நினைவில் நிற்பவை
Saturday, 22 August 2026
கடிகாரம் பின்னே செல்லுதல்.
Sunday, 9 August 2026
ஹைதராபாத் .
இரண்டாம் தேதி மாலை இந்தோனேசியாவின் அருண் துறைமுகப்பிலிருந்து கொரியாவை நோக்கி புறப்பட்டோம். இரண்டே ஆண்டுகளான புதிய இந்த கப்பலின் இஞ்சின் வாட்சில்லா நிறுவன தயாரிப்பு. இரட்டை இஞ்சின் கொண்டது. இது டீசல், ஹெவி பீயுல் ஆயில் மற்றும் கேஸில் ஓடும்.
கேஸ் மற்றும் டீசல் அல்லது ஹெவி ஆயில் (fuel sharing) சேர்த்தும் ஓடும். அதாவது கேசுக்கான நாசில் மட்டும் தனி. இந்த எல்என்ஜி கப்பலில் திரவ வடிவில் இருக்கும் கார்கோ ஆவியாக மாறும்போது ஏற்டும் சரக்கு தொட்டியின் அழுத்தத்தை குறைக்க அந்த வாயுவை காற்றில் கலக்கவிடாமல் அதை உபயோகித்து கப்பலின் இஞ்சின் மற்றும் ஜெனரேட்டரை இயக்குகிறோம்.
இந்த இஞ்சின் வாட்சிலாவின் பெயுலிவர் மாடல் என்றார்கள் இஞ்சினியர்கள். காஸ் மோடில் கப்பல் இயங்கும்போது பீயுல் வால்வுகள் சீக்கிரமே பழுதாகிவிடுகிறது. டீசல் மற்றும் ஹெவி ஆயிலில் இயங்குகையில் எந்த பிரச்னையும் இல்லை. வழக்கமாக ஒவ்வொரு இரண்டாயிரம் மணிநேரத்திற்கு பின் பீயுல் வால்வை மாற்ற வேண்டும். ஆனால் இந்த கப்பலில் கேஸில் ஓடும்போது பீயுல் வால்வுகள் சீக்கிரமே பழுதாகிவிடுவதால். கப்பலை அவ்வப்போது நடுக்கடலில் நிறுத்தி பீயுல் வால்வ் மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது.
கொரிய கட்டுமானம் ஆன இந்த கப்பலில் சில இயந்திரங்கள் சீக்கரமே பழுதாகிவிட்டன. முக்கிய இயந்திரத்தின் காற்றை குளிர்விக்கும் ஏர் கூலர் குழாய்களில் ஓட்டைகள் விழுந்துள்ளது. கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி ஏர் கூலரை கழற்றி பிளக் போட்டுள்ளனர்.
நான் வந்தபின் மீண்டும் இரண்டாவது இஞ்சினின் கூலரிலும் ஓட்டை விழுந்தது ஒரு முழுநாளும் கப்பலை நிறுத்திவைத்து அதையும் பிளக் போட்டோம்.
இப்போது மீண்டும் முதலாவது இஞ்சினின் கூலரில் ஓட்டை. ஒற்றை இஞ்சினில் கப்பலை நிறுத்தாமல் இயக்கி பழுதான கூலரை சரி செய்தோம். பீயுல் வால்விலும் பிரச்னை இருந்ததால் அதையும் மாற்றினோம். காலை எட்டுமணிக்கு தொடங்கி இரவு பத்து மணிவரை பணிசெய்தோம்.
மாலை ஆறு மணிக்கு முதன்மை இஞ்சினியர் சொன்னார் கொரியாவிலிருந்து நீ ஊருக்கு போகிறாய் என. கொரியாவிலிருந்து பணியாளர் மாற்றம் இல்லாமலிருந்தது கடந்த வாரம் மெடிக்கல் அன்பிட் ஆகி ஊருக்கு சென்றவர்களுக்கு பதிலாக மூவர் வருகிறார்கள். அவர்களுடன் எனக்கான மாற்று பணியாள் வருகிறார். இம்மாதம் முழுவதும் கப்பலில் இருக்க வேண்டுமென நினைத்தேன். ஆகஸ்ட் மாத முழு சம்பளமும் கையில் கிடைத்தால்தான் ஊருக்கு சென்று இரண்டு மாதமாவது இருக்க முடியும்.
![]() |
ஹைமா , ஜோஷிகா மெல்போர்ன்(2010) |
கடந்த பிப்ரவரி மாதம் ஹைதராபாத்தை சேர்ந்த நண்பர் ராஜு அழைத்திருந்தார். மகள் ஜோஷிகாவுக்கு ஆகஸ்ட் மாதம் திருமணம் குடும்பத்துடன் கண்டிப்பாக வர வேண்டுமென அழைப்பு விடுத்தார். முயற்சிக்கிறேன் என்றேன். இல்லை கண்டிப்பாக வரவேண்டும். நீ மட்டும்தான் கப்பல் பிரெண்ட் என்றார்.
![]() |
| ஜோஷிகா |
2010 ஆம் ஆண்டு ராஜுவுடன் மனைவி ஹைமா மற்றும் பத்து வயதான ஜோஷிகாவும் கப்பலில் இருந்தனர். இத்தனை ஆண்டுகளாக அவர்களுடன் தொடர்பிலேயே இருந்தேன். ஹைமா அழைக்கும் போதெல்லாம் ஹைதராபாத் எப்போது வருகிறாய் என கேட்பாள். ஒரு நாள் வருவேன் என்பேன். அந்த ஒருநாள் எப்போது என கேட்டுக்கொண்டே இருப்பாள். மணப்பெண் ஜோஷிகா பள்ளிப்படிப்பை முடித்து கலிபோர்னியாவில் மருத்துவம் படித்து டாக்டராக இருக்கிறார்.
சுனிதாவிடம் சொன்னேன் நான் ஊருக்கு வருகிறேன் ஹைதராபாத் திருமணதிற்கு சேர்ந்து போகலாம் என. அவளும் சம்மதித்துவிட்டாள். கப்பல் பன்னிரெண்டாம் தேதி கொரியா சென்றடையும். பதிமூன்றாம் தேதி கப்பலிலிருந்து இறங்கி பதினான்காம் தேதி விமானம் ஏறி ஊர் செல்லும்போது பதினைந்தாம் தேதி ஆகி விடும்.
ஆகஸ்ட் பதினாறாம் தேதி மாலை ரிசப்ஷனும் நள்ளிரவு திருமணமும். சுனிதாவிடம் ஹைதராபாத் வந்துவிடு நான் இங்கே ஹைதராபாத்துக்கு டிக்கெட் கேட்டு பார்க்கிறேன் என்றேன்.
நாகர்கோவிலிருந்து வாரத்தில் ஒரு ரயில் செல்கிறது. முப்பத்தியிரண்டு மணி நேரம். காலை ஐந்து மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் இரண்டு மணிக்கு சேரும். வடசேரியிலிருந்து மதியம் இரண்டரைக்கு பஸ் போகிறது பதினெட்டு மணிநேரம். மறுநாள் காலை ஒன்பதுமணிக்கு போய் சேரும். மூன்றாவதாக திருவனந்தபுரத்திருந்து விமானம் இரண்டு மணிநேரம் என சொன்னேன்.
“உங்க டிக்கெட் வரட்டு முதல்ல” என்றாள்.
கப்பலில் மூன்றாம் அதிகாரி சபரீசன் வியாழக்கிழமை மாலை அழைத்து. “பைனல் டெஸ்டிநேஷன் சொல்லுங்க” எனக்கேட்டார். “ஹைதராபாத்” என்றேன். நண்பர் ராஜிவிடம் கப்பலிலிருந்து ஹைதராபாத் வருகிறேன் என்றேன் மகிழ்ச்சியடைந்தார்.
சுனிதாவை அழைத்து எப்படி வருகிறாய் டிக்கெட் போடுகிறேன் என கேட்டபோது. “உங்க டிக்கெட் கைல கிடச்ச பொறவு பாக்குலாம்” என்றாள்.
வெள்ளிக்கிழமை மாலை மழை பெய்ததால் நான்கு மணிக்கே அறைக்கு வந்ததால் எனது பயணப்பையை தயார் செய்தேன். ஆறு மாதமாக நிலத்தில் எங்கும் செல்லாததால் துணிகள், புத்தகங்கள் மட்டுமே லக்கேஜ் அரை மணி நேரத்தில் பாக்கிங் முடிந்தது. புதன்கிழமை வரை உபயோகிக்கும் துணிகள் மற்றும் பொருட்கள் மட்டுமே மீதி. ஆறு மணிக்கு காப்டனின் பிறந்தநாள் கேக் வெட்டியபின் மனமகிழ் அறையில் படம் பார்த்துகொண்டிருந்தோம் காப்டன் வந்தார். “ஷாகுல் உனது சைன் ஆப் கான்சல்” என்றார்.
மூன்றாம் அதிகாரி சபரீசன் சொன்னார் “சும்மா இருத்த மனுசன சைன் ஆப்ன்னு சொல்லி, கான்சல் பண்ணிட்டாங்க” என்றார்.
ஹைதராபாத்தில் திருமணத்தில் கலந்து கொள்ளும் ஆசையில் இரு தினங்கள் மகிழ்ந்திருந்தேன்.
நாஞ்சில் ஹமீது,
09 aug 2026.
sunitashahul@gmail.com
Monday, 3 August 2026
கப்பல் காரனின் உடல்நல குறைவுகள்.
Thursday, 23 July 2026
கோஸ்டா அசுல் (மெக்ஸிகோ)
இந்த மாதம் ஆறாம்தேதி மெக்ஸிகோவின் கோஸ்டா அசுல் (COASTA AZUL) துறைமுகப்பிற்கு வந்தோம். 2008 ஆம் ஆண்டு முதன்முதலாக மெக்ஸிகோ வந்தேன்.
அக்கபுல்கோ, மன்சிலனோ, வெராகுரூஸ், லார்சனோ கார்டனஸ் என அழகிய துறைமுகங்கள். தமிழகத்தை போன்ற தட்பவெப்பநிலை, அழகான பெண்கள் மற்றும் நம்மை போலவே கொஞ்சம் காரமான உணவை சாப்பிடுபவர்கள்.
கப்பலை நிறுத்தியபின் வாயிலை தாண்டினால் சாலை. மிக அழகான கடற்கரைகளை கொண்ட ஊர் சனிக்கிழமை மாலையானால் சாலையை ஒட்டிய கடைகளில் அளவான மதுவருந்திய ஜோடிகள் (இருபது முதல் அறுபது வயது வரை) நிதானமாக ஆடி மகிழ்வதை காணலாம்.
![]() |
| கார் ஏற்றும் கப்பல் |
காரேற்றும் கப்பலிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு முன் எல்பிஜி கப்பலில் வந்தபின் இப்போதுதான் முதல் முறையாக மெக்ஸிகோ வருகிறேன். இருந்தும் இங்கே வெளியே செல்ல அனுமதியில்லை பழைய நினைவுகளில் மூழ்கி வெளியேறினேன்.
துறைமுகத்தை ஒட்டிய பகுதி கரையாக இருக்கும் அதன்பின் நிலப்பரப்பு. கரையை ஒட்டி பச்சைபசெலென மரங்களோ புல்வெளியோ கட்டிடங்களுமாகவே இருக்கும். கோஸ்டா அசுல் பசுபிக் கடலில் இருக்கிறது. இந்த டெர்மினல் கடலுக்குள் இருப்பது போலவே இருக்கிறது. பசுபிக் கடலில் இருக்கும் மலையில் அலைகள் அடித்துக்கொண்டிருக்கிறது. கடலில் அறுநூறு மீட்டருக்கு மேல் கான்க்ரீட் தளம் அமைத்து பிரேக் வாட்டர் அமைத்து பாறையை வெட்டி சமதளபடுத்தி டெர்மினல் அமைத்துள்ளனர்.
இது கொஞ்சம் உயரமான நீண்ட மலை, மலையின் மறுபுறம் நெடுஞ்சாலை செல்கிறது அங்கு சமதளபகுதியும் ஊரும் இருப்பதை கற்பனையில் விரித்துக்கொண்டேன். அதாவது மலை ஏறி, இறங்கினால் இருக்கிறது நெடுஞ்சாலை. மலையில் மேற்பரப்பில் ஒரு கிராமம் இருக்கிறது. நூறு வீடுகள் இருக்கலாம். பைனாகுலர் வழியாக அந்த வீடுகளை பார்த்துக்கொண்டிருந்தேன்.
வீட்டின் வாசலில் அல்லது ஜன்னலை திறந்தால் கண்முன் வரிந்துகிடக்கும் பசுபிக் கடல் தான் காட்சி. இரவில் இருளில் வானில் ஜொலித்துக்கொண்டிருக்கும் கோடானுகோடி நட்சத்திரங்களை பார்த்தவாறு பிரபஞ்சத்தோடு இணைந்துவிடலாம். சுத்தமான காற்றும் உறுதி. அந்த வீடுகளில் வாழ்பவர்கள் ஆசீர்வதிகபட்டவர்கள்.
சுனாமி வருமோ எனும் எண்ணம் எனக்கு வராமலில்லை. சுனாமி மலை உச்சிவரை செல்லாது என்பதே என் கணிப்பு. கப்பலை கட்டியிருந்த டெர்மினலில் பணிசெய்பவர்களை அழைத்து செல்லும் வண்டிகள் மலையிறங்கி வருவதையும் பார்த்தேன். கப்பல் நகர்ந்தபின் மலை முடியும் இடத்தில் கொஞ்சமான சமவெளி பரப்பில் இன்னும் சில வீடுகள் இருக்கிறது. ஆனால் மலையுச்சியில் வாழ்பவர்களுக்கு கிடைக்கும் அனுபவம் இவர்களுக்கு நிச்சயம் இருக்காது.
கப்பலுக்கு வந்திருந்த டெர்மினல் பணியாளர்களிடம் டெர்மினலிலிருந்து சற்று தள்ளியிருந்த பிரமாண்டமான பங்களாவை காட்டி கேட்டேன். அரசு மற்றும் ராணுவ உயரதிகாரிகள் ஓய்வுக்காக வந்து தங்குமிடம் என்றார்கள். நான் கேட்ட பணியாளரிடம் அந்த பங்களாவின் வீடியோக்கள் இருந்ததை மொபைலில் காட்டினார்.
ரகசிய பாதாள அறை, உணவுக்கூடம், நீச்சல்குளம், அடர்த்தியான கார்பெட் விரித்த வரவேற்பு அறை, நட்சத்திர விடுதியின் தரத்தில் இருக்கும் படுக்கையறை ஆகியவை இருந்தன.
இந்த டெர்மினலில் எங்கள் கப்பல்தான் முதல்முறையாக சரக்கு நிரப்பி செல்ல வந்ததால் கப்பல் கட்டும்முன்பே ட்ரோன் வைத்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்கள். கப்பல் இங்கே நின்றிருந்த இருநாளும் கப்பலை பார்க்க டெர்மினல் அதிகாரிகள், ஊழியர்கள் என எண்பதுபேருக்குமேல் வந்து சென்றனர்.
திரும்ப திரும்ப முப்பது முகங்களையே தினமும் பார்க்கும் எங்களுக்கு இதுவும் நன்றாகத்தான் இருந்தது.
கோஸ்டா அசுல் துறைமுகமும், அந்த மலையுச்சியில் இருக்கும் வாழும் வீடுகளும் என்றும் நினைவில் நிற்கும்.
நாஞ்சில் ஹமீது,
19 july 2026.
sunitashahul@gmail.com
![]() |
| பிரேக் வாட்டர் கல்லில் வாழும் பறவைகள் |
Sunday, 12 July 2026
விடுமுறை நாட்கள்
கப்பல் காரனுக்கு விடுமுறை உண்டா? அப்படி விடுமுறை கிடைத்தால் அந்த நாளில் அவன் எங்கு செல்வான்? என்ன செய்வான்? இது பலரும் கேட்பது.
இரண்டாயிரத்தி ஐந்தாம் ஆண்டு நான் முதல் கப்பலில் நான் இணைந்தபோது விடுமுறை என்பதே தெரியாது. அது துபாய் முதலாளிக்கு சொந்தமான கப்பல். துபாயில் ஏற்றிய சரக்குகளை, ஈராக்கில் இறக்குவோம்.
துறைமுகம் இல்லாமல் இருந்தால் அரிதாக வெள்ளிக்கிழமையில் அரைநாள் ஓய்வு சாத்தியம். அது கப்பலில் பிட்டராக இருக்கும் எனக்கும் பகல் பணியில் இருக்கும் ஓ எஸ், போசன் பத்தி சாபுக்கும் மட்டுமே கிடைக்கும். அப்போது ஏதேனும் எமேர்ஜென்சி வந்தால் உடனே பணிக்கு சென்றாக வேண்டும்.
வாட்ச் கீப்பர்கள் ஆகிய நேவிகேஷன் அதிகாரிகள், கப்பலோட்டும் மாலுமிகள், இயந்திர அறையிலுள்ள இஞ்சினியர்கள், அவர்களுக்கு உதவியாகவுள்ள மோட்டர்மேன்கள் குறைந்தது எட்டு மணிநேர பணி செய்தே ஆகவேண்டும்.
விடுமுறை கிடைத்தால் என்ன செய்வது. ஒன்றும் செய்ய முடியாது. படம் பார்த்து, துணிகள் துவைத்து, தூங்கி எழ வேண்டியதுதான். கடும்பணிக்குப்பின் உடலுக்கு ஓய்வு மட்டும் உறுதி.
கப்பலை விட்டு எங்கும் செல்ல முடியாது. ஓய்வாக இருக்கும்போது உணவுகூடத்துக்கும், அறைக்கும் தவிர நடமாட்டமே குறைந்துவிடும் நாட்கள்தான்.
தற்போது பணியிலிருக்கும் நிறுவனத்தில் 2006 ஆம் ஆண்டு பயிற்சி பிட்டராக இணைந்தேன். ஞாயிறுகளில் துறைமுகம் இல்லாமலிருந்தால் அரைநாள் ஓய்வு பகல் பணியாளர்களுக்கு கிடைக்கும். பயிற்சி பிட்டரான என்னை மூன்று மணிவரை வேலை செய்ய சொல்வார்கள். இரண்டு மணிநேரம் ஓய்வு அரிதாக கிடைக்கும். மற்ற நாட்களில் காலை ஆறு முதல் இரவு ஏழுமணி வரை எனக்கு வேலை தருவார்கள்.
பதவி உயர்வு பெற்றபின் பணி காலை எட்டுமுதல் ஐந்துவரை. ஞாயிறு அரைநாள் ஓய்வு உறுதியானது. புதிய கப்பல்கள் வந்தபோது இயந்திர அறை மாலை ஐந்துமணிக்கு மேல் ums (un manned ship) முறைகள் வந்தது. இயந்திரஅறை பணியாளர்களுக்கும் ஞாயிறு அரைநாள் ஓய்வு கிடைக்க துவங்கியது .
இந்தியரல்லாத உயரதிகாரிகள் கப்பலுக்கு வந்தபோது சனிக்கிழமை அரை நாள் ஓய்வும், ஞாயிறு பத்து மணிக்கு மேல் விடுமுறையும் சாத்தியமானது. அது துறைமுகங்கள் இல்லாமல் அவரச பணிகள் ஏதும் இல்லாமல் இருந்தால் மட்டுமே. புதிய கப்பல்களாக இருந்து நீண்ட பயணமாக இருந்தால் ஓய்வு சாத்தியமே.
2022 ஆண்டு முதல் முதலாக எல்என்ஜி கப்பலில் பணிக்கு வந்தேன். உயரதிகாரிகள் கொரிய,மலேசிய,இந்தோனேசியாவை சார்ந்தவர்கள். சனிக்கிழமை அரை நாளும், ஞாயிறுகளில் முழுநாளும் பெரும்பாலும் ஓய்வு உறுதி. பண்டிகை நாட்கள் மற்றும் ஞாயிறுகள் பணி நாட்களாக அமைந்து விட்டால் அதற்கு பகரமாக மற்றொரு நாள் விடுமுறை எடுப்பதில் வல்லவர்கள் கணக்கு தவறாது.
எனது முதல் எல்என்ஜி கப்பலில் பணியில் இணைந்த மறுநாள் பனாமாவில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது. நீராவி இஞ்சினில் ஏற்பட்ட பெரிய பழுதை நீக்க டெக்னீசியன்கள் கப்பலுக்கு குழுவாக வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு சனி,ஞாயிறு ஏதும் இல்லை எவரிடே மண்டே என்பாரகள்.
முதல் குழு இரண்டு மாதம் பணிசெய்துவிட்டு சென்றபோது சில உதிரி பாகங்களுக்காக நாங்கள் காத்திருந்தோம். அவை கப்பலுக்கு வந்தபின்தான் இரண்டாவது குழு வந்து பணியை துவங்கவேண்டும். இரண்டாம் இஞ்சினியர், முதன்மை இஞ்சினியரிடம் ஆறு வாரங்கள் தொடர்ந்து ஓய்வே இன்றி பணி செய்துள்ளோம் அதற்காக காம்பன்செட் செய்ய வேண்டுமென்றார். வெள்ளிக்கிழமை மதியத்திற்குபின் அரை நாள் ஓய்வு துவங்கி திங்கள்கிழமை காலை பணிக்கு வரவேண்டும். டூட்டி இஞ்சினியர், டூட்டி மோட்டேர்மேன் மட்டும் இயந்திர அறைக்கு சென்று தினமும் செய்தே ஆக வேண்டிய பணிகளை செய்து லாக் புக் எழுதிவிட்டு வருவார்கள்.
இருவராங்களுக்கு பின் பக்ரீத் பண்டிகை வந்தது அது ஞாயிறாக இருந்தது. மறுநாள் திங்கள்கிழமை பணிக்கு சென்றேன். இயந்திர கட்டுப்பாட்டு அறையில் மோட்டர்மேன் மட்டும் இருந்தார். இன்று விடுமுறை என்றார். பக்ரீத் ஞாயிறில் வந்துவிட்டதால் இன்று விடுமுறை என விளக்கம்சொன்னார். தொடர் விடுமுறையில் அறையில் அடைந்து ஒரு டீப் சோர்வுகுள்ளானேன். அந்த கப்பலில் நாங்கள் ஆறுபேர் மட்டுமே இந்தியர்கள் அதில் இருவரை உணவுகூடத்தில் மட்டுமே பார்க்க முடியும். அதிகமாக பேசும் எனக்கு பேச ஆள்கிடைக்காததால் தான் பிரச்னை என புரிந்தது.
கோவாவின் மோட்டேர்மேன் பெர்னாண்டோவிடம் சொன்னேன் என்னால் இனியும் அறையில் அடைந்துகிடக்க முடியாது என. விடுமுறை நாளில் பத்து மணிக்கு மேல் என் அறைக்கு வந்துவிடு என்றார்.
தற்போது இருக்கும் கப்பலும் எல்என்ஜி (LNG) கொரிய காப்டன் மற்றும் முதன்மை இஞ்சினியர். இந்தோனேசிய இரண்டாம் இஞ்சினியர், மலேசிய முதன்மை அதிகாரி. சனிக்கிழமை அரைநாள் ஓய்வு,ஞாயிறில் முழு நாள் ஓய்வு கட்டாயம். ஞாயிறு துறைமுகமாக இருந்தால் திங்கள்கிழமை நிச்சயம் ஓய்வு.
இத்தனை வருடங்களில் பண்டிகை நாட்கள் அரிதாக தெரியவரும். பெரும்பாலும் கப்பல் காரனுக்கு பண்டிகை நாட்கள் கடந்து செல்வதே தெரியாது. இங்கே முகரம் நாளன்று முழுநாள் ஓய்வு கிடைத்தது.
துறைமுகத்தில் கப்பல் நிற்கும்போது காஸ் டிப்பார்ட்மெண்ட், டெக் பணியாளர்களுக்கு கொஞ்சம் அதிக பணி இருக்கும். முதன்மை அதிகாரி, காஸ் இஞ்சினியர் தொடர்ந்து முப்பது மணிநேரம் வரை பணி செய்தே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஒவ்வொரு முறை துறைமுகம் விட்ட மறுநாள் முழுநாள் ஓய்வு என்பது இங்கே எழுதப்படாத விதி. கடந்த வாரம் பசுபிக் கடலில் மெக்ஸ்சிகோ நோக்கி பயணித்தோம் ஒரு நாள் பின்னோக்கி நகர்த்தவேண்டும். அது ஞாயிறாக இருக்கும்படி பார்த்துக்கொண்டனர். எனவே சனிக்கிழமை அரை நாள், முதல் ஞாயிறு, இரண்டாம் ஞாயிறு என இரண்டரை நாள் முழு ஓய்வு. ஓய்வு நாட்களில் பத்து மணி மீட்டிங்கில் கண்டிப்பாக முகம் காட்டி வரவேண்டும்.
இந்தவாரம் திங்கள் மற்றும் செய்வாய்க்கிழமை துறைமுகத்திலிருந்தோம். sire inspection எனும் ஆய்வும், மெக்ஸிகோ துறைமுக அதிகாரிகளின் ஆய்வும் நடந்தது. அதற்காக நாங்கள் கப்பலை தயார் செய்து வைத்திருந்தோம். இரு ஆய்வுகளிலும் தேறியதால். புதன், வியாழக்கிழமை என இரு தினங்கள் ஓய்வு.(2024 march built, இது இரண்டு ஆண்டுகளே ஆன புத்தம்புதிய கப்பல். பெரிதாக தயார் செய்ய ஒன்றுமேயில்லை. நன்றாக துடைத்து சுத்தமாக வைத்திருந்தாலே போதும்.)
வெள்ளிக்கிழமை காலை பணிக்கு சென்றேன். மீட் ரூம் கதவின் லாக் ரிப்பேர் கதவு திறக்கவில்லை. கழட்டி பார்த்தேன் அதில் செய்வதற்கு ஒன்றுமில்லை. ஸ்ப்ரே அடித்து துடைத்து தற்காலிகமாக திறக்கும்படி பொருத்திவிட்டு புதியது ஆர்டர் செய்யும்படி முதன்மை அதிகாரியிடம் சொன்னேன்.காஸ் பிளாண்டில் நீராவி வால்வ் ஒன்றில் காஸ்கட் மாற்றும் பணியில் காஸ் இஞ்சினியருக்கு கொஞ்சம் உதவினேன். வாழ்வை கழட்டி சுத்தம் செய்து புதிய காஸ்கட்டும் அவரே வெட்டி வைத்திருந்தார். கொண்டு போய் பொருத்தினேன்.
மூன்று மணிக்கு மேல் பணியாடை மாற்றும் இடத்தில் சலவை இயந்திரம் பொருத்த தண்ணீர் குழாயின் இணைப்புகளை தேடும்பணி அதோடு நாள் முடிந்தது.
நேற்று சனிக்கிழமை வேலைகளை பதினோரு மணிக்கே முடித்து விட்டேன். இன்றும் ஓய்வு. இந்த வாரத்தில் மூன்றை நாள் பணியும் மீதி ஓய்வுமாக பணியை விட ஓய்வே அதிகமாக இருந்தது.
பசுபிக் கடலில் கொரியாவை நோக்கிய பயணத்தில் இருக்கறோம். திங்கள் இரவு தூங்கி எழுகையில் புதன்கிழமையாக விடியும். அதிலும் இவ்வாரத்தில் ஒருநாள் காணமல் போகிறது.
இப்போதெலாம் ஓய்வு நாட்களில் அறைக்குள் அடைந்து கிடப்பதில் எந்த சிரமும் இல்லை குறைவாக உண்டு, மாலை நேர உடற்பயிற்சிக்குப்பின் எழுத்தும், வாசிப்பும் இனிமையாக கழிகிறது. ஊரிலிருந்து புறப்பட்டு ஆறு மாதங்களும் கப்பலுக்கு வந்து ஐந்து மாதங்கள் ஒருவாரமாகிறது.
நாஞ்சில் ஹமீது,
12july2026.
sunitashahul@gmail.com
Saturday, 27 June 2026
கடிகாரக் கணக்கு .
நேற்று தோழி கவிதாவிடம் போனில் பேசும்போது “ஷாகுல் எங்க இருக்கீங்க” என கேட்டாள்.
“கவிதா இதுதான் நடுக்கடல்ன்னு சொல்லலாம், கொரியாலருந்து மெக்ஸிகோக்கு பெயிட்டு இருக்கோம், நார்த் பசுபிக் கடல், ரொம்ப தூரத்துக்கு ஒண்ணுமேயில்ல, சுத்தி கடல் மட்டும்தான்” என்றேன்.
ஏப்ரல் நான்காம் தேதி கொரியா வந்தோம் அதன்பின் கப்பல் மூன்றுமுறை ஆஸ்திரேலியாவில் சரக்கு நிறைத்து அதை வியட்நாம், சீனாவின் ஹாங்காங் அருகிலுள்ள ஷுகாய் மற்றும் ஷென்சென், கொரியாவின் காங்க்வாங் துறைமுகங்களில் இறக்கினோம்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் அருகிலுள்ள கிளாஸ்டோனின் கடிகாரம் GMT+10 வியட்நாம் GMT+7 சீனா GMT+8 மற்றும் கொரியா GMT+9 கடந்த இரண்டரை மாதங்களில் கப்பலின் கடிகாரம் இரண்டு மணிநேரம் மட்டுமே முன்னேயும்,பின்னேயும் மாறிக்கொண்டிருந்தது. கொரியா, ஆஸ்திரேலியா பயணத்தில் பத்து நாளில் ஒருமணி நேரம் கடிகாரம் முன்,பின் சென்றால் அதுவும் ஓய்வு கிடைக்கும் நாளில் கடிகாரம் மாறினால் கப்பல்காரனுக்கு அது பொருட்டே இல்லை.
பிப்ரவரி ஆறாம் தேதி நான் அமெரிக்காவின் கார்பஸ் கிறிஸ்டியில் பணியில் இணைந்தபோது கடிகாரம் GMT-6. அங்கிருந்து பதினான்கு நாட்கள் பயணித்து பிரான்சை அடைந்தபோது GMT+1. இரு தினங்களுக்கு ஒரு மணிநேரம் என ஏழு மணிக்கூர் கப்பலின் கடிகாரம் முன்னே சென்றது. அங்கிருந்து நைஜீரியாவின் போனி சென்றோம். போனியிலும் அதே கடிகார நேரம் தான் ஆனால் இடையில் கிரேட் பிரிட்டனை தாண்டும்போது அங்குள்ள கடிகார நேரம் GMT+0 விற்கு கப்பலின் கடிகாரத்தை பின்னோக்கி நகர்த்தி, இரு தினங்களுக்கு பின் மீண்டும் முன்னோக்கி நகர்த்தும் விளையாட்டு வேண்டாம், “என் கப்பல் என் இஸ்டபடி” என காப்டன் லீ சூங் சொன்னார்.
பயணத்தில் அப்போது ஒருநாள் காலை உதய நேரம் 8மணி.45நிமிடமாக இருந்தது. ரமலான் நோன்பாக இருந்த அன்று காலை சகர் உணவாக ஆறேமுக்காலுக்கு ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டேன்.
(என்ன ரொம்ப குழம்புதோ? வாசிப்பவர்களை நான் எப்போதும் குழப்புவதில்லை அருகிலிருந்து கதை சொல்வதுபோல இருக்கிறது என நீங்களே பலமுறை சொல்லியுள்ளீர்கள்)
மார்ச் ஏழாம் தேதி நைஜீரியாவிலிருந்து புறப்பட்டபின் இருபத்தியைந்து நாட்கள் பயணம் கொரியாவிற்கு. மிக மெதுவாக எட்டு மணிநேரம் கப்பலின் கடிகாரம் முன்னே சென்றதில் உடல் பொறுத்துகொண்டது.
இப்போது செவ்வாய்க்கிழமை கொரியாவிலிருந்து புறப்பட்டோம் மெக்ஸிகோ நோக்கி. அங்கே கடிகார நேரம் GMT-6 ஜூலை ஆறாம்தேதி துறைமுகம் சென்றடைவோம். புதன்கிழமை முதல் கப்பலின் கடிகாராம் தினமும் ஒரு மணி நேரம் என முன்னே நகர்த்தப்படுகிறது. முதல் இரு தினங்கள் சிக்கலே இருக்காது.
பின்பு தூக்கம் வராது. நான்கு நாட்களில் நான்கு மணிநேரம் கடிகாரம் முன்னே சென்றால் மாலை ஆறு மணி இரவு பத்தாக இருக்கும். படுத்தால் தூக்கமே வராது. நள்ளிரவு இரண்டு மணிக்கு கண்ணயர்ந்தால் காலை ஐந்தரை ஆறு மணிக்கு கண் திறக்கவே முடியாது. எட்டு மணி காலை பணிக்கூட்டம் முடிந்தபின் கண் சொக்கி, உடல் கிறங்கடிக்கும்.
ஏழே காலுக்கு சாப்பிடும் காலை உணவு வயிற்றுக்கு நள்ளிரவாக இருக்கும். இந்த ரமலானுக்கு பிறகு இருவேளை மட்டுமே உண்கிறேன். காலையுணவு ஏழரை மணிக்குள், மதியம் சரியாக பன்னிரண்டு மணிக்கு லஞ்ச். மாலை ஐந்து மணிக்கு பணி முடிந்து,நீராடி உடற்பயிசிக்குப்பின், முந்தைய நாள் ஊற வைத்த ஐந்து பாதாம்பருப்பு, ஒரு கப் பால், தேனில் ஊற வைத்த பேரிட்சை, கருப்பு திராட்சை, அத்திப்பழம் அரை ஸ்பூன். இரவுகளில் உடல் லேசாக இருப்பதுடன். இரவு பத்துமுதல் காலை ஐந்துவரை நல்லுறக்கம்.
அதிகாலை எழுந்தபின் ஒரு கப் தண்ணீர் குடித்து பல் தேய்த்து, வயிறு சுத்தமானவுடன் மென் குளிர் நீரில் குளியல். உச்சியில் தண்ணீர் விழுந்து தலை குளிர்ந்தபின்தான் மண்டையே வேலை செய்யும்.
தொடர் கடிகார மாற்றத்தினால் மலம் கழிப்பதில் உள்ள சிரமத்தை புரிந்துகொள்ள பல ஆண்டுகள் ஆனது. காலையில் வயிறு சுத்தமாகமல் காலை உணவையும், மதிய உணவையும் தவிர்த்து போராடியிருக்கிறேன். 2010 இல் உடன் பணியிலிருந்த சமையல்காரர் பிரபீஸ் கிருஷ்ணா “கப்பலின்ற சமயம் கீ கொடுத்து மாற்றாம், சரீரம் அது போல பெட்டந்து மாறத்தில்லா, ஆகாரம் கழிக்காத இருந்தா கக்கூஸ் வரத்தில்லா” என.
அதன்பின் புரிந்துகொண்டேன் விரைவாக கடிகாரம் மாறியபின் உடல்கடிகாரம் மாறுவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும் என. காலையில் கக்கூசில் அமர்ந்து போராடுவதில்லை குளித்து, காலை, மதிய உணவுகளை எடுத்துக்கொண்டேன்.
கடிகாரம் மாறாத நாட்களில் எல்லாம் சரியாக இருக்கிறது. இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிறு, நாளை மறுநாளும் ஞாயிறாகவே இருக்கும். பதிமூன்று நாட்களில் கடிகாரம் பத்துமணிநேரம் முன்னே நகர்ந்து, ஒரு நாள் பின்னால் செல்லும்.
திரும்பி வருகையில் அதே போல் பதிமூன்று தினங்களில் இரவு பகலாகி ஒரு நாள் காணாமல் போய்விடும். அதாவது ஒரு மாதத்திற்குள்ளாக இருமுறை பகலிருந்து, இரவுக்கும் மீண்டும் இரவிலிருந்து, பகலுக்கும் மாறுவதில் கடிகாரத்திற்கு எந்த சேதமும் இல்லை.
சைனா, கொரியா, வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ஓடிக்கொண்டிருக்கையில் கடும் வெப்பமான நாட்களாக இருந்தது. ஜூன் மாதம் ஆஸ்திரேலியவில் குளிர்கால துவக்கம் என்றாலும் நாங்கள் சென்ற துறைமுகம் டார்வின் வடக்கு ஆஸ்திரேலியா, இந்தோனேசியாவின் அருகில் எனினும் டார்வினில் ரம்மியமான பருவ நிலை இருந்தது. சைனாவின் சூஹாய் துறைமுகப்பில் நின்ற நாளில்தான் கடும் வெப்பத்தில் மிகவும் களைத்துபோயிருந்தோம்.
வட பசுபிக் கடலில் நுழைந்தது முதல் வெப்பம் குறையத்தொடங்கியது வெள்ளிக்கிழமை பதிமூன்று டிகிரியை தொட்டது. ஜாக்கெட் அணிந்து சென்றோம் டெக்கில். வெண்சாம்பல் மேகங்கள் வானத்தில் அடர்த்தியாக நிறைந்து இருக்கிறது. சூரியக்கதிரின் சிறு பிசிறு கூட கீழே வராமல் மேகங்கள் அதன் வேலையை செய்கிறது.
வெள்ளிக்கிழமை இரவு படுக்கைக்கு போகும்முன் அறையின் வெப்பம் இருபத்தியொரு டிகிரியாக இருந்ததால் வெப்ப சட்டையை அணிந்து, கால்சட்டையை அருகில் வைத்துகொண்டு படுத்தேன். இரவில் குளிர்ந்தால் அணியலாமென. காலை விழித்தபோது அறையின் வெப்பம் பதினெட்டு டிகிரிக்கு குறைந்திருந்தது.
தொழுகை நேரம் நம்பவே முடியவில்லை. மாலை நேர மக்ரிப் இரவு ஒன்பதரைக்கு,இரவு நேர இஷா நள்ளிரவு 12.03 ஆகவும், அதிகாலை பஜர் தொழுகை 0328 வும் இருந்தது.
சனிக்கிழமை வேலைகளுக்காக டெக்கில் சென்றபோது குளிரை உணர்ந்தேன். ஒன்பது டிகிரி. கடிகார மாற்றத்தினால் சனி மாலை சுக்கிரி மீட்டிங் நடக்கும் இந்திய நேரம் ஐந்து மணி, எனக்கு இரவு பதினொன்றரை மணி. மீட்டிங் முடிந்து இரண்டு மணிக்கு தூங்க செல்கையில் அலமாரியிலிருந்து இரண்டாவது கம்பளி போர்வையை எடுத்துக்கொண்டேன். குளிருக்கான வெப்ப ஆடையை, காலுக்கும், உடலுக்கும் அணிந்து இரு கம்பளிகளுக்குள் நுழைந்துகொண்டேன்.
பாதங்கள் மட்டும் லேசாக குளிர்ச்சியாக இருந்தது. காலையில் விழிக்கும்போது, உடலின் வெப்பம் கம்பளிக்குலிருந்து வெளியேறாமல் இருந்ததால் கதகதப்பாக இருந்தது. அறையின் வெப்பம் பதினாறு டிகிரிக்கு கீழிறங்கியிருந்தது.
நாஞ்சில் ஹமீது,
28-JUNE- 2026.
sunitashahul@gmail.com
Friday, 26 June 2026
அஸ்தினாபுரம் – ஜோ.டி.குருஸ்
இருபத்தோரு ஆண்டுகளாக கப்பலில் பணிபுரிகிறேன். கப்பலை ஓட்டுவதுதான் எங்களின் வேலை.கப்பல் நிற்கக்கூடாது எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும். குறிப்பிட்ட நேரத்தில் துறைமுகம் சேர்ந்திருக்க வேண்டும்.
சரக்கு ஏற்றுதல் அல்லது இறக்குதல் முடிந்தபின் கட்டபட்டிருக்கும் கப்பல் உடனடியாக புறப்பட வேண்டும். கால தாமதமாகும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் கட்டணம் டாலர்களில் கண்டிப்பாக செலுத்தவேண்டும். கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிற்கும் இடத்திற்கும் கட்டணம் உண்டு. கப்பலை துறைமுகத்திலிருந்து அழைத்து செல்ல வரும் பைலட் (வழிகாட்டி) கப்பலுக்குள் வந்தபின் இஞ்சினில் கோளாறாகி தாமதித்தால், அப்போது கப்பலை கட்டியிழுத்து வெளியே கொண்டு செல்ல அணைந்த்திருக்கும் டக் போட், மூரிங் கேங் ஆகியோருக்கும் அதிக தொகை கொடுக்க வேண்டும்.
கப்பலின் முதலாளிக்கு தினசரி வாடகையாக பணம் கொடுப்பது, சார்ட்டர், அதாவது சரக்கை கையாளும் நிறுவனம். கப்பலின் இயந்திரங்களின் கோளாறினால் ஏற்படும் தாமதத்திற்கு சார்ட்டர் பொறுப்பேற்க மாட்டார். அது கப்பல் முதலாளி தலையில் விழும்.
இயந்திர கோளாறுக்கு காரணம் காட்டி இஞ்சினியர்,காப்டன் வேலையிழக்க நேரிடும்.
எங்களின் வேலை இயந்திரங்களுடன். ட்ரபுள் சூட்டிங் (troubleshootting) அதாவது diagnosing டாக்டர் நோயை கண்டுபிடிப்பது போல இயந்திரத்தின் பிரச்சனையை கண்டுபிடிக்க தெரிந்தவர் நல்ல இஞ்சினியர். இயந்திரத்தின் மொழியான, சூடு,அதிர்வு, சப்தம் ஆகியவற்றை கூர்ந்து கவனிக்கும் அனுபவம் உள்ள இஞ்சினியர்கள் இருந்தால் கப்பல் நிற்காமல் ஓடும்.
இயந்திரங்களுக்கு அரசியல் கிடையாது,லஞ்சம் கேட்காது, மதுப்பழக்கம்இல்லை, ரூம் போட்டு ஒரு பெண்ணையும் கூட்டி தா என கேட்கவே கேட்காது.
இந்த கப்பல் தொழில் சிறப்பாக நடக்க வேண்டுமெனில் கரையில் கப்பலை கரையணைய வைத்தல், குடியுரிமை சோதனை, சுங்கம், பைலட் அரேஞ்மெண்ட் என சிக்கலான நிறைய பணிகளை துறைமுகத்தில் செய்யவேண்டியிருக்கிறது.
அந்த ஷிப்பிங் ஏஜென்சி நிறுவனத்தில் வேலை செய்யும் அமுதன் தான் அஸ்தினாபுரம் கதையின் நாயகன்.
ஒவ்வொரு முறையும் கப்பல்களை கரையனைய வைத்து சரக்கு நிறைத்து அல்லது சரக்கு இறக்கி பாதுகாப்பாக கப்பலை வெளியே அனுப்பும்முன் அமுதன் சந்திக்கும் சிக்கல்கள், தலைமை அலுவலகம் தரும் அழுத்தம், சகஅதிகாரிகள், ஊழியர்களின் ஒத்துழையாமை, அவர்களுக்குள் இருக்கும் அரசியல், துறைமுக அதிகாரிகள், காவலர்கள், வாகன ஓட்டிகள், சரக்கு ஏற்றும் இறக்கும் தொழிலாளர்கள், போட்டி நிறுவனங்கள் என எந்த நிமிடத்திலும் நினைத்தே பார்க்க முடியாத பிரச்சனைகள் எழக்கூடும்.
![]() |
| நூல் ஆசிரியர் ஜோ டி குரூஸ் |
இவை அனைத்தையும் தனது அனுபவம், தொலைநோக்குடன் கூடிய பார்வை, அதிகாரிகளுடன் பணிவாக பேசுதல் என மிக திறமையாக செய்கிறார் அமுதன்.
துறைமுக தலைமை பொறுப்புக்கு வரும் அதிகாரிகள் அதற்குரிய அறிவும், தொலைநோக்கு பார்வையும் இல்லாததால் உள்ளூர் துறைமுகங்களுக்கு வரவேண்டிய வருமானம் வெளிநாட்டிற்கு செல்வதை (சிங்கப்பூர் துறைமுகம்) அத்தியாயம் இருபத்தி ஆறில் விரிவாக விவரிக்கிறார் எழுத்தாளர் ஜோ டி குருஸ். அரபிக்கடலில் குஜராத் முதல் வங்காள விரிகுடா கல்கத்தா வரை மிக நீண்ட கடற்கரையை கொண்ட இந்தியா கப்பல் தொழில் ஜொலித்து, பல ஆயிரம் கோடிகள் அந்நிய செலவாணியை ஈர்க்க தவறியதை சொல்வதும் நேர்த்தி.
தான் செய்யும் பணியில் தன்னை முழுமையாக அர்பணித்து கொள்வதால் அமுதனுக்கு ஓய்வு நாளிலும் பணி செய்ய நேர்கிறது. நள்ளிரவு, அதிகாலை என எந்த நேரத்திலும் துறைமுகத்தில் ஏற்படும் விபத்து, அலுவலக்கத்தில் நடக்கும் குளறுபடி என அமுதனை போனில் அழைக்கிறார்கள். பிறரால் சரி செய்யமுடியாத எல்லா சிக்கல்களையும் தனது விவேக புத்தியால் தீர்த்து கப்பல்களை உரிய நேரத்தில் அவரால் அனுப்பிவைக்க முடிகிறது.
ஆமந்துறை கடற்கரை கிராமத்தில் பிறந்த அமுதன் சென்னையில் முனைவர் ஆய்வில் இருக்கும்போது வழிகாட்டியால் பல ஆண்டு இழுத்தடிக்கப்பட்டு, அவரின் வீட்டு வேலை, அவரின் கீப்புக்கும் பணிவிடை செய்தும் பலனில்லாமல் ஆய்வை முடிக்காமலே வெளியேறுகிறார்.
கட்டிய மனைவியை பிரிகிறார், பெற்ற தாயால், உடன்பிறந்த சகோதரனால் வஞ்சிக்கபடும் அமுதன். தாய் எஸ்கலின், இப்படியும் ஒரு தாய் இருப்பாளா? என அதிர்ச்சியடைய வைக்கிறது. கணவன் அமுதன் அருகில் இருக்கும்போதே, மனைவி புனிதாவிடம் தாலியை கழற்றி வாங்கும் காட்சி.
வாழ்வை துவங்கியதிலிருந்து ஒவ்வொரு நாளும் பிரச்சனையை சந்திக்கிறார். கொஞ்சம் நிம்மதி முதல் திருமண பிரச்சனைக்களுக்கிடையில் இரண்டாவதாக திருமணம் செய்யும் தாய், தந்தையை இழந்த ஆனந்தி மற்றும் அவரது குழந்தைகள் எழிலன், அமலா மட்டுமே.
பெற்ற தாய், உடன் பிறந்தவர்கள், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் என கூடவே இருக்கும் மனிதர்களின் குரோதம், கசப்பு, தந்திரம், சூழ்ச்சியை அமுதனின் மனக்குமுறல்களாக கொட்டபட்டுள்ளது.
பெரும்பாலானோர் அறியாத கப்பல் தொழிலின் ஒரு பக்கமான ஏஜென்சியின் பங்கு என்ன என்பதை மிக விரிவாக சொல்கிறது. ஒரு துறைமுகம் எப்படி இருக்க வேண்டும். அதில் இன்னன்ன வசதிகள் இருந்தால், அதிகாரிகள் எப்படி இருந்தால் துறைமுகமும் கப்பல் தொழிலும் சிறக்கும் என்பதை துல்லியமாக சொல்லப்பட்டுள்ளது.
என்னை போன்ற கப்பலில் வேலை செய்பவர்களுக்கு பணியில் இணைந்துவிட்டால் கப்பல் நின்றாலும், ஓடினாலும் சம்பளம் உண்டு. ஆனால் கப்பல்களில் சரக்கை, நிறைத்து உரிய இடத்தில் சரியான நேரத்தில் இறக்கினால் மட்டுமே கப்பல் முதலாளிகளுக்கும் அது சார்ந்து வாழும் பல கோடி பேருக்கும் வருமானம்.
கடல் வாணிபம் லாபத்தை கொட்டி கொடுப்பது மட்டுமல்ல, மிககுறைந்த செலவில் பொருட்களை கொண்டு செல்ல முடிவதும் நீர்வழிப் போக்குவரத்து மட்டுமே. அதில் சிங்கப்பூர், ஐக்கிய அமீரகம் போன்றவை வெற்றிபெற்ற நாடுகள். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த தவறிய நாடு இந்தியா என்பதும் இந்த நாவலை வாசித்ததில் புரிந்தது.
விறுவிறுப்பான நடையில் கப்பல் போக்குவரத்தின் ஒரு பக்கத்தை வாசகர் புரியும் மொழியில் சொல்லியிருகிறார். அவர் அந்த துறையில்தான் பணிபுரிகிறார் அந்த அனுபவத்தாலேயே மிக விரிவாக இதில் சொல்ல முடிந்திருக்கிறது.
நான் பிறந்த கிராமமான மணவாளகுறிச்சி நாவலில் இருமுறை வருவதும் மகிழ்ச்சியை தந்தது.
நான் பணிபுரியும் கப்பல் துறையில் நான் அறியாத மறுபக்கத்தை அஸ்தினாபுரம் நாவல் அனுபவமாக தந்தது.
நன்றியும், வாழ்த்துகளும் ஜோ.டி.குருஸ் ஸார்.
நாஞ்சில் ஹமீது.
(கப்பல் காரன்)
























