HRA எனும் சொல்லை 2009 ஆம் ஆண்டு லியோ லீடர் எனும் கப்பலில் பணியில் இருந்தபோதுதான் முதன் முதலாக என் செவியில் விழுந்தது.
HRA என்று சொல்லப்படும் இந்த ஹை ரிஸ்க் ஏரியா என்பது கடல் கொள்ளையர்களால் கப்பலை கடத்தி செல்லும் ஆபத்தான கடல் பகுதிகள். இவை சோமாலியாவுக்கும் ஓமான் நாட்டுக்கும் இடைப்பட்ட கல்ப் ஆப் எடேன்,மேற்கு ஆப்ரிக்காவின் நைஜீரிய,கானா,டோகோ மற்றும் உலகில் வேறு சில பகுதிகள் கடல் கொள்ளையர்களால் அச்சுறுத்தல் உள்ள பகுதியாகும்.
2009 மற்றும் 2010ஆண்டுகளில் கல்ப் ஆப் எடேன் பகுதியில் பாதுகாப்பு காண்வாயில் பயணித்தோம். அப்போதுஇந்திய,சீன,ஜப்பான் நாட்டு கடற்படை கப்பல்கள் இப்பகுதியில் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு தந்து உதவின. ஆபத்தான பகுதி துவங்கும் இடத்திலிருந்து காண்வாய் புறப்படும் நேரத்தை முதலிலேயே அறிவிப்பார்கள். அதில் இணைந்துகொள்ளும் கப்பல்களை அவர்கள் ஆபத்தான பகுதியை தாண்ட பாதுகாப்பு தருவார்கள்.
காண்வாயின் முன்பும் பின்பும் இரு கடற்படை கப்பல்கள் ஆயுதங்களுடன் உடன் வரும். ஆபத்தான பகுதியாக கருதப்படும் இடத்தை கடக்க இருதினங்கள் ஆகும்.அனைத்து கப்பல்களும் சீரான ஒரே வேகத்தில் செல்வது அவசியம் (10 knots ).
பாதுகாப்பான இடத்தை அடைந்ததும் கப்பல்கள் தங்களது பாதையில் உரிய வேகத்தில் பிரிந்து செல்லும். நான் பயணித்த இருமுறையும் பதினாறு கப்பல்கள் காண்வாயில் பயணித்தது. கப்பலில் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு கப்பலை சுற்றி முள்வேலி கட்டப்பட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்தவாறு சென்றோம்.
பணியாளர் அனைவருக்கும் மாலை ஆறு முதல் காலை ஆறுமணிவரை இரு மணிநேரம் வீதம் டெக்கில் கண்காணிப்பு பணியில் இருவர் வீதம் அமர்த்தப்பட்டோம்.
அப்போது என்னுடன் பைரைசி வாட்சில் உடன் வந்த பிரபீஸ் கிருஷ்ணா “ஷாஹுலே அவ மாரெடுத்து நைட் விஷன் பைனாகுலரும், தோக்கும் காணும்,நம்மளு ஈ டார்ச் வெச்சிட்டு எந்தா செய்கயா, பேன் ரூம்மின்ற பிறகில் இருந்து ரிப்போர்ட் மாத்திரம்செய்தா மதி” என்றார்.அப்போது எங்களுக்கு இருதினங்கள் சம்பளம் அதிகமாக கிடைத்தது.
2015 அதே HRA ஏரியாவில் சென்றபோது கடற்படை காண்வாய் இல்லை. கப்பலின் காப்டனுக்கு கப்பல் நிறுவன பாதுகாப்பு அதிகாரி கப்பலை முழுவேகத்தில் பயணிக்க சொன்னார். HRA அலவன்ஸ் சம்பளும் நிறுத்தப்பட்டிருந்தது.
கப்பலை கடத்திசென்ற சம்பவங்கள் அப்போது நிறைய நடந்தது.கொள்ளையர்கள் கப்பலுக்குள் புகுந்துவிட்டால் பணியாளர் அனைவரையும் ஒரு அறையில் அமர்த்திவிட்டு கப்பலை அவர்களது கட்டுப்பாட்டில் சோமாலியாவுக்கு கொண்டு செல்வார்கள். பின்னர் கப்பல் முதலாளியுடன் இருபது மில்லியன் டாலரில் பேரம் ஆரம்பமாகும். பேரம் முடியும் வரை கப்பல் பணியாளர்கள் அவர்கள் பிடியில் இருக்கவேண்டியதுதான். என்னுடன் பணிபுரிந்த ஒருவர் அவ்வாறு ஒன்பது மாதங்கள் கொள்ளையர்களின் பிடியில் இருந்ததை சொன்னார். இறுதியாக ஐந்து மில்லியன் டாலரில் பேரம் முடிவானதும். கப்பல் விடுவிக்கப்பட்டது.
2016 முதல் சவூதி அரேபியா மற்றும் சூயஸ் கால்வாய்க்கு செல்லும்போது ஆயுதம் ஏந்திய பாதுகாலர்கள் எங்களுக்கு பாதுகாப்பாக கப்பலிலேயே பயணித்தார்கள். கப்பல் முதலாளிகள் அதிக பணம் செலவு செய்து அவர்களை நியமித்தார்கள். அந்த சேவையை வழங்கும் பாதுகாப்பு நிறுவனங்கள் துபாய்,இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளை மையமாக கொண்டு செயல்படுகிறது.
பாதுகாப்புக்காக வரும் வீரர்கள் முன்னாள் ராணுவ,கடற்ப்படையில் பணிபுந்தவர்கள்.தற்போது நான் பணிபுரியும் எல்பிஜி,எல்என்ஜி கப்பல்கள் ஆறு மாதத்தில் நான்கு முறையாவது இந்த HRA ஏரியாவில் பயணிக்கவேண்டியுள்ளது.
நான் இப்போது இருக்கும் எல்என்ஜி பசுபிக் சக்சஸ் அமெரிக்காவில் நிறைத்த சரக்கை பிரான்சில் இறக்கினோம். உடனே அடுத்த அழைப்பு கார்கோ நிறைக்க நைஜீரியாவின் போனி துறைமுகத்துக்கு.
மொத்தம் பன்னிரெண்டுநாள் பயணம். இறுதி இருதினங்கள் HRA வில் பயணிக்க வேண்டும். பிப்ரவரி இருபத்தி எட்டாம் தேதி சனிக்கிழமை பாதுகாப்பு ஒத்திகைகளை செய்து பார்த்தோம்.கொள்ளையர்கள் கப்பலுக்குள் புகுந்துவிட்டால் அவர்கள் கையில் மாலுமிகள் அகப்படாமல் சிட்டாடெல் அறைக்குள் புகுந்து அருகிலுள்ள கடற்படைக்கும்,உதவிவேண்டி அழைக்கவேண்டிய தொலைப்பேசி எண்கள் மற்றும் அந்த போனை திறக்கும் ரகசிய எண்கள் பற்றிய பயிற்சிகள் வழங்கபட்டது.
கப்பலின் பின்பகுதி முழுவதும் முள்வேலி சுற்றப்பட்டு. அதிக விசையில் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் குழாய்கள் பொருத்தபட்டது. கப்பல் ஆறாம் தேதியே போய் சேருவதாக இருந்தது. ஆனால் நைஜீரியாவின் போனி துறைமுகம் ஏழாம் தேதிதான் உள்ளே வரவேண்டும் ஒரு நாள் அருகில் காத்திருமாறு வேண்டினர். கொரிய காப்டன் ஷின் உறுதியாக முடியாது என மறுத்துவிட்டார். எனவே ஆறாம் தேதியே உள்ள செல்ல அனுமதி கிடைத்தது.
கடந்த நான்காம் தேதி இரவு HRA பகுதியில் நுழைந்தோம். கப்பலின் அனைத்து கதவுகளும் உள்ளிருந்து பூட்டபட்ட்து. ஒரேயொரு கதவு மட்டும் உள்-வெளியில் செல்ல திறக்கப்பட்டிருந்தது. இரவில் யாருக்கும் வெளியே செல்ல அனுமதியில்லை.
போனி துறைமுகத்தின் நூற்றிபத்து மைல்களுக்கு முன்னால் ஆறாம் தேதி அதிகாலை கடற்ப்படை கப்பல் ஒன்று பாதுகாப்புகாக இணையும் என்று சொல்லியிருந்தார்கள். அதுவரை கடல்கொள்ளையர்கள் பிடியில் சிக்காமல் சென்றுவிட்டால் கப்பலின் பாதுகாப்பு அனேகமாக உறுதி.
வெள்ளி காலை குறிப்பிட்ட இடத்தை அடைந்த போது இன்னும் கொஞ்சம் முன்னால் வாருங்கள் என்றார்கள். இரு மணிநேரத்துக்கு பிறகு அருகில்தான் இருக்கிறோம் இன்னும் வாருங்கள் என சொன்னார்கள். இனியும் என்னால் வரமுடியாது உங்கள் கப்பல் எங்கு இருக்கிறது என காப்டன் கேட்கவும் பத்து மைல்முன்னால் வாருங்கள் நாங்களும் வந்து விடுவோம் இப்போது தான் புறப்பட்டோம் எனும் தகவலை சொன்னார்கள்.
அதிகாலை கடற்ப்படை கப்பல் எங்களுடன் இணைந்து துறைமுகம் வரை வந்தது. மாலையில் கப்பல் போனி துறைமுகப்பில் கட்டப்பட்டது. துறைமுகத்திலும் கடற்ப்படை கப்பல்கள் பாதுகாப்புக்காக ரோந்து பணியில் இருந்தனர்.
சனிக்கிழமை மதியம் ஒரு லட்சத்து நாற்பத்தி இரண்டாயிரம் மெட்ரிக் டன் இயற்கை எரிவாயு (LNG) நிறைக்கும் பணி முடிந்து மாலை ஐந்தரை மணிக்கு கப்பல் புறப்பட்டது. இரு தினங்கள் மீண்டும் HRA எரியவில் பயணம். திங்கள்கிழமை அதிகாலை ஆபத்தான பகுதியை கடப்போம். கப்பல் இந்தியாவின் குஜராத்தின் தகேஜ் துறைமுகத்திற்கு செல்கிறது.அரபு வளைகுடாவின் கத்தார்,குவைத்,அபுதாபியில் lng உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
எகிப்தின் இடுக்கு துறைமுகத்தில் சரக்கு நிறைத்தாலும் ஹார்மொஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் கப்பல் வர முடியாது.இந்தியாவின் தொழில்துறை மற்றும் போக்குவரத்துக்கு நாங்கள் கொண்டு செல்லும் இந்த இயற்கை வாயு மிக அத்தியாவசியமானது இப்போது. அதற்கு இன்று இரவும் கடற்கொள்ளைகள் கையில் சிக்காமல் இருக்க வேண்டும்.
நாஞ்சில் ஹமீது,
08 march 2026.
sunitashahul@gmail.com













