ஸ்டேயிட்ஸ் வென்சர்
கப்பலில் இருக்கும்போது ஆயுர்வேத மருத்துவம் செய்ய சொல்லி அறிவுரையும்,ஆலோசனையும் கூறிய காப்டன் இந்திரஜித் சிங் என் அலுவலகத்திற்கு என்னை பணிநீக்கம் செய்ய சொல்லி கடிதம் அனுப்பியது ஏன் என ஒரு குழப்பம் இருந்தது.
மும்பை அலுவலகம் வந்து அலுவலக தலைவரை நேரில் சந்திக்குமாறு சொன்னார் மேனேஜர். இரண்டு மாதம் வேலை செய்த பாமாயில் கம்பனியில் விடைபெற்று மீண்டும் மும்பைரயிலேறி என் அலுவலகம் சென்றேன். உனக்கு வாய்ப்பு தந்தோம்,உன் நோயை மறைத்து கப்பலுக்கு சென்றாய். பணியிலும் அனுபவம் குறைவு,வேறு கம்பனிக்கு போ,வேலையை கற்றுக்கொண்டு வா என கறாராக சொல்லிவிட்டு “மீட் எம் டி” என அனுப்பிவைத்தார் பிரசாந்த்.
மீண்டும் பணி கிடைக்கும் எனும் உறுதியில்லாமல் வேறு நிறுவனங்களுக்கும் பைல்களுடன் வேலை தேடி அலைந்துவிட்டு நிறைய இடங்களில் எனது பயோ டேட்டாவை கொடுத்துவிட்டு ஊருக்கு வந்தேன். ராயல் கரீபியன் எனும் அமெரிக்காவின் உல்லாச கப்பல் நிறுவனம் இரு தினங்களில் நேர்காணலுக்கு வருமாறு அழைத்தது முன்பு ஈராக்கில் பணிசெய்த ஸ்டார் கீப்பர் பணிக்கு அங்கு விண்ணப்பித்திருந்தேன். அடுத்த அரை மணி நேரத்தில் நான் பணி செய்த கப்பல் நிறுவன பிரசாந்த் அழைத்தார். மறுநாள் காலை சென்னை அலுவலகத்தில் காலை பத்து மணிக்குள் இருக்க சொன்னார்.
மூன்று மணிக்கு திற்பரப்பு அருவியில் குளித்துகொண்டிருந்த நான் வடசேரியிலிருந்து ஐந்து மணி பேருந்தில் ஏறி காலை பதினோரு மணிக்கு சென்னை அலுவலகத்தில் ஆஜர் ஆனேன். மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினார்கள் மருத்துவர் பாலாஜி கடந்த கப்பலில் என்ன நடந்தது எனக்கேட்டார். “உங்க மும்பை ஆபிஸ் நல்லா செக் பண்ண சொல்லி போன் பண்ணினாங்க ,பிளட் டெஸ்ட் ,யூரின் டெஸ்ட் எல்லாம் நார்மலா இருக்கு, உங்களுக்கு வேற ஏதும் பிரச்னை இல்லையே” எனக்கேட்டார். நான் முழு உடல் தகுதியுடன் இருப்பதை மருத்துவ அறிக்கை சொன்னது.
இம்முறையும் மூன்று மாத பணிஒப்பந்தம் கிடைத்தது. சென்னை – கல்கத்தா ஜெட் ஏர்வேய்ஸ் விமானத்தில் கல்கத்தாவின் விமான நிலையத்தில் இறங்கும்போது டென்னிஸ் விளையாட்டு வீரர் மகேஷ் பூபதி என்னருகில் பயண பைகளை எடுத்துக்கொண்டிருந்தார். ஹல்தியா துறைமுகத்தில் என்னுடன் பணியில் இணைய மைலப்பள்ளி சுதீஸ்வர் ராவ் எனும் இருபத்தியிரண்டு வயதான இளைஞன் மும்பையிலிருந்து வேறு விமானத்தில் வந்திறங்கினான்.
கப்பல் பணியில் இணைய சரியான வயது பத்தொன்பது. அமெரிக்க விசா நேர்காணலில் அந்த அதிகாரி கேட்ட கடைசி கேள்வி “வாட் இஸ் யுவர் ஏஜ்”. முப்பது என்றபோது. “திஸ் இஸ் வெரி லேட் டூ ஜாயின் ஷிப்” என்றார். ஈராக்கில் அமெரிக்க ராணுவத்துடன் பணியிலிருந்தேன் என்பதால் மட்டுமே அப்போது எனக்கு விசா கிடைத்தது.
விமான நிலையத்திலிருந்து காரில் துறைமுகம் நோக்கி சென்றுகொண்டிருக்கும்போது எக்சிகியூட்டிவ் எனும் கப்பல் நிறுவனம் அழைத்தது. உடனே அலுவலகம் வாருங்கள் இரு தினங்களில் கப்பல் ஏற வேண்டுமென. பணியில் இணைய சென்ருகொண்டிருக்கிறேன் என்றதும். சம்பளத்தை கேட்டுவிட்டு. அதைவிட அதிகம் தருவதாக சொன்னார்கள்.
ஹூப்ளி ஆற்றில் நங்கூரம் பாய்ச்சி நின்ற கப்பல் தாமதமானதால் மூன்று தினங்கள் ஹல்தியா துறைமுகம் அருகிலுள்ள விடுதியில் தங்கியிருந்துவிட்டு அதிகாலை நான்கு மணிக்கு இருட்டில் கப்பலில் கொண்டு விட்டார்கள்.
ஸ்டேயிட்ஸ் வென்சர் மலேசியாவின் போர்ட் கெலாங்கில் பதிவு செய்யப்பட்ட மலேசிய முதலாளிக்கு சொந்தமானது.முப்பது ஆண்டு பழைமையான கப்பல் ஒரு இஞ்சின் பிட்டர்,டெக் பிட்டர் ஏற்கனவே இருந்தார்கள்.
இஞ்சினில் புதிதாய் குழாய் மாற்றும் பணிக்கு இரு பிட்டர்கள் அதிகமாக தேவை என்பதால் இரு பயிற்சி பிட்டர்களை அனுப்ப கப்பல் முதலாளி ஒத்துகொண்டார். முப்பதே வயதான இளம் மலேசிய காப்டன் ஹலீம் என்னை கைகுலுக்கி வரவேற்று “திஸ் இஸ் வெரி ஓல்ட் ஷிப் லாட்ஸ் ஆப் ஜாப்ஸ் ஹியர், ஐ ஆம் எக்ஸ்பெக்டிங் டு கம்ப்ப்ளீட் வித் இன் டூ மந்த்ஸ்” எனச்சொன்வரிடம். “ஐ வில் டு மை பெஸ்ட் காப்டன்”என்றேன்.
இலங்கையின் முதன்மை அதிகாரி டான் நான் ஆங்கிலம் பேசியதால் என்னை டெக்கில் வைத்துகொண்டார். முன்னரே டெக்கில் இருந்த மதுரை முத்துவையும், என்னுடன் வந்த மைலப்பள்ளி சுதீஸ்வர் ராவையும் இஞ்சின் பணிக்கு அனுப்பிவைத்தார்.
நூற்றி எண்பது மீட்டர் நீளம்,பதினோரு அடுக்கு கொண்ட ஐந்தாயிரம் கார்களை ஏற்றிசெல்லும் மிக பழைய கப்பல் அதனால் இங்கே வேலையும் பணியாளர்களும் அதிகம். இருபத்திஎட்டு பேர் இருந்தோம்.தங்கும் அறைகள் நிறைந்து இருந்ததால் இரு கட்டில்கள் இருந்த ஒரு அறையை எனக்கும் சுதீஸ்வர் ராவுவுக்கும் தந்தார்கள்.
காப்டனுக்கும்,முதன்மை இஞ்சினியருக்கும் மட்டுமே கழிப்பறையும்,குளியலறையும் இணைந்த அறை.மற்றவர்களுக்கு பொதுவான கழிப்பறை,குளியலறை அப்போது பெரும்பாலான ஜப்பானிய கப்பல்கள் அப்படித்தான் கட்டப்பட்டது.மலேசிய காப்டன், இலங்கை முதன்மை அதிகாரி,இரண்டாம் மூன்றாம் இஞ்சினியர்கள்.பங்களாதேசின் முதன்மை இஞ்சினியர்,நான்காம் இஞ்சினியர் தவிர மற்ற அனைவரும் இந்தியர்கள். மும்பையின் சுனில் சுவையாக சமைக்கும் சமையல்காரர். விழிஞ்சம் அருகிலுள்ள வள்ளகடவை சார்ந்த நாணுகுட்டன் மெஸ் மென்.
ஸ்டேயிட்ஸ் வென்சர் ஐரோப்பா,ஆஸ்திரேலியா,அரபு வளைகுடா நாடுகள் என ஒரு உலக பயணத்தின் முடிவில் இருந்தது. கல்கத்தாவில் முந்நூறு கார்களை ஐந்து மணிநேரத்தில் இறக்கி விட்டார்கள். ஹூப்ளி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்திருக்கும் போது மட்டுமே கப்பல் அடி முட்டாமல் செல்ல இயலும். நீர்மட்டம் உயரும் வரை காத்திருந்து மறுநாள் அதிகாலை வங்காள விரிகுடாவை அடைந்து கொழும்பு நகருக்கு சென்றது.
அங்கே நானூறு கார்களை இறக்க ஆறு மணிநேரம்.பணி முடிந்து கிடைத்த இரு மணிநேரத்தில் கொழும்பு நகரை சுற்றிவிட்டு வந்தோம். சாலை நெடுகிலும் ராணுவ சோதனை. பாதுகாப்பற நகரம் என உணரசெய்தது.
![]() |
Twin tower klcc |
முழுமையாக காலியான கப்பல் மலேசியாவின் போர்ட் கெலாங்கிற்கு சென்றது. கெலாங் துறைமுகம் தஞ்சை தமிழ் பணியாளர்களால் நிரம்பியிருந்தது.ஆறு மாதம் ஜப்பானின் NYK சரக்கு நிறுவனத்துக்கு கொடுத்திருந்த ஒப்பந்தத்தை முடித்து. தனது கார்க்கோவை ஏற்றி இறக்கவும் NYKயின் மலேசிய,சிங்கப்பூர்,தாய்லாந்து,இந்தோனேசியா சரக்குகளை மட்டும் ஏற்றி இறக்கும் புதிய ஒப்பதந்தம் போடப்பட்டது.
![]() |
சையதலி அண்ணன் |
மலேசியாவின் போர்ட் கெலாங்கில் இறங்கி ரயில் பிடித்து குலாலம்பூர் சென்று சையதலி அண்ணனை சந்தித்தேன்.பத்தாம் வகுப்பில் தோல்வியுற்று இருந்த என்னை அறிவுரை சொல்லி மீண்டும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கு அவரே வழிகாட்டி, குடும்பத்துடன் வசிக்கும் அவரது இல்லம் அழைத்து சென்று ஒன்றாய் அமர்ந்து உணவுண்டபின் விடைபெற்றேன். அவருக்கு பெர்ஜெயா நிறுவனத்தில் ஹோட்டல் அண்ட் ரிசார்ட் நிறுவனத்தில் வேலை.
ஸ்டேயிட்ஸ் வென்சர் மேற்கு-கிழக்கு மலேசிய துறைமுகங்களான கெலாங் ,லாபான்,கொச்சிங்க்,பிந்துலு,கோட்டகினாபாலு,சிங்கப்பூர், இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் தாய்லாந்தின் லாம் ஜ பாங்க் ,ஒரே ஒரு முறை புருனேவின் மௌரா துறைமுகத்தில் நூறு கார்களை இறக்க சென்றோம். இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் துணிஉறையால் பொதியப்பட்ட ஒரு கார் புருனே சுல்தானுக்கு செல்கிறது என்றார்கள். அதை கொண்டு செல்ல அரண்மனை பாதுகாவலர்களுடன் ஓட்டுனர் ஒருவரும் வந்தார்.
அந்த கப்பலின் அதிகபயண தூரம் என்பது. கிழக்கு மலேசியாவின் கோட்டகினா பாலுவிலிருந்து தாய்லாந்தின் லாம் ஜ பாங்க் செல்ல ஆகும் முப்பத்தியாறு மணிநேர பயணமே. மற்ற அனைத்தும் மிக குறுகிய பயணங்கள். தினமும் துறைமுகம். ஒவ்வொரு நாளும் கப்பலை கரையில் கட்டி சரக்குகளை இறக்கி புறப்பட்ட சில மணிநேரங்களில் அடுத்த துறைமுகம். கப்பல் காரர்களின் உடலை கசக்கி,பிழியும் வேலை. ஒரே நாளில் அதிகாலை இரண்டு மணிக்கு கோட்டகினா பாலு,லௌபான், மௌரா என மூன்று துறைமுகங்களில் பாதுகாப்பாக கப்பலை கட்டி,சரக்கு இறக்கியபின் மீண்டும் பயணம் செய்தோம்.
அதிலும் ஒரு நன்மை மலேசிய,இந்தோனேசிய சிம் கார்டுகள் வைத்திருந்தேன். தினமும் வீட்டிற்கு குறைந்த கட்டணத்தில் பேச முடியும் என்பதே. கப்பலில் சாட்டில்லைட் போன் மூலாமாக பேசுவது அதிக செலவு. முப்பத்தியாறு அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கும் கார்டில் ஐம்பத்தியிரண்டு மணிநேரம் மட்டுமே பேச முடியும்.
![]() |
ஜப்பானிய துறை முகத்தில் |
கப்பலில் கார்கள் இல்லாமல் காலியாக இருக்கும் இருக்கும் இடங்களில் பாலாஸ்ட் தொட்டியின் காற்று போகும் குழாய்களில் மோசமானதை மாற்றுவது,துருபிடித்து இற்று போன இரும்பு பிளேட்களை மாற்றுவதும் தான் முக்கிய பணி.குழாய்களும்,இரும்பு பிளேட்களும்,வெல்டிங் ராடும் வந்துகொண்டே இருக்கும் கப்பலுக்கு.
மலேசிய துறைமுகம் செல்ல சில மணிநேரம் மட்டுமே இருந்த ஒரு நாளில் என் உதவிக்கு யாரும்இல்லை, அறுபது கிலோ எடை கொண்ட இரு காஸ் பாட்டில்களை ஒரு வண்டியில் வைத்து தள்ளி கொண்டு சென்றேன். டெக்கில் குழாய் செல்லும் இடங்களில் இரும்பு பிளேட்டினால் சாய்வாக இருக்கும் சக்கரம் பதித்த வண்டிகளில் பொருட்களை கொண்டு செல்லவசதியாக. நூற்றியிருபது கிலோ எடைகொண்ட பாட்டில்களை தள்ளிகொண்டு சென்றபோது இருமுறை அந்த சாய்வில் ஏற்ற முடியவில்லை மூன்றாவது முறையாக முயற்சித்தபோது அதிக எடைகொண்ட காஸ் பாட்டில் வண்டி கீழே விழுந்ததில் எனது வலதுகையின் மோதிர விரலின் மேல். சதை நசுங்கி ரத்தம் பீறிட்டது. எனக்கு கப்பலில் முதல் விபத்து. அதிர்டவசமாக கப்பல் துறைமுகம் வந்ததால் மருத்துவமனை சென்று விரலில் மூன்று தையல் போட்டு வந்தேன்.
மூன்று மாதத்திற்குப்பின் எனக்கு மேலும் மூன்று மாதம் பணி நீட்டிப்பு கிடைத்தது.முதன்மை அதிகாரி டான் எனக்கான பரிந்துரை கடிதத்தை காப்டன் கையொப்பமிட்டு அலுவலகத்திற்கு அனுப்பினார்கள். இயந்திர அறையில் பணிமுடிந்ததும் சுதீச்வர் ராவை அனுப்பினார்கள்.
நாஞ்சில் ஹமீது.
13-may- 2025
No comments:
Post a Comment