Tuesday, 10 June 2025

இருபது ஆண்டு நிறைவு 25 தனிமையை விரட்டுதல்

  

பிக்சஸ் லீடர் பகுதி மூன்று 



    கப்பல் காலியாக வரும் நாட்களில் மாலை நான்கரைக்கே கார்டெக்கில் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடினோம்.AB ஆக இருந்த ஷம்ஷேர் ஆறு ஆண்டுகளுக்கு முன் ஐஜின் கப்பலில் என்னுடன் ஒஎஸ் ஆக இருந்தவர். பல்க் காரியர் வகையை சார்ந்த கப்பலில் பணிபுரிந்த இருவர் இரண்டாம் இஞ்சினியர் மாஹீனின் தம்பியா நீ என கேட்டு உறுதிபடுத்தினர்.

   போசன் குருமூர்த்தி பணிஒப்பந்தம் முடிந்து விடுமுறையில் செல்ல புதிதாக வந்தவர் பாண்டிசேரியின் கீழ் வரும் மாஹியை சார்ந்தவர். மாஹி கேரளாவின் வடகரைக்கு அருகில் இருக்கிறது. கப்பலில் இணையம் இருப்பதால் பொது இடத்தில் யாரும் கூடுவதும்,ஒன்றாக அமர்ந்து படம் பார்ப்பதும் நின்றுபோயிருந்தது. அறைக்கு தூங்க மட்டுமே செல்லும் எனக்கு மீண்டும் தனிமை கடினமாக இருந்ததால். போசனின் அறைக்கு சென்று “போசன் குருமூர்த்தி என் நண்பன் தினமும் இரு மணிநேரம் இங்க தான் இருப்பேன். கொஞ்ச நாளைக்கி நான் உங்க அறைக்கு வரட்டா என” கேட்டேன்.

புருசு சேட்டன் 


 “ஒந்தும் பிரஸ்னம் இல்லா” என்றார். போசன் புருசு சேட்டா. நல்ல அறிவாளி அவரது இளையவர் பள்ளியில் ஆசிரியர். அவருக்கு வரும் சந்தேகங்களை புருசுவிடம் கேட்டு தெளிவதாக சொன்னார்.பொதுஅறிவில் நல்ல ஞானம் அவருக்கு. எனது கணினியில் தமிழில் எப்படி எழுதுவது என சொல்லி தந்தவர்.தமிழ் கூகிள் ஆப் தரவிறக்கம் செய்து லேப்டாப்பில் பதிந்தார். முகலூலின் வம்புகளில் ஈடுபட அப்போது உதவியாக இருந்தது. இப்போது சில ஆயிரம் பக்கங்களை நான் தமிழில் எழுதிவிட்டேன். புருசு சேட்டனே அதற்கு முதல் சுழி போட்டவர் என உறுதியாக தெரிகிறது. 



   

 இருமுறை நீயுயார்க்,போய்வந்ததில் நான்கு முறை பனாமா கால்வாயை தாண்டிஇருந்தேன் இந்த கப்பலில். பனாமாவில் கால்வாயை கடக்கும் முன் பல்போவா சென்று நங்கூரம் பாய்ச்சி நிற்கவேண்டும். அங்கிருந்து கால்வாய் அதிகாரிகள் வந்து கப்பலை சோதனையிட்டு ஒப்புதல் அளித்தபின் கால்வாய்க்குள் நுழையும் நேரம்,பைலட் வரும் நேரம் ஆகியவை உறுதிசெய்து சொல்வார்கள். நங்கூரம் பாய்ச்சி நின்ற கப்பலின் இன்ஜினை இயக்கியபோது ஸ்டார்ட் ஆக வில்லை. ஜப்பானிலிருந்து இருபத்திமூன்று நாட்கள் நில்லாமல் ஓடிவந்த கப்பலுக்கு என்ன ஆயிற்று.டெக்கில் நின்று பானமாவின் அடர்பச்சை மலைக்குள் சூரியன் மறைவதை பார்த்துக்கொண்டிருந்தபோது பணியிலிருந்த இலங்கை முதன்மை அதிகாரி அழைத்தார். “எமெர்ஜென்சி கோ டு இஞ்சின் ரூம்”.

   முதன்மை இஞ்சினியர் இன்ஜினின் எமெர்ஜென்சி ஸ்டார்ட் தளத்தில் நின்று லிவரை இயக்கினார். மூன்று முறை இயக்கியதில் ஸ்டார்ட்டிங் ஏர் பாட்டில் அலாரம் வந்தது. காரில் சாவிபோட்டால் ஸ்டார்டிங் மோட்டார் இன்ஜினை ஸ்டார்ட் செய்யும் வேலையை செய்வதுபோல இங்கே ஸ்டார்ட்டிங் ஏர் வால்வுகள் உண்டு. அதற்கு தேவையான காற்றை பெரிய இரு காற்று தொட்டிகளில் அதிக அழுத்தத்தில் நிரப்பி வைத்திருப்போம். 

  அந்த தொட்டிகளில் காற்று தீர்ந்து மீண்டும் நிறைவதற்காக காத்திருந்தோம். இஞ்சின் இயங்கவில்லை பனாமாவை தாண்டினால்தான் மறுபுறம் அமெரிக்கா செல்ல முடியும். என்னவென்று புரியாமல் மண்டை வெடித்து சுற்றிகொண்டிருந்தார் முதன்மை இஞ்சினியர். 

   முன்பு ஒருமுறை அதிகாலை இரண்டு மணிக்கு கப்பல் நடுக்கடலில் நின்றது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நான் இயந்திர அறைக்குள் வந்தபோது. இரண்டாம் இன்ஜினியர் ஜெயக்கொடி “இஞ்சின் ஸ்லோ டவுண் ஆகி தானே நின்னுட்டு, என்ன பிரச்சினைனு தெரியல டோன்ட் பேனிக் வில் ஸீ” என கூலாக சொன்னார்.இப்போதும் அதுபோல  இருந்த அவர் பீயுல் ஆயில் சப்ளை ஆகல என சொல்லி பீயுல் பம்ப் ஸ்டக் ஆகி இருந்ததை கண்டுபிடித்தார். மெயின் இன்ஜினின் எட்டு யூனிட்களில் எட்டு பீயுல் பம்புகள். தார்போல இருக்கும் கெட்டியான எரி எண்ணையை நூற்று முப்பது டிகிரிக்கு மேல் வெப்பப்டுத்தி அனுப்பும்போது பீயுல் பம்ப் அதை உந்தி தள்ளி பீயுல் வால்வுக்கு கொடுக்கும் பீயுல் வால்வ் முன்னூற்றி இருபது பார் அழுத்தத்தில் ஸ்ப்ரே செய்து கொடுக்கும்போது காற்றுடன் இணைந்து பிஸ்டன் அதை அழுத்தி எரிக்கும்போது கிடைக்கும் வசக்தியால் இஞ்சின் ஓடிக்கொண்டேயிருக்கும்.

  பதினொன்றாயிரம் மணிநேரத்திற்கு ஒருமுறை பீயுல் பம்புகளை மாற்றி,ஓவராலிங் செய்ததை பொருத்தினால் இன்னும் சுகமாக ஓடிக்கொண்டிருக்கும். கால்வாயை கடக்கும் நேரம் நெருங்கிகொண்டிருந்ததால் எட்டு பீயுல் பம்ப்களிலும் வேகத்திற்கு தகுந்தவாறு எண்ணையை கூட்டவும்,குறைக்கவும் செய்யும் கண்ட்ரோல் ராக்ஸ் ராடை முன்பும் பின்புமாக அடித்து எளிதாக்கினோம்.

இன்ஜினை இயக்கி கால்வாயை கடந்து மறுபுறம் போய்சேர்ந்தோம் உரிய நேரத்தில்.அதன்பின் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ஒவ்வொன்றாக எட்டு பீயுல் வால்வுகளையும் கழட்டி ஓவராலிங் செய்து மாட்டினோம்.

 

 நீயுயார்க்கிலிருந்து ஜப்பானுக்கு வந்து மீண்டும் போர்ட்லாண்ட் சென்றோம். மூன்றாக மடித்து வைத்திருக்கபட்டிருக்கும் ஹைட்ராலிக் உதவியுடன் கப்பலின் ராம்ப் கீழே இறக்கும்போது மிக சரியாக விரிந்து தரையில் அமராமல் மடிந்தே இருந்தது. துறைமுக போர்க்லிப்ட் மூலம் கட்டி இழுக்கப்பட்டு ராம்ப் தரையில் பதிந்த பின்னரே கார்களை இறக்க முடிந்தது. முதன்மை இஞ்சினியர் மற்றும் போசன் இணைந்து ஆராய்ந்ததில் ராம்ப்பின் இரு மடிப்புகளுகிடையில் உள்ள இரும்பு தேய்ந்து போனதே காரணம் என்பதை கண்டனர். முதன்மை இஞ்சினியர் சில இரும்பு துண்டுகளை வெட்டிதந்து தேய்ந்துபோன இடத்தில் வைத்து வெல்டிங் செய்து சரி செய்யும் முறையை விளக்கினார்.

ramp from top view


  துறைமுகத்தில் சரக்கு இறக்கி முடிந்தபின் சிறப்பு அனுமதிபெற்று ஹைட்ராலிக்கை இயக்கி ராம்ப்பை தலைக்கு மேலே தூக்கி நிறுத்திவைத்திருந்தனர். போசன் தலைமையில் டெக் குழுவினர் இயந்திர அறையிலிருந்த வெல்டிங் மிஷனிலிருந்து வயர்களை இழுத்து வெல்டிங் செய்ய வேண்டிய ராம்புக்கு கீழே தயாராக வைத்திருந்தனர். ராம்புக்கு அடியில் மரக்கட்டைகளை போட்டு அதன் மேல் ஏறி நின்று வெல்டிங்கை தொடங்கினேன்.தலைக்கு மேல் அதிக எடையுள்ள ராம்ப்பின் ஹைட்ராலிக்கை இயக்கி சீப் ஆபிஷர் தூக்கி பிடித்திருந்தார். இதுதான் கப்பல்காரனை தெய்வங்கள் உடனிருந்து பாதுகாக்கும் நேரம்.கப்பலின் மின்சாரம் துண்டிக்கபடாமல் இருக்க,ஹைட்ராலிக் பெயிலிவர் ஆகி ராம்ப் கீழே விழுந்து விடாமல் பாதுகாப்பது. 

  வெல்டிங் அடித்துக்கொண்டிருக்கும்போது காப்டன் அருகில் வந்து “கொஞ்சம் நல்லா வேலை செய் அடுத்த ட்ரை டாக் வர இது தாக்கு பிடிக்கணும்,இல்லேன்னா கப்பல இப்ப ரிப்பேர் யார்ட்ல கொண்டுபோய் தான் சரி செய்ய வேண்டிவரும். நான் வெசல் மனேஜர்ட்ட பேசி என்னமும் வாங்கி தாறேன்” என்றார். அவர் அப்படி சொல்வதே மகிழ்ச்சிதான். செய்யும் வேலைக்கு சம்பளம் அவ்வளவுதான் கணக்கு. வெல்டிங் முடித்து இறங்கியதும் ராம்ப்பை சிலமுறை இயக்கிபார்த்து சோதித்தபோது மிகச்சரியாக வேலை செய்தது. சில தினங்களுக்குப்பின் நானூறு டாலரை வெசல் மேனேஜர் ரிப்பேர் டீமுக்கு வழங்க சொன்ன தகவலை காப்டன் சொன்னார். போசன் குழுவினருக்கு ஆளுக்கு நாற்பது டாலர் வீதமும் டீம் லீடரான எனக்கு நூறு டாலரும் கிடைத்தது.

வேலுப்பிள்ளை,ராஜாவுடன் 


சான்பிரான்சிஸ்கோ அருகில் பெனிசியா துறைமுகம் போனபோது என் பால்ய நண்பர்கள் வேலுப்பிள்ளை மற்றும் ராஜாவை அழைத்தேன். ராஜாவும் நானும் நான் படித்த பாபூஜி பள்ளியின் பின்புறமுள்ள சின்னவிளை கடற்கரையின் குருசுபாறையில் அமர்ந்து சூரிய அஸ்தமனத்தை காண்போம். கப்பல்கள் அவ்வழியாக செல்லும் அப்போது எண்ணவில்லை இதே பாதையில் கப்பலில் நானும் செல்வேன் என.அவர்கள் இருவரும் அமெரிக்கா வந்தபின் சந்திக்கவேயில்லை. பத்து ஆண்டுகளுக்குப்பின் குடும்பத்தோடு வந்த நண்பர்களை சந்தித்தேன். மிக குறைவான நேரமே இருந்ததால் அருகிலுள்ள ரெஸ்டாராண்ட் போய் சாப்பிட்டோம்.

  பதினெட்டு வயதுக்குட்பட்டவர்கள் கப்பலுக்குள் அனுமதி இல்லாததால் குழந்தைகளுடன் வந்த அவர்களை கப்பலுக்கு அழைத்து செல்லஇயலவில்லை.

ஜப்பான் விமான நிலையத்தில் 


அங்கிருந்து ஜப்பானுக்கு வந்தபோது எனக்கு ஆறுமாதங்கள் தாண்டியிருந்ததால் விடுமுறை விண்ணப்பம் கொடுத்தேன்.ஜூனியர்,மற்றும் AB பவாருக்கு ஒப்பந்தம் முடிந்ததால் அவர்களுடன் என் பெயரும் வந்தது. ஜப்பானின் டோயோகாசியில் இறங்கி நகோயா-பெங்களூரு- திருவனந்தபுரம் போய் சேர்ந்தேன்.


நகோயா  விமான நிலையம் செல்லும் பாதை 


   நாகர்கோவிலில் தென்னமரங்கள் அடர்த ஒரு தோப்பில் (டாக்டர் கார்டனில்) குடும்ப உறுப்பினர்கள் இருபத்தியைந்து பேர் ஒன்றாக சமைத்துண்டு நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்து கழித்தோம். 

ஜானகி,DR மகேஸ்வரி 



 அன்று மாலையே சேலம் அருகிலிலுள்ள ஏற்காடு மலைக்கு ஆன்மீக சத்சங்கம் ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது சேலம் ஜானகி ராமன் உடன் வந்தான். மருத்துவர் மகேஸ்வரியை அங்கே சந்தித்தேன்.

    மலையிலிருந்து இறங்கியபின் வீட்டில் சோற்று கணக்கு,யானை டாக்டர் கதைகளை வாசித்து காண்பித்தேன். வெண்முரசின் மழைபாடலில் வரும் அம்பறாதூணி,மஞ்சம்,புரவி,அரவு போன்ற செந்தமிழ் வார்த்தைகளுக்கு தமிழ் ஆசிரியையான சுனிதா அர்த்தம் சொல்லித்தந்தாள். ஒருநாள் மாலை சுனிதாவிடம் வெண்முரசு எழுத்தாளர் ஜெயமோகனை பார்த்துவிட்டு வருகிறேன் என பைக்கில் புறப்பட்ட போது சுனிதா “ஸார் உண்டுமா,வீடு தெரியுமா உங்களுக்கு” என கேட்டாள். அவரது ஜாதகமே தளத்தில் இருந்தது. “பார்வதிபுரம் சாரதா நகர்னு தெரியும் போய் பாக்கேன்” என சொல்லிவிட்டு பைக்கில் கிளம்பினேன்.



  சாரதா நகருக்குள் இருந்த ஒரு வீட்டில் ஜெயமோகன் என எழுதியிருந்ததை கண்டு பைக்கிலிருந்து இறங்கி கேட்டபோது. இன்னொரு வீட்டை கட்டினார்கள். வீட்டில் யாரும் இல்லை நெடுநேரம் பெல் அடித்தபின் சட்டையில்லாமல் தொடைவரை வரை மடித்து கட்டிய சாரத்துடன் வந்தவர் வீட்டின் இரும்பு அளிக்குள் நின்று “என்ன வேண்டும்” எனக்கேட்டார். “ஒரு பத்து நிமிஷம் உங்கள பாக்கணும்” என்றேன். “எதுக்கு பாக்கணும்” என எரிச்சலுடன் கேட்டார். “உங்க எழுத்த இப்ப வாசிக்கேன் அதான் பாக்க வந்தேன்” என்றதும் சாவியை கொண்டுவந்து கதவை திறந்தார். அப்போது தினமும் எட்டுமணி நேரத்திற்கு மேல் அமர்ந்து வெண்முரசு எழுதுவதால் கடுமையான முதுகுவலி இருந்ததை எழுதியிருந்தார். அந்நேரம் வெண்முரசின் மூன்றாம் நாவலான வண்ணகடல் வந்துகொண்டிருந்தது. 

  யோகா ஆசிரியரான நான் அங்கேயே ஒரு பாயை விரித்து மகராசனம் எனும் பயிற்சியை சொல்லிகொடுத்தேன். இரண்டு மணிநேரம் பேசியபின் “ஸார் எழுதிட்டு இருந்தியளா” எனக்கேட்டேன். ஆம் என தலையசைத்தார். குற்ற உணர்வில் மனதுக்குள் மன்னிப்பு கேட்டு விடைபெற்றேன். சங்கசித்திரம்,ரப்பர் நூல்களை பரிசாக தந்தார். 

எழுத்தாளர் ஜெயமோகன்


   வெளியில் வந்து ஜெயமோகன் தளத்தை எனக்கு அறிமுகபடுத்திய தம்பி பிரபுவை அழைத்து சொன்னேன். “காக்கா நான் இதுவரை அந்த ஆசிரியரை சந்தித்ததே இல்ல” எனச் சொன்னான்.

  நாஞ்சில் ஹமீது,

  08 june 2025.

sunitashahul@gamil.com

No comments:

Post a Comment