Saturday, 5 September 2026

Signing off .

 

சூரியனை ஜன்னலில் பிடித்தபோது. 

ஆகஸ்ட் பதிமூன்றாம் தேதி விடுமுறை ரத்தானதில் ஹைதராபாத் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமல் போனது. கொரியாவிலிருந்து கப்பல் சரக்கு நிறைக்க ஆஸ்திரேலியாவின் டார்வின் துறைமுகம் சென்றது. திரும்பி சைனாவில் சரக்கு இறக்கும்போது பணியாளர் மாற்றம் உத்தேசித்திருந்தார் காப்டன். ஆகஸ்ட் முப்பத்திஒன்றாம் தேதி சைனா சென்று சேரும் இரண்டாம் தேதி விமானம் இருக்கலாம் என எதிர்பார்த்தோம்.

  சைனாவின் பினாய் துறைமுகப்பில் கப்பலுக்கு ஆள்கள் வரமட்டுமே முடியும். கப்பலிலிருந்து இறங்கி செல்வது இயலாது என தகவல் வந்தது. ஆஸ்திரேலியாவை சென்று சேர்வதற்கு சில தினங்கள் மட்டுமே இருந்ததால் ஆஸ்திரேலியாவில் பணியாளர் மாற்றத்தை திட்டமிட போதிய கால அவகாசம் இல்லாமல் போய்விட்டது.

  சைனாவில் சரக்கு இறக்கியபின் புறப்பட்டால் ஏழு நாட்களில் மீண்டும் ஆஸ்திரேலியா சென்று சேர்வோம். சைனா வந்தபோது கப்பலை தூரத்தில் நிறுத்தி வைக்க சொனார்கள். கடுமையான காற்று வீசியதால் துறைமுகம் மூடப்பட்டது. இரு இரவுகளும், ஒரு பகலும் காத்திருந்தோம். இரண்டாம் தேதி காலை பதினோரு மணிக்கு பைலட் வந்து இரண்டு மணிக்கு கப்பலை முன்பும் பின்பும் ஒன்பது கயிறுகள் வீதம் கரையில் பத்திரமாக கட்டினோம்.

  எங்களிடம் உள்ள நான்கு சரக்கு தொட்டிகளில் உள்ள ஒரு லட்சத்து நாற்பதாயிரம் மெட்ரிக் டன் எல்என்ஜி திரவத்தில் ஒருலட்சத்து இரண்டாயிரம் மெட்ரிக் டன் மட்டுமே டெர்மினல் வாங்கினார்கள். ஒன்றாம் எண் தொட்டியிலுள்ள முப்பத்திஎட்டாயிரம் மெட்ரிக் டன் அப்படியே மீதமிருந்தது.

  அடுத்து செல்லவேண்டிய துறைமுகம் உறுதியாகததால் கப்பலில் பதினெட்டாயிரம் மணிநேரத்திற்குப்பின் செய்யவேண்டிய பணிகளுக்காக கப்பலை நான்கு நாட்கள் கொரியாவில் நிறுத்திவைக்க முதன்மை இஞ்சினியர் கோரினார். சைனா கொரியா ஒருநாள் பயண தூரம் மட்டுமே.
கொரியாவிலிருந்து ஊருக்கு செல்லும் வாய்ப்பு உருவானது.

கப்பலில் ஒன்றாம் எண் தொட்டியில் உள்ள சரக்கை இந்தோனேசியாவில் இறக்க சொல்லி உத்தரவு வந்தது. பின்னர் இந்தோனேசியாவில் சரக்கை நிறைக்க சொன்னது சரக்கை கையாளும் நிறுவனம். செப்டெம்பர் பன்னிரெண்டாம் தேதி துறைமுகம் உறுதியானது. காப்டன் இரண்டாம் தேதியே எங்களுக்கான விமான சீட்டை முன்பதிவு செய்தார். 
கடந்த வாரம் தோள் பையை துவைத்து தயார் செய்தேன்



 பதிமூன்றாம் தேதி இந்தோனேசியாவின் அருண் துறைமுகப்பில் இறங்கி காரில் ஆறுமணிநேர பயணம் மேடான் எனும் ஊருக்கு. அங்கு இரவு விடுதியில் தங்கிவிட்டு பதினான்காம் மாலை மூன்றரை மணிக்கு மலேசிய ஏர்லைன்சில் குலாலம்பூர் அங்கிருந்து இரவு ஒன்பதரை மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் விமானத்தில் பயணம். இரவு பதினோரு மணிக்கு திருவனந்தபுரத்தில் இறங்கினால் நள்ளிரவு ஒரு மணிக்கு வீடு.
Darvin Australia 



 ஜனவரி பதினைந்தாம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டேன் எட்டு மாதங்கள் ஆகப்போகிறது. நான் முன்பே வீடு வந்துவிடுவேன் என எண்ணியிருந்ததால் பதினாறாம் தேதி பதாமி ஆலயங்களை காண செல்லும் குழுவில் பதிந்திருந்தேன். ஊருக்கு வந்த மறுநாளே புறப்பட முடியாது என்பதால் அதை கைவிட்டிருந்தேன்.

  சைனாவிலிருந்து மூன்றாம் தேதி மாலை கப்பல் புறப்பட்டது. ஊர் செல்ல பத்து நாட்கள் மீதி என கணக்கிட்டுருந்தேன். துறைமுகம் விட்ட மறுநாள் விடுமுறையாக இருந்தது. நேற்று காலை உணவு முடித்து எட்டரைக்கு பிரிட்ஜில் சென்றேன். காப்டன் கணிணியின் முன் அமர்ந்திருந்தார். “இந்தோனேசியா செல்வது தாமதமாகிவிட்டது. அனைத்து டிக்கெட்டுகளையும் ரத்து செய்துவிட்டேன்” என்றார்.
   பதினாறாம் தேதி இந்தோனேசியாவில் சரக்கு நிறைத்து பங்களாதேஷ் செல்ல உத்தரவு வந்தது. அதை காரணம் காட்டி இஞ்சினில் பணிசெய்ய சிங்கையில் நான்கு நாட்கள் நங்கூரம் பாய்ச்சி நிறுத்த கோரினார் முதன்மை இஞ்சினியர். “காப்டன் வி மே கோ எர்லி பிரம் சிங்கப்பூர்” என்றார். எட்டாம் தேதியா எனக்கேட்டேன். “இல்லை பத்தாம் தேதி” என பதிலளித்தார்.
கப்பலை சிங்கையில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி பணிகள் செய்ய கப்பல் முதலாளியும், சரக்கு நிறுவனமும் அனுமதிவழங்கியதால் கப்பல் சிங்கையில் நிறுத்துவது உறுதியானது. ஒன்பதாம் தேதி நள்ளிரவு நங்கூரம் பாய்ச்சி நிறுத்துவோம். மாற்று பணியாளர்கள் பதினொன்றாம் தேதி இரவு கப்பலுக்கு வருவார்கள்.

 பதினொன்றாம் தேதி இரவு கப்பலிலிருந்து இறங்கி சிங்கையில் நள்ளிரவு விடுதிக்கு போவோம். மாலை நான்கு அல்லது ஐந்து மணிக்கு விமான நிலையம் செல்ல வேண்டும். பகலில் எட்டு மணிநேரம் கிடைக்கும் நண்பர்களை சந்தித்துவிட்டு இரவு விமானம் ஏறினால் சனிக்கிழமை நள்ளிரவு வீடு வந்து சேர்வேன். 

  இன்று மாலை விமான சீட்டு வந்துவிடும். இம்முறை கப்பல்காரனின் பிரியாணி கணக்குகள் எதையும் போட முடியவில்லை. ஞாயிறான நாளை பசுபிக் சக்ஸசில் கடைசி பிரியாணி. இரண்டாம் சமையற்காரர் காசர்கோடின் சரத்திடம் மட்டன் பிரியாணி செய்து தர சொல்லியிருக்கிறேன்.

 இம்முறை விடுமுறை உறுதிதான்.

நாஞ்சில் ஹமீது,
05 sep 2026.
sunitashahul@gmail.com

Sunday, 30 August 2026

பறவை பார்த்தல் .



   இரு ஆண்டுகளுக்கு முன் என் இளையமகன் சல்மானுடன் வெள்ளிமலையில் நடந்த பறவை பார்த்தல் வகுப்பில் கலந்துகொண்டேன். “அம்பது வயசாவுது பறவ பாக்க போறாராம்” எனும் குரல் கேட்கத்தான் செய்தது. அதை கேட்காமலே சென்றேன். 

  கப்பலில் பல ஆண்டுகளாக பறவைகளை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். கப்பலில் அவ்வப்போது பறவைகள் வந்துவிடும், அதில் புறாக்கள் மற்றும் கொக்குகள் மட்டுமே மிக நன்றாக தெரிந்தவை. மற்றவை எல்லாம் ஸீ குல், குருவிகள் தான்.

  ஆசான் ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் எழுதி நானே கோரிக்கை வைத்தேன் பறவை பார்த்தல் வகுப்பு ஒருங்கிணைத்தால் என்னை போன்ற குறை அறிவுடையவர்கள் அதை தெரிந்துகொள்ள முடியுமே என. 

 அதை அவர் பாத்தாரோ என்னவோ தெரியாது ஆனால் வெள்ளிமலையில் நடந்த இரண்டாவது பறவை பார்த்தல் வகுப்பில் நான் கலந்துகொண்டேன். நண்பர்களான விஜய பாரதியும், ஈஸ்வர மூர்த்தியும் ஆசிரியர்களாக வகுப்புகளை நடத்தினர்.

 கடலில் கப்பலில் பறைவைகள் எப்படி வருகிறது. கரையில் கப்பலை கட்டிவைத்திருக்கும் போது சொந்த வீடு போல பறவைகள் வந்து பாடி, பறந்து மகிழ்ச்சியாக இருக்கும். பார்க்கும் நமக்கும் அந்த மகிழ்ச்சியை கடத்திவிடும் அதியசம் நிகழும்.

 தீவுகளை ஒட்டிய பயணத்தில் வரும் சிறு குருவிகள் வழி தெரியாமல், நீண்ட தூரம் பறக்கும் சக்தியாக சில தினங்கள் கப்பலிலேயே சுற்றி,சுற்றி வரும். பெரும்பாலும் இறந்துவிடும். பெரிய பறவைகள் நான் ஸீகுல் என நினைத்து கொண்டிருந்தவை பசுபிக் கடலில் பயணிக்கையில் இருபது நாட்கள் வரை கப்பலுடன் தொடர்ந்து வரும். கூட்டமாக வரும் அவை, வெப்பம் மாறுபடும்போது அல்லது (எழுபது பறவைகள் வரை) கரையை எட்டும் முன் அவை காணாமல் போய்விடும்.




    பறவை பார்த்தல் வகுப்புக்குபின் பார்வையே மாறியது. புறா, மைனா, கொக்கு, காகம், ஆந்தை போக என் வீட்டருகே மிக சாதாரணமாக, வால்காக்கை, red vented bulbul ,oriental magppie robin,asian green bee eater common lora,white browed wagtail,brown headed barbet , rose ringed parakeet, common tailor bird,sun bird, pale billed flowerpecker,drango போன்ற நாற்பது வகை பறவைகளை பார்க்க முடிந்தது. 

  நண்பர் வாங்கி தந்த பைனாக்குலர் வழியாக வீட்டின் மாடியில் நின்று பறவையை பார்க்கும்போது சுனிதா “இங்க பாருங்கோ அங்க நிக்கவளுக்கு நீங்கோ பறவைக்க மூலத்த பாக்கது தெரியாது. இத வேற எங்கயாவது வெச்சிகிடுங்கோ” என எச்சரித்தாள். 

என் வீட்டருகில் பறக்கை குளம் இருக்கிறது. அங்கே ஏராளமான பறவைகளை காண முடியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கபட்ட பறவை பார்த்தல் கோபுரம் ஒன்றும் இப்போது தான் என் கண்ணில் பட்டது.

 கப்பலிலும் ஒரு நையாண்டி உண்டு “பர்சனல் பைனாக்குலர் லேடிஸ பாக்கதுக்குதானே” என. நான் அவர்களுக்கு பதிலேதும் சொல்வதே இல்லை. 


பிரவுன் பூபி 


  கப்பலுக்கு வந்தபின் கப்பலை தொடர்ந்து பல நாட்களாக உடன் வருபவை masked booby, brown booby எனவும் அடையாளம் கண்டேன். தலைக்கு மேலே அவை பறப்பதும் மீனை கண்டால் கடலில் மூழ்கி அலகில் கவ்வி மேலே வருவதும் பகல் முழுவதும் பறப்பதும் மீன் வேட்டையுமாகவே இருக்கும். மூன்று தினங்களுக்குப்பின் வயிறு நிரம்பி டெக்கில் அமர்ந்து ஆழ் மோனத்தில் ஓய்வில் இருக்கும். அது நல்லுறக்கம் அப்போது அருகில் சென்றால் அவை நம்மை உணர்வதே இல்லை. பூபிகள் பறந்து சென்றபின் உண்ணாமல் விட்ட மீன்களால்,பாதி உண்ட மீதி என டெக் மீன்களால் நிறைந்து இருக்கும்.

பிரவுன் பூபி ஆழ்ந்த உறக்கம் 



  நிலத்தில் பறவைகளை இவ்வளவு அருகில் பார்ப்பது கடினம். காலையில் தலைக்கு மேலே மிக அருகில் பறக்கையில் திரும்பி பார்த்து “ஷாகுலே குட் மார்ன்னிங்” என சொல்வதும் நிகழும். சிறகசைக்காமல் கப்பலின் வேகத்துக்கு இணையாக (17 knot) பறக்கும், நொடியில் சிறகை சுருக்கி நீரில் மூழ்கிவிடும். அதை காணாமல் மனம் பதைபதைக்கும் போது வாயில் மீனுடன் அல்லது வெற்று அலகுடன் மேலெழுந்து வரும்.

 பூபிகள் எப்போதும் கப்பலில் உடன் பயணிக்கும் மாலுமிகள் போலவே ஆகிவிட்டன. கடந்த வாரம் டெக்கில் எனது ஸ்டோர் அறையை திறந்தபோது மைனாவை விட கொஞ்சம் பெரிய கருஞ்சாம்பல் பறவை ஒன்று உள்ளே இருந்ததை கண்டேன். முந்தைய மதியத்திற்கு மேல் அந்த கதவை அடைத்திருந்தேன். இருபது மணிநேரத்திற்கு மேல் உள்ளே இருந்தது. என்ன நினைத்திருக்கும், எப்படி பயந்திருக்கும் என்றெல்லாம் எனக்கு தோன்றியது. 

  கதவை திறந்ததும் வெளியே பறந்து சென்றது. அன்றும், அதன் பின்பும் டெக்கிலுள்ள அந்த கதவை அடைக்கும்முன் உள்ளே யாராவது இருக்கிறார்களா என சோதித்து உறுதி செய்கிறேன். பறவை பார்தலினால் வந்த அன்பு தான் அது. 



சில தினங்களுக்கு முன் oriental greenfinch பறவைகள் இரண்டை டெக்கில் பார்த்தேன். பாடி, பறந்து கொண்டிருந்தது. கப்பலுக்கு அருகில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் டெக்கில் வந்துவிடும். நேற்று மாலை எங்கள் பயர் ட்ரில்ல்ஸ் நடந்தபோது பதினைந்துக்கும் மேலான பறவைகள் இருந்ததன. எங்களுக்கு மிக அருகில் பயமின்றி பறந்தும், நடந்தும் சென்றது. டெக்கில் அவை உடலசைக்காமல் வேகமாக நடப்பது, கீச்சு குரலில் ஒலி எழுப்புவது என எல்லாமே இனிமை. அதை பார்த்துக்கொண்டே இருத்தல் அக மகிழ்வு மட்டுமல்ல உள்ளம் குவிந்து எண்ணங்களில்லாமல் ஒரு தியான நிலை. அது ஒரு பேரனுபவம்.

  நேற்றே சமையல்காரர் சரத்திடம் சொன்னேன் பறவைகளுக்கு சாப்பாடு வேண்டுமென. அரிசி வேண்டாம் அதைவிட சிறிதாக எதாவது தானியம் வேண்டுமென கேட்டேன். இன்று காலை கொஞ்சம் அவல் தந்தார். நீரில் நனைத்து வைக்க சொன்னார். நான் அப்படியே கொண்டு சென்று ஒரு பேப்பர் தட்டில் கொஞ்சம் கொட்டி வைத்தேன். மூரிங் விஞ்ச் அருகே பறவை ஒன்று நிற்பதை கண்டேன் அருகிலேயே குறைந்த இடைவெளியுள்ள இரும்பு பட்டைகளுக்குள் தலை மாட்டி ஒன்று இறந்து போயிருந்தது. கையில் எடுத்து கடலில் போட்டேன். அதன் தலையை காணவில்லை.



 ஒரு மணிநேரம் கழித்து போய் பார்த்தேன் அவலை பறைவைகள் தின்ன சுவடே இல்லை.தட்டு நிறைந்தே இருந்தது. மெஸ் மேன் ஸ்டீபன் அவை பின்னர் சாப்பிடும் என்றார். 

நாஞ்சில் ஹமீது,

30 aug 2026.

Sunitas

hahul@gmail.com





Saturday, 22 August 2026

கடிகாரம் பின்னே செல்லுதல்.




மெக்ஸிகோவின் கோஸ்டா அசுல் துறைமுகப்பில் ஏற்றிய சரக்கை கொரியாவின் இன்சொனுக்கு கொடுக்கசொல்லி தகவல் வந்தது. மெக்ஸ்சிகோ – கொரியா இடையே ஒன்பது மணிநேர வித்தியாசம்.  
மொத்தம் பதிமூன்று நாள் பயணத்தில் ஒரு நாள் காணாமல் போகும்(அதாவது பன்னிரெண்டு நாட்கள்). பன்னிரெண்டு தினங்களில் ஒன்பது நாட்கள் கப்பலின் கடிகாரம் பின்னோக்கி நகர்ந்தது. 
 
 கடிகாரம் பின்னோக்கி சென்ற நாட்களில் ஒரு நாளைக்கு இருபத்தியைந்து மணிநேரம். இரவில் ஒரு மணிநேரம் அதிகமாக கிடைத்தது. மாலை ஆறு மணிக்கே தூக்கம் அழுத்தும் பின்னர் அதிகாலை இரண்டு அல்லது மூன்று மணிக்கு விழிப்பு உறுதி. 
 அதை தவிர்ப்பதற்காக இரவு எட்டுமணிக்கு நான், பத்தி சாப், சந்தோஷ், முதன்மை அதிகாரி தினேஷ் ஆகியோர் மனமகிழ் மன்றத்தில் தினமும் படம் (திர்சியம் 3, பிளாஸ்ட், கறுப்பு, பால்டி, லோகா,நாராயணியூடே மூணு ஆம்மக்கள்,பரிமளம் அன்ட் கோ படங்களாக) பார்த்தோம்.

 பத்து மணிக்கு மேல் அறைக்கு வந்து பதினோரு மணிக்குமேல் தூங்க செல்லும்போது மணி பத்தாக இருக்கும். அதிகாலை ஐந்துமணிவரை நல்லுறக்கம். உடல் கடிகாரம் அதிக சிரமப்படவில்லை இம்முறை. ஒரே மாதத்தில் இரு முறை இரவு பகலாகவும்,பகல் இரவாகவும் மாறியது. கடிகாரம் முன்னே செல்லும்போது குழம்பிய உடல் கடிகாரம் பின்னோக்கிய நகர்த்தலில் கொஞ்சம் சமாளித்துக்கொண்டது.
 வாட்ச் கீப்பெர்ஸ் இப்போதும் கொஞ்சம் கடினம்தான்.

  July 15 ஆம் நாளை இல்லாமலாக்கி செவ்வாய்க்கிழமையிலிருந்து வியாழனுக்கு தாவியதில் புதன்கிழமை இல்லாமல் ஆகியது. மெக்ஸிகோவிற்கு செல்லும்போது பயணத்தில் வெப்பம் சிலநாட்கள் ஒன்பது டிகிரிக்கு சென்றது. டெக்கில் ஜாக்கெட் அணிந்து பணிசெய்தோம். அறையின் வெப்பம் பதினைந்து டிகிரி வரை சென்றது. 
 அதை மனதில் வைத்து அதே போன்று வெப்பம் குறைந்தால் சமாளிக்க இரண்டாம் கம்பளி போர்வையை எடுத்துவைத்திருந்தேன். ஆனால் அறையில் வெப்பம் பதினெட்டு டிகிரிக்கு கீழ் குறையவேயில்லை.அதனால் இரண்டாவது கம்பளி போர்வை தேவைப்படவேயில்லை.

 கொரியாவின் இன்சொன் அருகில் நண்பர் மதுரைவீரன் சதீஷ் வசிக்கிறார். இரு ஆண்டுகளுக்கு முன் நான் பணிபுரிந்த கப்பலான எல்என்ஜி அலையன்ஸ் இன்சொன் துறைமுகம் வந்தபோது சதீஷ் கப்பலுக்கு வந்து இரவு என்னுடன் தங்கி சென்றார். கப்பலை சுற்றிபார்த்துவிட்டு பெரும் வியப்படைந்தார். இப்போதும் காப்டனிடம் கேட்டேன் என் சகோதரர் கப்பலுக்கு வரவிரும்புகிறார் என. 

 காப்டன் சதீசின் ஆவணங்களை கேட்டார். இரு தினங்களுக்கு பிறகு காப்டன் “உனது உடன்பிறந்த சகோதரனா சதீஷ்” எனக்கேட்டார். நான் “இல்லை உறவில் சகோதரன்” என்றேன். ரத்த உறவு அல்லாதவர்களுக்கு டெர்மினல் அனுமதிக்காது என மின்னஞ்சல் வந்துள்ளதாக சொன்னார். 

 முதன்மை அதிகாரி தினேஷ் “ஏன் அண்ணே அப்டி சொன்னீங்க” எனக்கேட்டார். “டாக்குமெண்ட் ஏதாவது கேட்டா என்ன செய்ய” என்றபோது. வளர்ப்பு தாயின் மகன் என சொல்ல வேண்டியதுதான் என்றார். என்னால் பொய் சொல்வது சிரமம், எனவே அந்த யோசனையும் அப்போது வரவில்லை.
நண்பர் சதீஷ் 2024இல் கப்பலுக்கு வந்தபோது.



  நண்பர் கப்பலுக்கு வரும் வாய்ப்பு தவறிப்போனது. இம்முறை கப்பலிலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு செல்ல இறங்கியவர்கள் இன்சொனில் இரு இரவுகள் தங்கிவிட்டு சென்றனர். மீண்டும் கொரியா வந்தால் அல்லது கொரியாவில் இறங்கினால் சதீசை பார்க்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

 நாஞ்சில் ஹமீது,
  20 july 2026.
sunitashahul@gmail.com
  கடந்த மாதம் எழுதிய பதிவு. இப்போதுதான் வலையேற்றுகிறேன்.

Sunday, 9 August 2026

ஹைதராபாத் .

    


இரண்டாம் தேதி மாலை இந்தோனேசியாவின் அருண் துறைமுகப்பிலிருந்து கொரியாவை நோக்கி புறப்பட்டோம். இரண்டே ஆண்டுகளான புதிய இந்த கப்பலின் இஞ்சின் வாட்சில்லா நிறுவன தயாரிப்பு. இரட்டை இஞ்சின் கொண்டது. இது டீசல், ஹெவி பீயுல் ஆயில் மற்றும் கேஸில் ஓடும். 

 கேஸ் மற்றும் டீசல் அல்லது ஹெவி ஆயில் (fuel sharing) சேர்த்தும் ஓடும். அதாவது கேசுக்கான நாசில் மட்டும் தனி. இந்த எல்என்ஜி கப்பலில் திரவ வடிவில் இருக்கும் கார்கோ ஆவியாக மாறும்போது ஏற்டும் சரக்கு தொட்டியின் அழுத்தத்தை குறைக்க அந்த வாயுவை காற்றில் கலக்கவிடாமல் அதை உபயோகித்து கப்பலின் இஞ்சின் மற்றும் ஜெனரேட்டரை இயக்குகிறோம்.

 இந்த இஞ்சின் வாட்சிலாவின் பெயுலிவர் மாடல் என்றார்கள் இஞ்சினியர்கள். காஸ் மோடில் கப்பல் இயங்கும்போது பீயுல் வால்வுகள் சீக்கிரமே பழுதாகிவிடுகிறது. டீசல் மற்றும் ஹெவி ஆயிலில் இயங்குகையில் எந்த பிரச்னையும் இல்லை. வழக்கமாக ஒவ்வொரு இரண்டாயிரம் மணிநேரத்திற்கு பின் பீயுல் வால்வை மாற்ற வேண்டும். ஆனால் இந்த கப்பலில் கேஸில் ஓடும்போது பீயுல் வால்வுகள் சீக்கிரமே பழுதாகிவிடுவதால். கப்பலை அவ்வப்போது நடுக்கடலில் நிறுத்தி பீயுல் வால்வ் மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது.

 கொரிய கட்டுமானம் ஆன இந்த கப்பலில் சில இயந்திரங்கள் சீக்கரமே பழுதாகிவிட்டன. முக்கிய இயந்திரத்தின் காற்றை குளிர்விக்கும் ஏர் கூலர் குழாய்களில் ஓட்டைகள் விழுந்துள்ளது. கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி ஏர் கூலரை கழற்றி பிளக் போட்டுள்ளனர்.

 நான் வந்தபின் மீண்டும் இரண்டாவது இஞ்சினின் கூலரிலும் ஓட்டை விழுந்தது ஒரு முழுநாளும் கப்பலை நிறுத்திவைத்து அதையும் பிளக் போட்டோம்.

 இப்போது மீண்டும் முதலாவது இஞ்சினின் கூலரில் ஓட்டை. ஒற்றை இஞ்சினில் கப்பலை நிறுத்தாமல் இயக்கி பழுதான கூலரை சரி செய்தோம். பீயுல் வால்விலும் பிரச்னை இருந்ததால் அதையும் மாற்றினோம். காலை எட்டுமணிக்கு தொடங்கி இரவு பத்து மணிவரை பணிசெய்தோம்.

 மாலை ஆறு மணிக்கு முதன்மை இஞ்சினியர் சொன்னார் கொரியாவிலிருந்து நீ ஊருக்கு போகிறாய் என. கொரியாவிலிருந்து பணியாளர் மாற்றம் இல்லாமலிருந்தது கடந்த வாரம் மெடிக்கல் அன்பிட் ஆகி ஊருக்கு சென்றவர்களுக்கு பதிலாக மூவர் வருகிறார்கள். அவர்களுடன் எனக்கான மாற்று பணியாள் வருகிறார். இம்மாதம் முழுவதும் கப்பலில் இருக்க வேண்டுமென நினைத்தேன். ஆகஸ்ட் மாத முழு சம்பளமும் கையில் கிடைத்தால்தான் ஊருக்கு சென்று இரண்டு மாதமாவது இருக்க முடியும்.


ஹைமா , ஜோஷிகா மெல்போர்ன்(2010)


   கடந்த பிப்ரவரி மாதம் ஹைதராபாத்தை சேர்ந்த நண்பர் ராஜு அழைத்திருந்தார். மகள் ஜோஷிகாவுக்கு ஆகஸ்ட் மாதம் திருமணம் குடும்பத்துடன் கண்டிப்பாக வர வேண்டுமென அழைப்பு விடுத்தார். முயற்சிக்கிறேன் என்றேன். இல்லை கண்டிப்பாக வரவேண்டும். நீ மட்டும்தான் கப்பல் பிரெண்ட் என்றார்.

ஜோஷிகா 


 2010 ஆம் ஆண்டு ராஜுவுடன் மனைவி ஹைமா மற்றும் பத்து வயதான ஜோஷிகாவும் கப்பலில் இருந்தனர். இத்தனை ஆண்டுகளாக அவர்களுடன் தொடர்பிலேயே இருந்தேன். ஹைமா அழைக்கும் போதெல்லாம் ஹைதராபாத் எப்போது வருகிறாய் என கேட்பாள். ஒரு நாள் வருவேன் என்பேன். அந்த ஒருநாள் எப்போது என கேட்டுக்கொண்டே இருப்பாள். மணப்பெண் ஜோஷிகா பள்ளிப்படிப்பை முடித்து கலிபோர்னியாவில் மருத்துவம் படித்து டாக்டராக இருக்கிறார்.

 சுனிதாவிடம் சொன்னேன் நான் ஊருக்கு வருகிறேன் ஹைதராபாத் திருமணதிற்கு சேர்ந்து போகலாம் என. அவளும் சம்மதித்துவிட்டாள். கப்பல் பன்னிரெண்டாம் தேதி கொரியா சென்றடையும். பதிமூன்றாம் தேதி கப்பலிலிருந்து இறங்கி பதினான்காம் தேதி விமானம் ஏறி ஊர் செல்லும்போது பதினைந்தாம் தேதி ஆகி விடும். 

 ஆகஸ்ட் பதினாறாம் தேதி மாலை ரிசப்ஷனும் நள்ளிரவு திருமணமும். சுனிதாவிடம் ஹைதராபாத் வந்துவிடு நான் இங்கே ஹைதராபாத்துக்கு டிக்கெட் கேட்டு பார்க்கிறேன் என்றேன்.

  நாகர்கோவிலிருந்து வாரத்தில் ஒரு ரயில் செல்கிறது. முப்பத்தியிரண்டு மணி நேரம். காலை ஐந்து மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் இரண்டு மணிக்கு சேரும். வடசேரியிலிருந்து மதியம் இரண்டரைக்கு பஸ் போகிறது பதினெட்டு மணிநேரம். மறுநாள் காலை ஒன்பதுமணிக்கு போய் சேரும். மூன்றாவதாக திருவனந்தபுரத்திருந்து விமானம் இரண்டு மணிநேரம் என சொன்னேன்.

 “உங்க டிக்கெட் வரட்டு முதல்ல” என்றாள்.

 கப்பலில் மூன்றாம் அதிகாரி சபரீசன் வியாழக்கிழமை மாலை அழைத்து. “பைனல் டெஸ்டிநேஷன் சொல்லுங்க” எனக்கேட்டார். “ஹைதராபாத்” என்றேன். நண்பர் ராஜிவிடம் கப்பலிலிருந்து ஹைதராபாத் வருகிறேன் என்றேன் மகிழ்ச்சியடைந்தார்.



  சுனிதாவை அழைத்து எப்படி வருகிறாய் டிக்கெட் போடுகிறேன் என கேட்டபோது. “உங்க டிக்கெட் கைல கிடச்ச பொறவு பாக்குலாம்” என்றாள்.



 வெள்ளிக்கிழமை மாலை மழை பெய்ததால் நான்கு மணிக்கே அறைக்கு வந்ததால் எனது பயணப்பையை தயார் செய்தேன். ஆறு மாதமாக நிலத்தில் எங்கும் செல்லாததால் துணிகள், புத்தகங்கள் மட்டுமே லக்கேஜ் அரை மணி நேரத்தில் பாக்கிங் முடிந்தது. புதன்கிழமை வரை உபயோகிக்கும் துணிகள் மற்றும் பொருட்கள் மட்டுமே மீதி. ஆறு மணிக்கு காப்டனின் பிறந்தநாள் கேக் வெட்டியபின் மனமகிழ் அறையில் படம் பார்த்துகொண்டிருந்தோம் காப்டன் வந்தார். “ஷாகுல் உனது சைன் ஆப் கான்சல்” என்றார்.

  


        மூன்றாம் அதிகாரி சபரீசன் சொன்னார் “சும்மா இருத்த மனுசன சைன் ஆப்ன்னு சொல்லி, கான்சல் பண்ணிட்டாங்க” என்றார்.

   ஹைதராபாத்தில் திருமணத்தில் கலந்து கொள்ளும் ஆசையில் இரு தினங்கள் மகிழ்ந்திருந்தேன்.

நாஞ்சில் ஹமீது,

09 aug 2026.

sunitashahul@gmail.com

   

  

Monday, 3 August 2026

கப்பல் காரனின் உடல்நல குறைவுகள்.



  
கப்பலில் பணிபுரியும்போது உடல்நல குறைவு, விபத்துக்கள் ஏற்படாமல் பாதுகாத்து கொள்வது மிக அவசியம். நடுக்கடலில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காது. அளவான சத்தான உணவுவுண்டு, தேவைக்கு உடற்பயிற்சியும் செய்து புகை மது இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் மாலுமிதான் நீண்டநாள் கப்பலில் பணிபுரிய முடியும்.

  கப்பல் காரர்கள் பணியில் இணையும்முன் ஒவ்வொரு முறையும் முழுமையான மருத்துவ பரிசோதனையில் வெற்றி பெற வேண்டும். எக்ஸ் – ரே, ரத்தம், சிறுநீர், ஈசிஜி, கண், காது, ஆசன வாய் என முழுமையான சோதனைகள் அவை. நாற்பது வயதை தாண்டினால் த்ரெட்மில் டெஸ்ட் கட்டாயம்.

 பத்து ஆண்டுகளுக்கு முன் நிறையபேருக்கு சிறுநீரக கல் பிரச்னை வந்ததால் அப்டமன் ஸ்கேன் கட்டாயமானது. தற்போது கப்பலுக்காக விமானம் ஏறும் முதல் நாள் ஆல்ஹகால் டெஸ்ட் அவசியம். அதன்பின்பும் நிறையப்பேர் கப்பலிலிருந்து சிறுநீரக கல் பிரச்சனையால் ஊருக்கு சென்றார்கள்.

  கப்பலில் முடியாமல் ஆனால் என்ன ஆகும். இரண்டாம் அதிகாரிதான் கப்பலில் மருத்துவ அதிகாரி அட்வான்ஸ் மெடிக்கல் கோர்ஸ் முடித்திருப்பார்கள். கப்பலில் இருக்கும் மருத்துவமனை மற்றும் மருந்துகளை அவர் நிர்வகிப்பார். பெரும்பாலும் மருத்துவ அதிகாரியாக இருப்பவர் அடிப்படைகள் கூட தெரியாத கூமுட்டையாக இருப்பார்கள். 
முதன்மை அதிகாரியும், காப்டனும் கூட மருத்துவ அதிகாரியாக இருந்து வந்தவர்கள் ஆதலால் இன்னும் கொஞ்சம் அனுபவம் இருக்கும். மார்பின் போன்ற சில முக்கியமான மருந்துகள் காப்டனிடம் மட்டுமே இருக்கும்.

வயிற்றுவலி, காய்ச்சல், இருமல், தோலில் கொப்புளங்கள், தோல் சிவந்து போதல் ஆகியவை ஏற்பட்டால் உடல் வெப்பம், இரத்தஅழுத்தம் சோதிக்கப்பட்டு ரோம் நகரில் இருக்கும் தன்னார்வலர்களாக தொண்டாற்றும் மருத்துவ குழுவுக்கு படங்களுடன் அனுப்பிவைத்தால் அவர்கள் என்ன செய்கிறது என யூகித்து சில மருந்துகளை கொடுக்க ஆலோசனை வழங்குவார்கள். அந்த மருந்து பெரும்பாலும் கப்பலில் இருக்கும்.

  கப்பலில் கண்டிப்பாக வைத்திருக்கவேண்டிய மருந்துகளை IMO ( international marine orgainsation) வகுத்துள்ளது. எலும்பு முறிவு, தையல் போடும் அளவு காயம் ஏற்பட்டால் கட்டு போட்டு கப்பல் துறைமுகம் செல்வதுவரை காத்திருக்க வேண்டியது தான்.

 மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது. கப்பல் கரையை ஒட்டி பயணித்தால் CPR முதலுதவி கொடுத்து அவசரமாக ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்கள் உண்டு. கரையிலிருந்து நானூறு மைல் தள்ளி பயணித்தால் மரணத்தை ஏற்றுகொண்டு கப்பல் பிரீசர் பெட்டியில் கரையணைவதுவரை உடலாக இருக்க வேண்டியதுதான்.
 எந்த அவரச சிகிச்சையும் உடனே கிடைக்க வாய்ப்பேயில்லை. 

  2006 ஆம் ஆண்டு நான் பணி செய்த கப்பல் பிலாண்டர். கப்பலேறிய இருபதாம் நாள் எனக்கு ஒவ்வாமையால் கடுமையான தோல் அரிப்பு ஏற்ப்பட்டது. இஸ்ரேலின் இலாத் நகரில் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபட்டேன். மருந்துகள் தந்தார் டாக்டர். முழுமையாக குணமாகாமல் இரண்டு மாதத்திற்குள்ளாகவே சிங்கபூரிலிருந்து பணியிலிருந்து விடுவிக்கப்பட்டேன்.

  2007 ஆம் இருந்த கப்பல் ஸ்டெயிட்ஸ் வென்ஞ்சர். பயிற்சி பிட்டராக இருந்தேன். கப்பல் மலேசியா சென்றடைய ஐந்துமணிநேரம் இருந்தது. ஆக்ஸிஜன் – அசிட்டிலீன் பாட்டில்கள் இருக்கும் ட்ராலியை தள்ளிக்கொண்டு சென்றேன் மேலாக மழை பெய்து டெக் ஈரமாக இருந்தது. டெக்கில் ராம்ப் போல இருந்த இடத்தில் ட்ராலியை தள்ளும்போது கீழே விழுந்து வலதுகை மோதிர விரல் கிழிந்துவிட்டது. முதன்மை அதிகாரி முதலுதவி செய்தார். கப்பல் கரையணைந்ததும் காப்டன் கெலாங் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். அழகான இளம் தமிழ் மருத்துவச்சி “தெக்கணும், மூணு தையல்” என்றார். 

 கப்பலில் எக்ஸ்சாஸ்ட் வால்வ் தூக்கும்போது கைவிரல்கள் நசுங்கிய ஒருவர் ஐந்து தினங்களுக்குப்பின் ஜப்பானில் மருத்துவமனை சென்றார். விரல் நுனிகள் லேசாக வெட்டப்பட்டு வீட்டிற்கு அனுப்பிவைக்கபட்டார். 

ஜப்பான், தைவான், கொரியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நல்ல மருத்துவம் கிடைப்பது உறுதி. அந்த பகுதிகளில் கப்பல் பயணத்தில் இருந்தால் அது கிட்டும் வாய்ப்பு உண்டு.

  ஜப்பானில் முக்கிய இயந்திரத்தின் பராமரிப்பு பணிசெய்யும்பொது முழங்கைக்கு கீழே கை மட்டும் துண்டாகி இன்ஜினுக்குள் விழுந்துவிட்டது, அழுக்கு எண்ணையில் கிடந்த கையை எடுத்து நீரில்கழுவி பாலிதீன் பையில் ஐஸ்போட்டு கட்டி அனுப்பிவைத்ததை ஜப்பானிய டாக்டர்கள் சில மணிநேரத்தில் ஒட்டி சரி செய்தனர்.

  2015 பணியில் இணையும்போதே எனது வலதுகை பெருவிரல் வீங்கி பழுத்துவிட்டது, நல்ல காய்ச்சலும். அமெரிக்காவின் நீயூயார்க் நகரில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார் காப்டன். டாக்டர் டிபானி எனது மருத்துவ வரலாறை கேட்டபின். கூரிய கத்தியால் லேசாக கீறி பழுப்பை அகற்றி கட்டுபோட்டு மருந்துகள் தந்தார்.

  இரு ஆண்டுகளுக்கு முன் கேரளாவை சார்ந்த பிராசாந்த் காலையில் பணிக்கு வரவில்லை. அறையில் நாற்காலியில் அமர்ந்தபடி இருந்தார். கப்பலில் பாதையை திருப்பி ஹோனலுலுவில் நிறுத்தி உடலை ஒப்படைத்தனர். லேசான மாரடைப்பால் இறந்ததாக உடற்கூராய்வு பரிசோதனை சொல்லியது. அறையில் தனிமையில் இல்லாமல் இருந்திருந்தால் அந்த மரணம் தவிர்க்கபட்டிருக்கும்மோ என எனக்கு தோன்றியது.

  சமையற்காரர் பாபு ஹுசைன் காலையில் தினமும் தவறாமல் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என வாட்ஸ் அப் அனுப்புவார். கடந்த டிசம்பர் முப்பதாம் தேதிக்கு மேல் அவரது சலாம் கிடைக்கவில்லை. வருட இறுதி, புத்தாண்டு கப்பலில் வேலைப்பளுவாக இருக்குமென எண்ணினேன். ஜனவரி இரண்டாம் தேதி நண்பர் ஒருவர் பாபு ஹுசைன் இறந்துவிட்டதாக சொன்னார். 

  நள்ளிரவு இரண்டு மணிக்கு லேசாக மார்பு வலியும் மூச்சு திணறலும் இருப்பதாக சொல்லியுள்ளார். காப்டன் அவரை கப்பலின் மருத்துவமனைக்கு மாற்றியுள்ளார். ஒரு படுக்கையும், ஆக்ஸிஜன் பாட்டிலுமே இருக்கும். முதலுதவி செய்த சில நிமிடங்களுக்கு பின் அவர் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுகொண்டார். 

   அர்ஜெண்டினாவில் அவரது ஜனாஸாவை ஒப்படைத்தார்கள். ஒரு மாதத்துக்குப்பின் ஜனாஸா குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது



     நேற்று இந்தோனேசியாவின் அருண் துறைமுகத்தில் சரக்கு நிறைப்பதற்காக வந்தோம். கடந்தவாரம் மலேசியா அருகில் வந்துகொண்டிருக்கும்போது நல்ல மழை பிரிட்ஜின் வெளியே சென்று வெப்பமானியை பார்த்துவிட்டு உள்ளே வந்த இரண்டாம் அதிகாரி தடுமாறி மிக மோசமான முறையில் கீழே விழுந்தார். இடதுகால் மூட்டு லேசாக திரும்பிவிட்டது. அவரே அதை திருப்பி மீண்டும் பழைய இடத்தில் வைக்கவும் செய்தார்.

 நடப்பதில் சிரமமும் வலியும் இருந்தது. பிரிட்ஜில் நாற்காலியில் அமர்ந்தே பணி செய்தார். உணவு அங்கேயே வழங்கபட்டது. லிப்ட் இருப்பதால் அறைக்கும், பிரிட்ஜுக்கும் சிரமப்பட்டு போய்வந்துகொண்டிருந்தார்.
 
  இரண்டாம் சமையல்காரர் கோலாப்பூரின் பாட்டீலுக்கு மார்பிலிருந்து கழுத்து துவங்கும் இடத்தில் லேசான வீக்கமும், உணவை முழுங்குவதில் சிரமமும் இருந்தது. 
 இந்த துறைமுகத்தில் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார் காப்டன். 

கப்பல் கரையணையும் முன் இரவில் மூச்சு விடுவதில் சிரமமாக இருக்கிறது என்றான். கடந்த வாரம் பணியில் இணைந்த இஞ்சின் பிட்டர் வினோத் குப்தா.

 எனவே மூன்றுபேரும் நேற்று மருத்துவமனை சென்றனர். இரண்டாம் அதிகாரிக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் கால் மூட்டு திரும்பியுள்ளது தெரிந்தது.

 இரண்டாம் சமையற்காரர், இஞ்சின் பிட்டர் இருவரும் சொன்னதை வைத்து சில மருந்துகள் கொடுத்து மூவரையும் unfit for work என முத்திரை பதித்து அனுப்பினார் இந்தோனேசிய மருத்துவர். 
வினோத் என்னிடம் சொன்னான். “பிபி செக் பண்ணி, டெதஸ்கோப் வெச்சி பாத்துட்டு அன் பிட் பண்ணிட்டான்” என. மாலையில் கப்பலுக்கு திரும்பி வந்தவர்கள் இரவில் கப்பல் புறப்படும்முன் இறக்கிவிடப்பட்டனர். இன்று மாலையில் அவர்களுக்கு விமானம் மும்பை செல்ல.

 இரு மாதங்களுக்கு முன் பணியில் இணைந்த இரண்டாம் சமையற்காரரும், கடந்த வாரம் வந்த இஞ்சின் பிட்டரும் மருத்துவமனை சென்று மருந்துகள் வாங்கிவரலாம் என எண்ணினர் ஆனால் ஊருக்கு செல்லவேண்டியதாகிவிட்டது. 

  வினோத்திடம் நடப்பதெல்லாம் நன்மைக்கே என சொல்லி அனுப்பினேன்.

நாஞ்சில் ஹமீது,
03-august -2026.
sunitashahul@gmail.com

Thursday, 23 July 2026

கோஸ்டா அசுல் (மெக்ஸிகோ)



       இந்த மாதம் ஆறாம்தேதி மெக்ஸிகோவின் கோஸ்டா அசுல் (COASTA AZUL) துறைமுகப்பிற்கு வந்தோம். 2008 ஆம் ஆண்டு முதன்முதலாக மெக்ஸிகோ வந்தேன். 

 அக்கபுல்கோ, மன்சிலனோ, வெராகுரூஸ், லார்சனோ கார்டனஸ் என அழகிய துறைமுகங்கள். தமிழகத்தை போன்ற தட்பவெப்பநிலை, அழகான பெண்கள் மற்றும் நம்மை போலவே கொஞ்சம் காரமான உணவை சாப்பிடுபவர்கள். 

 கப்பலை நிறுத்தியபின் வாயிலை தாண்டினால் சாலை. மிக அழகான கடற்கரைகளை கொண்ட ஊர் சனிக்கிழமை மாலையானால் சாலையை ஒட்டிய கடைகளில் அளவான மதுவருந்திய ஜோடிகள் (இருபது முதல் அறுபது வயது வரை) நிதானமாக ஆடி மகிழ்வதை காணலாம்.

கார் ஏற்றும் கப்பல் 


  காரேற்றும் கப்பலிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு முன் எல்பிஜி கப்பலில் வந்தபின் இப்போதுதான் முதல் முறையாக மெக்ஸிகோ வருகிறேன். இருந்தும் இங்கே வெளியே செல்ல அனுமதியில்லை பழைய நினைவுகளில் மூழ்கி வெளியேறினேன்.

 துறைமுகத்தை ஒட்டிய பகுதி கரையாக இருக்கும் அதன்பின் நிலப்பரப்பு. கரையை ஒட்டி பச்சைபசெலென மரங்களோ புல்வெளியோ கட்டிடங்களுமாகவே இருக்கும். கோஸ்டா அசுல் பசுபிக் கடலில் இருக்கிறது. இந்த டெர்மினல் கடலுக்குள் இருப்பது போலவே இருக்கிறது. பசுபிக் கடலில் இருக்கும் மலையில் அலைகள் அடித்துக்கொண்டிருக்கிறது. கடலில் அறுநூறு மீட்டருக்கு மேல் கான்க்ரீட் தளம் அமைத்து பிரேக் வாட்டர் அமைத்து பாறையை வெட்டி சமதளபடுத்தி டெர்மினல் அமைத்துள்ளனர். 

 இது கொஞ்சம் உயரமான நீண்ட மலை, மலையின் மறுபுறம் நெடுஞ்சாலை செல்கிறது அங்கு சமதளபகுதியும் ஊரும் இருப்பதை கற்பனையில் விரித்துக்கொண்டேன். அதாவது மலை ஏறி, இறங்கினால் இருக்கிறது நெடுஞ்சாலை. மலையில் மேற்பரப்பில் ஒரு கிராமம் இருக்கிறது. நூறு வீடுகள் இருக்கலாம். பைனாகுலர் வழியாக அந்த வீடுகளை பார்த்துக்கொண்டிருந்தேன். 

 வீட்டின் வாசலில் அல்லது ஜன்னலை திறந்தால் கண்முன் வரிந்துகிடக்கும் பசுபிக் கடல் தான் காட்சி. இரவில் இருளில் வானில் ஜொலித்துக்கொண்டிருக்கும் கோடானுகோடி நட்சத்திரங்களை பார்த்தவாறு பிரபஞ்சத்தோடு இணைந்துவிடலாம். சுத்தமான காற்றும் உறுதி. அந்த வீடுகளில் வாழ்பவர்கள் ஆசீர்வதிகபட்டவர்கள். 

சுனாமி வருமோ எனும் எண்ணம் எனக்கு வராமலில்லை. சுனாமி மலை உச்சிவரை செல்லாது என்பதே என் கணிப்பு. கப்பலை கட்டியிருந்த டெர்மினலில் பணிசெய்பவர்களை அழைத்து செல்லும் வண்டிகள் மலையிறங்கி வருவதையும் பார்த்தேன். கப்பல் நகர்ந்தபின் மலை முடியும் இடத்தில் கொஞ்சமான சமவெளி பரப்பில் இன்னும் சில வீடுகள் இருக்கிறது. ஆனால் மலையுச்சியில் வாழ்பவர்களுக்கு கிடைக்கும் அனுபவம் இவர்களுக்கு நிச்சயம் இருக்காது.

  கப்பலுக்கு வந்திருந்த டெர்மினல் பணியாளர்களிடம் டெர்மினலிலிருந்து சற்று தள்ளியிருந்த பிரமாண்டமான பங்களாவை காட்டி கேட்டேன். அரசு மற்றும் ராணுவ உயரதிகாரிகள் ஓய்வுக்காக வந்து தங்குமிடம் என்றார்கள். நான் கேட்ட பணியாளரிடம் அந்த பங்களாவின் வீடியோக்கள் இருந்ததை மொபைலில் காட்டினார்.

 ரகசிய பாதாள அறை, உணவுக்கூடம், நீச்சல்குளம், அடர்த்தியான கார்பெட் விரித்த வரவேற்பு அறை, நட்சத்திர விடுதியின் தரத்தில் இருக்கும் படுக்கையறை ஆகியவை இருந்தன.

இந்த டெர்மினலில் எங்கள் கப்பல்தான் முதல்முறையாக சரக்கு நிரப்பி செல்ல வந்ததால் கப்பல் கட்டும்முன்பே ட்ரோன் வைத்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்கள். கப்பல் இங்கே நின்றிருந்த இருநாளும் கப்பலை பார்க்க டெர்மினல் அதிகாரிகள், ஊழியர்கள் என எண்பதுபேருக்குமேல் வந்து சென்றனர்.

திரும்ப திரும்ப முப்பது முகங்களையே தினமும் பார்க்கும் எங்களுக்கு இதுவும் நன்றாகத்தான் இருந்தது. 

  கோஸ்டா அசுல் துறைமுகமும், அந்த மலையுச்சியில் இருக்கும் வாழும் வீடுகளும் என்றும் நினைவில் நிற்கும்.

நாஞ்சில் ஹமீது,

19 july 2026.

sunitashahul@gmail.com

பிரேக் வாட்டர் கல்லில் வாழும் பறவைகள்


Sunday, 12 July 2026

விடுமுறை நாட்கள்



   கப்பல் காரனுக்கு விடுமுறை உண்டா? அப்படி விடுமுறை கிடைத்தால் அந்த நாளில் அவன் எங்கு செல்வான்? என்ன செய்வான்? இது பலரும் கேட்பது.

   இரண்டாயிரத்தி ஐந்தாம் ஆண்டு நான் முதல் கப்பலில் நான் இணைந்தபோது விடுமுறை என்பதே தெரியாது. அது துபாய் முதலாளிக்கு சொந்தமான கப்பல். துபாயில் ஏற்றிய சரக்குகளை, ஈராக்கில் இறக்குவோம். 

   துறைமுகம் இல்லாமல் இருந்தால் அரிதாக வெள்ளிக்கிழமையில் அரைநாள் ஓய்வு சாத்தியம். அது கப்பலில் பிட்டராக இருக்கும் எனக்கும் பகல் பணியில் இருக்கும் ஓ எஸ், போசன் பத்தி சாபுக்கும் மட்டுமே கிடைக்கும். அப்போது ஏதேனும் எமேர்ஜென்சி வந்தால் உடனே பணிக்கு சென்றாக வேண்டும். 

   வாட்ச் கீப்பர்கள் ஆகிய நேவிகேஷன் அதிகாரிகள், கப்பலோட்டும் மாலுமிகள், இயந்திர அறையிலுள்ள இஞ்சினியர்கள், அவர்களுக்கு உதவியாகவுள்ள மோட்டர்மேன்கள் குறைந்தது எட்டு மணிநேர பணி செய்தே ஆகவேண்டும். 

 விடுமுறை கிடைத்தால் என்ன செய்வது. ஒன்றும் செய்ய முடியாது. படம் பார்த்து, துணிகள் துவைத்து, தூங்கி எழ வேண்டியதுதான். கடும்பணிக்குப்பின் உடலுக்கு ஓய்வு மட்டும் உறுதி.

  கப்பலை விட்டு எங்கும் செல்ல முடியாது. ஓய்வாக இருக்கும்போது உணவுகூடத்துக்கும், அறைக்கும் தவிர நடமாட்டமே குறைந்துவிடும் நாட்கள்தான். 



   தற்போது பணியிலிருக்கும் நிறுவனத்தில் 2006 ஆம் ஆண்டு பயிற்சி பிட்டராக இணைந்தேன். ஞாயிறுகளில் துறைமுகம் இல்லாமலிருந்தால் அரைநாள் ஓய்வு பகல் பணியாளர்களுக்கு கிடைக்கும். பயிற்சி பிட்டரான என்னை மூன்று மணிவரை வேலை செய்ய சொல்வார்கள். இரண்டு மணிநேரம் ஓய்வு அரிதாக கிடைக்கும். மற்ற நாட்களில் காலை ஆறு முதல் இரவு ஏழுமணி வரை எனக்கு வேலை தருவார்கள்.

   பதவி உயர்வு பெற்றபின் பணி காலை எட்டுமுதல் ஐந்துவரை. ஞாயிறு அரைநாள் ஓய்வு உறுதியானது. புதிய கப்பல்கள் வந்தபோது இயந்திர அறை மாலை ஐந்துமணிக்கு மேல் ums (un manned ship) முறைகள் வந்தது. இயந்திரஅறை பணியாளர்களுக்கும் ஞாயிறு அரைநாள் ஓய்வு கிடைக்க துவங்கியது . 

 இந்தியரல்லாத உயரதிகாரிகள் கப்பலுக்கு வந்தபோது சனிக்கிழமை அரை நாள் ஓய்வும், ஞாயிறு பத்து மணிக்கு மேல் விடுமுறையும் சாத்தியமானது. அது துறைமுகங்கள் இல்லாமல் அவரச பணிகள் ஏதும் இல்லாமல் இருந்தால் மட்டுமே. புதிய கப்பல்களாக இருந்து நீண்ட பயணமாக இருந்தால் ஓய்வு சாத்தியமே.

  2022 ஆண்டு முதல் முதலாக எல்என்ஜி கப்பலில் பணிக்கு வந்தேன். உயரதிகாரிகள் கொரிய,மலேசிய,இந்தோனேசியாவை சார்ந்தவர்கள். சனிக்கிழமை அரை நாளும், ஞாயிறுகளில் முழுநாளும் பெரும்பாலும் ஓய்வு உறுதி. பண்டிகை நாட்கள் மற்றும் ஞாயிறுகள் பணி நாட்களாக அமைந்து விட்டால் அதற்கு பகரமாக மற்றொரு நாள் விடுமுறை எடுப்பதில் வல்லவர்கள் கணக்கு தவறாது.

  எனது முதல் எல்என்ஜி கப்பலில் பணியில் இணைந்த மறுநாள் பனாமாவில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது. நீராவி இஞ்சினில் ஏற்பட்ட பெரிய பழுதை நீக்க டெக்னீசியன்கள் கப்பலுக்கு குழுவாக வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு சனி,ஞாயிறு ஏதும் இல்லை எவரிடே மண்டே என்பாரகள். 

  முதல் குழு இரண்டு மாதம் பணிசெய்துவிட்டு சென்றபோது சில உதிரி பாகங்களுக்காக நாங்கள் காத்திருந்தோம். அவை கப்பலுக்கு வந்தபின்தான் இரண்டாவது குழு வந்து பணியை துவங்கவேண்டும். இரண்டாம் இஞ்சினியர், முதன்மை இஞ்சினியரிடம் ஆறு வாரங்கள் தொடர்ந்து ஓய்வே இன்றி பணி செய்துள்ளோம் அதற்காக காம்பன்செட் செய்ய வேண்டுமென்றார். வெள்ளிக்கிழமை மதியத்திற்குபின் அரை நாள் ஓய்வு துவங்கி திங்கள்கிழமை காலை பணிக்கு வரவேண்டும். டூட்டி இஞ்சினியர், டூட்டி மோட்டேர்மேன் மட்டும் இயந்திர அறைக்கு சென்று தினமும் செய்தே ஆக வேண்டிய பணிகளை செய்து லாக் புக் எழுதிவிட்டு வருவார்கள்.

  இருவராங்களுக்கு பின் பக்ரீத் பண்டிகை வந்தது அது ஞாயிறாக இருந்தது. மறுநாள் திங்கள்கிழமை பணிக்கு சென்றேன். இயந்திர கட்டுப்பாட்டு அறையில் மோட்டர்மேன் மட்டும் இருந்தார். இன்று விடுமுறை என்றார். பக்ரீத் ஞாயிறில் வந்துவிட்டதால் இன்று விடுமுறை என விளக்கம்சொன்னார். தொடர் விடுமுறையில் அறையில் அடைந்து ஒரு டீப் சோர்வுகுள்ளானேன். அந்த கப்பலில் நாங்கள் ஆறுபேர் மட்டுமே இந்தியர்கள் அதில் இருவரை உணவுகூடத்தில் மட்டுமே பார்க்க முடியும். அதிகமாக பேசும் எனக்கு பேச ஆள்கிடைக்காததால் தான் பிரச்னை என புரிந்தது.

   கோவாவின் மோட்டேர்மேன் பெர்னாண்டோவிடம் சொன்னேன் என்னால் இனியும் அறையில் அடைந்துகிடக்க முடியாது என. விடுமுறை நாளில் பத்து மணிக்கு மேல் என் அறைக்கு வந்துவிடு என்றார்.

  தற்போது இருக்கும் கப்பலும் எல்என்ஜி (LNG) கொரிய காப்டன் மற்றும் முதன்மை இஞ்சினியர். இந்தோனேசிய இரண்டாம் இஞ்சினியர், மலேசிய முதன்மை அதிகாரி. சனிக்கிழமை அரைநாள் ஓய்வு,ஞாயிறில் முழு நாள் ஓய்வு கட்டாயம். ஞாயிறு துறைமுகமாக இருந்தால் திங்கள்கிழமை நிச்சயம் ஓய்வு.

இத்தனை வருடங்களில் பண்டிகை நாட்கள் அரிதாக தெரியவரும். பெரும்பாலும் கப்பல் காரனுக்கு பண்டிகை நாட்கள் கடந்து செல்வதே தெரியாது. இங்கே முகரம் நாளன்று முழுநாள் ஓய்வு கிடைத்தது.

  துறைமுகத்தில் கப்பல் நிற்கும்போது காஸ் டிப்பார்ட்மெண்ட், டெக் பணியாளர்களுக்கு கொஞ்சம் அதிக பணி இருக்கும். முதன்மை அதிகாரி, காஸ் இஞ்சினியர் தொடர்ந்து முப்பது மணிநேரம் வரை பணி செய்தே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. 

  ஒவ்வொரு முறை துறைமுகம் விட்ட மறுநாள் முழுநாள் ஓய்வு என்பது இங்கே எழுதப்படாத விதி. கடந்த வாரம் பசுபிக் கடலில் மெக்ஸ்சிகோ நோக்கி பயணித்தோம் ஒரு நாள் பின்னோக்கி நகர்த்தவேண்டும். அது ஞாயிறாக இருக்கும்படி பார்த்துக்கொண்டனர். எனவே சனிக்கிழமை அரை நாள், முதல் ஞாயிறு, இரண்டாம் ஞாயிறு என இரண்டரை நாள் முழு ஓய்வு. ஓய்வு நாட்களில் பத்து மணி மீட்டிங்கில் கண்டிப்பாக முகம் காட்டி வரவேண்டும்.

   இந்தவாரம் திங்கள் மற்றும் செய்வாய்க்கிழமை துறைமுகத்திலிருந்தோம். sire inspection எனும் ஆய்வும், மெக்ஸிகோ துறைமுக அதிகாரிகளின் ஆய்வும் நடந்தது. அதற்காக நாங்கள் கப்பலை தயார் செய்து வைத்திருந்தோம். இரு ஆய்வுகளிலும் தேறியதால். புதன், வியாழக்கிழமை என இரு தினங்கள் ஓய்வு.(2024 march built, இது இரண்டு ஆண்டுகளே ஆன புத்தம்புதிய கப்பல். பெரிதாக தயார் செய்ய ஒன்றுமேயில்லை. நன்றாக துடைத்து சுத்தமாக வைத்திருந்தாலே போதும்.) 

   வெள்ளிக்கிழமை காலை பணிக்கு சென்றேன். மீட் ரூம் கதவின் லாக் ரிப்பேர் கதவு திறக்கவில்லை. கழட்டி பார்த்தேன் அதில் செய்வதற்கு ஒன்றுமில்லை. ஸ்ப்ரே அடித்து துடைத்து தற்காலிகமாக திறக்கும்படி பொருத்திவிட்டு புதியது ஆர்டர் செய்யும்படி முதன்மை அதிகாரியிடம் சொன்னேன்.காஸ் பிளாண்டில் நீராவி வால்வ் ஒன்றில் காஸ்கட் மாற்றும் பணியில் காஸ் இஞ்சினியருக்கு கொஞ்சம் உதவினேன். வாழ்வை கழட்டி சுத்தம் செய்து புதிய காஸ்கட்டும் அவரே வெட்டி வைத்திருந்தார். கொண்டு போய் பொருத்தினேன்.

   மூன்று மணிக்கு மேல் பணியாடை மாற்றும் இடத்தில் சலவை இயந்திரம் பொருத்த தண்ணீர் குழாயின் இணைப்புகளை தேடும்பணி அதோடு நாள் முடிந்தது.

 நேற்று சனிக்கிழமை வேலைகளை பதினோரு மணிக்கே முடித்து விட்டேன். இன்றும் ஓய்வு. இந்த வாரத்தில் மூன்றை நாள் பணியும் மீதி ஓய்வுமாக பணியை விட ஓய்வே அதிகமாக இருந்தது.

  பசுபிக் கடலில் கொரியாவை நோக்கிய பயணத்தில் இருக்கறோம். திங்கள் இரவு தூங்கி எழுகையில் புதன்கிழமையாக விடியும். அதிலும் இவ்வாரத்தில் ஒருநாள் காணமல் போகிறது. 

  இப்போதெலாம் ஓய்வு நாட்களில் அறைக்குள் அடைந்து கிடப்பதில் எந்த சிரமும் இல்லை குறைவாக உண்டு, மாலை நேர உடற்பயிற்சிக்குப்பின் எழுத்தும், வாசிப்பும் இனிமையாக கழிகிறது. ஊரிலிருந்து புறப்பட்டு ஆறு மாதங்களும் கப்பலுக்கு வந்து ஐந்து மாதங்கள் ஒருவாரமாகிறது.

நாஞ்சில் ஹமீது,

12july2026.

sunitashahul@gmail.com