கசல் - பகுதி ஒன்று
2011ம் ஆண்டு நவம்பர்மாதம் ஹார்மொனி ஏஸிலிருந்து இறங்கி வீட்டுக்கு வந்தேன். பிறந்து ஐந்துமாதமே ஆன குழந்தை சல்மான் என் முகம் பார்த்து சிரித்தான். ஸாலிம் முதல் வகுப்பு பள்ளிக்கு போக தொடங்கியிருந்தான்.
குரு ராதாகிருஷ்ணன் அவர்கள் கன்னியாகுமரியில் நடத்திய சிறப்பு யோகவாழ்வு வகுப்பில் கலந்துகொண்டேன். பொங்கல் பண்டிகைக்கு திருச்சி நண்பன் ஜெகனின் வீட்டுக்கு போய் வந்தோம்.
மும்பை அலுவலக மேனேஜர் மாறி அங்கேயே பணி செய்த பிரத்தமேஷ் என்பவர் மேனேஜராக ஆகியிருந்தார். 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கசல் எனும் கப்பலில் இணைய சொல்லி வேண்டினார். குடியிருந்த வாடகை வீட்டை மாறிகேட்டதால் அவரசமாக வேறு வீடு பார்த்து குடியேறிய ஒரு வாரத்தில் புறப்படவேண்டி வந்தது.
கொச்சி அலுவலகம் சென்று மருத்துவ சோதனைகள் முடிந்து காத்திருந்தேன். கப்பலில் இணையும் தேதி வந்தது. வீட்டில் அனைவரிடமும் விடைபெற்று கொச்சி செல்வதற்காக ரயில்நிலையம் நோக்கி செல்லும்போது கொச்சி அலுவலகத்திலிருந்து தோமஸ் அழைத்தார். “இந்து வரண்டா, டேட் மாறி. நாள வந்தா மதி” என்றார். மார்ச் பதினான்காம் தேதி கொச்சி அலுவலகம் சென்று விமான டிக்கெட் மற்றும் ஆவணங்களை வாங்கிக் கொண்டு விமான நிலையம் சென்றேன்.
குடியுரிமை அதிகாரி “அமெரிக்காவுக்கு எதற்காக செல்கிறாய்? திருச்சி பாஸ்போர்ட், ஏன் கொச்சியில் இருந்து விமானம் ஏறுகிறாய்?” எனக் கேட்டார். உயரதிகாரியிடம் அனுப்பிவைத்தார். அவர் ஆவணங்களையும் பாஸ்போர்ட்டையும் பார்த்துவிட்டு அனுமதித்தார். ஒன்றும் கேட்கவில்லை. கொச்சி – தோஹா வழியாக அமெரிக்காவின் ஹூஸ்டனில் இறங்கினேன்.
விமானத்தில் பாலக்காட்டை சார்ந்த உஷாவும், தங்கை ,ஆஷாவும் தந்தையின் இறப்புக்கு வந்துவிட்டு தாயை அழைத்துக்கொண்டு திரும்ப கணவன்கள் வேலைசெய்யும் அமெரிக்க நகரங்களுக்கு சென்றுகொண்டிருந்தனர்.
ஹூஸ்டனில் இறங்கியபோது கப்பல் துறைமுகம் வராமல் நங்கூரம் பாய்ச்சி நின்றுகொண்டிருந்ததால் விடுதியில் தங்கவைக்கப்பட்டோம். என்னுடன் பணியில் இணையவேண்டி இரு பிலிப்பினோக்கள் இஞ்சின் கேடட் மற்றும் டெக் கேடட்டை விமானத்தில் சந்தித்தேன். மூன்று தினங்களுக்குப்பின் கப்பலுக்கு சென்றேன். விடுதியில் வேறு கப்பல்களுக்கு செல்லும் பணியாளர்கள் ஒரு வாரமாக தங்கியிருந்தனர். இந்தியா- இலங்கை கிரிக்கெட் மாட்சில் விராட் கோலியின் பேட்டிங்கை பார்த்தும் தூங்கி எழுந்தும் கடந்த மூன்று தினங்கள்.
கசல் பன்னிரண்டு வயது கப்பல். 2008 ஆம் ஆண்டு நான் பணிபுரிந்த ஐஜின் கப்பலில் எனக்கு முதன்மை அதிகாரியாக இருந்த அஸ்லின் மிஸ்கிட்டா காப்டனாக இருந்தார். அவருக்கு கீழ் நேவிகேசன் அதிகாரிகள் மூவரும் பிலிப்பினோக்கள். இயந்திர அறையில் முதன்மை இஞ்சினியர் பஞ்சாபின் ஜெர்நைல் சிங் அறுபத்தியைந்து வயதான, முன்னாள் இந்திய கப்பல்படையை சார்ந்தவர். கொல்கத்தாவின் போஸ் இரண்டாம் இஞ்சினியர், நைனிடாலின் கௌதம் நான்காம் இஞ்சினியர், பத்தி சாப் (எலக்ட்ரிகல் அதிகாரி) கேரளா, தலைமை சமையல்காரர் ஜெப்ரி கோவாவை சார்ந்தவர். மொத்தமுள்ள இருபத்தியிரண்டு பேரில் மீதி அனைவரும் பிலிப்பினோக்கள்.
பத்திசாப் என்னிடம் இரண்டாம் இஞ்சினியராக இருக்கும் எனது அண்ணனின் பெயரை சொல்லி அவரது தம்பியா எனக்கேட்டார். ஏணியிலிருந்து கீழே விழுந்ததில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவமனைக்கு சென்றவர் கை மூட்டில் லேசான கீறல் இருந்ததால் சிகிச்சைக்கு செல்ல வேண்டி உடனடியாக வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
எப்போதும் ஹோம் சிக் எனக்கு கிடையாது. கப்பலுக்கு வந்துவிட்டால் இயல்பாக வீட்டு நினைவுகளிலிருந்து விடுபட்டு பணியில் ஒன்றிவிடுவேன். மாலை ஐந்துமணிக்கு பணி முடிந்து அறைக்கு சென்றபின் மறுநாள் காலை வரை இயந்திர அறையின் நினைவே வராது. இம்முறை ஏனோ மனம் கொஞ்சம் அமைதியில்லாமல் வீட்டு நினைவுகளும், எதிர்மறை எண்ணங்களும் எட்டி பார்த்ததை உணர்ந்தேன். முதல் துறைமுகம் ஐந்து நாட்களுக்குப்பின் பனாமாவின் மன்சிநிலோ. இங்கிருந்துதான் மூன்றரை மாதங்களுக்கு முன் ஹார்மொனி ஏஸில் இருந்து இறங்கி வீட்டுக்கு சென்றேன். மலிவான போன் அட்டைகள் கிடைக்கும். மூன்று டாலரில் இந்தியாவுக்கு ஒரு மணிநேரம் பேச முடியும்.
மலேசியாவில் வாழும் ஹமீமா மைனியிடம் பேசும்போது “கொஞ்சம் ஹோம் சிக் இருக்கு முத தடவையா, எப்போதுமே இந்த பிரச்னை கிடையாது எனக்கு” என்றேன்.
“லீவு முடிஞ்சி இப்ப தானே வேலக்கி வந்திருக்கியோ, ஒரு வாரம் அப்டி தான் இருக்கும்” என்றார்.
இம்முறை இரண்டாம் இஞ்சினியர் போஸுடன் ஒத்துபோகவில்லை. பிட்டராக இருந்து பரீட்சைகள் எழுதி இரண்டாம் இஞ்சினியராக உயர்ந்தவர். நான் செய்வது அனைத்திலும் குறை சொல்வார். அவ்வபோது சிறு மோதல்களும். காலை பணிவிவாத கூடத்தில் அவர் பேசியது பிலிப்பினோ கேடட்க்கு புரியவில்லை. அதை நான் அவனுக்கு விளக்கி கூறியபோது புரிந்துகொண்டான். “செகண்ட் இஞ்சினியர் சொன்னா புரியாதது, பிட்டர் சொல்லி புரியுது” என என் மேல் மேலும் வன்மம் கூட தொடங்கியது.
மாலை ஐந்துமணிக்கு மேல் இஞ்சின் ரூம் யூஎம்எஸ் மோடில் போட்டபின்பு என்னை மட்டும் ஏழு மணிவரை வேலை செய்ய சொன்னார். “உனக்க வெல்டிங் செரியில்ல, டெய்லி ஒரு மணிநேரம், பிராக்டிஸ் பண்ணு, பீயுல் பம்ப் ஏரியாவை சுத்தபடுத்து” என போஸின் டார்ச்சர்கள் கூடிக்கொண்டே சென்றது.
“நான் பிட்டர்! கிளினிங் வேலக்கி வைப்பர கூப்பிடு. அஞ்சி மணிக்கி மேல, வேல செய்யணும்னா ஒரு இஞ்சினியர் இஞ்சின் ரூம்ல இருக்கணும்” என எங்கள் நிறுவன விதிமுறைகளை பேசி அந்த வேலைகளை செய்யாமல் மறுத்தேன். இரு பிலிப்பினோ மோட்டர்கள் மற்றும் நான்காம் இஞ்சினியருக்கும் போஸுடன் அப்பவ்வோது மோதல்கள். போஸ் செய்யும் அனைத்து தவறுகளுக்கும் இஞ்சின் கேடட் பலியானான்.
முதன்மை இஞ்சினியர் ஜெர்நைல் சிங் ஒரு மகான், மிகச்சிறந்த ஆசிரியர். பணியில் நல்ல அனுபவம், உற்சாகமான மனிதர். சம்பளத்தில் பெரும்பகுதியை குருத்வாராவுக்கு* நன்கொடையாக வழங்குபவர். பைபிள் வாசிப்பதில் நல்ல ஈடுபாடு. சுத்த சைவம். குடி அறவே கிடையாது. போஸுடன் பலமுறை பணிசெய்தவர். போஸை பற்றி நன்கறிந்தவர். தேநீர் இடைவேளைகள் சீப் இன்ஜினியரின் செக்ஸ் ஜோக்ஸ்களால் கலகலப்பாகும்.
போஸின் டார்ச்சர்கள் அதிகரிக்கவே எனக்கும் அவருக்கும் தினமும் மோதல். முதன்மை இன்ஜினியரிடம் சொன்னேன். “அவன்ட்ட பேசுகிறேன், அவன் அப்டிதான்” என்றார். இயந்திர அறைக்கு துறைத்தலைவர் முதன்மை இஞ்சினியர். இயந்திர அறையும், பணியாளர்கள் அனைவரும் முதன்மை இன்ஜினியரால் நியமிக்க இரண்டாம் இன்ஜினியரின் கீழ் தான். போஸ் ஐ யாம் தி பாஸ் என்பதை காட்டவே எப்போதும் விரும்பினார்.
போஸை குறித்து காப்டனிடம் புகார் அளித்தேன். “இன்ஸ்பெக்சன் இருக்கதுனால, அடுத்த சில நாட்களுக்கு ரெண்டு மணிக்கூர் கூட வேல பாக்க சொல்வார், நான் பேசுகிறேன்” என்றார் காப்டன். மறுநாள் காலை பணி விவாத கூட்டத்தில் போஸ் எனக்கு எந்த வேலையும் தரவில்லை. கூட்டம் கலைந்து நான் வொர்க்ஷாப்பில் இருந்தபோது அழைத்து “நேத்து கேப்டன பத்துருக்கா”
“ஆமா ஆபிசுக்கும் சொல்ல தெரியும்” என்றேன்.
“உனக்கு வேலையே தெரியாது, வெல்டிங் சுத்த மோசம். நான் நினைச்சா உன்ன வீட்டுக்கு அனுப்ப முடியும்” என்றார்.
பகலில் இயந்திர அறையில் ஐந்து மணிவரை வேலை மட்டுமே வேலை செய்தேன். ஞாயிறு மதியத்திற்கு மேல் ஓய்வாக இருக்கும். நான்கு மணிக்கு டூட்டி இஞ்சினியர் ஒரு மணிநேரம் ரவுண்ட்ஸ்க்கு போக வேண்டும். அந்த நேரத்தில் போஸ் எனக்கு போன் செய்து எக்ஸ்சாஸ்ட் வால்வ் லாப்பிங் செய்ய சொல்வர்.
ஆனாலும் போஸ் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. நான் நானாக இல்லாமல் வேறு ஆளாக மாறிக்கொண்டிருந்தேன். கொடுமையான எதிர்மறை எண்ணங்களால் பாதிப்படைந்தேன். உடல் மட்டும் கப்பலில் இருந்தது. எண்ணங்களால் வேறொரு உலகில் இருந்தேன். பொழுது விடிந்தால் முன்னால் இருக்கும் ஒரு நாள் மிக நீண்டதாக, எப்படி இந்தநாளை கடக்க போகிறேன் ஒவ்வொரு வினாடியும் மிக நீண்டதாக நில்லாமல் தொடரும் எதிர்மறை எண்ணங்கள் என் இயல்பிற்குரியது அல்ல.
எனக்கு தெரிந்தது அது நானல்ல, நானல்ல என. தியானத்தில் அமரவே இயலவில்லை, கையில் இருக்கும் எந்த நூல்களையும் வாசித்து கடந்து போய்விடவும் இயலவில்லை.
தனிமை இன்னும் கொடுமையானதாக இருந்ததால் அறைக்கு தூங்க மட்டும் செல்வேன். சமையற்காரர் ஜெப்ரியை தவிர பேசவும் இங்கே யாரும் இல்லை. ஐந்து மணிக்குமேல் அறைக்கு வந்து ஜெப்ரி, பத்திசாப், முதன்மை இன்ஜினியர் ஆகியோருடன் அமர்ந்து படம் பார்ப்பேன். முடிந்தவரை கூட்டமாக இருப்பேன். கப்பல் பனாமாவிலிருந்து பசிபிக் கடலில் நுழைந்து சைனாவுக்கு நீண்ட பயணத்தை தொடங்கியிருந்தது.
சுனிதாவிடம் சொன்னேன் கப்பலில் இருக்கவே முடியவில்லை என. அவளது கேள்வி இந்த வாத்தியாருக்கு என்ன ஆச்சி என. கொடுமையான கெட்ட எதிர்மறை எண்ணங்கள் வருவதை தவிர்க்க கடலில் குதித்துவிடலாம் எனும் எண்ணம் வரும். அதனால் இரவுகளில் குடியிருப்பை விட்டு வெளியே வரவே மாட்டேன். பகலில் உடல் களைக்க வேலை இருப்பதால் தூக்கம் வருவதுவரை பொது இடங்களில் இருந்துவிட்டு அறைக்குள் சென்றதும் கண்களை மூடி சீக்கிரத்தில் தூங்கி விடுவேன். காலை எழும்போதே தாங்கவியலாத கொடும் எண்ணங்களுடன் இந்த நாளை எப்படி கடக்க போகிறேன் என அமர்ந்து கண்ணீர் விடுவேன். விடியாமலே இருந்துவிடாதா என்றும் நினைப்பேன்.
இது நான் இல்லை என்ன ஆயிற்று எனக்கு என நானாக மாறும் தருணங்களும் உண்டு. கப்பலில் இருக்க முடியாது. எதை சொல்லி வீட்டுக்கு போகலாம் என யோசித்தேன். இறுதியாக காப்டனிடம் சொல்லிவிடலாம் என முடிவு செய்தேன். என் பிரச்சனைகளை அண்ணன் மாஹீனிடம் சொன்னேன். இரண்டாம் இஞ்சினியராக இருக்கும் அவர் அனுப்பிய மின்னஞ்சலில் “காப்டனிடம் சொல்லி விடாதே! அதன் பின் கப்பலுக்கே போக முடியாது. அடுத்த பணியாளர் மாற்றம் எப்போது என சொல். மருந்து அனுப்புகிறேன்” என எழுதியிருந்தார்.
கடினமான நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தேன் தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்க தொடங்கியிருந்தது. நேவியில் இருக்கும்போது முதன்மை இன்ஜினியரின் ஆறுமாத ஜூனியரான பத்தி சாபும் அவரும் நல்ல நண்பர்கள். ஜெர்நைல் சிங் அளவிற்கு பத்திசாப் ஆரோக்கியமானவர் அல்ல. அவரது கடினமான எல்லா வேலைகளுக்கும் என்னை அழைப்பார்.
இயந்திர அறையின் லிப்ட் மிஷின் அறைக்கு மேலே குழாய்கள் அடுக்கி வைத்திருக்கபட்டிருந்தது. அதனருகில் டியூப் லைட் பொருத்தவேண்டிய வெல்டிங் பணிக்காக அழைத்தார். இருபது மீட்டருக்குமேல் உயரம். அதற்காக அனைத்தும் தயாராகி வெல்டிங்கை துவங்கும் முன் நான் நின்ற இடத்திலிருந்து சற்று தள்ளி இருந்தது லைட் பிரேம் பொருத்தவேண்டிய இடம். அங்கிருந்த ஒரு சிறு குழாயை இடக்கையால் பிடித்த ஷணம் சட்டென ஒரு எண்ணம். “கையை விட்டுவிடு! கீழே இருக்கும் ஹீட்டர் மேல் விழுந்தால் செத்துவிடலாம்”. பத்தி சாப் சப்தமாக “ஸ்டாப்” என்றார்.
“உள்ள நின்னுக்கோ, சேப்டி பெல்ட் எடுத்துட்டு வாறன் வெயிட்” என சொல்லிவிட்டு பணிமனைக்குள் சென்றார். அப்போது நானாக மாறினேன். என்ன செய்துவிட பார்த்தேன். விபரீதத்தின் உச்சம் ஒரு நொடி மூளையில் மின்னியது.
நாஞ்சில் ஹமீது.
29-May-2025.
sunitashahul@gmail.com
குருத்வாரா – பஞ்சாபிய கோயில்கள்
தொடர்புடைய பதிவு:
சோர்வும் மீள்வும் - எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் தளத்தில் வெளிவந்த கடிதம்
காக்கும் கரங்கள் உண்டெனக்கு என்று ஒரு கிறிஸ்தவ பாடல் உண்டு. எனக்கு மிகப்பிடித்தமானது. அதுபோல காக்கும் கரங்கள் உண்டு. பத்திசாப்க்கு அந்த நேரம் ஏதோ தோன்றிதானே சப்தம் போட்டிருக்கிறார். நிறைய பேரின் வாழ்க்கையில் உங்கள் கரம் இருக்கப்போவதை அறிந்திருக்கும் அந்தப்பெரிய கரமே இதைச்செய்தது. எவ்வளவு பேரின் மனநலம், உடல்நலம், கல்விநலம். அதெல்லாம் மேலோட்டமாய் நாம் அறிந்திருப்பது. ஆனால் ஒரு எளிய குடும்பத்தில் ஒருவர் பெறும் கல்வி அந்தக் குடும்பத்தின் அத்தனை பேருக்கும் உணவாய், துணியாய், மருந்தாய் எப்படி மாறியிருக்கும். அது நமக்குத் தெரியாது இல்லையா? ஊடு பாவு போல தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எத்தனை பேரின் வாழ்க்கையில் நீங்கள் ஊடுறுவியிருக்கிறீங்க என்பது யாருக்கும் தெரியாது. அதுதான் பத்திசாபின் ஸ்டாப்.
ReplyDeleteடெய்சி