Wednesday 8 July 2020

பிரார்த்தனைகள் நிறைவேறுமா


பிரார்த்தனைகள் நிறைவேறுமா?
 //அட்சய திருதியை அன்று நாம் எதை வைத்து பூஜை செய்கிறோமோ அது பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். தங்கம் வெள்ளி என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் இன்றைய உடனடி தேவை என்பது தண்ணீர். போன முறை நாம் இதேபோல் செய்ததன் விளைவு மிகச்சிறப்பாக மழை பெய்து இன்று வரை தண்ணீரை அனுபவித்து வருகிறோம். எனவே அட்சய திரிதியை அன்று ஒரு குடம் அல்லது ஒரு செம்பு நிறைய தண்ணீரை இறைவன் முன்பு வைத்து நமக்கு குறைவில்லாத தண்ணீர் செல்வத்தை வழங்குமாறு பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது சரியான முறை என்று நினைத்தால் தெரிந்தவர்களிடம் கூறி அவர்களையும் ஆண்டவரிடம் பிரார்த்தனை செய்ய சொல்லவும். நீரின்றி அமையாது உலகு.//
இன்று  வாட்ஸ்அப் குழுமம் ஒன்றில் ஒருவர் இவ்வாறு பதிவிட்டிருந்தார்.அப்போது என் நினைவிலிருந்து எழுந்த சிலவற்றை உடனே எழுத வேண்டுமென்று தோன்றியது .
  
மழைத்தவம்,மழைவேண்டி பிரார்த்தனை,மழைவேண்டி சிறப்புத்தொழுகை இவற்றால் என்ன பயன் என.

     நான் ஒரு அத்வைதி அதில் எனக்கு எந்த குழப்பமும் இல்லை .
 வள்ளுவர் வாக்குப்படி வேண்டுதல் வேண்டாமை எனும் நிலையை எப்போதோ அடைந்துவிட்டேன் .

     வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
     யாண்டும் இடும்பை இல .
 
  எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய தேசாந்திரி எனும் நூலில் மழை வேண்டி ஒரு கிராமத்தில் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்ததையும் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வாசித்திருந்தேன் .

    கடந்த 2017  ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கடும் வறட்சி நிலவியது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.அந்த ஆண்டு துவக்கத்தில் நான் மெக்காவில் இருந்தேன்.அங்கே ஒருநாள்  மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது .மெக்கா கவர்னர் உட்பட பெரும்பாலானோர் கலந்துகொண்டு மழை வேண்டி இறைவனிடம் இறைஞ்சினோம் .

     அதே ஆண்டு மார்ச் மாதம் நாகர்கோயில் கோட்டார் பள்ளிவாசலில் மழைவேண்டி சிறப்புத்தொழுகை நடந்த செய்தி புகைப்படத்துடன்  நாளிதழில் வந்தது .ஒருவாரத்திற்குப்பின்  நாகர்கோயில் கலாச்சார பள்ளியில் மழை வேண்டி சிறப்புதொழுகைக்கான அறிவிப்பை ஜும்மாவில் இமாம் வெளியிட்டார் .   கடும் வறட்சி நிலவுகிறது இதே நிலை இன்னும் சில மாதங்கள் தொடர்ந்தால் மனிதன் மட்டுமல்ல,விலங்குகளும்,பிற உயிரினங்களும் பாதிக்கப்படும் எனவே அனைவரும் ஒருநாள் நோன்பு வைத்து மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்த உள்ளோம் .உங்கள் வீட்டு பெண்களையும்,பிஞ்சு குழைந்தைகளையும் தவறாது அழைத்து வந்து மழைவேண்டி நடக்கும் சிறப்புதொழுகையில் கலந்து கொள்ளுங்கள் .உள்ளம் உருகி கேட்கப்படும் பிரார்த்தனைகள் நிறை வேற்றப்படும் .நபிகள் நாயகம் இவ்வாறு மழை வேண்டி சிறப்புத்தொழுகை நடத்தியிருக்கிறார் என இமாம் சொன்னார் .
  
         நாகர்கோயில் தண்ணீர் தொட்டி சாலையில் உள்ள ஒய் ஆர் மகாலில் அதற்கான ஏற்பாடு செய்யபட்டிருந்தது.நானும் நோன்பு வைத்திருந்தேன்.(சூரிய உதயத்திற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன் உண்ணலாம் பருகலாம் பின்னர் சூரியன் அஸ்தமதிற்கு பின் உண்ணவும் பருகவும் செய்யாலாம்.இடைப்பட்ட பதினான்கு மணிநேரத்தில் ஒரு சொட்டு நீர்கூட அருந்தக்கூடாது.முக்கியமாக பிறர் மனம் நோகும் படி நடக்கக்கூடாது . நாள் முழுவதும் இறை நினைவுடன், இறை வணக்கங்களில் ஈடு பட வேண்டும் என்பதே நோன்பு.)
  
    மறுநாள் மழை வேண்டி சிறப்புத்தொழுகை, நான்  அதிகாலை தொழுகைக்கு வடசேரி பள்ளிவாசல் சென்றுவந்தபின்,காலை ஏழு மணிக்கு நடக்கும் மழை வேண்டி நடக்கும் சிறப்புதொழுகைக்கு ,எனது மூத்த மகன் ஷாலிமும்,நண்பர் இப்ராகிம் அவர்களும் சென்றோம் .குறிப்பிட்ட நேரப்படி சரியாக காலை ஏழரைக்கு மழைவேண்டி சிறப்புத்தொழுகை தொடங்கியது.இமாமின் வேண்டுகோளை ஏற்று  பெரும்பாலான பெண்களும்,பிஞ்சு குழைந்தைகளும் திரளாக கலந்துகொண்டனர்.
  
     தொழுகை முடிந்து வீட்டிற்கு வந்தோம் என் மகன் ஷாலிம் என்னிடம் வாப்பா மள இன்னும் வரல்லஎன கேட்டான். என்னிடம் அதற்கு அப்போது பதில் இல்லை அன்று முழுநாளும் என்னால் அவனுக்கு பதில் சொல்ல இயலவில்லை .
   
    மறுநாள் காலை ஐந்து மணிக்கு அதிகாலை தொழுகையை நிறைவேற்ற பள்ளிவாசல் செல்லும் பொருட்டு எழுந்து அறையிலிருந்து வெளியே வந்து கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்தபோது ஆம் மழை பெய்துகொண்டிருந்தது .வேகமாக அறையினுள் சென்று ஷாலிமை எழுப்பி வெளியே அழைத்து வந்து காண்பித்தேன் .வாப்பா என என்னை கட்டியணைத்துகொண்டான்.


   
   தான் முழு நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்ததால் மழை வந்தது என அவன் உள்ளம் உறுதியடைந்த வேளை அது .
ஷாகுல் ஹமீது .
03 april 2019.

Thursday 2 July 2020

முடி முறித்தல்


கப்பல் காரன் டைரி
                          முடி முறித்தல்
  இரு வாரங்களுக்கு முன் என்னுடன் பணிபுரியும் எர்ணாகுளம் கருணாகர பிள்ளை கோபகுமார் “ஷாஹுலே முடி முறிக்காம் அறியாமோ” என கேட்டார். “ஆம் முறிக்காம் ஞாறாட்ச உச்சக்கி” என சொல்லி வைத்தேன்.உணவு கூடத்தில் என்  எதிரில் அமர்ந்திருந்த குஜாரத்தின் சோலங்கி திலிப்குமார் நதோட் என்னிடம் , “உனக்கு முடி நிறைய வளர்ந்து விட்டது வெட்ட வேண்டும் என்றார்” அவரும் என்னிடம் ஞாயிறு மதியம் சரியாக பனிரெண்டுமணி என்றார் .

      பண்டு ஒசா வீட்டுக்கு வந்து குழைந்தைகளுக்கும்,சின்ன புள்ளையளுக்கும் மொட்டையடிச்சி,முடி வெட்டிட்டு போவாரு.நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது  ஸ்டப் கட்டிங் புகழ்பெற்றிருந்தது .அப்போது வந்த ஒரு திரைப்படத்தின் நாயகனின் சிகை அலங்காரம் அது  .
   மணாவாளக்குறிச்சியில்  நான்கு சலூன்கள் இருந்தது.அதில் மோகன் சலூன் புகழ் பெற்றது .கடந்த விடுமுறையில் இளைய மகன் ஷல்மானுக்கு முடி வெட்ட மோகன் சலூனுக்கு போயிருந்தேன் .அவர் நண்பரும் கூட எனக்கு .அவர் ஒரே தொழிலில் ஐம்பது ஆண்டுகளை நிறைவுசெய்ய போகிறார்  இந்த ஆண்டு.
  
  கப்பல் பணியாளர்கள் அனைவரும் கப்பலுக்கு செல்லும் முன் முடியை நல்லா ஒட்ட வெட்டிட்டு போனால் அடுத்த இரண்டு ,மூன்று மாதத்திற்கு முடிபற்றிய கவலையில்லை .கப்பலில் ஒருவர் பிறருக்கு முடி வெட்டி கொள்ளவேண்டியதுதான் .பிலிப்பினோ பணியாளர்கள் அனைவருமே நன்றாக முடி வெட்டதெரிந்தவர்கள்.
  
  இரண்டாயிரத்தி ஐந்தாம் ஆண்டு எனது முதல் கப்பல் ஈராக்கின் உம்காசர் துறைமுகம் சென்றபோது.முடி வெட்டுபவர் வந்திருந்தார்,பாகிஸ்தானை சேர்ந்த முதன்மை பொறியாளர் முடி வெட்டியபின் கூலியாக ஒரு காலி எண்ணெய் பீப்பாயை கொடுத்தார்.அதை பெற்றுகொண்டு மகிழ்ச்சியுடன் சென்றார் அவர்.அதை  ஏழு அமெரிக்க டாலருக்கு விற்க முடியும் அது அவருக்கு பெரும் தொகை .

   இரண்டாயிரத்தி பத்தாம் ஆண்டு நான் பணிபுரிந்த கப்பலில் எனது இரண்டாம் இஞ்சினியர் மங்களூர் முகம்மது சமீர். “ஷாகுல் முடிவெட்ட வேண்டும்” என்றார். “எனக்கு தெரியாது” என்றேன். “கொஞ்சம் சைடுல மட்டும் வெட்டு” என அழைத்து சென்றார் .காதுகளுக்கு மேற்பகுதியிலும்,பின் மண்டையிலும்தான் அவருக்கு முடி இருந்தது.நடுமண்டை கால்பந்து மைதானம் .
  அவரது அறையில் மீசை வெட்டும் கத்திரியால் முடி வெட்டிக்கொண்டிருக்கும் போது அவர் முன்பு அவரது முதன்மை இஞ்சினியருக்கு முடி வெட்டியதை சொன்னார். “ நான் சீப் இஞ்சினியருக்கு முடி வெட்டத்துல அவருக்க  காதை வெட்டிட்டேன் காதுல இருந்து ரத்தம் சொட்ட ,சொட்ட அவர் காதுல இயற் மப் போட்டுட்டு வெட்டுன்னு சொன்னாரு”என்றார் .அப்போது எனது கைகள் உதற தொடங்கியது . “உங்களது காதை கைகளால் பிடித்துக்கொள்ளுங்கள்” என்றேன் .
  அதன் பின் இருவருடங்களுக்குப்பின் என்னுடன் பணிபுரிந்த ஆந்திராவின் சிற்க்காகுளத்தை சேர்ந்த முகி குருமூர்த்தி முடி வெட்டி கேட்டார். “தெரியாது” என்றேன். “நான் சொல்லி தருகிறேன் அதுபோல் வெட்டு,இது ஒரு கலை,நீ காஸ் கட்டிங் செய்பவன் உன்னால் முடியும்.சீப்பை கையில் பிடித்து முடியை மேல் வாக்காக கோதியபின் சீப்பின் மேலிருக்கும் முடியை மட்டும் வெட்டு” என்றார்.அதன்பின் அதே கப்பலில் மூன்று வழுக்கு மண்டைக்கு வெட்டியபின் என் கைதிருந்தியது. ஆனால் முடி வெட்ட நல்ல கத்திரிகோலும்,சீப்பும் அவசியம் என்பதை தெரிந்து கொண்டேன்.சுனிதாவிடம் “முடி வெட்ட படிச்சாச்சு”என்றேன். “அப்ப ஊருக்கு வந்தாலும் வேற தொழில் கைவசம் இருக்குன்னு சொல்லுங்கோ” என சொல்லி சிரித்தாள்..
   
   இருவாரங்களுக்கு முன் நான் கோபகுமாருக்கு முடி முறித்தேன். சோலங்கி எனக்கு நல்ல ஒட்ட வெட்டிவிட்டார் அடுத்த இரு மாதங்களுக்கு பின் மீண்டும் வெட்டி தருகிறேன் என்றார்.என்னை நான் கண்ணாடியில் பார்த்தபோது மந்த புத்தி காரர்களை போல இருந்தது. “கப்பல்ல யாரு பாக்க போறா சப் சலேகா”என்றார் சோலங்கி பாய் .அவர் ஊருக்கு செல்லும் முன் பெரும்பாலானவர்களுக்கு முடி வெட்டி தருவதாக சொன்னார் .   ஒரு போட்டோ எடுத்து சுனிதாவிற்கு அனுப்பினேன் “முடி முறிச்சு” என. “முறிச்சதை எங்கே நட்டு வைத்தீர்கள்” என பதில் கேள்வி வந்தது .
  
    கடந்த சனிக்கிழமை என்னுடன் பணிபுரியும் இனையம் தம்பி ஹெல்டன் “முடி வெட்டி தா” என கேட்டான் .அடுத்த வாரம் ஊருக்கு செல்லவிருகிறார்.நீண்ட விமான பயணத்தில் ஸ்டைலாக போக வேண்டுமென நினைக்கறார் போல.சனியும்,ஞாயிறு மதியமும் எனக்கு பணி.ஞாயிறு பின் மாலையில் அவருக்கும் முடிவேட்டினேன் .அவருக்கு கொஞ்சம் தான் முடியிருந்தது ஆனாலும் அந்த மண்டையில் முடி வெட்டுவது கொஞ்சம் கடினம் .
ஒருமுறை இலங்கையின் நான்காம் இஞ்சினியர் வாரன்கே என்பவருக்கு முடி வெட்டியது மட்டும் நினைவிலிருந்து அகலவேயில்லை .ஆறு மாதங்களுக்கு மேல்  முடிவெட்டாமல் கரடியின் தோற்றத்தில் அலைந்துகொண்டிருந்தவரை காப்டன் கடிந்து கொண்டதால்.முடி வெட்டுமாறு வேண்டினார் .தையல் கலைஞர்கள் உபயோகிக்கும் கத்தரி தான் நாங்கள் கப்பலில் பாக்கிங்ஸ்(JOINTS) வெட்ட பயன்படுத்துவோம் .அந்த பெரிய கத்தரியால் செடியின் இலைகளை வெட்டுவது போல் வெட்டினேன்.வெட்டி எறிந்த முடியை எடை பார்த்திருந்தால் ஒரு கிலோவுக்கு மேல் வந்திருக்குமோ எனும் பிரமிப்பு .அவன் சாப்பிட்டது எல்லாம் அந்த முடிக்கே போய்ட்டோ என்னமோ .
   
         ஆப்ரிக்காவில் குடும்பத்துடன் வாழும் நண்பர் முடி வெட்டியிருப்பதை பார்த்து எங்கே வெட்டினாய் எனக்கும் வெட்டவேண்டும் என சக நண்பர் கேட்டபோது .”நான் வெட்டுன ஆளுட்ட நீ வெட்ட முடியாது ,எனக்க பொண்டாட்டியாக்கும் எனக்கு முடி வெட்டினது”என முன்பு நண்பர் ஒருவர் சொல்ல கேட்டிருக்கிறேன்.வெளிநாட்டில் வாழும் பெண்களும் நன்றாக முடி வெட்டுவதில் தேர்ந்துவிட்டார்கள் போல .

   வெளிநாடுகளில் பல பணியாளர் முகாம்களிலும் இப்படிதானிருக்கும் என நினைக்கிறேன் .முடி வெட்டுவது வெளிநாடுகளில் பெரும் பொருட்செலவு வேறு .நான் மெக்ஸிகோவில்  uni sex hair dressing எனும் பெயர் பலகையை கண்டு உள் நுழைந்தேன். “கட்டணம் எவ்வளவு என” கேட்டேன். “சிங்கோ டாலர்” என்றாள் அங்கிருந்த பெண்மணி .இருக்கையை காட்டி அமர சொல்லிவிட்டு உள் அறைக்கு சென்றுவிட்டாள்.வேறு ஆள் வருவார்கள் என நினைத்து அமர்ந்திருந்தேன் .அந்த பெண்மணியே கையில் கத்த்ரிகோல்,சீப்புடன் வந்து   சில சிகையலங்கார படங்களை காட்டி எப்படி வெட்ட வேண்டும் என கேட்டுவிட்டு  அவளே முடி வெட்டத்தொடங்கினாள்.

   கடந்த பத்து வருடங்களாக நாகர்கோயில்,கல்லூரி சாலையில், விஜயதா மண்டபத்தின் அருகில் இருக்கும் அன்பு சலூன் சரவணனிடம் தான் செல்கிறேன்.கடந்த பிப்ரவரியில் முடி வெட்ட கட்டணம் எண்பது ரூபாய் .எனது மகன் ஷாலிமுக்கு மாதம்தோறும் முடி வெட்டி கொள்ளவேண்டும்.அவனுக்கு சரவணன் கடைக்கு செல்ல பிடிக்காது .இப்போது நகரில் குளுகுளு வசதி செய்யப்பட்ட பல சிகையலங்கார கடைகள் வந்து விட்டது .எந்த புதிய முடி வெட்டு கடை திறந்தாலும் அங்கு ஒரு முறை அவனுக்கு போகவேண்டும் .அவனுக்கு முடி வெட்ட கட்டணம் நூற்றியிருபது ரூபாய் க்கு மேல் .

முடி வெட்டும் கடைகளில் காத்திருக்கும் நேரம் மிக சுவராசியம் மிகுந்தது .கையில் தினதந்தியுடன் அரசியல்,பொருளாதார,விஞ்ஞான நிபுணர்களின் விவாதம் நடக்குமிடம் அது.அடுத்த முறை நண்பர்கள் சலூன் கடைக்கு சென்றால் தேர்தல் முடிவுகளையும்,அடுத்த பிரதமர் யார் என்பதையும் அறியமுடியும் .ஒட்டு எண்ணும் மே இருபத்திமூன்றாம்  தேதி வரைகாத்திருக்க தேவையில்லை .
       ஷாகுல் ஹமீது ,
         30.april 2019
   கடந்த ஆண்டு ஏப்ரிலில் எழுதியது.
இந்த கொரோனா காலத்தில் இளையவன் சல்மானுக்கு ஒருமுறை முடி வெட்டி கொடுத்தேன் .இன்று காலை மூத்தவன் ஸாலிம் மொட்டை அடித்து தர வேண்டினான் .