என் மூத்த சகோதரர் மாஹீன் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்துவிட்டு மும்பைக்கு வேலைதேடி சென்றபின் தான் தெரிந்துகொண்டார், கப்பலில் இஞ்ஜினியர்களாக பணிபுரியும் வாய்ப்பு இருப்பதை. கப்பல் நிறுவனம் ஒன்றில் தேர்வாகிவிட்டார். வாப்பாவிடம் அதற்கான பயிற்சி கட்டணத்திற்கு உரிய பொருளாதாரம் இல்லாததால் கிராமத்தில் நாங்கள் இருந்த வீட்டை அடமானம் வைத்து கொச்சியில் பயிற்சியை முடித்து பயிற்சி இஞ்சினியராக முதல் முறை கப்பலுக்கு போய்வந்தபின் “நம்ம குடும்பத்துல இனி யாரும் கப்பல் வேலக்கி போவாண்டாம்” என சொல்லியிருந்தார்.
![]() |
முதல் கப்பலில் |
நான் மிகுந்த போராட்டங்களுக்குப்பின் முதல் கப்பலில் சென்ற பின் போனில் என் கப்பல் விபரங்களை கேட்டறிந்திருந்தார். அவர் விடுமுறையில் வந்தபின், தான் பணிபுரிந்த நிறுவனத்திற்கு என்னை அழைத்துச்சென்றார். தற்போது கப்பலில் முதன்மை இஞ்சினியராக இருக்கும் அவர் அப்போது மூன்றாம் இஞ்சினியராக இருந்தார்.
அந்த நிறுவனம் கம்ப்யூட்டர் டெஸ்ட் நடத்தி என்னை தேர்வு செய்து, பிட்டர் டிரேட் டெஸ்ட்டுக்காக ஒரு பயிற்சி கூடத்திற்கு அனுப்பியது. அவர்கள் வெல்டிங் மற்றும் லேத் மிஷனில் எனக்கு போதிய அனுபவம் இல்லாததால் பதினைந்து நாள் பயிற்சியில் சேர்ந்து படிக்க சொன்னார்கள். அதற்கான கட்டணத்தை என் அண்ணனே கொடுத்தார்.
பதினைந்து நாள் பயிற்சி முடிந்து நடந்த டெஸ்டில் தேர்வான கடிதத்துடன் கப்பல் நிறுவனத்துக்கு சென்றேன். அமெரிக்கா விசா பெற்றுவர கடிதம் தந்தார்கள். பிரீச் கேண்டி அமெரிக்க துணை தூதரகத்தில் நேர்காணல் முடிவில் விசா தந்தார்கள்.
![]() |
முதல் அமெரிக்க விசா |
அப்போது மஞ்சள் காமாலையும் அதை தொடர்ந்து தோல்வியாதியும் வந்து சிரமப்பட்டதால் என்னால் பணியில் இணைய முடியவில்லை. உடல் நலமடைந்து தோல் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெற்று நீங்கள் வேலைக்கு செல்லலாம் என சொன்னபின் தற்போது பணியில் இருக்கும் நிறுவனத்தில் ஆகஸ்ட் மூன்றாம் தேதி 2006 ஆம் ஆண்டு பிலாண்டர் என்னும் கப்பலுக்கு சென்னையிலிருந்து சிங்கப்பூர் சென்று பணியில் இணைந்தேன். பயிற்சி பிட்டராக அறுநூறு டாலர் சம்பத்தில். மூன்று மாத பணி ஒப்பந்தம்.
![]() |
சென்னை விமான நிலையத்தில் Plendar கப்பலில் செல்லும் போது தம்பி ஷேக் |
கப்பலில் ஒரு இஞ்சின் பிட்டர் மட்டுமே இருப்பார்கள். இங்கு நான் செல்லும்போது இஞ்சின் பிட்டர் தவிர வேறொரு பயிற்சி பிட்டரும் இருந்தார். கார்கள் ஏற்றும் கப்பல் இருபத்திஆறு ஆண்டு பழமையானது. கார்களை வைக்கும் இடத்தில் (cargo hold) தீ விபத்து ஏற்பட்டு புத்தம்புதிய எட்டு டோயோட்டோ கார்கள் முழுமையாக எரிந்து போனதுடன் பெரும் ஆபத்திலிருந்து கப்பல் மற்றும் பணியாளர்கள் உயிர் பிழைத்ததை சொன்னார்கள்.
![]() |
Plendar கப்பலில் party |
மிக பழமையான கப்பல் என்பதால் டெக்கில் நிறைய பணிகள். எனவே டெக்கில் இருந்த இரு பயிற்சி பிட்டர்களில் ஒருவருக்கு ஏற்பட்ட உடல் நலமின்மை காரணமாக ஊருக்கு செல்ல எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருப்பதை அறிந்தேன். சிங்கையிலிருந்து முதல் பயணம் இஸ்ரேலின் எலாத் துறைமுகம் நோக்கி. இந்திய பெருங்கடல், அரபிக்கடல் தாண்டி செங்கடலில் செல்லும்போது கடும் வெப்பமும் பாலாஸ்ட் தொட்டிக்குள் காலை ஆறு முதல் மாலை ஆறு மணிவரை வெல்டிங் பணியும்.
நெடுநேரம் வெல்டிங் எனக்கு பழக்கமே இல்லாதது. கப்பலுக்கு வரும்முன் குணமடைந்திருந்த தோல் வியாதி பணியில் இணைந்த சில நாட்களுக்குப்பின் மீண்டும் உடலின் கை விரல்கள், பின்பகுதி, ஆணுறுப்பில் கடுமையான அரிப்பு, சூடு காரணமாக உடல் வியர்க்க துவங்கியதும் தாங்க முடியாத அரிப்பு. தாக்குப்பிடிக்கவே முடியவில்லை.
பதினைந்தாவது நாளில் துறைமுகம் தொட்டது கப்பல். என்னுடன் இருந்த சக பிட்டரை தவிர வேறு யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. கல்கத்தாவின் கான் நீண்ட அனுபவம் உள்ளவர். அவர் என்னிடம் காப்டனிடம் சொல்லி மருத்துவமனை போக சொன்னார். அப்படி செல்ல முடியும் என்பது அப்போதுதான் தெரிந்தது. காப்டனை சந்தித்தேன். “ஏன் இவ்வளவு தாமதமாக சொல்கிறாய்?” என கடிந்துகொண்டார்.
மருத்துவமனை செல்ல வேண்டுமெனில் முன்னரே சொல்லி துறைமுக முகவருக்கு மின்னஞ்சல் அனுப்பி அவர் மருத்துவரிடம் அனுமதி வாங்கி வைத்திருப்பார்.
கடைசி நிமிடத்தில் காப்டன் முகவரிடம் பேசி என்னை அழைத்து செல்ல கார் வந்தது. ஏலாத் மருத்துவமனைக்கு சென்று இஸ்ரேலிய மருத்துவரிடம் மருந்து வாங்கி வந்தேன். காப்டன் கேட்டார் முன்பு இந்த பிரச்னை இருந்ததா என. ஊரில் இருக்கும்போது மருந்துகள் வாங்கி குணமடைந்தபின் தான் கப்பலுக்கு வந்ததை சொன்னேன். ஆங்கில மருத்துவர் இதை ஸ்காபிஸ் என்றார்கள்.
இஸ்ரேலிலிருந்து கப்பல் ஜப்பானை நோக்கி புறப்பட்டது. ஜப்பானை நெருங்கும் முன்னே என் தோல் பிரச்சனை மீண்டும் உக்கிரம் ஆனது. எப்படியாவது ஊருக்கு போனால் நல்லது இந்த வேலையே வேண்டாம் எனும் முடிவுக்கு வந்தேன்.
ஜப்பானின் சீபா துறைமுகத்தை ஒட்டியுள்ள ரிப்பேர் யார்டில் கப்பல் நிறுத்தப்பட்டு ஜப்பானிய குழுவினரால் பெரிய பராமரிப்பு பணிகள் டெக்கில் நடந்தன. ஐந்து நாட்களுக்குப்பின் ஜப்பானிலேயே பழைய கார்கள், ஜேசிபி, ட்ரக், பஸ்கள் ஏற்றப்பட்டன ஆப்ரிக்கா கொண்டு செல்ல. ஜப்பானில் கப்பலின் மேனேஜர் வந்திருந்தார் பராமரிப்பு பணிகளை பார்வையிட.
![]() |
ஜப்பான் ரயில் நிலையத்தில் |
அதன் பின் நடந்த கூட்டத்தில் காப்டன் “டெக்கில் பெரும்பாலான பணிகள் நிறைவுற்றது. இனி இரு டெக் பிட்டர்கள் தேவையில்லை. ஒருவரை வீட்டுக்கு போகச்சொல்லி மேனேஜர் சொல்கிறார்” என்றார். கான் தான் வீட்டுக்கு போக விரும்புவதாக சொன்னார். நானும் போக வேண்டும் என்றேன். எனக்கு பணியில் இணைந்து இரு மாதங்கள் முழுமையாகவில்லை. காப்டன் கானிடம் “ஷாகுலுக்கு உடல் நலமில்லாததால் அவனை அனுப்புகிறேன்” என்றார்.
என்னிடம் “அலோபதில இது செரியாவாது, உங்க ஊர்ல நல்ல ஆயுர்வேத மருந்து கிடைக்குமே ஸ்லொவா தான் குணம் கிடக்கும், திரும்ப பிரச்னை வராது. ஊருக்கு போய் ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு திரும்பி ஜாயின் பண்ணு. நான் கம்பனிக்கு எழுதுகிறேன்” என்றார்.
என்னை விட்டால் போதும். ஊருக்கு போய் மருத்துவம் பார்க்கவேண்டும். உடனே ஒத்துக்கொண்டேன். மறுவாரம் சிங்கையிலிருந்து ஊருக்கு செல்லும் ஐவர் குழுவில் என் பெயரும் வந்தது.
செப்டெம்பர் முப்பதாம் தேதி இரு மாதங்கள் பூர்த்தி ஆகும்முன் வீடு வந்து சேர்ந்தேன். தோல் நிபுணர், ஆங்கில மருத்துவம் வேலை செய்யவில்லை. கோவையை சேர்ந்த அரசு சித்த மருத்துவர் ஒருவர் நண்பர். அவரின் பரிந்துரைப்படி மருந்துகள் எடுத்தேன். நோய் குறையவேயில்லை. அவர் என்னை நேரில் அழைத்து ஊசி மூலம் மருந்துகள் செலுத்தினார். பலனில்லை. கிராமத்தில் உள்ள வைத்தியர் ஒருவரை சந்தித்தேன். அவர் தந்த மருந்துகளுக்கு 36 மணிநேரம் கடுமையான பத்தியம். உப்பில்லாத சுடுகஞ்சி, தொட்டுக்கொள்ள சுட்ட வத்தல் மிளகாய். சீனியில்லாத பால் சாப்பிடலாம். தண்ணீர் கைகளில் படக்கூடாது. குடிக்கவும், இன்ன பிற தேவைக்கும் சுடு நீர் மட்டும் மிக குறைவாக உபயோகிக்கலாம். மருந்து உட்கொண்ட சில தின தினங்களுப்பின் நோயின் தீவிரம் அதிகமாகும். நான்கு மாதங்கள் அந்த மருந்து சாப்பிட்டேன். பின்பு அதையும் விட்டேன்.
நெல்லை, பாளையங்கோட்டை, முருகன்குறிச்சியில் உள்ள ஒரு தோல் நிபுணரிடம் நண்பர் அனுப்பிவைத்தார். அவர் “இது நோயே அல்ல! ஒவ்வாமை. எதனால் ஆகிறது” என கண்டுபிடிக்க சொன்னார். மருந்து எதுவும் தரவில்லை. மண்டை குழம்பி இருந்த வேளை.
அலர்ஜி எதனால் எனும் ஆராய்ச்சியில் இறங்கினேன். முழு சைவமாக மாறினேன். பால், உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்ற கிழங்கு வகைகளை உண்பதை தவிர்த்தேன். நோய் கொஞ்சம் கட்டுக்குள் வந்தது. துபாயிலிருந்து வரும்போது மூத்த மகன் பிறந்து மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. நோயினால் வேலைக்கு செல்லமுடியாமல் பொருளாதார நெருக்கடி. நாகர்கோவிலில் என் எஸ் கோல்ட் எனும் பாமாயில் கம்பனியில் சேல்ஸ்மேனாக சேர்ந்தேன். தினசரி நூறு ரூபாய் சம்பளம். மாதம் ஒரு லிட்டர் பாமாயில் இலவசமாக தருவார்கள். மாவட்டம் முழுவதும் கூண்டு வண்டியில் சென்று கடைகளுக்கு எண்ணெய் விற்று பணம் வசூலித்து வரவேண்டும். பதினாறு கிலோ எண்ணை டின், ஒரு லிட்டர் பாக்கெட்டுகள் அடைத்த அட்டைபெட்டிகளை தோளில் சுமந்து சென்று கடைகளுக்கு இறக்கிவிட்டு கடைக்காரர் பணம் தரும் வரை காத்திருந்து பெற வேண்டும்.
அப்போது யோகா வகுப்பில் சேர்ந்து தியானமும், உடல் பயிற்சியும், ஆசனமும் செய்ய தொடங்கியிருந்த தருணம். மனச்சோர்விலிருந்து விடுபட்டு, நம்பிக்கையை தந்தது குரு ஏ எஸ் ராதாகிருஷ்ணன் அவர்களின் சத்சங்கம். யோகா வகுப்பில் சேர்ந்த பத்தாவது நாள் முதல் ஐவேளை தொழுகையை தொடங்கினேன்.
![]() | |||||
குரு ஏ எஸ் இராதாகிருஷ்ணன் |
![]() |
யோகா வகுப்பில்... |
நோய் குணமடையவில்லை ஆனால் கட்டுக்குள் இருந்தது. எதனால் அலர்ஜி எனும் சுயஆராய்ச்சி தொடர்ந்தது. என் கப்பல் நிறுவனத்துக்கு அழைத்து பணியில் இணைய தயாராக இருப்பதை சொன்னேன். கடந்த கப்பலில் “காப்டன் உன்னை டிஸ்மிஸ் செய்துவிட்டார். இனி வேலை தர முடியாது” என சொன்னார் என் மேலாளர் பிராசாந்த டேவ்டேக்கர்.
நாஞ்சில் ஹமீது.
11 May 2025
No comments:
Post a Comment