என்னுடன் பிறந்தவர்கள் நால்வர். எங்கள் வீட்டில் நாங்கள் ஐந்து பிள்ளைகள். மூத்தவர் அண்ணன் மாஹீன், இரண்டாவது அக்கா அஜிதா, மூன்றாவது நான், தம்பி ஷேய்க், கடைசியாக தம்பி பாபு ஹுசைன்.
வாப்பா, உம்மாவுடன், மறியம் மாமியின் மகள் ஜெமீலா, மகன் சித்திக் என ஒன்பதுபேர். இதுபோக தினமும் மூன்றிலிருந்து ஐந்துபேர் சாப்பிட வரலாம். எண்ணிக்கை உறுதி கிடையாது. அது காலை உணவா, மதியமா, இரவுணவா அல்லது இரவு பதினோரு மணிக்குமேல் மிட் நைட் மீல் ஆகவும் இருக்கலாம். அதனால் உம்மா எப்போதும் உணவு சமைக்கும்போது பத்து முதல் பதினைந்து பேருக்கு சேர்த்தே சமைத்தாக வேண்டும்.
ரேசன் கடையில் கிடைக்கும் அரிசி போக வாப்பா வேலைபார்த்த இந்திய அபூர்வ மணல் ஆலையின் ஸ்டோர்ஸில் மாத துவக்கம் மற்றும் மாதத்தின் மத்தியில் இருபத்தியைத்து கிலோ வீதம் இருமுறை அரிசி வாங்குவோம். வேலு பலசரக்கு கடையின் பற்று வரவு கணக்கு உண்டு. அங்கும் சம்பா அரிசி வாங்குவோம்.
அப்போதெல்லாம் வீட்டில் மாவரைக்கும் கிரைண்டர் கிடையாது. ஆட்டுரலில் தான் இட்லிக்கோ தோசைக்கோ ஊற வைத்து கழுவிய அரிசி, உளுந்தை போட்டு ஆட்டி மாவாக்கி எடுக்கவேண்டும். ஆப்பம் என்றால் ஊற வைத்த பச்சரிசி ஆட்ட வேண்டும். இத்தனை பேருக்கு ஆகும் மாவை தினமும் ஆட்டுதல் சாத்தியமேயில்லை. வாரத்தில் ஒரு நாள் தான் தோசை அல்லது இட்லி கிடைக்கும். நானே பத்து இட்லிக்கு மேல் சாப்பிடுவேன். பெருநாள் வந்தால்தான் ஒறட்டி, பாலாடை, ஓட்டப்பம், கலத்தப்பம், சுருளப்பம் போன்றவை கிடைக்கும். செம்பலுவா, மஸ்கோத் அல்வா போன்றவை கடும் உடலுழைப்பை கோருபவை. பக்ரீத், ரம்ஸான் பெருநாள்களில் இறைச்சி சமைக்க வீட்டில் உம்மாவிற்கு அம்மியில் மசாலா அரைத்தே கை ஓய்ந்துவிடும்.
ஒறட்டி, இடியப்பம், புட்டுக்கு ஊற வைத்த பச்சரிசியை உரலில் இடித்து பொடியாக்கி வைத்துகொள்ளலாம், அல்லது ரைஸ் மில்லில் காசு கொடுத்து பொடிக்கலாம். வீட்டில் மதிய உணவு மீன்குழம்புக்கு தினமும் அம்மியில் மசாலா அரைக்கவேண்டும். உம்மா தறியில் கோரம்பாய் நெய்வாள். அப்போது எல்லா வீடுகளிலும் பாய் நெய்யும் தறி இருந்தது. வீட்டிலிருக்கும் பெண்கள் தறியில் பாய்நெய்து வருமானம் ஈட்டினால்தான் வயிற்றுபாடு கழியும் நிலை அப்போது.
மதிய உணவுக்கு சோறு சமைக்கும்போது, இரவுக்கும், மறுநாள் காலைக்கும் சேர்த்தே அரிசியை போட்டு வடித்துவிடுவது வழக்கம். என் வீட்டில் நள்ளிரவு பதினொன்றரை மணிக்கு மேல் தான் சோற்றில் தண்ணீர் ஊற்றி வைப்பாள் உம்மா. “பதினோரு மணிக்கு போனாலும் பீமா வீட்டில ஒரு புடி சோறும் மீன்கறியும் கிடைக்கும்” என நம்பி வருபவர்கள் உண்டு.
காலையில் காப்பிக்கு (பிரேக் பாஸ்ட்) பெரும்பாலும் கஞ்சிதான். இரவு முழுவதும் மண் பானையில் ஊறிய சம்பா அரிசி கஞ்சியுடன் அம்மியில் அரைத்த தேங்காய் சம்மந்தி அல்லது நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாயுடன், உப்பு, புளி, சில துளிகள் தேங்காய் எண்ணெய் விட்டு பிசைந்ததை தான் தொட்டுக்கொள்ள.
சுவையான கஞ்சி வயிறு நிரம்பி குளுமையாக இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் தாடி வைத்தியரின் இரண்டாம் மகன் விஜயன் மாமா தனது மகளின் திருமணத்திற்கு அழைப்பதற்காக என் சகோதரியின் மாமா மானாபிள்ளை அவர்களை அழைக்க இல்லம் தேடி வந்திருந்தார். அப்போது ஐம்பது ஆண்டுக்கு முன் உள்ளதை நினைவு கூர்ந்தார். “மானாபிள்ள மாமாக்க சைக்கிள் கடயில வேல பழகுனேன், வாரத்துல சில நாள் ஒரு ரூவா கிடைக்கும். வீட்டுக்கு போனா மாமி தயிர் ஊத்தி, மண் சட்டியில, கஞ்சியும் ஒரு பச்ச மொளவும் தருவா, வயிறு நாள் முளுக்க குளுமையா இருக்கும்” என அந்த சுவையை நினைவு கூர்ந்தார்.
இது போக உளுந்தங்கஞ்சி, பயறு கஞ்சி, சுக்கு கஞ்சி போன்றவை சூடாக அப்போது சமைத்து விளம்புபவை. என் காதர் மாமா சொல்வார் “பயறு கஞ்சியும், காண துவையலும் இருக்கு குடிக்கிதியா” என. பின்னர் அலி டாக்கிஸ் காம்பௌண்டில் சலீமா வீட்டில் பெரிய கிரைண்டர் வாங்கி மாவு அரைத்து கொடுக்க துவங்கியபோது அவ்வபோது அங்கே இட்லி, தோசைக்கு அரைத்து வாங்குவோம். 1992க்கு பின் எங்கள் வீட்டிலேயே கிரைண்டர் வந்தது. மின்சாரம் இல்லாத, கிரைண்டர் இல்லாத வீடுகளுக்கும் சில நேரம் மாவாட்டி கொடுக்கவேண்டும். பின்பு வாரத்தில் ஒரு நாளோ, இரண்டு நாளோ தான் கஞ்சி கிடைத்தது.
ரமலானில் பள்ளிவாசல்களில் சமைக்கப்படும் கஞ்சியின் சுவை அலாதியானது. நாள் முழுவதும் நோன்பிருந்து, பசித்து புசிப்பதாலும் இருக்கலாம். மணிமேடையில் உள்ள பீர்முகம்பது மாமா, கடையில் இருக்கும்போது, வடசேரி, மீனாட்சிபுரம், கலாச்சார பள்ளிகளில் நன்கொடைகள் கொடுத்து மூன்று வாளிகளில் கஞ்சி வாங்குவார். ஆறரை மணி நோன்பு திறந்தபின் மாமாவின் நண்பர்கள் சசி, ராதா கிருஷ்ணன் போத்தி, சிவா, ஜீவன், இளங்கோ, சுப்ரமணி ஐயர், மல்லன்பிள்ளை மாமா என முப்பது நாளும் கடைக்கு வந்து நோன்புகஞ்சி குடித்து செல்வார்கள். இம்முறை கப்பலில் ரமலானில் எனது இரவுணவுக்காக பத்து நாட்களுக்கு மேல் நானே நோன்பு கஞ்சி வைத்தேன்.
மும்பையில் வேலை பார்த்தபோது வார இறுதிகளில் உறவினரான அப்துல்காதர் குட்டியாப்பாவின் வீட்டிற்கு செல்வேன். இரவு உணவின் சாதம் மீதியிருந்து காலையில் கஞ்சி கேட்டால் பாத்திமா குட்டிம்மா தரவே மாட்டாள். “ஊர்ல மாப்ளக்க ஆளுகளுக்கு கஞ்சி குடுத்தான்னு எனக்கு பேரு வரதுக்காப்பா” என்பாள்.
கப்பலுக்கு வேலை தேடும் நாட்களில் கப்பலில் இருந்து இறங்கியவர்கள் நண்பர்களோடு சாந்தி பாரில் குடித்துவிட்டு இரானி ஹோட்டலில் சாப்பிட்டால் இரவுணவுக்கு சமைத்த சோறு மீதியிருக்கும். மைக்கேல் காலையில் இரண்டு ரூபாய் தந்து தயிர் வாங்கி வர சொல்வார். வட்டமாக வெட்டிய வெங்காயத்தில் எலுமிச்சை சாறு பிழிந்து, உப்பும் போட்டு குடித்தால் அன்று இரவு எட்டு மணிவரை வயிறு குளுமையாக இருக்கும்.
![]() |
நோன்பு கஞ்சி |
இப்போதெல்லாம் பெரும்பாலும் கஞ்சி கிடைப்பதே இல்லை. வீட்டில் இருவர் அல்லது மூவர் தான் இருக்கிறார்கள். வேலைக்கு போய்விட்டு வரும்போது முப்பது ரூபாயில் ஒரு பாக்கெட் மாவும், நறுக்கி பாக்கெட்டில் அடைத்த சாம்பார் மரக்கறியும் வாங்கி வந்தால் வீட்டில் இரவுணவுக்கும், காலையில் காப்பிக்கும் போதுமானதாக இருப்பது வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எளிதான அவசியமான ஒன்றுதான்.
கப்பலுக்கு வந்தபின் கஞ்சி குடிப்பது அரிதாகிவிட்டது. பாஸ்மதி அரிசியில் சமைத்த சோற்றை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்தாலும் கஞ்சியாக மாறுவதில்லை. பிலிப்பினோ பணியாளர்கள் இருக்கும் கப்பல்களில் அவர்களுக்காக சமைக்கும் சாதம் கஞ்சியாக மாறும். பிலிப்பினோக்கள் மூவேளையும் அரிசி சாதம் சாப்பிடுபவர்கள். அந்த நாட்டில் அரிசி உற்பத்தி அதிகமாக உள்ளது. இந்திய விஞ்ஞானி ஒருவர் ஐ ஆர் 8 மற்றும் வேறு பல அரிசி வகைகளை அங்கு பயிரிட்டு உற்பத்தியை பெருக்கியதில் பெரும்பங்கு வகித்தார்.
பழங்கஞ்சி எனும் உணவு பழக்கம் இப்போது இல்லை என்றே சொல்லலாம். துபாயில் பத்து திர்கம்ஸ்க்கு பழைய கஞ்சி கிடைப்பதாக விளம்பரம் ஒன்று கண்டேன்.
கடந்த முறை கப்பல் அமெரிக்கா செல்லும்முன் அடுமனை பணியாளர் ராகுல் மேஸ்திரியும், மெஸ்மேன் டானிசும் அடுமனையை சுத்தப்படுத்தும் போது மண் பானை ஒன்று குப்பையில் போட வைத்திருந்தார்கள். அதை நான் வாங்கி அறையில் பத்திரமாக வைத்திருந்தேன். பாஸ்மதி அரிசி தீரும் தருவாயில் இருந்ததால் மதிய உணவிற்கு ஒருநாள் பிலிப்பினோ அரிசியில் சோறு வடித்தார் சமையல்காரர் ராகுல். மாலையில் மண் பானையில் நீர் ஊற்றி வைத்திருந்தேன். காலையில் சுவையான பழங்கஞ்சி தயாராக இருந்தது. தூத்துக்குடியை சார்ந்த மோட்டார்மேன் லீமேன் “அண்ணே மண் பானை வீட்ல இருந்து கொண்டு வந்தியளா” எனக்கேட்டான்.
இப்போது இரு பிலிப்பினோ மூன்றாம் இன்ஜினியர்களை கப்பல் முதலாளி பயிற்சிக்காக அனுபியுள்ளார். அவர்களுக்காக தினமும் பிலிப்பினோ அரிசியில் சோறு பொங்கபடுகிறது. இன்று ஞாயிறு பிரியாணி, பிலிப்பினோக்களும் பிரியாணியை விரும்பி உண்பதால். மாலையில் சோறு நிறைய மீதியிருந்தது. மண் பானையில் நீரை ஊற்றி ரோல்லிங்கில் கவிழ்ந்து விடாமல் இருக்க இறுக கட்டி வைத்துவிட்டு வந்தேன். இரவில் கப்பலில் ஆட்டம் அதிகமாகாமல் கடலம்மா காத்துவிட்டாள். நாளை காலை உணவு எனக்கு கஞ்சியும், உப்பும், புளியும்.
நாஞ்சில் ஹமீது,
15-June-2025.
sunitashahul@gmail.com
Excellent ji we are lost childhood food items as well as golden memories of relationship between together policy of family attachment.
ReplyDeleteரொம்ப அம்மா நல்லா இருந்துச்சு தம்பி . அந்த காலத்துக்கு மறுபடியும் ஒரு டைம் டிராவல் பண்ண மாதிரி. இன்னைக்கு வரையிலுமே நம்ம வீட்டுல எல்லாம் நாங்க இங்க பழைய சோறு என்று சொல்லுவோம் இருந்துட்டே தான் இருக்கு. ரொம்ப சந்தோஷம்.
ReplyDelete~Balkis
TKM இல் வேலை பார்த்த பொழுது, ஒரு வாளி வாங்கி வைத்திருந்தேன். கஞ்சி குடிக்க ஆசைப் படும் நாட்களில் இரவு உணவுக்கு போதும் போது அதில் சாதம் வாங்கி வந்து தண்ணீர் ஊற்றி வைத்து விடுவேன். கடையில் இருந்து தயிர், வெங்காயம், பச்சை மிளகு வாங்கி வைத்து மறுநாள் காலை தயார் செய்து கஞ்சி குடிப்பேன். இப்போது அளவு சமையல் தான். அதனால் சித்தாராவிடம், பழைய சாதம் வேண்டும் நாட்களில் அரிசி அதிகமாக போட சொல்லிவிடுவேன்.
ReplyDelete~ஷேக் (ஷாகுலின் தம்பி)
கஞ்சியின் கதை நன்றாய் இருந்தது. அப்போதெல்லாம் நம் வீட்டிலும் நிறைய பேர் இருப்போம். எதிர்பாரா விருந்துகளும் இருக்கும். என் மாமாக்கள் எல்லோரும் லாலாப்பேட்டையில் இருந்தார்கள். பொற்கொல்லர்கள். ஆனால் எல்லாவற்;றிற்கும் திருச்சி கம்மாளத்தெருவுக்கு வந்துதான் ஆகவேண்டும். அப்படி வரும்போது சாப்பிட வீட்டிற்கு வந்துவிடுவார்கள். தர்மக்காரர்கள், ஓடும்பிள்ளை என்று ஒரு மக்கள் கல்லறை வேலை செய்பவர்கள். கிறிஸ்தவ இறப்பு ஏற்பட்டால் சொந்தக்காரர்கள் வீட்டில் போய் சொல்லிவிட்டு வருவார்கள். அவர்களும் தினமும் சாப்பாடு வாங்க வருவார்கள். இவர்களுக்கெல்லாம் போகவும் அடுத்தநாள் பழையது இருக்கும். எப்போதும் ஆத்துமீன் குழம்பும் கொடிஅடுப்பில் கொதித்துக்கொண்டே சுண்டிப்போய் இருக்கும். எல்லாம் சேர்த்து சாப்பிட அவ்வளவு ருசியாய் இருக்கும். பிலிப்பினோ அரிசி என்றால் தண்ணீர் ஊற்றி வடிக்காமல் அப்படியே ஆவியில் வேவைப்பதா?ஸ்டிக்கி ரைஸ் என்று சொல்வார்களே அதுவா? ஆனா கப்பல்ல போயும் பழஞ்சி, முருங்கைசாம்பார், நோன்புக்கஞ்சி எல்லாம் சாப்பிடுவது நீங்களாதான் இருப்பீங்க. நேற்றைய கட்டுரையில் ஒரு கிளீன் ஷேவ் போட்டோ இருந்ததே. செயின் ஸ்மோக்கர் பத்திசாபின் ஈரல் முழுவதும் கெட்டுஇருக்கும்போல. செம்பலுவான்னா என்னன்னு அப்புறம் சொல்றேன்னு ஒருநாள் சொன்னீங்க. இன்னும் சொல்லல பார்த்துக்கங்க
ReplyDelete~டெய்சி
Yes
பிலிப்பினோ ரைஸ்
அந்த sticky
ரைஸ் தான்
வடிக்காமல் பொங்குவது
செம்பலுவா
முழு ரெசிபியும் ஒரு கட்டுரையாக எழுதும் உத்தேசம் உள்ளது.
பத்தி சாப்
அடுத்த கட்டுரையில் வருவார்.
கிளின் சேவ் போட்டோ
கப்பல்ல தானே எல்லா வேசமும்
போட முடியும்.
நீண்ட முடி தாடியுடன் ஒரு முறை ஜப்பான் விமான நிலையத்தில் விமானம் ஏறும் முன் தடுத்துவிட்டாள்
பாதுகாப்பு பெண் அதிகாரி.
பின்னர் வந்த ஆண் அதிகாரி பாஸ்போர்ட்டை பார்த்துவிட்டு அனுமதித்தார்.
~ஷாகுல் ஹமீது
"கஞ்சி" என்பது ஒரு உணவின் மேல் எழுதப்பட்ட நினைவுக்கவிதை. சமைத்த உணவின் வாசனைவிடவும், அந்த உணவை சமைத்தவையின் கைசுவை முக்கியம் என்பதை இது உணர்த்துகிறது. நாஞ்சில் ஹமீது தனது எழுத்தின் வழியே உணவுக்கலைக்குள் வாழ்கையின் முழுமையை நமக்கு பரிமாறுகிறார்
ReplyDelete