Tuesday 25 April 2023

இஃதிகாப் நாட்கள் 2

 


  

       கப்பலில் வேலை செய்யும் எனக்கு ஞாயிறுகளில் மதியத்திற்குமேல் ஓய்வு கிடைக்கும்.ஏதும் அவசர வேலை அல்லது கப்பல் துறைமுகத்தில் இல்லாமல் இருக்கவேண்டும். முழு நாள் ஓய்வு என்றால் ஒரு வித சோர்வை தரும்.எப்போதும் பரபரப்பாக எதையாவது செய்து கொண்டே இருப்பவர்களுக்கு வேலை இல்லை என்றால் “பைத்தியம் புடிச்சது போல இருக்கு”என சொல்ல கேட்டிருகிறேன். கப்பல்காரர்களுக்கு தண்டனை கொடுக்க நினைத்தால் வேலைக்கு வர வேண்டாம் அறையில் அமர்ந்துகொள் என சொன்னால் போதும்.

   எப்போதும் எதையாவது செய்துகொண்டே இருக்கும் நமக்கு சும்மா இருத்தல் கடினம் தான். என்னால் எங்கும் தொடர்ந்து அமர முடியாது.வேலை தேடி மும்பை சென்றபின் ஒரே வேலையில் அமராமல் இரண்டு வருடங்களில் மூன்று கம்பனிகள் மாறினேன்.இப்போது இருக்கும் கப்பல் பணியில் ஒவ்வொரு நாளும் ஒரு புது நாள் புதிய பிரச்சனைகளை சந்தித்தே ஆக வேண்டும்.ஏதும் பிரச்னை இல்லை என்றால் காலையில் எழுந்ததும் கழிப்பறை வேலை செய்யாது.அதை சரி செய்தபின் கழிப்பறை உபயோகிக்க முடியும் என்ற கட்டாயம்.அதனால் தான் பதினேழு ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் கப்பல் பணியில் நீடிக்கிறேன்.

    இஃதிகாப் இருக்கும்போது அடுத்த ஐந்து நிமிடத்தில் அல்லது ஒரு மணிநேரத்திற்குப்பின் அல்லது நாளை மறுநாள் இதை செய்தாக வேண்டும் என எதுவும் இல்லை. எனக்கு அது ஒரு பெரிய விடுதலையாக இருந்தது.செய்வதற்கு ஒன்றும் இல்லை.(no task,no target,no goal)

  அதிகாலை பஜர் தொழுகைக்குப்பின் ஆறு மணிக்கு தூங்கி பத்துக்குள் விழித்து குளித்து ஆடை மாற்றி வந்தால் தொழுகை,திக்ர்,குர்ஆன் ஓதுதல் வேறொன்றும் இல்லை. நாள் முழுவதும் இரவும்,பகலும் இறைவனின் இல்லத்தில் அமர்ந்திருந்து இறை வணக்கமும்,வழிபாடும்,இறைவனுக்கு நன்றி செலுத்துதலும்.நோன்பு ஆதலால் பகலில் உண்ணவும்,பருகவும் தேவையில்லை அதனால் சிறுநீர் கழிக்கவும்,கழிப்பறை செல்லும் தேவையும் மிகக்குறைவு.

நான்காம் நாள் அர்சத்,அனீஸ் என ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இருவர் இஃதிகாப் இருக்க வந்தனர்.முஸ்தபா சென்றுவிட்டான். மறுநாள் இர்பான் மூன்று தினங்கள் இருப்பதற்காக மீண்டும் வந்தான்.அன்றாடம் வேலை செய்து குடும்பத்தை நடத்தும் ரஹீம் மற்றும் தொழிலதிபர்கள் முஜிப்,பீர் முகம்மது ஒருநாள் இருப்பதாக சொல்லிவிட்டு வந்தனர்

      வடசேரி பள்ளி கனமூலம் சந்தை,வடசேரி பேருந்துநிலையத்தை ஒட்டியே இருக்கிறது. இஃதிகாப் இருக்கும் எங்களுக்கு காட்சிகளே இல்லை,யாரிடமும் பேசவும் கூடாது என்பதால் செவிவழி செய்தி ஏதும் மூளைக்கு செல்லவில்லை.இரண்டாயிரம் சதுர அடி பள்ளிவாசலுக்குள் இருந்த டிஜிட்டல் கடிகாரமும்,இமாம் குத்பா ஓதும் மெம்பர்  மட்டுமே காட்சி.நான் பெரும்பாலும் விழிகளை சந்திப்பதை தவிர்த்தேன்.திக்ர் மூலம் எளிதாக தியானத்துகுள் செல்ல முடிந்தது.

                        


   ரமலானின் கடைசி பத்தில் லைத்துல் கதிர் எனும் குர்ஆன் இறக்கப்பட்ட புனித இரவு வருகிறது.நபிகள் நாயகம் (ஸல்) கடைசி பத்தில் ஒற்றைபடையான நாளில் லைலத்துல் கதிர் இரவு வருகிறது அதை தேடிக்கொள்ளுங்கள் என்றார். லைலத்துல் கதிர் இரவில் நின்று வணங்கினால் எண்பத்து மூன்று ஆண்டுகள் வணங்கியதற்கு நிகர் என்பதால் ரமலானின் கடைசி பத்தில் லைலத்துல் கதிர் இரவை அடையும் பொருட்டு  பெரும்பாலான பள்ளிவாசால்களில் இரவு இரண்டு மணிக்கு தொழுகை நடைபெறுகிறது.

  ஆறாவது நாள் மாஹீன் ஹாஜியார் வந்து மூன்று தினங்கள் இருந்தார்.  என் இளைய மகன் சல்மான் ஏழாம் நாள் வந்து ஒருநாள் மட்டும் இஃதிகாப் இருந்து சென்றான். இஃதிகாப் இருந்து நன்றாக மனம் அமைதியடைந்திருந்தது. இருபத்திஏழாம் இரவு லைலத்துல் கதிர் இரவு என நம்பபடுவதால் அன்று மாலை மக்ரிப் தொழுகைக்குப்பின் உள்பள்ளி பூக்களால் அலங்கரிக்கபட்டு இரவு முழுவதும் தொழுகைக்காக தயார் ஆனது. பத்து மணிக்கு துவங்கிய இஷா தொழுகையை தொடர்ந்து தராவீஹ் தொழுகையும்,பயான்,தஸ்பீக் தொழுகை என நீண்ட இரவில் அன்று வழக்கத்துக்கு மாறாக சுமார் எழுநூறு பேர் வரை ஆண்களும்,பெண்களுமாக திரண்டுவிட்டனர்.பெரும்பாலானோர் புத்தாடை அணிந்து கொண்டாட்ட மனநிலையில் இருந்தனர்.மாலையில் பூக்களால் அலங்காரம் செய்யும்போதே அமைதி கலைந்துவிட்டது.மறுநாள் மதியத்திற்கு மேல் தான் மீண்டும் அமைதிக்குள் செல்ல முடிந்தது.

     இரண்டாவது நாளே உணர்ந்தேன் இஃதிகாப் இருப்பது ஒன்றும் கடினம் இல்லை என.மனம் அமைதியில் இருந்தது. ஆனால் இங்கே ஒரு காலம் இருந்தது அது நிகழ்காலம் மட்டுமே.பள்ளிவாசலில் ஐவேளை தொழுகைக்கும் பாங்கு சொல்லி நேரம் தவறாமல் தொழுகை நடப்பதால் காலம் இருப்பது தெரிந்தது. மருத்துவமலை போல் ஒரு உயரமான இடத்தில் தனிமையில் அமர்ந்தால் காலமின்மையில் சென்றிருக்கலாம்.

   எது தேவை என தெளிவாக புரிந்தது. குடியிருக்க ஒரு வீடு,உடை,உணவு மட்டுமே. மூத்த மகன் இவ்வாண்டு கல்லூரி செல்கிறான்,இளையவன் ஏழாம் வகுப்பு இருவருக்கும் நல்ல கல்வியை கொடுப்பது என் கடமை. அடுத்த பத்தாண்டுக்குள் அதற்கு பின் வாழ்வதற்கு தேவையான பொருளை வேகமாக சம்பாதித்து சேர்த்து விட்டு முடிந்தவரை வீட்டிலேயே தனிமையில் இருக்க எண்ணியுள்ளேன்.

 சூழ்நிலை அமையுமானால் மாதத்தில் ஒருநாள் (பிறை 13,14,15,16 ல் ஒரு நாள்) நோன்பிருந்து மொபைல் போனை ஆப் செய்துவிட்டு உலகிலிருந்து என்னை துண்டித்து கொண்டு திக்ர்ல் அமர போகிறேன்.வரும் காலங்களில் ரமலான் மாதத்தில் விடுமுறையில் இந்தியாவில் இருந்தால் இதுபோல் (இன்ஷா அல்லாஹ்) பத்து நாள் இஃதிகாப் இருப்பதாகவும் உள்ளேன். 

  இஃதிகாப் செல்லும்முன் சுனிதா சொன்னாள் “மொபைல் இல்லாம உங்களால இருக்க முடியாது,பத்து நாள் உங்களால இஃதிகாப் இருக்க முடியுமா:"எனவும் கேட்டாள். பத்து நாள் இஃதிகாப் இருந்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது சுனிதா மகிழ்ச்சியில் இருந்தாள்.முன்பே சொல்லியிருந்தாள் உங்களை ஒரு நாளாவது இஃதிகாப்புக்கு அனுப்ப வேண்டும் என எண்ணியிருந்ததாக.

  இறைவனுக்கு பின் சுனிதாவுக்குதான் நன்றி சொல்வேன்.என் இஃதிகாப் நாட்கள் முழுமையடைந்தது அவளால் தான் .வீட்டிலிருந்து எந்த செய்தியும் வரவில்லை.வீட்டை, மகன்களை கவனித்து கொண்டாள்.அதனால் தான் என்னால் முழுமையாக இஃதிகாப்பில் அமர முடிந்தது.

  முற்றும்.

  ஷாகுல் ஹமீது,

    25 april 2023.

Monday 24 April 2023

இஃதிகாப் நாட்கள்



இஃதிகாப் இருப்பதற்காக பன்னிரெண்டாம் தேதி மாலை மக்ரிப் தொழுகைக்கு முன்பே வடசேரி பள்ளிவாசல் சென்றுவிட்டேன்.நோன்பு திறப்பதற்காக கூடத்தில் சென்றபோது மாஹீன் ஹாஜியார் “நீங்கோ பள்ளிக்குள்ள போயிருங்கோ”என்றார்.பேரீத்தம் பழம்,தர்பூசணி துண்டு,வாழைப்பழம் இருந்த தட்டுடன், ஒருகப் தண்ணீர்,சர்பத் எடுத்துவிட்டு பள்ளிக்குள் அமர்ந்து நோன்பு திறந்தோம்.

        



 அப்போதே இஃதிகாப்துவங்கிவிட்டது,தொழுகைக்குப்பின் நோன்பு கஞ்சி பள்ளிக்கு  உள்ளேயே எங்களுக்கு வழங்கப்பட்டது.கட்டிட பொறியியல் பட்டதாரி சுதீர் என்னுடன் பத்துநாள் இஃதிகாப் இருப்பதாக சொன்னான்.பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன் இர்பான் இன்று மட்டும் இருப்பேன் இரு தினங்களுக்குப்பின் மீண்டும் மூன்று தினங்கள் இஃதிகாப் இருக்க வருவேன் என்றான்.

   ஏழு நாற்பதுக்கு இஷா தொழுகைக்கு பாங்கு சொன்னபின் உளு* செய்து விட்டு இரண்டு ரக்காத் சுன்னத் தொழுதபின் திக்கிரில் அமர்ந்திருந்தேன்.எட்டேகாலுக்கு இஷா தொழுகைக்குப்பின் எட்டரைக்கு இருபது ரக்காத் தராவிஹ்* தொழுகை முடிந்து துவாவுக்குபின் மூன்று ரக்காத் வித்ர் தொழுகை பின்னர் அன்று தராவிஹ் தொழுகையில் ஓதிய குர் ஆன் சூராவிலிருந்து இமாம் பயான் சொன்னார்.பத்தே கால் மணிக்கு பள்ளிவாசல் காலியாகிவிட்டது.

  மோதினார் வாசல் கதவுகளின் சாவிகளை இர்பானிடம் கொடுத்து பூட்ட சொல்லிவிட்டு கடைசியாக பள்ளியை விட்டு வெளியேறினார்.இரண்டு இமாம்களும் பள்ளியின் மேலே இருந்த தங்கும் அறையில் தூங்க சென்றனர்.தொழுகை நடக்கும் உள் பள்ளியில்தான் இஃதிகாப் இருப்பவர்கள் தூங்க வேண்டும்.சுனிதா தந்துவிட்ட பாலை குடித்துவிட்டு மாடியில் சென்று உளு செய்துவிட்டு பள்ளிக்குள் வந்து இரண்டு ரக்காத் நபில் தொழுதபின் சிறிது நேரம் திக்கிரில் அமர்ந்திருந்தேன்.

  பதினோரு மணிக்குப்பின் படுத்துக்கொண்டேன் கால் பாதங்களையும்,கழுத்து,கைகளையும் கொசு அவ்வபோது கடித்துக்கொண்டே இருந்ததால் சரியான தூக்கம் இல்லை.அதிகாலை இரண்டு மணிக்கு முன்பாகவே விழித்து தயாரானேன்.இரண்டு மணிக்கே ஷமா ஷாகுல் ஹமீது,பள்ளி நிவாகிகளில் ஒருவரான பீர் முகம்மது,எழுபது வயதை கடந்த ஒருவர்,இன்னும் ஒரு இளைஞர் பள்ளிக்கு வந்துவிட்டனர்.

                               


  சரியாக இரண்டரை மணிக்கு தகஜத் தொழுகை துவங்கியது. மங்கிய வெளிச்சத்தில் மிக மெதுவாக தொழுத எட்டு ரக்காத் தொழுகை மூன்றரை மணிக்கு  முடிந்தது . பள்ளி நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட இருபதுபேருக்கு  அங்கே ஸகர் உணவு வழங்கபட்டது. இஃதிகாப் இருந்த எங்கள் மூவரை தனியாக ஒரு மேஜையில் அமரவைத்தனர்.எங்களிடம் பேசுவதை பெரும்பாலானோர் தவித்தனர்.

 ஸகர் உணவு உண்டபின் மீண்டும் உளு செய்து இரண்டு ரக்காத் நபில் தொழுதுவிட்டு திக்கிரில் அமர்ந்திருந்தேன் காலை நான்கு நாற்பதுக்கு ஸகர் முடிவு நேரம் கடைசியாக அரை கப் தண்ணீர் குடித்துவிட்டு தண்ணீர் பாட்டிலை காலி செய்து வைத்துக்கொண்டேன்.காலை ஐந்து மணிக்கு பஜர் தொழுகைக்கு பாங்கு சொன்னதும். மீண்டும் உளு செய்து இரண்டு ரக்காத் முன் சுன்னத் தொழுது அமர்ந்தேன்.ஐந்து இருபதுக்கு பஜர் தொழுது துவாவுக்குபின் மீண்டும் பள்ளிவாசலில் ஆளோளிந்தது.

   சிறிது நேரம் சும்மா அமர்ந்து விட்டு படுத்து கொண்டேன்.ஒன்பது மணிவரை நல்ல தூக்கம்.துயில் கலைந்து மாடிக்கு சென்று துணிகளை துவைத்து,குளித்து,உளு செய்து பத்துமணிக்கு பள்ளிக்குள் வந்துவிட்டேன்.இரண்டு ரக்காத் நபில், லுகா தொழுதபின்,குர்ஆன் தர்ஜுமா ஓத துவங்கினேன். பதினோரு மணிக்குமேல் அமல்களின் சிறப்பு எனும் நூல் (2010 ஆம் ஆண்டு வாங்கியது)வாசிக்க துவங்கினேன்.

   இஃதிகாப் பற்றியும்,திக்ர் மற்றும் குர்ஆன் ஓதுதல்,தொழுகை,ஸாகத்,நோன்பு ஆகியவற்றின் சிறப்பை கூறும் நூல் அது.பன்னிரண்டு இருபதுக்கு லுகர் தொழுகைக்கான பாங்கு முன் சுன்னத் இரண்டு ரக்காத் பர்ளானலுகர் நான்கு ரக்காத் பின்   சுன்னத் இரண்டு ரக்காத் தொழுகைக்குப்பின் மீண்டும் தர்ஜுமா ஓத துவங்கினேன்.

    இரண்டு மணிக்கு தூக்கம் அழுத்தியதால் சுதீரிடம் மூன்று மணிக்கு எழுப்பிவிட சொல்லிவிட்டு தூங்கிவிட்டேன்.தூங்கி விழித்தபின் பல் தேய்த்து உளு செய்து இரண்டு ரக்காத் நபில் தொழுதேன்.மூன்று இருபதுக்கு அஸர் தொழுகைக்கான பாங்கு சொன்னது முன் சுன்னத் இரண்டு ராக்கத்துக்குப்பின் பர்ள் நான்கு ரக்காத் தொழுகைக்குபின் இமாம் ஐந்து நிமிடம் பயான் சொன்னார். ஐந்தரை மணிவரை திக்கிரும்,தர்ஜுமாவும் ஓதியபின்.மாலையில் மீண்டும் ஒரு குளியல்.காலையில் துவைத்த துணிகளை மடித்து அடுக்கி வைத்துக்கொண்டேன்.

ஆறு மணிக்கு மேல் இமாம் தௌபா செய்து பள்ளியில் வேலை செய்யும் தன்னார்வலர்கள்,நோன்பு கஞ்சி,மற்றும் இப்தார் எனும் நோன்பு திறக்க தேவையான உணவுகளை வழங்கியவர் மற்றும் நோன்பாளிகள்,அல்லாதவர்கள்,உலக சமாதானத்துக்காக துவா செய்தார்.சரியாக ஆறரை மணிக்கு நோன்பு திறந்தோம். இஃதிகாப் இருந்த எங்களுக்கு நோன்பு திறக்க தேவையான பழம்,சர்பத் தண்ணீர் ஆகியவற்றை தனார்வலர் நபீஸ்,ரிபாத் உள்ளே கொண்டு வந்து தந்தனர்.

  மக்ரிப் தொழுகைக்குப்பின் எங்களுக்கான கஞ்சியை பள்ளிக்குள் கொண்டு வந்து தந்தனர்.பின்னர் இர்பான் வீட்டுக்கு சென்றார்.மக்ரிபுக்கு முன்பே முஸ்தபா எனும் எட்டாம் வகுப்பு மாணவன் இருதினங்கள் இஃதிகாப் இருப்பதற்காக எங்களுடன் வந்து சேர்ந்து கொண்டான். காலையில் இமாம் கேட்டார் “உள்ள கொசுக்கடி உண்டுமா” என. “கொசு வலை இருந்தா போட்டுகிடுங்கோ” என சொன்னார். இர்பானிடம் என் வீட்டிலிருந்து கொசுவலையை வாங்கி வர சொன்னேன். அவனே கொசுவலையையும்,எனக்கு குடிப்பதற்கான பாலையும் கொண்டு வந்தான்.

 வழக்கம்போல் இஷா,தராவிஹ் தொழுகை,பயான் முடிந்து பள்ளியில் ஆளோளிந்ததும் பதினோரு மணிக்கு கொசுவலையை கட்டி அதற்குள் படுத்து கொண்டேன். முஸ்தபாவும்,சுதீரும் வீட்டிலிருந்து வந்த இடியப்பம் முட்டைகறியை சாப்பிட்டுவிட்டு அமர்ந்து குர்ஆன் ஓத துவங்கினர்.இரவு ஒரு மணிக்கு கண்விழித்து பார்க்கும்போதும் அவர்கள் ஓதி கொண்டே இருந்தனர்.தகஜத்  தொழுகைக்காக இரவு இரண்டு மணிக்கு விழித்துகொண்டேன்.பள்ளிக்குள் இறை நேசர்களும்,அல்லாஹ்வின் நல்லாடியார்களும் வரத்தொடங்கினர்.

   பள்ளியில் வெள்ளிக்கிழமை ஜும்மா உரை,மற்றும் அனைத்து பயான்களிலும் இமாம்கள் பள்ளிக்குள் அமர்ந்திருப்பவர்களை இறை நேசர்களே,நல்லாடியார்களே என்றுதான் அழைக்கின்றனர்.

    https://nanjilhameed.blogspot.com/2023/04/blog-post.html

மேலும் ....

24 april 2023

ஷாகுல் ஹமீது.

Saturday 8 April 2023

இஃதிகாஃப்

 

      

                                                                            இஃதிகாப்

இம்முறை விடுமுறையில் ஊருக்கு வந்த சில நாட்களிலேயே வடசேரி பள்ளிவாசலில் அதிகாலை பஜர் தொழுகைக்குப்பின் நடந்த பயானில் இஃதிகாப் பற்றி குர் ஆனில் உள்ள வசனத்தை இமாம் சொன்னார்கள். 



இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து(இஃதிகாஃபில்) இருக்கும்போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள். இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அதை (வரம்புகளை மீற) நெருங்காதீர்கள். இவ்வாறே (கட்டுப்பாட்டுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். (அல்குர்ஆன் 2:187)

   எனது மகன்கள் படிக்கும் பள்ளிக்கு அருகில் உள்ள நெசவாளர் காலனி பள்ளிவாசலிலும்

  இந்த பள்ளியில் இஃதிகாஃப் இருக்க விரும்புகிறேன் (நிய்யத் வைக்கிறேன்)என வாசகம் எழுதி வைத்திருப்பார்கள்.

                     

  இஃதிகாஃப் என்றால் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்காக இறை இல்லமான பள்ளியில் தங்கியிருப்பது, நோன்பு காலத்திலும் நோன்பு அல்லாத காலத்திலும் இஃதிகாஃப் இருக்கலாம். நோன்பு காலத்தில் இஃதிகாஃப் இருப்பது மிகச் சிறந்தது. நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் நோன்பு மாதத்தின் கடைசி பத்து நாட்களும் இஃதிகாஃப் இருப்பார்கள். மரணித்த வருடத்தில் இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். இஃதிகாஃப் இருப்பவர் குளிப்பது, மலஜலம் கழிப்பது போன்ற அவசியத் தேவைக்கின்றி பள்ளியை விட்டும் வெளியில் செல்லக்கூடாது, நோன்பின் கடைசிப்பத்தில்; இஃதிகாஃப் இருப்பதனால் லைலத்துல் கத்ரின்(குர் ஆன் இறக்கப்பட்ட நாள்) இரவை அடைந்து கொள்ளலாம். யாருக்கெல்லாம் இஃதிகாஃப் இருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றதோ, அவர்கள் சந்தர்பத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

 எனது தாயின் வாப்பா மீரான் பிள்ளை அப்பா பள்ளியில் இஃதிகாப்  இருக்கும்போது பார்த்திருக்கிறேன்.மூன்று தினங்கள் நோன்பிருந்து இஃதிகாப் இருந்தபின்னர் வண்டல் தர்காவிலிருந்து பீர் பானை எடுத்து ஒன்றரை கிலோமீட்டர் தூரமுள்ள பள்ளிக்கு வருவார்.

   யோக வகுப்புகளில் இருபத்தியிரண்டு வயதுவரை பிரம்மசரியம்,பின்னர் திருமணமாகி இல் வாழ்க்கையான கிரகஸ்தம்,நாற்பத்தியைந்து வயதில் வனபிரஸ்தம் அதாவது மகன் கல்வி கற்று முடித்து வேலைக்கு செல்ல தயாராகும் வயதில் தன்னை துறவுக்கு தயார்செய்யும் வகையில் காட்டுக்கு சென்று கற்பதும்  வீட்டுக்கு வருவதுமாக இருத்தல்.அறுபது வயதுக்குமேல் மகன் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பற்றும் நிலையயை அடைந்ததும் நிரந்தராமாக சந்நியாசம் செல்தல்.

  அக பயணம் செல்ல விரும்புபவர்களுக்கு இஃதிகாப் பேருருதவியாக இருக்கும்.இரு தினங்களுக்கு முன்பு தராவீஹ் தொழுகைக்குப்பின் இமாம் உங்களது கடமைகளை சீக்கிரமாக முடித்துவிட்டு ரமலானின் கடைசி பத்து நாட்கள் பள்ளியில் இஃதிகாப் இருக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

(ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருப்பார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.) (ஆதாரம்: புகாரி)

 

 இரவு தொழுகைக்குப்பின் வீட்டிற்கு வந்து இஃதிகாப்கிற்கு அழைப்பு விடுத்ததை சுனிதாவிடம் சொன்னேன். “நீங்கோ போங்கோ மூணு மாசாம இங்கேயே இருந்து ஸ்ட்ரெஸ் கூடிட்டு உங்களுக்கு” என்றாள்.

“என்னய ஏன் விரட்டா” எனக்கேட்டேன்.

  “அது நல்லது இல்லா” என்றாள்.

இஃதிகாப் விருப்பம் போல் ஒரு நாள் ,மூன்று நாள் அல்லது ஏழு நாட்களும் இருக்கலாம் என சொன்னேன்.

“நீங்கோ பத்து நாள் போங்கோ”   என சுனிதா சொன்னாள்.நானும் முடிவு செய்து விட்டேன் இந்த வருடம் இஃதிகாப் இருப்பது என.

இஃதிகாப் இருக்கும்போது ரமலான் நோன்பு காலம் ஆதலால் பசித்திரு,விழித்திரு,தனித்திரு என்பது சாத்தியம்தான்.

 இஃதிகாப் இருப்பவர்கள் வீட்டிற்கு செல்ல கூடாது,நோன்பு நோற்று பகலில் பசியுடன் இருந்து இரவில் தூங்காமல் தொழுகை வணக்க வழிபாடுகளில் ஈடு படவேண்டும்.தூங்கி விழித்துவிட்டால் வீண் பேச்சுக்கள் பேசாமல்,உடன் இஃதிகாப் இருப்பவர்களை தொந்தரவு செய்யாமல் தனிமையில் இறைவனை தியானிக்க வேண்டும்.

குறிப்பாக செயல்களை உதறிவிட்டு குர்ஆன் ஓதுதல் சிறப்பு. உலகியலிருந்து தன்னை விடுவித்து கொள்வதாகும்.வரும் செவ்வாய்க்கிழமை மாலை மக்ரிப் தொழுகைக்குப்பின் வடசேரி பள்ளிக்கு சென்று இஃதிகாப் இருக்க நான் தயாராகிவிட்டேன்.இந்த பத்து நாட்களும் உலக தொடர்புகளிலிருந்து என்னை விடுவித்து கொண்டு அக பயணத்திற்கு தயாராகி விட்டேன்.

முகநூல்,இன்ச்டக்ராமில் நான் இல்லை.போனில் வாட்ஸ்அப் மட்டும் பார்ப்பேன்.எனது போனை வீட்டில் சுனிதாவிடம் கொடுத்துவிட்டு தேவையான மிக குறைந்த துணிகளை மட்டும் எடுத்துக்கொண்டு செல்லவிருக்கிறேன்.

விரிக்க,படுக்க இரு போர்வைகள். இரு வேட்டி,சட்டைகள் ஒரு கைலி,ஒரு துண்டு,துவைக்கும் சோப்,தலைக்கு தேய்க்கும் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை மட்டும் எடுத்து செல்கிறேன்.

    


 விபாசன பயிற்சியில் பிறர் கண்களை பார்க்கவே கூடாது என நண்பர்கள் சொன்னார்கள். வடசேரி பள்ளி என் வீட்டிலிருந்து நடக்கும் தூரத்தில் தான் உள்ளது.வீட்டிற்கு வரமால் யாரையும் சந்திக்காமல் முழுமையாக செயல்களிலிருந்து என்னை விடுவித்து கொண்டு அகம் நோக்கி பயணிக்க இந்த இஃதிகாப் நாட்கள் எனக்கு உதவும் என நம்புகிறேன்.

   எனக்கு இந்த இஃதிகாப் நாட்களில் எந்த வேண்டுதலும்,சங்கற்பமும் இல்லை.இறையை வழிபடுதல் மட்டுமே.

 பெண்களும் பள்ளிவாசல்களில் வசதி இருக்கமானால் இஃதிகாஃப் இருக்கலாம்.அல்லது வீட்டில் தனியறையில் இஃதிகாஃப் இருக்கவேண்டும்.தனது குடும்ப கடமைகளை செய்துவிட்டு இஃதிகாஃப் எண்ணத்தோடு வீட்டில் தனியறையில் இருக்கலாம். வீட்டை விட்டு வெளியேசெல்லக்கூடாது.

  ஷாகுல் ஹமீது,

 08-april -2023.

https://www.dailythanthi.com/Others/Devotional/2019/08/29153253/God-consciously-Refuge-in-the-house-of-the-god.vpf

 

2) நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். (ஆதாரம்: புகாரி)

3) நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளான் மாதமும் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள். மரணித்த வருடத்திலே இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)