மார்ச் மாதம் ஆறாம் தேதி நைஜீரியாவின் போனி துறைமுகப்பில் கரையணைந்து அறுபத்தி இரண்டாயிரம் மெட்ரிக் டன் (LNG) மீத்தேனை நிரப்பினோம். கப்பல் நைஜீரியா செல்லும் முன்பே அந்த சரக்கை சீனாவுக்கு கொண்டு செல்ல தகவல் வந்தது. மறு நாளே சீனா இல்லை கொரியாவின் இன்சொன் செல்ல வேண்டும் என்றார்கள்.
மத்திய கிழக்கில் போர் தொடங்கியிருந்த நேரம். எண்ணெய் மற்றும் LPG,LNG கப்பல்களுக்கு அதிக வாடகையில் சவாரி கிடைத்த நேரம். உலகெங்கும் எரிஎண்ணெய்,திரவ வாயுக்கள் தேவைக்கு கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் டாங்கர் கப்பல்களுக்கு கிராக்கி அதிகமாயிற்று.
உலகின் மிகப்பெரிய எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடான கத்தாரின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. சவுதியின் ரஸ்த நூறா எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையம் குண்டுவீச்சில் நாசாமனது. ஹோர்மூஸ் கால்வாயை ஈரான் மூடியதால் குவைத்,ஈராக்,சவூதி போன்ற நாடுகளிலிருந்து எண்ணையை உலகுக்கு விநியோகிப்பதில் தடை ஏற்பட்டது. இஸ்ரேல்,அமெரிக்க முதலாளிகளுக்கு சொந்தமான கப்பல்கள் தாக்கியழிக்கப்பட்டன. அங்கு பெரும் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.
![]() |
| ஹோர் முஸ் |
கப்பல் போக்குவரத்து மட்டுமில்லாமல் விமான போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. கத்தாரின் கத்தார் ஏர்வேஸ் உலகின் நூறுக்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விமான சேவை வழங்குகிறது. தோகாவிலிருந்து இந்தியாவின் தில்லி,மும்பை,சென்னை,ஹைதராபாத்,பெங்களூர்,கோவா,கொச்சி,திருவனந்தபுரத்திற்கு தினமும் விமான சேவை அளிக்கும் ஒரு பெரிய நிறுவனம்.அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய,தென்ன்னமரிக்க நகரங்களையும் இணைப்பார்கள். அதுபோலவே துபாயை மையமாக கொண்டு இயங்கும் எமிரேட்ஸ்,அபுதாபியிலிருந்து இயங்கும் எதிகாட் நிறுவனமும் உலகின் அதிக நகரங்களுக்கு விமான சேவை வழங்குபவை. எல்லாம் அடியோடு முடங்கி உலக வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது.
உலகின் அதிகாரத்திலிருக்கும் தலைவர்கள் மாறி,மாறி குண்டுகளை வீசுவதால் பெரும் அழிவுகள் மட்டுமே மிச்சமாகும். உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து போர் செய்யும் நாடுகளை பேச்சு வார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டுவராமல் ஏன் பார்த்துகொண்டிருக்கிறார்கள் என்பதும் புரியவில்லை.
சூழல் அறிந்த நண்பர்கள் என்னிடம் கேட்டு கொண்டே இருக்கிறார்கள்
“ஷாகுல் எங்க இருக்கா,கப்பல் இப்ப எங்க பெயிட்டு இருக்கு என”
நைஜீரியாவில் சரக்கு நிறைத்து புறப்படும் முன் குஜராத்தின் தகேஜ் துறைமுகத்திற்கு செல்லுமாறு பணித்தார்கள். பதினெட்டு நாள் பயணம் உறுதியானது. ஆபத்தில்லாத பாதையில் செல்லலாம். சில தினங்களில் மீண்டும் கொரியா செல்லுங்கள் என்றார்கள். திரவ வாயுவின் விலை உயர்வால். யார் அதிக விலைக்கு சரக்கை வாங்க வாங்குவார்களோ அவர்களுக்கு விற்கும் பொருட்டு எங்களின் சரக்கு இறக்கும் துறைமுகம் உறுதியாகவில்லை.
இரண்டாம் அதிகாரி அர்ஜுன் “இப்ப எல்லாம் வில கூடி,கூடுதல் பைசா கிட்டுந்த இடத்து கார்கோ கொடுக்கும், டிஸ்சார்ஜ் போர்ட் இதுவர உறபில்லா,இந்தியாயிக்கும் போவாம்” என்றார். இருபதாம் தேதிக்கு பின்னர் இலங்கையை நெருங்கும்போது இந்தியா இல்லை என்பது உறுதியானது.
சைனாவா,கொரியாவா எனபது தெரியாமலே பயணம் தொடர்ந்தது. நீண்ட பயணத்தில் ரமலான் விடுமுறை,ஞாயிறுகள் விடுமுறையாக கழிந்தது. கார்கோ டிபார்ட்மெண்ட்டில் இருப்பதால் வார நாட்களிலும் செய்வதற்கு ஒன்றுமில்லாமல் நாட்களை கடத்துவது எனக்கு கடினமாகிவிட்டது.
இந்தோனேசியாவை சுற்றிகொண்டு மேலே சென்றபோது கொரியாவின் பீயோன்டெக் துறைமுகப்பில் சரக்கை இறக்குவது உறுதியாகியது. இருபத்தி ஆறு நாட்களுக்குப்பின் ஏப்ரல் இரண்டாம் தேதி கொரியாவின் யோசூ துறைமுகம் அருகில் கப்பலை நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினோம். கப்பலின் கடிகாரம் எட்டு மணிநேரம் முன்னே நகர்ந்து கொரிய கடிகாரத்துடன் இணைந்து கொண்டது.
பழங்கள்,பச்சை காய்கறிகள் முற்றிலும் ஒழிந்து உணவுபொருட்கள் பெரும்பாலும் தீர்ந்துபோயிருந்தது.கப்பலுக்கு தேவையான எரிஎண்ணெய் முன்னூற்றியைம்பது டன்,உணவு பொருட்கள்,உதிரி பாகங்கள் என நிறைத்தோம். இரு கொரிய ஆய்வாளர்கள் கப்பலுக்கு வந்திருந்தனர். சில சோதனைகளை முடித்து சான்றிதழ் பெற வேண்டும். காஸ் டிப்பார்ட்மெண்ட் ஆய்வு ஆதலால் ஆய்வாளருடன் இரவு முழுவதும் எனக்கு பணிஇருந்தது.
நான்காம் தேதி மாலை ஆறு மணிக்கு கப்பல் கொரியாவில் கரையணைந்து சரக்கு இறக்கும் பணியை துவங்கினோம்.மதியம் மூன்று மணி தொடங்கி நள்ளிரவு பன்னிரெண்டு மணிவரை எனக்கு வேலை. ஐந்தாம் தேதி மதியமே அறுபதாயிரம் மெட்ரிக் டன் திரவ வாயுவை கொடுத்து முடித்தோம். கொரியாவிடம் எரிவாயு தட்டுபாடு இல்லை ஆனாலும் அதிக விலைகொடுத்து வாங்கி சேமிப்பில் வைக்கிறார்கள் என உள்வட்டார தகவல்கள் கிடைத்தது.
இருபத்திஎட்டு நாட்கள் நீண்ட பயணம் முடிவுக்கு வந்தது. உலகின் ஒரு பகுதியில் கப்பல் போக்குவரத்து முடங்கி போயிள்ளது. ஹோர்முஸ் கால்வாயை கடக்க முடியாமல் எழுநூறுக்கும் அதிகமான கப்பல்கள் சிக்கியுள்ளது. காப்பீடு நிறுவனங்கள் கப்பல் தாக்கபட்டால் பணம் தராது அதுவே காரணம். அதிக பிரீமிய தொகை செலுத்தி கப்பலை ஆபத்தான பகுதியில் நகர்த்த கப்பல் நிறுவனங்கள் தயாராக இல்லை. முப்பது நாட்களுக்கும் மேலாக ஒரே இடத்தில் நங்கூரமிட்டிருக்கும் கப்பல்களில்,குடிநீர் போக மற்ற தேவைகளுக்கு நீர் இல்லை. கக்கூஸில் கடல் நீரை ஊற்றி சமாளிக்கிறார்கள். இன்னும் சில நாட்கள் போர் தொடர்ந்தால் அந்த பணியாளர்களின் உணவும் கேள்விக்குறிதான்.
ஐந்தாம் தேதி மாலை நான்கு மணிக்கு முன்பாகவே கப்பல் கயிறுகளை அவிழ்த்துவிட்டு புறப்பட்டது ஆஸ்திரேலியாவின் கிளாஸ்ட்சன் துறைமுகம் நோக்கி. நாங்கள் நைஜீரியாவிலிருந்து புறப்பட்ட போதே அடுத்து சரக்கு நிறைப்பது கிளாஸ்ட்சன் என உறுதியாகியிருந்தது. பன்னிரெண்டு நாள் பயணம். அங்கு ஏற்றும் சரக்கை மீண்டும் கொரியா அல்லது வியத்நாமில் கொடுக்கவேண்டியிருக்கும். நண்பர்களே அடுத்த ஒரு மாதத்துக்கான எனது பயண பாதை போர் ஆபத்தில்லாத பகுதியில்தான் என இப்போதே உறுதியாகியுள்ளது.
நாஞ்சில் ஹமீது,
07 april 2026.
sunitashahul@gmail.com


















