Tuesday 20 December 2016

ஈராக் போர் முனை அனுபவங்கள் 29

                       விடை தந்த ஈராக் 
  
எட்டாம் தியதி காலை மிகுந்த உற்சாகத்துடன் இருந்தேன் .அதிகாலை நல்லகுளிர் .சுடுநீரில் குளித்து தயாராகி ஏழு மணிக்கெல்லாம் விடுதியின் வரவேற்பறைக்கு வந்துவிட்டேன்.பாக்தாத்தின் விடுதியறையில் இருந்த எழு நாட்களும் சற்று சிரமமாகவே இருந்தது எனக்கு .மதியம் மூன்று மணிக்கு தான் விமானம் பாக்தாத் –அம்மான்-மும்பைக்கு .விமான சீட்டும் ,கடவுசீட்டும் தந்து அனைவரின் ஆவணங்களும் சரிபார்த்தபின் ஒன்பது மணிக்கு மேல் எங்களை அழைத்து சென்றனர் .
 

 என்னுடன் செல்வராஜ் உட்பட ஆறு பேர் ஊருக்கு செல்ல தயாரானோம். பாதுகாப்பு வீரர்கள் சிறிய கார்களில் பாக்தாத் பன்னாட்டு விமான நிலையம் அழைத்துசெல்ல வந்தனர் .ஒரு காரில் இருவர் மட்டுமே .ஒரு ஓட்டுனரும், ஒரு பாதுகாப்பு வீரர் ஒவ்வொரு காரிலும் பாதுகாப்புக்காக வந்தனர். பாதுகாப்பு வீரர்களும் ,வாகன ஓட்டுனரும் தாடி வளர்த்து ,அரபிகளை போன்ற உடையணிந்திருந்தனர் .மாறுவேடம் தான் .பாதுகாப்புகாக வெள்ளைக்கார வீரர்களின் யுக்தி அது .

  காரில் ஏறும் முன் பாதுகாப்பு விசயங்களை எங்களுக்கு விரிவாக விளக்கினர் .முன்பு நான் திக்ரித் –பாக்தாத் பயணத்தில் உள்ளதை போன்றே காரில் இருந்து கீழே இறங்க கூடாது  பாதுகாப்பு வீரரின் அனுமதியின்றி,அவ்வாறு இறங்கவேண்டிய சூழ்நிலையில் கீழே இறங்கிவிட்டால் எக்காரணத்தைக்கொண்டும் ஓட கூடாது .இங்கிருந்து 20-30 நிமிட பயணதூரம் மட்டுமே என்றனர் .

  பயணப்பைகளை காரில் ஏற்றினோம் .நாங்கள் ஆறுபேரும் மூன்று கார்களில் ஏறிகொண்டோம் உடன் பாதுகாப்பு வீரர்களும் .முப்பது நிமிடத்திற்குள் பாக்தாத் விமான நிலையம் வந்தடைந்தோம்.பாக்தாத் பன்னாட்டு விமான நிலையம் என்ற பதாகை எங்களை வரவேற்றது ஊர்செல்வது உறுதியாகிவிட்ட உற்சாகம் தொற்றிகொண்டது .

  பாக்தாத் விமான நிலையம் உலகின் நவீன வசதிகளுடன்,உயர்தரத்தில் இயங்கிய பன்னாட்டு விமான நிலையமாக  இருந்திருக்க வேண்டும் .விமான நிலைய உள் கட்டமைப்புகள் அதை உறுதி செய்தது.
 விமான நிலைய வாயிலில் இறங்கியதும் பாதுகாப்பு வீரர்கள் எங்களை விரைவில் விமான நிலையத்திற்குள் கொண்டு விட்டனர் .பயணப்பைகளை அவர்களே கொண்டு வந்து தந்தனர் .எங்களிடம் கைகுலுக்கி ஹாவ் எ ஸேப் ஜெர்னி என விடைபெற்றனர் .

    ஈராக் போர் தொடங்கியதிலிருந்து பாக்தாத் பன்னாட்டு விமான நிலையம் செயல்படாமல் முடங்கிப்போய் செயலற்று இருந்தது.இப்போது ஒரு தனியார் நிறுவனம் அதை இயக்கிகொண்டிருக்கிறது .தினமும் ஒரு விமானத்தை இயக்குகிறது ஜோர்டானின்  அம்மான் நகருக்கு .
 பயணப்பைகளை அளித்துவிட்டு ,குடியுரிமை பரிசோதனைகளையும் முடித்துவிட்டு காத்திருந்தோம் .உண்மையாகவே இப்போதுதான் பயணம் உறுதியாயிற்று என்றே சொல்லலாம் .
  
  அனைத்து சோதனைகளும் முடிந்தபின் பயணம் செய்யவேண்டிய விமானம் வரை நடந்தே சென்றோம்.அருகில் சென்றதும் எங்கள் பயணபைகள் இருக்கிறதா என  பார்க்க சொன்னார்கள் விமான நிலைய ஊழியர்கள்  பைகளை பார்த்து உறுதிசெய்ததும் விமானத்தில் ஏறிக்கொண்டோம்.அது ஒரு சிறிய விமானம் முப்பதுபேர் மட்டுமே பயணம் செய்யக்கூடியது.ஒரே ஒரு விமான பணிப்பெண் ஒரு சாக்லேட் மட்டும் புன்னகையுடன் தந்தாள்.நாற்பது நிமிட பயணம்  ஜோர்டானின் அம்மான் நகருக்கு .அங்கிருந்து ராயல் ஜோர்டன் விமானத்தில் அபுதாபிக்கு பயணித்தோம் .

   கடந்தமுறை விடுமுறையில் சென்றபோதும் அபுதாபி வழியாக சென்றதால் அபுதாபி விமான நிலையம் இப்போது நல்ல பரிச்சயமாகியிருந்தது.ஆறு மணிநேரம் எளிதாக கடந்துசென்றது .
  அபுதாபியில் ஆறு மணிநேர காத்திருப்புக்கு பின் கல்ப் ஏர் விமானத்தில் மும்பைக்கு காலையில் வந்துசேர்ந்தோம் .இப்போதும் செல்வராஜின் பயணபைகள் வரவில்லை .இந்தியாவிலிருந்து சென்றபோதும் அவனது பைகள் கிடைக்காததாலேயே செல்வராஜ் ஈராக் சென்ற இருபது நாட்களுக்குள்ளாக திரும்பி வருகிறான் .பாக்தாத் விடுதியறையில் இருந்த அவனின் கதையைகேட்டு இந்தியர்கள் சிலர் கொடுத்த பொருட்களும்,பையும் இந்த முறையும் கிடைக்கவில்லை .

   9 ம் காலை பத்தரைமணிக்கு ஜெட் ஏர்வேய்ஸ் விமானத்தில் மும்பை-திருவனந்தபுரம் பயணித்து மதிய வேளையில் சென்று இறங்கினேன் .விமான நிலையத்தில் எனது தந்தையும் ,இளைய சகோதரனும் ,மணப்பெண்ணின் சகோதரி ,தாய், தந்தை  வந்திருந்தனர் .என்னை பெண்வீட்டார் இப்போது தான் முதல்முறையாக  பார்க்கின்றனர் ,நானும் அவர்களை .

  9 ம் தியதி தான் முன்பு திருமணநாளாக குறித்து பெண்வீட்டார் மண்டபமும் முன்பதிவு செய்துவைத்திருந்தனர் .பின்பு அதே டிசம்பரில் 16 ம் தியதி என வேறு நாள் குறிக்கப்பட்டு சிறப்பாக திருமணம் நடந்தது .கடந்த நான்கு தினங்களுக்கு முன் பனிரெண்டாம் வருட திருமண நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தோம் .
முற்றும் .

கடந்த  நான்கு மாதங்களாக நான் எழுதிவந்த ஈராக் போர்முனை அனுபவங்கள் இந்த பதிவுடன் முடிவடைந்தது .
  
எழுத்தாளர் ஜெயாமோகன் அவர்களின் நண்பர் ஈரோடு கிருஷ்ணன் அவர்கள் என்னை கடந்த மார்ச் மாதம் சந்தித்தபோது ஈராக் குறித்து எழுதுங்கள் என்றார் .கடந்த ஜூன் மாதம் முதல் கப்பலில் பணியில் இருந்த போது சில பயண அனுபவங்களை எழுதி எனது வலைப்பூவில் பதிவிட்டேன் .தொடர்ந்து சதாமின் அரண்மனையில் எனும் வந்த பதிவை படித்துவிட்டு மூத்தசகோதரியும் ,தாவரவியல் பேராசியையுமான லோகமாதேவி அவர்கள் ஈராக் போர் அனுபவங்களை அறிய ஆவலாய் இருக்கிறேன் ஒரு தொடராக எழுதுங்கள் என்றார் .எழுத ஆரம்பித்த போது பத்து அல்லது பதினைந்து பதிவுகள் வரும் என நினைத்தேன் .
  
  சதாமின் அரண்மனையில் என்ற பதிவையும் சேர்த்து மொத்தம் முப்பது பதிவுகள் வந்துவிட்டன .புதிதாக எழுத தொடங்கிய எனக்கு இது ஒரு நல்ல பயிற்சியாக இருந்தது .
  இதுவரை தொடர்ந்து வாசித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன் .மேலும் என்னை ஊக்கபடுத்திய நண்பர்கள் முத்து,தர்மா சகோதரன் பிரபு ,சுஜாதா,சுமதி ,சிஸ்டர் கரோலின் ,சையதலி அண்ணன்,ஒவ்வொரு பதிவிற்கும் தவறாமல் பின்னூட்டம் எழுதிய சகோதரி லோகமாதேவி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன் .
   இரண்டாண்டுகளுக்கு முன்பு எங்களூரின் எழுத்தாளர் மீரான் மைதீன் அவர்களை சந்தித்தபோது என்னிடம் ஷாகுல் உங்கள் பணியும் பயணமும் யாருக்கும் கிடைக்காதது உங்களின் அன்றாட நிகழ்வுகளை பதிவு செய்யுங்கள் என்றார் .எனது தோழி தாமரை செல்வியும் என்னை எழுதுமாறு சொன்னார் .அப்போது நினைக்கவேயில்லை என்னால் எழுத முடியும் என .
  தொடர்ந்து எழுத்தாளர் ஜெயமோகனின் தொடர்பும் ,நட்பும் கிடைத்தது .நண்பர் மூலமாக அறிந்த ஜெயமோகன் அவர்கள் எனது ஈராக் போர்முனை அனுபவங்கள் என எனது வலைப்பூவின் சுட்டியை அவரது தளத்தில் வெளிட்டார் .அவருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன் .

  ஒரு சிறுகதை எழுதியுள்ளேன் விரைவில் பதிவிடுவேன் .தொடர்ந்து மேலும் ஒரு அனுபவப்பதிவை தொடராக விரைவில் எழுதுகிறேன் .
ஒவ்வொரு பதிவிற்கும் பிழைதிருத்தம் செய்த என் மனைவி சுனிதா மற்றும் நண்பர்களுக்கும் எனது நன்றிகள் .
  ஈராக்கில்  எடுத்த புகைப்படங்கள் ஸ்கேன் செய்து பின்னர் பதிவேற்றம் செய்கிறேன் .
ஷாகுல் ஹமீது .

20-12-2016

Sunday 11 December 2016

ஈராக் போர் முனை அனுபவங்கள் 28


                பாக்தாத் விடுதியில் ஏழு நாட்கள் .
  எப்போது  நான் இந்தியா செல்வேன் என்ற எந்த தகவலுமின்றி பாக்தாத்தின் விடுதியறையில் இருந்தேன் .இங்கு வந்த மறுநாள் மாலையில் இந்திய இளைஞர்கள் நிறையப்பேர் வந்தனர் .புதிதாக பணிக்கு தேர்வாகி வந்தவர்கள், அனைவரும் என் நிறுவனத்தின் மூலம் வந்தவர்கள் .இந்தியாவில் ஈராக் செல்ல தடை இருந்தபோதும் துபாய் வழியாக அழைத்துவரப்பட்டுள்ளனர். துபாய் விமான நிலையத்தின் சரக்குகளை கையாளும்(cargo terminal) முனையத்திலிருந்து வேறு விமானத்தில் ஏற்றி இங்கு கொண்டுவந்ததாக  சொன்னார்கள் .



  போர்முனையில் பதினெட்டு மாதம் பணிபுரிந்து,பல இழப்புகள்,சாவின் விளிம்பை பலமுறை சந்தித்துவிட்டு பல இன்னல்களுக்கு பின் ஊர் செல்வதற்காக காத்திருக்கிறேன் .அவர்கள் இப்போது தான் இங்கு ஒரு அபாயகரமான வாழ்வை துவக்க போகிறார்கள் .ஒவொருவருக்கும் ஒரு சூழ்நிலை .


   ஒவ்வொரு ஆணுக்கும் படித்துமுடித்து வேலைகிடைப்பது வரை உள்ள காலம் மிக மிக கஷ்டமானது .சிலருக்கு படித்த வேலை கிடைப்பதில்லை,சிலருக்கு அவர் விரும்பிய வேலை கிடைக்காது .சிலர் தற்காலிகமாக மனமில்லாமல் ஒரு வேலையில் சேர்வார்கள் ,சேரும்போது தனுக்குரிய வேலைகிடைத்ததும் மாறிவிடலாம் என்ற எண்ணத்தோடு ஆனால் பலருக்கு அது சாத்தியமே இல்லாமலாகிவிடும் .சிலர் மட்டும் இதில் விதிவிலக்கு.அப்பவோ,சொந்தக்காரர்களோ வைத்திருக்கும் நிறுவனத்தில் வேலை அல்லது கல்லூரி இறுதியாண்டில் பணிதரும் நிறுவனங்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்  இது போன்ற எந்த கஷ்டத்தையும் அறியாதவர்கள் .


  நான் இங்கே பார்த்த அநேகம் பேர் கொஞ்ச நாள் அனுபவத்துக்ககாவும்,தற்போதைய பணதேவைக்காகவும் வந்ததாக சொன்னார்கள் .


  தற்போது அமெரிக்க ராணுவம் புதிதாக ஈராக்கிய ராணுவத்தை உருவாக்கும் பொருட்டு இளைஞர்களை தேர்ந்தெடுத்து பயிற்சியளிக்கிறது.அந்த பயிற்சி முகாமிலுள்ள ஈராக்கிய வீரர்களுக்கான உணவு கூடத்தில் பணி செய்ய வந்துள்ளாக தெரிவித்தனர் .தமிழ் இளைஞர்கள் நிறையபேர் இருந்தனர் .


 என்னிடம் தொடர்ந்து அவர்கள் உரையாடிக்கொண்டே இருந்தனர்.எனது அனுபவங்களை முழுமையாக அறிந்துகொள்ளும் ஆவலில் தூங்கும் நேரம் தவிர என் அறையிலேயே இருந்தனர் . நான் அவர்களிடம் பக்குபா தீ விபத்தையும் ,அனைத்து சான்றிதழ்களை  இழந்ததையும் சொன்னேன்.யாரும் உங்களுடைய அசல் சான்றிதழ்களை கொண்டுசெல்லாதீர்கள் என்று உறுதியாக சொன்னேன் .அதில் மது என்னும் சமையல்கலைஞன் மட்டும் தன்னுடைய சான்றிதழ்களை என்னிடம் தந்து சென்னையிலுள்ள தந்து வீட்டு முகவரியில் அனுப்பிவைக்கும்படி தந்தான் .


  பெரும்பாலானவர்களிடம் கடவுசீட்டை தவிர பிற முக்கிய சான்றிதழ் எதுவும் இல்லை .எப்போதும் கடவுசீட்டை தங்களுடன் வைத்துகொள்ளுங்கள் என்றபோது .பாக்தாத்திலுள்ள இந்திய தூதகரத்தால் எனக்கு வழங்கப்பட்ட கடவுசீட்டை வாங்கிபார்த்தபின் ஏன் சொல்கிறேன் என்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொண்டனர் .


  அவர்களை மும்பையில் தேர்ந்தெடுக்கும்போதே நேர்முகத்தேர்வில் இங்கு நிலவும் அசாதரண சூழ்நிலையை தெளிவாக சொல்லியுள்ளனர் .அதனால் பலரும் முக்கிய ஆவணங்கள் எதையும் கொண்டு வரவில்லை எனவும் எதையும் சந்திக்கும் மனநிலையுடேனே வந்துள்ளனர் .



  முன்பு பக்குபா தொடர் குண்டுவெடிப்பில் என் கண்முன்னே சில நாட்களில் மனம் பிறழ்ந்த லக்ஷ்மணை பற்றி ஈராக் போர்முனை அனுபவம் 5 ம்  பதிவில் குறிப்பிட்டுருந்தேன் .மீண்டும் ஈராக்கிற்கு பணிக்கு வரும் பொருட்டு மும்பை அலுவலகத்தில் லஷ்மனை  பார்த்ததாக ஒருவர் சொன்னார் .அதை கேட்டபோது அதிர்ச்சியும் ,ஆச்சரியமுமாக இருந்தது .குணமடைந்தவர் மீண்டும் ஏன் இங்கே வரவேண்டும் ?முன்பு உண்மையாக அவர் மனபிறழ்வு அடைந்தாரா அல்லது அவர் அப்படி நடித்தாரா ?என விடைகிடைக்காத கேள்விகள் பல எழுந்தது .லஷ்மண் மட்டுமே அதற்க்கு விடை சொல்ல முடியும் .அப்போதே ஐம்பது வயதை கடந்திருந்தார் .இப்போது பதிமூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது .அவரை சந்தித்து மனதிலுள்ள கேள்விகளுக்கு விடைகாண விளைகிறேன் .
  


     அதுபோல் என்னுடன் இருந்த ஜோக்கிம் விடுமுறையில் சென்று திருமணம் செய்துவிட்டு இளம் மனைவியை ஊரில் விட்டுவிட்டு வந்தவன் திக்ரித் குண்டுவெடிப்பில் இனி இங்கு பணிசெய்ய இயலாது என இந்தியாவிற்கு சென்றான் .மீண்டும் இரண்டு மாதத்திற்கு பின் வேறு முகாமிற்கு வந்ததாக அறிந்தேன் .


   மனிதமனம் உறுதியில்லாதது என நினைத்துகொண்டேன்.பாக்தாத் விடுதியில் வந்த மூன்று தினங்களுக்கு பின் தான் எனது கடவுசீட்டை வாங்க என் நிறுவனத்திலிருந்து ஆட்கள் வந்ததாக சொன்னார்கள் .
  கடவுசீட்டுடன்  விடுதியின் வரவேற்பறைக்கு சென்றபோது .பக்குபாவில் என்னுடன் பணிபுரிந்த முனாவர் நின்றுகொண்டிருந்தான் .என்னை அடையாளம் கண்டுகொண்டான் .பக்குபா குண்டுவெடிப்பில் ஒரு காலை இழந்தவன் .எங்கள் நிறுவனம் ஜெர்மனியில் உயர்தர மருத்துவ சிகிச்சையளித்து .மனிதவளத்துறையில்  உயர்பதவியும் கொடுத்து பணிக்கு வைத்து கொண்டது .


  செயற்கை கால்களுடன் அவனால் நடக்கவும் முடிந்தது .அவனால் பாக்தாத் நகர வீதிகளில் அச்சமின்றி நடமாடவும் முடிந்ததை கண்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது .என்னுடன் நான்கைந்து பேரின் கடவுசீட்டுகளை பெற்றுகொண்டு .விமான சீட்டு உறுதியானதும் உங்கள் பயணதேதிகளை சொல்ல்கிறேன் என்றான் .


    எப்போது என கேட்டேன் .எனது திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது நான் விரைவாக செல்ல வேண்டுமென்றேன் .ஒரே ஒரு தனியார் நிறுவனம் மட்டுமே பாக்தாத் –அம்மானுக்கு (ஜோர்டன் )விமானத்தை இயக்குகிறது .நமது நிறுவனத்திற்கு வாரத்தில் முப்பதுபேர் மட்டுமே அதில் பயணிக்க அனுமதி என்றான் முனாவர் .


   உன் விஷயம் எனக்கு முன்பே தெரியும் .நீ திக்ரிதிலிருந்து புறப்பட்டே அன்றே எங்களுக்கு செய்தி வந்தது உன்னை விரைவில் இந்தியா அனுப்பி வைக்குமாறு .ஆனால் பாக்தாத் –அம்மான் செல்லும் விமானத்தில் இன்னும் இடம் உறுதியாகவில்லை .முயற்சிசெய்துகொண்டிருக்கிறோம்.

   விடுதியறையில் செல்வராஜ் என்றொருவனை சந்தித்தேன் .மும்பையிலிருந்து இங்கு வந்தவன் பதினைத்து நாட்களுக்குள்ளாக இந்தியா திரும்பி செல்வதாக சொன்னான் .


  விமானத்தில் ஈராக் வந்திறங்கியபோது அவனது பயண பைகள் வந்து சேரவில்லை .உடுத்திருந்த ஆடையை தவிர மாற்று ஆடை இல்லை அவனிடம் .ஒரு வாரம் அனகோண்டா என்னும் முகாமில் பணிசெய்திருக்கிறான் .இருந்தாலும் அவனுக்கு மனம் ஒன்றவில்லை பணியில் .

  தன்னுடைய பொருட்களை இழந்த கவலை வேறு திரும்பி செல்வதாக சொன்னான் .அவனது கதையை கேட்டபின் சிலர் தங்களிடம் இருந்த உடைகள் ,சோப்பு ,இன்னபிற பொருட்கள் என கொடுத்ததில் ஒரு பைக்கான பொருட்கள் சேர்ந்துவிட்டன .அதனால் ஒருவன் ஒரு பையையும் கொடுத்து அவற்றை எடுத்து செல்லுமாறு சொன்னான் .


  பாக்தாத் விடுதிக்கு வந்த ஏழாம் நாள் எனக்கு தகவல் வந்தது மறுநாள் எட்டாம்தியதி காலை பயணம் என .காலை ஏழு மணிக்கு விடுதியில் தயாராக இருக்கும்படி சொன்னார்கள் .


   அன்று மாலையில் திக்ரித் முகாமிலிருந்து என்னுடன் ஊர் செல்ல வேண்டிய உண்ணி,பிரான்சிஸ் ,கில்ராய் ,தென்னாப்ரிக்காவின் மேலாளர் ஜாக் உட்பட ஆறு பேர் பாக்தாத் விடுதிக்கு வந்துசேர்ந்தனர் .என்னை பார்த்ததும் நீ இன்னும் போகவில்லையா ?என்ன காரணம் என வினவினர் .

   அவர்கள் வந்த பேருந்தில் இருக்கைகள் அனைத்தும் கழற்றபட்டு குண்டு துளைக்காத இரும்பு பிளேட் வைத்து வெல்டிங் செய்யபட்டிருந்தது அனைவரும் இருக்கை இல்லாமல் பேருந்தின் தரையில் அமர்நதுதான் பயணித்ததாக சொன்னார்கள் .
 நான் ஊருக்கு செல்லாமல் இன்னும் இங்கிருப்பது அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது .

  இங்கு வந்து ஒரு வாரத்திற்கு பின் தான் விமானசீட்டு ஏற்பாடு செய்ய முடிகிறது என்றேன் .நாங்களும் இங்கு ஒரு வாரம் இருக்க வேண்டுமா என கேட்டனர் .என்னுடன் பத்து நாட்களுக்கும் மேலாக சிலர் 
இங்கிருப்பதை சொன்னேன் .

ஷாகுல் ஹமீது

11-12-2016

Sunday 4 December 2016

ஈராக் போர் முனை அனுபவங்கள் 27

  
        
              திக்ரித் – பாக்தாத் திகில் பயணம்
  
  முழு வேகத்துடன் வண்டி போய்கொண்டிருந்தது கண்ணிலிருந்து மறைவதுவரை சதாமின் அரண்மனை முகப்பை நோக்கியிருந்தேன்.

  முன்பும் ,பின்பும் பாதுகாப்பு வாகனங்கள் தொடர அந்த திகில் பயணம் தொடங்கியது .முன்பும்,பின்பும் உள்ள வாகனங்கள் வளைவுகளில் இரு பக்கவாட்டுகளில் (வலது,இடது )வந்து எங்கள் வண்டியை தொடரும்  . பொதுவாக பயணங்களில் ஒரு இலக்கும்,உத்தேசமாக சென்றுசேரும் நேரமும் தெரியும் பயணிப்பவர்களுக்கு .எனது அன்றைய திக்ரித் –பாக்தாத் பயணத்தில் இலக்கை சென்று சேருவேனா என உறுதியற்ற பயணமாக துவங்கியிருந்தது.வண்டியுனுள் ஒரு பதட்டம் நிறைந்திருந்தது .மனதில் பயமும் .யாருடனும் பேசிக்கொள்ளவேயில்லை அதுவும் மனம் இறுக்கமாக இருக்க ஒரு காரணமாயிற்று .

  திக்ரித்திலும் தொடர்ந்துவந்த சாலையிலும் இடிபாடுகளுடன் கட்டிடங்களும், போரில் சிதைந்த நகரமும்,கந்தலாடை அணிந்த மக்களையும் காணமுடிந்தது .

 சாலையெங்கும் ராணுவவீரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி வாகனங்களில் ரோந்து சுற்றிவருவதையும் பார்த்தேன்.நாங்கள்  வந்துகொண்டிருந்தபோது ஓரிடத்தில் போக்குவரத்து தடைபட்டிருந்தது நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றுகொண்டிருந்தது ,அது ஒருவழிப்பாதை எங்கள் வாகனங்கள் நின்றதும் துப்பாக்கியுடன் எங்கள் பாதுகாப்பு வீரர்கள் கீழறங்கி நின்றுகொண்டனர் .

  எதிர் திசையில் வாகனங்கள் வரத்தொடங்கியதும் எங்கள் வண்டியை திருப்பி எதிர் திசையில் உள்ள சாலையில் போக சொன்னார் குழுவின் தலைவன் .எதிரில் வரிசையாக வாகனங்கள் வந்துகொண்டிருந்தது. வண்டியை நிறுத்தவேண்டாம் மெதுவாக போய்கொண்டே இருங்கள் என்றான் குழுத்தலைவன் .

  சில ராணுவ வாகனங்கள் எதிரில் வந்தபோது  மட்டும் லேசாக வேகத்தை குறைத்து அவர்களை பார்த்து கையசைத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தது.அவர்களும் வெள்ளைகார்களை கண்டுவிட்டால் ஒரு புன்னகையுடன் கடந்து செல்கிறார்கள் .ஒரு கிலோமீட்டருக்கு  பின்னரே  மீண்டும் சரியான சாலையில் எங்கள் வாகனங்கள் பயணிக்க ஆரம்பித்தது. அதுவரையில் பாதுகாப்பு வீரர்கள் எங்கள் வண்டியின் கதவுகளுக்கு வெளியேதான் நின்றுகொண்டிருந்தனர்.

   இரண்டரைமணிநேர பயணத்துக்குபின் ஒரு முகாமுக்கு சென்று சேர்ந்தோம். அங்கே ஒருவர் இறங்கிகொண்டார் .அங்கிருந்த உணவு கூடத்தில்  மதியஉணவு சாப்பிட்டுவிட்டு பின் பறப்படுவோம் என்றனர் .நான் இரண்டு சீஸ் சாண்ட்விட்ச்ம் ,ஒரு டி போர்ன் ஸ்டேக்ம் சாப்பிட்டேன் .

 முன்பே குறிப்பட்டதுபோல  இருவர் அங்கிருந்து பாக்தாத் செல்லும் பொருட்டு எங்களுடைய வண்டியில் ஏறிகொண்டனர்.என்னை வேறொரு வண்டியில் ஏறிக்கொள்ள சொன்னார்கள் .இப்போது நான் முன்னால் செல்லும் வண்டியில் இருந்தேன் .
  
   அந்த வண்டியின் ஓட்டுனர் ஈராக்கி அவன் ஈராக்கி உடையணிந்திருந்தான் அதுவும் பாதுகாப்பு யுக்திதான் .முன் இருக்கையில் இருக்கும் குழு தலைவனின் உத்தரவுப்படி வண்டியின் வேகத்தை ,குறைத்தும்,கூட்டியும் ஒட்டவேண்டும் .உள்ளூர் ஈராக்கிக்கு ஆங்கிலம் தெரியாது .குழுத்தலைவன் சொல்லும் உத்தரவுகளை நடு இருக்கையில் என் அருகில் இருந்த வீரன் ஒருவன் அரபியில் மொழிபெயர்த்துகொண்டிருந்தான் .

    பாக்தாத் நகரை நெருங்கும்போது எங்கள் முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு ஈராக்கியின் கார் நின்றுவிட்டது .மூவ் மூவ் என்றபடியே எங்கள் வீரர்கள் கீழே இறங்கிவிட்டனர்.எங்களுடைய வண்டிகள் செல்ல வழியில்லதவாறு சாலையின் நடுவே அந்த கார் பழுதாகி நின்றது. அந்த காரின் ஓட்டுனர்  எவ்வளோ முயன்றும் வண்டியை நகர்த்த இயலவில்லை .

  எங்கள் குழு தலைவன் எங்கள்  காரோட்டியிடம் புஷ் ஹிம் என்றான். அதை அரபியில் மொழி பெயார்த்ததும் கரோட்டி பழுதாகி நின்ற அந்த வண்டியின் பின்புறத்தில் மெதுவாக மோதி தள்ளிக்கொண்டு பக்க வாட்டில் நிறுத்தி சாலையில் வழியை உருவாக்கினான் .அதை சற்றும் எதிர்பார்க்காத அந்த வண்டிகாரன் அரபியில் எதோ திட்டிகொண்டிருந்தான் .எதோ கெட்டவார்தைகள் என நினைத்துகொண்டேன் .

 இது என்ன அராஜகம் என தோன்றியது .சொந்த நாட்டிலேயே சுதந்திரம் பறிக்கப்பட்டு ,அந்நியர்களால் துன்புறுத்தப்படும் நிலையில் ஈராக்கிய மக்கள். மாலையில் பாக்தாத் வந்து சேர்ந்தோம் .மனதிலிருந்த பரபரப்பும் ,பதட்டமும் கொஞ்சம் குறைந்திருப்பதை உணர்ந்தேன் .
 
 பாக்தாத் சாலைகள் முன்பு மிக நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார்கள். இங்குள்ள உள்கட்டமைப்புகளை(பாலங்கள் ,சாலைகள் ...) உருவாக்கியதில் இந்தியர்கள் பெரும்பங்காற்றியுள்ளனர் .இப்போது சரியான பராமரிப்பின்றியும், அழியாத போர்சுவடுகளுடனும் காணமுடிந்தது.உலகமே நாலுகால் பாய்ச்சலில் முன்நோக்கி செல்லும்போது ,ஈராக் பின்நோக்கி செல்லும் அவலம் .

 பாக்தாத்தின் சாலையில் ஒரு வண்டி என்னை அழைத்து செல்ல தயாராக நின்றுகொண்டிருந்தது .அதனருகில் நிறுத்தி எனது பயண பையை எடுத்துகொள்ளுமாறு சொன்னார்கள் .என்னை அழைத்துவந்த குழுவின் தலைவன் நாங்கள் வேறு முகாமிற்கு செல்கிறோம் இவர்கள் உன்னை விடுதியறைக்கு அழைத்து செல்வார்கள் என்றார் .நான் அணிந்திருந்த கவச உடையையும், தலை கவசத்தையும் திரும்ப வாங்கிகொண்டனர் .

   குழுதலைவனுக்கும் மற்றவர்களுக்கும் நன்றி கூறினேன் .அவர்கள் சிறிதும் தாமதிக்காது புறப்பட்டு சென்றனர் .என்னை அழைத்துசெல்ல வந்திருந்த விடுதியின் மேலாளர் தலை வெளியே தெரியாதவாறு குனிந்து அமர்ந்து கொள்ளுமாறு சொன்னார் .பத்து நிமிட பயணத்தில் விடுதியை அடைந்ததும்  என்னிடம் வண்டியிலிருந்து இறங்கி வேகமாக விடுதிக்குள் செல்லுமாறு சொன்னார் .
  
   அவர்களே எனது பயண பைகளை கொண்டு வந்து தந்தனர் .முன்பு விடுமுறையில் ஊருக்கு செல்லும்போது நான் தங்கியிருந்த அதே விடுதி அங்கிருந்த மேலாளரும் ,சில பணியாளரும் நான் ஏற்கனவே சந்தித்தவர்கள்.ஒரு அறைசாவியை தந்து போக சொன்னார்கள் .நிறைய இந்தியர்கள் அங்கே தங்கியிருந்தனர்.பெரும்பாலானோர் நான் பணி செய்த அதே நிறுவனத்தை சார்ந்தவர்கள் .

    முன்பு சிலர் விடுதியிலிருந்து  வெளியே செல்ல அனுமதித்தனர் .இப்போது விடுதியின் வரவேற்பறைக்கு அருகில் வரவேண்டாம் எனவும் அறையிலேயே இருக்கும்படியும் அறிவுறுத்தினர் .இரவில் குப்புசும்,உப்பும், மிளகுதூள் இட்ட அவித்தகோழியும் தந்தனர் .

  இரவில் தூங்கிகொண்டிருக்கும் போது அருகில் எங்கோ குண்டு வெடிக்கும் சப்தம் கேட்டு அதிர்ந்து விழித்தேன்.பின்பு தூக்கமே இல்லை.அது பழகிய சப்தம்தான் ஆனால் இப்போது அது ஒரு பய உணர்வை தருகிறது .

    காலையில் நிறைய இந்தியர்களை சந்தித்தேன் .கடந்த பலநாட்களாக இங்கு தங்கியிருப்பவர்கள் .சிலர் ஊருக்கு செல்வதற்கும்,சிலர் வேறு முகாமிற்கு செல்வதற்காகவும் விடுதியில் இருப்பதாக தெரிந்தது.இங்கே இந்திய உணவு கிடைப்பதில்லை எனவே விடுதியில் தங்கியிருக்கும் சிலர் ஒன்று சேர்ந்து சாதமும்,கறியும்,கூட்டும் சமைப்பதாகவும் விடுதி மேலாளர் தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பதாகவும் அறிந்தேன் . அன்று மதிய சமையலுக்கு என்னையும் உதவி செய்யும்படியும் வேண்டினர் .
 
 அன்று அரிசி சோறும் ,கோழி குழம்பும் ,வெள்ளரிக்காய் ,காரட் ,தக்காளி ,வெங்காயம் ,காப்சிகம் சேர்த்த சாலடும் செய்தார்கள் .நான் சாலடுக்கான காய்களை நறுக்கிகொடுதேன் .

  எப்போது நான் இந்தியா செல்வேன் என எந்த தகவலும் இன்றி இருதினங்கள் கழிந்தது .விடுதி மேலாளரிடம் கேட்டேன் .உன் நிறுவன ஆட்கள் வருவார்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும் எங்களுக்கு எதுவும் தெரியாது என்றார்.மீண்டும் ஊர் செல்லும் நாளை எதிர்பார்த்து பாக்தாத் விடுதியறையில் காத்திருந்தேன் .

ஷாகுல் ஹமீது ,

04-12-2016