியமானது.

 

இவற்றுக்கெல்லாம் மேலாக இந்த குறிப்புகளில் வெளிப்படும் நேர்மறைத்தன்மையும் ஆர்வமும் வாசிக்கும் எவரையும் தொற்றிக்கொள்ளக்கூடியவை. ஒரு திருமண வயது இளைஞனாக நீங்கள் போர்முனையில் சந்தித்த அனுபவங்கள், அமெரிக்க கலாச்சாரத்தின் சமூக குடும்ப கட்டமைப்புகளைப் பற்றிய புரிதல்கள், போர்முனையில் மனிதர்கள் அடையும் மாற்றங்கள் போன்றவற்றை திரும்பிப்பார்க்கும் உங்கள் குறிப்புகளில் எந்த விதமான எதிர்மறைச் சிந்தனைகளும் இல்லை. அதன் காரணமாகவே ஒரு வரலாற்று பெருநிகழ்வின் பெருஞ்சித்திரங்களையும் அதன் அரசியல்களையும் விடுத்து அந்த வாழ்வின் நுண்சித்திரங்களை நோக்கி இந்த கட்டுரைகள் விரிகின்றன. போர்முனை அனுபவங்களானபோதும் இவை மானுடத்தின் மீது பெரும் நம்பிக்கையுடனே எழுதப்பட்டுள்ளன. முனைப்புடையவர்களுக்கு இந்த உலகம் விசாலமாக திறந்து கிடக்கும் ஒரு பெரும் வாய்ப்புதான் என்ற நம்பிக்கையை பல்வேறு தருணங்களில் இவை உணர்த்துகின்றன.

 

நான் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் வருகிறேன் அண்ணா. ஈராக் போர் முடிந்து இரண்டு தசாப்தங்கள் ஆகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் இந்த குறிப்புகளின் பயன் என்ன என்று யோசித்தால் மீண்டும் பயணக்குறிப்புகளின் அவசியத்திற்கும் தொடக்க கால Blogகளின் தன்மைக்குமே சொல்லவேண்டியிருக்கிறது. இந்த குறிப்புகள் இணையத்தில் சொற்களும் அனுபவங்களும் சந்தைப்படுத்தப்படுவதற்கு முன் எழுதப்பட்டவை. சமூக ஊடகங்களில் தன்னை பின் தொடரும் நண்பர்களின் கவனத்தைக் கோறவும் சந்தையின் கவனத்தைக் கோறவும் வடிவமைக்கப்படாதவை. இவை ஒரு அசாதாரணச் சூழலில் வாழ்ந்த சாதாரண மனிதர்களின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் அன்றாடங்களை ஆவணப்படுத்துபவை. இவை இன்றைய அரசியல் விஞ்ஞானிகளுக்கும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பயனளிக்காமல் போகலாம். ஒரு சராசரி வாசகனின் ஆர்வத்தை தூண்டும் திடுக்கிடும் நாடாகிய தருணங்கள் இவற்றில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இவை வரலாற்றின் மௌன சாட்சிகளின் குறிப்புகள். மெல்ல நகர்ந்து செல்லும் வெல்லக்கட்டியின் அடியில் அதை தூக்கிச்செல்லும் எறும்புகளின் குறிப்புகள் இவை.     

 

அன்புடன்

விக்னேஷ் ஹரிஹரன்       

ஈராக் போர்முனை அனுபவங்கள் கடிதங்கள் .

கடிதம் 1

       

ஆஸ்டின் சௌந்தர் 



 /* சாமான்யன் சொல்லும் சரித்திரம் */


எழுத்தாளர் சுஜாதா எழுதிய ஒரு  கட்டுரையில் அல்லது அவரது கேள்வி பதில் பகுதியில் படித்ததாக ஞாபகம். இணையத்தில் படிப்பது அதிகமாகிவிட,  புத்தகம் அழிந்துவிடுமா என்ற கேள்விக்கு, அவரது பதில், “மின்சாரம் இல்லாத சமயத்திலும்,  புத்தகம் இருந்தால்தான்  எந்த நேரத்தில் எங்கிருந்தாலும், தேவையான பக்கத்தை புரட்டி தேவையானதை படிக்கலாம்”,  என்று சொல்லியிருப்பார். நான் ஒவ்வொரு முறை பயணம் செய்யும்பொழுதும், மின்புத்தகத்தை துணைக்கு எடுத்துக்கொள்ள இந்த வாசகம் நினைவில் வந்து போகும். ஒரு வாரத்திற்கு முன், கொலராடோவில் உள்ள டென்வருக்கு செல்கையில்,  விமானப் பயணத்தில் வாசிப்பதற்காக,  சமயம் கிடைக்கும்பொழுது முழுமனதுடன் மீண்டும் படிக்கவேண்டும் என்று சில நண்பர்களின் வலைத்தளங்களை தேர்வு செய்து வைத்திருந்தேன். அவற்றில் ஒன்று,  எழுத்தாளர் ஜெயமோகனின் சொல்புதிது குழுமத்தின் மூலம் எனக்கு அறிமுகமான நண்பர் , ஷாகுல் ஹமீது , அவரது வலைத்தளத்தில்  எழுதிவந்த "ஈராக் போர்முனை அனுபவங்கள்"  என்ற தொடர். செப்டம்பர் 2003-ல் நடந்த ஈராக் போரின்போது , அமெரிக்க ராணுவத்திற்கு உணவு போன்ற அடிப்படைத் தேவைகளை கவனித்து வந்த நிறுவனத்தில், ஒரு சாமான்யனாக வேலை செய்யும்பொழுது தான் பட்டறிந்த  சுய அனுபவத்தை செப்டம்பர் 2016 முதல் டிசம்பர் 2016 வரை 29 பதிவுகளாக எழுதியுள்ளார்.  “சதாமின் அரண்மனையில” என்று ஒரு பதிவை முதலில் அவர் வெளியிட, படித்த நண்பர்கள் கூட்டம்  , அதை தொடராக மாற்றுமாறு வேண்டுகோள் விடுக்க 29 பதிவுகளாக உருவெடுத்தது. 


சென்ற டிசம்பரில்  சம்பிரதாயமான  அறிமுகத்தின் ஊடே, நண்பர் ஷாகுல் அவரது பிளாக் ஸ்பாட்டை குறுஞ்செய்தி அனுப்ப,    அவர் எழுதிய சமீபத்திய பயணக் கட்டுரைகளை அவ்வப்பொழுது படித்தேன். சமுதாயத்தின் மீது நியாயமான கோபம் உள்ளவர்கள் செய்யும் நையாண்டியையும் , பயணங்களில் அவர் சாப்பிடும் தோசையை ரசித்து ருசித்து விபரப்பிப்பதையும் வாசிக்க வாசிக்க இவரது பக்கங்கள் புக்மார்க்கில் இருக்கவேண்டியது என்று கவனத்தில் வைத்துக்கொண்டேன். கட்டுரைகளை பாராட்டி சிறு சிறு குறுஞ்செய்திகள் அவருக்கு அனுப்புவேன். அப்படி நாங்கள் இருவரும் அணுக்கமாகி,  பாம்பின் கால் பாம்பறிபவர்களாக இனம் காணும் நாட்களில், “சதாமின் அரண்மனையில்”  கட்டுரையை அனுப்பியிருந்தார்.  'ஈராக்  போர்முனையில் அமெரிக்க ராணுவத்துடன் பணியில் இருந்தேன்"  என்று கட்டுரையை ஆரம்பித்து சதாமின் அரண்மனை, 29 அரண்மனைகள் கொண்ட பெரிய வளாகம், சதாம் பிறந்த ஊரான திக்ரித்த்தில் பேரிச்சம் மரங்கள் கைக்கு எட்டும் தூரத்தில் காய்த்து தொங்கி கொண்டிருக்கும் என்பதுபோன்ற வர்ணனைகளுடனும், குண்டு வெடிப்போ , தூசி கலந்த மண் பரப்போ இல்லாமல் மகிழ்ச்சியான நாட்களாக போய்க்கொண்டிருந்தது என்று  முதல் பத்தியில் சொல்லிவிட்டு , இரண்டாம் பத்தியில் , “காலையில் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தால் , தங்கும் கூடாரம் தீ பற்றி எரிகிறது”,  என வாசகனை சுவாரசியப்படுத்தும் திருப்பங்களும் நிறைந்து இருக்க,  நீண்ட கட்டுரையை அலுப்புத் தட்டாமல் வாசிக்க முடிந்தது.  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று இனம் கண்டு, அவரது வலைத்தளத்தில்,    முன்பக்கம், பின்பக்கம் என்று சென்று மற்ற பதிவுகளையும் படித்தேன்.  “ஷாகுல், இதை புத்தகமாகப் போடலாம்”,  என்று குறுஞ்செய்தி ஒன்றும்  அனுப்பினேன். இருபத்தொன்பது பதிவுகள் என்பதல்லாமல், அழகுடனும், ஆழத்துடனும்   அவர் விளக்கியிருக்கும் நேரடி அனுபவங்களை அதே அளவில்  உள்வாங்கிக்கொள்ள (என்னைப்போன்ற ஆமைவேக வாசிப்பவனுக்கு)  கொஞ்சம் அவகாசம் தேவை.  அதுவே போன வாரத்தின் பயணத்தின்போது வாசிக்கும் திட்டமானது.


மும்பையில் கூடிவாழ்ந்து வேலை தேடுபவர்களில் ஒருவராக இருந்து, நண்பரின் சொல்வழி செய்தியில் ஈராக்கில் அமெரிக்க ராணுவத்திற்கு உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பெறுகிறார். கண்ணுக்கு எட்டிய தூரம் மணல் தெரியும் அப்தலி பாலைவனத்தில், சமையல் செய்யத் தெரியாத ஷாகுல்,  பாத்திரங்கள் கழுவ ஆரம்பித்து , செய்யும் தொழில் நேர்த்தியால், துணை சமையல்காரனாக பதிவு உயர்வுக்கு பரிந்துரை செய்யப்படுகிறார். பாலைவனத்தில் கொப்புளங்கள் வந்து சட்டை அணியாமல் அவதிப்படுகிறார். கிடைக்கும் நேரத்தில் கிரிக்கெட் விளையாண்டு இனிமையும் காண்கிறார். 


அவரது மட்டும் அல்லாமல், போர்முனையில் இருக்கும் மற்றவர்களின்   அனுபவங்களை,  வாழ்க்கையை புரிதலுடன் ஏற்றுக்கொண்ட ஒரு நல்ல மனிதனாக அனைத்துக் கட்டுரைகளிலும் தன்னை வெளிப்படுத்துகிறார்.  வாரத்தில் ஒரு நாள் கணவனும் மனைவியும் சந்தித்துக்கொள்வார்கள். அதுவும் கூட்டத்தோடு கூட்டமாக என்று சொல்லிவிட்டு எல்லாம் ஒரு ஜான் வயிற்றுக்காக என்று ஆதங்கப்படுகிறார். 3 பாட்டில் தண்ணீரில் உள்ளாடை மட்டும் துவைக்க வேண்டிய அவலத்தை சொல்கிறார். “தண்ணீரில்லாத குளியலறையில் லக்ஷ்மண் குளித்துகொண்டிருந்தார்”,   போன்ற காட்சிகளின் மூலம் போரின் பாதிப்பை வாசகனின் மண்டைக்குள்  செலுத்தி கலங்க அடிக்கிறார்.


நகைச்சுவைக்கும், கிண்டலுக்கும் குறைவு இல்லை. உதாரணத்திற்கு 'சுக்ரியாவை' தேட விடுவது. ஸ்டோர்ஸில் இருந்த ஒருவன் நெடு நாட்களாக குளிக்கவே இல்லை குளிரில். மும்பை சென்றபின் குளிப்பதாக சொல்வான் . ஆங்கிலத்தில் இருந்து அரபிக்கு மொழிபெயர்த்ததில் சிக்கலாகி, இரண்டு ஆடுகளின் இறைச்சியை கொண்டு வரவேண்டியவன் ,  கயிறு கட்டி இழுத்து இரண்டு ஆடுகளை கொண்டு வருகிறான்.


ஷாகுலுக்கு சமைக்கத் தெரியாமல் இருக்கலாம்  (அதாவது போர்முனையில் இருந்த சமயம்). சாப்பாடைப் பற்றி நன்றாகவே விளக்கி வியாக்யானம் செய்கிறார். அமெரிக்க உணவு வகையாகட்டும், வட இந்திய உணவு வகையாகட்டும் எதுவாக இருப்பினும், தமிழ் நாட்டு அப்பளத்தை பற்றிச் சொல்வதை போலவே அவைகளைப் பற்றியும் சரளமாக சொல்லிச் செல்கிறார்.


சதாமை அமெரிக்கா பிடித்தது, உலகுக்கு அறிவித்தது என்று எல்லாம் நாம் பத்திரிகையில் படித்திருக்கிறோம். இந்த சாமான்யன் , அதே நாட்களில், அவர் என்ன பார்த்தார் , என்ன கேட்டார் என்று கட்டுரைகளில் நேரடி உண்மை இருக்கிறது. போரெல்லாம் முடிந்தது.  திருமணம் நிச்சியக்கப்பட்டு,, முகூர்த்தத்திற்கு முன்,  மாப்பிள்ளையாக அவர் திருமணத்திற்கு அவர் சரியாக செல்ல முடிந்ததா. அவரோடு கட்டுரை படிப்பவனையும் காக்க வைக்கிறார்.


தேதி குறித்து , நாட்குறிப்பில் எழுதி வைத்ததை  எடுத்து அடுக்கு அடுக்காக நிகழ்வுகளை சொல்லும் நிகழ்வுகளின் கோர்வைகள் அல்ல இந்தக் கட்டுரைகள்.  உள்ளத்தின் ஆழத்தில் இருந்து , பார்த்ததை, அனுபவித்ததை, உணர்ந்தததை, ஒரு சமுதாய நோக்கம் கொண்டவர்  உள்ளதை உள்ளபடி எழுதியுள்ளதால் அனைத்துக் கட்டுரைகளும்(பதிவுகளும்)   படிப்பவரின்  அகத்தை தொடும்.  போரின் முனையில் தானே நின்றதுபோன்ற அனுபவத்தை தரும். அமெரிக்காவில் நிறைய தலைமை நிர்வாக அதிகாரிகள் வாழ்க்கையை, தேர்ந்த எழுத்தாளர்கள் புதினம் போல் திருத்தி எழுத அது நியூ யார்க் பாத்திரிகையின் பெஸ்ட் செல்லரில் இடம் பெற்றுவிடும். அதுவும் அந்த தலைமை நிர்வாக அதிகாரியின் பெயரில். அதுபோல் ஷாகுலின் , 'ஈராக் போர்முனை அனுபவங்களை' , தேர்ந்த தொகுப்பாளர் ஒருவர்  எடுத்து, புத்தகத்திற்கு என்று உள்ள சில நேர்த்திகளை செய்து வெளியிட்டால், பெஸ்ட் செல்லர் ஆகுமோ இல்லையோ,  நல்லதொரு ஆவணத்தை சேமித்து  வைத்தது போல இருக்கும். அல்லது, இணையத்தை தாண்டியிருக்கும் வாசகர்களை சென்றடையும் பிறிதொரு  வழியாக இருக்கும்.




- வ.சௌந்தரராஜன் (காற்றின்நிழல்©)

05/24/2018