Thursday, 26 June 2025

இருபது ஆண்டு நிறைவு 32 - ரிட்டர்ன் டிக்கெட்

  


ஹீரோயிக் ஏஸ் பகுதி ஏழு .

கப்பலில் உயர் அதிகாரிகளுடன் கொஞ்சம் நெருக்கமாக இருந்தால் மற்ற பணியாளர்களுக்கு பிடிப்பதில்லை. இலங்கை காப்டனுக்கு நான் ஸ்பை என கப்பலில் முத்திரை குத்தினார்கள். முப்பத்தியைந்து ஆண்டு அனுபவம் வாய்ந்த முதன்மை இஞ்சினியர் கொச்ச புத்ல சுதீஸ்வர் ராவுக்கும் அந்த பயம் இருந்தது.


காப்டன் பெர்னாண்டோ என்னுடன் மூன்றாவது முறையாக இந்த கப்பலில் பணிபுரிகிறார். 2011ல் ஹார்மொனி ஏஸில் இருக்கும்போது உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த அவர் என்னிடம் கவுன்சிலிங் பெற்று நலமடைந்திருந்ததால் அவருக்கு நான் கப்பலின் பணியாளர் மட்டுமல்ல. அதற்கும் மேல். கப்பலின் தலைவன் டிப்ரஷன் ஆகி அதை வெளியில் சொல்லிவிட முடியாது. கீழ் பதவியில் உள்ள ஒரு பிட்டரிடம் சொல்வது குறித்து யோசிக்கவே முடியாத விஷயம்.

 


 

அந்த நன்றியுணர்வு காப்டனிடம் இருந்ததால் எனக்கு அவர் தந்த மரியாதையும், நெருக்கமும் மற்றவர்களின் கண்ணை உறுத்தியது. பிலிப்பினோ முதன்மை அதிகாரிக்கு கைகளை தோள்பட்டைக்கு மேல் உயர்த்தவே முடியாது. காப்டன் ஷாகுலை பார் என சொல்ல பணி முடிந்து இரவு எட்டு மணிக்கு என்னிடம் வந்தார். எட்டு நாட்கள் தைலம் போட்டு தடவி, சில பயிற்சிகள் சொல்லி கொடுத்தேன். கையை மேலே தூக்கிவிட்டார். “மேஜிக் ஆயில் ஹொவ் டு பை திஸ்” என கேட்டுவிட்டு விடுமுறைக்கு சென்று மூன்று மாதங்களுக்குப்பின் திரும்பி வந்தவர் என்னை கட்டி அணைத்து இரு ஆண்டுகளாக கூடை பந்து விளையாடாமல் இருந்த தான் அப்போது கூடைபந்து போட்டியில் விளையாடிவிட்டு வந்ததாக சொன்னார்.

மோட்டார் மேன் விஜித் “சேட்டா இவிடே ஆளுகளு எந்த்தொக்கோயோ பறயிந்துண்டு, எனிக்கி அறியாம் ஞான் பல்லு வேதனையாய் கிடந்தப்போ என்ற முறியில வந்து மருந்து தந்தது நிங்களா” என. கப்பலில் உள்ள அரசியல் விளையாட்டுகளை அப்போதும், இப்போதும் நான் அறியாதவனாகவே இருக்கிறேன். அதனால் ஏற்படும் சிக்கல்கள் உண்டு. ஹீரோயிக் ஏஸின் கடைசி நாட்கள் கொஞ்சம் சிரமாக இருந்தன. 

காப்டன் பெர்னாண்டோ ஊருக்கு போகும்போது நானும் விடுமுறை கோரினேன். ஆறு பேர் கொண்ட குழுவுக்கு மறுமாதம் விடுமுறை திட்டம் இருந்ததால் அக்குழுவுடன் என் பெயரும் இணைக்கப்பட்டு ஒரு மாதம் அதிகமாக கப்பலில் இருந்தேன்.

கப்பல் ஜப்பானில் கார்களை நிறைத்துவிட்டு சென்னைக்கும், தென்னாப்ரிக்காவிற்கும் செல்வது உறுதியாகி எங்களை ஜப்பானில் இறக்குவதாக தகவல் வந்தது. எங்கள் நிறுவனம் அதிகாரிகளுக்கு வீடுவரை விமான சீட்டும் பணியாளர்களுக்கு சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா மற்றும் கொச்சி சர்வதேச விமான நிலையங்களுக்கு மட்டுமே டிக்கெட் என ஒப்பந்த படிவத்தில் எழுதப்பட்டிருக்கும்.

விமான சீட்டு பதிவு செய்யும்போது காப்டன் கோரினால் எங்கு வேண்டுமானாலும் டிக்கெட் வழங்குவார்கள் விமான சீட்டு வழங்கும் நிறுவனம். எனது பணி ஒப்பந்த கடிதத்தில் கொச்சி சர்வதேச விமான நிலையம் என எழுதப்பட்டிருக்கும். எப்போதும் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்திறங்குவேன். கொச்சியை விட திருவனந்தபுரத்திற்கு டிக்கெட் கட்டணம் குறைவாக இருக்கும். திருவனந்தபுரம் தரமாட்டேன் ஒப்பந்த கடிதப்படி கொச்சிக்குதான் பிளைட் டிக்கெட் தருவேன் என முரண்டு பிடிக்கும் காப்டன்களிடம் அதிகமாக ஆகும் விமான சீட்டு கட்டணத்தை செலுத்தி வீட்டருகில் உள்ள உள்நாட்டு விமான நிலையங்களுக்கு செல்பவர்கள் உண்டு.

எனக்கு கொச்சியை விட திருவனந்தபுரம் டிக்கெட் இருபது முதல் முப்பது டாலர் குறைவாக இருப்பதால் எப்போதும் வீட்டுக்கு வரும்போது திருவனந்தபுரம் பன்னாட்டு விமானநிலையத்தில் இறங்குவது வழக்கம். இம்முறை ஜப்பானின் டோக்யோ அருகிலுள்ள நரிட்டாவிலிருந்து ஊருக்கு செல்ல வேண்டும். காப்டன் எட்கார்டோ நல்ல நட்பில் தான் இருந்தார். திருவனந்தபுரம் டிக்கெட் தரமாட்டேன் என்றார் பிடிவாதமாக. “பேப்பரில் என்ன இருக்கு அதுதான், உனக்கு கொச்சி அங்க தான் டிக்கெட் புக் பண்ணுவேன்” என்றார்.

முதன்மை இஞ்சினியர் “கேப்ட்டன்ட்ட நான் பேசேன், டிக்கேட் பேயர் டிபரெண்ட் அமௌன்ட் நீ கொடுக்க ரெடியா?” எனக் கேட்டார். 

“நான் பேசியாச்சி கொச்சியை விட திருவந்தரம் டிக்கெட் பைசா கூடுதல் இருந்தா உனட்ட பைசா வாங்கிட்டு நான் புக் பண்ணுவேன். திருவந்தரதுக்கு டிக்கெட் பைசா குறைவா இருந்தா நான் டிக்கெட் புக் பண்ண மாட்டேன். நீ பேப்பர்ல எழுதி தரணும்” என காப்டன் சொன்னதை முதன்மை இஞ்சினியரிடம் சொன்னேன்.

நான் காகிதத்தில் எழுதி கொடுத்த பின்னரே டோக்யோ – கொச்சி மற்றும் டோக்யோ – திருவனந்தபுரம் கட்டணங்களை கோரினார். சீப் இஞ்சினியர் சொன்னதின் பேரில். டிக்கெட் நிறுவனம் அனுப்பிய விமான சீட்டின் படி சென்னை வரை கம்பனி டிக்கெட்டும் சென்னை – திருவனந்தபுரம் செல்லும் விமான கட்டணம் 179 அமெரிக்க டாலரை என்னிடம் கேட்டார் காப்டன். நான் கொச்சிக்கு டிக்கெட்டை தாருங்கள் என வாங்கிகொண்டேன். கொச்சி – திருவனந்தபுரம் செல்லும் விமானம் ஒன்றில் 1800 ரூபாயில் டிக்கெட் ஒன்றை பதிவு செய்து தந்தான் எனது தம்பி ஷேய்க்.

ஜப்பானில் நான்கு துறைமுகங்களில் சரக்கு ஏற்றுவதாக இருந்தது. கப்பல் நிற்கும் நான்கு துறைமுகங்களிலும் ஒரு நிமிடம்கூட வீணாக்காமல் பணிகளை திட்டமிட்டார் கொச்ச புத்ல சுதீவர்ராவ். உக்ரைனின் சீப் இஞ்சினியர், இலங்கை மூன்றாம் இஞ்சினியர், இந்திய மெஸ்மேன், எ பி, பிட்டர் ஆகியோர் முதல் துறைமுகத்திலேயே வந்துவிட்டனர். முதன்மை இஞ்சினியரை தவிர நாங்கள் நால்வரும் யோகோகாமா துறைமுகத்தில் இறங்கினோம். 

டெக் மாலுமியான எ பி சர்காருக்கு டோக்கியோ விமான நிலையத்திலிருந்தும், எனக்கு, மூன்றாம் இஞ்சினியர், மெஸ் மேனுக்கு நரிட்டா சர்வதேச விமான நிலையத்திருந்து அபுதாபி வழியாக பயணம் அமைந்தது. அபுதாபியிலிருந்து மும்பை செல்லும் மெஸ்மேன் சதீசும், ஹைதராபாத் செல்லும் மூன்றாம் இஞ்சினியரும் பிரிந்து செல்ல கொச்சி செல்லும் ஜெட் ஏர்வேய்ஸ் விமானத்தில் பயணித்து, நான்கு மணிநேர காத்திருப்புக்கு பின் இருபது நிமிட வான் பயணத்தில் திருவனந்தபுரம் போய் இறங்கினேன். சுனிதாவும், மகன்களும் விமானநிலையத்தில் காத்திருந்தனர். 2014 ஆகஸ்ட் முதல் 2015 ஏப்ரல் மாதம் ஹீரோயிக் ஏஸில் பணியிலிருந்தேன்.

அறிவு திருக்கோயில் 




மகரிஷி மணி மண்டபம்

குடியிருந்த வீட்டை காலி செய்து கேட்டதால் வேறு வீடு தேடி அலைந்ததிலேயே நாட்கள் ஓடின. பைபிள் படிக்கும், கிறிஸ்தவர்களுக்குத்தான் வீடு கொடுப்போம் என பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் சொன்னார்கள். கிருஷ்ணன்கோவில் வில்லியம் மருத்துவமனை அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சொந்தகாரர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். போனில் பெயர், செய்யும் வேலை, குடும்பம் பற்றி விசாரித்துவிட்டு அட்வான்ஸ் தொகையை தந்துவிட்டு சாவியை வாங்கிசெல்லும்படி சொன்னார். இருபது வீடுகள் இருந்த குடியிருப்பின் லிப்டின் அருகிலிருந்த விளக்கொளியில் ஜொலித்துகொண்டிருந்த ஜீசஸ் வா மகனே என என்னை வரவேற்றார்.

 

சென்னையில் 

குரு ராதாகிருஷ்ணன் ஆழியாறு அறிவு திருக்கோயிலில் நடத்திய ஆழ்நிலை சிறப்பு தியான வகுப்புகளுக்கு இருமுறை அவருடன் போய்வந்தேன். மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளுக்கு நடந்த மூன்று நாள் புத்தாக்க பயிற்சியில் காலை ஆறு முதல் எட்டுவரை யோகா பயிற்சி அதை நடத்திதர எங்கள் யோக மையத்தை அணுகியதால் ஆசிரியர் நாகராஜனுடன் சென்று யோகா வகுப்பை நடத்தினோம்.

மூன்றாம் நாள் நாகராஜன் ஸார் வரமுடியாமல் போகவே தனியாக நானே சென்று நிறைவுப் பகுதியை நடத்தி முடித்தேன்.கப்பலில் இருக்கும்போது பார்த்த ஒரு மலையாள சினிமாவில் கேரளாவில் இருந்து நாகலாந்து வரை பைக்கில் செல்லும் கதாநாயகன் பதிந்திருந்தார். அப்போது இரண்டாம் அதிகாரியாக இருந்தவர் பைக்கில் இந்தியா முழுவதும் பயணம் செய்பவர். அவருடன் பேசிப்பேசி பைக்கில் ஒரு நீண்ட பயணம் செல்லும் ஆர்வம் வந்தது.



பைக் பயணத்திற்கு தயாரானபோது பெரும் எதிர்ப்பு குடும்பத்திலும், நண்பர்களிடமும். சகயோக ஆசிரியையான ராஜம் என்னை போனில் அழைத்து “லே தம்பி உனக்கு கிறுக்கா, லீவுல வீட்டுக்கு வந்தா, அவுளுக்க கூட இருக்காம கறங்கதும் போராதுன்னு இப்ப எதுக்காகும் பைக்ல ஒரு ட்ரிப் உனக்கு” என கடிந்து கொண்டாள்.


“அக்கா திட்டம் உறுதி, என்னய தடுக்காத” என்றேன். “ஒருக்க மட்டும் போ ஆசபடுதுனால, இனிமே இந்த வேல வெச்சிகிடாத” என்றாள்.



மாமி மகன் ஷாஜுவின் தண்டர்பேர்ட் 350சிசியில் நாகர்கோவில் – பொள்ளாச்சி – அழியார் அங்கே மூன்று தினம் யோகா வகுப்பு, அங்கிருந்து சேலம் வழியாக சென்னை. நண்பர் அசோக் வீட்டில் தங்கி அமெரிக்க துணை தூதரகத்தில் விசா நேர்காணலுக்கு சென்றேன். இரு தினங்களுக்குப்பின் பாண்டிச்சேரி தோழி கவிதா வீட்டில் இரவு தங்கி மூன்றாம் இஞ்சினியர் பிருதிவிராஜை சந்தித்து சான்றிதழ் கொடுத்தேன். அவர் என்னிடம் அடிப்படை யோக பயிற்சிகளை கப்பலில் கற்றுகொண்டார். 

 

கடலூர் கண்ணன் 

நண்பர் ஜெகன் 


மும்பை அறையில் 2009 ஆம் ஆண்டு இருக்கும்போது தோல்வியாதியால் அவதிப்பட்ட எனக்கு புளி ஆகாது என்பதால் குழம்பு சமைக்கும்போது புளி இல்லாமல் சமைத்து தந்த நண்பர் கண்ணனை இல்லம் சென்று பார்த்தேன். வடலூர் சன்மார்க்க சபை, நெய்வேலி வழியாக திருச்சி நண்பர் ஜெகன் வீட்டில் இரவு தங்கல். எட்டு நாட்களுக்குபின் நாகர்கோவில் வரும்போது இரண்டாயிரம் கிலோமீட்டர்கள் ஓட்டியிருந்தேன்.

 



தோழி கவிதா,செந்தில்


 நாஞ்சில் ஹமீது,

 26-June-2025.

sunitashahul@gmail.com

No comments:

Post a Comment