பிக்சஸ் லீடர் பகுதி ஒன்று.
ஹார்மொனி ஏஸில் ஜனவரி முப்பத்தி ஒன்றாம் தேதி முதல் ஜூலை முப்பத்தி ஒன்றாம் தேதி வரை மிகச்சரியாக ஆறு மாதங்கள் பணியில் இருந்தேன். ரமலான் மாதமாக இருந்ததால் வெராகுருசில் இறங்கிய நாளும், நீண்ட விமான பயண தினத்தன்றும் நோன்பு வைக்கவில்லை. தோஹா – திருவனந்தபுரம் விமானத்தில் அருகிலிருந்தவர் கப்பலின் பயணம், பணி குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாட்டிலிருந்து உயர்கல்விக்கு அமெரிக்கா சென்ற சங்கர் ஆராய்ச்சி படிப்பை முடித்து நியுயார்க் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிவதாக சொன்னார். தமிழ் மறந்தே விட்டது அவருக்கு. வெள்ளைக்கார மனைவி, மகள்களுடன் பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் இந்தியா வருவதாக சொன்னார்.
ஊர் வந்த சிலதினங்களில் ரமலான் பண்டிகை. விடுமுறையில் சுனிதா, மகன்களுடன் மலேசியா மற்றும் சிங்கப்பூர் இருவார பயணம் போய் வந்தோம். மலேசியாவில் சையதலி அண்ணன் வீட்டிலும், சிங்கையில் நண்பர் மணி வீட்டிலும் தங்கி சுற்றிபார்த்துவிட்டு வந்தோம். பக்ரீத் பெருநாளுக்குப்பின் அழைப்பு வந்தது மூன்று மாததிற்குள்ளாகவே. பிக்சஸ் லீடர் எனும் கப்பல் அக்டோபர் இருபத்தி மூன்றாம் தேதி கொச்சியிலிருந்து ஹாங்காங் வழியாக ஜப்பானின் நகோயோவை அடைந்தேன். டோயோகாசியில் டோயோட்டோவின் கார்களை ஏற்றிகொண்டிருந்தது கப்பல்.
2004ம் ஆண்டு கப்பல் கட்டப்பட்டது முதல் ஜப்பானின் தனியார் துறைமுகமான டோயாகாசியில் டொயோட்டாவின் ஆறாயிரத்து ஐநூறு கார்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவின் நியுயார்க் மற்றும் லாங் பீச் இருமுறையும், மேற்கு கடற்கரை பகுதியான கலிபோர்னியாவின் ரிச்மொன்ட் மற்றும் பெனிசியா துறைமுகங்களுக்கும் செல்கிறது. இது தவிர வேறெங்கும் பயணிக்கவே இல்லை. டோயோகாசியில் கப்பல் கட்டப்படும் துறைமுகம் டோயோயட்டோ கார் நிறுவனத்திற்கு சொந்தமானது. தொழிற்சாலையில் தயாராகும் கார்கள் நேராக துறைமுகத்திற்கு வந்துவிடும். நாணயத்தை போட்டால் மிட்டாய் தரும் எந்திரம்போல.
கப்பலில் இணையும் முன்பே 2011இல் ஹார்மொனி ஏஸ் கப்பலில் என்னுடன் பணிபுரிந்த போசன் குருமூர்த்தி போனில் அழைத்து “பாய் நல்ல போன் கொண்டுவா, கப்பல்ல இன்டர்நெட் இருக்கிறது” என்றார்.
ஆந்திராவின் சிர்க்காகுளத்தை சார்ந்த குருமூர்த்தி அதிக கல்வியறிவில்லாத ஏழை மீனவ குடும்பத்தை சார்ந்தவர். வயிற்று பசி போக்க வீட்டில் மூத்த பிள்ளையான அவர் எட்டு வயதில் கட்டுமரத்தில் மீன்பிடிக்க சென்றது தான் முதல் அனுபவம். பின்னர் மீன்பிடி படகில் வேலை, அந்த அனுபவத்தை கொண்டு மும்பை வந்து வேலை தேடி இந்திய சிடிஇ இல்லாமல் பனாமா சிடிசி வைத்துகொண்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் நிறுவனத்தில் ரிப்பேர் டீமில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து அந்த அனுபவத்தில் இந்திய சிடிசி பெற்று ட்ரைனிங் ஓஎஸ் ஆக சேர்ந்து போசனாக உயர்ந்தவர். அவரது திறமை எனக்கு எப்போதும் வியப்புதான். கப்பலில் போசன் என்பது பொறுப்பான திறமையானவர்கள் மட்டுமே செய்யும் வேலை.
காப்டன் திலாவர் சிங் என்னை அழைத்து கப்பலில் கேடட்டாக இருக்கும் தனது மகன் சீனாத்க்கு சில பொருட்களை கொண்டுசெல்ல வேண்டினார். கொச்சி அலுவலகத்துக்கு அவற்றை பார்சலில் அனுப்பதாக சொன்னார்.
கப்பலில் மிக கலவையான பணியாளர்கள் இருந்தனர். காப்டன் பங்களாதேஷ், முதன்மை அதிகாரி இலங்கை, இரண்டாம் அதிகாரி, மூன்றாம் அதிகாரி இந்தியா, இரு காடேட்கள் தூத்துக்குடி ரேமன்ட் மற்றும் சீனாத், போசன் முதல் பணியாளர்கள் அனைவரும் இந்தியர்.
இயந்திர அறையில் முதன்மை இஞ்ஜினியர் தாய்லாந்து, இரண்டாம் இஞ்சினியர் இலங்கை, மூன்றாம் இஞ்சினியர் ரஷ்யா, ஜூனியர் மலேசியா, பத்திசாப் மற்றும் இரு மோட்டார்மேன்கள் இந்தியர்.
ரேமண்டிடம் “இருபத்திஎட்டு வயதில் எப்படி கேடட்டாக வந்தாய்?” என கேட்டேன். “அப்பாவுக்கு நான் இஞ்சினியர் ஆகணும்னு ஆச, எனக்கு கப்பல்ல கேப்டன் ஆகணும். அப்பாக்க ஆசைய நிறைவேத்த இஞ்சினியரிங் முடிச்சி பாஸானபின் என் ஆசய நிறைவேத்துங்கனு கேட்டேன்” என்றான்.
பதினான்கு டெக்குகளை கொண்ட கப்பலில் ஆறாயிரத்தி ஐநூறு கார்களை நிறைத்தபின் டோயோகாசியிலிருந்து பசிபிக் கடலில் பயணித்து பதினைந்து நாளில் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையான போர்ட்லேண்ட் மற்றும் ரிச்மொன்ட் துறைமுகங்களுக்கு சென்றது. அங்கிருந்து மீண்டும் பதினைந்தே நாளில் டோயோகாசி. ஒரே மாதத்தில் இருமுறை இரவு பகலாகவும், பகல் இரவாகவும் மாறிப்போனது. போர்ட் லேண்டில் ரேமண்ட் ஊருக்கு செல்ல மலேசிய தமிழரான தினேஷ் கப்பலுக்கு வந்தான்.
முதல் முறையாக எனக்கு கப்பலில் இணையம் கிடைத்தது. காலையில் உணவு மேஜையில் அமர்ந்து காலை உணவை போட்டோ அனுப்பினால், விளமீன் வாங்கி கழுவ வைத்திருக்கிறேன் என மறு போட்டோ அனுப்புவாள் சுனிதா. கப்பல்காரனின் தகவல் தொடர்பு இன்னும் எளிதாகியது. இந்த கப்பலில் பத்து டாலரில் கிடைக்கும் தொலைபேசி அட்டையில் இந்தியாவிற்கு மூன்று மணிநேரம் வரை பேச முடிந்தது.
வீட்டோடும், நண்பர்களோடும் எளிதாக தொடர்பில் இருக்க முடிந்தது. நேரம் கிடைத்தபோதெல்லாம் முகநூலில் கிடந்தேன். கப்பல் ஜப்பான் வந்து மீண்டும் டோயோகாசியில் கார்களை நிறைத்தபின் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிக்கு பனாமாவை தாண்டி செல்ல முப்பத்தி மூன்று நாட்கள் ஆகியது. நீண்ட இடைநில்லா பயணத்தில் நேரத்தில் நேரம் அதிகம் இருந்தது. சனி, மற்றும் ஞாயிறுகளில் மதியத்திற்கு மேல் ஓய்வு.
பத்து ஆண்டுகளே ஆன கப்பல் ஆதலால் புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட இயந்திரங்கள், கடல் நீரால் குளிர்விக்கும் முறைக்கு பதிலாக நன்னீர் உபயோகிக்கும் முறை, கடல் நீர் குழாய்களும் உட்பக்கம் ரப்பர் இணைந்த குழாய்கள் ஆதலால் மனித ஆற்றல் குறைவாக செலவழிக்கப்பட்டால் போதுமானது. அதற்கேற்ப கப்பல் பணியாளர்களின் எண்ணிக்கையை கப்பல் நிறுவனங்கள் குறைத்திருந்தன. மொத்தம் இருபத்தியிரண்டு மட்டுமே இந்த கப்பலில்.
அமெரிக்காவின் லாங் பீச் துறைமுகத்தில் கார்களை இறக்க நிறுத்தபட்டிருக்கும் ஒருநாளில், பராமரிப்பு பணி, கப்பலுக்கு எண்ணெய் நிரப்புதல் ஆகியவற்றை செய்வோம். நியுயார்க்கில் பணியாளர்கள் வெளியில் சென்றுவருவது போல் இரண்டாம் இஞ்சினியர் திட்டமிடுவார்.
அமெரிக்காவிலிருந்து மீண்டும் ஜப்பானின் டோயோகாசிக்கு முப்பத்தி மூன்று நாட்கள் இப்படி நீண்ட பயணத்தில் முகலூலில் உலாவியதில் இரு நன்மைகள். பல் மருத்துவர் தாமரை செல்வியுடன் கிடைத்த நட்பு. கிளப் டென் அறக்கட்டளையை பற்றி மிக விரிவாக விவாதித்தோம். பின்னர் அதை முறையாக பதிவு செய்து தற்போது வரை நிறைய நற்பணிகள் அதன் மூலமாக நடகிறது.
முகலூலில் தொடர்பில் வந்த எனது காந்தாரிவிளையை சார்ந்த தம்பி பிரபு. பள்ளி நாட்களில் மணவாளகுறிச்சி கிராமத்தில் இருக்கும்போது நூலகமும் புத்தகமுமாய் இருப்பான். சென்னையில் இருக்கும் உனக்கு இப்போது நூலகம் எது எனக்கேட்டேன். எழுத்தாளர் அ. முத்துலிங்கம், வேணு வனம், ஜெயமோகன்.இன் ஆகிய இணைய பக்கங்களின் சுட்டியை அனுப்பினான். அதிலும் குறிப்பாக அவன் அனுப்பிய சுட்டி எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் இருந்து வர்கீஸின் அம்மா, சோற்று கணக்கு சுட்டிகளை.
சோற்று கணக்கு அதேபோல் ஒரு வாழ்க்கையை மும்பையில் வாழ்ந்திருக்கிறேன். அந்த பசியை நன்கு உணர்ந்தவன். வர்கீஸின் அம்மா படித்தபோது நம்மூர் எழுத்தாளர் நான் ஐடிஐ படித்த மணலிக்கரையின் மிக அருகில் அருமனையில் தான் வாழ்ந்திருக்கிறார். என்னுடன் படித்த சகாயராஜின் ஊர் திருவரம்பு. பலமுறை நான் சென்ற ஊர்தான் எழுத்தாளர் ஜெயமோகனின் சொந்த ஊர் இப்படி பல நெருக்கமாக இருந்தது.
ஜெயமோகன்.இன் தினமும் திறந்து பார்க்க தொடங்கினேன். யானை டாக்டர், அறம், வணங்கான், நூறுநாற்காலிகள், மயில்கழுத்து, உலகம் யாவையும் என அதிலிருந்த பன்னிரண்டு கதைகளையும் வாசித்தேன். எல்லாம் நீண்ட பெரிய கதைகள், கதை நாயகர்கள் மற்றும் கதைகளம் எங்களூர்.
கூட்டமாக பயணம் போகிறார்கள், டீ குடிக்க செல்வது, ஒருவர் எழுத்தாளரை திட்டுகிறார். இன்னொருவரிடம் அவர் மன்னிப்பு கேட்கிறார். யாருக்கோ விருது கொடுக்கிறார்கள் இப்படி தினம், தினம் ஜெயமோகன் தளத்தை விடாமல் வாசிக்க தொடங்கியிருந்தபோது அதில் புதிதாய் வெண்முரசு என தினமும் வரத்தொடங்கியது. தம்பி பிரபுவிடம் கேட்டேன் “டெய்லி இப்ப வெண்முரசுன்னு வருது அது என்னது” என. காக்கா அது மகாபாரதம் என்றான். அப்ப அது எனக்கில்லை இஸ்லாமியன் ஏன் மஹாபாரதம் வாசிக்கவேண்டும் என விட்டுவிட்டேன்.
அதுவரை கப்பலுக்கு வரும்போது புத்தகங்கள் கொண்டுவருவேன். எஸ் ராமகிருஷ்ணனின் தேசாந்திரி, துணைஎழுத்து, கதாவிலாசம், கேள்விகுறி எங்களூர் தோப்பில் மீரானின் கடலோர கிராமத்தின் கதை வாசித்திருந்தேன்.
வைரமுத்துவின் கள்ளிகாட்டு இதிகாசம் வாசித்ததை பெரும் சாதனையாக கருதி நண்பர்களிடம் பெருமை பீத்திய நாட்கள். பாலகுமாரனின் மெர்குரி பூக்கள், சுஜாதாவின் கற்றதும், பெற்றதும் நான் படித்தவை. மணிமேடையில் என் மாமாவின் கடையருகில் இருந்த துணிக்கடை முதலாளி நடந்து போகும்போது சர்ச்சைக்குரிய எழுத்தாளர் என அப்போது ஆனந்த விகடனில் வந்த அட்டைப்படத்தை காட்டி பக்கத்து கடை இளங்கோ சொல்லி தெரியும். பெருவிளை மீரான் மைதீன் மட்டும் நேரில் கண்ட நன்கறிந்த எழுத்தாளர் அப்போது.
வெண்முரசு வரத்தொடங்கி பதினான்காவது நாள் முதற்கனலின் முதல் அத்தியாயமான தாய் குழந்தைக்கு சொல்லும் கதையை வாசித்தேன் ஒன்றுமே புரியவில்லை அந்த மொழி எங்கோ தூரத்தில் இருந்தது. ஆனாலும் அந்த ஜெயமோகன்.இன் தளம் என்னை பிடித்துக்கொண்டது. இரு தினங்களுக்கு பின் மீண்டும் வெண்முரசு வாசிக்க முயற்சித்தேன் உள்ளே சென்றுவிட்டேன். ஏழரை ஆண்டுகள் இருபத்தி ஆறு நாவல்கள், இருபத்தி ஆறாயிரம் பக்கங்கள் கொண்ட உலகின் பெரும் நாவலை உலகின் தலைசிறந்த ஆசிரியர் எழுதியதை கூடவே வாசித்து முடித்தேன்.
பிக்சஸ் லீடரின் இணையம் தந்த உபயம் அது.
நாஞ்சில் ஹமீது
06-June-2025.
sunitashahul@gmail.com
தொடர்புடைய பதிவுகள்:
வாட்ஸ் அப் கோளாறும் புதிய போனும்
No comments:
Post a Comment