Friday, 20 March 2026

ரமலான்- இந்திய பெருங்கடலில்



நோன்பு பெருநாள் 2021

நோன்பு பெருநாள் 2024

நோன்பு பெருநாள் 2025

ரமலான் நோன்பு 29 முடிந்தநிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறை தென்பட்டதால் பெருநாள் வெள்ளிக்கிழமை என அறிவிக்கப்பட்டது. கேரளாவிலும் இன்று ரமலான் (ஈதுல் பித்ர்) கொண்டாடபடுகிறது.இம்முறையும் அனைத்து நோன்புகளும் இருக்கும் பாக்கியம் கிடைத்தது. வரும் ஆண்டுகளிலும் இதே ஆரோக்கியத்தை இறைவன் தந்தருள் புரிவானாக.



   மூன்றாம் அதிகாரி தேஜஸ் தினந்தோறும் சூரிய உதய,அஸ்தமன நேரத்தை கணக்கிட்டு தந்தார். இப்தார் மற்றும் சகர் நேரங்களை கணக்கிட பேருதவியாக இருந்தது.


  மத்திய கிழக்கு நாடுகளில் குவைத்,கத்தார்,பஹ்ரைன்,சவூதி அரேபியாவில் நேற்று ரமலான் நோன்பு முப்பது நிறைவடைந்தது.போர் சூழல் காரணமாக மத்தியகிழக்கு நாடுகளில் பெருநாள் சிறப்புதொழுகைக்கு மைதானங்களில் அனுமதி இல்லை ஜிம்மா தொழுகை நடைபெறும் பள்ளிவாசல்களில் மட்டுமே பெருநாள் தொழுகை என அறிவிகபட்டது. அதிகாலை ஈதுல் பித்ர் தொழுகையும் அங்கே விரைவாக முடித்துள்ளனர்.தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும்,இந்தியா,மலேசியா,புருனே நாடுகளில் நாளை ஈதுல் பித்ர் கொண்டாடப்படும்.

 கப்பலில் நான்,இந்தோனிசிய மூன்றாம்இஞ்சினியர்,மலேசிய காஸ் இஞ்சினியர் நோன்பு வைத்திருந்தோம்.எனக்கும் இன்று ரமலான். காலை குளித்து புத்தாடை அணிந்து அறையிலேயே இரண்டு ரக்காத் சுன்னத் தொழுதேன்.

  இன்று முழுநாளும் ஓய்வு அறிவிக்கப்பட்டது. கல்கத்தாவின் சமையல்காரர் சந்தீப் மண்டேல்,பிரியாணியும்  சேமியா பாயாசம் வைத்திருந்தார்.

   கப்பல்துறையில் இருப்பவர்களுக்கு  எந்த பண்டிகையும் இல்லை என்றே சொல்லலாம். அதிசயமாக நிலத்திலும் சிலருக்கு பண்டிகைகள் கிடைக்காமல் ஆகிவிடுகிறது. அரபு தேசம் ஒன்றில் பணிபுரியும் என் உறவினர் ஒருவர் பணிசெய்யும் இடத்தில் பெருநாள் தொழுகைக்கு பள்ளிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை வருத்ததுடன் சொன்னார்.

 எனது இளைய சகோதரன் கத்தார் ஆயில் ரிக்கில் பணிபுரிகிறார். விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர் போர் காரணமாக திரும்பிசெல்ல முடியாமல் இருந்தார். இன்று காலை சரியாக பதினோரு மணிக்கு அவருக்கு கத்தார் செல்ல கொச்சியிலிருந்து பயண சீட்டு வந்ததால். நேற்றிரவே வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.

  2022ஆம்  ஆண்டு சிங்கப்பூர் எனெர்ஜி எனும் கப்பலில் இருந்தபோது இந்தோனேசிய,மலேசிய அதிகாரிகள் நிறையபேர் இருந்தோம். காப்டன் இமாமாக நின்று கொத்பாவும்,தொழுகையும் நடத்தினார். கப்பலில் கிடைத்த ஒரே ஒருநாள் பெருநாள் தொழுகை அது. வழக்கமாக கப்பலில் நான் மட்டுமே இஸ்லாமியனாக இருப்பேன் பெருநாள் கடந்து போவதே தெரியாது. பணி நாளாக இருக்கும். இன்று ஓய்வு ஆதலால் பணிக்கு செல்ல வேண்டாம்.

 கடந்த ஆண்டு இருந்த கப்பலில் காப்டனின் மனைவி இருந்தார் பெருநாளன்று அவரே அதிக சிரத்தையுடன் சிறப்பு உணவுகள் தயாரித்து உணவுகூடத்தை பலநாள் உழைப்பில் அலங்கரித்து  பெருங்கொண்டட்டமாக மாற்றினார். அப்போதே அவரிடம் சொன்னேன். “இருபது வருட கப்பல் வாழ்வில் இந்த பெருநாள் என்றும் நினைவில் நிற்கும் நாளாக மாத்தீட்டீங்க”என. இன்று காப்டனின் மனைவி துருவி பெருநாள் வாழ்த்து அனுப்பியிருந்தார். கடந்த ஆண்டின் பெருநாள் உங்களால்தான் மறக்கமுடியாத நாளாக அமைந்தது என குறிப்பிட்டிருந்தார்.

  சுனிதாவும் மகன்களும்,உறவுகளும் இன்று காலை பள்ளிவாசலில் பெருநாள் தொழுதுவிட்டு புகைப்படங்களை அனுப்பிருந்தனர். டெக்னாலஜி உச்சத்தில் இருப்பதால் விடியோ காலில் பேசவும் உலகெங்கும் இருக்கும் உறவுகள், நண்பர்களின் வாழ்த்தும் எளிதாக கிடைக்கிறது.அதில் ஒரு மகிழ்ச்சியும் இருக்கிறது.

  சென்னையில் வாழும் இளையவள் கிருத்திகா தன் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் இஸ்லாமியர்களுடன் பேச வைத்தார். ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டோம்.

அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.

இனிமேல் இரு வேளை உணவை மட்டுமே எடுத்து கொள்வதாக இருக்கிறேன்.பழக்கத்தால் மட்டுமே மூவேளை உண்கிறோம்.அதனால் தான் கழிவுகள் அதிகமாக உடலில் சேர்கிறது.கழிவுகள் அகன்று விட்டால் நோயே இல்லை.

கப்பல் காரனின் ரம்ஜான் என முந்தைய பதிவுகளில் விரிவாக எழுதியிருக்கிறேன்.

2021 ஆம் ஆண்டில் பதினந்து வருட பெருநாள் அனுபவங்கள் உள்ளன. இந்த பதிவின் துவக்கத்தில் அந்த சுட்டி உள்ளது.

  நாஞ்சில் ஹமீது,

20 march 2026.

sunitashahul@gmail.com

Sunday, 15 March 2026

பாதை மாறும் பயணம் விலையேறும் எண்ணெய்

 


போர் பதட்டம் அச்சுறுத்தல் இருப்பதால் நண்பர்கள் பலரும் தொடர்ந்து விசாரித்துகொண்டே இருக்கின்றனர். இத்தனை மனிதர்கள் என்னை நேசிக்கிறார்கள் என்பது ஆச்சரியமாகவும் அதே நேரத்தில் அவர்களின் அன்பு மகிழ்ச்சியையும் தந்தது.

    ஹோர்முஸ் வளைகுடாவில் தொடர்ந்து கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டதில் சில இந்திய மாலுமிகளும் இறந்தனர். பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் கார்பஸ் கிறிஸ்டியில் ஏற்றிய சரக்கை பிரான்ஸில் 22 ஆம் தேதி இறக்கியபின் அங்கிருந்து பன்னிரெண்டு நாள் பயணத்துக்குப்பின் நைஜீரியாவின் போனி துறைமுகத்தை அடைந்தோம்.

  அங்கே சரக்கு நிறைக்கும்முன் சைனாவுக்கு செல்ல உத்தரவு வந்தது மறுநாளே இல்லை கொரியா செல்லுங்கள் என்றார்கள். போனியில் ஒருலட்சத்து  நாற்பத்திஓராயிரம் மெட்ரிக் டன் எல்என்ஜி நிறைத்து முடித்தபோது இந்தியாவின் குஜராத்துக்கு செல்ல பணித்தார்கள்.

  கப்பல்களின் பயண பாதை போர் காரணமாக மூடப்பட்டுள்ளதால் குறிப்பாக எண்ணெய்,காஸ் கப்பல்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலையும் உலக சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளது.

 விலையேற்றம் நாளுக்கு நாள் மாறுகிறது. மீண்டும் எங்கள் கப்பலை கொரியாவின் இன்சொன் போக சொல்லியிருக்கிறார்கள். நைஜீரியாவிலிருந்து தென்னாப்பிரிக்கா,இலங்கை,சிங்கை வழியாக செல்வதால் கப்பலின் பயண பாதையில் எங்கும் போர் பதட்டம் இப்பொது இல்லை.

  கப்பலில் பணி ஒப்பந்தம் முடிந்து ஊருக்கு செல்பவர்கள் உண்டு.அதற்காக கப்பலை தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் அருகில் ஒருமணிநேரம் நிறுத்தி பணியாளர் மாற்றம் செய்ய விடுத்த கோரிக்கையை சரக்கை கையாளும் நிறுவனம் மறுத்தது.எங்கும் நில்லாமல் முழுவேகத்தில் இந்தியாவிற்கு செல்லுமாறு. ஆனால் இப்போது பயண பாதை மாறிக்கொண்டே இருக்கிறது.

 எனினும் சரக்கை இறக்குவது கொரியாவா?என்பதில் எந்த உறுதியும் இல்லை.யார் அதிக பணம் தருகிறார்களோ அவருக்கு இந்த எரிவாயு விற்கப்படும். எனவே பயண பாதை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் நிச்சயாமாக போர் நடக்கும் பகுதிக்கு கப்பல் இப்போது செல்லாது என்பதில் நிம்மதி.



ரமலான் நோன்பு இன்றோடு இருபத்தியைந்து நாட்கள் நிறைவடைகிறது. இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்கள் மட்டுமே இருக்கிறது ரமலான் நம்மை விட்டு விலகி செல்ல.

நாஞ்சில் ஹமீது,

15 march 2026.

sunitashahul@gmail.com

Saturday, 14 March 2026

வெடித்து சிதறும் கப்பல்கள் - கடிதம் டெய்சி

 


சரியான நேரத்தில் நல்ல ஒரு பதிவு. விலையுயர்ந்த கார்களை பாண்டிச்சேரியில் பதிவு செய்தால் ஏதோ வரி குறையும் என்று அங்கு செய்வதுபோல கப்பல்களுக்கும். பதிவு செய்வதில் இருக்கும் கட்டாயமான வழிமுறைகள் என்பது அதன் பாதுகாப்பிற்காகத்தான் இல்லையா? ஆனால் அந்த நச்சுப்பிடித்த வேலையை ஏன் செய்துகொண்டு என்று பனாமா போன்ற நாடுகளில் பதிவு செய்து சட்டம் இயற்றுபவர்களை, பாதுகாப்பு வழிமுறைகளை ஏற்படுத்துபவர்களை எல்லாம் முட்டாள்கள் ஆக்கி கப்பல் சொந்தக்காரர்கள் மிகப்பெரும் புத்திசாலிகளாகிவிடுகிறார்கள். தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்திற்கு நெறி கட்டுவது போல இந்த பாதிப்புகள். குரூட் ஆயிலில் இருந்து பிளாஸ்டிக் வருகிறதாம் அதனால் அதுவும் கிடைக்காதாம். இப்படிஒன்று, பெட்ரோல் போட வந்த கூட்டத்தை போலீஸ் வந்து ஒழுங்குபடுத்தும் அளவிற்கு போய்விட்டது. எங்கு என்னப் பெரிய நிகழ்வுகள் நடந்தாலும் பாதிக்கப்டுவது என்னவோ நம்மைப்போன்றவர்கள்தான். நேற்று சந்தையில் காய்கறிகள் கொள்ளை மலிவு. அதன் ரகசியம் இப்போதுதான் தெரிகிறது.

டெய்சி, திருச்சி 



Friday, 13 March 2026

வெடித்து சிதறும் கப்பல்கள்.


 


   நேற்று நாகேர்கோவில் வடசேரியிலுள்ள குறுகிய சந்தில் இருக்கும் உணவக்கதில் வழக்கமாக சாப்பிடும் ரசவடை கேட்ட ஐயப்பன் தாத்தாவுக்கு “சண்ட நடக்குல்லா,இன்னேலேயிருந்து ரசவட கிடயாது ஒய், இன்னும் ரெண்டுநாள் களிச்சா ஓட்டலுக்கே வராதயும்,கிருஷ்ணன் கோவிலிலேயே படுத்துகிடும்” என பதில் கிடைத்தது.

   “எங்கயோ தூரத்துல ரெண்டு நாடு அடி வெக்கதுக்கு நாப்பது வரியமா நான் தின்ன ரசவட கிடக்க மாட்டேங்கு” என தாத்தா சொன்னாதாக நண்பர் ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.உலகமயமாக்கலில் ஒவ்வொரு நாடும் பிற நாடுகளை சார்ந்து இருக்கிறோம் என பலருக்கு புரியவில்லை.  ஹோட்டல்கள் மூடப்பட்டதால் கோயம்பேடு சந்தையில்  டன் கணக்கில் காய்கறிகள் குப்பையில் கொட்டபட்டதாக செய்தியில் கண்டேன்.

   பதினான்கு நாட்களாக நடக்கும் அமெரிக்கா – ஈரான் போர் முடிவுக்கு வருவது இப்போது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.ஹார்மோஸ் நீரிணையை ஈரான் முழுவதுமாக அடைத்து விட்டதால் கச்சா எண்ணெய்,எரிவாயு சப்ளை உலகை பாதித்துள்ளது.



  இதனால் எழுநூறுக்கும் மேற்ப்பட்ட கப்பல்கள் நகரமுடியாமல் சிக்கியுள்ளது. உலகின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான அமீரகத்தின் ஜபல்அலி துறைமுகம் மூடப்பட்டுள்ளது.

  நாமக்கல்லில் ஏற்றுமதியான நான்கு லட்சம் கோடி முட்டைகள் நடுக்கடலில் குஞ்சுபொரிக்கும் நிலையில் தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பாஸ்மதி அரிசி டன்கணக்கில் தேங்கியுள்ளது.இன்னும் காய்கறி உணவு பொருட்கள் என மொத்த ஏற்றுமதியும் ஆட்டம் கண்டுள்ளது.



  அமெரிக்காவுக்கு சொந்தமான இரு கப்பல்கள் தாக்கப்பட்டு முழுவதுமாக அழிக்கப்பட்டது இந்தியர் ஒருவர் பலி எனும் செய்தியை எளிதாக கடந்து செல்கிறோம்.

  நாளுக்குநாள் கழுத்தை நெரிக்கும் சட்டங்களினால் கப்பல் பணி மிக கடினமாதாக மாறிக்கொண்டிக்கும் வேளையில். கடலில் கப்பல்கள் தாக்கப்பட்டு மாலுமிகள் கொல்லப்படுவது கொடுமையின் உச்சம்.

  அமெரிக்கா,இஸ்ரேல் முதலாளிகளின் கப்பல்களை ஈரான் தாக்குகிறது.ஈரானின் கப்பல்களை எதிரிகள் ஏவுகனை வீசுகிறார்கள்.கப்பல் முதலாளி எங்கோ குளிரூட்டப்பட்ட அறையில் செல்போனுடன் அமர்ந்திருப்பார். ஆனால் அந்த கப்பலில் பணிபுரிபவர்கள் பிலிப்பினோ,இந்திய மற்றும் வேறு நாட்டை சார்ந்த மாலுமிகள்.

  கப்பல் முதலாளிக்கு இதில் எந்த நட்டமும் இல்லை. முழுகப்பலுக்கான காப்பீடும் கிடைக்கும். சரக்கு நிறுவனத்துக்கு மொத்த தொகையும் இன்சூரன்ஸ் கிடைத்துவிடும். வயிற்று பிழைப்புக்காக வேலை செய்ய சென்ற மாலுமியின் உயிரிழப்பு அந்த குடும்பத்தின் வாழ்வாதார இழப்பு.

  

  எல்லா துறையைபோலவே கப்பல் துறையிலும் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பெரும் முதலாளிகள் பணம் பண்ணுகிறார்கள். செய்திகளில் பார்த்திருப்பீர்கள் பனமா நாட்டு கப்பல் கன்னியாகுமரி அருகே மூழ்கியது அல்லது தரை தட்டியது என.

  உண்மையில் அது பனமா நாட்டு கப்பல் அல்ல. அதன் முதலாளி வேறு நாட்டை சார்ந்தவராக இருப்பார். நான் இதுவரை பணிபுரிந்த கப்பல்களில் பெரும்பாலானவை பனமா நாட்டு கப்பல்தான். ஆனால் பனாமாவுக்கு சொந்தமானது அல்ல.

  மோட்டார் வாகனங்களை பதிவு செய்வதுபோல் கப்பல்களை பதிவு செய்வது கட்டாயம். அமெரிக்கா,சிங்கப்பூர்,ஜப்பானில் பதிவு செய்தால் கடுமையான சட்டதிட்டங்களை செயல்படுத்தவேண்டும் செலவு அதிகம்.அதனால் பெருமபாலான ஜப்பானிய மற்றும் வேறு நாட்டு முதலாளிகள் பனாமா,லைபீரியா,மார்ஷல் போன்ற நாடுகளில் கப்பல்களை பதிவு செய்து கொள்வார்கள். அந்த விலாசத்தில் பத்துக்கு பத்து ஒரு அறைமட்டுமே இருக்கும். கப்பலை ஜப்பான் அலுவலகத்திலிருந்து இயக்குவார்கள்.

 நான் தற்போது இருக்கும் LNG (இயற்கை எரிவாயு) பசிபிக் சக்சசும் பனாமாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர் தென்கொரியாவிலுள்ள சினோகொர் நிறுவனம். முந்நூறுக்கும் மேற்பட்ட கப்பல்கள் அந்த நிறுவனத்திடம் இருக்கிறது.

 ஜப்பானின் NYK,MOL போன்ற நிறுவனங்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் இருக்கிறது. குறைந்த செலவு,சிக்கலில்லாத நடைமுறைகள் போன்ற காரணங்களால் இவ்வாறு பதிவு செய்து கொள்கிறார்கள்.

    கப்பல் மூழ்கினாலும்,கார்கோ மூழ்கினாலும் முதலாளிக்கு எந்த இழப்பும் இல்லை. இழப்பு அதில் வேலை செய்யும் பணியாளனின் குடும்பத்துக்கு மட்டுமே. அவனுக்கும் இனிசூரன்ஸ் இருக்குமே என நீங்கள் எண்ணுவது எனக்கு கேட்கிறது. ஆள் இல்லாமல் பணம் மட்டும் இருந்து என்ன செய்ய.

  மனிதன் அறிவியல்,விஞ்ஞானத்தின் உச்சம் தொட்டது சக மனித உயிரை கொல்வதற்கு தானா.

நாஞ்சில் ஹமீது,

13 march 2026.

sunitashahul@gmail.com.

Monday, 9 March 2026

ரமலான் நோன்பு- இறுதி பத்தில்

 லைலத்துல் ஃகத்ர் இரவு



  கப்பல் இப்போது HRA ஏரியாவை பத்திரமாக கடந்து இந்தியாவை நோக்கி பயணிக்கிறது. போனி துறைமுகம் விட்டபின் ஞாயிறன்று ஓய்வாக இருந்தது. இன்று திங்கள்கிழமை ஹோலி பண்டிகைக்கான விடுமுறை வேண்டி கொரிய முதன்மை இஞ்சினியரும்,மலேசிய முதன்மை அதிகாரி திவ்யனும் விடுத்த கோரிக்கையை காப்டன் ஷின் ஏற்றுகொண்டதால் இன்றும் விடுமுறையாக இருந்தது.

   இரு தினங்களாக குடியிருப்பை விட்டு வெளியே செல்லவில்லை என்பதை மாலையில் தான் உணர்ந்தேன் எனவே மாலை ஆறு மணிக்கு மேல் அறையை விட்டு வெளியே சென்று அரைமணி நேரம் நடைபயிற்சி செய்தேன்.எட்டுமணிக்கு சூரிய அஸ்தமன நேரமாக இருந்தது.

இம்மாதம் ராம நவமி,மாஹாவீர் ஜெயந்தி,ஈதுல் பித்ர் என மேலும் மூன்று நாட்கள் விடுமுறை வருவதாக இந்தோனேசிய இரண்டாம் இஞ்சினியர் மீட்டிங்கில் சொன்னார். இந்திய அதிகாரிகள் இருக்கும் கப்பல்களில் இது போல் விடுமுறைக்கு சாத்தியமேயில்லை. மலேசிய,இந்தோனேசியர்கள் எப்படி எல்லாம் விடுமுறையை எடுக்காலாம் என யோசிப்பவர்கள் எனவே இம்மாதம் குறைந்தது  மேலும் இரு விடுமுறை நாட்கள் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

   கப்பலின் கடிகாரம் கடந்த மாதம் பத்தொன்பதாம் தேதிக்கு பின் மாறவே இல்லை. பதினாறு நாட்களுக்குப்பின் நேற்று கப்பலின் கடிகாரம் ஒரு மணிநேரம் முன்னே சென்றது.

ரமலான் நோன்பு துவங்கி பத்தொன்பது நாட்கள் நிறைவடைந்துவிட்டது. எனக்கு எப்போதும் ஏன் நாட்கள் வேகமாக நகருகின்றன என தெரியவில்லை.

    அதிகாலை நோன்பு வைக்க (அத்தாளம்) இரவுணவை எடுத்து வைத்துகொள்வேன். மதியமுள்ள  பச்சை காய்கறி சாலடும். நோன்பு திறக்கும் இப்தாருக்கு ஆப்பிள்,பேரிக்காய்,தர்பூசணி என மதியம் இருக்கும் பழம் வைத்துகொல்வேன். தலைமை சமையற்காரர் நோன்பு துவங்கும்போது ஒரு கிலோ பேரீத்தம் பழம் தந்தார். அறையில் நோன்பு திறந்து தண்ணீர் குடித்து பழம் சாப்பிட்டபின் மக்ரிப் தொழுகைக்குப் பின்பு மெஸ் ரூமுக்கு போய் உண்பேன்.



    இதுவரை நான்கு முறை கப்பலில் கஞ்சி வைத்தேன். பிரான்ஸிலும்,நைஜீரியாவின் போனி துறைமுகத்தில் இருந்தபோதும் மிகசரியாக பணியில் இருந்தேன் நோன்பு திறக்கும் வேளையில் பேரீத்தம்பழமும்,சிறு குப்பியில் நீரும் தயாராக கொண்டு சென்றதால் மேனிபோல்டில் நோன்பு திறந்த நாட்கள் அவை.

  நைஜீரிய துறைமுகத்தில் இருந்தபோது மட்டும் அதிக பணியால் ஒரு நாள் மட்டும் கடினமாக இருந்தது. கப்பலில் இந்தோனேசிய மூன்றாம் இஞ்சினியரும்,மலேசிய காஸ் இஞ்சினியரும் நோன்பு வைத்துள்ளனர்.அவர்களை நான் சந்திப்பதே இல்லை எப்போது சகர் மற்றும் இப்தாருக்கு வருகிறார்கள் என தெரியாது.  

 

 நைஜீரியாவை நோக்கி செல்லும்போது மூன்று தினங்கள் காலை எட்டே முக்காலுக்கு சூரிய உதயமாக இருந்தது. சமையற்காரர் காலை ஆறரை மணிக்கு காலை உணவு தயாராகிவிடும் என்றதால் அந்த மூன்று நாட்களும் ப்ரேக் பாஸ்ட் உண்டே நோன்பு வைத்தேன். அந்நாட்களில் அந்தி அணையும் நேரமும் எட்டரைக்கு மேல் இருந்தது.

 


 

       

 புனித ரமலானில் அல்லாஹ்வால் குர்ஆன் முழுமையாக இறக்கபட்டது. அந்த இரவைத்தான்  லைலத்துல் ஃகத்ர் இரவு சொல்லப்படுகிறது.   நபிகள் நாயகம் அவர்களிடம் ரமலானில் எந்த நாளில் லைலத்துல் ஃகத்ர் என சகாபாக்கள் கேட்டபோது கடைசி பத்தில் ஒற்றை படையான ஒரு நாளில் என குறிப்பிட்டார்கள். அதாவது ரமலானின் 21,23,25,27,மற்றும்29வது நாளின் இரவாக இருக்கலாம்.

லைலத்துல் ஃகத்ர் இரவு எண்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு சமம். அதாவது அன்றிரவு நின்று வணங்குவதால் ஆயிரம் இரவு வணங்கியதற்கு சமம். அன்று செய்யும் ஒரு ரூபாய் தானம் ஆயிரம் ரூபாய் தானம் செய்வதை போன்றது. அந்த மேன்மையான இரவை தவறவிடக்கூடாது என்பதால் ரமலான் நோன்பு இருபது முடிந்த அந்த இரவிலிருந்து ஒற்றைப்படையான இரவுகளை லைலத்துல் ஃகத்ர் ஆக எதிர்பார்த்து இருப்பதோடு அதிகப்படியான வணக்க வழிபாடுகளில் ஈடு பட்டு இறைவனிடம் நன்றி செலுத்தியும், பாவ மன்னிப்பும் கேட்க வேண்டும்.

  நாளை இருபதாம் நோன்பு முடிந்தபின்  ரமலானின் இருபத்தி ஒன்றாம் இரவு அது  லைலத்துல் ஃகத்ர் இரவாகவும் இருக்கலாம் எனவே நாளை இரவு முதல் அதிகமான வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டு லைலத்துல் ஃகத்ர் இரவின் நன்மைகள் கிடைத்திட அனைவரும் முயற்சிக்கலாம். ஏக இறைவன் அனைத்தையும் அறிந்தவன்.

 

நாஞ்சில் ஹமீது,

09 march 2026.

sunitashahul@gmail.com

Sunday, 8 March 2026

ஹை ரிஸ்க் ஏரியா(HIGH RISK AREA)

 



  HRA  எனும் சொல்லை 2009 ஆம் ஆண்டு லியோ லீடர் எனும் கப்பலில் பணியில் இருந்தபோதுதான் முதன் முதலாக என் செவியில் விழுந்தது.

    HRA என்று சொல்லப்படும் இந்த ஹை ரிஸ்க் ஏரியா என்பது கடல் கொள்ளையர்களால் கப்பலை கடத்தி செல்லும் ஆபத்தான கடல் பகுதிகள். இவை சோமாலியாவுக்கும் ஓமான் நாட்டுக்கும் இடைப்பட்ட கல்ப் ஆப் எடேன்,மேற்கு ஆப்ரிக்காவின் நைஜீரிய,கானா,டோகோ மற்றும் உலகில் வேறு சில பகுதிகள் கடல் கொள்ளையர்களால் அச்சுறுத்தல் உள்ள பகுதியாகும்.

2009  மற்றும் 2010ஆண்டுகளில் கல்ப் ஆப் எடேன் பகுதியில் பாதுகாப்பு காண்வாயில் பயணித்தோம். அப்போதுஇந்திய,சீன,ஜப்பான் நாட்டு கடற்படை கப்பல்கள் இப்பகுதியில் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு தந்து உதவின.  ஆபத்தான பகுதி துவங்கும் இடத்திலிருந்து காண்வாய் புறப்படும் நேரத்தை முதலிலேயே அறிவிப்பார்கள். அதில் இணைந்துகொள்ளும் கப்பல்களை அவர்கள் ஆபத்தான பகுதியை தாண்ட பாதுகாப்பு தருவார்கள்.

 காண்வாயின் முன்பும் பின்பும் இரு கடற்படை கப்பல்கள் ஆயுதங்களுடன் உடன் வரும். ஆபத்தான பகுதியாக கருதப்படும் இடத்தை கடக்க இருதினங்கள் ஆகும்.அனைத்து கப்பல்களும் சீரான ஒரே வேகத்தில் செல்வது அவசியம் (10 knots ).

 பாதுகாப்பான இடத்தை அடைந்ததும் கப்பல்கள் தங்களது பாதையில் உரிய வேகத்தில் பிரிந்து செல்லும். நான் பயணித்த இருமுறையும் பதினாறு கப்பல்கள் காண்வாயில் பயணித்தது. கப்பலில் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு கப்பலை சுற்றி முள்வேலி கட்டப்பட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்தவாறு சென்றோம்.

  பணியாளர் அனைவருக்கும் மாலை ஆறு முதல் காலை ஆறுமணிவரை இரு மணிநேரம் வீதம் டெக்கில் கண்காணிப்பு பணியில் இருவர் வீதம் அமர்த்தப்பட்டோம்.

  அப்போது என்னுடன் பைரைசி வாட்சில் உடன் வந்த பிரபீஸ் கிருஷ்ணா “ஷாஹுலே அவ மாரெடுத்து நைட் விஷன் பைனாகுலரும், தோக்கும் காணும்,நம்மளு ஈ டார்ச் வெச்சிட்டு எந்தா செய்கயா, பேன் ரூம்மின்ற பிறகில் இருந்து ரிப்போர்ட் மாத்திரம்செய்தா மதி” என்றார்.அப்போது எங்களுக்கு இருதினங்கள் சம்பளம் அதிகமாக கிடைத்தது.

  2015 அதே HRA ஏரியாவில் சென்றபோது கடற்படை காண்வாய் இல்லை. கப்பலின் காப்டனுக்கு கப்பல் நிறுவன பாதுகாப்பு அதிகாரி கப்பலை முழுவேகத்தில் பயணிக்க சொன்னார். HRA அலவன்ஸ் சம்பளும் நிறுத்தப்பட்டிருந்தது.

  கப்பலை கடத்திசென்ற சம்பவங்கள் அப்போது நிறைய நடந்தது.கொள்ளையர்கள் கப்பலுக்குள் புகுந்துவிட்டால் பணியாளர் அனைவரையும் ஒரு அறையில் அமர்த்திவிட்டு கப்பலை அவர்களது கட்டுப்பாட்டில் சோமாலியாவுக்கு கொண்டு செல்வார்கள். பின்னர் கப்பல் முதலாளியுடன் இருபது மில்லியன் டாலரில் பேரம் ஆரம்பமாகும். பேரம் முடியும் வரை கப்பல் பணியாளர்கள் அவர்கள் பிடியில் இருக்கவேண்டியதுதான். என்னுடன் பணிபுரிந்த ஒருவர் அவ்வாறு ஒன்பது மாதங்கள் கொள்ளையர்களின் பிடியில் இருந்ததை சொன்னார். இறுதியாக ஐந்து மில்லியன் டாலரில் பேரம் முடிவானதும். கப்பல் விடுவிக்கப்பட்டது.

  2016 முதல் சவூதி அரேபியா மற்றும் சூயஸ் கால்வாய்க்கு செல்லும்போது ஆயுதம் ஏந்திய பாதுகாலர்கள் எங்களுக்கு பாதுகாப்பாக கப்பலிலேயே பயணித்தார்கள். கப்பல் முதலாளிகள் அதிக பணம் செலவு செய்து அவர்களை நியமித்தார்கள். அந்த சேவையை வழங்கும் பாதுகாப்பு நிறுவனங்கள் துபாய்,இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளை மையமாக கொண்டு செயல்படுகிறது.

   பாதுகாப்புக்காக வரும் வீரர்கள் முன்னாள் ராணுவ,கடற்ப்படையில் பணிபுந்தவர்கள்.தற்போது நான் பணிபுரியும் எல்பிஜி,எல்என்ஜி கப்பல்கள் ஆறு மாதத்தில் நான்கு முறையாவது இந்த HRA ஏரியாவில் பயணிக்கவேண்டியுள்ளது.

     நான் இப்போது இருக்கும் எல்என்ஜி  பசுபிக் சக்சஸ் அமெரிக்காவில் நிறைத்த சரக்கை பிரான்சில் இறக்கினோம். உடனே அடுத்த அழைப்பு கார்கோ நிறைக்க நைஜீரியாவின் போனி துறைமுகத்துக்கு.

  மொத்தம் பன்னிரெண்டுநாள் பயணம். இறுதி இருதினங்கள் HRA வில் பயணிக்க வேண்டும். பிப்ரவரி இருபத்தி எட்டாம் தேதி சனிக்கிழமை பாதுகாப்பு ஒத்திகைகளை செய்து பார்த்தோம்.கொள்ளையர்கள் கப்பலுக்குள் புகுந்துவிட்டால் அவர்கள் கையில் மாலுமிகள் அகப்படாமல் சிட்டாடெல் அறைக்குள் புகுந்து அருகிலுள்ள கடற்படைக்கும்,உதவிவேண்டி  அழைக்கவேண்டிய தொலைப்பேசி எண்கள் மற்றும் அந்த போனை திறக்கும்  ரகசிய எண்கள் பற்றிய பயிற்சிகள் வழங்கபட்டது.

   கப்பலின் பின்பகுதி முழுவதும் முள்வேலி சுற்றப்பட்டு. அதிக விசையில் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் குழாய்கள் பொருத்தபட்டது. கப்பல் ஆறாம் தேதியே போய் சேருவதாக இருந்தது. ஆனால் நைஜீரியாவின் போனி துறைமுகம் ஏழாம் தேதிதான் உள்ளே வரவேண்டும் ஒரு நாள் அருகில் காத்திருமாறு வேண்டினர். கொரிய காப்டன் ஷின் உறுதியாக முடியாது என மறுத்துவிட்டார். எனவே ஆறாம் தேதியே உள்ள செல்ல அனுமதி கிடைத்தது.

 கடந்த நான்காம் தேதி இரவு HRA பகுதியில் நுழைந்தோம். கப்பலின் அனைத்து கதவுகளும் உள்ளிருந்து பூட்டபட்ட்து. ஒரேயொரு கதவு மட்டும் உள்-வெளியில்  செல்ல திறக்கப்பட்டிருந்தது. இரவில் யாருக்கும் வெளியே செல்ல அனுமதியில்லை.



 போனி துறைமுகத்தின் நூற்றிபத்து மைல்களுக்கு முன்னால் ஆறாம் தேதி அதிகாலை கடற்ப்படை கப்பல் ஒன்று பாதுகாப்புகாக  இணையும் என்று சொல்லியிருந்தார்கள். அதுவரை கடல்கொள்ளையர்கள் பிடியில் சிக்காமல் சென்றுவிட்டால் கப்பலின் பாதுகாப்பு அனேகமாக உறுதி.

 வெள்ளி காலை குறிப்பிட்ட இடத்தை அடைந்த போது இன்னும் கொஞ்சம் முன்னால் வாருங்கள் என்றார்கள். இரு மணிநேரத்துக்கு பிறகு அருகில்தான் இருக்கிறோம் இன்னும் வாருங்கள் என சொன்னார்கள். இனியும் என்னால் வரமுடியாது உங்கள் கப்பல் எங்கு இருக்கிறது என காப்டன் கேட்கவும் பத்து மைல்முன்னால் வாருங்கள் நாங்களும் வந்து விடுவோம் இப்போது தான் புறப்பட்டோம் எனும் தகவலை சொன்னார்கள்.

   அதிகாலை கடற்ப்படை கப்பல் எங்களுடன் இணைந்து துறைமுகம் வரை வந்தது. மாலையில் கப்பல் போனி துறைமுகப்பில் கட்டப்பட்டது. துறைமுகத்திலும் கடற்ப்படை கப்பல்கள் பாதுகாப்புக்காக ரோந்து பணியில் இருந்தனர்.



  சனிக்கிழமை மதியம் ஒரு லட்சத்து நாற்பத்தி இரண்டாயிரம் மெட்ரிக் டன் இயற்கை எரிவாயு (LNG) நிறைக்கும் பணி முடிந்து மாலை ஐந்தரை மணிக்கு கப்பல் புறப்பட்டது. இரு தினங்கள் மீண்டும் HRA எரியவில் பயணம். திங்கள்கிழமை அதிகாலை ஆபத்தான பகுதியை கடப்போம். கப்பல் இந்தியாவின் குஜராத்தின் தகேஜ் துறைமுகத்திற்கு செல்கிறது.அரபு வளைகுடாவின் கத்தார்,குவைத்,அபுதாபியில் lng உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

  எகிப்தின் இடுக்கு துறைமுகத்தில் சரக்கு நிறைத்தாலும் ஹார்மொஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் கப்பல் வர முடியாது.இந்தியாவின் தொழில்துறை மற்றும் போக்குவரத்துக்கு நாங்கள் கொண்டு செல்லும் இந்த இயற்கை வாயு மிக அத்தியாவசியமானது இப்போது. அதற்கு இன்று இரவும் கடற்கொள்ளைகள் கையில் சிக்காமல் இருக்க வேண்டும்.

  நாஞ்சில் ஹமீது,

08 march 2026.

sunitashahul@gmail.com

Sunday, 1 March 2026

அமெரிக்கா – ஈரான் போர்.

 



  ரமலானின் பத்தாவது நாளான நேற்று சனிக்கிழமையாக இருந்தது. சனிக்கிழமை மட்டும் செய்யும் வேலைகளை செய்தோம். (Saturday routine,alarm tests greasing etc)

  கப்பல் பிரான்சிலிருந்து நைஜீரியாவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. காலை எட்டே முக்காலுக்கு சூரிய உதயமும் அஸ்தமனம் இரவு எட்டரை மணிக்கும். கப்பலின் கடிகாரத்தை ஒரு மணிநேரம் பின்நோக்கி நகர்த்தியிருக்க வேண்டும். ஆனால் பிரான்ஸ் ,நைஜீரியாவின் கடிகார நேரம் ஒன்றாக இருப்பதால் கப்பலின் கடிகாரத்தை மாற்றவே இல்லை.

  கடந்த மூன்று தினங்களாக அதிகாலை ஆறு மணிக்கு எழுந்து குளித்து ஆறேமுக்காலுக்கு காலை உணவு உண்டுதான் ஸகர் வைக்கிறேன். இரவு எட்டரை வரை காத்திருந்து சூரியன் அஸ்தமனம் ஆன பின்பு இப்தார் எனும் நோன்பு திறத்தல்.



  கப்பலில் இரண்டாவது நாளாக நேற்றும் கஞ்சி வைத்து குடித்தேன். நேற்று காலையிலேயே எனது இளையவள் காதர்பீவி அழைத்தாள் “காக்கா நீ எங்க இருக்கா நோம்புன்னு பாக்காம போர் தொடங்கிட்டானுவோ” என பதறினாள்.நேற்றிரவு நண்பர் கவிஞர் ஆனந்த் குறுஞ்செய்தி அனுப்பியிருர்ந்தார். ஷாகுல் எங்கே இருக்கீங்க என.


 இன்று அதிகாலையே திரைப்பட இயக்குனர் நண்பர் கே.பி வினோத் அழைத்தார். “எங்க இருக்குதிய இப்ப,கப்பல் போக்குவரத்து கஷ்டம் ஆச்சே போர் நட்க்கதுல்லா” என கேட்டார்.

   இன்று எனது தாய் பீமாவை அழைத்தபோது “மோனே நீ எங்க இருக்கா,கத்தார்ல குண்டு வெடிடிக்குதாமே” என பதறினார்.

 தோழி கவிதாவும்,சுபஸ்ரீயும் கவலையுடன் விசாரித்தனர். மும்பையில் வாழும் மாமி ஒருவர் “இந்த கப்பல் வேல என்னத்துக்கு,பொண்ணாட்டி,பிள்ளையளுக்க கிட்ட இல்லாம,ஆயிரத்தெட்டு வேல துனியாவுல இருக்கு,உங்களோட போட்டு இந்த வேல,உங்க மக்களுக்கு இந்த வேல வேண்டாம் மோனே” என்றார்.





 போர் பதட்டம் உலகை சூழ்ந்து கொண்டது. எண்ணெய் கப்பல்கள் மற்றும் காஸ் கப்பல்கள் சரக்கு ஏற்றுவது இந்த மத்திய கிழக்கு நாடுகளான ஈரான்,குவைத்,கத்தார்,ஓமான்,சவூதி,அபுதாபியில் தான். யுஏஇயில் உள்ள புஜைரா கப்பல் போக்குவரத்தில் உலகில் மிக முக்கியமான மையம். சரக்கு கப்பல்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.

  ஆம் உண்மையில் கடல் வழி வாணிபமும்,கப்பல் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கும். இந்திய கடல்சார் ஆணையம் அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது ஈரான் மற்றும் வளைகுடா பகுதிகளிலுள்ள மாலுமிகளை உடனடியாக தொடர்புகொள்ள அறிவுறுத்தபட்டுள்ளனர்.

அதே போல் விமானநிலையங்கள் மூடப்பட்டுள்ளது. துபாய்,டோஹா அபுதாபி போன்ற விமான நிலையங்கள் சர்வதேச அளவில் உலகை இணைக்கும் விமானங்களின் இணைப்பு பாதை. இதனால் சர்வதேச பயணங்கள் ரத்தாகியுள்ளது.

  நாகரீகத்தின் உச்சத்தில் மனித சமுதாயம் இருப்பதாக சொல்லிகொள்கிறோம். அறிவியல் வளர்ச்சியிலும் அதுதான்.வலுகட்டாயமாக ஒரு நாட்டின் மேல் போர் திணிக்கப்பட்டு மக்களை கொன்றழிப்பதுதான் நாகரீகமா?அணு ஆயுதங்களை வைத்திருப்பது வலுவற்ற நாடுகளை அச்சமூட்டதானா?

  எளியவர்களின் இந்த கேள்விகளுக்கு விடையே இல்லை.உலக தலைவர்கள் சமாதனம் பேசி போரை முடிவுக்கு கொண்டுவந்து.மனித உயிர்கள் கொல்லப்படுவதை உடனே தடுத்து நிறுத்தவேண்டும்.

 நண்பர்கள் பலரும் தொடர்ந்து என்னைபற்றிய கவலையுடன் குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்ட இருக்கிறார்கள். நான் ஐரோப்பா- மேற்கு ஆப்ரிக்கா பயணத்தில் இருப்பதால் பாதுகாப்பாக இருக்கிறேன். இம்மாத இறுதிவரை இதே பகுதியில்தான் பயணம் இருக்கிறது.

   சகோதரி மனோபாரதி எனக்காக வேண்டிகொண்டார். நண்பர்களின்  பிரார்த்தனைகளுக்கு நன்றி நான் பாதுகாப்பாக இருக்கிறேன்.

நாஞ்சில் ஹமீது,

01 march-2026.

sunitashahul@gmail.com