Saturday, 6 June 2026

ஈராக் போர்முனை - சஜீ

 

     இளம் எழுத்தாளர் சஜீ ஈராக் போர்முனை அனுபங்கள் குறித்து எழுதிய குறிப்பு.




மணவாளக்குறிச்சியை பூர்வீகமாகக் கொண்ட அண்ணன் ஷாகுல் ஹமீதின் "ஈராக் போர்முனை அனுபவங்கள்" எனும் இந்நூல் கடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் யாவரும் பதிப்பாக வெளிவந்துள்ளது. ஏழ்மைக் காரணமாக இளம் வயதில் அரபு நாட்டுக்கு வேலைக்குச் சென்ற தன்னுடைய வாழ்வனுபவங்களைப் போர்முனையில் நின்று வாழ்ந்து எழுதியுள்ளார் எழுதியுள்ளார் நாஞ்சில் ஹமீது. தினம் தினம் பொழியும் குண்டு மழைக்கு நடுவே அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு உணவு தயார் செய்து கொடுக்கும் ஓர் எளிய இளைஞனாக மரணத்திற்கும் வாழ்விற்கும் இடையே அவர் நடத்தியிருக்கும் போராட்டம் ஒவ்வொரு பக்கத்திலும் நிறைந்தொழுகும். 

தன் கைப்புண்ணியத்தில் சமைக்கும் உணவை தான் உண்ணுவேன் என்று எந்த உத்தரவாதமும் இல்லாத ஓர் சூழலில் ஏழ்மை வாழ்க்கையிலிருந்து முன்னேற துடிக்கும் ஓர் இளைஞன் தான் தேர்ந்தெடுத்த சவாலான பணிக் குறித்தும், அதிலுள்ள இக்கட்டான ஆபத்துக் குறித்தும் இந்நூலில் விரிவாக எழுதியுள்ளார். 

ஓர் இக்கட்டான சூழ்நிலையில் தன்னுடைய கடவுச்சீட்டு உள்பட அனைத்துச் சான்றிதழ்களும் தீக்கிரையானதும், செல்வம் சேர்க்கச் சேர்த்த கல்வி தடமே இன்றி அழிந்ததும், குண்டுவெடிப்பில் தன்னுடைய நண்பன் படுகாயம் அடைந்ததும், உலகமெங்கிலுமிருந்து கிடைத்த நல்ல நட்புக்கள் குறித்தும் இந்நூலில்  உருக்கமாக பதிவு செய்துள்ளார். அதோனோடு சதாமை பற்றியும், அமெரிக்க இராணுவத்தைப் பற்றியும், போர் காரணமாக ஈராக்கின் திக்ரித், பாக்தாத் போன்ற நகரங்களின் வாழ்க்கை சூழலையும் விரிவாக கண்முன்னே காட்சிப்படுத்தியுள்ளார். 

முப்பது நான்கு தலைப்புகளில் எழுதப்பட்ட இந்நூல் ஓர் பெரும் நாவலுக்கான களத்தைக் கொண்டுள்ளதோடு எளிய வாசிப்பிற்கும் ஏதுவாகவும் அமைந்துள்ளது. 

வாழ்த்துக்கள் அண்ணா. 


ஈராக் போர்முனை அனுபவங்கள்

ஆசிரியர் - நாஞ்சில் ஹமீது 

பதிப்பகம் - யாவரும்

விலை - ₹ 250

மூத்த எழுத்தாளருடன் சஜீ 


Saturday, 30 May 2026

பக்ரீத்


        கப்பலில் முன்பெல்லாம் பண்டிகைகளே தெரியாது. இம்முறை சென்னையில் வாழும் இளையவள் கிருத்திகா குறுஞ்செய்தி அனுப்பி கேட்டாள். “அண்ணா பக்ரீத் எப்போது” என. “இன்றும், நாளையும் என பதிலனுப்பினேன்”. இம்முறை ஒரு நீண்ட பக்ரீத் பெருநாளாக இருக்கிறது.

3rd  officer Asad 

Chief officer Dinesh 


  இருபத்தி ஏழாம் தேதி புதன்கிழமை அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியாவில் தியாகத்திருநாள் (பக்ரீத் பண்டிகை) கொண்டாடப்பட்டது. புருனே, தாய்லாந்து மற்றும் இந்தியாவில் கேரளா தவிர மற்ற பகுதிகளில் வியாழக்கிழமை பக்ரீத்தாக இருந்தது.

   என் வீடு இருக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள பள்ளிவாசலில் புதன்கிழமை பக்ரீத் தொழுகை காலை ஏழு மணிக்கு நடந்தது. சுனிதா அருகிலுள்ள பள்ளியில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினாள். மகன்கள் இருவரும் வியாழக்கிழமை பெருநாள் தொழுகைக்கு சென்றனர். அவர்களுக்கும் ஊரிலிருந்த உறவினர், நண்பர்களுக்கும் வியாழக்கிழமை தான் பாண்டிகை நாளாக இருந்ததது.

  கப்பல் கடந்த ஞாயிறு மாலையில் ஹாங்காங் அருகிலுள்ள சீனாவின் சுகாய் துறைமுகத்திலிருந்து ஆஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்டது. பூமத்தியரேகையையொட்டிய பயணம் ஆதலால் கடும் வெப்பம்.

Main engine air cooler 



  துல்கஜ் மாதம் பத்தாம் நாள் தான் பக்ரீத் பண்டிகை. துல்கஜ் ஒன்பதாம் நாள் ஹாஜிகள் நோன்பிருந்து சௌதியின் அரபாவிலுள்ள மினா மைதானத்தில் இரவு தங்கிவிட்டு மறுநாள் காலை காபாவை நோக்கி சென்று ஏழு முறை தவாப் செய்து ஹஜ் கடமையை நிறைவேற்றுவர் ஹாஜிகள். உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் துல்கஜ் ஒன்பதாம் நாளில் நோன்பிருப்பர்.

  கப்பலில் இந்தோனேசியாவை சார்ந்த மூன்றாம் இஞ்சினியர் செய்னல் அன்று காலையில் என்னிடம் கேட்டார் “நோன்பு வைத்திருக்கிறாயா” என. கடும் வெப்பமாக இருந்ததால் நான் நோன்பு வைக்கவில்லை.



    கடந்த ஞாயிறு துறைமுகம்விட்டபின் திங்கள்கிழமை ஓய்வுநாள். கப்பலின் முக்கிய இயந்திரத்தின் காற்று குளிர்விப்பானில் நன்னீர் ஒழுகல் இருந்ததை மூன்று வாரங்களுக்கு முன் கண்டுபிடித்தோம்.


  கப்பலை நிறுத்திதான் அந்த பணியை செய்யமுடியும். அதற்கு கப்பல் முதலாளி மற்றும் மேனேஜர், சரக்கை கையாளும் நிறுவனத்திடம் அனுமதிபெறவேண்டியது கட்டாயம். முக்கியமாக கப்பல் முதலாளிக்கு தினசரி வாடகை தரும் சரக்கு நிறுவனம் அனுமதி தரவேண்டும்.

  கப்பலை பாதுகாப்பான இடத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி பணியை துவங்கி முடிக்க குறைந்தது ஒரு நாளுக்கு மேலாகும். இந்த கப்பல் இரட்டை இன்ஜின்களை கொண்டது. ஒரு இஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும் பழுதான இன்ஜினின் பணி செய்ய இஞ்சின் தயாரிப்பு நிறுவனம் ஒத்துகொள்ளவில்லை.

  இறுதியாக சரக்கை கையாளும் நிறுவனம் இருபத்தி நான்கு மணிநேரத்துக்கு மட்டும் கப்பலை நிறுத்த அனுமதி வழங்கியது. அதற்கு மேல் ஆகும் நேரத்திற்கு கப்பலின் வாடகை தரமாட்டோம் என உறுதியாக சொல்லிவிட்டார்கள். சீன துறைமுகத்துக்கு வெளியே நங்கூரம் பாய்ச்சி நின்றால் பணம் கட்ட வேண்டும். எனவே காப்டன் பாதுகாப்பான இடத்தில் நங்கூரம் பாய்ச்சாமல் கப்பலை நிறுத்துவோம் என்றார்.

  சீனாவிலிருந்து புறப்பட்டு இரண்டு நாள் பயணித்த பின்னரே போக்குவரத்து இல்லாத பாதுகாப்பான இடம் வரும். பண்டிகை தினமான அன்று கப்பலை நிறுத்தும் நாளும் வந்தது. முந்தையநாள் பணி விவாதத்தின் போது கொரியாவின் முதன்மை இஞ்சினியர் சூன் லீ “காப்டன் இதுதான் பாதுகாப்பான இடம் என சொல்கிறார் எனவே நாளை கப்பலை நிறுத்தி கூலர் பணியை செய்வோம் உனக்கு ஏதாவது பிரச்னை இருக்கிறதா” எனக்கேட்டார்.

  புதன்கிழமை காலை எட்டு மணிக்கு கப்பலை நிறுத்தி இரு குழுவாக பிரிந்து வேலையை துவங்கினோம். வியாழன் காலை ஐந்து மணிக்கு பணி முடிந்து இஞ்சின் இயக்கப்ட்டு கப்பல் நகர்ந்தது. நான் அதிகாலை நான்கரைக்கே அறைக்கு வந்து குளித்து ஜன்னல் வழியாக பார்த்தபோது அடிவானம் வெளுக்க துவங்கியிருந்தது. காலை நேர பஜர் தொழுகையை நிறைவேற்றியபின் கதிரெழும் நேரம் ஐந்து மணி நான்கு நிமிடம் என காபாவின் திசை மற்றும் தொழுகை நேரத்தை காட்டும் ஆப் சொல்லியது. 



   கதிரெழுவதை பார்த்துவிட்டு உறங்க சென்றேன். ஒன்பதரைக்கு மேல் விழித்து மீண்டும் குளித்து பெருநாளுக்காக வைத்திருந்த புதிய சட்டையை அணிந்து இரண்டு ரக்காத் சுன்னத் தொழுது இரண்டு பேரீச்சைபழம் மட்டும் சாப்பிட்டேன். பிரிட்ஜில் மூன்றாம் அதிகாரி ரத்னகிரியின் அசத். அவருக்கு வாழ்த்து சொல்ல பிரிட்ஜில் சென்றேன். 

முதன்மை அதிகாரி மலேசியாவின் தினேஷ் “அண்ணே எல்லாரும் டயர்டா இருப்பீங்க, நாளைக்கி பெருநாள் ஹாலிடே, மத்தியானம் மட்டன் பிரியாணி செய்ய சொல்லீருக்கேன்.” என்றார். “இன்னும் தூங்காமல் என்ன செய்கீர்கள்” எனக்கேட்டார். பன்னிரண்டு மணி மதிய உணவுக்குப்பின் மூன்று முதல் ஐந்துவரை தூங்கினேன். முழுநாளும் தூக்கத்திலேயே கழிந்தது.









  வெள்ளிகிழமையன்று காலை பத்துமணி மீட்டிங் முடிந்தபின். அடுமனை சென்று சமையலுக்கு கொஞ்சம் உதவினேன். மதிய உணவாக மட்டன் பிரியாணி, பப்படம், வெங்காய ரைத்தா. பிலிப்பினோ, கொரியர்களும் இருப்பதால் ஆவியில் வேகவைத்த சாலமன் மீன், நண்டும், கணவாயும் சேர்ந்த கறி, நூடுல்ஸ், சிக்கன் நகட்ஸ், வெஜ் ரோல்ஸ், ரோஸ்ட்ட் போர்க், பீப் மின்ஸ், கிம்ச்சி, வாழைப்பழம், திராட்சை ஆகியவையும் இருந்தது. குடிபிரியர்களுக்கு பெருத்த ஏமாற்றம். இம்முறை சைனாவில் வாங்கி பீர்கள் அனைத்தும் ஆல்கஹால் இல்லாத (NON ALHAHOL ) வையாக சப்ளை செய்துவிட்டார்கள்.




  மதிய உணவவிற்குப்பின் விளையாட்டு போட்டிகள் துவங்கியது, மூன்று அணிகளாக பிரிந்துகொண்டோம். வாயில் கவ்விய கரண்டியில் திராட்சை பழத்தை வைத்து நடந்து இலக்கை எட்டியபின் சக அணியிலுள்ளவரின் வாயிலிருக்கும் கரண்டியில் திராட்சையை கைதொடாமல் மாற்ற வேண்டும்.




 இரு கால்களிலும் சாக்கு பையை நுழைத்து அமர்ந்த நிலையில் இலக்கை தொட்டு திரும்புதல். கப்பலின் பாகங்களை எழுதிய துண்டு நெற்றியில் ஒட்டப்படும் சக அணியை சேர்ந்தவர் எதிரில் இருப்பார். அவரிடம் இதுவா,இதுவா எனக்கேட்டுகொண்டே வந்து சரியான விடையை கண்டுபிடிப்பது. அவர் ஆம்,இல்லை,இருக்கலாம் என்று மட்டுமே பதிலளிக்க வேண்டும்.




  மூன்று மணிக்கு மேல் மேஜை பந்து விளையாட்டு துவங்கியது. மொத்தம் பத்து அணிகள். ஒவ்வொரு அணியும் ஐந்து போட்டிகளில் விளையாடவேண்டும். மொத்தம் இருபத்தியைந்து போட்டிகள். பதிமூன்று போட்டிகள் மாலை ஆறு மணிவரை நடந்து முடிந்தது. நானும், முதன்மை அதிகாரியும் ஓரணி. விளையாடிய மூன்று லீக் போட்டியிலும் வென்றோம்.



  இன்று சனிக்கிழமை வேலைகள் மட்டுமே. அரை நாள் விடுமுறை. அலாரம் டெஸ்ட் செய்வது மட்டுமே என் பணி. மதியம் மூன்று மணிக்கு மேல் மீதமுள்ள லீக் போட்டிகள் நடந்தது. அனைத்து லீக் போட்டியிலும் வென்று அரையிறுதிக்கு என் அணி தகுதி பெற்றது. நாளை ஞாயிறு பத்துமணிக்குமேல் அரையிறுதி போட்டியும், இறுதி போட்டியும் நடக்கும். 

  புதன்கிழமை அரபுவளைகுடா, மலேசிய, சிங்கப்பூர் உறவுகள், சுனிதாவுக்கு பக்ரீத் பெருநாள், மறுநாள் உலகின் பிறபகுதியிலுள்ளவர்கள் கொண்டாடினர். எனக்கும் அன்றுதான் பக்ரீத். வேலை காரணமாக பக்ரீத் கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை அதை தொடர்ந்த போட்டிகள் ஞாயிறு வரை தொடர்வதால். இம்முறை ஐந்து நாட்கள் பக்ரீத் பண்டிகையாக இருக்கிறது. வழக்கமாக கப்பல்களில் பண்டிகைகள் கடந்து செல்வதே தெரியாது குறிப்பாக அன்றும் பணி நாளாக இருக்கும்.



  இம்முறை பக்ரீத் வாழ்த்து அனுப்பியவர்கள் ஆட்டின் படத்துடன் ஸ்டிக்கர் அனுப்பியிருந்தனர். இப்ராஹீம் நபி இறைவனின் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு வயதான காலத்தில் பெற்ற குழந்தையை பலியிட தயாராவார். அப்போது இறைவனின் அசரீரி ‘உம்மை சோதித்தோம், மகனை பலியிட வேண்டாம், ஒரு ஆட்டையோ, மாட்டையோ, ஒட்டகத்தையோ பலியிட்டு ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் பங்கிட்டு நீங்களும் உண்ணுங்கள்’ என கேட்கும். 

அவரது தியாகத்தை எல்லோரும் நினைவு கூர்வதே தியாக திருநாளாக கொண்டாடபடுகிறது.

நாஞ்சில் ஹமீது,

30 may 2026.

sunitashahul@gmail.com 

Sunday, 24 May 2026

கடல் – வாசிப்பனுவம்

   

 


ஆசிரியர் ஜெயமோகன் எழுதிய கடல் நாவலை ஞாயிறு ஓய்வாக இருந்தபோது மதியம் வாசிக்க துவங்கினேன் ஒரே நாளில் முன்னூற்றியைம்பது பக்கங்கள் வாசித்து விட்டேன். பின்பு வேலைநாட்களாக இருந்ததால் இரவில் தூங்க செல்வது வரை கொஞ்சம் வாசிப்பு என வியாழன் இரவில் முடித்தேன்.

   கையில் எடுத்தபின் கீழே வைக்கவே முடியாதபடி விறுவிறுப்பான நாவல் மொத்தம் 555 பக்கங்கள்.

சாம் எனும் பாதிரியாரை நாற்காலியில் கையில் துப்பாக்கியுடன் அசையாமல் இருக்க சொல்லி தாமஸ் சொல்லுமிடம் தான் துவக்கம்.

  பெரும் வணிகரான ஜேம்ஸ் பெர்னாண்டோ மற்றும் மணப்பாடு சாலோம் மாளிகையில் வாழ்ந்த தம்பதிக்கு தங்க தொட்டிலில் பிறந்து வளரும் பணக்கார பணியடிமை சாம் பெர்னாண்டோ.வேலைகாரியின் குழந்தையை வெயிலில் சிமெண்ட் தரையில் போடுவதை பார்த்து தந்தையை வெறுக்கிறார். 

 கல்விபயில சென்னைக்கு செல்லும் சாம் கிறிஸ்தவ மதகுருவாக முடிவெடுத்து செமினரியில் சேருகிறார். அங்கே கடும் தவங்களை செய்து தான் ஒரு புனிதராக மாற விரும்புகிறார். புனிதர் என்றே தன்னை நம்புகிறார்.

 தான் பணிபுரிந்த சர்ச்சில் இறந்துவிட்டதாக கருதப்பட்ட அக்னீஸ் மேரியின் குழைந்தையை காப்பாற்றியபின் அந்த ஊரில் புனிதராகவே வலம் வருகிறார். காலில் விழுந்து ஆசி பெற்ற அவ்வூர் மக்களே அவரை அடித்து காறிதுப்பி சிறைக்கு அனுப்புகின்றனர். இறைவனை நம்பிய பாதர் சாமின் மனம் அமைதியின்றி ஊசலாடுகிறது. 

 கடற்கரையின் மகன் தாமஸ். தாய் சாகயமேரிக்கு அந்த சமூகம் தரும் கொடுமைகளை,கீழ்மைகளை காண்கிறான். தாய் இறந்த அன்றே அனாதையாகிவிடும் தாமஸ் தாயின் அடக்கத்திற்குபின் வந்து பார்க்கும்போது குடிசையே காணாமல் போய்விட்டது. பட்டினி போராட்டத்தில் வளர்ந்தபின் எதையும் செய்ய துணிகிறான். அன்றாடத்தில் வாழ்பவன் கடலின் மகன். மீன் பிடிப்பதிலும்,சுறா வேட்டையிலும்,பெர்க்மான்சுக்காக செய்யும் கடத்தல் வேலைகளிலும் உள்ளூர உணர்ந்து தெளிவாக செயல் புரிகிறான். அலைபாயாத மனம் கொண்ட அவனால் கடலையை வசப்படுத்தியது போல் பயமின்றி செய்கிறான் செயல்களை. எதுவும் பாவம் இல்லை அவனுக்கு. ஊர் மக்கள் அனைவரும் அவனை பாவத்தில் பிறந்தவன் என்று வெறுக்கிறது.

  செமினரியில் வகுப்பெடுக்கும் பெர்க்மான்ஸ் சாமினால் பாவத்தின் பக்கம் வருகிறார். அறிவாளி,இசை,ஓவியம்,அழகியல் என ஒரு ஆளுமை ஆவர். செய்யும் அனைத்து பாவ செயல்களனைத்தையும் தெளிவாக செய்கிறார். தன்னை சாத்தானின் பக்கம் திருப்பிய சாமையும் நினைத்து கொள்கிறார் புனிதரை சாத்தானின் மூலம் வீழ்த்துவதே வெற்றி என நம்புகிறார்.

பியா ஷணத்தில் வாழ்பவள். மனதில் எதையும் நினைவாக சேமிக்காததால் அவள் தான் புனிதர். மருத்துவம் செய்யும் செவிலி பெண்ணாக வரும் பியாவை ஊர் மக்களனைவரும் புனிதராகவே நம்புகின்றனர். எந்த இறப்பும் அவளை பாதிப்பதே இல்லை.

 கடலில் கட்டுமரம் அடித்து இறந்துபோகும் இளைஞரின் மரணம் பற்றி தாமஸ் கேட்கும் இடம் “உங்களுக்கு வருத்தமே இல்லியா”

“எதுக்கு” 

“ஒருத்தன் செத்து போயிருக்கான்இல்ல?”

“அவன் ஆண்டவன் கூடத்தானே இருப்பான்” என என பியா சொல்லுமிடம்.

 கடலிலிருந்து கடல் நாவலை வாசித்தேன். கடந்த வாரங்களில் ஏழாம் உலகம்,அனல் காற்று என நாவல்களை வாசித்திருந்தேன். ஒவ்வொன்றும் வேறு,வேறு உலகங்களை சொல்லும் படைப்புகள்.

 கடலில் நடக்கும் ஆயுத கடத்தல்கள்,கப்பல்கள் படகுகள் என விவரணைகள் மிக துல்லியம்.குறிப்பாக எதிர்பாராத திருப்பங்களுடன் திரில்லர் நடையில் இருப்பதால் கடல் நாவலை கையில் எடுத்தபின் கீழே வைக்கவே முடியவேயில்லை.

  பாவமும்,புண்ணியமும் மனித மனதை பொறுத்தே,பாவம்,புண்ணியம் என இருக்கிறதா எனும் கேள்வியை இறுதியின் தந்தது கடல் நாவல்.

இருபத்தியொரு ஆண்டுகளாக கடலிலேயே இருக்கிறேன். கடலம்மா கருணை காட்டவில்லை என்றால் எதுவும் நடக்காது. அவள் எப்போது சீறுவாள்,எப்போது சாந்தமாவாள் என்பது யாரும் கணிக்க முடியாது. அவ்வகையில் நாவலில் பிடித்த வரிகள் என ஏராளம். கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களின் வரிகள் 

“லே கடலுக்குள்ள வந்துட்டியண்ணா,பின்ன உனக்கு ஒரு மனுசனும் கூட்டு இல்ல பாத்துக்க.நீயும் கடலும் மட்டுமாக்கும்,கடலம்மோன்னு விளிசிட்டு கைவிரிச்சி நிக்க வேண்டியதுதான். அவ வளத்தணுமானா வளத்துவா கொல்லனுமான கொல்லுவா”.

 “கடலம்ம அள்ளிகுடுப்பா ஆத்திரம் வந்தா அள்ளி வாயிலயும் போட்டுகிடுவா”

  இவை உண்மையும் கூட.

ஷாகுல் ஹமீது.

Thursday, 30 April 2026

விடுமுறை நாட்கள்

 


    அதிகாலை குளியலுக்குப்பின் ஆறரை மணிக்கு பிரிட்ஜில் அழைத்தேன். “காப்டன்” என பதில் வந்தது, “காஸ் பிட்டர், வாட் டைம் ஸ்டேஷன்” எனக்கேட்டேன். ஏழு மணி என பதிலளித்தார்.

 நேற்றிரவே இரண்டாம் அதிகாரி சொல்லியிருந்தார் காலை ஏழு மணிக்கு பைலட் என.காலையில் சீக்கிரமே எழுந்துவிடுவதால் போனில் அழைப்பான் வைப்பதே இல்லை.ஆறரை மணிக்கு தயார் ஆனால் போதும். இரவுகளில் பத்துமணிக்கே தூங்க சென்று விடுவேன். அதிகாலை ஐந்துக்கு முன்பே விழிப்பு தானாவே வந்துவிடும். இந்த ரமலானுக்கு பின் இரவுணவு சாப்பிடுவதில்லை நாற்பது நாட்கள் ஆகிவிட்டது. டீ,காபியும் இல்லை.இரவு ஏழு மணிக்கு முன்பாக ஊற வைத்த ஐந்து பாதாம்பருப்பு, ஒரு கப் பால். இரவில் வயிறும்,உடலும் லேசாக இருக்கிறது கனமே இல்லை அதனாலேயே நல்லுறக்கம்.காலை ஏழேகால் மணிக்கு காலை உணவுக்கு செல்வேன்.

  இன்று காலை ஆறு நாற்பதுக்கே ஸ்டேஷன் என ஒலிபெருக்கியில் அறிவித்தார் காலை பணியில் இருந்த மலேசிய மூன்றாம் அதிகாரி சபரி. ஆடை மாற்றி டெக்கில் செல்லும்போது குட்மார்னிங் என முகம் பார்த்து புன்னைகைத்து வயதான பைலட்டை தொடர்ந்து ஒரு இளம் பைலட்டும் பிரிட்ஜை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.கேடட் பிலிப்பைன்சின் ரிஜி அழைத்து சென்றுகொண்டிருந்தார்.

  ரிஜி இம்மாதம் நான்காம் தேதி கொரியாவில் பணியில் இணைந்தான். இருபத்திநான்கு வயதான ரிஜி பணியில் இணைந்த இருதினங்களில் அவனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இளம் தந்தையான அவனுக்கு வாழ்த்து சொல்லி நலம் விசாரித்தபோது இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றான். முப்பது வயதான அவனது கேள்ல் பிரண்ட் அவளது பொற்றோருடன் இருப்பதாக சொன்னான். 

 பெரிய ப்ளே பாயாக இருந்திருப்பான் போல. தேநீர் இடைவேளைகளில் ஆந்திராவின் இருபத்தைந்து வயதான ஓஎஸ் பிரதீப்புக்கு பெண்களுடன் உறவுகொள்வது எப்படி என வகுப்பெடுக்கிறான்.

  பிலிப்பைன்ஸ் பணியாளர்கள் இரண்டு அல்லது மூன்று வங்கி கணக்குகளில் பணம் அனுப்புவார்கள். திருமணதிற்கு முன் ஒரு குழந்தை பிறந்திருக்கும் அவனது பதினேழு வயதில் அந்த குழந்தையின் தாய் பிரிந்து சென்றிருப்பாள். வேறு கல்யாணம் செய்திருப்பான் ஆனாலும் ஒரு கேள்ல் பிரன்ட் நிச்சயம் இருப்பாள்.

  கேரளாவின் வயதான பத்திசாப் அலெக்ஸாண்டர் சொல்வார். “எந்தா ஒரு லைப் இவ மார”என்று. முன்பு என்னுடன் பணிபுரிந்த சாங் என்பவனின் மனைவி பழைய காதலுடன் சென்றுவிட்டாள். அவனது வீட்டில் உடன் பிறந்தவர்கள் தாய் உட்பட பதினாறு பேர். குடும்பத்திற்கும் பதினாறு வயதில் கல்லூரி படிக்கும் மகளுக்கும் சாங் பணம் அனுப்புவார்.

  வாங் தாவ் துறைமுகம் கடலிலிருந்து பதினேழு மைல் தொலைவில் இருக்கிறது. கடலில் இணையும் ஆற்றில் மிகப்பெரிய கப்பல்கள் வர முடியும். இங்கிருந்து ஹோசிமின் சிட்டி வரை இந்த ஆறு கொஞ்சம் சிறிதாக நீள்கிறது. இங்கே இறக்கப்படும் சரக்கு பெட்டகங்களை ஏற்றி சிறு கப்பல்கள் ஹோசிமின் சிட்டி வரை பயணிக்கிறது என கணிக்கிறேன். தேடிப்பார்த்து உறுதி செய்யவேண்டும்.

  நிறைய சிறிய கப்பல்கள் ஆற்றில் சென்றுகொண்டே இருக்கிறது. ஏழு மணிக்கு நான்கு டக் போட்கள் கப்பலுடன் கட்டப்பட்டு கரையிலிருந்து இழுந்து பின்னோக்கி நகர்ந்து ஆறு கிளை பிரியும் இடத்தில் பாதுகாப்பாக திருப்பி பயணிக்க தொடங்குகையில் எட்டு மணியாகியது.காலை உணவுக்குப்பின் முதன்மை அதிகாரி தினேஷ் “அண்ணா இஎஸ்டி கவர் எல்லாம் போட்டு செக்யூர் பண்ணிருங்க,ரெஸ்ட்க்கு போங்க, நாளைக்கு மே டே ஹொலிடே” என்றார். 

  காஸ் இஞ்சினியர் அருண் “பாலாஸ்ட் சிஸ்டத்தை பிளஸ் பண்ணிருங்க” என்றார். இங்கே கிட்டதட்ட எண்பதாயிரம் மெட்ரிக் டன் திரவத்தை இறக்கினோம். கப்பலின் சமநிலைக்காக பாலஸ்ட்தொட்டிகளில் நீர் நிறைப்போம். ஆற்றுநீர் சகதி கலந்து இருந்ததால் காஸ் இஞ்சினியரும்,முதன்மை அதிகாரியும் இரவு முழுவதும் தூங்கவேஇல்லை . பலாஸ்ட் பம்ப் தந்த பிரச்சினையால்.

  இன்று காலை பத்தரை மணிக்கே எனது பணிகள் முடிந்துவிட்டது. காஸ் இஞ்சினியரும்,முதன்மை அதிகாரியும் கார்கோ கட்டுப்பாட்டு அறையிலிருந்தனர். “எங்கண்ணே போறீங்க செயர்ல உட்காருங்க” என்றார். பதினொன்றே கால் வரை அவர்களுடன் பேசிகொண்டிருந்தேன். சரக்கு நிறைக்க வந்த வழியில் பயணம் ஆஸ்திரேலியாவை நோக்கி. பதினொன்றாம் தேதி போய்சேர்வோம்.

Engine control room.


 இந்தவாரம் துவங்கிய வேகத்திலேயே முடிந்துவிட்டது.நாளை மே டே விடுமுறை நாள். சனிக்கிழமை அரைநாள் மட்டுமே பணி மாலையில் ட்ரில்ல்ஸ் இருக்கும்.பயணத்தில் இருப்பதால் இந்த வார ஞாயிறு விடுமுறை உறுதி.

நாஞ்சில் ஹமீது,

30 april 2026.

sunitashahul@gmail.com 

Wednesday, 29 April 2026

வாங் தாவ்.

 


புத்தரிடம்

 வியட்நாமின் வாங் தாவ் துறைமுகப்பிற்கு நேற்று காலை வந்தோம். ஆஸ்திரேலியாவில் ஏற்றிய சரக்கை இங்கே கொடுக்கவேண்டும். மொத்தம் பத்து நாள் பயணதூரம். ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்ட மூன்றாவது நாள் முதலே நல்ல வெயில்.பயணத்தில் அதிகபட்சமாக முப்பது டிகிரிவரை போனது.

    கார்கோ டிபார்ட்மெண்ட்டில் இருக்கும் எனக்கு சரக்கு இறக்கும் குழாய்களை (மேனிபோல்ட்)தயார் செய்ய வேண்டியிருந்ததால் நான்கைந்து நாட்களாக தலைக்கு மேலே தகிக்கும் சூரியனின் கீழ் தான் வேலை.உதவிக்கு இருதினங்கள் மாலுமி அஜேந்தரும்,ஒரு நாள் காஸ் இஞ்சினியர் அருணும் வந்தார்கள். 

  செவ்வாய்கிழமை இங்கு வந்து சேர்வதாக இருந்தது. திங்கள்கிழமை காலையில் வரமுடியுமா என முகவர் மின்னஞ்சல் செய்திருந்தார்.கப்பலின் வேகத்தை கொஞ்சம் கூட்டி அவர்கள் சொன்ன நேரத்தில் சென்று சேரும் சாத்தியம் இருந்தது.வழியில் கடும் காற்றே,புயலோ அடித்தால் தாமதமாகிவிடும் வாய்ப்பும் உண்டு. அன்று நள்ளிரவே சமாதானமாக செவ்வாய் காலையில் வந்தால் போதும் என மீண்டும் செய்தி வந்ததால் இரவே கப்பலின் வேகம் குறைக்கபட்டது.

  துறைமுகம் எட்டும் முன் செய்ய வேண்டிய பாதுகாப்பு சோதனைகள் சில நாற்பத்தி எட்டு மணிநேரத்துக்கு முன் செய்து ஆவணபடுத்தவேண்டும். அது ஞாயிறு ஓய்வை எதிர்பார்த்திருந்ததை இல்லாமல் ஆக்கியது. காலை எட்டுமணிக்கே துவங்குவோம் என காஸ் இஞ்சினியரிடம் முன்பே சொல்லியிருந்தேன்.

  ஞாயிறு காலை கார்கோ காட்டுப்பாட்டு அறைக்கு சென்றபோது முதன்மை அதிகாரி(மலேசியாவை சார்ந்த முதன்மை அதிகாரி தினேஷ்வரன் முன்பு என்னுடன் காடேட் ஆக இருந்தவர்.பத்து ஆண்டுகளில் உயர்பதவிக்கு வந்துவிட்டார்) காஸ் இஞ்சினியர் யாரும் வரவில்லை. 

 இயந்திர கட்டுப்பாட்டு அறையிலும் அலாரம் வரும் எனவே இஞ்சினியர் ஒருவர் இயந்திர அறையில் இருக்கவேண்டும். இயந்திர அறையில் ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு கூடிப்பிரிவார்கள். ஓய்வு எடுப்பதற்கு கூடி விவாதிக்கும் கப்பல் இதுவே. நானும்,காஸ் இஞ்சினியரும் ஞாயிறு கூட்டத்திற்கு செல்வதில்லை. இந்தவாரம் முதல் எங்களிருவரையும் வந்தே ஆகவேண்டுமென கொரிய முதன்மை இஞ்சினியர் உத்தரவிட்டார்.

ஞாயிறு மதியம் பன்னிரெண்டரை வரை கார்கோ டீம் பணி செய்தோம். டெக் மற்றும் இஞ்சின் ஓய்வில் இருந்தார்கள். திங்கள்கிழமை கப்பல் கரை சேர்வதற்கான அனைத்தும் தயார் நிலையில் இருந்ததால் எனக்கு பணியேதும் இல்லை. அன்றிரவே கப்பல் வாங் தாவ் அருகில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தவிருந்ததால் டெக் மற்றும் இஞ்சின் பணியாளர்களுக்கு இரவில் பணி இருந்தது.

 நங்கூரம் பாய்ச்சி நிறுத்தும் இடத்தில் மீன் பிடி படகுகள் நிறையவே இருக்கும். வாய்ப்பு பார்த்து கப்பலுக்குள் புகுந்துவிடும் கொள்ளையர்கள் உண்டு என முகவர் எச்சரித்திருந்தார்.

  எனவே இரவு பத்துமணிக்கு நங்கூரம் பாய்ச்சி (“இப்ப நடக்க போர் சூழல்ல எவ்ளோ கஷ்டப்பட்டு உங்களுக்கு காஸ் கொண்டு வாறோம்,ஏம்பிலே எங்க கப்பலுக்கு களவாண வாறியோ” என ஐடியா மணி இருந்திருந்தால் கேட்டிருப்பார்) நிறுத்தியபின் டெக்கில் இருவர் வீதம் முறைவைத்து காவல் காத்தனர். கதவுகள் அனைத்தும் உட்புறமாக அடைக்கப்பட்டு இயந்திர அறையும் தயாராக இருந்தது.

  செவ்வாய்க்கிழமை காலை பத்து மணிக்கு பைலட் வரும்நேரம். ஒன்பதுமணிக்கே நங்கூரம் உருவப்பட்டு கப்பல் துறைமுகம் நோக்கி நகர தொடங்கியது. கடைசி கட்ட தயாரிப்புகளை காலை எட்டு மணிக்கே துவங்கியிருந்தோம். முதன்மை அதிகாரி நங்கூரம் மேலெழுந்தபின் வந்து சரக்கு இறக்கும் குழாய்களை குளிர்விக்க தொடங்கினோம்.

 எல்என்ஜி(மீத்தேன்) சரக்கு தொட்டிகளில் (-160 ) டிகிரியில் இருக்கும்.சாதாரண வெப்ப நிலையில் இருக்கும் குழாய்களை ஸ்ப்ரே பம்ப்பை இயக்கி மெதுவாக குளிர்வித்து கார்கோவின் வெப்பநிலைக்கு கொண்டு வருவோம். பதினொன்றரை மணிக்கு கப்பல் கட்டும் பணிக்காக அழைத்தார்கள். அதற்குமுன் உணவுண்டு அனைவரும் தயாராய் இருந்தோம். மூன்று மணிக்கு கப்பல் கட்டப்பட்டது. மதியம் மூன்று மணிவரை இங்கே ஹை டைட் என சொல்லப்படும் நீர்மட்டம் உயர்ந்திருக்கும் அப்போது கப்பல் உள்ளே வந்துவிடவேண்டும். அதன் பின் நீர்மட்டம் குறைய தொடங்கிவிடுகிறது.

   டெர்மினலின் சரக்கு குழாய்களை பொருத்தியபின் அதையும் குளிர்விக்க வேண்டும். குறைந்தது இரண்டு மணிநேரம் ஆகும். நான்கு தொட்டிகளிலுள்ள திரவத்தை இரு குழாய்கள் மூலம் ஏழு பம்புகள் உபயோகித்து உந்தி தள்ள தொடங்கினோம். முழு விசையான 9800 டன்னை எட்ட இரவு எட்டரை மணியானது. டெர்மினல் குழாய்களை குளிர்விக்கும் இடைவெளியில் அறைக்கு வந்து தொழுதுவிட்டு சென்றேன்.

 இரவில் எனக்கு பணியில்லை கார்கோ தீரும் தருவாயில் அழைப்பார்கள். வழக்கமாக பன்னிரெண்டு முதல் பாதினாங்கு மணிநேரமாகும். இங்கே இரு குழாய்கள் மட்டுமே பொருத்தியதால் இருபதுமணி நேரம் ஆகுமென கணக்கிடபட்டிருந்தது. மாலை ஐந்து மணிக்கே கரைக்கு சென்று ஊர் சுற்றிவர எட்டு பேர் குழு ஒன்று கப்பலிலிருந்து வெளியேறியது வாங் தாவ் நகருக்கு. இம்முறை ஷோர் பாஸ் வாங்கும்போதே கார்கோ டிப்பார்ட்மெண்ட்டின் கீ வொர்கேர்ஸ் ஆன முதன்மை அதிகாரி,காஸ் இஞ்சினியர் மற்றும் எனக்கு அனுமதிமறுக்கப்பட்டது. 

 கப்பலின் இரு இஞ்சின் காடேட்,ஒரு டெக் காடேட்க்கும் காப்டன் அனுமதி வழங்கவில்லை கூடவே இரண்டாம் இன்ஜினியருக்கும்.காலை எட்டுமுதல் இரவு எட்டுக்கு மேல் பணியில் இருந்ததால் நல்ல களைப்பு அறைக்கு வந்து நீராடி தொழுதபின் கொஞ்சம் வாசித்துவிட்டு பத்தரை மணிக்கு மேல் நல்ல துயில். காலை தாமதமாக விழித்து சமாதானமாக எட்டு மணிக்கு காலை உணவுக்கு சென்றபோது டெர்மினலின் கார்கோ சர்வேயர் உணவு மேஜையில் அமர்ந்து மொபைலை நோண்டிக்கொண்டிருந்தார். “கார்கோ எப்ப முடியும்” எனக்கேட்டேன். மதியம் இரண்டுமணி என்றார் இன்னும் சமாதானமாக காலை உணவுண்டு ஓய்வில் இருந்தேன். கரைக்கு செல்லும் இரண்டாம் குழு பன்னிரெண்டு மணிக்கு புறப்பட்டது. 

 காஸ் இஞ்சினியர் ஒன்றரை மணிக்கு அழைத்தார். சாகுல் ஸாப் பிளீஸ் கம் டூ மேனிபோல்ட்” என. சரக்கு பம்புகள் ஒவ்வொன்றாக நிறுத்தப்பட்டு மூன்று மணிக்கு மேல் சரக்கு கொடுப்பது முடிவடைந்தது. குழாய்களில் மீதமிருக்கும் திரவத்தை பாதுகாப்பாக கப்பலின் சரக்கு தொட்டிக்கு அனுப்பியபின் (நைட்ரஜன் வாயுவை குழாயில் செலுத்தி திரவத்தை அழுத்தி தொட்டிக்குள் அனுப்புவோம். இருமுறை அதை செய்வார்கள்.) டெர்மினலின் குழாயில் திரவம் இல்லை என உறுதியானபின் குழாயை கழட்டி எடுத்தபோது மணி ஐந்தாகியிருந்தது.பணி முடிந்தது. நேற்றை விட இன்று வெப்பம் கொஞ்சம் குறைவாக இருந்தது முகில்கள் சூழ்ந்து இருந்ததால்.

   கரைக்கு செல்லும் மூன்றாவது குழு உற்சாகமாக வெளியேறிக்கொண்டிருந்தது. நீர்மட்டம் குறைவாக இருப்பதால் கப்பல் துறைமுகம் விட்டு வெளியேறுவது நாளை காலை ஏழு மணிக்கு. இரவு முழுவதும் கப்பலை கட்டிவைத்திருப்பார்கள்.வழக்கமாக கார்கோ ஆப்ரேஷன் முடிந்தபின் வெகுவிரைவில் கப்பலை வெளியேற்றிவிடுவார்கள். கராணம் ஒவ்வொரு நொடிக்கும் கோடிகளில் பணம். நீர்மட்டம் உயர்வதுவரை காத்திருக்க வேண்டியிருப்பதால் கப்பல் கட்டி வைக்கப்பட்டுள்ளது.



  நாளை காலை வரை எனக்கு பணியேதும் இல்லை. ஆனாலும் வாங் தாவ் ஊரில் சுற்றும் வாய்ப்பை இழந்துவிட்டேன்.இந்த துறைமுகத்தில் முன்னரே பெயர் கொடுத்து ஷோர்-பாஸ் வாங்கி கொள்ளவேண்டும். முகவருக்கு அனுப்பிய பெயர் பட்டியலில் என் பெயர் இல்லை. வழக்கமாக ஷோர்-பாஸ் அனைவருக்கும் இலவசமாக கொடுப்பார்கள். விரும்புபவர்கள் வெளியே செல்லலாம். இங்கே ஐந்து டாலர் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

 மாலையில் பணி முடிந்தபின் முதன்மை அதிகாரி வெளியே செல்லும் எண்ணத்துடன் முகவரிடம் ஷோர்-பாஸ் வாங்கிதருமாறு கேட்டார். இன்று இங்கே விடுமுறை நாளாம் அதனால் ஷோர்-பாஸ் க்கு ஐம்பது டாலர் அதிக கட்டணம் செலுத்தவேண்டியதை சொன்னார்.அவரும் வெளியே செல்லும் திட்டத்தை கைவிட்டார்.

 இரு ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தபோது இதனருகில் உள்ள ஜெட்டியில் தான் கப்பலை கட்டியிருந்தோம் அப்போது ஒரு முழு பகலும் வெளியே செல்லும் வாய்ப்பு கிடைத்தது.ஆயிரம் அடி உயரத்திலிருக்கும் புத்தர் கோவிலுக்கு சென்ற பேரனுபவத்தை கட்டுரையாக்கியிருந்தேன்.

புத்தரிடம்

 பணி முடிந்தபின் கப்பலிலிருந்து வெளியேறி கப்பலை முழுமையாக பார்த்தேன்.வாயிலை கடந்து காலனி மற்றும் காலுறையை உருவிவிட்டு நிலத்தில் பாதம் பதித்தேன். அங்கிருந்த காவலாளி விரைந்தோடி என்னருகில் “வந்து என்ன செய்கிறாய்” எனக்கேட்டார்.அப்போதே டெர்மினலின் குழாய் பொருத்தும் பணியாளர்கள் இருவர் வாயிலுக்கு வந்ததால் கப்பலிலிருந்து மூன்று மாதத்திற்குப்பின் நிலத்தில் கால் வைத்துள்ளேன் உடனே திரும்பி சென்றுவிடுவேன் என அவர்கள் மூலம் வாயில் காவலருக்கு புரியவைத்தேன்.

  குழாய் பணியாளர் வந்த சைக்கிளை வாங்கி கப்பல் வரை உற்சாகமாக மிதித்தேன்.ஜெட்டியில் உள்ள அவரது கட்டுபட்டுபாட்டு அறைக்கு அழைத்து சென்றார். ஐந்தரைக்கு அறைக்குள் வந்தபோது செந்திறத்தில் கதிரவன் முகில்களுக்குள் செல்ல தயாராகியிருந்தது.



நாஞ்சில் ஹமீது,

29 april 2026.

sunitashahul@gmail.com

Sunday, 26 April 2026

கடும் வெப்பமும் – குளிரும்

    


இப்போதெல்லாம் போனில் பேசும்போது சுனிதா “இங்க பயங்கர சூடு” என்பாள். நான் ஜனவரி பதினைந்தாம் தேதி ஹூஸ்டனில் வந்திறங்கியபோது மிதமான காலநிலை இருந்தது. திருவனந்தபுரத்திலிருந்து விமானம் ஏறும்போது குளிருக்கான ஜாக்கெட்டை பயணப்பையில் வைத்து லக்கேஜில் போட்டுருந்தேன்.



  ஹூஸ்டனில் மூன்று வாரங்கள் இருந்தேன். அப்போது இங்கே பனிப்புயல் வீசி மைனஸ் இரண்டு டிகிரி வரை சென்றது. விடுதியறையில் வெப்பக்காற்றை இயக்கவேண்டியிருந்தது. டாலஸ் சென்றபோது இதமான குளிர். 

 பிப்ரவரி முதல் வாரம் கப்பலில் ஏறி சரக்கு இறக்க பிரான்ஸ் சென்றோம் அங்கும் நல்ல குளிராக இருந்தது. அங்கிருந்து மார்ச் மாதம் முதல் வாரம் நைஜீரியாவின் போனி துறைமுகம் வந்தபோது அங்கும் இதமான குளிர். அங்கிருந்து கீழே இறங்கி பூமத்தியரேகையை தாண்டும்போது நான்கைந்து நாட்கள் வெப்பம் உயர்ந்தது. அறையின் வெப்பம் இருபத்தியாறு டிகிரியும் வெளியில் முப்பத்தியைந்து வரை இருந்தது. ரமலான் மாதம் முழுவதும் அதிக சிரமமில்லை.

   கீழே இறங்கி தென்னாபிரிக்காவை சுற்றி கொரியாவை நோக்கிய பயணத்தில் வெப்பம் கொஞ்சம் உயர்ந்தது. இந்த மாத முதல் வாரத்தில் கொரியா சென்றபோது வெப்பம் பத்து டிகிரியாக இருந்தது. எனக்கு அது நல்ல குளிர். அறையின் வெப்பம் பதினைந்து டிகிரியாக சென்றுவிட்டது. வெப்ப ஆடைகளை அணிந்து இரு கம்பளி போர்வைகளால் போர்த்திக்கொண்டேன். காலையில் எழுந்து வெதுவெதுப்பான நீரில் குளித்து குளிரை விரட்டினேன்.



  காலையில் ஆய்வுக்கு வந்த இரு இளம் கொரிய பெண்களிடம் நல்ல குளிர் என்றபோது “நல்ல கிளைமேட் இதமாக இருக்கிறது” என கண்கள் விரிய சொன்னார்கள். முகத்தில் மாஸ்க் போட்டிருந்ததால் சிரிக்கும்போது உதடு பிரிந்து தெரிந்த சிறிய வெண்பற்களை பார்க்க முடியவில்லை.

  கொரியாவில் இருந்து புறப்பட்டு ஆஸ்திரேலியாவின் கிளாஸ்டோன் சென்றோம் பூமத்தியரேகையை ஒட்டிய பன்னிரண்டு நாள் பயணத்தில் பத்து நாட்களும் கடும் வெப்பம். நல்ல வேளையாக இந்த கப்பலின் நன்னீர் தேக்க தொட்டிகள் இயந்திர அறையின் அதிக சூடு இல்லாத இடத்தில் இருப்பதால் அறையின் குழாயை திறந்தால் நீர் அதிக சூடு இல்லை.வழக்கமாக நல்ல சூடான பிரதேசங்களில் பயணிக்கையில் காலையில் குளித்தபின் இரு வாளிகளில் நீரை பிடித்து வைத்து மாலையில் குழாயை திறந்தால் வரும் சூடான நீருடன் கலந்து வெப்பமில்லாத நீரில் தான் குளிப்பேன். 

 கப்பலில் பணியில் இணைந்தவுடன் அறையில் குறைந்தது இரு பக்கெட்டுகளை தேடி எடுத்து வைத்துக்கொள்வேன்.ஆளுக்கு ஒரு கம்பளி போர்வை தருவார்கள் நான் மெஸ் மேனிடம் கேட்டு மேலும் ஒரு கம்பளியை வாங்கி துவைத்து மடித்து வைத்துக்கொள்வேன். எல்லா கப்பல்களிலும் வெப்பக்காற்று இயங்கும் என உத்தரவாதம் சொல்ல முடியாது. வெளியில் வெப்பம் பத்து டிகிரியாகும் போது அறையின் வெப்பம் பதினாறு டிகிரியாகிவிடும். வெப்ப ஆடைகளை அணிந்து இரு போர்வைக்குள் நுழைந்து உடலின் வெப்பம் வெளியேறாமல் போர்த்திக்கொண்டால் மட்டுமே தூக்கம் சாத்தியமாகும்.

   பத்து நாள் பயணத்தில் ஒரு கடுங்குளிரான பகுதியிலிருந்து கடும் வெப்பமான பகுதிக்கு சென்று சேர்ந்துவிடுவோம். இப்போதும் ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்ட மூன்று தினங்களுக்குபின் கடும் வெப்பம் தொடங்கியது. வியட்நாமை நோக்கி பயணிக்கிறோம் அங்கேயும் இதே வெப்பநிலை இருக்கும். துறைமுகம் நெருங்கிவிட்டதால் கடந்த சில நாட்களாக கடும் வெயிலில் தான் வேலை. முகத்தை மறைக்கும் வெள்ளை துணி சுற்றி கறுப்பு கண்ணாடி அணிந்து பணிசெய்கிறேன்..

  கோடையில் அரபு வளைகுடாவை பொசுக்கும் வெப்பம் இல்லை தண்ணீர் குடித்து தாக்குபிடிக்கும் வெப்பம் தான். இங்கிருந்து மீண்டும் இதே பாதையில் ஆஸ்திரேலியா நோக்கிய பயணம் உறுதியாகிவிட்டது. அங்கு சரக்கு நிறைத்தபின் ஆசியாவின் சீனா அல்லது கொரியாவுக்குதான் பயணம் இருக்கும் மே மாதம் வரை போர் நடக்கும் பகுதிக்கு செல்ல போவதில்லை என்பது ஆறுதலான விஷயம்.

  கப்பல்கள் தாக்கப்படும் செய்திகளை கேட்கும் நண்பர்கள் கவலையுடன் விசாரித்து கொண்டே இருக்கிறார்கள்.

 நாஞ்சில் ஹமீது,

26 april 2026.

sunitashahul@gmail.com

Wednesday, 22 April 2026

கப்பல் காரன் ஓட்டு யாருக்கு.

 



   இன்று அதிகாலையே கப்பல்காரன் டைரியின் வாசகரும்,நண்பருமான சேலம் பிரகாஷ். “அண்ணா உங்களுக்கு ஓட்டு போடமுடியுமா? கப்பலில் இருப்பதால் எதெல்லாம் இழக்கிறீர்கள்”என கேட்டார்.

 எனது வாப்பா காங்கிரஸ்காரர் பள்ளியில் படிக்கும்போது தேர்தல் சமயத்தில் ஆட்டோவிலும் ,ஜீப்பிலும் மைக்கில் சொல்லும் பிரச்சாரத்தை கேட்டுள்ளேன் சுவாரசியாமாக இருக்கும்.சுவர் விளம்பரங்களை படிப்பேன்.(சூரியன் உதிக்காது,கறந்தபால் மடிபுகாது,காங்கிரஸ் ஆட்சிக்கு வராது என்பன) சிறுவனாக இருந்தபோது. எனது கிராமத்திற்கு தலைவர் எம் ஜி ஆர் ,ஜெயலலிதா,வை கோ ஆகியோர் வந்துள்ளனர் மிக அருகில் பார்த்திருக்கிறேன்.

குளச்சல் எனது சட்டமன்ற தொகுதி ஆ.பாலையா அவர்கள் ஆறுமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். நேர்மையான காங்கிரஸ்காரர் அவர். காங்கிரசின் கோட்டையாக குமரிமாவட்டம் இருந்த காலம் அது. 

  பதினெட்டு வயது பூர்த்தியாகி முதல் முறை ஒட்டு போட்டது சின்னவிளை பள்ளியில். மணவாளக்குறிச்சியில் தான் ஓட்டு எனக்கு. அது பாராளுமன்ற தேர்தல் மறைந்த வாஜபேயி பிரதமரானார்.பொன்.ராதாகிருஷ்ணன் மாநிலங்களவை உறுப்பினராகி,இணையமைச்சராவகவும் இருந்தார்.

  மும்பையில் பணிசெய்தபோது ஊருக்கு வந்து ஓட்டு போட்டுவிட்டு திரும்பி செல்ல ரயிலுக்கு கையில் பணமில்லாததால் வரவில்லை. 2005ஆம் ஆண்டு கப்பல் பணியில் சேர்ந்தபின் பெரும்பாலும் எல்லா தேர்தலின் போதும் கப்பலிலேயே இருக்கிறேன்.

   கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு சட்டமன்ற,பாராளுமன்ற தேர்தலின்போது மட்டுமே வாக்களித்த நினைவு இருக்கிறது.கடந்தமுறை ஊராட்சிமன்ற தேர்தல் நடந்தபோது ஊரில் இருந்ததால் மணவாளக்குறிச்சி சென்று பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தேன்.நான் வாக்களித்தவர் வெற்றிபெற்றார்.



இப்போது நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் வாக்குரிமை உள்ளது. ஸ்காட் பள்ளி வாக்குசாவடி மையம். கடந்த சிறப்பு வாக்களர் பட்டியல் திருத்தம்செய்தபோதும் எனது வாக்குரிமையை தக்க வைத்துக்கொண்டேன்.

   கப்பல்காரர்களுக்கு ஓட்டு மட்டுமில்லை பெரும்பாலான பண்டிகைகள்,குடும்பத்தில் நிகழும் அனைத்து விசேஷங்களும் போட்டவாக மட்டுமே கிடைக்கும். ஒருமுறை கப்பலில் விடுமுறை விண்ணபித்த ஒருவரிடம் காரணம் கேட்டார் காப்டன். அண்ணனின் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என பதில் சொல்ல. உனது திருமணம் இல்லையே என சொல்லி சிரித்துவிட்டு கப்பல் நிறுவனத்துக்கு விடுமுறை விண்ணபத்தை அனுப்பிவைத்தார்.

  கடந்த பத்து ஆண்டுகளாக எரிவாயு ஏற்றும் டாங்கர் கப்பல்களில் பணிபுரிகிறேன். சோமாலிய கப்பல் கடத்தல்காரர்களிடம் துப்பாக்கி சண்டையில் தப்பித்து நாங்கள் கொண்டுவரும் காஸ் தான் உங்கள் வீடுகளில் அடுப்பெரிகிறது.

தற்போது நடக்கும் போரினால் நிலைமை இன்னும் மோசம். கப்பல்கள் தாக்கபடுவது கவலையை தருகிறது. உலக பொருளாதாரதிற்கு முதுகெலும்பாக இருக்கும் கப்பல் கார்களின் உயிருக்கு ஆபத்தான நேரமிது. இன்றும் இரு கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன.ஹோர்முஸ் மூடியே இருப்பதால் ஏராளமான கப்பல்கள் சிக்கியுள்ளது அதில் பணிபுரியும் பணியாளர் நிலைமை இன்னும் மோசம். உணவும் தண்ணீரும் பற்றாகுறை இருக்கிறது. அந்த கப்பல்களை வெளியே செல்ல அனுமதித்துவிட்டு சண்டை போடுங்கள் என போர் செய்யும் தலைவர்களை வேண்டுகிறேன்.

  இன்றும் மாலுமிகள் சார்பாக பாரத பிரதமருக்கு கடிதம் எழுத சொல்லி எங்கள் சங்கம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. இந்த நிலைமையில் ஊருக்கு சென்று ஓட்டு போடுவதை கப்பல்காரர்கள் எண்ணவே இயலாது.

 ஆனால் கடந்த பல ஆண்டுகளாகவே கப்பல் மாலுமிகளுக்கு இணையவழி தபால் ஓட்டு செலுத்த சில முயற்சிகள் நடக்கிறது. அப்படி அது நடந்தால் தமிழ்நாட்டில் சில ஆயிரம் ஓட்டுகளும் இந்தியாவில சில லட்சம் ஓட்டுகளும் பதிவாக வாய்ப்பு உள்ளது.

 கப்பல்களில் இப்போது இணையம் மேம்பட்டுள்ளதால் கீழ்த்தரமான தேர்தல் பிராச்சாரங்களை ஊடகங்கள் மூலம் அறியும் வாய்ப்பு கிடைத்தது. எனினும் தமிழகத்தில் நடந்த தேர்தல் திருவிழாவை காணக்கிடைக்காததில் கொஞ்சம் வருத்தம்தான்.

 நாஞ்சில் ஹமீது,

21 april 2026