Saturday, 7 June 2025

அறியாமல் கடந்து சென்ற பக்ரீத் - 2025


நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ரமலான் மாதத்தின் இருபத்தி ஒன்பதாம் நாளில் மாலையில் ஆடு அறுக்கும் காசீம் பிள்ளையின் ஓலைக்குடிசை அருகில் சிறுவர்கள் கூடியிருப்போம். “நாளக்கி பெருநாள் ஆ!” என்பதை அறிய. பெருசு எனும் சுலைமான் மூத்தாப்பா வந்து காசீமிடம் “ரெண்டு கிடாய் போதுமாடே” எனக் கேட்பார்.

“ஒண்ணு கூட சொல்லிருக்கேன். இன்னைக்கி பிற தெரிஞ்சா, தகவல் கிடச்சி ராத்திரி இறச்சி வாங்க ஆள் வராது, காலத்த நேரத்தே அறுக்கணும், அதுக்கு மிந்தி அத்துல் கிடாய் கொண்டு வந்துருவான்” என்பார் காசீம்.

சிறுவர்களாகிய எங்களுக்கு பிறை தெரிவதும், தெரியாததும் ஒன்றும் மனசிலாவதில்லை. பெருநாள் என்றால் காலையில் தொழுகை முடித்து மஸ்கோத் அல்வா, கிண்ணதப்பம் கிடைக்கும். ஐம்பது பைசா அல்லது ஒரு ரூபாய் பெருநா படியாக கிடைத்தால் முப்பது பைசாவில் பெருமாபிள்ளை சைக்கிள் கடையில் கால் சைக்கிள் ஒரு மணிக்கூர் வாடகைக்கு எடுத்து எடுத்து சவுட்டலாம்.

பிறை தெரியாமல் போனால் ஒரு நாள்கூட காத்திருக்க வேண்டும். அதற்கு பொறுமை இல்லாமல்தான் காசீம் பிள்ளை கசாப்பு கடையின் முன் கூடி பெருநாளை எதிர்பார்ப்பது.

ஆனால் தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை எப்போதும் குழப்பம் இல்லை. துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாளில் மெக்காவில் ஹாஜிகள் மினா மைதானத்தில் தங்கியிருந்து பத்தாம் நாள் காபாவை ஏழு முறை சுற்றி தவாப் செய்து சபா மர்வா மலைகளுக்கிடையில் தொங்கோட்டம் ஓடி குர்பானி கொடுத்து ஹஜ் கடமையை நிறைவேற்றுவர். இந்த பிறை பார்ப்பது எப்போதும் குழப்பமே இல்லை.

சவூதிஅரேபியாவில் இன்று பெருநாள். நமக்கும் சவுதிக்கும் இரண்டரை மணிநேர வித்தியாசம். நாம் ஏன் அதே நாளில் பெருநாள் கொண்டாட கூடாது என சொல்லி சவூதி அரேபியாவை பின்பற்றி சில குழுக்கள் அரபு நாடுகளில் பண்டிகையை கொண்டாடும் அதே நாளில் இங்கேயும் கடைபிடிக்க வற்புறுத்துகின்றனர். நாம் எங்கே வாழ்கிறோமோ அங்கே பிறை தென்படும் நாளை கணக்கு வைத்து நோன்பு துவங்கும் நாள், பெருநாள் கொண்டாடும் நாட்களை கணக்கிட்டு கொள்ளவேண்டியதுதான். பக்கத்து நாட்டில் தெரிந்த பிறை நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பு குறைவுதான்.

நாம் வாழும் ஊரில் பிறை தெரிந்தால் அல்லது பிறை பார்த்ததாக நம்பிக்கையானவர் சொன்னால் பெருநாளை முடிவு செய்து மகிழ்ந்திருக்க வேண்டியதுதான்.

தியாக திருநாள் எனப்படும் ஈத் உல் அல்ஹா பண்டிகை உலகெங்கும் கொண்டாடப்பட்டது. இப்ராஹீம் நபிக்கு எழுபது வயதாகியும் குழந்தையில்லை. அவர் இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். அதன் பின் தனது துணைவியார் ஹாஜிரா மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இஸ்மாயில் என பெயரிட்டு மகிழ்வர்.

இப்ராகிம் நபிக்கு ஒரு கனவு வரும், இறைவனுக்காக இஸ்மாயிலை தந்தையே பலியிடுவது போல். தாங்காத துயரத்துடன் மகனிடம் சொல்வார். மகன் இஸ்மாயில் இறவைனின் கட்டளையை நிறைவேற்ற தந்தையிடம் சொல்லி தயாராகிவிடுவார்.

மகனை தந்தையே படுக்க வைத்து கழுத்தில் கத்தியை வைத்து பலியிட தயாராகும்போது வானவர் ஜிப்ரயீல் வந்து “தடுத்து இறைவன் உம்மை சோதித்து பார்த்தான். உமது தியாகத்தை கண்டு இறைவன் மகிழ்ந்தான் எனவே ஒரு ஆட்டை அறுத்து அனைவருக்கும் பகிர்ந்தளித்து உண்” என இறைவனின் குரலாய் ஒலித்தார். (குர்பானி)ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற விலங்குகளை குர்பானி கொடுக்கலாம்.

துல்ஹஜ் மாதம் பத்தாம் தேதி பக்ரீத் பண்டிகையாகும். இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றாகிய ஹஜ் செய்வது இப்போதுதான். துல்ஹஜ் மாத ஒன்பதாவது நாள் இரவில் அரபா மைதானத்தில் ஹாஜிகள் தங்கிவிட்டு பத்தாம் நாள் மெக்கா சென்று தவாபும் செய்து தொழுகையை நிறைவேற்றிய பின் குர்பானியும் கொடுப்பர்.

இதுதான் தியாக திருநாளின் வரலாறு.

அவற்றின் மாமிசங்களோ, ரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை)அச்சமே அவனை சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைபடுத்திட இவ்வாறே அதை உங்களுக்கு பயன்பட செய்தான்.

குர் ஆன் அல் ஹஜ் 22:37

அரபா தினத்தன்று நோன்பிருப்பது சுன்னத்தாகும். கப்பலில் நோன்பு வைக்கும் பாக்கியம் கிடைத்தது.

இம்முறை வழக்கமான வேலை நாளாக இருந்தது. நானும் ஐந்து நாட்களுக்கு முன் கேடட் ஆக பணியில் இணைந்த என் நண்பர் நவாஸ் அப்துல் ரஹ்மானின் மகன் நாசிம் மட்டுமே உள்ளோம். கப்பல் கடந்த நான்காம் தேதி (04-06-2025) மாலை ஜப்பானிலிருந்து புறப்பட்டு அமெரிக்காவின் ஹூஸ்டனை நோக்கி பசிபிக் கடலில் நீண்ட பயணத்தை துவங்கியது. அதிகாலை எழுந்து பஜர் தொழுகைக்குப்பின் இன்று வர வேண்டிய கட்டுரையை கொஞ்சம் எழுதினேன். 

புதிய உடைகள்

 

ஆறரை மணிக்கு குளித்து ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த புதிய ஆடைகளை அணிந்து இரண்டு ரக்காத் சுன்னத் தொழுதபின் பிரிட்ஜில் சென்று நாசிமுக்கு வாழ்த்து சொல்லி பெருநாள் படியும் கொடுத்துவிட்டு “முதல் கப்பல் வந்து ஐந்தே நாளில் முதல் பண்டிகை, பெரும்பாலும் பண்டிகை நாள் தெரியாமலே கடந்து செல்லும். இனி இவற்றை பழகிக்கொள்” என்றேன்.

Cadet Nazim



முதன்மை இஞ்சினியராக பணிபுரியும் எனது மூத்த சகோதரருக்கு விடுமுறை முடிந்து பணியில் இணைய சொல்லி உத்தரவு வந்தது. காலையில் பள்ளிவாசலில் பெருநாள் தொழுகை முடிந்ததும் திருவனந்தபுரம் விமானம் நிலையம் புறப்பட்டு சென்றார்.

Third Officer



காலையில் உடன் பணிபுரிபவர்கள் அனைவருக்கும் பேரீத்தம் பழம் கொடுத்து வாழத்து சொன்னேன். இரு தினங்களுக்கு முன் சமையல்காரர் இன்று மதியம் மட்டன் பிரியாணி செய்வதாக சொல்லியிருந்தார். கடந்த மூன்றாம் தேதி காப்டனின் மனைவியின் பிறந்த நாளும், இரண்டாம் அதிகாரியின் பிறந்த நாளும் துறைமுகத்தில் இருந்தபோது கடந்து சென்றதால் அதற்கான பார்ட்டி இன்று மாலை இருப்பதால் பிரியாணி சமைக்கவில்லை என்றார் சமையல்காரர். காலையில் வடை சமைத்திருந்தார். கடந்த வாரம் எண்ணையில் பொரித்த பலகாரம் சாப்பிட்டது முதல் நெஞ்செரிச்சல். கப்பலில் மரச்செக்கு எண்ணெய் கிடைப்பதில்லை, ஒரு முறை பொரித்த எண்ணையை இங்கே மீண்டும் உபயோகிப்பார்கள். என் மூளை தெளிவாக எச்சரித்தது வடையை தொடாதே என.

இரண்டு முட்டையில் ஆம்ப்லேட் மட்டும் சாப்பிட்டபின் வேலைக்கு சென்றேன். காலை தேநீர் இடைவேளைக்கு வந்தபோதும் வடை என்னை இழுத்தது. தொடவேயில்லை. மதியம் வழக்கம்போல் சலாட் மட்டும் சாப்பிட்டேன். மூன்றரை மணி முதல் ட்ரில்ல்ஸ் நடந்தது. நான்கரைக்கு ஓய்வுக்கு வந்தேன். இன்று கட்டுரை வரவில்லை. எழுதவேண்டியது இன்னும் பாக்கியிருந்தது. ஐந்து மணிமுதல் எழுதிக்கொண்டிருந்தேன். பிறந்தநாள் பார்ட்டிக்கு செல்ல வேண்டி ஒலிபெருக்கியில் அறிவித்த போதுதான் மணி ஆறை நெருங்கி இருந்ததை பார்த்தேன். குளித்து விட்டு செல்லும்போது கேக் கட்டிங் முடிந்திருந்தது.

Birthday party



பார்ட்டியில் இருந்த பொரித்த இறால், சுண்டல் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு அறைக்கு வந்தேன். பக்ரீத் தினமென அறியாமலே கடந்து கடந்து சென்றது.

நாஞ்சில் ஹமீது, 

06 June 2025.

sunitashahaul@gmail.com 

1 comment:

  1. தோப்பில் சார் எழுதியிருப்பாரு, ரம்ஜான்க்கு பிறை பார்ப்பது பற்றி. யாருக்கும் எந்தக் குழப்பமும் இல்லாமல் வரும் பக்ரீத். எங்களுக்கு பக்ரீத் சனியன்று அந்தியில் கிடைத்த பிரியாணி ஞாயிறும் ஆண்டுவந்தது. அதோடு கொஞ்சம் மட்டனும் கிடைத்தது. பாதி செஞ்சுட்டு மீதி இருக்கு. தோப்பில் சாரின் ஒரு சிறுகதையில் ஒரு பெண் பெருநாளுக்கு கொஞ்சம் முன்னாடி கணவனை இழப்பாள். சிறு பையனும் அவளுமாய் பசி பொறுக்கமாட்டாமல் பெருநாள் அன்று பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பெரிய முதலாளி வீட்டிற்குப் போவாள். எல்லாரும் அவளை கொஞ்சநாள்கூட அடங்கி ஒடுங்கி வீட்ல இல்லாம வந்துட்டாபாரு என்று குற்றம் சொல்வார்கள்.

    ~டெய்சி

    ReplyDelete