முதல் கப்பல். புதுக்கருக்கு அழியாத மனைவியை அதுவும் மாசமா இருக்கிற பெண்ணை விட்டுட்டு சென்ற அனுபவம். கனவிலும் சுனிதாவோட லாஜிக்கா போனில்தான் பேசியிருக்கீங்க🤣🤣.
நாடுவிட்டு நாடு பசிச்சு வர ஊழியர்களுக்கு வயிறு நிறைய உணவு கொடுக்கும் மனிதர்கள், அறை சரியில்லை என்றவுடன் தன் அறையை பகிர்ந்து கொள்ளும் சக ஊழியர். எந்த இடத்திலும் ஷாகுலை ஒரு கண்ணுக்குத்தெரியாத கரம் நடத்திக்கிட்டேதான் இருக்கு. நீங்க அந்தக் கப்பலில் இருந்து ஊருக்கு வரும்போது சாலிம் பொறந்து இருப்பானே?
இஸ்லாம் சொல்லும் கணவன் வீட்டுக்கு அருகில் வேலை பார்க்கணும்னு சொல்றீங்க. ஆனால் ஏறக்குறைய இஸ்லாமியர்கள்தான் நிறையபேரு வெளிநாடுகளில் வேலை செய்றாங்க. ஏன் இந்த முரண். முதல்ல உங்க பதிவுகள் படிக்கும்போது உங்கள் உறவினர்களை கற்பனையில் நினைச்சுக்குவேன். இப்ப எல்லாரையும் நேரில் பார்த்ததால அவங்க சொல்ற வார்த்தைகளை அவங்க சொந்த வாய்ஸலயே புரிஞ்சிக்க முடியுது.
வெப் சீரிஸ் மாதிரி இருபது ஆண்டு நிறைவு நன்றாய் வர என் வாழ்த்துக்கள்.
![]() |
தம்பி ஷேக் புருனே யுனிவர்சிட்டி |
டெய்சி அக்கா,
நீங்கள் தொடர்ந்து கப்பல் காரன் டைரியை வாசிப்பது நிறைவளிக்கிறது . திருமணமான ஆறு மாதத்தில் இரண்டரை மாத கர்பினியை விட்டு,விட்டு போனேன்.இப்படி கப்பல் காரர்கள் முக்கிய நாட்களில் போயிருக்கிறார்கள். பண்டிகை நாட்கள்,மிக முக்கிய குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாமல் என நிறைய சொல்லலாம். ஒன்றை மட்டும் சொல்கிறேன்.
தொண்ணூறுகளில் இந்திய அரசு கப்பல் துறையில் பயிற்சியை முடித்த ஒருவர் தான் காதலித்த பெண்ணை பதிவு திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார். பெண் வீட்டில் எதிர்ப்பும், உறவிலேயே பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்ய தொடங்கிய வேளை அது.ரிஜிஸ்டர் அலுவலகத்தில் காலை பதினோரு மணிக்கு திருமணம் முடிந்ததும். அவரது கப்பல் நிறுவனம் அழைத்து சென்னை துறைமுகத்தில் நிற்கும் கப்பலில் அன்று மாலையில் பணியில் இணைய சொன்னது.
திருமணம் நடந்ததை சொல்லாமல் கணவன் வரும் வரை வீட்டிலேயே இருந்த பெண்ணுடன் எந்த தொடர்பும் இல்லாமல் தனக்காக காத்திருப்பாள் எனும் நம்பிக்கையில் பணியை நிறைவுசெய்து பதினான்கு மாதங்களுக்குப்பின் திரும்பி வந்தார். திருமணம் ஆன புதுமனைவியை அவர் முத்தம் கொடுத்தது பதினான்கு மாதங்களுக்கு பின்.
நான் கப்பலில் இருக்கும்போது மூத்தமகன் ஸாலிம் பிறந்தான். கப்பல் ஈராக்கிலிருந்து துபை நோக்கி புறப்பட்டிருந்தது. மூன்று தினங்களுக்குப்பின் துபாயை கப்பல் நெருங்கும்போது நண்பரின் போனில் குறுஞ்செய்தி வந்திருந்ததை சொன்னார். பின்னர் போனில் அழைத்து விசாரித்தேன்.
இஸ்லாம் சொல்லும் ஆணின் வாழ்வாதாரம் வீட்டுக்கு அருகில் என்றபோதும் பெரும்பாலான இஸ்லாமியர் வெளிநாடுகளில் வேலை ஏன்? என்று கேட்கீர்கள்.
என் தாத்தா தேங்காய்நார் கயிறு திரிக்கும் வேலையும்,வைத்தியரகவும் இருந்தார். என் வாப்பா சிறுவனாக இருக்கும்போது வாரம் ஒருமுறை தான் அரிசி சோறு என சொல்வார்.என் அம்மா வழி தாத்தா சைக்களில் ஜவுளி வியாபாரம் செய்தார். வெளியூர்களில் தங்கி,வாரம் ஒரு முறை வீட்டுக்கு வருவார் வெள்ளிகிழமை காலை குளத்தில் குளிக்கையில்தான் ஊரில் நடந்த அந்த ஒருவார செய்திகளை பேசிகொள்வார்கள். அந்த தலைமுறையில் பெருமபாலும் அப்படி இருந்துள்ளனர். தென்னம்தோப்பும், தண்ணீர் கிணறும் என ஊரில் ஒருவரே ஹாஜியாரக செல்வ செழிப்பாக இருந்துள்ளனர். பொருள்தேடி பெரும்பாலும் குடும்பைத்தை பிரிய வேண்டிய கட்டயாம் தான்.
எண்பதுகளில் அரபு வளைகுடா நாடுகளில் உருவான வேலைவாய்ப்பு அதை பயன்படுத்தி சென்ற வெளிநாடுகளுக்கு சென்று பொருள்தேடினார்கள். 1975 பம்பாயிலிருந்து கப்பலில் பஹ்ரைன் நாட்டுக்கு சென்றார் சுனிதாவின் அம்மா வழி தாத்தா ஒருவர். எழுத்தாளர் தோப்பில் முகமது மீரானின் தேங்காய் பட்டணத்தை சார்ந்தவர். சுனிதாவின் குடுபத்தில் ஒரு சிலரை தவிர அனைவரும் பஹ்ரைனில் வேலை செய்கிறார். தேங்காய் பட்டணம் கிராமத்திலிருந்து பெரும்பாலானவர்களை பஹ்ரைனுக்கு செல்ல வழிகாட்டியவர். நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பஹ்ரைனில் இருந்துவிட்டு இப்போது கிராமத்தில் ஓய்வெடுக்கும் யூனுஸ் ஹாஜியார் குடும்பத்தையும்,கிராமத்தையும் முன்னேற்ற செய்த தியாகம் அளப்பரியது.
பொருளாதார முன்னேற்றம் வேண்டி கடல் கடந்து சென்றவர்கள்,உடன் பிறந்த சகோதரிகளின் திருமணம்,இளையர்வர்களின் படிப்பு உழைத்துகொண்டே இருக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.குடும்பத்துடன் வெளிநாடுகளில் வாழ்வது உயர்பதவிகளில் இருப்பவர்களுக்கு தான் சாத்தியம். வீட்டையும்,நாட்டையும் முன்னேற்றுவதில் வெளிநாடுவாழ் பணியாளர்கள் மிக முக்கிய வகிக்கிறார்கள். அவர்களது,தியாகமும்,உழைப்பும் மெச்சதக்கது.
கொல்லம் பொறியியல் கலூரியில் பணியாற்றிய என் தம்பி ஷேக்கிற்கு அரசு சம்பளமும்,பணிநிறைவுக்குப்பின் ஓய்வூதியமும் உண்டு. அதைதுறந்து புருனே யூனிவர்சிட்டியில் பணியில் சேர்ந்து குடும்பத்துடன் வசிக்கும் அவர் வருடம் ஒருமுறை கல்லூரி விடுமுறையில் நாகர்கோவில் வந்து செல்கிறார். அரசு ஊதியத்தை துறந்து புருனே செல்ல அவன் என்னிடம் சொன்ன காரணம். “இந்த சம்பளத்த வெச்சி நான் நினக்க ஹதியா செய்ய முடியல அண்ணே”
நான் கப்பல் போக நினைத்தது ஆறு மாதத்தில் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்து விடலாம் என்பதும் ஒரு காரணம்.
நாஞ்சில் ஹமீது.
No comments:
Post a Comment