பிக்சஸ் லீடர் பகுதி இரண்டு
கப்பல்களில் பயணத்தில் மட்டுமே செய்யும் பணி, மற்றும் கப்பலின் இஞ்சின் இயங்காமல் நிற்கும்போது மட்டுமே செய்யகூடிய பணிகள் என் உண்டு. மெயின் இன்ஜினின் எக்ச்சாஸ்ட் வால்வ், பிஸ்டனை வெளியே எடுத்து செய்யும் டி காரப், scavenge கிளினிங், எக்னாமைசர் கிளினிங் இப்படி சில வேலைகள் கப்பல் துறைமுகத்தில் அல்லது நங்கூரம் பாய்ச்சி நின்றால்தான் செய்ய முடியும்.
மாதத்தில் ஒருமுறை scavenge கிளினிங் செய்தே ஆக வேண்டும். ஆறாயிரம் மணிநேரம் ஓடியபின் எக்ச்சாஸ்ட் வால்வை மாற்றியே ஆகவேண்டும். இப்படி ஒவ்வொரு பணிக்கும் இத்தனை மணிநேரம் ஓடியபின் மாற்றி, ஓவராவ்லிங்க் செய்யவேண்டிய பணிகள் இருந்துகொண்டே இருக்கும். அமெரிக்காவில் ஒரு துறைமுகத்தில் எண்ணெய் நிரப்புதலும், இன்னொரு துறைமுகத்தில் சிறு பராமரிப்பு பணிகள். இந்த நேரங்களில் நாங்கள் கரைக்கு சென்றுவர நேரம் சரியாக இருக்கும். டோயோகாசி தனியார் துறைமுகம். இங்கே மெயின் இன்ஜினின் பராமரிப்புக்கு அனுமதி கிடைப்பதே இல்லை. பெரும்பாலும் சுனாமி எச்சரிக்கையாக இருக்கும். எதாவது அவரசம் என்றால் கார்கோ ஏற்றும் பணி நிறுத்தப்பட்டு அரைமணி நேரத்திற்குள்ளாக கப்பலை அவிழ்த்து கடலில் தள்ளிவிட துறைமுகம் தயார் நிலையில் இருக்கும். அதற்கு கப்பலின் இன்ஜினும், பணியாளர்களும் விழிப்புநிலையில் தயாராக இருக்க வேண்டியது மிக அவசியம்.
சரக்கு ஏற்றும் நிறுவனம் கப்பல் முதலாளிக்கு தினசரி வாடகை ஒப்பந்த அடிப்படையில் பணம் கொடுக்கும். சரக்கு நிறைத்தபின் எவ்வளவு விரைவாக அடுத்த துறைமுகத்தில் சரக்கை இறக்கி காசு பார்க்க முடியுமோ அவ்வளவுக்கு கப்பலை விரட்டுவார்கள். கப்பல் இயந்திர கோளாறு காரணமாக நின்றுவிட்டால், கோளாறு சரிசெய்யப்பட்டு நகர்வதுவரை மணிக்கூர்களில் கணக்கிட்டு வாடகையை கழித்துவிடும் சரக்கை கையாளும் நிறுவனம்.
இந்த கப்பலின் வடிவமைப்பின்படி கேம் ஷாப்ட்டுடன் மெயின் இன்ஜினின் பிஸ்டன் கூலிங் ஆயில் சாப்ட் இணைக்கப்பட்டுள்ள இடத்திலுள்ள பின் உடைந்து போவதாகும். அப்படி உடைந்தால் ஓடிக்கொண்டிருக்கும் இஞ்சின் தானாகவே நின்றுவிடும். அது ஒரு தவறான வடிவமைப்பு. நடுக்கடலில் கப்பல் நின்றபோது முதல் முறை அதுதான் பிரச்னை என கண்டுபிடிக்கவே நான்கு மணிநேரம் ஆகியது. உடைந்த பின்னின் பாகம் மிக கடினமாக சிக்கி கொண்டிருந்தது. டிரில்லிங் செய்வதற்கான இடமே இல்லை. ரஷ்ய மூன்றாம் இஞ்சினியர் எனக்கு உதவிக்கு வந்தார். உடைந்ததை வெளியே எடுத்து புதியதை பொருத்தி கப்பல் புறப்பட மொத்தம் ஆறு மணிநேரம். நள்ளிரவில் கப்பலை நிறுத்தி அதிகாலையில் புறப்பட்டோம். கடலம்மா சீறாமல் கருணை காட்டியதால் தப்பித்தோம். இப்படி தெய்வம் உடனிருக்கும் தருணங்கள் கப்பல்காரனுக்கு நிறைய உண்டு.
கடும் கடல் சீற்றத்தில் கப்பலை நிறுத்தவே முடியாது. கவிழ்ந்துவிடும் அபாயம் அதிகம். எக்ச்சாஸ்ட் வால்வு ஆறாயிரம் மணிநேரத்தை தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. அதை மாற்ற நான்கு மணிநேரம் ஆகும். ஜப்பானில் துறைமுகத்தில் இருந்தபோது சுனாமி எச்சரிக்கையால் அனுமதி மறுக்கப்பட்டது. எக்ச்சாஸ்ட் வால்வ் ஸ்பின்டில் ஓட்டையாகி கேஸ் லீக் ஆகி அலாரம் வந்தபோது நள்ளிரவு இரண்டுமணி கப்பலை நிறுத்த முடியாதபடி பேரலைகள். மூன்றாம் இஞ்சினியர் இயந்திர கட்டுப்பாட்டு அறையில் இரவு முழுவதும் பணியில் இருந்தார். ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை வரும் அலாரத்தை அணைத்து கொண்டே இருக்கவேண்டிய சூழல் அன்று.
எக்ச்சாஸ்ட் வால்வை மாற்ற வேண்டிய உபகரணங்கள் அனைத்தையும் தயார் செய்துவிட்டு காத்திருந்தோம் கடலம்மா சாந்தமாகட்டும் என. காலை பத்து மணிக்கு மேல் நடுக்கடலில் கப்பலை நிறுத்தி மூன்று மணிநேரத்தில் எக்ச்சாஸ்ட் வால்வை மாற்றி பயணத்தை தொடர்ந்தோம். சரக்கு நிறுவனத்திற்கும், கப்பல் முதலாளிக்கும், எங்கள் நிறுவனத்துக்கும் கப்பல் ஏன் நிறுத்தப்பட்டது என்ற விரிவான அறிக்கையை முதன்மை இஞ்சினியரிடம் பெற்று அனுப்பவேண்டியது காப்டனின் மிக முக்கிய பணி.
ஓய்வு நேரம் அதிகமாக இருந்ததால் தனிமையை போக்கும் பொருட்டு போசனின் அறையில் இரவுணவுக்குப்பின் இரண்டு மணிநேரம் அமர்ந்திருப்பேன். கப்பலின் சமையல்காரர் அதிக காரத்துடன் சமைக்கும் உணவை என்னால் சாப்பிடவே முடியவில்லை. உணவின் தரமும் மிக மோசமாக பெரும்பாலும் யாரும் திருப்தி இல்லாமல் இருந்தனர். ஒருமுறை அவரிடம் கோரினேன் காரம் அதிகமாக இருப்பதால் நெஞ்சில் எரிச்சல் என்னால் சாப்பிட முடியவில்லை என.
“எல்லாரும் இத தின்னுட்டு ஒண்ணும் சொல்லல, உனக்கு மட்டும்தான் பிரச்னை” என்றார். காப்டனிடம் சொன்னேன். “இன்னும் பத்து நாள் பொறுத்துக்கோ பைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி சாப்பாடு கிடைக்கும்” என்றார்.
“பைவ் ஸ்டார் ரேஞ்ச்ல வேண்டாம் ஸார், சாப்பிடது மாதிரி கிடைச்சா போதும்” என்றேன். புதிதாய் வந்த சமையல்காரர் கேரளாவின் பக்கியாரா ராஜனின் உணவு பைவ் ஸ்டார் ரேஞ்சில் இருந்தது. இதே கப்பலில் ஐந்தாவது முறையாக வருவதாக சொன்னார். அதிகாலை குளித்துவிட்டு ஐந்தரை மணிக்கு அடுமனைக்குள் நுழைபவர் “இந்த வேலக்கிதான் நான் வந்துருக்கேன் இத மிக சிறப்பா செய்யணும் எனக்கு” என்றார். மூன்று ஆண்டு கேட்டரிங்கில் பட்டயம் பெற்றபின் தாஜ் ஹோட்டலில் சில ஆண்டுகள் பணிசெய்த அனுபவம் உள்ளவர்.
போசன் குருமூர்த்தியுடன் |
பனாமா கால்வாய்க்குள் |
முதல் பயணம் முடிந்து இரண்டாம் பயணம் பனாமா கால்வாயை தாண்டும்போது போசன் குருமூர்த்தி இருபது ஆண்டுகளுக்குப்பின் பனாமா கால்வாயை தாண்டியதாக சொன்னார். எல்பிஜி கப்பல்களில் வேலைபார்த்த அவர் கார் கேரியர் கப்பலில் வந்தபின் ஹார்மொனி ஏஸில் தான் முதன் வாய்ப்பு கிடைத்தது. தன்னுடன் கேடட்டாக பணிபுரிந்த பலர் இருபது ஆண்டில் காப்டனாக பதவிஉயர்வு பெற்றுவிட்டதால் அங்கிருக்க பிடிக்காமல் மாற்றிக்கொண்டார். “நான் தலையில தட்டி வேல படிச்சி குடுத்த பசங்க, அவனுகள இனி ஸார்னு கூப்பிடணும், அதான் இங்க மாறி வந்து விட்டேன்” என்றார்.
நியுயார்க் துறைமுகத்தில் கப்பல் கார்களை இறக்கும்போது மறுபுறம் எண்ணை தரும் கப்பல் அருகணைந்து ஆயிரம் டன் எண்ணையை கப்பலுக்கு நிரப்பிகொண்டிருக்கும்போது பங்கர் ஸ்டேசனின் எனது பணி. அதிகாலை இரண்டு மணிக்கு துவங்கி காலை ஒன்பதரை மணிக்கு எண்ணை நிறைக்கும் பணி முடிவதாக திட்டம். இரண்டாம் இஞ்சினியர் பிரஷர் என்னவென்று கேட்டார். பங்கர் பார்ஜிடம் சொல்லி இன்னும் கூட்ட சொன்னார். அவ்வாறு மூன்று முறை கூட்டியபின் இதுதான் புல் ரேட் என்றார்கள் பங்கர் பார்ஜ். மணிக்கு முன்னூற்றி ஐம்பது மெட்ரிக் டன் எண்ணெய் கப்பலுக்குள் வந்துகொண்டிருந்தது. மொத்தம் மூன்று தொட்டிகளில் நிறைத்தோம்.
இரவிலேயே நியுயார்க்கின் சுதந்திர தேவி சிலையை பார்க்க டாக்ஸி ஏற்பாடு செய்தியிருந்தார்கள். காலை எட்டரை மணிக்கு கார் வரும் நேரம். பங்கர் நிறைப்பதால் எப்போது பணி முடியும் எனத்தெரியாததால் சான்ஸ் மிஸ் ஆனதாக எண்ணியிருந்தேன். பங்கர் எட்டரைக்கு முடிந்தது அவசரமாக ரேடியோவில் போசனை அழைத்தேன். “கார்ல இடம் இருக்கா நானும் வாறேன்” என்றேன்.
“லேட் பண்ணாத சீக்கிரம் கிளம்பு, நாங்கள் பதினைந்து நிமிடம் காத்திருக்கிறோம் ஸீ மேன் கிளப் வண்டி வந்துவிட்டது” என்றார். இரண்டாம் இஞ்சினியரை பார்த்து விசயத்தை சொன்னேன். “உடனே கிளம்பு, செக்கியுரிங் ரெண்டு மோட்டார்மேன்கள வெச்சி நான் பாத்துகொள்கிறேன்” என்றார்.
நவம்பர் மாத மைனஸ் ஏழு டிகிரி குளிரில் சுதந்திர தேவி சிலையை கண்டு திரும்பி வந்தோம். 2008 ஐஜின் கப்பலிலிருந்து இறங்கி நியுயார்க் விமான நிலையத்தில் விமானம் மேலெழும்புகையில் இரவில் ஜன்னல் வழியாக சுதந்திர தேவி சிலை தெரிகிறதா என தேடிபார்த்தேன். 2013 இல் ஹார்மொனி ஏஸில் நியுயார்க் துறைமுகத்தில் கார்களை இறக்கிவிட்டு கப்பல் புறப்பட்ட போது மோட்டார்மேன் நந்தா என்னை அழைத்து பச்சை நிறத்தில் கையில் தீபத்துடன் நின்ற சிலையை காட்டி தந்தான். அப்போது அவளிடம் சொன்னேன் “வருவேன் உன்னருகில்” என. விரைவில் அது சாத்தியமான மகிழ்ச்சி.
2001 ஆம் ஆண்டு இரட்டை கோபுரம் விமானம் மூலம் இடித்து தகர்த்த இடத்தில் இப்போது வேறு கட்டிடம் இருக்கிறது. அங்கு சென்றபோது என் பாதங்கள் அங்கே நிலைக்கவேயில்லை. விரைந்தோடி விலகி சென்றுவிட்டேன்.
பங்குச் சந்தை காளை |
மீயுசியம் அருகில் நின்று படம் மட்டும் எடுத்தோம். பங்கு சந்தை காளையின் முன் நின்றேன். கிடைத்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொண்டோம். மிக குறைந்த நேரத்தில் கப்பலுக்கு திரும்பி செல்ல வேண்டியிருந்ததால் நியுயார்க் நகர சாலைகளில் ஓடிக்கொண்டே இருந்தோம். சரியான நேரத்தில் ஓட்டுனர் எங்களை அழைக்க காரில் கப்பலுக்கு திரும்பி வந்தோம். இரவும், பகலும் விழித்திருந்தும் களைப்பே இல்லை. கப்பலுக்கு வந்து அறைக்குள் படுத்து கண்மூடியபோது விமானங்கள் இரட்டை கோபுரத்தை மோதிய காட்சிகள் நில்லாமல் வந்துகொண்டே இருந்தது. அதிகாலையில் விழிக்கும்போது கப்பல் மீண்டும் ஜப்பானை நோக்கி பயணத்தை தொடங்கியிருந்தது. அடுத்த சில தினங்கள் மனம் அமைதியில்லாமல் இருந்தது. பனாமா கால்வாயை தாண்டியபின் தான் இயல்புக்கு திரும்பினேன்.
பார்ட்டி டைம் |
Cadet Cheenath |
கேடட் சீனாத் மற்றும் ஓஎஸ் சண்டையிட்டு முகத்தில் காயங்கள் பட இருவரும் ஊருக்கு அனுப்பபட்டார்கள். கேடட்டாக கேரளாவின் சூரஜ், ஓஎஸ் ஆக நாக்பூரின் கிங்கேயும் கப்பலுக்கு வந்தனர். சமையல்காரர் ராஜன் வந்தபின் கப்பலில் பார்ட்டிகள் களைகட்டின. டேட் லைன் கிராசிங் விழா சிறப்பாக நடந்தது.
நாஞ்சில் ஹமீது,
08 June 2025.
sunitashahul@gmail.com
தொடர்புடைய பதிவுகள்
காணாமல்போன செவ்வாய்க்கிழமை
சுதந்திரதேவி வரைக்கும் படிச்சிட்டேன். நானுமே நமக்கு எதற்கு மகாபாரதம் என்று வெண்முரசை மட்டும் விட்டுட்டு மற்ற பதிவுகளை படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் எதேச்சையாய் வேற கட்டுரை க்ளிக் பண்றதற்குபதில் இதைத் திறந்துட்டேன். அன்றிலிருந்து இன்று வரை கூடயே வந்து கொண்டிருக்கிறது. வெண்முரசின் எதாவது ஒன்றை படிக்காத நாள் என்று ஒன்ற இல்லை. இணையம் நன்றாய் கிடைத்தபிறகு வீட்டுடன் உண்டான தொடர்பு சிறப்பானதாய் இருந்திருக்கு. இணையமே இல்லாத நாட்களில் எப்படி கப்பல் தொழிலாளிகள் தொடர்பு கொண்டிருப்பார்கள். ரொம்பச் சிரமமாய் இருந்திருக்கும் இல்லையா? இப்ப எல்லாம் வீடுகளில் கேமரா பொருத்தி வெளிநாடுகளில் இருந்துகூட பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 8 வருடங்களுக்கு முன்பாக நாங்கள் குடியிருந்த வீட்டின் அருகில் ஒரு இளம்தம்பதியர் இரண்டு சிறு பையன்களோடு குடியிருந்தார்கள். வீட்டிற்கு குடிவந்தவுடன் பொருட்களை ஒழுங்கு படுத்துவதற்கு முன்பாக கேமரா பொருத்தினான். பெண்டாட்டி பிள்ளைகளை அவ்வளவு பாதுகாப்பாய் வைத்திருக்கிறார் போல என்று ஆச்சரியமாய் இருந்தது. ஆனால் அந்தப் பெண்ணை கண்காணித்துக்கொண்டே இருந்திருக்கிறான். கழிவறையில் கொஞ்ச நேரம் இருந்தால்கூட உடனே போன் பண்ணி என்ன பண்ற என்று கேட்பான். அவள் இருமுறை தற்கொலை முயற்சி செய்ததால் வீட்டு ஓனர் சத்தம்போட்டு காலி பண்ண வச்சிட்டார். இப்ப எங்க இருக்காங்கன்னு தெரியல.
ReplyDelete~டெய்சி