Sunday 11 June 2023

கப்பலின் விபரம்

 என் எஸ் பிரண்டியர் நாட்குறிப்புகள் 4



  

என் எஸ் யுனிடெட் எனும்   ஜப்பானிய நிறுவனத்துக்கு சொந்தமான இந்த கப்பல் பனாமாவில் பதிவு செய்யப்பட்டு நான் பணிபுரியும் நிறுவனத்தில் மலேசிய கிளை அலுவலகத்தின் கீழ்  இயக்கபடுகிறது.

  2016ஆம் ஆண்டு   நவம்பர் 30 ஆம்தேதி ஜப்பானின் கவாசாகி கப்பல் கட்டும் தளத்திலிருந்து கடலில் தள்ளிவிடப்பட்டது. 230 மீநீளமும்  37மீஅகலமும்  27மீ உயரமும் கொண்ட இக்கப்பல் திரவ வாயுவை(எல்பி.ஜி) உலகம் முழுவதும் எடுத்துச்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு சரக்கு தொட்டிகள் உள்ளன இதில் நாற்பத்தி ஆறாயிரம் மெட்ரிக் டன்கள் வரை சரக்கு நிரப்ப முடியும், பீயுட்டேன்C4H2(4)O+2=C4H10, ப்ரோப்பேனCH2(3)+2=C3H8 வகையை மட்டுமே கையாள முடியும்.

  KAWASAKI MAN B&W 7S60ME இஞ்சின் பொருத்தப்பட்டுள்ள இதன் குதிரை திறன் 17567 BHP கொண்டது. 46867 டன் மொத்த எடைகொண்ட  இக்கப்பலை எண்பத்தியாறு RPM வேகத்தில் புறப்பல்லர் சுழன்று தண்ணீரை உந்தி தள்ளினால் 15.6 நாட்டிகல்மைல்களை ஒரு மணி நேரத்தில் கடக்கும்.

  குடியிருப்பில்  மொத்தம் முப்பது அறைகள் உள்ளன. தற்போது இருபத்தி நான்கு பேர் மட்டுமே பணிபுரிகிறோம்.ஒரு மருத்துவமனை அறையும் ,துவைக்க இரு அறைகளும்,ஒரு ஜிம்னாசியம், ஒரு அடுமனை,அதிகாரிகள்,பணியாளர்களுக்கு உணவுக்கூடம்,தொலைக்காட்சி பெட்டியுடன் கூடிய மனமகிழ் மன்றம் தனித்தனியாக உள்ளது.

டெக்கில் ஒரு அதிகாரியும்,இரண்டாம் இஞ்சினியரும் உக்ரைன் நாட்டவர்,பயிற்சி இஞ்சினியரும்,மூன்றாம் அதிகாரியும் பிலிப்பைன்ஸ்,மேலுமொரு மூன்றாம் அதிகாரி டாக்காவை சார்ந்தவர்,இஞ்சினில் மோட்டார் மேன்,பத்திசாப் மற்றும் முதன்மை அதிகாரி ராவணன் சீதையை கடத்தி கொண்டுபோன தீவிலிருந்து.மூன்று பேருக்கும் தமிழ் தெரியாது.

   மற்ற அனைவரும் இந்தியாவின் உத்திரபிரேதசம்,ஆந்திரா,மகாராஷ்டிரா,மேற்குவங்கம்,குஜராத்,கோவாவை சார்ந்தவர்கள்.மல்லு யாரும் இல்லை.ஒவ்வொரு மாநிலத்தவரும் பேசும் மொழிகள்,உணவு கலாசாரம் வேறுவேறாக இருப்பதால் வேற்று நாட்டவரை போன்ற எண்ணமே எனக்குண்டு. சமையல்காரர் மம்தா பானர்ஜியின் சொந்தகாரர் எனவே எங்களுக்கு இந்திய உணவு கிடைப்பதில் சிரமமேதும் இல்லை.ஞாயிறு பிரியாணி மட்டும் அவரின் கைக்கு வசப்படவில்லை.

 பனாமாவில் இருந்து புறப்பட்டபின்  மொத்த பயண தூரத்தில் பெரும்குதியை கடந்து விட்டோம் நேற்று மாலை பயணஇலக்கை எட்ட எண்ணூறு மைல்கள் இருந்தது.நேற்று காலை முதல் கடலம்மா சீற தொடங்கிவிட்டாள்.காலை எட்டுமணிக்கு டெக்கில் செல்லும்போது நல்ல காற்றும்,ஒரு மீட்டர் அளவுக்கு அலையும் இருந்தது.கப்பலின் முன் பகுதிக்கு சென்றபோது கடலலையை காற்று வேகமாக டெக்கில் கொண்டுவந்து மென் மழைபோல் பீய்ச்சியடித்தது.

மதியத்திற்கு மேல் கப்பல் நன்றாக ஆட தொடங்கி கப்பலின் வேகம் குறைந்தது.நாங்கள் செல்லும் தீவு நாட்டில் பேய் மழை பெய்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக செய்திகள் சொல்கிறது.

நேற்றே காடட் அஞ்சுமன் சொன்னான் “நாளை பேட் வெதர் இருக்கிறது வெகுதூரத்தில் இருப்பதால் நமக்கு கிடைக்காது”என. ஆனால் இரவில் கப்பல் ஆடத்தொடங்கியது.பின்னர் ஆட்டம் குறைந்து சீரானது.

ஏழாம் தேதி காலை ஒன்பதுமணிக்கு தான் நாங்கள் செல்லும் ஹிட்டாச்சி பைலட்.கப்பல் சற்று முன்னதாவே செல்வதால்  வேகம் குறைக்கப்பட்டு 13 knot வேகத்தில் செல்ல தொடங்கியது.



 பனாமாவிலிருந்து புறப்பட்ட மறுநாள் முதலே (22 seagull) கடல் பறவைகள் எங்களுக்கு வழிகாட்டியாக பறக்கதொடங்கின.விமானம் போல் சிறகசைக்காமல் கால்கள் வெளித்தெரியாமல் மடக்கி வைத்துகொண்டு கப்பலுடன் தொடர்ந்து வரும். தலை மட்டும் நூற்று எண்பது டிகிரிக்கு மேல் அரை வட்ட வடிவில் திருப்பி தண்ணீருக்குள் பார்த்துக்கொண்டே வரும். அதன் கண்ணுக்கு மீன் தெரிந்தால் சிறகை மடித்து அந்தரத்திலிருந்து தொப்பேனே தண்ணீரில் மூழ்கி அலகில் மீனுடன் மேலே வரும் பின்னர் சிறகசைத்து பறந்து டெக்கில் அமர்ந்து உண்டபின் மீண்டும் கப்பலுக்கு பைலட்டாக முன்னால் பறந்துகொண்டே இருக்கும்.

இரவானதும் பார்வர்ட் மாஸ்டில் அமர்ந்துகொள்ளும்.கப்பலின் முன் பகுதி முழுவதும் வெள்ளை நிறமாகி போனது. போசன் “இதுக போவமட்டேங்கு கப்பல் புள்ளா தூறிஅழிச்சி போட்டுருக்கு,பெயின்றுக்க கலர் மாறி வெள்ளையாகிட்டு அது போகவே செய்யாது” என்றார். பயிற்சி காப்டன் திலிப் காடட் அஞ்சுமனிடம் “பிளக் இருந்தா அதுக்க பின்னான அடிச்சிவுடு கப்பல நாசம் ஆக்கிட்டு” என்றார்.

  போசன் தினமும் காலை முதல் மாலை வரை பயர் பம்ப் மூலம் கடல் நீரை டெக்கில் பீய்ச்சியடித்துகொண்டே இருந்தார். ஜப்பானை நெருங்கும்போது  இரு பறவைகள் மட்டுமே இருந்தது.மூன்றாம் அதிகாரி எஞ்சேல் மீண்டும் பனமா செல்லும் கப்பலில் அவை தாவியிருக்கும் என்றார்.

    டெக்கில் எனக்கு எளிய பராமரிப்பு பணிகள் மட்டுமே.இஞ்சினைபோல் கடுமையான உடலுழைப்பு இல்லை. நான்கு சரக்குதொட்டிகளிலும் நாற்பத்தியாறாயிரம் மெட்ரிக் டன் ப்ரோப்பேன் அமெரிக்கவின் ஹூஸ்டன் துறைமுகத்தில் நிரப்பப்பட்டது. இந்த திரவம் தொட்டிகளில் மைனஸ் நாற்பது டிகிரியில் இருக்கும்.

  திரவத்தின் வெப்பம் உயரும்போது திரவம் வாயுவாக மாறும். இந்த திரவம் வாயுவாக மாறும்போது ஒரு துள்ளி திரவம் நூற்றி எழுபத்தியாறு மடங்கு பெருகி வாயுவாகும்.அப்போது சரக்கு தொட்டியின் அழுத்தம் அதிகரிக்கும். அந்த வாயுவை சரக்கு தொட்டியிலிருந்து குழாய் மூலம் வெளியேற்றி இங்கிருக்கும் கம்ப்ரசர் மூலம் அழுத்தப்பட்டு குளிர்விப்பானில் குளிரவைத்து திரவமாக மாற்றி மீண்டும் சரக்கு தொட்டிக்குள் அனுப்புவோம்.

  இதற்கு ஒரு நான்கு கம்ப்ரசர்கள் கொண்ட ஒரு அறை உள்ளது.தொட்டியின் அழுத்தம் அதிகரிக்கும்போது கம்ப்ரசர்களை இயக்குவோம். தொட்டிகளிளிருந்து வெளியேறும் வாயு குழாய்கள்,திரவமாக மாறியபின் தொட்டிக்கு செல்லும் திரவகுழாய்களின் சரியான வால்வுகளை திறப்பதும் மூடுவதும்,கம்ப்ரசரை இயக்குவது நிறுத்துவது போன்றவரை என்னுடன் இருக்கும் மும்பையை சார்ந்த சச்சின் சொல்லி தந்தார்.கற்றுக்கொண்டிருக்கிறேன்.

   கம்ப்ரசர் இயக்கம் பற்றி விரிவாக கப்பல் காரன் டைரியில் எழுதியது ஒரு பதிவு எழுதுகிறேன்.

05 june 2023,

நாஞ்சில் ஹமீது.




Friday 9 June 2023

சான்றிதழ் பிறந்தநாள்

  

           விடுமுறையில் ஊரில் இருந்தபோது டிசம்பர் மாதம் பன்னிரெண்டாம் தேதி துவங்கும் நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த என்னை இளைய மகன் சல்மான் எழுப்பினான் அருகில் மூத்தவன் ஸாலிமும்,சுனிதாவும் நின்றுகொண்டிருந்தனர்.

  சல்மானின் கையில் எரியும் மெழுகுவர்த்தியை நடுவில் குத்திய கேக் இருந்தது. ஹாப்பி பிர்த்டே என சொல்லி கேக்கை வெட்ட சொன்னார்கள். 2012 ஆண்டு வீட்டுக்கு வந்திருந்த நண்பன் ஜெகநாத நாகராஜா “ஷாகுல் 12-12-12 மீண்டும் வராது கொண்டாடுவோம் என பிறந்தாநாள் கேக் வாங்கி வந்து ஊட்டியும் விட்டார்.

  சின்ன வயதில் பிறந்தநாள் எப்போது என்றே எனக்கு தெரியாது.கேக் வெட்டியதாக நினைவேயில்லை.நான் பிறந்த மாலை வேளையை எனது தாய் பீமா கூற கேட்டிருக்கிறேன்.

 உம்மா அப்போது காந்தாரிவிளை ஓடை செய்யது அவர்களின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தாள்.நிறை மாத கர்ப்பிணியான எனது தாயை பார்த்த்துவிட்டு மருத்துவச்சி ராமலெட்சுமி பாட்டி, “மக்களே மூஞ்சிய பாத்தா நீ இன்னைக்கு பெறுவா” என சொல்லிவிட்டு ராமலெட்சுமி பாட்டி திண்ணையிலேயே அமர்ந்திருக்கிறாள். 

  எனது உம்மாவிற்கு ராமலெட்சுமி கிழவியிடம் பிரசவம் பார்க்க விருப்பமில்லை. மருத்துவச்சியும் நகர்வதாக இல்லை.தான் இன்று குழந்தையை பெற்றெடுப்பேன் என உணர்ந்த வேளையில். ராமலெட்சுமி கிழவி “பீமா நான் போய்ட்டு வாறன் நொம்பலம் வந்த சொல்லிவுடு” என கூறிவிட்டு சென்றதும்.

   என் தாய் சந்திரி நர்ஸை அழைத்துவர ஆள் அனுப்பியிருக்கிறாள். அன்று மாலை ஆறரை மணிக்கு நான் பிறந்தேன். “ரொம்ப கஷ்டபடுத்தமா நீ பொறந்தா”என தாய் சொல்வாள். அதே ஆண்டு மிக அருகிலேயே வீடு கட்டி குடியேறியதாக என் வாப்பா சொல்வர். 

  என் மகனுடன் காந்தாரிவிளைக்கு சென்றபோது இதுதான் நான் பிறந்த வீடு என அந்த வீட்டை காட்டிகொடுத்தேன். “அப்போ நீங்கோ ஆசுபத்திரியில பொறக்கலியா என” கேட்டான்.

   நான்கரை வயதானபோது மணவாளக்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளியில் என்னை சேர்ப்பதற்காக பக்கத்து வீட்டு உதவி அப்பா (நாடக உதவி இயக்குனர்) பள்ளிக்கு அழைத்து சென்றார். அப்போது ஐந்து வயது பூர்த்தியானதால் ஒன்றாம் வகுப்பில் சேர்த்து கொள்வார்கள் கையை தலைக்கு மேலே சுற்றி காதை தொடசொல்லி சோதனை செய்வார்கள்.

  அப்படி நான்கரை வயதான என்னை உதவியும்,தலைமையாசிரியர் வறுவேல் சாரும் சேர்ந்து மே இருபதாம் தேதி என புதிய பிறந்த நாளை உருவாக்கி பள்ளியில் சேர்த்தனர்.

  அப்படி பள்ளி சான்றிதழ்கள் வழியாக பாஸ்போர்ட் மற்றும் அனைத்து ஆவணங்களிலும் பிறந்தநாள் மே இருபதாம் தேதியாகிவிட்டது. 2019இல் முதல் முறையாக கப்பலில் எனது சான்றிதழ் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள்.



    இப்போது இருக்கும் இந்த கப்பலில் சென் சாம்ராஜ் என்பவருக்கு பதினெட்டாம் தேதி பிறந்தநாளாக இருந்தது.கப்பலில் காப்டன் ஆசிஸ் நய்யார்,சமையல்காரர் சிரஞ்சீவியிடம் இருவரின் பிறந்தநாளையும் ஒன்றாக கொண்டாடுவோம் என சொல்லி கேக் தயார் செய்ய சொல்லியுள்ளார்.





   இருபதாம் தேதி மாலை கப்பலில் கேக் வெட்டி,பார்டியுடன் பாட்டும் ஆட்டமும் உண்டு.வங்கி,எனது கப்பல் நிறுவனம்,நான் படித்த மரைன் கல்லூரிகள் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி அனுப்பிய மின்னஞ்சல்களால் மெயில் பாக்ஸ் நிரம்பிவிட்டது. முன்பு என்னுடன் புணிபுரிந்த எர்ணாகுளம் கோப குமார் சொல்வார்  “சாஹுலே அது ஒரு செட்டபானு ஈ திவசத்தில மெயில் தன்னே வருந்நது” என்பார்.

   மனைவி சுனிதாவிற்கும் இன்று சான்றிதழ் பிறந்தநாள். முன்னாள் பாரத பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு நான்கு வருடங்களுக்கு (பிப்ரவரி  29) ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். யாருக்கு கிடைக்கும் இரட்டை பிறந்தநாள். 

Shahul hameed ,

20 05 2023.

பணியில் இணைதல்

 என் எஸ் பிரன்டியர் நாட்குறிப்புகள் 3

  பணியில் இணைதல்.

        ஞாயிற்றுக்கிழமை(14may2023) மாலை ஆறு மணிக்கு “டிரைவர் வருகிறார் தயாராகுங்கள்” என வரவேற்பறையிலிருந்து  அழைத்து சொன்னார்கள்.

விடுதியறையிலிருந்து பனாமாவின் சாலை

விடுதி வரேவேற்பறையிலிருந்த ெபெண் சிலை


        

விடுதியறை நாட்கள் பற்றி தனியாக எழுதவேண்டும்.முதல் மூன்று நாள் தனிமை படுத்தலுக்குப்பின் கொரோனா சோதனைக்கு சாம்பிள் எடுத்து சென்றார்கள்.(09-may -2023)செவ்வாய்க்கிழமை இரவு விடுதியறைக்குள் நுழைந்தேன்.கப்பல் பனாமா வருவது தாமதமானதால் மேலும் இரு தினங்கள் இருக்கவேண்டும் என்றபோது சற்று கடினமாகிவிட்டது.  

  (12may2023)வெள்ளிக்கிழமை காலை கொரோனா சோதனைக்காக விடுதியின் வரவேற்பறைக்கு வந்தபோதுதான் தெரிந்தது இலங்கையை சேர்ந்த பத்தி சாப் ஹிராத் (எலெக்ரிகல் ஆபிசர்) பங்களாதேசை சார்ந்த ரஹீம் உல்லா மூன்றாம் அதிகாரி இருவரும் எங்களுடன் கப்பலுக்கு வருகிறார்கள் என. 

எங்களது பாஸ்போர்ட்டுடன் இமிகிரேசன் பெண் அதிகாரி ஒருவரும்,ரஹீம் உல்லாவின் பாஸ்போர்ட்டை வைத்திருந்த அதிகாரி ஒருவரும் என பயண பைகளுடன் ஏழுபேர் காரில் ஏறிக்கொண்டோம்.இலங்கையை சார்ந்தவர்கள் பனாமாவில் வெளியே செல்ல தடையில்லை.

 பனாமா மிக சிறிய நகரம்தான் நட்சத்திர விடுதிகளும்,மால்களும்,ஹோட்டல்களும்  என வானத்தை முட்டும் கட்டிடங்கள் நிறைந்த இந்த நகரை விட்டு ஐந்து முதல் பத்து நிமிடத்திற்குள் வெளியேறி விட்டோம். பின்பு இந்தியாவின் கொங்கன் பகுதியை நினைவுபடுத்தும் சமதளமற்ற பச்சை சூழ்ந்த காடு தான்.சாலையின் இருபுறமும் வீடுகளோ,கடைகளோ கிளை சாலைகளோ எதுவும் இல்லை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சையே காட்யளித்தது அந்தியணைந்து இருள் கவ்வுவது வரை பச்சைவெளியை அமைதியாக தியானம் போல பார்த்துக்கொண்டிருந்தேன்.

  நூற்றியிருபது கிலோமீட்டர் வேகத்தில் பறந்த கார் ஒரு மணிநேரத்தில் கிறிஸ்டோபல் நகரை எட்டியது.இமிகிரேசன் அதிகாரிகள் எங்களது பாஸ்போர்ட்டை ஏஜென்டிடம்  ஒப்படைத்துவிட்டு சென்றனர். (ஐஞ்சு நாளா வெளிய எங்கயும் உடாம பிடிச்சி வெச்சி பத்திரமா கொண்டு வந்து சேத்துருக்கேன் தண்ணியில உட வேண்டியது உன் பொறுப்பு என சொல்லியிருப்பார்களோ என எண்ணிக்கொண்டேன்).

   முகவர்  துறைமுக அதிகாரிகளிடம்அனைத்து முறைமைகளையும் முடித்து கப்பல் ஏற ஒப்புதல் பெற்று கடவு சீட்டுகளை எங்களிடம் தந்தார்.டிப்பாச்சர்(DEPARTURE)என  முத்திரை குத்தப்பட்டிருந்ததை கண்டேன்.

  தூரத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்றுகொண்டிருக்கும் கப்பல்களுக்கு தேவையான உணவு பொருட்கள்,உதிரி பாகங்களை ஏற்றிய லாரிகளை இங்கே வாயிலில் சோதனை செய்து அனுப்புகிறார்கள். இங்கு ஸ்கானர் ஒரு பெரிய கறுத்த லாப்ரர்டோ நாய்.சுங்க அதிகாரி லாரியின் கதவை திறந்து  சற்று பின்னோக்கி சென்று நாயை ஓட விட்டு நான்கடி உயரமுள்ள லாரியில் ஏற்றி விடுகிறார். நாய் ஒவ்வொரு பெட்டியாக முகர்ந்து பார்க்கிறது குரைக்கவேயில்லை. 

  லாரியின் சோதனை முடிந்து சுங்க அதிகாரியும்,ஸ்கானரும் கீழே இறங்கினர்.பின்னர் சரக்குகளுடன் லாரி வாயிலை கடந்து உள்ளே சென்றது.2008 ஆம் ஆண்டு பனாமா விமான நிலையத்தின் வாயிலில் நுழைந்ததும் ஒரு புஷ்டியான நாய் தான் எங்கள் பயணபை களை சோதித்து நீ உள்ளே போலாம் என அனுப்பி வைத்தது.

 மெக்சிகோவிலும்,இஸ்ரேலிலும் கப்பல் சென்றபோது போதை பொருட்கள் சோதனைக்காக அதிகாரிகள் நாய்களையே கப்பலுக்குள் கொண்டு வந்தது நினைவில் மின்னி சென்றது.

   எங்கள் பயண பைகளை இங்கே சோதிக்கவில்லை கடவுசீட்டை கையில் தந்துவிட்டு முகவர் எங்களை படகு துறைக்கு அழைத்து சென்றார். நீண்ட வரிசையில் கப்பல்களுக்கு சரக்குகளை கொண்டு செல்லும் படகுகள் நின்றுகொண்டிருந்தது. படகில் பைகளை படகில் வைத்ததும் முகவர் “வேறொரு கப்பலுக்கு செல்லும் மாலுமி ஒருவர் வருகிறார் அவர் வந்ததும் நீங்கள் கிளம்பலாம் இருபது நிமிடங்கள் ஆகும்”என சொல்லிவிட்டு. “ஹாவ் எ சேப் வாயேஜ்” என கை குலுக்கி விடைபெற்று சென்றார்.

படகில் 


 ஆறடி உயரத்தில் நல்ல திடகாத்திரமான உடல் வாகும் கொண்ட வெள்ளைகார மாலுமி மிக குறைந்த உடமைகளுடன் படகுக்கு வந்தார். நீண்ட பயணத்தின் களைப்பால் முகம் சுருங்கி போய் இருந்தது.

   கிரிஸ்டோபலில்  கரையிலிருந்து கடலுக்குள் படகு நுழைந்தது.துறை முகப்பில் கரையணைவதற்காக  சரக்கு பெட்டகங்கள் ஏற்றிய பெரிய கப்பல் ஒன்று ஒரு தீவு போல மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது.அதில் ஒளிர்ந்த விளக்குகள் ஒரு சிறு நகரை போலிருந்தது.

   வெள்ளைக்கார மாலுமி பதினைந்து நிமிட பயணத்திற்குப்பின் அவரது கப்பலுக்கு சென்றார்.எங்கள் படகுக்காரர் அவரது பைகளை கப்பல் பணியாளரின் கையிலேயே கொடுத்தார்.குள்ளமான பெரிய மீசையுடன் அரைகால் சட்டையணிந்த வெள்ளைக்காரர் ஒருவர் அவரை வரவேற்று கப்பலுக்குள் அழைத்துசென்றார். கப்பல் காப்டனாக இருக்கும் என எண்ணிக்கொண்டேன்.

 படகுக்காரர் தனது மொபைலை எங்களிடம் காட்டி கப்பல் வந்துகொண்டிருக்கிறது  இன்னும் பதினைந்து நிமிடங்கள் ஆகும் என சொல்லியபின் காத்திருந்தோம்.படகு நின்றதும் பயங்கரமாக ஆடத்தொடங்கியது. மீண்டும் படகை இயக்கி அலையின் போக்குக்கு தகுந்தமாதிரி திருப்பி பின் நிறுத்தினார் படகோட்டி.  பனாமா அதிகமான மழை பொழிவுள்ள இடம் மேற்கூரை இல்லாத படகில் பயணபைகளுடன் ஒருமணி நேரம் இருந்தபோது மழை இல்லாமல் காத்த இயற்கைக்கு  நன்றி சொன்னேன்.

    என் எஸ் பிரண்டியர் அருகில் வந்ததும் கப்பலின் முன் பகுதிக்கு சென்று பயண பைகளை அடுக்கிய ராட்சத பையை கப்பலிலிருந்து இறங்கிய கிரேனின் கொக்கியில் இணைத்தோம்.ஆவணங்கள்,மடி கணினி இருந்த பைகளுடன் மெதுவாக ஓடிக்கொண்டிருந்த கப்பலின் ஏணியில் தாவி ஏறி கப்பலின் மேல் தளத்துக்கு சென்றோம். எங்கள் பைகளை பத்திரமாக கப்பலுக்குள் கிரேன் மூலம் இறக்கி வைத்திருந்தார் லக்னோவின் போசன் யாதவ் (கிருஷ்ணனின் உறவு காரராக இருப்பாரோ) ஐடியா மணி இருந்திருந்தால் கோனாரே என கட்டியணைத்திருப்பார்.

  ரத்னகிரியின் ஓ எஸ் இர்பான் எங்களிடம் கையொப்பம் பெற்றபின் “வெல்கம் ஆன் போர்ட்”உள்ளே போக சொன்னார்.எங்களுடன் வந்த பயிற்சி காப்டனும்,மூன்றாம் இன்ஜியரும், ஏழு மாதங்களுக்குபின் மீண்டும் இங்கே வருகிறார்கள்.இலங்கையின் முதன்மை அதிகாரி டான் ............................அலெக்ஸ்  பயிற்சி காப்டனை கட்டித்தழுவி வரவேற்றார்.கப்பல் பனமா கால்வாயை நோக்கி நகர்ந்தது.

  எங்களுக்கான அறைகளை காட்டித்தந்தார் காடட் மும்பையின் அஞ்சுமன். உணவுகூடம் சென்றோம். ஹாட் டாக் இருந்தது. ஆளுக்கொன்று சாப்பிட்டோம்.

  அறைக்கு வந்து பத்திசாபிடம் இணையம் கடன் வாங்கி சுனிதாவிற்கு அழைத்து சொன்னேன் “வந்து விட்டேன் கப்பலுக்கு” என.

  நீராடி கடமையான தொழுகைக்குப்பின் நீண்ட பயணத்திற்குப்பின் கப்பலுக்கு பத்திரமாக வந்து சேர்ந்தமைக்கு நன்றி சொல்லும் பொருட்டு இரண்டு ரக்காத் நபில் தொழுதபின்  அறைக்கு வெளியே வந்தேன்.மழை சட்டைகளை அணிந்துகொண்டு கப்பல் பணியாளர்கள் கயிறுகளை பனமா கால்வாயின் ஓரங்களில் வீசி எறிந்தனர்.கால்வாய் பணியாளர்கள் அதை இழுத்து பெரிய கயிற்றின் கண் வடிவ கண்ணியை பொலர்ட்டில் பொருத்தினர்.




பனாமா கால்வாய்


 கப்பல் கால்வாயின் முதல் கேட்டுக்குள் நிறுத்தப்பட்டபின் தண்ணீரை நிரப்பதொடங்கினர் கப்பல் மேலே உயர தொடங்கியது.

மேலும் .

நாஞ்சில் ஹமீது.

 கப்பல் காரன் டைரி இனி தொடர்ந்து வரும். இணையம் கிடைக்கும்போது எனது தளத்தில் வலையேற்றுவேன்.