Thursday, 10 September 2026

விடுமுறை மீண்டும் உறுதியாதல்

 


 

      காலை பணிகூட்டத்தில் முதன்மை இஞ்சினியர் “நான் இ மெயில் அனுப்பியிருக்கேன், என்ன பதில் வருகிறது என பார்ப்போம்” என்றார். காப்டனின் மின்னஞ்சலையும் கட்டினார். எங்களை சிங்கையிலிருந்து விடுவிக்க வேண்டி மும்பைக்கு அனுப்பிய கடிதம் அது.

    முந்தைய இரவு தூத்துக்குடி மோட்டர்மேன் லீமனை அழைத்தோம். வைப்பர் வருவது ரத்தாகிவிட்டது. நாளை கம்பனி உன்னை அழைக்கலாம் தயாராக இரு என்றோம். காஸ் பிட்டரும் வரும் தகவல் கிடைத்தால் சொல்லுங்க என்றோம்.



 மோட்டர்மேன் லீமன் இரு மாதத்திற்கு முன்பே இந்த கப்பலுக்கு வருவதாக இருந்தது. அவரது அமெரிக்க விசா காலாவதியாக ஆறு மாதமே இருந்ததால் அவரை அமெரிக்க விசா விண்ணப்பிக்க அறிவுறுத்தியது. அதனால் அவருக்கு பதிலாக வேறு மோட்டேர்மேன் வந்தார். 

இம்முறை கப்பலில் இருக்கும் வைப்பரை பதவி உயர்வு கொடுப்பதால் இந்த கப்பலுக்காக காத்திருந்த லீமேன் வரமுடியாமல் ஆனது. வைப்பர் வருவது ரத்தானபின் அதற்கு பதிலாக காத்திருக்கும் மோட்டேர்மேனை அனுப்புகிறோம், வைப்பர் அதே பதவியில் நீடிக்கட்டும் என பதிலளிக்க கோரி காப்டனுக்கு மும்பை அலுவலகம் அனுப்பிய மின்னஞ்சலுக்கு, காப்டன் மோட்டேர்மேனும், காஸ் பிட்டரும் பணியை இன்னும் மூன்று வாரம் தொடர்வார்கள் என எங்களிடம் கேட்காமலே பதிலளித்துவிட்டார். 

   நாங்கள் முந்தைய நாள் இரவு காப்டனை சந்தித்தபின் லீமேன் கப்பலுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக நாங்கள் நம்பியதால் அவனுக்கு போன் பண்ணினோம். அதில் நாங்கள் ஊர் செல்லும் தகவலும் எங்களுக்கு கிடைக்கலாம்.

 காலை பதினோரு மணிக்கு லீமேன் வாட்சப்பில் குறுஞ்செய்தி அனுப்பினார். அண்ணா நான் வருகிறேன் என. காலை முதல் மின்னஞ்சல்கள் அங்கும் இங்கும் போய்கொண்டிருந்ததால் காப்டன் அதற்கு பதிலளிக்க கணினியின் முன் அமர்ந்திருந்தார். மறுநாள் சிங்கையில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்துவது தொடர்பான ஏற்பாடுகளும் என காப்டன் கொஞ்சம் பிஸி.

  மதியம் இரண்டரை மணிக்கு முதன்மை இஞ்சினியர் சொன்னார் “நீ ஊருக்கு போகிறாய்” என. சஜித் கான் எனும் கல்கத்தாவை சார்ந்த காஸ் பிட்டரை மும்பை அலுவலகம் தயார் செய்திருந்தது. வேறொரு விசயமாக பத்து நாட்களுக்குமுன் அவரை நான் தொடர்புகொண்டிருந்தேன். அவரை போனில் அழைத்து அவர் வருகையை உறுதிசெய்தேன்.

“ஷாகுல் எமெர்ஜென்சி ஜாயனிங் என்றார்கள்” எனச்சொன்னார். வழக்கமாக கப்பல் சிங்கைக்கு வந்து அதிகபட்சமாக இருபத்தி நான்கு மணிநேரத்தில் புறப்படும். இம்முறை நான்கு நாட்கள் நங்கூரம் பாய்ச்சி நிற்பதால் இது சாத்தியமானது.

 மாலை மூன்றரை மணிக்கு சிங்கப்பூர் ப்ரீ அரைவல் கூட்டத்தில் சிங்கையில் நிற்கையில் செய்ய வேண்டிய பணிகள். போய்சேரும் நேரம், புறப்படும் நேரம், ஊருக்கு செல்பவர்கள் பெயர்கள், வருபவர்களின் பெயர்கள் அனைத்தும் விவாதிக்கபட்டது. 

 நானும், ரபீக்கும் ஊருக்கு செல்வது பின்னர் உறுதியான பின் சொல்வதாக சொன்னார்கள். ஊருக்கு செல்பவர்களின் கணக்குகள் முடிக்கப்பட்டன. எங்கள் இருவரையும் காத்திருக்க சொன்னார்கள். 

 ஒருநாள் காத்திருந்தால் உறுதியான தகவல் கிடைக்குமென நம்பினோம். இரவில் நல்லுறக்கம். ஊருக்கு செல்லும்முன் நான்கைந்து இரவுகள் தூக்கமே இல்லாமல் முதுகுவலியும் அதைத்தொடர்ந்து நீண்ட பயணமும், ஜெட் லாக் எல்லாம் இணைந்து வீடு சென்று சேர்ந்து நான்கு நாட்களுக்கு பின்புதான் உடல் இயல்புக்கு திரும்பும்.

 கடந்த ஆறு வருடங்களாக ஊருக்கு செல்லும் முன் நல்லுறக்கம். இரவில் பன்னிரெண்டு மணிக்கு தூங்கியதால் காலை தமாதமாக ஆறேகாலுக்கு விழித்தேன். ஊருக்கு செல்வது பாதி உறுதியாகியிருந்தது. எங்களது மாற்று பணியாளர்கள் பன்னிரெண்டாம் தேதி கப்பலுக்கு வருவார்கள். எங்களை பதிமூன்றாம் தேதி அனுப்புவதாக காப்டன் சொன்னார். 

 நேற்று காலை பத்து மணிக்கு கப்பல் சிங்கையில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது. பன்னிரெண்டு மணிக்கு பத்தி சாப் தாமசும், வார்த்சிலா டெக்னீசியன்கள் ஆறுபேரும் கப்பலுக்கு வந்தனர். முதன்மை அதிகாரி துவைத்த துணியை காய வைக்கும் ட்ரையர் ஒன்றை பொருத்தச்சொன்னார்.

 காப்டன் ஆறாம் தேதியே பொறுப்பை புதிய காப்டனிடம் கொடுத்துவிட்டு பயணியாக மட்டுமே கப்பலில் சுற்றுவதால் அவருக்கு எந்த பொறுப்பும் இல்லை. ஆறாம் தேதியே எங்களுது சிடிசியில் பதினோராம் தேதி முத்திரை பதித்ததால் அதை வெட்டி திருத்தினால் பிரச்னை வரும் என மூன்றாம் அதிகாரி சொன்னார். 



 அதை முதன்மை இஞ்சினியரிடம் சொன்னோம். அவர் பதினோராம் தேதி மாற்று பணியாளர்கள் வருவதற்கு முன்பே எங்களை மற்றவர்களுடன் அனுப்ப ஒப்புதலளித்தார். காப்டனை சந்தித்தோம் சிடிசி விசயத்தை சொல்லி நாளை எங்களை அனுப்பி விடுங்கள் என கோரினோம். “ஒய் காப்டன் ரைட் சோ ஏற்லி என கடிந்து கொண்டவர். இமிகிரேசனுக்கு நேரம் இல்லை முடியவே முடியாது என மறுத்து விட்டார். அவசரமாக சில மின்னஞ்சல்கள் அனுப்பவேண்டும். ஆங்கிலம் சரியாக வராத கொரிய காப்டன் அவர்.

காப்டன் முதன்மை இஞ்சினியரை சந்தித்தபின் எங்களிடம் “டோல்த் ரீலிவர்வில் ஆன் போர்டு, யூ கைஸ் லீவ் ஆன் போர்ட்டின், ஐ வில் மேக் இட் தட்” என்றார். அதாவது சிடிசியில் பதினொன்றை பதினாலாக எளிதாக மாற்றிவிடலாம் என மூன்றாம் அதிகாரி சொன்ன யோசனையை காப்டன் ஒத்துகொண்டார். எங்களது விமான சீட்டுக்கள் ரத்து செய்ய சொல்லி புதிய டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய மின்னஞ்சல் அனுப்பினார்.

  எனது ரீலிவர் சஜித் கான் பதினொன்றாம் தேதி விமானம் ஏறுவதாக உறுதியாக சொன்னார். மாலை நான்கரைக்கு மூன்றாம் அதிகாரி சபரி பிரிட்ஜில் வருமாறு அழைத்தார். அரை மணிநேரம் கழிந்து வருகிறேன் என்றேன். முதன்மை அதிகாரி பதினான்காம் தேதிவரை எனது ஓவர்டைம் ஷீட் செய்து கையொப்பம் வாங்கினார். 

இயந்திர அறையில் ஸ்பானர் ஒன்றை தேடி தருமாறு இரண்டாம் இஞ்சினியர் அலெக்ஸ் வேண்டினார். எங்களது காஸ் வொர்க்ஷாப்பில் அது கிடைகவில்லை. இயந்திர அறைக்கு சென்றுவிட்டு லிப்ட்டில் ஏறும்போது முதன்மை இஞ்சினியர். நீ நாளை ஊருக்கு போகிறாய் என்றார். 

 பிரிட்ஜில் சென்றபோது எனது கணக்குகள் முழுமையாக தீர்க்கப்பட்டு கையொப்பம் வாங்கினார். கப்பலிலிருந்து பெற வேண்டிய மற்றும் நான் தயார் செய்து கொடுக்க வேண்டிய ஆவணங்கள் கொடுத்தேன். 

இரவு எனது சிடிசி மற்றும் பாஸ்போர்ட்டை கையில் தந்துவிட்டு. கட்டியணைத்து துவாவில் மறக்க வேண்டாம் என சொல்லி விடை கொடுத்தார் மூன்றாம் அதிகாரி அசத், டிசம்பரில் மும்பையில் நடக்கவிருக்கும் திருமணத்துக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்.

  இன்று காலை பணிகூட்டத்திற்குப்பின் ஊருக்கு செல்பவர்கள் அறைக்கு செல்லுங்கள் என்றார். இந்த கட்டுரையை எழுதி முடித்தேன்.இன்றும், நாளையும் சிங்கையில் நண்பர்களை சந்தித்துவிட்டு நாளை இரவு எட்டரை மணிக்கு விமானம் ஏற வேண்டும். 

 நாஞ்சில் ஹமீது,

11 sep 2026.

Sunitashahul@gmail.com

தள்ளிபோன விடுமுறை

 


   கப்பல் காரனின் பணி ஒப்பந்தம் முடிந்தபின் அவனது விடுமுறை உறுதியாகி அவன் வீட்டுக்கு வருவான் என நீங்கள் எண்ணலாம்.

  கப்பலில் பணியில் இணையும்போது அவர்களது ரேங்க்கை பொறுத்து பணி ஒப்பந்தம் வழங்கப்படும். டாப் பைவில் வரும் காப்டன், முதன்மை இஞ்சினியர், முதன்மை அதிகாரி, இரண்டாம் இஞ்சினியர் மற்றும் எலக்ட்ரிகல் ஆபிசருக்கு நான்கு மாதம், ஜூனியர் ஆபிசர் எனப்படும் இரண்டாம் அதிகாரி, மூன்றாம் அதிகாரி, மூன்றாம், நான்காம் இன்ஜினியர்களுக்கு ஆறு மாதம். 

 பெட்டிஆபிசர் கேட்டகரியில் வரும் பிட்டர், குக் ஆகியோருக்கு ஏழு மாதமும் மற்ற அனைத்து பணியாளர்களுக்கும் ஒன்பது மாதங்கள் பணி ஒப்பந்தம். அனைவரின் ஒப்பந்தத்திலும் +1/-1 மாதமாக இருக்கும்.

  பணி ஒப்பந்தம் முடியும் ஒரு மாதத்துக்கு முன்னே விடுமுறை விண்ணப்பம் துறை தலைவரிடம் ஒப்புதல் கையெழுத்து பெற்று காப்டனுக்கு அனுப்பினால் அவர் அதை மலேசிய அலுவலகத்துக்கு அனுப்பிவைப்பார்.(நார்வே (தலைமை அலுவலகம்) மலேசியா, சிங்கப்பூர், கொரியா, அமெரிக்கா துபாய் நாடுகளில் முக்கிய அலுவலகமும், பிலிப்பைன்ஸ், இந்தியா, இலங்கை, உக்ரைன்,ரஷ்யா, பாகிஸ்தான் என நாற்பது நாடுகளில் கிளை அலுவலகமும் உள்ளது) விடுமுறை ஒப்பந்தத்தில் ப்ளீஸ் ரீலிவ் மீ இன் கன்வீநியன்ட் போர்ட் என உத்தேசமாகத்தான் ஒரு தேதியை குறிப்பிட முடியும்.

 மலேசிய அலுவலகம் மாற்று பணியாளரை தேர்வு செய்ய கிளை அலுவலங்களுக்கு உத்தரவு அனுப்பும். கிளை அலுவலகம் தேர்வு செய்யும் நபரை மலேசிய அலுவலகம் அல்லது கப்பல் ஓனர் ஒப்புதல் பெறவேண்டியிருக்கும். 

 ஒப்பதல் வந்தபின் தேர்வான பணியாளர் மருத்துவ சோதனைக்கு செல்வார். மருத்துவ சோதனையில் தேர்ச்சி அடையவில்லை என்றால் கப்பலேற முடியாது. மெடிக்கல் முடித்தபின் கப்பல் கரைவராமல் ஒரு மாதம் வரை நீண்டு கப்பலேறுவது தாமதமானால் மீண்டும் ஆல்ஹகால் சோதனை நடக்கும். அதில் தேறமால் கப்பலேற முடியாமல் போனவர்கள் உண்டு.சில நாடுகளுக்கு விசா தேவைப்படும். அதில் ஏதாவது குளறுபடி ஏற்பட்டால் கப்பலேறமுடியாது. 

 இவை அனைத்துக்கும் பிறகு விமான டிக்கெட் பெற்றபின் இமிக்ரேஷன் அனுமதித்தால்தான் பயணிக்க முடியும். கப்பல் நிற்கும் துறைமுகத்தில் கப்பல் புறப்படும் முன் சென்று சேர்வது மிக முக்கியம். ஏதாவது காராணத்தால் விமானம் தாமதமாகி அல்லது விமானத்தை தவறவிட்டால் கப்பலேற முடியாமல் போகும் வாய்ப்பு எப்போதும் சாத்தியமே..

 கப்பல் காரனின் விடுமுறை எப்போது உறுதியாகும் என்றால் மாற்று பணியாள் கப்பலுக்கு வந்தபின் கப்பலிலிருந்து இறங்கி விமான நிலையம் சென்று தாய்நாட்டில் இறங்கி வீட்டுக்கு சென்றபின்தான். காப்டன் ஒருவர் பிலிப்பைன்ஸின் மணிலாவில் இறங்கியபோது உடனே அழைப்பு அவசரம் பத்து நாளில் விடுவிக்கிறோம் என சொல்லி வீட்டுக்கு போகாமலே அடுத்த விமானத்தில் கப்பலை நோக்கி பயணித்ததுண்டு. 

இம்முறை நான் விடுமுறை விண்ணப்பம் அளிக்காமலே ஏழு மாத பணி நிறைவில் ஆகஸ்ட் பதிமூன்றாம் தேதி கொரியாவிலிருந்து ஊருக்கு செல்வதாக தகவல் வந்து இரண்டு நாட்களுக்குப்பின் ரத்தாகிபோனது. சைனாவில் கப்பலிலிருந்து இறங்க முடியாது என டெர்மினல் சொல்லியது. காப்டன் மற்றும் இரண்டாம் இஞ்சிநியருக்கான மாற்று பணியாளர்கள் சீனாவில் இரண்டாம்தேதி கப்பலுக்கு வந்தார்கள்.

  இந்தோனேசியாவில் பதிமூன்றாம் தேதி இறங்கி பதினான்காம் தேதிக்கு மலேசியா வழியாக திருவனந்தபுரம் செல்ல விமான சீட்டும் பதிவு செய்தார் காப்டன்.

 சீனாவில் இருந்து புறப்பட்ட மறுநாள் நான்காம் தேதி பதினாறாம் தேதி இந்தோனேசியா சென்றால் போதும் என தகவல் வந்தது. கப்பலில் முக்கிய இயந்திரத்தின் சில பரமாரிப்பு பணிகளுக்காக கப்பலை சிங்கையில் நான்கு நாட்கள் நிறுத்த முதன்மை இஞ்சினியர் அனுமதி கேட்டார். 

 கப்பல் முதலாளி மற்றும் சரக்கை கையாளும் நிறுவனம் ஒத்துகொண்டதால். சிங்கையில் பத்தாம் தேதி முதல் பதினான்காம் தேதி வரை நிறுத்துவது முடிவானது.

 கடந்த ஞாயிறு மதியம் காப்டன் எங்கள் சிடிசியில் பதினொன்றாம் தேதி என முத்திரை பதித்து எல்லா ஆவணங்களையும் தந்தார். இரவில் சிங்கையிலிருந்து பன்னிரெண்டாம் தேதி புறப்படும் விமானத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்டையும் தந்தார். பாஸ்போர்ட் கப்பலிலிருந்து இறங்கும்போது தருவார்கள். 

வெள்ளிக்கிழமை இரவும், சனிக்கிழமை பகல் மூன்று மணிவரை சிங்கப்பூரில் தங்க முடியும் அதனால் சிங்கை நண்பர்களை சந்திக்க திட்டமிட்டு தகவல் அனுப்பினேன்.

  முதன்மை இஞ்சினியர் இஞ்சின் பணி முடிந்தபின் பணியாளர் மாற்றம் கோரினார். ஆனால் காப்டன் முன்பே விமான டிக்கெட்டும் முன்பதிவு செய்து சிடிசியும் முத்திரை பதித்து தந்துவிட்டதால் மாற்றம் செய்ய முடியாமல் போனது.



 எட்டாம் தேதி நாட்களை எண்ணிக்கொண்டு பணி செய்து கொண்டிருந்தேன். இரவில் மனமகிழ் அறையில் அமர்ந்து செக்டர் 36 ஹிந்தி படம் பார்த்துகொண்டிருந்தபோது மெஸ்மேன் ஸ்டீபன் வந்து “ஷாகுல், ரபீக், உங்கள் இருவரின் சைன் ஆப் கான்சாலாகிவிட்டது என்றார்.

 இரவுணவு முடிந்து வந்த முதன்மை இஞ்சினியர் உங்களுக்கு பதிலாக வரவேண்டிய மாற்று பணியாளர்கள் வரவில்லை எனவே அக்டோபர் ஒன்பதாம் தேதி ஆஸ்திரேலியாவிலிருந்து செல்லலாம் என்றார். மீண்டும் அமர்ந்து சினிமா பார்ப்பதை தொடர்ந்தோம். மறுநாள் காலை காப்டனை சந்தித்து சிங்கையிலிருந்து ஊருக்கு அனுப்பச்சொல்லி கோரவேண்டுமென எண்ணியிருந்தேன்.

 கப்பலில் இருக்கும் வைப்பருக்கு மோட்டர்மேனாக பதவி உயர்வு கொடுத்து பதிலாக ஒரு வைப்பரை கப்பலுக்கு வர ஏற்பாடகியிருந்தது. வைப்பர் மந்தீப்க்கு மலேரியா காய்ச்சல் வந்ததால் மறுநாள் பயணிக்க இயலாது, எனக்கு பதிலாக வர வேண்டிய பாஸ்கர் ராவின் குடும்பத்தில் ஒரு இறப்பு நிகழ்ந்துவிட்டதால் அவரும் வரவில்லை என மின்னஞ்சல் மதியமே வந்திருந்ததை காப்டன் இரவில்தான் சொல்லியிருக்கிறார்.

 எட்டரை மணிக்கு முதன்மை அதிகாரி தினேஷ்வரன் அழைத்தார். உடனே சரக்கு கட்டுப்பாட்டு அறைக்கு வருமாறு சொன்னார். மோட்டர்மேன் ரபீக்கும் வந்தான். “உங்க சைன் ஆப் கான்சல் ஆயிட்டு தெரியுமா”? 

“ஆமா”

“யாரு சொன்னா”

“சீப் இஞ்சினியர்”

“ஊருக்கு போணுமா” எனக்கேட்டார். 

“சிங்கபூர்ல கப்ப நாலு நாளு நிக்கும், இப்பவே போய், சீப் இஞ்சினியர், காப்டன்ட்ட பேசுங்க, உடனே வேற ஆள் அரஞ்ச் பண்ண சொல்லி” என்றார்.

 முதன்மை இன்ஜினியரின் அறைக்கதவை தட்டினோம். “ஆங்கர் போட்டு நாலு நாளு கப்பல் நிக்க்துனால மும்பை ஆபிசுக்கு சொல்லி வேற ஆள் ஏற்பாடு செய்ங்க” சொன்னோம். 

“எட்டு மாதங்கள் ஆகிவிட்டது எனக்கு” என்றேன். ஏழு மாதம் தான் என் பணி ஒப்பந்தம். ரபீக் எனது பணி ஒப்பந்தம் ஒன்பது மாதங்கள் முழுமையாகிறது. எனக்கு குழந்தை பிறந்துள்ளது என சொன்னான்.

 பின்னர் காப்டனின் அறைக்கதவை தட்டினோம். காப்டன் “இனிமே முடியாது அதான் ஆபிஸ் அடுத்த மாசம் உங்கள வீட்டுக்கு அனுப்புறதா சொல்லுது” என்றார்.

 சிங்கையில் நான்கு நாட்கள் கப்பல் நிற்கும் இன்னும் ஆறு நாட்கள் உள்ளது உடனே மின்னஞ்சல் செய்ய வற்புறுத்தினோம். அறைக்கு வந்து இஷா தொழுகை முடிந்து நன்றாக தூங்கிவிட்டேன். 

 காலை எட்டுமணி கூட்டத்தில் முதன்மை இஞ்சினியர் “உங்க ரெண்டு பேரால எனக்கு டென்சன்” என்றார்.

 இப்படி கப்பல் காரனின் விடுமுறை எப்போது வேண்டுமானாலும் தள்ளி போகலாம். கப்பலிலிருந்து இறங்கி விமானம் ஏறி வீடு போய் சேர்ந்தால்தான் விடுமுறை உறுதியாகும்.

நாஞ்சில் ஹமீது,

09 sep 2026.

sunitashahul@gmail.com

Saturday, 5 September 2026

Signing off .

 

சூரியனை ஜன்னலில் பிடித்தபோது. 

ஆகஸ்ட் பதிமூன்றாம் தேதி விடுமுறை ரத்தானதில் ஹைதராபாத் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமல் போனது. கொரியாவிலிருந்து கப்பல் சரக்கு நிறைக்க ஆஸ்திரேலியாவின் டார்வின் துறைமுகம் சென்றது. திரும்பி சைனாவில் சரக்கு இறக்கும்போது பணியாளர் மாற்றம் உத்தேசித்திருந்தார் காப்டன். ஆகஸ்ட் முப்பத்திஒன்றாம் தேதி சைனா சென்று சேரும் இரண்டாம் தேதி விமானம் இருக்கலாம் என எதிர்பார்த்தோம்.

  சைனாவின் பினாய் துறைமுகப்பில் கப்பலுக்கு ஆள்கள் வரமட்டுமே முடியும். கப்பலிலிருந்து இறங்கி செல்வது இயலாது என தகவல் வந்தது. ஆஸ்திரேலியாவை சென்று சேர்வதற்கு சில தினங்கள் மட்டுமே இருந்ததால் ஆஸ்திரேலியாவில் பணியாளர் மாற்றத்தை திட்டமிட போதிய கால அவகாசம் இல்லாமல் போய்விட்டது.

  சைனாவில் சரக்கு இறக்கியபின் புறப்பட்டால் ஏழு நாட்களில் மீண்டும் ஆஸ்திரேலியா சென்று சேர்வோம். சைனா வந்தபோது கப்பலை தூரத்தில் நிறுத்தி வைக்க சொனார்கள். கடுமையான காற்று வீசியதால் துறைமுகம் மூடப்பட்டது. இரு இரவுகளும், ஒரு பகலும் காத்திருந்தோம். இரண்டாம் தேதி காலை பதினோரு மணிக்கு பைலட் வந்து இரண்டு மணிக்கு கப்பலை முன்பும் பின்பும் ஒன்பது கயிறுகள் வீதம் கரையில் பத்திரமாக கட்டினோம்.

  எங்களிடம் உள்ள நான்கு சரக்கு தொட்டிகளில் உள்ள ஒரு லட்சத்து நாற்பதாயிரம் மெட்ரிக் டன் எல்என்ஜி திரவத்தில் ஒருலட்சத்து இரண்டாயிரம் மெட்ரிக் டன் மட்டுமே டெர்மினல் வாங்கினார்கள். ஒன்றாம் எண் தொட்டியிலுள்ள முப்பத்திஎட்டாயிரம் மெட்ரிக் டன் அப்படியே மீதமிருந்தது.

  அடுத்து செல்லவேண்டிய துறைமுகம் உறுதியாகததால் கப்பலில் பதினெட்டாயிரம் மணிநேரத்திற்குப்பின் செய்யவேண்டிய பணிகளுக்காக கப்பலை நான்கு நாட்கள் கொரியாவில் நிறுத்திவைக்க முதன்மை இஞ்சினியர் கோரினார். சைனா கொரியா ஒருநாள் பயண தூரம் மட்டுமே.
கொரியாவிலிருந்து ஊருக்கு செல்லும் வாய்ப்பு உருவானது.

கப்பலில் ஒன்றாம் எண் தொட்டியில் உள்ள சரக்கை இந்தோனேசியாவில் இறக்க சொல்லி உத்தரவு வந்தது. பின்னர் இந்தோனேசியாவில் சரக்கை நிறைக்க சொன்னது சரக்கை கையாளும் நிறுவனம். செப்டெம்பர் பன்னிரெண்டாம் தேதி துறைமுகம் உறுதியானது. காப்டன் இரண்டாம் தேதியே எங்களுக்கான விமான சீட்டை முன்பதிவு செய்தார். 
கடந்த வாரம் தோள் பையை துவைத்து தயார் செய்தேன்



 பதிமூன்றாம் தேதி இந்தோனேசியாவின் அருண் துறைமுகப்பில் இறங்கி காரில் ஆறுமணிநேர பயணம் மேடான் எனும் ஊருக்கு. அங்கு இரவு விடுதியில் தங்கிவிட்டு பதினான்காம் மாலை மூன்றரை மணிக்கு மலேசிய ஏர்லைன்சில் குலாலம்பூர் அங்கிருந்து இரவு ஒன்பதரை மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் விமானத்தில் பயணம். இரவு பதினோரு மணிக்கு திருவனந்தபுரத்தில் இறங்கினால் நள்ளிரவு ஒரு மணிக்கு வீடு.
Darvin Australia 



 ஜனவரி பதினைந்தாம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டேன் எட்டு மாதங்கள் ஆகப்போகிறது. நான் முன்பே வீடு வந்துவிடுவேன் என எண்ணியிருந்ததால் பதினாறாம் தேதி பதாமி ஆலயங்களை காண செல்லும் குழுவில் பதிந்திருந்தேன். ஊருக்கு வந்த மறுநாளே புறப்பட முடியாது என்பதால் அதை கைவிட்டிருந்தேன்.

  சைனாவிலிருந்து மூன்றாம் தேதி மாலை கப்பல் புறப்பட்டது. ஊர் செல்ல பத்து நாட்கள் மீதி என கணக்கிட்டுருந்தேன். துறைமுகம் விட்ட மறுநாள் விடுமுறையாக இருந்தது. நேற்று காலை உணவு முடித்து எட்டரைக்கு பிரிட்ஜில் சென்றேன். காப்டன் கணிணியின் முன் அமர்ந்திருந்தார். “இந்தோனேசியா செல்வது தாமதமாகிவிட்டது. அனைத்து டிக்கெட்டுகளையும் ரத்து செய்துவிட்டேன்” என்றார்.
   பதினாறாம் தேதி இந்தோனேசியாவில் சரக்கு நிறைத்து பங்களாதேஷ் செல்ல உத்தரவு வந்தது. அதை காரணம் காட்டி இஞ்சினில் பணிசெய்ய சிங்கையில் நான்கு நாட்கள் நங்கூரம் பாய்ச்சி நிறுத்த கோரினார் முதன்மை இஞ்சினியர். “காப்டன் வி மே கோ எர்லி பிரம் சிங்கப்பூர்” என்றார். எட்டாம் தேதியா எனக்கேட்டேன். “இல்லை பத்தாம் தேதி” என பதிலளித்தார்.
கப்பலை சிங்கையில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி பணிகள் செய்ய கப்பல் முதலாளியும், சரக்கு நிறுவனமும் அனுமதிவழங்கியதால் கப்பல் சிங்கையில் நிறுத்துவது உறுதியானது. ஒன்பதாம் தேதி நள்ளிரவு நங்கூரம் பாய்ச்சி நிறுத்துவோம். மாற்று பணியாளர்கள் பதினொன்றாம் தேதி இரவு கப்பலுக்கு வருவார்கள்.

 பதினொன்றாம் தேதி இரவு கப்பலிலிருந்து இறங்கி சிங்கையில் நள்ளிரவு விடுதிக்கு போவோம். மாலை நான்கு அல்லது ஐந்து மணிக்கு விமான நிலையம் செல்ல வேண்டும். பகலில் எட்டு மணிநேரம் கிடைக்கும் நண்பர்களை சந்தித்துவிட்டு இரவு விமானம் ஏறினால் சனிக்கிழமை நள்ளிரவு வீடு வந்து சேர்வேன். 

  இன்று மாலை விமான சீட்டு வந்துவிடும். இம்முறை கப்பல்காரனின் பிரியாணி கணக்குகள் எதையும் போட முடியவில்லை. ஞாயிறான நாளை பசுபிக் சக்ஸசில் கடைசி பிரியாணி. இரண்டாம் சமையற்காரர் காசர்கோடின் சரத்திடம் மட்டன் பிரியாணி செய்து தர சொல்லியிருக்கிறேன்.

 இம்முறை விடுமுறை உறுதிதான்.

நாஞ்சில் ஹமீது,
05 sep 2026.
sunitashahul@gmail.com

Sunday, 30 August 2026

பறவை பார்த்தல் .



   இரு ஆண்டுகளுக்கு முன் என் இளையமகன் சல்மானுடன் வெள்ளிமலையில் நடந்த பறவை பார்த்தல் வகுப்பில் கலந்துகொண்டேன். “அம்பது வயசாவுது பறவ பாக்க போறாராம்” எனும் குரல் கேட்கத்தான் செய்தது. அதை கேட்காமலே சென்றேன். 

  கப்பலில் பல ஆண்டுகளாக பறவைகளை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். கப்பலில் அவ்வப்போது பறவைகள் வந்துவிடும், அதில் புறாக்கள் மற்றும் கொக்குகள் மட்டுமே மிக நன்றாக தெரிந்தவை. மற்றவை எல்லாம் ஸீ குல், குருவிகள் தான்.

  ஆசான் ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் எழுதி நானே கோரிக்கை வைத்தேன் பறவை பார்த்தல் வகுப்பு ஒருங்கிணைத்தால் என்னை போன்ற குறை அறிவுடையவர்கள் அதை தெரிந்துகொள்ள முடியுமே என. 

 அதை அவர் பாத்தாரோ என்னவோ தெரியாது ஆனால் வெள்ளிமலையில் நடந்த இரண்டாவது பறவை பார்த்தல் வகுப்பில் நான் கலந்துகொண்டேன். நண்பர்களான விஜய பாரதியும், ஈஸ்வர மூர்த்தியும் ஆசிரியர்களாக வகுப்புகளை நடத்தினர்.

 கடலில் கப்பலில் பறைவைகள் எப்படி வருகிறது. கரையில் கப்பலை கட்டிவைத்திருக்கும் போது சொந்த வீடு போல பறவைகள் வந்து பாடி, பறந்து மகிழ்ச்சியாக இருக்கும். பார்க்கும் நமக்கும் அந்த மகிழ்ச்சியை கடத்திவிடும் அதியசம் நிகழும்.

 தீவுகளை ஒட்டிய பயணத்தில் வரும் சிறு குருவிகள் வழி தெரியாமல், நீண்ட தூரம் பறக்கும் சக்தியாக சில தினங்கள் கப்பலிலேயே சுற்றி,சுற்றி வரும். பெரும்பாலும் இறந்துவிடும். பெரிய பறவைகள் நான் ஸீகுல் என நினைத்து கொண்டிருந்தவை பசுபிக் கடலில் பயணிக்கையில் இருபது நாட்கள் வரை கப்பலுடன் தொடர்ந்து வரும். கூட்டமாக வரும் அவை, வெப்பம் மாறுபடும்போது அல்லது (எழுபது பறவைகள் வரை) கரையை எட்டும் முன் அவை காணாமல் போய்விடும்.




    பறவை பார்த்தல் வகுப்புக்குபின் பார்வையே மாறியது. புறா, மைனா, கொக்கு, காகம், ஆந்தை போக என் வீட்டருகே மிக சாதாரணமாக, வால்காக்கை, red vented bulbul ,oriental magppie robin,asian green bee eater common lora,white browed wagtail,brown headed barbet , rose ringed parakeet, common tailor bird,sun bird, pale billed flowerpecker,drango போன்ற நாற்பது வகை பறவைகளை பார்க்க முடிந்தது. 

  நண்பர் வாங்கி தந்த பைனாக்குலர் வழியாக வீட்டின் மாடியில் நின்று பறவையை பார்க்கும்போது சுனிதா “இங்க பாருங்கோ அங்க நிக்கவளுக்கு நீங்கோ பறவைக்க மூலத்த பாக்கது தெரியாது. இத வேற எங்கயாவது வெச்சிகிடுங்கோ” என எச்சரித்தாள். 

என் வீட்டருகில் பறக்கை குளம் இருக்கிறது. அங்கே ஏராளமான பறவைகளை காண முடியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கபட்ட பறவை பார்த்தல் கோபுரம் ஒன்றும் இப்போது தான் என் கண்ணில் பட்டது.

 கப்பலிலும் ஒரு நையாண்டி உண்டு “பர்சனல் பைனாக்குலர் லேடிஸ பாக்கதுக்குதானே” என. நான் அவர்களுக்கு பதிலேதும் சொல்வதே இல்லை. 


பிரவுன் பூபி 


  கப்பலுக்கு வந்தபின் கப்பலை தொடர்ந்து பல நாட்களாக உடன் வருபவை masked booby, brown booby எனவும் அடையாளம் கண்டேன். தலைக்கு மேலே அவை பறப்பதும் மீனை கண்டால் கடலில் மூழ்கி அலகில் கவ்வி மேலே வருவதும் பகல் முழுவதும் பறப்பதும் மீன் வேட்டையுமாகவே இருக்கும். மூன்று தினங்களுக்குப்பின் வயிறு நிரம்பி டெக்கில் அமர்ந்து ஆழ் மோனத்தில் ஓய்வில் இருக்கும். அது நல்லுறக்கம் அப்போது அருகில் சென்றால் அவை நம்மை உணர்வதே இல்லை. பூபிகள் பறந்து சென்றபின் உண்ணாமல் விட்ட மீன்களால்,பாதி உண்ட மீதி என டெக் மீன்களால் நிறைந்து இருக்கும்.

பிரவுன் பூபி ஆழ்ந்த உறக்கம் 



  நிலத்தில் பறவைகளை இவ்வளவு அருகில் பார்ப்பது கடினம். காலையில் தலைக்கு மேலே மிக அருகில் பறக்கையில் திரும்பி பார்த்து “ஷாகுலே குட் மார்ன்னிங்” என சொல்வதும் நிகழும். சிறகசைக்காமல் கப்பலின் வேகத்துக்கு இணையாக (17 knot) பறக்கும், நொடியில் சிறகை சுருக்கி நீரில் மூழ்கிவிடும். அதை காணாமல் மனம் பதைபதைக்கும் போது வாயில் மீனுடன் அல்லது வெற்று அலகுடன் மேலெழுந்து வரும்.

 பூபிகள் எப்போதும் கப்பலில் உடன் பயணிக்கும் மாலுமிகள் போலவே ஆகிவிட்டன. கடந்த வாரம் டெக்கில் எனது ஸ்டோர் அறையை திறந்தபோது மைனாவை விட கொஞ்சம் பெரிய கருஞ்சாம்பல் பறவை ஒன்று உள்ளே இருந்ததை கண்டேன். முந்தைய மதியத்திற்கு மேல் அந்த கதவை அடைத்திருந்தேன். இருபது மணிநேரத்திற்கு மேல் உள்ளே இருந்தது. என்ன நினைத்திருக்கும், எப்படி பயந்திருக்கும் என்றெல்லாம் எனக்கு தோன்றியது. 

  கதவை திறந்ததும் வெளியே பறந்து சென்றது. அன்றும், அதன் பின்பும் டெக்கிலுள்ள அந்த கதவை அடைக்கும்முன் உள்ளே யாராவது இருக்கிறார்களா என சோதித்து உறுதி செய்கிறேன். பறவை பார்தலினால் வந்த அன்பு தான் அது. 



சில தினங்களுக்கு முன் oriental greenfinch பறவைகள் இரண்டை டெக்கில் பார்த்தேன். பாடி, பறந்து கொண்டிருந்தது. கப்பலுக்கு அருகில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் டெக்கில் வந்துவிடும். நேற்று மாலை எங்கள் பயர் ட்ரில்ல்ஸ் நடந்தபோது பதினைந்துக்கும் மேலான பறவைகள் இருந்ததன. எங்களுக்கு மிக அருகில் பயமின்றி பறந்தும், நடந்தும் சென்றது. டெக்கில் அவை உடலசைக்காமல் வேகமாக நடப்பது, கீச்சு குரலில் ஒலி எழுப்புவது என எல்லாமே இனிமை. அதை பார்த்துக்கொண்டே இருத்தல் அக மகிழ்வு மட்டுமல்ல உள்ளம் குவிந்து எண்ணங்களில்லாமல் ஒரு தியான நிலை. அது ஒரு பேரனுபவம்.

  நேற்றே சமையல்காரர் சரத்திடம் சொன்னேன் பறவைகளுக்கு சாப்பாடு வேண்டுமென. அரிசி வேண்டாம் அதைவிட சிறிதாக எதாவது தானியம் வேண்டுமென கேட்டேன். இன்று காலை கொஞ்சம் அவல் தந்தார். நீரில் நனைத்து வைக்க சொன்னார். நான் அப்படியே கொண்டு சென்று ஒரு பேப்பர் தட்டில் கொஞ்சம் கொட்டி வைத்தேன். மூரிங் விஞ்ச் அருகே பறவை ஒன்று நிற்பதை கண்டேன் அருகிலேயே குறைந்த இடைவெளியுள்ள இரும்பு பட்டைகளுக்குள் தலை மாட்டி ஒன்று இறந்து போயிருந்தது. கையில் எடுத்து கடலில் போட்டேன். அதன் தலையை காணவில்லை.



 ஒரு மணிநேரம் கழித்து போய் பார்த்தேன் அவலை பறைவைகள் தின்ன சுவடே இல்லை.தட்டு நிறைந்தே இருந்தது. மெஸ் மேன் ஸ்டீபன் அவை பின்னர் சாப்பிடும் என்றார். 

நாஞ்சில் ஹமீது,

30 aug 2026.

Sunitas

hahul@gmail.com





Saturday, 22 August 2026

கடிகாரம் பின்னே செல்லுதல்.




மெக்ஸிகோவின் கோஸ்டா அசுல் துறைமுகப்பில் ஏற்றிய சரக்கை கொரியாவின் இன்சொனுக்கு கொடுக்கசொல்லி தகவல் வந்தது. மெக்ஸ்சிகோ – கொரியா இடையே ஒன்பது மணிநேர வித்தியாசம்.  
மொத்தம் பதிமூன்று நாள் பயணத்தில் ஒரு நாள் காணாமல் போகும்(அதாவது பன்னிரெண்டு நாட்கள்). பன்னிரெண்டு தினங்களில் ஒன்பது நாட்கள் கப்பலின் கடிகாரம் பின்னோக்கி நகர்ந்தது. 
 
 கடிகாரம் பின்னோக்கி சென்ற நாட்களில் ஒரு நாளைக்கு இருபத்தியைந்து மணிநேரம். இரவில் ஒரு மணிநேரம் அதிகமாக கிடைத்தது. மாலை ஆறு மணிக்கே தூக்கம் அழுத்தும் பின்னர் அதிகாலை இரண்டு அல்லது மூன்று மணிக்கு விழிப்பு உறுதி. 
 அதை தவிர்ப்பதற்காக இரவு எட்டுமணிக்கு நான், பத்தி சாப், சந்தோஷ், முதன்மை அதிகாரி தினேஷ் ஆகியோர் மனமகிழ் மன்றத்தில் தினமும் படம் (திர்சியம் 3, பிளாஸ்ட், கறுப்பு, பால்டி, லோகா,நாராயணியூடே மூணு ஆம்மக்கள்,பரிமளம் அன்ட் கோ படங்களாக) பார்த்தோம்.

 பத்து மணிக்கு மேல் அறைக்கு வந்து பதினோரு மணிக்குமேல் தூங்க செல்லும்போது மணி பத்தாக இருக்கும். அதிகாலை ஐந்துமணிவரை நல்லுறக்கம். உடல் கடிகாரம் அதிக சிரமப்படவில்லை இம்முறை. ஒரே மாதத்தில் இரு முறை இரவு பகலாகவும்,பகல் இரவாகவும் மாறியது. கடிகாரம் முன்னே செல்லும்போது குழம்பிய உடல் கடிகாரம் பின்னோக்கிய நகர்த்தலில் கொஞ்சம் சமாளித்துக்கொண்டது.
 வாட்ச் கீப்பெர்ஸ் இப்போதும் கொஞ்சம் கடினம்தான்.

  July 15 ஆம் நாளை இல்லாமலாக்கி செவ்வாய்க்கிழமையிலிருந்து வியாழனுக்கு தாவியதில் புதன்கிழமை இல்லாமல் ஆகியது. மெக்ஸிகோவிற்கு செல்லும்போது பயணத்தில் வெப்பம் சிலநாட்கள் ஒன்பது டிகிரிக்கு சென்றது. டெக்கில் ஜாக்கெட் அணிந்து பணிசெய்தோம். அறையின் வெப்பம் பதினைந்து டிகிரி வரை சென்றது. 
 அதை மனதில் வைத்து அதே போன்று வெப்பம் குறைந்தால் சமாளிக்க இரண்டாம் கம்பளி போர்வையை எடுத்துவைத்திருந்தேன். ஆனால் அறையில் வெப்பம் பதினெட்டு டிகிரிக்கு கீழ் குறையவேயில்லை.அதனால் இரண்டாவது கம்பளி போர்வை தேவைப்படவேயில்லை.

 கொரியாவின் இன்சொன் அருகில் நண்பர் மதுரைவீரன் சதீஷ் வசிக்கிறார். இரு ஆண்டுகளுக்கு முன் நான் பணிபுரிந்த கப்பலான எல்என்ஜி அலையன்ஸ் இன்சொன் துறைமுகம் வந்தபோது சதீஷ் கப்பலுக்கு வந்து இரவு என்னுடன் தங்கி சென்றார். கப்பலை சுற்றிபார்த்துவிட்டு பெரும் வியப்படைந்தார். இப்போதும் காப்டனிடம் கேட்டேன் என் சகோதரர் கப்பலுக்கு வரவிரும்புகிறார் என. 

 காப்டன் சதீசின் ஆவணங்களை கேட்டார். இரு தினங்களுக்கு பிறகு காப்டன் “உனது உடன்பிறந்த சகோதரனா சதீஷ்” எனக்கேட்டார். நான் “இல்லை உறவில் சகோதரன்” என்றேன். ரத்த உறவு அல்லாதவர்களுக்கு டெர்மினல் அனுமதிக்காது என மின்னஞ்சல் வந்துள்ளதாக சொன்னார். 

 முதன்மை அதிகாரி தினேஷ் “ஏன் அண்ணே அப்டி சொன்னீங்க” எனக்கேட்டார். “டாக்குமெண்ட் ஏதாவது கேட்டா என்ன செய்ய” என்றபோது. வளர்ப்பு தாயின் மகன் என சொல்ல வேண்டியதுதான் என்றார். என்னால் பொய் சொல்வது சிரமம், எனவே அந்த யோசனையும் அப்போது வரவில்லை.
நண்பர் சதீஷ் 2024இல் கப்பலுக்கு வந்தபோது.



  நண்பர் கப்பலுக்கு வரும் வாய்ப்பு தவறிப்போனது. இம்முறை கப்பலிலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு செல்ல இறங்கியவர்கள் இன்சொனில் இரு இரவுகள் தங்கிவிட்டு சென்றனர். மீண்டும் கொரியா வந்தால் அல்லது கொரியாவில் இறங்கினால் சதீசை பார்க்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

 நாஞ்சில் ஹமீது,
  20 july 2026.
sunitashahul@gmail.com
  கடந்த மாதம் எழுதிய பதிவு. இப்போதுதான் வலையேற்றுகிறேன்.

Sunday, 9 August 2026

ஹைதராபாத் .

    


இரண்டாம் தேதி மாலை இந்தோனேசியாவின் அருண் துறைமுகப்பிலிருந்து கொரியாவை நோக்கி புறப்பட்டோம். இரண்டே ஆண்டுகளான புதிய இந்த கப்பலின் இஞ்சின் வாட்சில்லா நிறுவன தயாரிப்பு. இரட்டை இஞ்சின் கொண்டது. இது டீசல், ஹெவி பீயுல் ஆயில் மற்றும் கேஸில் ஓடும். 

 கேஸ் மற்றும் டீசல் அல்லது ஹெவி ஆயில் (fuel sharing) சேர்த்தும் ஓடும். அதாவது கேசுக்கான நாசில் மட்டும் தனி. இந்த எல்என்ஜி கப்பலில் திரவ வடிவில் இருக்கும் கார்கோ ஆவியாக மாறும்போது ஏற்டும் சரக்கு தொட்டியின் அழுத்தத்தை குறைக்க அந்த வாயுவை காற்றில் கலக்கவிடாமல் அதை உபயோகித்து கப்பலின் இஞ்சின் மற்றும் ஜெனரேட்டரை இயக்குகிறோம்.

 இந்த இஞ்சின் வாட்சிலாவின் பெயுலிவர் மாடல் என்றார்கள் இஞ்சினியர்கள். காஸ் மோடில் கப்பல் இயங்கும்போது பீயுல் வால்வுகள் சீக்கிரமே பழுதாகிவிடுகிறது. டீசல் மற்றும் ஹெவி ஆயிலில் இயங்குகையில் எந்த பிரச்னையும் இல்லை. வழக்கமாக ஒவ்வொரு இரண்டாயிரம் மணிநேரத்திற்கு பின் பீயுல் வால்வை மாற்ற வேண்டும். ஆனால் இந்த கப்பலில் கேஸில் ஓடும்போது பீயுல் வால்வுகள் சீக்கிரமே பழுதாகிவிடுவதால். கப்பலை அவ்வப்போது நடுக்கடலில் நிறுத்தி பீயுல் வால்வ் மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது.

 கொரிய கட்டுமானம் ஆன இந்த கப்பலில் சில இயந்திரங்கள் சீக்கரமே பழுதாகிவிட்டன. முக்கிய இயந்திரத்தின் காற்றை குளிர்விக்கும் ஏர் கூலர் குழாய்களில் ஓட்டைகள் விழுந்துள்ளது. கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி ஏர் கூலரை கழற்றி பிளக் போட்டுள்ளனர்.

 நான் வந்தபின் மீண்டும் இரண்டாவது இஞ்சினின் கூலரிலும் ஓட்டை விழுந்தது ஒரு முழுநாளும் கப்பலை நிறுத்திவைத்து அதையும் பிளக் போட்டோம்.

 இப்போது மீண்டும் முதலாவது இஞ்சினின் கூலரில் ஓட்டை. ஒற்றை இஞ்சினில் கப்பலை நிறுத்தாமல் இயக்கி பழுதான கூலரை சரி செய்தோம். பீயுல் வால்விலும் பிரச்னை இருந்ததால் அதையும் மாற்றினோம். காலை எட்டுமணிக்கு தொடங்கி இரவு பத்து மணிவரை பணிசெய்தோம்.

 மாலை ஆறு மணிக்கு முதன்மை இஞ்சினியர் சொன்னார் கொரியாவிலிருந்து நீ ஊருக்கு போகிறாய் என. கொரியாவிலிருந்து பணியாளர் மாற்றம் இல்லாமலிருந்தது கடந்த வாரம் மெடிக்கல் அன்பிட் ஆகி ஊருக்கு சென்றவர்களுக்கு பதிலாக மூவர் வருகிறார்கள். அவர்களுடன் எனக்கான மாற்று பணியாள் வருகிறார். இம்மாதம் முழுவதும் கப்பலில் இருக்க வேண்டுமென நினைத்தேன். ஆகஸ்ட் மாத முழு சம்பளமும் கையில் கிடைத்தால்தான் ஊருக்கு சென்று இரண்டு மாதமாவது இருக்க முடியும்.


ஹைமா , ஜோஷிகா மெல்போர்ன்(2010)


   கடந்த பிப்ரவரி மாதம் ஹைதராபாத்தை சேர்ந்த நண்பர் ராஜு அழைத்திருந்தார். மகள் ஜோஷிகாவுக்கு ஆகஸ்ட் மாதம் திருமணம் குடும்பத்துடன் கண்டிப்பாக வர வேண்டுமென அழைப்பு விடுத்தார். முயற்சிக்கிறேன் என்றேன். இல்லை கண்டிப்பாக வரவேண்டும். நீ மட்டும்தான் கப்பல் பிரெண்ட் என்றார்.

ஜோஷிகா 


 2010 ஆம் ஆண்டு ராஜுவுடன் மனைவி ஹைமா மற்றும் பத்து வயதான ஜோஷிகாவும் கப்பலில் இருந்தனர். இத்தனை ஆண்டுகளாக அவர்களுடன் தொடர்பிலேயே இருந்தேன். ஹைமா அழைக்கும் போதெல்லாம் ஹைதராபாத் எப்போது வருகிறாய் என கேட்பாள். ஒரு நாள் வருவேன் என்பேன். அந்த ஒருநாள் எப்போது என கேட்டுக்கொண்டே இருப்பாள். மணப்பெண் ஜோஷிகா பள்ளிப்படிப்பை முடித்து கலிபோர்னியாவில் மருத்துவம் படித்து டாக்டராக இருக்கிறார்.

 சுனிதாவிடம் சொன்னேன் நான் ஊருக்கு வருகிறேன் ஹைதராபாத் திருமணதிற்கு சேர்ந்து போகலாம் என. அவளும் சம்மதித்துவிட்டாள். கப்பல் பன்னிரெண்டாம் தேதி கொரியா சென்றடையும். பதிமூன்றாம் தேதி கப்பலிலிருந்து இறங்கி பதினான்காம் தேதி விமானம் ஏறி ஊர் செல்லும்போது பதினைந்தாம் தேதி ஆகி விடும். 

 ஆகஸ்ட் பதினாறாம் தேதி மாலை ரிசப்ஷனும் நள்ளிரவு திருமணமும். சுனிதாவிடம் ஹைதராபாத் வந்துவிடு நான் இங்கே ஹைதராபாத்துக்கு டிக்கெட் கேட்டு பார்க்கிறேன் என்றேன்.

  நாகர்கோவிலிருந்து வாரத்தில் ஒரு ரயில் செல்கிறது. முப்பத்தியிரண்டு மணி நேரம். காலை ஐந்து மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் இரண்டு மணிக்கு சேரும். வடசேரியிலிருந்து மதியம் இரண்டரைக்கு பஸ் போகிறது பதினெட்டு மணிநேரம். மறுநாள் காலை ஒன்பதுமணிக்கு போய் சேரும். மூன்றாவதாக திருவனந்தபுரத்திருந்து விமானம் இரண்டு மணிநேரம் என சொன்னேன்.

 “உங்க டிக்கெட் வரட்டு முதல்ல” என்றாள்.

 கப்பலில் மூன்றாம் அதிகாரி சபரீசன் வியாழக்கிழமை மாலை அழைத்து. “பைனல் டெஸ்டிநேஷன் சொல்லுங்க” எனக்கேட்டார். “ஹைதராபாத்” என்றேன். நண்பர் ராஜிவிடம் கப்பலிலிருந்து ஹைதராபாத் வருகிறேன் என்றேன் மகிழ்ச்சியடைந்தார்.



  சுனிதாவை அழைத்து எப்படி வருகிறாய் டிக்கெட் போடுகிறேன் என கேட்டபோது. “உங்க டிக்கெட் கைல கிடச்ச பொறவு பாக்குலாம்” என்றாள்.



 வெள்ளிக்கிழமை மாலை மழை பெய்ததால் நான்கு மணிக்கே அறைக்கு வந்ததால் எனது பயணப்பையை தயார் செய்தேன். ஆறு மாதமாக நிலத்தில் எங்கும் செல்லாததால் துணிகள், புத்தகங்கள் மட்டுமே லக்கேஜ் அரை மணி நேரத்தில் பாக்கிங் முடிந்தது. புதன்கிழமை வரை உபயோகிக்கும் துணிகள் மற்றும் பொருட்கள் மட்டுமே மீதி. ஆறு மணிக்கு காப்டனின் பிறந்தநாள் கேக் வெட்டியபின் மனமகிழ் அறையில் படம் பார்த்துகொண்டிருந்தோம் காப்டன் வந்தார். “ஷாகுல் உனது சைன் ஆப் கான்சல்” என்றார்.

  


        மூன்றாம் அதிகாரி சபரீசன் சொன்னார் “சும்மா இருத்த மனுசன சைன் ஆப்ன்னு சொல்லி, கான்சல் பண்ணிட்டாங்க” என்றார்.

   ஹைதராபாத்தில் திருமணத்தில் கலந்து கொள்ளும் ஆசையில் இரு தினங்கள் மகிழ்ந்திருந்தேன்.

நாஞ்சில் ஹமீது,

09 aug 2026.

sunitashahul@gmail.com

   

  

Monday, 3 August 2026

கப்பல் காரனின் உடல்நல குறைவுகள்.



  
கப்பலில் பணிபுரியும்போது உடல்நல குறைவு, விபத்துக்கள் ஏற்படாமல் பாதுகாத்து கொள்வது மிக அவசியம். நடுக்கடலில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காது. அளவான சத்தான உணவுவுண்டு, தேவைக்கு உடற்பயிற்சியும் செய்து புகை மது இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் மாலுமிதான் நீண்டநாள் கப்பலில் பணிபுரிய முடியும்.

  கப்பல் காரர்கள் பணியில் இணையும்முன் ஒவ்வொரு முறையும் முழுமையான மருத்துவ பரிசோதனையில் வெற்றி பெற வேண்டும். எக்ஸ் – ரே, ரத்தம், சிறுநீர், ஈசிஜி, கண், காது, ஆசன வாய் என முழுமையான சோதனைகள் அவை. நாற்பது வயதை தாண்டினால் த்ரெட்மில் டெஸ்ட் கட்டாயம்.

 பத்து ஆண்டுகளுக்கு முன் நிறையபேருக்கு சிறுநீரக கல் பிரச்னை வந்ததால் அப்டமன் ஸ்கேன் கட்டாயமானது. தற்போது கப்பலுக்காக விமானம் ஏறும் முதல் நாள் ஆல்ஹகால் டெஸ்ட் அவசியம். அதன்பின்பும் நிறையப்பேர் கப்பலிலிருந்து சிறுநீரக கல் பிரச்சனையால் ஊருக்கு சென்றார்கள்.

  கப்பலில் முடியாமல் ஆனால் என்ன ஆகும். இரண்டாம் அதிகாரிதான் கப்பலில் மருத்துவ அதிகாரி அட்வான்ஸ் மெடிக்கல் கோர்ஸ் முடித்திருப்பார்கள். கப்பலில் இருக்கும் மருத்துவமனை மற்றும் மருந்துகளை அவர் நிர்வகிப்பார். பெரும்பாலும் மருத்துவ அதிகாரியாக இருப்பவர் அடிப்படைகள் கூட தெரியாத கூமுட்டையாக இருப்பார்கள். 
முதன்மை அதிகாரியும், காப்டனும் கூட மருத்துவ அதிகாரியாக இருந்து வந்தவர்கள் ஆதலால் இன்னும் கொஞ்சம் அனுபவம் இருக்கும். மார்பின் போன்ற சில முக்கியமான மருந்துகள் காப்டனிடம் மட்டுமே இருக்கும்.

வயிற்றுவலி, காய்ச்சல், இருமல், தோலில் கொப்புளங்கள், தோல் சிவந்து போதல் ஆகியவை ஏற்பட்டால் உடல் வெப்பம், இரத்தஅழுத்தம் சோதிக்கப்பட்டு ரோம் நகரில் இருக்கும் தன்னார்வலர்களாக தொண்டாற்றும் மருத்துவ குழுவுக்கு படங்களுடன் அனுப்பிவைத்தால் அவர்கள் என்ன செய்கிறது என யூகித்து சில மருந்துகளை கொடுக்க ஆலோசனை வழங்குவார்கள். அந்த மருந்து பெரும்பாலும் கப்பலில் இருக்கும்.

  கப்பலில் கண்டிப்பாக வைத்திருக்கவேண்டிய மருந்துகளை IMO ( international marine orgainsation) வகுத்துள்ளது. எலும்பு முறிவு, தையல் போடும் அளவு காயம் ஏற்பட்டால் கட்டு போட்டு கப்பல் துறைமுகம் செல்வதுவரை காத்திருக்க வேண்டியது தான்.

 மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது. கப்பல் கரையை ஒட்டி பயணித்தால் CPR முதலுதவி கொடுத்து அவசரமாக ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்கள் உண்டு. கரையிலிருந்து நானூறு மைல் தள்ளி பயணித்தால் மரணத்தை ஏற்றுகொண்டு கப்பல் பிரீசர் பெட்டியில் கரையணைவதுவரை உடலாக இருக்க வேண்டியதுதான்.
 எந்த அவரச சிகிச்சையும் உடனே கிடைக்க வாய்ப்பேயில்லை. 

  2006 ஆம் ஆண்டு நான் பணி செய்த கப்பல் பிலாண்டர். கப்பலேறிய இருபதாம் நாள் எனக்கு ஒவ்வாமையால் கடுமையான தோல் அரிப்பு ஏற்ப்பட்டது. இஸ்ரேலின் இலாத் நகரில் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபட்டேன். மருந்துகள் தந்தார் டாக்டர். முழுமையாக குணமாகாமல் இரண்டு மாதத்திற்குள்ளாகவே சிங்கபூரிலிருந்து பணியிலிருந்து விடுவிக்கப்பட்டேன்.

  2007 ஆம் இருந்த கப்பல் ஸ்டெயிட்ஸ் வென்ஞ்சர். பயிற்சி பிட்டராக இருந்தேன். கப்பல் மலேசியா சென்றடைய ஐந்துமணிநேரம் இருந்தது. ஆக்ஸிஜன் – அசிட்டிலீன் பாட்டில்கள் இருக்கும் ட்ராலியை தள்ளிக்கொண்டு சென்றேன் மேலாக மழை பெய்து டெக் ஈரமாக இருந்தது. டெக்கில் ராம்ப் போல இருந்த இடத்தில் ட்ராலியை தள்ளும்போது கீழே விழுந்து வலதுகை மோதிர விரல் கிழிந்துவிட்டது. முதன்மை அதிகாரி முதலுதவி செய்தார். கப்பல் கரையணைந்ததும் காப்டன் கெலாங் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். அழகான இளம் தமிழ் மருத்துவச்சி “தெக்கணும், மூணு தையல்” என்றார். 

 கப்பலில் எக்ஸ்சாஸ்ட் வால்வ் தூக்கும்போது கைவிரல்கள் நசுங்கிய ஒருவர் ஐந்து தினங்களுக்குப்பின் ஜப்பானில் மருத்துவமனை சென்றார். விரல் நுனிகள் லேசாக வெட்டப்பட்டு வீட்டிற்கு அனுப்பிவைக்கபட்டார். 

ஜப்பான், தைவான், கொரியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நல்ல மருத்துவம் கிடைப்பது உறுதி. அந்த பகுதிகளில் கப்பல் பயணத்தில் இருந்தால் அது கிட்டும் வாய்ப்பு உண்டு.

  ஜப்பானில் முக்கிய இயந்திரத்தின் பராமரிப்பு பணிசெய்யும்பொது முழங்கைக்கு கீழே கை மட்டும் துண்டாகி இன்ஜினுக்குள் விழுந்துவிட்டது, அழுக்கு எண்ணையில் கிடந்த கையை எடுத்து நீரில்கழுவி பாலிதீன் பையில் ஐஸ்போட்டு கட்டி அனுப்பிவைத்ததை ஜப்பானிய டாக்டர்கள் சில மணிநேரத்தில் ஒட்டி சரி செய்தனர்.

  2015 பணியில் இணையும்போதே எனது வலதுகை பெருவிரல் வீங்கி பழுத்துவிட்டது, நல்ல காய்ச்சலும். அமெரிக்காவின் நீயூயார்க் நகரில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார் காப்டன். டாக்டர் டிபானி எனது மருத்துவ வரலாறை கேட்டபின். கூரிய கத்தியால் லேசாக கீறி பழுப்பை அகற்றி கட்டுபோட்டு மருந்துகள் தந்தார்.

  இரு ஆண்டுகளுக்கு முன் கேரளாவை சார்ந்த பிராசாந்த் காலையில் பணிக்கு வரவில்லை. அறையில் நாற்காலியில் அமர்ந்தபடி இருந்தார். கப்பலில் பாதையை திருப்பி ஹோனலுலுவில் நிறுத்தி உடலை ஒப்படைத்தனர். லேசான மாரடைப்பால் இறந்ததாக உடற்கூராய்வு பரிசோதனை சொல்லியது. அறையில் தனிமையில் இல்லாமல் இருந்திருந்தால் அந்த மரணம் தவிர்க்கபட்டிருக்கும்மோ என எனக்கு தோன்றியது.

  சமையற்காரர் பாபு ஹுசைன் காலையில் தினமும் தவறாமல் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என வாட்ஸ் அப் அனுப்புவார். கடந்த டிசம்பர் முப்பதாம் தேதிக்கு மேல் அவரது சலாம் கிடைக்கவில்லை. வருட இறுதி, புத்தாண்டு கப்பலில் வேலைப்பளுவாக இருக்குமென எண்ணினேன். ஜனவரி இரண்டாம் தேதி நண்பர் ஒருவர் பாபு ஹுசைன் இறந்துவிட்டதாக சொன்னார். 

  நள்ளிரவு இரண்டு மணிக்கு லேசாக மார்பு வலியும் மூச்சு திணறலும் இருப்பதாக சொல்லியுள்ளார். காப்டன் அவரை கப்பலின் மருத்துவமனைக்கு மாற்றியுள்ளார். ஒரு படுக்கையும், ஆக்ஸிஜன் பாட்டிலுமே இருக்கும். முதலுதவி செய்த சில நிமிடங்களுக்கு பின் அவர் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுகொண்டார். 

   அர்ஜெண்டினாவில் அவரது ஜனாஸாவை ஒப்படைத்தார்கள். ஒரு மாதத்துக்குப்பின் ஜனாஸா குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது



     நேற்று இந்தோனேசியாவின் அருண் துறைமுகத்தில் சரக்கு நிறைப்பதற்காக வந்தோம். கடந்தவாரம் மலேசியா அருகில் வந்துகொண்டிருக்கும்போது நல்ல மழை பிரிட்ஜின் வெளியே சென்று வெப்பமானியை பார்த்துவிட்டு உள்ளே வந்த இரண்டாம் அதிகாரி தடுமாறி மிக மோசமான முறையில் கீழே விழுந்தார். இடதுகால் மூட்டு லேசாக திரும்பிவிட்டது. அவரே அதை திருப்பி மீண்டும் பழைய இடத்தில் வைக்கவும் செய்தார்.

 நடப்பதில் சிரமமும் வலியும் இருந்தது. பிரிட்ஜில் நாற்காலியில் அமர்ந்தே பணி செய்தார். உணவு அங்கேயே வழங்கபட்டது. லிப்ட் இருப்பதால் அறைக்கும், பிரிட்ஜுக்கும் சிரமப்பட்டு போய்வந்துகொண்டிருந்தார்.
 
  இரண்டாம் சமையல்காரர் கோலாப்பூரின் பாட்டீலுக்கு மார்பிலிருந்து கழுத்து துவங்கும் இடத்தில் லேசான வீக்கமும், உணவை முழுங்குவதில் சிரமமும் இருந்தது. 
 இந்த துறைமுகத்தில் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார் காப்டன். 

கப்பல் கரையணையும் முன் இரவில் மூச்சு விடுவதில் சிரமமாக இருக்கிறது என்றான். கடந்த வாரம் பணியில் இணைந்த இஞ்சின் பிட்டர் வினோத் குப்தா.

 எனவே மூன்றுபேரும் நேற்று மருத்துவமனை சென்றனர். இரண்டாம் அதிகாரிக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் கால் மூட்டு திரும்பியுள்ளது தெரிந்தது.

 இரண்டாம் சமையற்காரர், இஞ்சின் பிட்டர் இருவரும் சொன்னதை வைத்து சில மருந்துகள் கொடுத்து மூவரையும் unfit for work என முத்திரை பதித்து அனுப்பினார் இந்தோனேசிய மருத்துவர். 
வினோத் என்னிடம் சொன்னான். “பிபி செக் பண்ணி, டெதஸ்கோப் வெச்சி பாத்துட்டு அன் பிட் பண்ணிட்டான்” என. மாலையில் கப்பலுக்கு திரும்பி வந்தவர்கள் இரவில் கப்பல் புறப்படும்முன் இறக்கிவிடப்பட்டனர். இன்று மாலையில் அவர்களுக்கு விமானம் மும்பை செல்ல.

 இரு மாதங்களுக்கு முன் பணியில் இணைந்த இரண்டாம் சமையற்காரரும், கடந்த வாரம் வந்த இஞ்சின் பிட்டரும் மருத்துவமனை சென்று மருந்துகள் வாங்கிவரலாம் என எண்ணினர் ஆனால் ஊருக்கு செல்லவேண்டியதாகிவிட்டது. 

  வினோத்திடம் நடப்பதெல்லாம் நன்மைக்கே என சொல்லி அனுப்பினேன்.

நாஞ்சில் ஹமீது,
03-august -2026.
sunitashahul@gmail.com