ஐஜின் - பகுதி 1.
விடுமுறைக்கு வந்த ஒரு வாரத்தில் மும்பை அலுவலகத்திலிருந்து மானேஜர் பிராசாந்த் அழைத்து அடுத்த இருதினங்களில் கப்பலுக்கு போக தயாரா எனக் கேட்டார். முடியாது என்றேன். “தம்பியின் திருமணம் இருக்கிறது அடுத்த மாதம். ஆகவே அதன்பின் தான் கப்பலேற முடியும்” என்றபோது “பதினைந்து நாட்களுக்கு மட்டுமே. அதற்குள் திரும்பி வந்துவிடலாம்” என்றார்.
கப்பலுக்கு போய்விட்டால் உரிய நேரத்தில் திரும்பி வரமுடியும் என்பது உறுதியற்றது. கடந்த கப்பலில் இரண்டாம் இஞ்சினியருக்கு நான்கு மாதங்களாக மாற்று பணியாள் கிடைக்கவேயில்லை.
சென்னை பொறியியல் கல்லூரி ஒன்றில் வேலைபார்த்து கொண்டிருந்த தம்பி ஷேய்க்கின் திருமண ஏற்பாடுகளை நானும் எனது மூத்த அண்ணன் மாஹினும் இணைந்து செய்தோம். டிசம்பர் மாத இறுதியில் தம்பியின் திருமணம் முடிந்தபின்பு தான் கப்பலுக்கு செல்வது என உறுதியாக மேனேஜரிடம் சொன்னேன்.
விடுமுறை நாட்களில் வாய்ப்பு கிடைத்தபோது நான் கற்றுகொண்ட அடிப்படை யோகா வகுப்பின் அடுத்த நிலை வகுப்புக்கும் சென்று இன்னும் சில தியானமுறைகளை பயின்றேன்.
எண்ணெய் டாங்கர் கப்பல் ஒன்றில் போக சொன்னார் பிராசாந்த். “அதில் அனைவரும் ரஷ்யர்கள். நீங்கள் இருவர் மட்டும் இந்தியர்களாக இருப்பீர்கள். உணவு சமாளித்து கொள்ளவேண்டும். இரண்டு மாதம் மட்டுமே” எனச் சொன்னார்.
அமெரிக்காவின் நியுயார்க் போய் பணியில் இணைய வேண்டும். 2008ம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் சென்னை அலுவலகம் சென்று மருத்துவ பரிசோதனை முடித்தேன். விமான டிக்கெட்டுக்கு காத்திருக்க சொன்னார்கள். மறுநாள் எனது பயணம் ரத்தானதாக மும்பை அலுவலகம் சொன்னது. சென்னையில் காத்திருக்கவேண்டாம் என்றும் வீட்டுக்கு போகுமாறும் அறிவுறுத்தினார். “வீட்டிலிருந்து கொச்சி அலுவலகத்திற்கு எத்தனை மணி நேரம்? எதாவது அவரச வாய்ப்பு வந்தால் கொச்சியில் ரிப்போட் செய்ய சொல்வேன்” எனவும் பிராசாந்த் சொன்னார்.
கப்பலுக்கு போகாமல் திரும்பி வருவதை வீட்டில் சொல்லவேயில்லை. அனந்தபுரி ரயிலில் வந்திறங்கி வீட்டு கேட்டை திறந்து நின்றுகொண்டிருந்தேன். இரண்டு வயதான ஸாலிம் எண்ணெய் தடவிய உடலுடன் சுடுநீர் காய்ச்சும் சுனிதாவுக்கு உதவியாக விறகுகளை அடுப்பில் வைத்துக் கொண்டிருந்தான். சுனிதா அடுப்பின் முன் அமர்ந்து புகை ஊதும் போது ஒருமுறை என்னை திரும்பி பார்த்தாள். நிஜமல்ல என நம்பி மீண்டும் அடுப்பூதத் தொடங்கினாள். பின்னர் ஸாலிம் தான் கண்டு சொன்னான் “வாப்பா” என.
இருபது நாட்கள் கழிந்தபின் அலுவலக மேனேஜர் போனில் “ஷாகுல் உன்னை வேறு கப்பலுக்கு மாத்தியிருக்கிறேன். மார்ச் மாதம் ஐஜின் எனும் கப்பல் சிங்கபூருக்கு வரும்போது கப்பல் ஏற வேண்டும்” என்றார்.
மூன்றரை மாதங்களுக்குப்பின் மார்ச் பத்தாம் தேதி சிங்கப்பூருக்கு வந்தேன். இம்முறை சென்னை ஆவடியில் இருந்த தம்பி ஷேக் வீட்டிற்கு வந்து தங்கி அங்கிருந்து விமானநிலையம் சென்றேன்.
சிங்கையில் இறங்கியபோது கப்பல் தாமதமாகிவிட்டது என விடுதியறைக்கு அனுப்பிவைத்தார் முகவர். என்னுடன் பிரம்லி டிசில்வா என ஒரு பையனும் மும்பையிலிருந்து வந்திருந்தான்.
கடந்த முறை மலேசியாவில் சையதலி அண்ணன் வீட்டில் சந்தித்த தஞ்சை தமிழர் மணிவண்ணன் சிங்கையில் வசிப்பவர். அவரை போனில் அழைத்தேன் குடும்பத்துடன் இரவு விடுதியறைக்கு வந்து சந்தித்து சென்றார்.
மார்ச் பதினோராம் தேதி கப்பல் சிங்கையில் கரையணையும் போது அதிகாலை இரண்டு மணி. விடுதியறையிலிருந்து நள்ளிரவு ஒரு மணிக்கு அழைத்துச் சென்றார்கள்.
முன்பு வேலைபார்த்த நான்கு கப்பல்களையும்விட மிக பிரம்மாண்டமாய் தெரிந்தது ஐஜின் எனும் காரேற்றும் கப்பல். இருபத்தி ஆறு ஆண்டு பழையது. ஐயாயிரத்தி ஐநூறு கார்களை இதில் ஏற்ற முடியும்.
காப்டன், முதன்மை இஞ்சினியர், இரண்டாம் இஞ்சினியர் ஆகியோர் பங்களாதேஷை சார்ந்தவர்கள், முதன்மை அதிகாரி, இரண்டாம் மூன்றாம் அதிகாரிகள், மூன்றாம், நான்காம் இஞ்சினியர்கள் இந்தியர்கள். மற்ற பணியாளர்கள் அனைவரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்தவர்கள்.
இந்த பழைய கப்பலிலும் நிறைய ரிப்பேர் பணிகள். அதற்காக ஏற்கனவே இரு ட்ரைனிங் ஒ எஸ் அதிகமாக இருந்தனர். கேரளாவின் ரிப்பேரிங் பிட்டர் ஷாஜு ஊருக்கு செல்ல நான் அவரை விடுவித்தேன். என்னுடன் வந்த டிசில்வா இங்குள்ள பணிகளுக்காக வரவைக்கப்பட்டவர். இந்திய தலைமை சமையல்காரர் ஹுசைன் மற்றும் பிலிப்பினோ இரண்டாம் சமையல்காரர், மெஸ் மென் என மொத்தம் இருபத்தி எட்டு பணியாளர்கள் இருந்தோம். முப்பதுக்கும் மேற்பட்ட அறைகள் இருந்ததால் அனைவருக்கும் தனித்தனி அறைகள். குளிக்கவும், கழிப்பறை செல்லவும் அதிகாரிகளுக்கும், பணியாளார்களுக்கும் அறைகள் தனித்தனியாக இருந்தது.
கப்பல் இன்னும் சிறிதுநாட்களில் ட்ரை டாக் சென்று பெரிய பணிகளை செய்யவிருப்பதால் அதற்கான உதிரிபாகங்கள், குழாய்கள் என மில்லியன் டாலர் மதிப்பில் கப்பலில் வந்திறங்கியது.
சிங்கையில் கார்களை, ஏற்றவும், இறக்கவும் செய்தபின் கப்பல் ஜப்பானை நோக்கி பயணித்தது. ஜப்பான் என்னை எப்போதும் வியக்க வைக்கிறது. ஜப்பானிய தீவுக் கூட்டங்களை இணைக்கும் பாலங்களுக்கு அடியில் கப்பல் செல்வதும், துறைமுகங்களுக்கு அருகிலேயே, கார் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிலையங்களை அமைத்து இங்கிருந்து பொருட்களை உலகம் முழுவதும் கப்பலில் அனுப்பி உலக நாடுகளின் பொருளாதாரத்தை தனதாக்கி கொள்ளும் அறிவும், சாமர்த்தியமும் கொண்ட ஜப்பானியர்களையும், அங்குள்ள தொழில்நுட்ப வளர்ச்சியையும் மணவாளகுறிச்சி எனும் சிறு கடற்கரை கிராமத்திலிருந்து சென்ற இளைஞனான நான் வியந்து பார்த்தேன்.
ஜப்பானில் கல்யாண ராமன் சினிமாவில் கமலஹாசன் பாடும் பாடல் ‘இந்தியாவும் இப்படி மாறினாக்கா எப்படி அந்த நாள் எந்த நாள் நல்ல நாளோ’ இந்தியா இப்படி வளர வேண்டும் என எண்ணிக்கொண்டேன்.
மேலும்...
நாஞ்சில் ஹமீது,
16-May-2025.
sunitashahul@gmail.com
தொடர்புடைய பதிவுகள் :
1. ஜப்பான்
2. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் தளத்தில் ஜப்பான் குறித்த கடிதம்
No comments:
Post a Comment