Wednesday, 18 February 2026

லைலத்துல் கத்ர். கடிதம். டெய்சி

   



லைலத்துல் கத்ர் இரவு

 லைலத்துல் கத்ர். இஸ்லாமிய நம்பிக்கைகளையும், வழிபாடுகளையும் எப்போதுமே அழகாய் எடுத்துச்சொல்வீங்க. ஒரு உண்மையான ஆன்மீகவாதி எந்த மதத்தில் இருந்தாலும் ஒரேபோல்தான் இருப்பாங்க. இப்ப வீடியோக்களில் ட்ரென்ட்டா இருப்பது இப்தார் உணவுப் பெட்டியை பிரித்து வைத்து சாப்பிடுவதுதான். நிறைய உணவகங்களில் அப்படி ஒரு ஏற்பாடு இருக்கிறது. பெரிய பெட்டிகளில் தனித்தனியான பிரிவுகளில் கொஞ்சம் கொஞ்சமாய் உணவு வகைகள் வைத்து அழகாய் பேக் செய்யப்பட்டு மினிமம் 500 ரூபாயில் இருந்து அதிகபட்சம் எவ்ளோ வேண்டுமானாலும் இருக்கலாம். ஒவ்வொருநாளும் ஒருத்தர் 500 ரூபாய் செலவுசெய்து நோன்பை முடிப்பது எவ்வளவு பேருக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. குடும்பம் முழுவதற்கும் நல்ல உணவை சமைத்தால்கூட அவ்வளவு ஆகுமா தெரியவில்லை. ஆனால் எல்லாரும் உணவைப்பிரித்து இது நல்லாருக்கு அது நல்லால்ல என்று சொல்லிக்கொண்டு சாப்பிட்டு வறுமையில் இருக்கும் மற்றவர்களை பெருமூச்சுவிட வைத்து இன்னும் பாவத்தைத்தான் சேர்த்துக்கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது.


டெய்ஸி. 



சகோதரி டெய்சி மிகச்சரியாக புரிந்து இருக்கிறார்.நோன்பின் மாண்பு வழக்கத்திற்கு மாறாக சீர்கெட்டு போய் இருப்பதை பல வகைகளில் உணர முடிகிறது. அனைத்து கடமைகளும் இறைவனுக்காகவே என்றாலும், நோன்பை அல்லாஹ் "அது எனக்கானது, அதற்கான கூலியை நான் நேரடியாக வழங்குவேன் என்கிறான்". நோன்பின் நோக்கங்களில் ஒன்று, உணவு இல்லாமல் வறுமையில் வாழ்பவர்களின் பசியை உணர்வது. இஃப்தார் நேரத்தில் அருந்தும் தண்ணிரில் கிடைக்கும் பரவசம், மகிழ்ச்சி மூலம், உண்ணக்கிடைக்காத ஒரு மனிதனுக்கு, ஒரு குவளை தண்ணீர் அல்லது ஒரு பிடி உணவு எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்று உணர வைக்கும். ஆனால்,  நோன்பு காலங்களில் இஃப்தார் ஒரு புது வடிவம் எடுத்து இருக்கிறது. இது நோன்பை வைப்பதன் நோக்கத்தையே சிதைக்கிறது. சகோதரி டெய்சிக்கு இருக்கும் தெளிவை இறைவன் இது போன்ற செயல்களில் ஈடுபடும் நோன்பாளிகளுக்கு வழங்க வேண்டும் . இறைவன் போதுமானவன்.


ஷேக் முகமது புருனே. 




முற்றிலும் உண்மை. ரமலானின் ஸஹர் மற்றும் நோன்பு திறப்பதை உணவு திருவிழா போன்று ஆக்கிவிட்டார்கள்.

 இது நபிவழிக்கு முற்றிலும் மாற்றமானது. எளிமையான உணவைக் கொண்டு நோன்பு வைக்க வேண்டும் நோன்பை திறக்க வேண்டும். ஆன்மீகத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் அதுவே நபியவர்கள் காட்டித் தந்த முறை நமக்கு என்றும் பயனளிக்கும் முறை.


வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை என்று குர்ஆன் கூறுகிறது.


நியாஸ், நாகர்கோவில்.




வியாபார நோக்கம் விளம்பரத்திற்காக ஏதேதோ செய்கிறார்கள்.

நோன்பு திறக்க பேக்கேஜ்கள் முறையை உணவகங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன

ஹைதராபாத் போன்ற ஊர்களில் இப்தார்க்கு வழங்கப்படும் ஹலீம் எனும் உணவு நோன்பாளி செல்வதற்கு முன் முடிந்து விடுகிறது(அவ்வளவு புக்கிங்). இன்றைய சமூகம் அனைத்தையும் சமூக ஊடகங்களில் வீடியோவாக வெளியிட நினைக்கிறது. நோன்பின் நன்மைகளை பெற ஏக இறைவன் அவர்களை மனதிருந்த செய்யட்டும்.


நாஞ்சில் ஹமீது. 

18 Feb 2025

 கடந்த ஆண்டு ரமானில் எழுதிய  பதிவுகளை வாசித்த சகோதரி டெய்சி நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் இப்தார் நோன்பு திறக்கும் வேளையில் உணவை வீண் விரயம் செய்வதை பற்றி குமுறியிருந்தார். 

  நோன்பிருக்கும் இஸ்லாமிய சமூகம் சிந்திக்க வேண்டிய  விஷயம். அதை நினைவூட்டுவதற்கு மீண்டும் அந்த பதிவை இங்கே பகிர்கிறேன்.

மறு பிரசுரம் 

 முதல் பிரசுரம் மார்ச் 24,2025.

ரமலான் நோன்பு துவக்கம் 2026

 


   தொடர்ந்து நான்காவது ஆண்டாக இம்முறையும் ரமலான் நோன்பு காலத்தில் கப்பலில் இருக்கிறேன்.கப்பலுக்கு வந்து இன்றோடு பதிமூன்று நாட்கள் ஆகிறது.

   அமெரிக்காவில் புறப்பட்டு பிரான்சை நோக்கி பயணிக்கிறோம். இன்னும் சில தினங்கள் பயணம் இருக்கிறது துறைமுகம் சென்றடைய. சவூதிஅரேபியா,பஹ்ரைன்,குவைத் போன்ற அரபுநாடுகளில் பிறை தென்பட்ட அறிவிப்பு வெளியானதால் பதினெட்டாம் தேதி புதன்கிழமை புனித ரமலான் மாதத்தின் முதல் நோன்பை துவக்கினர்.

  மலேசியா,புருனே,இந்தோனேசியா,இந்தியாவில் 19 FEB 2026 வியாழக்கிழமை முதல் நோன்பு துவங்குகிறது.இது இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளின் ஒன்றாகும் (ஈமான்கொள்ளுதல் (விசுவாசம்), தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ்)

இல்லாமல் பசிக்கின்ற ஏழையின் பசியறிய இருப்பவனை பசிக்கவைக்கும் தத்துவம்தான் நோன்பு. உணவு பொருட்கள் எல்லாம் இருந்தாலும் உண்ணாமல் இருப்பது. அதிகாலை சூரிய உதயத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்புவரை உண்ணலாம் பருகலாம். அது ஸகர் நேரம் எனப்படும். அதிகாலை தொழுகைக்காக பாங்கு சொன்னபின் அந்தியில் சூரியன் மறையும்வரை சொட்டு தண்ணீர் கூட குடிக்ககூடாது. ஒரு நோன்பாளி எப்படி இருந்தார் என்பது அவருக்கும் இறைவனுக்குமான நேரடி தொடர்பு.

ரமலான் மாத முதல்பிறை கண்டது முதல் ஷவ்வால் மாத முதல்பிறை தென்படுவது வரை ஒரு மாதம் 29 அல்லது 30 நாட்கள் நோன்பிருக்க வேண்டும். இந்த காலத்தில் தனது வருமானத்தில் 2.5% ஏழைகளுக்கும், இல்லாதவர்களுக்கும் கொடுக்கவேண்டும். இருப்பில் இருக்கும் தங்கம், வெள்ளி, ரொக்க பணத்திற்கும் கணக்கிட்டு கொடுப்பது கட்டாயம்.

நோன்பிருப்பவர்கள் தனது கண்களை பேணிக்கொள்வதோடு மட்டுமல்லாமல், நாவையும் காத்து கொள்ளவேண்டும். கடும்சொல் பேசுவதோ, பிறர் மனம் நோகும்படியாக நடந்துகொள்ளவோ கூடாது. இந்த மாதத்தில் செய்யும் வணக்க வழிபாடுகளுக்கும், தர்மங்களுக்கும் கூலியை பலமடங்காக இறைவன் திருப்பி தருவான் எனபதால் அதிக நேரம் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு, இருக்கும் பொருளில் இருந்து தாராளமாக இல்லாதவர்களுக்கு கொடுத்து ரமலான் முடிவதற்குள் அதிகமான நன்மையை தேடிக்கொள்ளவேண்டும்.

ரமலானில் நோன்பு நோற்று தொழுகையும், வணக்கங்களும், இறைவனிடம் பாவ மன்னிப்பும் கேட்காதவர் பகலில் பசித்திருந்ததை தவிர வேறு நன்மை ஏதும் இல்லை என அறிஞர்கள் சொல்கிறார்கள்.

கர்ப்பிணிகள், பாலுட்டும் தாய்மார்கள், நோயாளிகள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், நீண்ட பயணம் செய்பவர்களுக்கு (தற்போதைய பயணங்கள் சொகுசு பயணங்கள் ஆகும் அதனால் நோன்பு வைக்க முடியும்) நோன்பு கட்டாயம் இல்லை. நோன்பு வைக்காத ஒருவர் ஒரு நோன்பாளியின் முன் தானும் நோன்பு வைத்திருப்பதை போல் நடிக்கவேண்டும். நோன்பாளியின் முன் உண்ணவும், பருகவும் கூடாது.

உண்மையில் நோன்பிருப்பது நல்ல உடல் ஆரோக்கியத்தை தரும். நோன்பிருக்கும் போது வயிறு, குடல், நுரையீரல், கல்லீரல், கணையம் என அனைத்து உள் உறுப்புகளுக்கும் நல்ல ஓய்வு கிடைக்கிறது.

முதலில் உடலின் கல்லீரலில் சேமித்து வைத்துள்ள கிளைக்கோஜென் சேமிப்பில் உடல் இயங்கும். பின்னர் உடலின் கொழுப்பை உடல் இயக்கத்திற்கு எடுத்துக் கொள்வதால் உடல் எடை குறையும். கொலஸ்ட்ரால் அளவு குறையும். நீரழிவு நோய் கட்டுக்குள் வரும் இப்படி பல நன்மைகள். இப்படி ஒவ்வொரு உறுப்பும் கல்லீரல், வயிறு குடல் என நன்றாக ஓய்வு கிடைப்பதால் ஒரு மாத முடிவில் உடல் புத்துணர்ச்சியோடு இழந்த ஆரோக்கியத்தை மீட்டுக் கொள்ள நோன்பு ஒரு நல்வாய்ப்பு.



கப்பல்காரர்களுக்கு நோன்பு மிக கடினம். டெக்கில் அதிகாரிகளாக பணிபுரிபவர்களுக்கு பிரச்னை இல்லை. டெக் பணியாளர் என்றால் கடும் கோடையில் இயலாது. இயந்திர பணியாளர்களுக்கு நோன்பு வைப்பது  இயலாதது என்பேன்.இயந்திரஅறையின் கடும் வெப்பம், மாறிக்கொண்டேயிருக்கும் கப்பலின் கடிகாரம் காரணமாக இயந்திர பணியாளர்கள் நோன்பு வைப்பது சிரமம்.

நான் இப்போது டெக்கில் காஸ் பிட்டராக இருக்கிறேன். அதிக உடல் உழைப்பு இல்லை. துறைமுகங்களில் இருக்கும்போது பன்னிரெண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக பணி இருக்கும். கப்பல் பயணத்தில் இருக்கும்போது அதிக சிரமம் இல்லை.

   அதுவும் இப்போது உலகின் பெரும்பகுதி குளிர்காலம்.பகல் பொழுது மிகக்குறைவு. லண்டன் கடிகார நேரத்தில் இருக்கும் எனக்கு நாளை காலை ஏழு மணி இருபத்தியிரண்டு நிமிடங்களுக்கு சூரிய உதயம். அதிகாலை ஐந்து மணி நாற்பது நிமிடங்கள் வரை உண்ணலாம். மாலை சூரியன் மறைவது ஆறரை மணியாக இருக்கும். பதிமூன்று மணிநேரத்திற்கும் குறைவான நேரம் நோன்பு நோக்கவேண்டும்.

 பூமத்தியரேகையை ஒட்டிய சிங்கப்பூர்,இந்தியா,இலங்கை,பனமாபோன்ற நாடுகளில் எப்போதும் உத்தேசமாக பதிமூன்றரை மணிநேரம் நோன்பு இருக்கும் நேரம்.  இப்போது கோடையாக இருக்கும் ஆஸ்திரேலியாவில்  பதினான்கரை மணிநேரம் நோன்பிருக்க வேண்டும்.

  கடுங்கோடையில் இருபது மணிநேரம்வரை  நோன்பாக இருக்கவேண்டிய நாடுகள் சில உள்ளது. நார்வேயில் இரவு பதினோரு மணிக்கு சூரியன் அஸ்தமித்து அதிகாலை நான்கு மணிக்கு உதயமாகும் நாட்கள் இருக்கிறது.

  இந்த கப்பலில் என்னுடன் பணிபுரியும் காஸ் இஞ்சினியர் அஸீம் மலேசியாவை சார்ந்தவர்,இந்தோனேசிய மூன்றாம் இஞ்சினியர் ஆர்.டி,நான்காம் இஞ்சினியர் ஜெப்ரி நோன்பு வைப்பதாக சொளியுள்ளனர். ஆர்,டி ஒருநாள் முன்னதாகவே நோன்புவைத்துவிட்டார்.






  சத்தீஸ்கரை சார்ந்த மூன்றாம் அதிகாரி தேஜஸ் தினமும் சூரியஉதய,அஸ்தமன நேரத்தை கணக்கிட்டு தருவதாக சொன்னார். சமையல்காரர் கல்கத்தாவின் சந்தீப் எனக்கு ஒரு கிலோ பேரிச்சைபழம் தந்தார். இரவுணவுக்கு சமைக்கும் அரிசி சாதம் ஹாட் பாக்ஸில் தினமும் வைப்பதாக சொல்லியுள்ளார். நாளை அதிகாலை சகர்உணவுக்கு மதியமுள்ள பருப்பு குழம்பும்,சாலடும் வைத்துள்ளேன்.

    அதிகாலை நான்கரைக்கு எழுந்து ஐந்து மணிக்கு உண்ண சென்றால் போதுமானது.குளிர் அடுத்த இரு வாரங்களுக்கு இந்த குளிர் பிரேதேசத்தில் பயணத்தில் இருப்பதால் அதிக கடினமில்லை.இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகத புதிய கப்பல் இது. அதிக கடின பணியும் இல்லை.

வீட்டில் சுனிதாவும் மகன்கள் இருவரும் நோன்பு இருப்பதாக சொன்னார்கள்.  இந்த ஆண்டின் எல்லா நோன்புகளையும் நோற்பதற்கு உரிய சக்தியை எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக. ஆமீன்.

   அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.

நாஞ்சில் ஹமீது,

18 FEB 2026.

sunitashahul@gmail.com




Sunday, 15 February 2026

அயன் பாக்ஸ்,- கடிதம் கணேஷ்

 அயன் பாக்ஸ்




வணக்கம் அண்ணா.


கொஞ்ச நேரம் முன்பு தான் ‘அயன் பாக்ஸ்’ பதிவைப் படித்தேன். சிறுகதைக்குறிய நேர்த்தியுடன் மிக அருமையாக இருந்தது.  


Forest Gump படத்தில்,  Forest ஓடிக்கொண்டே இருக்கும் போது பின்புலத்தில் வியட்நாம் போர், ஹிப்பி கலாச்சரம், அமெரிக்க அரசியல் மாற்றம் என ஏதேதோ நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். அதைப்போல ஒரு அயன் பாக்ஸை பின்புலமாக வைத்து - 90களின் வேலை இல்லா திண்டாட்டம், கல்ஃப் மோகம், 2000 களின் ஈராக் போர், மணமாகி,  தனிக்குடித்தனம், குழந்தைகள் பிறந்து, அந்த குழந்தைகளும் அந்த அயன் பாக்ஸை உபயோகிக்க ஆரம்பித்தது வரை ஒரு பத்து இருபது வருட கால ஓட்டத்தை அநாயசமாக தொட்டுச் சென்றிருக்கீர்கள்.


“கோளிக்க பீய வாரி போடசொன்னாலும் நான் ரெடி,ஒரு விசா கிட்டுனா போரும் என பாஸ்போர்ட் எடுத்து எப்படியாவது வெளிநாடு சென்றுவிட்டால் போதும் எனும் கனவில் இளைஞர்கள் இருந்த காலம்”


“ஒன்னுக்கும் களியாது கப்பல்ல எப்டி தான் வேலக்கி வெசிருக்கானுவளோ,நான் மட்டும் செகண்ட் இன்ஜினியரா இருந்தேன்.முதல்ல உம்மள தான் டிஸ்மிஸ் பண்ணுவேன்”  - படிக்கும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை. உங்களைப் போலவே அண்ணியாரும் நக்கலுக்கும் கிண்டலுக்கும் சற்றும் குறைந்தவரல்ல என்று எண்ணிக் கொண்டேன்.


சமீபத்தில் நான் மிகவும் ரசித்த எழுத்துக்களில் இதுவும் ஒன்று. 


நன்றி அண்ணா. 

கணேஷ்,

டாலஸ்.

Tuesday, 10 February 2026

எழுத்து - தியானம் கணேஷ் கடிதம்

 வணக்கம் அண்ணா.

     ‘தினமும் எழுதுங்கள். எழுதுவதும் ஒருவகை தியானம் போல’ என்று நீங்கள் நேற்று சொன்னது மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கவே, எழுதலாம் என்று இரவு உட்கார்ந்து எழுத ஆரம்பிக்கும் போது தான் நீங்கள் சொன்னதின் உள்ளர்த்தம் புரிந்தது. 

    எழுத எழுத உள் மனதில் இருந்து எண்ணங்கள் எழும்பி வருகிறது. அந்த எண்ணங்களை கவனித்து அதை ஒருமுகப்படுத்தி எழுத்தில் கொண்டு வருவது கிட்டத்தட்ட தியானமே தான்! 

     ஆசிரியர் ஜெயமோகன் இம்முறை டாலஸ் வந்திருந்தபோது, கேள்வி பதில் நேரத்தின் போது ஒரு அன்பர் கேட்டார் - வெண்முரசு போன்ற பெரிய படைப்புகளாகட்டும், கோவிட் நேரத்து நான் ஸ்டாப் சிறுகதைகளாகட்டும், எது உங்களை எழுத வைக்கிறது என்று. அதற்கு அவர் பதிலளிக்கும் போது,  எழுத என்று உட்காரும் போது, கதாபாத்திரங்களாகட்டும், கதைக்களனாகட்டும், ஒரு கட்டத்திற்கு பிறகு அதுவே உங்களை ஆட்கொண்டு உங்களை எழுத வைக்கும் என்று. அது எவ்வளவு உண்மை!

      என் மும்பை நாட்களைப் பற்றி எழுதலாம் என்று ஆரம்பித்துள்ளேன். எழுத எழுத அடிமனதிலிருந்து ஏதேதோ எண்ணங்கள் - நான் மறக்க நினைத்த, மறந்து விட்டேன் என்று என்னை நானே ஏமாற்றிக்கொண்ட, கசப்பான என ஏதேதோ எண்ணங்கள் மேலெழுந்து வருகிறது. ஒருவேளை அதை எல்லாம் எழுத்தாக, சிறு கதையாகவோ, நாவலாக மாற்றினால் அந்த கசப்பை மாற்ற முடியும் என நினைக்கிறேன். 

சற்று முன்னர் தான் உங்களின் ‘அன்னம்’ சிறுகதை படித்தேன். அதில் வரும் அஹமது கதாபாத்திரம் கிட்டதட்ட மும்பையில் என் நாட்களைப் போலிருந்தது. 

அடுத்த முறை சந்திக்கும் போது இன்னும் விரிவாகப் பேச வேண்டும். 

அன்புடன்,

கணேஷ்,

டாலஸ்.

  


     கணேஷ் நலம் தானே டாலஸில் எதிர்பாராவிதமாக உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. மனம் மனதிலிருப்பது மூளைக்கு எட்டி எழுத்தாக மாறுவது தியானம் தான். ஆரம்பத்தில் மனதில் நிறைய இருக்கும் எழுத்தாக வராது. சிறிது நாட்கள் எழுதினாலே உங்கள் மொழி அமைந்து எழுத்து வந்துவிடும்.

     2003 – 2004 ஆம் ஆண்டுகளில் ஈராக்கில் இருந்தேன். 2016 இல் எனது பிளாக்கில் ஈராக் போர்முனை அனுபவங்கள் எழுதும்போது என்னிடம் எந்த குறிப்பும் கிடையாது. எல்லாம் மனதிலிருந்து கோர்வையாக எழுந்து வந்தது. அப்போது ஆசிரியர் ஜெயமோகனிடம் கேட்டேன். “சும்மா இருந்தால் நினைவு வராது எழுத என அமர்ந்துவிட்டால் தானே வரும்” என்றார்.

   எழுதுவதில் ஒரு நன்மை நீங்கள் சொன்ன கசப்புகளை கொட்டியவர்களை மன்னித்து நீங்கள் விடுதலை அடைய முடியும். எழுத எழுத ஒரு ‘ரிலாக்ஸ்’ ஐ உணர்வீர்கள்.நீண்ட காலம் சுமந்து அலைந்ததை இறக்கிவைத்துவிட்டு நீங்கள் இலகுவாக முடியும்.

    எனது பத்தாம் வகுப்பு பதிவை எழுதியபின்னர்தான் உணர்ந்தேன் எனது பத்தாம் வகுப்பு தோல்விக்கு காரணம் காதர் மற்றும் நாசர் என எண்ணிகொண்டிருந்தேன். அவர்கள் இருவரையும் மன்னித்து விட்டேன். முப்பத்திரண்டு ஆண்டுகளுகளாக அவர்களை சுமந்து அலைந்திருக்கிறேன்.

  அன்னம் கதையை வாசித்தபின் உங்கள் மும்பை வாழ்க்கையும் அப்படி இருந்ததாக சொன்னீர்கள்.இன்றும் மும்பையில் வேலைதேடும் இளைஞர்களில் நிச்சயமாக பல அஹமதுகள் இருப்பார்கள்.

 எழுதுங்கள் உங்கள் கதையை. வாழ்த்துக்கள்.

 கப்பலில் வேலை கிடைக்காமல் போனது பற்றி சொன்னீர்கள். அது நல்லது தானே.பொழுதணையும்போது வீட்டுக்கு வந்து மனைவி,மகனுடன் தினமும்  சேர்ந்து வாழும் கொடுப்பினை உங்களுக்கு கிடைத்துள்ளது.

நாஞ்சில் ஹமீது.


எனது பத்தாம் வகுப்பு 1

எனது பத்தாம் வகுப்பு 2

எனது பத்தாம் வகுப்பு 3

எனது பத்தாம் வகுப்பு 4 



Monday, 9 February 2026

பசுபிக் சக்சஸ் (பணியில் இணைந்தேன்)

 


ஹூஸ்டனுக்கு வந்து 21 நாட்கள் விடுதியில் தங்கியிருந்தது முடிவுக்கு வந்தது. ஆறாம் தேதி காலை டெக்சாசிலிலுள்ள கார்பஸ் கிறிஸ்டி எனும் துறைமுகத்துக்கு கப்பல் வருவது உறுதியானது.

  ஆறாம் தேதி காலை எங்களை தயாராக இருக்க சொன்னார்கள்.ஹூஸ்டனிலிருந்து இருநூற்றி இருபது மைல் தொலைவு, நான்கு மணிநேர பயணம்.

  அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து ஐந்துமணி தாண்டி ஐந்து நிமிடங்கள் இருக்கும்போது கீழே வந்தபோது இஞ்சின் கேடட் அமோ மற்றும் டுடர் வண்டியில் பைகளை ஏற்றி வைத்திருந்தனர்.


  அறைசாவியை கொடுத்துவிட்டு வண்டியின் முன் இருக்கையில் அமர்ந்துகொண்டேன்.காலையிலேயே சாலையில் நிறைய வாகனங்கள் சென்று கொண்டே இருந்தது. போக்குவரத்து நெரிசல் சற்றும் இல்லை இங்குள்ள சாலையமைப்பு அப்படி.

 ஓட்டுனரிடம் கேட்டேன் எப்போது போய் சேர்வோம் என.இன்னுமொருவரை வேறொரு விடுதியிலிருந்து அழைக்கவேண்டும் என்றார். எங்கே என சொல்லவேயில்லை. ஒருமணி நேர பயணத்திற்குப்பின் ஆறு வழி சாலை மற்றும் பாலங்கள் அனைத்தும் விலகி நான்கு வழி சாலைக்கு வந்தோம் வாகனங்களும் வெகுவாக குறைந்தது. கட்டிடங்களே இல்லாமல் இருபுறம் வெறும் தரையும் குறைவான மரங்களும் தென்பட்டன.




  கிராம பகுதியை அடைந்ததாக உணர்ந்தேன்.ஒதுவுடன் இருந்ததால்.அதிகாலை பஜ்ர் தொழுகையை காரில் இருந்தபடியே தொழுதேன்.ஏழுமணிக்கு ஒரு பெட்ரோல் பம்ம்பில் காரை நிறுத்தினார்.வேறொரு வண்டி தயாராக இருந்தது அதில் பைகளை மாற்றிகொண்டோம்.




இரண்டாவது வண்டி ஓட்டுனரிடம் எப்போது போய் சேர்வோம் எனக்கேட்டேன். நாற்பது நிமிடங்கள் என்றார். சாலை இன்னும் சுருங்கி நம்மூர் போல ஒற்றை சாலையாக இரண்டு வாகனங்கள் செல்லும் அளவில் ஆகியது. ஆனாலும் விசாலமான சாலை. எட்டரைக்கு அழகிய கடற்கரை முன்பு இருந்த ஹாலிடே இன் விடுதியில் முன் நிறுத்தினார் காரை.





  மூன்றரை மணிநேர பயணம் தெரியவேயில்லை விடுதிக்குள் சென்று நாங்கள் மூவரும் சிறுநீர் கழித்து வந்தோம். காலை உணவு குறித்து காரோட்டியிடம் கேட்டேன். எங்கள் முகவருடன் போனில் பேசிவிட்டு எதுவுமே சொல்லவில்லை. காலை ஐந்துமணிக்கே வண்டியில் ஏறிவிட்டோம் என நான் சொன்னதையும் சொன்னார்.



  ஹாலிடே இன் விடுதியின் முன் அழகிய கடற்கரை,மென் குளிரில் சாலையை தாண்டி போனேன். மெக்ஸிகோ இங்கிருந்து மூன்று மணிநேர பயணம்தான். சில தினங்களுக்கு முன்பே கார்பஸ் கிறிஸ்டியில் நம்மை தங்கவைத்திருக்கலாம் என பேசிக்கொண்டோம்.



500ஆண்டுகளுக்கு முன் இங்கே அடித்த புயலில் சிக்கி 400 பேருக்கு மேல் இறந்ததையு பற்றி ஒரு நினைவு குறிப்பு உள்ளது.

   இந்தோனேசியாவை சார்ந்த இரண்டாம் இஞ்சினியர் பைகளுடன் வந்து காரில் எறிகொண்டார்.அடுத்த இருபது நிமிடத்தில் கார்பஸ் கிரிஸ்டி துறைமுக வாயிலை அடைந்தோம்.

   வாயில் காவலரிடம் நால்வர் கப்பலுக்கு போக வந்திருக்கிறார்கள் எனச்சொன்னார். காரோட்டியிடம் அடையாள அட்டையை வாங்கி பார்த்தபின் எங்களது பாஸ்போர்ட்டில் இருக்கும் பெயருடன் கையில் இருந்த பெயர் பட்டியலுடன் ஒத்துபார்த்தார்.

   பணியில் இணைய வருபவர்களின் பெயர் பட்டியலை முகவர் முன்பே துறைமுக அதிகாரிகளுக்கு அனுப்பஈடுவார்கள்.காரோட்டி வீட்டுக்கு செல்பவர்களை அழைத்துசெல்ல மூன்று மணிக்கு வருவதாக சொன்னார். அவருக்கு ஒரு அடையாள அட்டையையும்,வாகனத்துக்கு ஒன்றும் அளித்தார் அங்கிருந்த வேறொரு பெண்மணி.

  கார் முன்னால் சென்றதும் அங்கே நின்றுகொண்டிருந்த இருவரில் ஒருவர் நாய் ஒன்றை கையில் பிடித்திருந்தார்.எங்களை கீழே இறங்க சொல்லி பைகளை வரிசையாக அடுக்க சொன்னார். நாயை அருகில் கொண்டுவந்தார். முகர்ந்துபார்துவிட்டு முன்னால் சென்றது. கைப்பைகளை மட்டும் திறந்துகாட்ட சொல்லி பார்த்தார்கள்.



  அதற்கடுத்திருந்த வாயிலில் மீண்டும் ஆவணங்கள் சோதித்தபின் உள்ளே போக சொன்னார். வழக்கமாக இங்கே இறங்கி நடந்து செல்ல சொல்வார்கள். இன்று தான் அனுமதிக்கிறார்கள் பிரசிடென்டுக்கு தரப்படும் முன்னுரிமை இது என சொன்னார் காரோட்டி.

  கப்பலுக்கு  மிக அருகில் சென்றோம்.உயரமான படிகளில் ஒவ்வொரு பையாக சுமந்து கப்பலில் வைத்தோம். காலை ஒன்பதுமணிக்கு கப்பல் கட்டப்பட்டதாக சொன்னார்கள்.காங்க்வேயில் இருந்த பவனும்,கமலும் “வெல்கம் பிட்டர் சாப்” என வரவேற்றார்கள்.



 பத்து மணிக்கு பிஸ்மில்லாஹ் என சொல்லி கப்பலில் பாதம் பதித்தேன்.இந்தியாவிலிருந்து புறப்பட்டு 22 நாள் காத்திருப்புக்குப்பின்(இதுதான் எனக்கு நீண்ட காத்திருப்பு)குடியிருப்பில் நுழைந்ததும் இரண்டாம் இஞ்சினியர் மன்ஜீத் கட்டியணைத்து வரவேற்றார். ஊருக்கு செல்லும் உற்சாகத்திலிருந்தார்.

எனக்கு தந்த அறையில் பைகளை வைத்துவிட்டு அடுமனை சென்று சமையல்காரர் பெங்காளியான சந்தீப் மண்டல்,பிலிப்பைன்சைசார்ந்த இரண்டாம் குக் ஜான் மற்றும் மெஸ் மென் கமல் தண்டேலை பார்த்தேன். இரண்டு முட்டையும் ஒரு சுலைமானியும் குடித்துவிட்டு அறைக்கு வந்தபோது எனக்கான பணியாடை,காலனி,பாதுகாப்பு தொப்பி தயாராக இருந்தது.

  ஆடை மாற்றி காஸ் பிட்டர் அப்சலை பார்த்தேன்.. பன்னிரெண்டரை மணிவரை காஸ் பிளானட்,கார்கோ ஸ்டோர்,டெக் வோர்க்ஷாப்,இயந்திர அறையை காட்டித்தந்தார்.இயந்திர அறையில் கொரியாவின் முதன்மை இஞ்சினியர் கிம் “ஷாகுல் நீயா வருக”என கைகுலுக்கினார்.



  உணவுண்ண சென்றபோது அவர் விடைபெற்றார்.மூன்று மணிக்கு செல்ல வேண்டும். இரவு ஏழு மணி விமானம்.ஒரு மணிக்கு சரக்கு நிறைக்கும் குழாய்களை பொருத்தும் டீம் வந்தது. காஸ் இஞ்சிநியர் மலேசியாவின் அஸிமுடன்  நானும் இருந்தேன்.

 

 நள்ளிரவில் தான் சரக்கு நிறைக்கும் பணி துவங்கும் ஓய்வு எடுத்துகொள்ளுமாறு முதன்மை அதிகாரி மலேசிய தமிழரான திவ்யன் மகாலிங்கம் சொன்னார். மூன்று ஆண்டுகளுக்கு சிங்கப்பூர் எனேர்ஜியில் அவருடன் பணிபுரிந்துள்ளேன்.

  நான்கு முதல் ஐந்தரை வரை நல்ல தூக்கம். லேசான குளிர் இருந்தது. இரவுணவாக சப்பாத்தியும் மட்டன் கறியும் உண்டேன். பத்து மணிக்குமேல் படுத்துவிட்டேன். அதிகாலை இரண்டே காலுக்கு போனில் அழைத்தார் அஸீம் “கம் டூ சி சி ஆர்”(கார்கோ கண்ட்ரோல் ரூம்)

 இப்படியாக நெடும் பயணத்துக்குப்பின் பசுபிக் சக்கஸ் கப்பலில் பணியில் இணைந்தேன். ஏழு மாத பணி ஒப்பந்தம் ஒரு மாதம் ஹோட்டலிலேயே முடிந்துவிட்டது என சத்தீஸ்கர் மூன்றாம் அதிகாரி தேஜஸ் கூறினான்.

நாஞ்சில் ஹமீது,

09 feb 2026.

sunitashahul@gmail.com

Thursday, 5 February 2026

டாலஸ்புரம் 3

 






     இங்கே கார் இல்லாமல் எதுவுமே நடக்காது. பொது போக்குவரத்து மிகக்குறைவு. கிடைத்த பொது போக்குவரத்தில் ஏறி கடைசி நிறுத்தத்தில் இறங்கினாலும் போக வேண்டிய வீடு,அலுவலலகம் வெகுதூரத்தில் இருக்கும். அதனால் வணிக வளாகம் மற்றும்,கோயில்,பூங்கா எதுவாக இருந்தாலும் கார் நிறுத்துமிடம் அதைவிட மூன்றிலிருந்து நான்கு பங்கு பெரிதாக இருப்பது அவசியம். அமெரிக்கா மிகப்பெரிய பரந்த,விரிந்த நிலப்பரப்பை ஒரு கண்டமே நாடாக இருப்பதால் முக்கிய நகரங்களை தவிர இடத்திற்கு பஞ்சமேயில்லை.

   ஞாயிறு மற்றும் தைப்பூசம் ஆதலால் அனுமார் கோயிலில் கார்நிறுத்தம் நிரம்பி வழிந்தது. சுற்றி,சுற்றி தூரத்தில் ஒரு இடத்தை கண்டு காரை நிறுத்தினோம். கோயிலில் சிறப்பு பூஜை நடந்துகொண்டிருந்தது ஆங்கிலத்தில். பெரும் திரள் அதில் அமர்திருந்தது. சாமி கும்பிட வருபவர்கள் அவர்களை இடையூறு செய்யாதவாறு வந்து,செல்லும்படி ஏற்பாடும்இருந்தது.



  இந்தியாவை போலவே மிக அழகும்,நேர்த்தியுடனும் கட்டபட்டிருந்தது. ஹிந்தி,தெலுங்கு பேச்சொலிகள் அதிகமாக கேட்டது எனக்கு.அங்கிருந்த தூண் ஒன்றில் வேலை,விசாவுக்கு இங்கே,மற்றொரு தூணில், பைனான்ஸ்,பணம் இங்கே என எழுதபட்டிருந்ததை கண்டு செந்திலிடம் கேட்டேன். அந்த தூண் முழுவதும் பச்சை கயிற்றால் சுற்றிபச்சையாக மாறியிருந்தது. அதில் எழுதியிருப்பவை நிறைவேற பதினைந்து டாலரில் பச்சை கயிறு வாங்கி சுற்றினால் போதுமாம். கயிறு சுற்றுபவரின் பணத்தேவை நிறைவேறுமோ இல்லையோ, பொருளாதரத்தில் அனுமன் சாமி விரைவில் பணக்காரர் ஆகிவிடுவது உண்மை. உண்மையான பக்தியுடன் கோயிலை சுற்றிவிட்டு பக்தர்களின் பிராசதர்த்திற்கு அரிசி பை,வேறு பொருட்கள் என கோயிலுக்கு கொடுத்து செல்பவர்களும் இருந்தனர்.

அமெரிக்க பள்ளிவாசல் ஒன்றில் தொழுதுவிட வேண்டும் என எண்ணியிருந்தேன். செந்தில் பள்ளிவாசல் இருந்த இடத்தை கண்டுபிடித்து சொல்லும்போது இஷா தொழுகை நெருங்கிவிட்டது.ஜமாஅத் கிடைக்காது எனபதால் இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் எனும் நம்பிக்கையுடன். வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.



   சுலைமானி குடித்து கொண்டு பன்னிரண்டு மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். இரவுணவாக இட்லி வீட்டிலேயே செய்து தந்தார் செந்திலின் மனைவி சியாமளா.காலை ஏழரை  மணிக்கே மகள் சாதனா பள்ளி செல்ல தயாராகிவிட்டாள். நான் குளித்து வெளியே வரும்போது மகன் சித்தார்த் பள்ளிக்கு சென்றுவிட்டான். காலை உணவுக்குப்பின் எட்டரை மணிக்கு நாங்கள் புறப்பட்டோம். செந்தில் ஆசிரியர் ஜெயமோகனின் ஸ்டோரீஸ் ஆப் த ட்ரூ நூலை பரிசளித்தார்.




 ஒன்பதரை மணிக்கு பிளானோவிலிருந்து எனக்கு பஸ்.திங்கள்கிழமை காலை போக்குவரத்து நெரிசலாக இருக்கும் என்பதால் சீக்கிரமே செல்வோம் என செந்தில் சொன்னார்.



   பேருந்து புறப்படும் இடத்திற்கு பத்துநிமிடங்கள் முன்பே வந்துவிட்டோம்.அது ஒரு பெட்ரோல் பம்ப். அங்கிருந்து ஆஸ்டின் மற்றும் ஹூஸ்டனுக்கு பேருந்துகள் செல்கிறது. வழியில் எங்கும் நிற்காமல் வண்டி விரைவாக சென்றது. முதல் நிறுத்தம் வூட்லண்ட்ஸ். ஹூஸ்டன் டவுண்டவுன் வரும்முன்பே பேருந்து இணையத்தில் எனக்கான ஊபர் டாக்ஸி பதிவுசெய்து விட்டேன். பத்தே நிமிடத்தில் டாக்ஸி வந்தது.அடுத்த பதினைந்து நிமிடத்தில் விடுதியறைக்கு வந்துவிட்டேன். லுகர் தொழுது முடித்தபோது நல்ல பசி. செந்தில் காலையில் எனக்கு இட்லி சட்னி,பொடி ஒரு டப்பாவில் அடைத்து தரும்போது வேண்டாம் என்றேன். நல்ல பசியில் மீதமில்லாமல் அனைத்தையும் உண்டு முடித்தேன். என் பெயர் எழுதியது எனக்கு கிடைத்தே ஆகும் என்பதில் மிகுந்த நம்பிக்கையுள்ளவன் நான்.

   நீண்ட நாட்களாக ஹூஸ்டன் விடுதியிலேயே  இருந்த எனக்கு இந்த  நான்கு நாட்கள் டாலஸ் போய்வந்த பயணம் பெரும் அகமகிழ்வையும் உற்சாகத்தையும் தந்தது.

   தெலுங்கு பேசும் விடுதிமேலாளர் டாலஸ் எப்படி இருந்தது எனக்கேட்டார். அதிகமான இந்தியர்கள் (33%)அங்கே வாழ்கிறார்கள் என்றபோது. அதனால்தான் அவ்வூர் ‘டாலஸ்புரம்’ என்றார்.

நாஞ்சில் ஹமீது,

05feb2026.

sunitashahul@gmail.com

டாலஸ் கணேஷ் கடிதம்

 


கடந்த வார இறுதியில் டாலஸில் சந்தித்த நண்பர் அவரது வலை தளத்தில் எழுதியிருக்கிறார்.

தற்கால தமிழில் ஷாகுல் அளவிற்கு கப்பல் வாழ்க்கையை வேறு யாரும் பதிவு செய்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அவரின் கப்பல்காரனின் டைரிக் குறிப்புகள், தமிழில் ஒரு தொழில் சார்ந்த அனுபவ தொகுப்புகளில் முக்கியமான ஒன்று. விரைவில் அவர் அதை புத்தக வடிவில் வெளியிட வாழ்த்துக்கள். 

https://suvadugal.com/2026/01/31/%e0%ae%b7%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b9%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/