கப்பல் இப்போது HRA ஏரியாவை பத்திரமாக கடந்து இந்தியாவை நோக்கி பயணிக்கிறது. போனி துறைமுகம் விட்டபின் ஞாயிறன்று ஓய்வாக இருந்தது. இன்று திங்கள்கிழமை ஹோலி பண்டிகைக்கான விடுமுறை வேண்டி கொரிய முதன்மை இஞ்சினியரும்,மலேசிய முதன்மை அதிகாரி திவ்யனும் விடுத்த கோரிக்கையை காப்டன் ஷின் ஏற்றுகொண்டதால் இன்றும் விடுமுறையாக இருந்தது.
இரு தினங்களாக குடியிருப்பை விட்டு வெளியே செல்லவில்லை என்பதை மாலையில் தான் உணர்ந்தேன் எனவே மாலை ஆறு மணிக்கு மேல் அறையை விட்டு வெளியே சென்று அரைமணி நேரம் நடைபயிற்சி செய்தேன்.எட்டுமணிக்கு சூரிய அஸ்தமன நேரமாக இருந்தது.
இம்மாதம் ராம நவமி,மாஹாவீர் ஜெயந்தி,ஈதுல் பித்ர் என மேலும் மூன்று நாட்கள் விடுமுறை வருவதாக இந்தோனேசிய இரண்டாம் இஞ்சினியர் மீட்டிங்கில் சொன்னார். இந்திய அதிகாரிகள் இருக்கும் கப்பல்களில் இது போல் விடுமுறைக்கு சாத்தியமேயில்லை. மலேசிய,இந்தோனேசியர்கள் எப்படி எல்லாம் விடுமுறையை எடுக்காலாம் என யோசிப்பவர்கள் எனவே இம்மாதம் குறைந்தது மேலும் இரு விடுமுறை நாட்கள் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.
கப்பலின் கடிகாரம் கடந்த மாதம் பத்தொன்பதாம் தேதிக்கு பின் மாறவே இல்லை. பதினாறு நாட்களுக்குப்பின் நேற்று கப்பலின் கடிகாரம் ஒரு மணிநேரம் முன்னே சென்றது.
ரமலான் நோன்பு துவங்கி பத்தொன்பது நாட்கள் நிறைவடைந்துவிட்டது. எனக்கு எப்போதும் ஏன் நாட்கள் வேகமாக நகருகின்றன என தெரியவில்லை.
அதிகாலை நோன்பு வைக்க (அத்தாளம்) இரவுணவை எடுத்து வைத்துகொள்வேன். மதியமுள்ள பச்சை காய்கறி சாலடும். நோன்பு திறக்கும் இப்தாருக்கு ஆப்பிள்,பேரிக்காய்,தர்பூசணி என மதியம் இருக்கும் பழம் வைத்துகொல்வேன். தலைமை சமையற்காரர் நோன்பு துவங்கும்போது ஒரு கிலோ பேரீத்தம் பழம் தந்தார். அறையில் நோன்பு திறந்து தண்ணீர் குடித்து பழம் சாப்பிட்டபின் மக்ரிப் தொழுகைக்குப் பின்பு மெஸ் ரூமுக்கு போய் உண்பேன்.
இதுவரை நான்கு முறை கப்பலில் கஞ்சி வைத்தேன். பிரான்ஸிலும்,நைஜீரியாவின் போனி துறைமுகத்தில் இருந்தபோதும் மிகசரியாக பணியில் இருந்தேன் நோன்பு திறக்கும் வேளையில் பேரீத்தம்பழமும்,சிறு குப்பியில் நீரும் தயாராக கொண்டு சென்றதால் மேனிபோல்டில் நோன்பு திறந்த நாட்கள் அவை.
நைஜீரிய துறைமுகத்தில்
இருந்தபோது மட்டும் அதிக பணியால் ஒரு நாள் மட்டும் கடினமாக இருந்தது. கப்பலில் இந்தோனேசிய
மூன்றாம் இஞ்சினியரும்,மலேசிய காஸ் இஞ்சினியரும் நோன்பு வைத்துள்ளனர்.அவர்களை நான்
சந்திப்பதே இல்லை எப்போது சகர் மற்றும் இப்தாருக்கு வருகிறார்கள் என தெரியாது.
நைஜீரியாவை நோக்கி செல்லும்போது மூன்று தினங்கள் காலை எட்டே முக்காலுக்கு சூரிய உதயமாக இருந்தது. சமையற்காரர் காலை ஆறரை மணிக்கு காலை உணவு தயாராகிவிடும் என்றதால் அந்த மூன்று நாட்களும் ப்ரேக் பாஸ்ட் உண்டே நோன்பு வைத்தேன். அந்நாட்களில் அந்தி அணையும் நேரமும் எட்டரைக்கு மேல் இருந்தது.
புனித ரமலானில் அல்லாஹ்வால் குர்ஆன் முழுமையாக இறக்கபட்டது. அந்த இரவைத்தான் லைலத்துல் ஃகத்ர் இரவு சொல்லப்படுகிறது. நபிகள் நாயகம் அவர்களிடம் ரமலானில் எந்த நாளில் லைலத்துல் ஃகத்ர் என சகாபாக்கள் கேட்டபோது கடைசி பத்தில் ஒற்றை படையான ஒரு நாளில் என குறிப்பிட்டார்கள். அதாவது ரமலானின் 21,23,25,27,மற்றும்29வது நாளின் இரவாக இருக்கலாம்.
லைலத்துல் ஃகத்ர் இரவு எண்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு சமம். அதாவது அன்றிரவு நின்று வணங்குவதால் ஆயிரம் இரவு வணங்கியதற்கு சமம். அன்று செய்யும் ஒரு ரூபாய் தானம் ஆயிரம் ரூபாய் தானம் செய்வதை போன்றது. அந்த மேன்மையான இரவை தவறவிடக்கூடாது என்பதால் ரமலான் நோன்பு இருபது முடிந்த அந்த இரவிலிருந்து ஒற்றைப்படையான இரவுகளை லைலத்துல் ஃகத்ர் ஆக எதிர்பார்த்து இருப்பதோடு அதிகப்படியான வணக்க வழிபாடுகளில் ஈடு பட்டு இறைவனிடம் நன்றி செலுத்தியும், பாவ மன்னிப்பும் கேட்க வேண்டும்.
நாளை இருபதாம் நோன்பு முடிந்தபின் ரமலானின் இருபத்தி ஒன்றாம் இரவு அது லைலத்துல் ஃகத்ர் இரவாகவும் இருக்கலாம் எனவே நாளை இரவு முதல் அதிகமான வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டு லைலத்துல் ஃகத்ர் இரவின் நன்மைகள் கிடைத்திட அனைவரும் முயற்சிக்கலாம். ஏக இறைவன் அனைத்தையும் அறிந்தவன்.
நாஞ்சில் ஹமீது,
09 march 2026.
sunitashahul@gmail.com















