Sunday, 1 June 2025

இருபது ஆண்டு நிறைவு 20 - மீண்டும் ஹார்மொனி ஏஸ்


.



நான் செல்லும்போது இருந்த வீட்டை மாற்றி வேறு வீட்டில் குடியிருந்தாள் சுனிதாவும் மகன்களும். கசலில் இருந்து இறங்கியபின் சீப் இஞ்சினியர் விஜயகுமார் ஷெட்டியை அழைத்தேன். கப்பலில் இருக்கும்போது அவரது எண் தந்திருந்தார். “உடுப்பி சைடு வந்தா வா” என சொல்லியிருந்தார்.


 போனில் என்னை அடையாளம் தெரிந்தது. போர்ட் ஆப் ஸ்பெயினில் மூன்று தினங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று விரல்களிலும் கம்பி பொருத்தப்பட்டு பின் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டதை சொன்னார்.

“இப்ப பரவாயில்ல விரலுக்கு எக்சசைஸ் சொல்லி தந்தத செய்துட்டு இருக்கேன் இன்னும் ஆறு மாசத்துல செரியாவும், இந்த பக்கம் வந்தா உடுப்பி வீட்டுக்கு வா” என்றார்.

“சரி, டேக் கேர் ஸார்”என்றேன்.

“ஓறுமையா கூப்புட்டு கேட்டதுக்கு நன்றி” என்றார்.

நாகர்கோவில் யோக மையத்திலிருந்து இருபதுபேர் திருவண்ணாமலை, பாண்டிச்சேரி கடற்கரை, அரபிந்தோ ஆஸ்ரமம் போய் வந்தோம் ஆசிரியர் குமாரசாமி ஏற்பாட்டில். பின் நண்பர்கள் மூவர் சேர்ந்து தீபாவளி தினந்தன்று சதுரகிரி மலையில் ஏறினோம். அங்கு இரவு தங்கி மறுநாள் காலை தவசு பாறை செல்லும்போது சேலம் ஜானகிராமன் தாய், தந்தையுடன் வந்திருந்தான். கூடவே ஒரு வயதான அம்மா நீண்ட நாட்களாக நடக்கவே முடியாமல் கேரளாவில் தங்கியிருந்து ஆயுர்வேத வைத்தியம் பார்த்தும் சரியாகாமல், மலையேறினால் சரியாகும் என ஒருவர் பரிந்துரைக்க வலியுடன் ஆறு மாதத்துக்கு முன் ஏறி குணமடைந்ததால் மாதந்தோறும் பௌர்ணமி இரவில் இங்கே வருவதாக சொன்னார்.




விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தால் வடசேரி பள்ளியில் அதிகாலை பஜர் தொழுதுவிட்டு பொற்றையடி மருத்துவாழ் மலையில் மாதத்தில் ஒரு முறையாவது ஏறுவது வழக்கம். மங்கிய வெளிச்சத்தில் ஏற தொடங்கினால் சூரியஉதயத்திற்கு அரை மணிநேரம் தாண்டி ஸ்ரீ நாராயணகுரு தவம் செய்த குகையான பிள்ளைதடத்திற்கு ஒரு மணிநேரத்தில் ஏறி விடுவேன்.

மேலும் மேலே ஏறி ஆஞ்சநேயர் கோயில் தாண்டி உச்சியில் ஏறி நின்றால் குமரியின் கடலுக்குள் நின்றுகொண்டிருக்கும் அய்யன் வள்ளுவர் நான் இங்க தாண்டே இருக்கேன் என சொல்வது போல் இருக்கும். வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல், அரபிக்கடல் மூன்றையும் ஒருசேர பார்க்கலாம். விவேகானந்தா பாறை, மணக்குடி கடலில் கலக்கும் பழையாறு, அதனருகிலுள்ள உப்பளங்கள், எதிர்திசையில் கூடன்குளம் அணுமின் நிலையத்தையும் காணமுடியும். ஆனால் சதுரகிரி மலை ஏறியபோது செல்ல வேண்டிய இடம் தான் எனத்தோன்றியது. நான்கு மணி நேரத்திற்கு மேல் ஆகியது.

ட்ரெயினிங் செஷன்



ஜனவரி மாதத்தில் பணியில் இணைய தயாராக இருப்பதாக மும்பை அலுவலகத்திற்கு சொல்லியிருந்தேன். ஜனவரி மாத இறுதியில் ஜப்பானின் கவாசாகியில் பணியில் இணைய வேண்டி அழைப்பு விடுத்தார் மும்பை அலுவலக பிரத்தமேஷ். கொச்சி அலுவலகம் சென்று முருத்துவ சோதனைகள் முடிந்து காத்திருந்தபோது முப்பதாம் தேதி புறப்பட சொன்னார்கள்.

கொச்சி – மும்பை – ஹாங்காங் வழியாக ஜப்பானை அடைந்தேன். காவாசாகி துறைமுகத்தில் கார்களை ஏற்றும்போதே மறுபுறம் பங்கர்* நடந்துகொண்டிருந்தது. கப்பல் சைனாவில் பதினாறு நாட்கள் ட்ரைடாக் முடித்துவிட்டு சரக்கு ஏற்றுவதற்காக ஜப்பான் வந்திருந்தது. முதன்மை இன்ஞ்சியராக பங்களாதேஷின் முஸ்தகுல் ஹக், காப்டனாக நான் முன்பே இருமுறை பணிசெய்த ரஹீம் உல்லா ஆகியோர் இருந்தனர். முதன்மை அதிகாரி பிலிப்பைன்சின் கிளென் முன்பு என்னுடன் இதே கப்பலில் இருந்தவர். உக்ரைன் இரண்டாம் அதிகாரி மற்றும் பிலிப்பினோ மூன்றாம் அதிகாரி.

போசன் தமிழரான சுரேந்திரன் என்னுடன் பணியில் இணைந்தார். எங்களூர் எழுத்தாளர் வறீதையா கான்ஸ்தந்தின் பணிபுரிந்த ஊரான தூத்தூரை சார்ந்த டைட்டஸ் மற்றும் புன்னக்காயல் கனிஸ்டன் இருவரும் ஓஎஸ் ஆகவும், டெக் பணியாளராக திருச்சூர் சேட்டா கோபாலனுடன், குஜராத்தியான சோலங்கி, ரத்னகிரி இர்பான் இருந்தனர்.

இயந்திர அறையில் மலேசிய தமிழரான மனோஜ் இரு தினங்களில் ஜப்பனின் யோகோகாமா துறைமுகத்தில் இறங்கிசெல்ல தாய்லாந்து இரண்டாம் இஞ்சினியர் வந்தார். மூன்றாம் இஞ்சினியர் கொச்சியின் பீட்டர், நான்காம் இஞ்சினியர் பஞ்சாபின் மகேந்தர் சிங், தில்லியை சார்ந்த சுமித் ஜூனியர் இஞ்சினியர்.

மோட்டர்மேன்கள் கேரளாவின் சந்தோஷ், பிரசாந்த் மற்றும் கோவாவின் நந்தா. சமையல் காரரான கார்டோசோ மற்றும் மெஸ் மேன் ஆகியோரும் கோவாவை சார்ந்தவர்கள்.

ஜப்பானிலிருந்து புறப்பட்டு இருபது நாட்களுக்குப்பின் கனடாவில் முதல் துறைமுகம். கப்பல் கரையணைந்த போது காங்க்வே விஞ்ச் ஜெட்டியில் இறக்க முடியவில்லை. விஞ்ச் மோட்டார் சரியாக வேலை செய்யாமல் செங்குத்தாக நீரில் தொங்கிகொண்டிருந்தது. கப்பலுக்கு வந்த துறைமுக பைலட் இறங்க முடியாமல் கப்பலின் ராம்ப் இறக்கும் வரை காத்திருந்தார்.

 


முதன்மை அதிகாரி செயின் பிளாக்கை பொருத்தி காங்க்வேயை தண்ணீரில் விழுந்துவிடாமல் கட்டிவைத்தார். காப்டன், சீப் இஞ்சிநியருடன் இணைந்து விஞ்ச் மோட்டரை கழட்டி பார்த்தோம். சைனா ட்ரை டாக்கில் தவறான உதிரி பாகங்கள் பொருத்தப்பட்டிருந்ததை கண்டோம். கனடாவின் குளிரில் இரவு முழுவதும் வேலை செய்தும் சரிசெய்ய இயவில்லை.

கப்பலின் இருபக்கதிலும் இரு காங்க்வே இருக்கும். மறுபுறமுள்ள விஞ்ச் மோட்டாரை கழட்டி பொருத்தினோம் அதுவும் வேலை செய்யவில்லை. காலை பத்து மணிக்குமேல் விஞ்ச்சை சோதிக்க கனடிய நிபுணர் ஒருவர் வந்தார். ட்ரை டாக்கில் ஓவராலிங் செய்தபோது தவறான உதிரி பாகங்கள் பொருத்தப்பட்டிருப்பதை சுட்டி காட்டினார்.

பனாமா கால்வாயை தாண்டி அடுத்த ஏழாவது நாள் கப்பல் அமெரிக்க துறைமுகம் சென்றபோது அங்கே இரு புதிய விஞ்ச்கள் தருவித்து பொருத்தினோம்.

அமெரிக்க டெர்மினலில்



மிக மலிவாக இருப்பதால் முதலாளிகள் கப்பலை சைனாவில் ட்ரைடாக்கிகிற்கு அனுப்புகின்றனர். கப்பல் பயணத்தை தொடங்கியபின் கப்பல்காரர்களின் உடலும், மூளையும்ஒருசேர உறிஞ்சப்படுவதை அறிவார்களா எனத் தெரியவில்லை.

அமெரிக்காவின் பிலேடெல்பியா, ஜாக்ஸன்வில், நியுயார்க், மயாமி துறைமுகங்ளில் கார்களை இறக்கினோம். நியுயார்க்கிலிருந்து புறப்பட்ட போது நந்தா என்னை அழைத்தான். கடலில் நின்றுகொண்டிருந்த பச்சை நிற சுதந்திரதேவி சிலையை டெக்கில் நின்று பார்த்தோம். நந்தா என்னிடம் “கிட்ட ஒருக்க போய் பாக்க சான்ஸ் கிடக்கணும்” என்றான்.

பிரிட்ஜில் இருந்தவர்கள் பைனாகுலர் வழியாக பார்த்துக்கொண்டிருந்தனர். ஜப்பானில் ஏற்றிய கார்கள் அனைத்தும் அமெரிக்காவில் இறக்கி காலியான கப்பலை மெக்சிகோவின் வெராகுருசிற்கு கொண்டு சென்றோம். மூன்றாவது ஆண்டாக தொடர்ந்து வெராகுருஸ் வருவதால் நானே சக நண்பர்களுக்கு வழிகாட்டி.

வெராகுரூஸில்..
வெராகுரூஸில்...



வெராகுருசில் என்னை கண்ட ஆனாவும், டயானாவும் செகண்ட் இஞ்சினியர் எங்கே எனக்கேட்டனர். நான் கப்பல் மாறிவிட்டதை சொன்னபோது அவரையும் கூட்டிட்டு வரவேண்டியது தானே நாங்களும் பொழைக்கணுமே என சூழ்ந்தனர். ஒலாஸ்கியை இன்னும் அவர்கள் நினைவில் வைத்திருப்பது ஆச்சரியம்தான்.

வெராகுரூஸில்...


நந்தா “இது உனக்க கன்னியாகுமரியா, மெக்ஸ்சிகோவா” எனக்கேட்டான். நான் கடந்த இருஆண்டுகளாக இருந்த அதே ரூட்டில் ஹார்மொனி ஏஸ் ஓடத்தொடங்கியது. அர்ஜென்டினா, உருகுவே, பிரேசில், கொலம்பிய, வெனிசுலா மற்றும் மெக்சிகோவின் வெராகுருஸ்.

காப்டன், சீப் இஞ்சினியர், சமையல்காரர், பத்திசாப் விடுமுறைக்கு செல்ல புதியவர்கள் வந்தனர். பிலிப்பைசிலிருந்து வந்த பத்திசாப் பயிற்சிக்குப்பின் புதிய கப்பல் ஒன்றில் நான்கு மாதம் பணி செய்தபின் இங்கே வந்தார். அனுபவமில்லாதவர். இருபத்தி நான்கு ஆண்டு கப்பலில் வேலை செய்ய கப்பலின் எலக்ட்ரிகல் வேலையில் நன்கு பழுத்தவர்கள்தான் சமாளிக்க இயலும். புதிதாய் வந்த பத்திசாபுக்கு முதல் வேலை கிரேனின் மோட்டரை கழற்றி மாற்றுதல். நான் உடனிருந்தேன். எதுவுமே தெரியவில்லை. கப்பலில் நிறைய வேலைகள் அவருக்கு தெரியவேயில்லை. புனேவை சார்ந்த பிரதான் என்பவர் சீப் இஞ்சினியராக வந்திருந்தார். கப்பலின் எலக்ட்ரிகல் சார்ந்த பணிகள் பழுது நீக்காமல் கூடிக்கொண்டே சென்றது. அடுமனையில் சமைக்கும் மின்அடுப்பு சூடு பிளேட்கள் சூடாகாமல் போனது. நான்கில் ஒன்று மட்டுமே வேலை செய்தது.

புதிதாய் வந்த மும்பையின் சமையல்காரர் விஜய் “ஷாகுல் உனக்க காஸ் டார்ச் கொண்டுவா அதுலதான் சமைக்கணும்” என்றார். சீப் இன்ஜினியரின் அழுத்தம் கூடியதும் பத்தி சாப் சோர்ந்து போய் ஒரு வாரத்தில் உடல் எடை குறைந்து மனநலம் பாதிக்கபட்டார். நான் அமர்ந்து பேசினேன். எந்த முன்னேற்றமும் இல்லை. முதன்மை அதிகாரி கிளென் என்னுடன் நல்ல நட்பில் இருந்தார்.

“சீப் ஏதாவது செய், பத்தி சாப உடனே வீட்டுக்கு அனுப்பு, இலேன்னா அவன் மிஞ்சமாட்டான்” என்றேன். அன்று மாலையே பத்திசாபுடன் அமர்ந்து பேசிய கிளென் “அவன் வாயே தொறக்கவில்லை” என்றார். காலை இயந்திர அறை மீட்டிங்கில் இரண்டாம் இஞ்சினியர் சொல்லும் எந்த வேலையும் செய்யாததால் சீப் இன்ஜினியர் என்ன பிரச்னை சொல் என கேட்டபோதும் மௌனமாகவே இருந்தான்.

கிளென் என்னை அழைத்து பிலிப்பைன்ஸ் அலுவகத்தை அழைத்து பேசியதை சொன்னார். பத்தி சாபின் தாய் நோய்வாய்பட்டு சீரியஸாக இருப்பதாக பத்திசாபின் மனைவி மணிலா அலுவகத்திற்கு பேச ஐடியாவும் கொடுத்துள்ளாள் மணிலா அலுவலக பெண் அதிகாரி.

இருபத்தி ஒன்பதே வயதான ஆறடி உயரமுள்ள பத்திசாப் பணியில் இணையும்போது எண்பத்தியைந்து கிலோ எடையுடன் இருந்தார். ஒரே மாதத்தில் சரியாக உணவுண்ணாமல் பதினைந்து கிலோவுக்கு மேல் குறைந்துவிட்டார். கப்பலின் காப்டன் குலாலம்பூர் அலுவலகத்திற்கு விசயத்தை சொல்லிவிட்டால் உடனடியாக அவரை வீட்டுக்கு அனுப்ப முடியும். ஆனால் கப்பல் வேலையை அவர் மறந்துவிட வேண்டியதுதான்.

முள்ளில் சிக்கிய துணியை கிழியாமல் எடுப்பது எப்படி என யோசித்துகொண்டிருந்தனர்.

நாஞ்சில் ஹமீது.

01 June 2025.

sunitashahul@gmail.com 

பங்கர்- கப்பலுக்கு எரி எண்ணெய் நிரப்புதல்



No comments:

Post a Comment