ஹார்மொனி ஏஸ் - பகுதி மூன்று
மஸ்டர் ஸ்டேஷனுக்கு விரைந்தோடி அனைவரும் கூடினோம். இயந்திர அறையில் தீ பிடித்துக்கொண்டது. தீயணைக்கும் குழு தயாராகி இயந்திர அறைக்குள் நுழைந்தது. தீ பற்றிக்கொண்டால் ஒவ்வொருவருக்கும் ஒரு பணி. எனக்கு காற்றை உள்செலுத்தும் ராட்சத விசிறிகளை அணைத்து மூடி காற்று இயந்திர அறைக்குள் நுழைவதை தடுக்க வேண்டும். சிறிது நேரத்திற்குப்பின் இயந்திர அறைக்குள் நுழைந்தபோது புகைசூழ்ந்து, இன்சினிரேட்டர் போக்கு குழாய் செம்பழுப்பாக இருந்ததை கண்டோம். இரண்டாம் அதிகாரி தீயணைக்கும் கடல்நீரை அதன்மேல் தெளிக்கமுயல முதன்மை இஞ்சினியர் தடுத்தார்.
டெக் காடட் அமித் டிசிபி (dry chemical powder) தீயணைப்பானை இயக்கினான். தீ விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய செயல்முறை பயிற்சிகள் வாரம்தோறும் கப்பலில் நடக்கும். ஆனாலும் நிஜமாக தீ பிடித்தபோது ஓரிருவரை தவிர மீதிபேர் பயத்தில் நடுங்குவதையே கண்டோம்.
அதிகாலை இயந்திர அறை வாட்ச்-கீப்பிங்கில் இரண்டாம் இஞ்சினியருடன் பணியிலிருந்த ஜூனியர் இஞ்சினியர் இன்சினிரேட்டரை* இயக்கும்போது தீ பற்றிக் கொண்டது. அதன் போக்குகுழாயில் பற்றிய தீ எரியதொடங்கியதும் அலராம் அடித்த அடுத்த விநாடி தன் அறையிலிருந்த கணினி திரையில் காமிரா காட்சியை கண்ட முதன்மை இஞ்சினியர் இரண்டு நிமிடங்களுக்குள் இயந்திர அறைக்கு செல்லும்போது மோட்டார்மேன் பாஸ்கர் கையில் தீயணைப்பானை இயக்க தொடங்கி கண் கண்ணாடி தவறி விழ அவரும் கீழே விழுந்துவிட்டார். முதன்மை இஞ்சினியர் தீயை அணைத்துவிட்டார். அதன் பின்னரே தீயணைக்கும் குழு உள்நுழைந்தது. மிக சரியான நேரத்தில் சீப் இஞ்சினியர் செயல்பட்டதால், கப்பல் தப்பித்து கொண்டது. கூடவே நாங்களும்.
காத்திருப்பு கூடிக்கொண்டே சென்றது. முதன்மை அதிகாரி பங்களாதேசின் ஆலமுக்கு காப்டனாக பதவிஉயர்வுக்கான தகவல் வந்தது. பல வருடங்களாக காப்டன் பதவியை எதிர்பார்த்து காத்திருந்தார். இங்கிருந்து சில நாட்களில் புறப்பட்டு வேறு கப்பலில் போய் காப்டனாக இணைய வேண்டும்.
கப்பலை கொரியாவில் இருந்து கிளப்ப சொல்லி தகவல் வந்தது. நாங்கள் எதிர்பார்த்த தகவல் அது. மாலையில் காப்டன் அனைவரையும் அழைத்து நடத்திய கூட்டத்தில் “எம்ஓஎல் நிறுவனம் கப்பலை லே ஆஃப்க்கு (lay off *) அனுப்ப முடிவு செய்துள்ளது. நாளை காலை நங்கூரம் உருவப்பட்டு மலேசியாவின் லவுபான் புறப்படுகிறோம். அங்கிருந்து அனைவரும் வீட்டுக்கு போகலாம்” என்றார். முதன்மை அதிகாரி “எம்ஓஎல் நிறுவனத்தின் லேஆப்க்கு செல்லும் முதல் கப்பல் இது. கார்கோ இல்லாததால் இந்த முடிவு” என்றார். அப்போது மலேசியாவில் வியாபாரம் இல்லாமல் எழுபது கப்பல்கள் லேஆஃபில் நின்றுகொண்டிருந்தன. காப்டன் முதன்மை அதிகாரி ஆலமிடம் “ஸாரி காப்டன் யுவர் பிரோமொசன் டிலேயிட்”. முதன்மை அதிகாரி உரிய நேரத்தில் இங்கிருந்து சென்று காப்டனாக இணையவேண்டிய கப்பல் நிற்கும் துறைமுகத்திற்கு செல்ல முடியாமல் ஆனது.
மலேசியா செல்வதற்கான வரைபடம் (chart) இல்லாததால் ஒரு நாள் தாமதமானது. இரவில் அறையில் அமர்ந்து திருக்குறள் வாசித்துக்கொண்டிருந்தேன். தமிழரான மோட்டர்மேன் வேலு அறைக்கு வந்து “நாலு மாசம்தான் ஆச்சு கப்பலுக்கு வந்து. இப்ப வீட்டுக்கு போனா எவ்வளவு நாள் வெயிட்டிங்கில் இருக்கணும்னு தெரியல. புள்ளைய பெரிய ஸ்கூல்ல சேத்துட்டேன்” என புலம்ப தொடங்கினார். காப்டன் உட்பட அனைவருக்கும் அதே கவலை. “நானே ஒம்பது மாசத்துக்கு மேல வீட்டுல இருந்துட்டு இப்பதான் வந்தேன் கப்பலுக்கு, சில நேரம் நம்ம கையிலில ஒண்ணும் கிடையாது வாராத சிந்திப்போம்” என சொல்லி அப்போது கையிலிருந்த உள்ளுவது எல்லாம் உயர்உள்ளல்... எனும் குறைளை படித்து காண்பித்து விளக்கினேன்.
புசான் கரையிலிருந்து லவுபான் வரைபடத்துடன் படகு புறப்பட்ட தகவல் வந்ததும் கேப்டன் நங்கூரத்தை உருவ தொடங்கினார். மோட்டார் மேன் நுனஸ் “ரொம்ப நாளுக்கு பொறவு நங்கூரம் மேல வருது. போய் பார்க்கலாம்” என்றான்.
களிமண்ணில் சிக்கியிருந்த நங்கூரம் பெரும் சிரமத்திற்கு பின் கப்பலுக்குள் வர இரண்டு மணிநேரமாகியது. வரைபடத்துடன் வந்த படகு விலகி சென்றது. இஞ்சின் இயக்கப்பட்டு “எல்லாம் சரியாக இருக்கிறது. பயணத்திற்கு தயார்” என முதன்மை இஞ்சினியர் சொன்னார். மலேசிய அலுவலகம் போனில் காப்டனை அழைத்தது. “இப்போது கிளம்ப வேண்டாம். ஒருவாரம் காத்திருங்கள்” என சொன்னது. மேலும் ஒருவாரம், மேலும் ஒருவாரம் என நாட்கள் நீண்டது மூன்று வாரம் கடந்தபின், கப்பலை ஜப்பானின் ட்ரை டாக் கொண்டுசெல்ல உத்தரவு வந்தது.
கப்பலின் bow thrusterஇல் பலகை ஒன்று சிக்கிகொண்டது. அதை சரிசெய்து பின்னர்தான் பயணத்திற்கு தயாராகும். ஒரு வாரம் ட்ரை டாக் முடிந்தபின் ஜப்பனிலேயே கப்பலில் சரக்கு ஏற்றப்படும் எனும் தகவலால் முழு கப்பலும் மகிழ்ச்சியானது.
கப்பலின் அடியை தொட்டுவிட்ட மகிழ்ச்சி |
முன்ஜோ ட்ரை டாக்கில் கப்பல் நிறுத்தப்பட்டது. மார்ச் மாத சுனாமியில் சிக்கிய கப்பல்கள் சில நின்றுகொண்டிருந்தன. ஜப்பானிய குழுவினரால் பழுதுநீக்கும் வேலை துவங்கப்பட்டது. இயந்திர அறையில் நிறைய குழாய்களில் ஒழுகல் இருந்தது. ஒரு மிகப்பெரிய குழாயை தவிர மற்ற குழாய்களை முதன்மை இஞ்சினியர் என்னிடமே செய்ய சொன்னார். “ஏழு நாள் தான் இங்கே நிற்கும். அதற்குள் முடித்தாக வேண்டும்” என்றார்.
சுனாமியில் சிக்கிய கப்பல் |
அதுவரை நான் செய்திராத மிகப்பெரிய வேலை அது. முதல் நாள் காலை எட்டுமணிக்கு துவங்கி இரவு பத்தானது, இரண்டாம் நாள் நள்ளிரவு பன்னிரண்டு மணி, மூன்றாம் நாள் காலை எட்டுமுதல் அதிகாலை இரண்டுமணி வரை வேலை செய்தும் முடியவில்லை. மூன்றில் இரண்டு முடிந்து, பாலாஸ்ட் பம்பின் குழாய் பொருந்தவேயில்லை. இரண்டு சென்டிமீட்டர் சிறியதாக இருந்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. மண்டை குழம்பியிருந்த வேளை முதன்மை இஞ்சினியர் வந்தார். நான் பயந்தது போல் திட்டவேயில்லை. என்ன தவறு செய்தேன் என விளக்கினார். மேலும் இருவரை எனக்கு உதவ சொல்லி எப்படி சரி செய்ய வேண்டும் எனவும் சொல்லித் தந்தார்.
“டாக்கில் நாளை காலை தண்ணீர் நிரப்பப்பட்டு சோதனை செய்யப்படும். இன்றிரவுக்குள் முடித்தே ஆகவேண்டும்” என சொல்லி சென்றார். காஸ் கட்டிங் முறையில் வெட்டி, குழாயை வெல்டிங் மூலம் இணைத்து வேலையை அதிகாலையில் முடித்து ஏழு மணிக்கு தூங்க சென்றேன். பதினோரு மணிக்கு டாக்கில் நீர் நிறைத்து சோதனை செய்தார்கள்.
ஜப்பானின் யார்டில் வெளியே செல்லவும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே கப்பலுக்கு ஆறு சைக்கிள் வீதம் தருவார்கள். வேலு, குருமூர்த்தி, நான் ஒரு மாலை வேளையில் மூன்று சைக்கிள்களில் மெல்லிய தூறலில் பச்சை, பசுமைக்குள் வளைந்து நெளிந்த பாதைகளில் நெடுந்தூரம் சென்று விட்டோம். சுனாமி பாதிப்பு இன்னும் அழியாமல் இருந்ததை கண்டோம்.
“வேலு திரும்பி கப்பலுக்கு சரியா போய் சேருவோமா? வளி மறந்துட்டே” என சொல்லிகொண்டிருக்கும் போதே அவனது சைக்கிளின் டயரில் காற்றில்லாமல் இருந்ததை கண்டான்.
“பஞ்சர் இப்ப எப்டி தள்ளிட்டு போறது” குருமூர்த்தியிடம் வேலுவை அவரது சைக்கிளில் ஏற்றிக்கொள்ள சொன்னேன். நான் ஒரு சைக்கிளை ஓட்டிக்கொண்டே இரண்டாம் சைக்கிளை வலக்கையில் பிடித்து இரு சைக்கிள்களுடன் யார்டுக்கு வந்து சேர்ந்தோம்.
டிரை டாக்கில் |
ஏழாவது நாளே கப்பல் ட்ரை டாக்கிலிருந்து வெளியேறி துறைமுகம் செல்ல காத்திருந்தது. ட்ரை டாக் வருவதற்கு முன்பே முதன்மை அதிகாரி ஆலம் காப்டனாக போயிருந்தார். அவரை விடுவிக்க இலங்கையின் முதன்மை அதிகாரி வந்தார்.
கப்பலில் சரக்கு ஏற்றுவதற்காக கார்களின் உயரத்தை பொறுத்து கார் நிறுத்துமிடத்தின் அளவை கூட்டியும், குறைத்தும் வைக்கும் பணியை முதன்மை அதிகாரி இரு காடட் டெக் பணியாளர் உதவியுடன் துவங்கினார். போசன் அதற்கான ஹைட்ராலிக் வண்டியை ஓட்டுவார்.
முதன்மை இஞ்சினியரை தவிர நாங்கள் ஒன்பதுபேர் இயந்திர அறையில் பணியில் இருந்தபோது கப்பலின் தீயணைக்கும் கார்பன்டை ஆக்சைடு திறந்துவிட்ட அலாரம் அடித்தது. இயந்திர அறையில் எங்கும் தீ பிடிக்கவேயில்லை. அந்த அலாரத்தை இயக்கும்முன் மனிதர்கள் அனைவரையும் வெளியேற்றியபின் காப்டனின் உத்தரவுபடி முதன்மை இஞ்சினியர் மட்டுமே அதை இயக்க அனுமதி. அதற்கு முன் கப்பலின் பணியாளர்கள் அனைவரும் உள்ளனரா என உறுதி செய்வது காப்டனின் கடமை.
என்னவென்று தெரியாமலே அலாரம் அடிக்கும் சப்தம் கேட்டு இஞ்சின் கட்டுபாட்டு அறைக்குள் ஓடினேன். நான்காம் இஞ்சினியர் மட்டும் இருந்தார். ”இது co2 அலாரம் டேஞ்சர், டேஞ்சர்” என கதறி அழத் தொடங்கினான். மோட்டார்மேன் பாஸ்கர் இயந்திர அறையில் கீழ்ப்பாகத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். மற்றவர்களை காணவில்லை. கார்பன்டை ஆக்சைடு வெளியேறும்போது மைனஸ் வெப்பநிலையில் இருக்கும். இரண்டடி கூட வைக்க முடியாது.
இன்சினிரேட்டர் (சன்னி ஜாய் நாட்குறிப்புகளில் இன்சினரேட்டர் பற்றிய பதிவு)
(lay off *)= கப்பலை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைப்பது. கப்பலின் அனைத்து கதவுகளும் மூடி. பணியாளர் யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு வாட்ச்மேன் மட்டும் இருப்பார்.
நாஞ்சில் ஹமீது
27-may-2025.
sunitashahul@gmail.com
எந்த இக்கட்டுகளிலும் சமநிலை இழக்காமல் இருப்பதற்கே தொடர்ந்த பயிற்சிகள். ஒரு தவறையோ, பிழையையோ வரக்கூடாது என்றாலும் வந்தால் என்னென்ன செய்யவேண்டும் என்றே சொல்லிக்கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் அதை எதிர்நோக்கி இருந்தாலும் அது வந்துவிடும்போது முதலில் நாம் அடைவது பதட்டம்தான் இல்லையா? நடந்து முடிந்தபின்தான் பயிற்சிகளும், நாம் முயன்று கற்றுக்கொண்டதும் நினைவிற்கு வரும். சிறுபிள்ளையில் கேட்ட ஒரு கதை. ஒருவனுக்கு ஒரு முனிவர் சொல்கிறார், உலகிலேயே மிக மிக விலையுயர்ந்த ஒரு கல் கடற்கரையோரமாக உள்ளது. அதைத் தொட்டால் தாங்கமுடியாத சூடு இருக்கும். அதுதான் அதற்கு அடையாளம் என்று. அவனும் கடற்கரை, கடற்கரையாக தேடிக்கொண்டே இருக்கிறரன். நிறைய வருடங்கள் சென்று மிக பலவீனமாக ஒவ்வொரு கல்லாய் எடுத்துப்பார்க்கும்போது தாங்கமுடியாத சூடு கொண்ட ஒரு கல்லை எடுத்து, சூடு தாங்கமுடியாமல் அனிச்சையாய் கடலில் வீசிவிடுகிறான். அதன்பிறகுதான் அவனுக்கு தவறு புரிகிறது. ஆனால் ஒன்றும் செய்ய முடியாது. அதுபோல பயிற்சிகளின் நோக்கமே பதட்டமற்ற நிலைதான். ஆனால் அது எல்லாருக்கும் கைகூடாது. ஒவ்வொரு பிரயாணத்திலும் எத்தனை விதமான விபத்துக்களை, இக்கட்டுக்களை தாண்டி வந்திருக்கிங்க. சுனாமிக்கு அப்புறம் கப்பலை ரிப்பேர் பண்ற வேலை பெருந்தொழிலாய் இருந்திருக்கும்
ReplyDeleteடெய்சி