Sunday 6 August 2023

கப்பல் காரனின் தொலைபேசி

               

போர்சிகீசின் வாஸ்கோடகாமா காலத்தில் தகவல் தொடர்பு ஏதும் இருந்திருக்காது.அரபிகடலிலிருந்து  நிச்சயமாக புறா எதையும் பறக்க விட்டிருக்கமாட்டார்.

  கப்பல் காரன் அவ்வளவு எளிதாக நினைத்த போது போனை எடுத்து பட்டனை தட்டி விரும்பியவர்களுடன் பேசி விட முடியாது.அவனுக்கு வேலையில்லாத ஓய்வு பொழுதில்,ஊரில் பகலாக இருக்கவேண்டும், மனைவியின்  சீரியல் நேரமாக இருக்ககூடாது,முக்கியமாக சிக்னல் இருக்கவேண்டும் ................இப்படி பலதையும் தாண்டித்தான் அவன் பேச முடியும். அதை பறித்தான் இந்த கட்டுரை.

  எனது முதல் கப்பல்பணிக்கு  2005ஆண்டு  ஜூலை மாதம் பன்னிரெண்டாம் தேதி மும்பையிலிருந்து துபாய்க்கு பயணமானேன்.  அங்கு இறங்கியபின்விமானநிலையத்திலிருந்து அழைத்து சென்ற முகவரிடம் மொபைல் போனை வாங்கி துபாயிலிருந்த நெருங்கிய உறவினர் ஒருவருக்கு அழைத்து பத்திரமாக நான் தரையிறங்கிவிட்டதை வீட்டில் சொல்ல சொன்னேன்.

   மதியம் கப்பலுக்கு வந்தபின் மாலை பணி முடிந்து இரவு  துறைமுகத்தின் உள்ளே இருந்த (pco ) public call office ஒன்றை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்தேன்.நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த சுனிதா எனது குரல் கேட்பதற்காக நீண்ட நேரமாக காத்திருந்ததாக சொன்னாள்.

  கப்பல் துபாயில் சரக்குகளை ஏற்றி ஈராக்கின் உம்காசர் துறைமுகப்பில் இறக்குவோம்.இரண்டரை நாள் பயணம், சரக்கு இறக்க இரு தினங்கள் எப்படி தாமதமானாலும் எட்டு முதல் பத்து நாட்களுக்குள் மீண்டும் துபாய் போர்ட் ரசீத் துறைமுகம். துபாயிலிருந்து புறப்பட்டு திரும்பி துபாய் வரும்வரை வீட்டோடு ஒரு தொடர்பும் இருக்காது.

  துபாய் வந்தால் கப்பல் சில தினங்கள் நிற்கும். தினமும் போனில் பேசிவிட முடியாது.பத்து அமெரிக்க டாலருக்கு தொலைப்பேசி அட்டை வாங்கினால் நாற்பது நிமிடங்கள் மட்டுமே பேச முடியும் என நினைக்கிறேன்.

   சிலரிடம் மொபைல் போன் இருந்தது. மூன்றாம் இஞ்சினியர் பிரகாஷ் சொன்னார் “மொபைல் போன் வாங்கி ரீ சார்ஜ் பண்ணுனா கட்டுபடியாகாது”என. எனக்கு அப்போது முன்னூறு அமெரிக்க டாலர்கள் மட்டுமே சம்பளம்.மாதம் இரண்டு போன் அட்டைகள் வாங்கி அதற்குள் பேசிக்கொள்வேன்.

   சுனிதாவுக்கு கடிதம் எழுதுவேன் துபாய் வரும்போது அஞ்சல் பெட்டியில் சேர்த்தால் ஒரு வாரத்தில் அங்கு கிடைக்கும்.அவள் மெதுவாக பதில் எழுதி அனுப்பினால் பத்து நாட்களுக்குள் எனக்கு கிடைக்கும்.கப்பல் ஈராக்கை நோக்கி புறப்பட்டுவிட்டால் திரும்பி துபாய் வந்தபின் தான் சுனிதாவின் கடிதம் கையில் கிடைக்கும்.போனுக்கும் கடிதத்திற்கும் நிறைய வித்தியாசம்.மனதுக்கு தோன்றும் போதெல்லாம் கடிதத்தை படித்து ஆசுவாசபடுத்தி கொள்ளலாம் அடுத்த கடிதம் வரும் வரை அந்த இன்பம் நீளும். ஐந்து ரூபாய் ஸ்டாம்ப் கையில் வைத்திருப்பேன் யாராவது ஊருக்கு போனால் அவசரமாக ஒரு கடிதம் எழுதி உறையில் போட்டு ஸ்டாம்ப் ஒட்டி கொடுத்தனுப்புவேன்.

 துபாயில் சிம் கார்டு மட்டும் நூற்றி அறுபத்தி ஐந்து திர்கம் அப்போது, ஐம்பத்தி ஐந்து அமெரிக்க டாலருக்கு சமம்.ஐந்து மாதங்களுக்குப்பின் அங்கு பணிபுரிந்துகொண்டிருந்த எனது உம்மாவின் தங்கை மகன் தம்பி சாதிக் எனக்கொரு சிம் கார்டும் அப்போது சந்தையில் விற்பனையின் உச்சத்திலிருந்த நோக்கியா 1100 போனும் வாங்கி தந்தான்.(அந்த பணத்தை கடந்த 2023 மார்ச் மாதம் தான் திரும்ப கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது).

  2006 ஆம் ஆண்டு தற்போது பணியிலிருக்கும் நிறுவனத்தில் இணைந்து முதல் கப்பல் பிலாண்டர். சிங்கப்பூர் சென்று கப்பல் ஏறினேன்.மாலையில் அங்கிருந்த பணியாளரிடம் கேட்டேன் “வீட்டுக்கு போன் பண்ணனும் எப்படி னு” என.அவர் சொன்னார். “காப்டன் கப்பலில் இல்லை வெளியே போயிருக்கிறார்,அவர் வந்தால் தான் கார்டு கிடைக்கும்”என .


 வேறொருவர் தன்னிடமிருந்த போனை தந்தார் மூன்று நிமிடம் வீட்டுக்கு பேச சொன்னார். உம்மாவுக்கும்,சுனிதாவுக்கும் அழைத்து பேசினேன்.கப்பல் கரையில் நின்றுகொண்டிருந்ததால் சிங்கப்பூர் சிம் வைத்திருந்த பலரும் போனில் பேசிக்கொண்டிருந்தனர்.கப்பலில் செயற்கைக்கோள் இணைப்பு போன் இருந்தது. பதினெட்டு அமெரிக்க டாலரில் இந்தியாவுக்கு சனி,ஞாயிறு  வார நாட்களில் (non peak hours) னான் பீக் நேரங்களில் முப்பத்தியிரண்டு நிமிடங்கள் பேச முடியும். வார நாட்கள் மற்றும் பீக்(peak hours) நேரங்களில் பேசினால் இருபதுக்கும் குறைவான நிமிடங்கள் மட்டுமே கிடைக்கும்.

   சனி,அல்லது ஞாயிறில் போனில் எண்ணை அழுத்திவிட்டு கடிகாரத்தில் டைமர் செட் பண்ணி இணைப்பு கிடைத்தும் நிமிடங்களை பார்த்துக்கொண்டே பேசுவேன். பூஜ்யம் முதல் ஐம்பத்தி ஒன்பது வினாடிகள் வரை ஒரு நிமிட கணக்கு.நான் பேசி கொஞ்சம் தாமதமாகவே எதிர் முனையில் கேட்கும். அதன் பின்  அவர்கள் பேசுவதை புரிந்துகொண்டு பதிலளிக்கவேண்டும்.

  பணியில் இணைந்து இரண்டு தொலைப்பேசி அட்டைகள் தீர்ந்து காப்டனிடம் மேலுமொரு தொலைப்பேசி அட்டை வாங்க சென்றபோது “ இந்த மாதத்தில் இது மூன்றாவது போன் அட்டை,யாரிடம் பேசுகிறாய்”எனக்கேட்டார். 

 “மனைவியிடம்” என்றேன்.

“கல்யாணம் ஆனவனா நீ”

“எட்டு மாத குழந்தை இருக்கிறது”என்றேன்.

“சின்ன குழந்தை” என சொல்லிவிட்டு தொலைப்பேசி அட்டையை தந்தார். அப்போது பயிற்சி பிட்டராக அறுநூறு டாலர் மட்டுமே சம்பளம் எனக்கு அதனால் அவர் அப்படி கேட்டார்.

 அந்த கப்பலிலும் நேரம் கிடைக்கும்போது அவ்வப்போது கடிதம் எழுதி ஊருக்கு செல்பவர்களிடம் கொடுத்தனுப்பி உள்ளேன்.இம்முறை கப்பலுக்கு புறப்படும்போது சுனிதாவிடமிருந்து தவறுதலாக அந்த பழைய கடிதம்  என் கைக்கு வந்திருக்கிறது சில தினங்களுக்குமுன் அந்த கடித்ததை படித்தேன். நினைவிலிருந்து மறந்து போன பலவும் காட்சியானது.

2006 இல் கப்பலுக்கு போகும் முன் சென்னை . கறை படிந்த பனியன் இதுதான்


  உடல் நலமில்லாமல் இருந்தது,சுனிதாவின் தங்கையின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது,சலவை இயந்திரத்தில் கறுப்பு ஜீன்ஸ் பாண்டுடன் எனக்கு பிடித்த வெள்ளை டி சர்ட்டை போட்டு துவைத்ததில் மீண்டும் அந்த டி ஷர்ட் அணியமுடியாமல் போனது என பலவும் அந்த கடிதத்தில் இருந்தது.


நகோயா ரயில் நிலையம் ஜப்பான்


ஜப்பானில் கப்பல் கரை நின்றபோது பணி முடிந்து ஓய்வுநேரத்தில் முதன்மை அதிகாரியிடம் அனுமதிபெற்று வெளியே செல்பவருடன் இணைந்து  தொலைப்பேசி அட்டை வாங்கி நகோயா  ரயில் நிலையம் சென்று பேசினேன். அந்த தொலைபேசியில் ஜப்பானின் ஒரு வட்ட நாணயத்தை போட்டால் தான் வேலை செய்யும்.ஜப்பானிய மொழியில் அது சொல்லும் கணினி குரல்பதிவை புரியாமலே,தொலைப்பேசி அட்டை எண்ணையும்,இந்தியாவின் கோட்,முட்டம் உள்ளூர் தொலைப்பேசி நிலைய எண்,பின்னர் தொலைப்பேசி எண்ணை அழுத்தினால் தொடர்பு கிடைக்கும்.

 அதற்கடுத்த ஆண்டு ஸ்ட்ரெய்ட்ஸ் வென்சர் எனும்   கப்பல் சிங்கப்பூர்,மலேசியா,இந்தோனேசியா,தாய்லாந்தை சுற்றி,சுற்றியே  வந்தது.மலேசிய,இந்தோனேசிய சிம் வாங்கியிருந்தேன்.ஆறு மாதமும் கப்பலில் அதிக விலை கொடுத்து செயற்கைக்கோள் தொலைப்பேசி அட்டை வாங்கவே இல்லை.கையிலிருந்த மொபைல் மூலம் கரையிலிருக்கும் போதும் கரையொட்டிய பயணத்திலும் அழைக்க முடிந்தது. மலப்புறம் அலெக்ஸ்சாண்டர் பத்தி சாபாக இருந்தார். “வீட்டுலே விளிச்சா சாரே” எனக்கேட்டால். “ஓளு இப்போ சீரியல் காணுந்த சமயம்”என்பார்.

  கப்பல் காரன் நினைத்த நேரத்தில் அழைத்து பேசிவிட முடியாது.கப்பலின் மாறிக்கொண்டே இருக்கும் கடிகாரம்,பணி முடிந்து ஓய்வு நேரத்தில் எதிர்முனையில் நள்ளிரவாக இல்லாமல் இருக்கவேண்டும்.முக்கியமாக சிக்னல் இருக்கவேண்டும் அதைவிட  பேச நினைக்கும் நபர் டிவி சீரியல் பார்க்காத நேரமாக இருந்தால் கப்பல் காரனின் அழைப்பு கிடைக்கும்.

   2008 ஆண்டு பணிபுரிந்த கப்பல் ஐஜின் தென்னமெரிக்காவின்(சிலி,உருகுவே,பிரேசில்,கொலம்பியா,ஈகுவாடர்,ஹோண்டருஸ்,நிரகாவுவா,பனாமா,குவாத்திமாலா,மெக்ஸிகோ என  அங்கேயே ஆறு மாதம் சுற்றிகொண்டிருந்தது.அந்த கப்பலில் மார்லிங்க் ஏனும் செயக்கைக்கோள் தொலைபேசி அட்டை முத்தியாறு டாலரில் ஐம்பத்தியிரண்டு நிமிடங்கள் கிடைக்கும். சனி,ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் அல்லது னான்  பீக் ஹவர்ஸ்ல் மட்டும்.

  வாரம் தோறும் ஞாயிறுகளில் எனது பணிஓய்வில் இந்தியாவில் பகல் வேளையாக இருக்கும்போது அதிக பட்சமாக ஐந்து நிமிடங்கள் பேசுவேன்.சுனிதா சொன்னாள் “சண்டே டு சண்டே ரொம்ப லாங்,இடையில ஒரு போன் பண்ணி ஹாய்,பை மட்டும் சொல்லுங்கோ”என்றாள். அவள் சொன்னதற்கிணங்க இடையில் புதன்கிழமை ஒரு நிமிட அழைப்பு “அஸ்ஸலாமு அலைக்கும்,சொகந்தானா,நான் நல்லா இருக்கேன்” என மட்டும். “உம்மா சுனிதாவிடம் அவன் எப்பவாவது   கூப்புடுவான்,உடனே வெச்சிருவான்” என.

 பணியாளர்களுக்கான ஈ மெயில் கப்பலுக்கு வரும் பொதுவான ஒரு கணிணியில் காப்டன் அதை அனுப்புவார்.நிறைய நேரங்களில் அது திறக்கபட்டிருக்கும்.நமது கடிதங்கள் வேறு நபர்களால் படிக்க சாத்தியம் இருப்பதால் நலம் விசாரிப்பை தவிர வேறேதும் மின்னஞ்சல்களில் இருக்காது.

 அதிக பட்சமாக நண்பர் அசோக் மாதத்தில் 12 மின்னஞ்சல் வரை அனுப்பியுள்ளார்.

  அதன் பின் பணி செய்த கப்பல்களில் பணியில் இணைய அல்லது இறங்க பணிகாலத்திலும் சிங்கப்பூர் அதிகமாக செல்லும் ஊராக இருந்ததால்  அந்நாட்டு(ஸ்டார் ஹப்) சிம் கார்டு ஒன்று வாங்கி சிங்கப்பூர் நண்பர் மணி மூலம் அவ்வபோது ரீ சார்ஜ் செய்து வைத்திருந்தேன்.

 சிங்கபூருக்கு சென்றாலோ அவ்வழியாக பயணித்தாலோ வீட்டிற்கும் நண்பர்களுக்கும் அழைக்கலாம் குறைந்த கட்டணத்தில்.ஆஸ்திரேலிய சென்றால் பத்து டாலரில் சிம் ஒன்றை வாங்கி நிறைய நேரம் இந்தியாவுக்கு பேசலாம்.பத்து டாலரும் தீர்ந்து விட்டால் இரண்டு டாலர் கடனாக நெட்வொர்க் கம்பனி தரும் மறுமுறை ரீ சார்ஜ் செய்யும்போது அதை பிடித்தம் செய்வார்கள்.கப்பல் காரனுக்கு கப்பல் விட்டதும் மறுமுறை அங்கு வருவது உறுதி கிடையாது.

 2010 ஆம் ஆண்டுக்குப்பின் பணி செய்த கப்பல்கள் அமெரிக்காவுக்கு அடிக்கடி செல்ல தொடங்கியது. டி மொபைல் சிம் கார்டு ஒன்று வாங்கி மதர் இந்தியா காலிங் கார்டும் ஒன்று வாங்கி வைத்துகொண்டு அதிகாலை இரண்டு மணிக்கு அழைப்பான் வைத்து எழுந்து வீட்டுக்கும்,நண்பர்களுக்கும்  பேசும் கப்பல்காரன்கள் ஏராளம். பகல் பொழுது இந்தியாவில் இரவாகியிருக்கும்.





அமெரிக்காவில் ஐந்து டாலரில் ஆயிரம் நிமிடங்கள்,அன்லிமிடெட் கார்டுகள் தாராளமாக கிடைக்கும். ஆந்திராவின் சூரிய நாராயணா முப்பது டாலரில் ஒரு மாதத்திற்கு அன்லிமிடெட் கார்டு ஒன்று வாங்கி மனைவியை தூங்க விடாமல் பேசிக்கொண்டே இருந்தான்.

 எட்டு நாட்களுக்குப்பின் அமைதியாகி போனான் சூரிய நாராயணா.என்னவென்று  விசாரித்தபோது அதிகமான உரையாடலில் வாக்குவாதம் முற்றி மனைவியிடம் சண்டையாகி விட்டது.இனிமே பேசக்கூடாது என சொல்லிவிட்டாள் எனும் செய்தி கிடைத்தது. 

  துறைமுகங்களில் தொலைப்பேசி அட்டைகள்,சிம் கார்டுகள் விற்பனைக்கு கொண்டுவருவார்கள்.எல்லோருக்கும் கப்பல் காரன் கடலிலிருந்து அமெரிக்க டாலரை வலைவீசி அள்ளுகிறான் எனும் நினைப்பு.எப்போதும் இரட்டிப்பு பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

  2011 ஆம் ஆண்டுகளில் இணையம் அதிகமாக பயன்பாட்டுக்கு வந்த நேரம் கப்பல்களிலும் இணையம் வரத்தொடங்கியிருந்தது.துறைமுகங்களில் சில வேளைகளில் இலவச இணைய சேவை கிடைத்தது.கப்பல் காரர்கள் பெரும்பாலானவர்களுக்கு முகநூல் கணக்கு இருந்தது.தாய்லாந்தின் இரண்டாம் இஞ்சினியர் தனது முகநூல் பக்கத்தில் காட்டிய படங்களை பார்த்து உளக்கிளர்ச்சியடைந்து எனக்கும் ஒரு முகநூல் கணக்கு ஒன்று துவங்கி வைத்தேன்.

    துறைமுகங்களில் மிககுறைந்த விலையில் அல்லது இலவச  இணைய அழைப்புகள்  கிடைக்க தொடங்கியிருந்தது.கப்பல்களிலும் எட்டு டாலரில் நீண்ட நேரம் பேசும் வி சாட் இணைய அட்டைகள் கிடைக்கதொடங்கியிருந்தது.

 2013 இல் தில்லியின் பயிற்சி இஞ்சினியர் சுமித் “ஷாகுல் பாய் வாட்ஸ் அப் ரக்கோ” என சொல்லி எனது போனில் அதை பதிவிறக்கம் செய்து தந்தார். சுனிதாவிடமும் வாட்ஸ் அப் பதிவிறக்கம் செய்ய சொல்லி துறைமுகப்பில் இருக்கும்போது இணையம் கிடைத்தால் படங்கள்,தகவல்கள் அனுப்புதொடங்கினேன்.

மேலும் 

No comments:

Post a Comment