Wednesday, 11 January 2023

செங்கால் நாரை விருது

 

சூழியல் கட்டுரைக்கு விருது.

செங்கால் நாரை அமைப்பு கடந்த நவம்பர் மாதம்(2022) கூழியல் குறித்து ஒரு கட்டுரை போட்டியை அறிவித்தது தமிழ் விக்கி தூரன் விருது பெற்ற கரசூர் பத்மபாரதி அந்த அறிவிப்பை எனக்கு அனுப்பி தந்தார். அப்போது நான் கப்பலில் இருந்தேன்.பணிக்கு இடையே கிடைத்த ஓய்வு நேரங்களில் கடல் மாசு குறித்து  நீலக்கடல் எனும் கட்டுரையை இருதினங்களில் எழுதி முடித்தேன்.



  கப்பல் காரன் நாட்குறிப்புகளின்  இணையாசிரியர் கணேசிடம்,பிழைகள் பார்த்து தரும்படி கோரினேன்.அவரது பணிகளுக்கிடையில்  அதை மெய்ப்பு பார்த்து தந்தவர்.  ‘பூமியின் சுவாசப்ப்பை’ என தலைப்பை மட்டும் மாற்றியுள்ளேன், இதிலுள்ள தகவல்கள் ஆச்சரியமாக இருக்கிறது,என் மகள்களுக்கு வாசித்து காண்பித்தேன் என்றார். ‘பூமியின் சுவாசப்பை’ பொருத்தமான தலைப்புதான், நாஞ்சில் ஹமீது எனும் பெயரில் அதையே போட்டிக்கு அனுப்பினேன்.

   டிசம்பர் மாத இறுதியில் போட்டி முடிவுகள் வந்ததபோது மூத்த சகோதரி தாவரவியல் பேராசிரியை லோகமாதேவி எழுதிய ‘தாவரகுருடு’ முதல் பரிசும் எனது ‘பூமியின் சுவாசப்பை’ கட்டுரை நான்காவது பரிசுக்கும் தேர்வாகியிருந்தது. போட்டிக்கு வந்த நூறுக்கணக்கான கட்டுரைகளில் பதிமூன்று கட்டுரைகளை செங்கால் நாரை பரிசுக்கு தேர்வு செய்தது.

 தேர்வான பதிமூன்று கட்டுரைகளையும் சென்னை புத்தக கண்காட்சியில்  புத்தகமாக வெளியிட்டு,ஒரு எளிய விருது வழங்கும் விழாவையும் நடத்துகிறார்கள்.

  நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்று பரிசை பெற்றுவர இரு இரவுகள் பயணம் செய்ய இயலாத சூழல். எனவே என் சார்பாக இலக்கிய வாசகரும்,விமர்சகருமான  தம்பி விக்னேஷ் ஹரிகரனிடம் பரிசை பெற்றுகொள்ள வேண்டினேன். பரிசு பெற்ற கட்டுரைகள் aramonline.in இணைய இதழில் வெளிவரும். எனது கட்டுரையை இன்று மாலை விருது விழாவுக்குப்பின் இந்த தளத்தில் பிரசுரிப்பேன்.



செங்கால் நாரை விருது விழா ,

இடம் சென்னை புத்தக கண்காட்சி,

 YMCA- நந்தனம்,

காக்கை கூடு அரங்கம்,

எண் 589,590. மாலை நான்கு முப்பது மணி.

இது எனக்கு முதல் பரிசு.

 

ஷாகுல் ஹமீது,

12-01-2023

Sunday, 1 January 2023

பயண படியும்,சம்பள பாக்கியும்

 


  கப்பல் காரன் டைரி 

   டீலக்ஸ் புட்வேயர்ஸ்  நாகர்கோவிலின் மைய பகுதியான மணிக்கூண்டு அருகே,எழுத்தாளுமை சுந்தர ராமசியின் சுதர்சன் ஜவுளி கடைக்கு எதிரில் உள்ள ஆசாத் ஹோட்டல் அருகில் இருக்கும் நூறு ஆண்டுகளை கடந்த செருப்புகடை. அனைத்து வகை பெல்ட்டுகளும் இங்கே கிடைக்கும்.

  நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது வார இறுதி பள்ளிநாட்களில் கடைக்கு வருவேன். ஐ டி ஐ படிப்பு முடியும் வரை பகுதி நேரமாகவும் பின்னர் மும்பைக்கு வேலை தேடி செல்வது வரை முழு நேரமாகவும் கடையில் வியாபாரம் பார்ப்பேன். அதன் முதலாளி பீர்ம்கம்மது எனது தாய் பீமாவின் சிறிய தந்தையின் மகன். எனக்கு மாமா .

   பாம்பே,மெட்ராஸ்,மதுரை போன்ற இடங்களிருந்து சரக்கு வரும் பார்சல்களை பிரித்து,சரிபார்ர்த்து கடையில் விற்பனைக்கு அடுக்குவோம்.சில நேரங்களில் ஒன்றோ,இரண்டோ ஜோடி செருப்புகள் அல்லது பெல்ட்டுகள் குறைவாக இருக்கும்.அதை மாமாவிடம் சொல்வேன்.குறித்து வைத்துகொண்டு  சரக்கை அனுப்பிய நிறுவனத்துக்கு சொல்லி அந்த தொகையை கழித்து கொள்வதாக சொல்வார்.

  “மருமொனே குறஞ்சா சொல்லி பைசாய களிக்கணும்,கூட இருந்தா”என கேட்பார். ஒன்றும் தெரியாமல் விழிப்பேன்.

 கூடுதலாக ஒரு ஜோடி இருந்தாலும் அதை அனுப்பிய நிறுவனத்துக்கு சொல்லி அதற்கான பணத்தை கொடுக்கவேண்டும் என்பார்.

“நம்மோ யாரையும் ஏமாத்த கூடாது,நம்மள மத்தவன் ஏமாத்துனா,நம்மோ ஒண்ணும் செய்யாண்டாம் அல்லாஹ் பாத்துகிடுவான் அவனை” என பீர்முகம்மது மாமா சொல்வார்.இது போல் தொண்ணூறுகளில் அவரிடம் கற்றது நிறைய.

   நான் பணிபுரியம் கப்பல் நிறுவனம் நூற்றியறுபது  ஆண்டுகளுக்கும் மேல்  பழமையானது  நார்வேயின் ஒஸ்லோ நகரில் தலைமை அலுவலகமும் . உலகம் முழுவதும் கிளைகளும் உண்டு .கப்பல் துறைக்கு தேவையான அனைத்து சேவைகளும் வழங்குகிறது.

   பணியாளர்களாகிய எங்களுக்கு இந்நிறுவனம் எப்போதுமே சம்பள பாக்கி வைத்தது இல்லை. இந்த நிறுவனத்தின் மலேசிய அலுவலகம் இயக்கும் கப்பல்களில் நான் பணிபுரிகிறேன்.மலேசியாவிலிருந்து மாதம் தோறும் முப்பத்தியிரண்டு நாடுகளை சேர்ந்த நான்காயிரம் பேருக்கு சம்பளம் அவரவர்  வங்கிகணக்கில் மாத இறுதியில் மிக சரியாக அனுப்பபடுகிறது.

 கப்பலில் பணிக்காக இணையும்போது.இந்தியாவிலிருந்து சர்வதேச விமானத்தில் ஏறும் நாள் முதல் சம்பளம் கணக்கிட்டு வழங்கப்படும்.பணியில் இணைவதற்காக சென்று ஏதாவது காரணங்களினால் கப்பல் துறைமுகம் வருவது தாமதமாகி விடுதியில் தங்கியிருந்தால் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை “மீட்டர் ஆன்”என்பார்கள். மூன்று வருடங்களுக்கு முன் இதை மாற்றி கப்பலில் பணியில் இணையும் நாள் முதல் சம்பளமும்,விமானத்தில் பயணிக்கும் நாளுக்கும்,விடுதியறையில் தங்கியிருக்கும் நாட்களுக்கு பயணபடியும் என மலேசிய அதிகாரி ஒருவர் மாற்றிவிட்டார்.அப்போது ஐடியா மணி சொன்னார் “வெள்ளக்காரன் கொஞ்சம் பாத்து,பாராம தருவான்,இவனுவோ மாத்திட்டானுவோ”என .

  நான் கடந்த 2022இல் ஏப்ரல் பதினைந்தாம் தேதி பனாமா நாட்டுக்கு சென்று கப்பலில் பணியில் இணைந்தேன்.பதிமூன்றாம் தேதி இந்தியாவிலிருந்து விமானம்.

மும்பை விமான நிலையம் 


   ஏப்ரல் மாத இறுதியில் எனது சம்பள கணக்கு வந்தது  பதினைந்தாம் தேதி முதல் சம்பளமும், பதினான்காம் தேதிக்கு பயணபடியும் கணக்கிடப்பட்டிருந்தது. நான் இந்தியாவிலிருந்து பதிமூன்றாம் தேதி இரவு எட்டு மணிக்கு விமானம் ஏறியதால் எனக்கு வரவேண்டிய ஒருநாள் பயண படி கணக்கில் வரவில்லை.எனது ஒரு நாள் பயண படி இருபத்தி நான்கு அமெரிக்க டாலர்கள்.

சத்ரபதி சிவாஜி  விமான நிலையம் 


 காப்டனை சென்று சந்தித்து விசயத்தை சொன்னேன்.அவர் என்னை குழப்பி உனக்கு ஒருநாள் தான் பயணப்படி என்றார். அவரிடம் தெளிவாக விளக்கி எனது பணி ஒப்பந்தம் பதிமூன்றாம் தேதி முதல் என சொன்னேன்.எனது ஒப்பந்த நகலை நோக்கியபின். “மலேசிய அலுவலகத்திற்கு மெயில் அனுப்புகிறேன் காப்டன் நிதின் தவறாக கண்க்கிட்டுவிட்டார் ஒரு நாள் விடுபட்டுள்ளது”என்றார் காப்டன் பிர்தௌஸ். அவர் என்னுடன் பணியில்  பனாமாவில் இணைந்தவர். நாங்கள் பணியில் இணைந்த பத்து நாட்களுக்குப்பின் கப்பலில் இருந்த காப்டன் நிதின் விடுமுறைக்கு சென்றுவிட்டார்.

பணியில் இணைய கப்பலுக்குள் ஏறுவது



சில தினங்களுக்கு பின் காப்டன் பிர்தௌஸிடம் கேட்டேன் “எனது ஒருநாள் பயண படி குறித்து மலேசிய அலுவலகம் ஏதாவது உறுதி செய்ததா? என. “நோ மெசேஜ்” என்றார்.

 மே,ஜூன்,ஜூலை மாதத்திலும் எனது ஒரு நாள் பயண படி குறித்து எந்த தகவலும் ஏதும் வரவில்லை..ஆகஸ்ட் பதினெட்டாம் தேதி காப்டன் பிர்தௌஸ் விடுமுறைக்கு  சென்றார். சிம்லாவை சார்ந்த காப்டன் பிபின் அவரை விடுவித்தார்.காப்டன் பிர்தௌஸ்  ஊருக்கு போகும் முன் அவரிடம் கேட்டபோது உனது பயனபடிக்காக பலமுறை மின்னஞ்சல் அனுப்பினேன் கோலாலம்பூரிலிருந்து பதில் வரவில்லை என பதிலிளித்தார்.

. காப்டன் பிபின் வந்த சில தினங்களில் அவரை சந்தித்து எனது ஒருநாள் பயண படி குறித்து விளக்கி ஆவணங்கள் காட்டினேன். “இது ஒரு சின்ன விஷயம்,ஏன் லாஸ்ட் காப்டன் இத செய்யல்ல” என கடிந்தவராய் கணினியில் தட்டச்சிவிட்டு. “இன்னா பாரு அனுப்பியாச்சி”என்றார்.

   மறுநாள் கோலாலம்பூர் அனுப்பிய மின்னஞ்சலை எனக்கு அனுப்பியிருந்தார்.அதில் சர்வதேச விமான பயணம் தொடங்கும் நாள் முதல்தான் பயண படி கிடைக்கும் பதினைந்தாம் தேதி பணியில் இணைந்தநாள் பாதினான்காம் தேதிக்கு பயண படி என. அப்போது என்னுடன் பணியில் இணைந்த இந்தியர் இருவருக்கு பதினான்காம் தேதி விமானம். எனக்கு பதிமூன்றாம் தேதி இரவு எட்டுமணிக்கு மும்பையிலிருந்து விமானம்.துபாய்,இஸ்தான்புல் வழியாக பனாமா சென்ற விமான சீட்டை காப்டனுக்கு அனுப்பிவிட்டு அவரை நேரில் சந்தித்தேன்.

துபாய் விமான நிலையம் 

  
இஸ்தான்புல்

“இட்ஸ் கிளியர் ப்ளீஸ் அப்ரூவ்”என அவர் அனுப்பியதை கணினி திரையில் காண்பித்தார்.பின்னர் சந்திக்கும்போதெல்லாம் பதிலேதும் இல்லை என்பார். அக்டோபர் மாதத்தில் என்னிடம் ஏழு முறை  நினைவூட்டி மின்னஞ்சல் அனுப்பியதையும்,வாட்ஸ் அப்பில் அனுப்பியதையும் காட்டினார்.அக்டோபர் பத்தாம் தேதி காப்டன் பிபின் ஜமைக்காவிலிருந்து ஊருக்கு சென்றார்.

 புதிதாய் வந்தவர் கொரியாவின் கிம்.ஆங்கிலத்தில் எழுத ஒரு கைஆள் வேணும்.சொல்ல வேண்டியதை மிக மெதுவாக சொல்லி புரிய வைக்க வேண்டும். அவரிடமும் முதலிலிருந்து தொடங்கி விசயத்தை புரியவைத்துவிட்டேன். முன்பு போல் கோலாலம்பூர் பதிலேதும் அனுப்பவில்லை.

 மீண்டும் கேட்டபோது உனது முகவரை கேட்டு பெற்றுகொள் என சொன்னார்.மும்பை அலுவலக அதிகாரி தர்சனா பகத்துக்கு விரிவாக எழுதி அனுப்பினேன்.பதிலேதும் வரவில்லை.

 சில தினங்களுக்குப்பின் மும்பை அலுவலகத்தின் தலைமை  அதிகாரி காப்டன் டி சில்வாவுக்கு எழுதினேன். அதற்கு தர்சனாவிடமிருந்து பதில் வந்தது. கே எல் ஆபிசுக்கு எல்லாம் அனுப்பிவிட்டேன் காப்டனிடம் கேள் இல்லையெனில் எனக்கு மீண்டும் எழுது என இருந்தது.

காப்டன் கிம் என்னிடம் “உனக்கு மெசஜ் இருக்கிறது” என சொல்லி நான் தர்சனாவுக்கு அனுப்பிய மின்னஞ்சலின்  அச்சுபிரதியை  தந்தார். “ஸார் இது நான் பாம்பே ஆபீஸுக்கு அனுப்பினது” என்றேன்.கண்ணாடியை போட்டு பார்த்துவிட்டு,உனக்கு அனுப்புனத எனக்கும் பார்வர்ட் பண்ணிருக்கு” என சிரித்தார்.

  என்னுடன் இருந்த பிலிப்பினோ எரிக் “சின்ன பைசா இத ஏன் ஆபீஸ் தரமாட்டேங்கிறது” என சொல்லி சிரித்தான். கோவாவின் பெர்னாண்டோ  “அத நீ மறந்துரு உனக்கு கிடைக்காது” என்றான்.

“அத எப்புடி நான் உடுவேன் எனக்கு வரவேண்டியதை நான் பெற்றே தீருவேன்” என சொன்னேன்.

பனாமா படகு துறை 


  விடுமுறைக்காக கப்பலிலிருந்து இறங்கும் முன்  எங்களது சம்பள கணக்கு முழுதாக  முடிக்கப்பட்டுவிடும். இறுதியாக எனது ஒருநாள் பயணப்படி ஏழரை மாதங்களுக்குப்பின் என் கணக்கில் வரவு வைத்து எனது கணக்கை முடித்து டிசம்பர்  இரண்டாம் தேதி சிங்கப்பூர்-திருவனந்தபுரம் விமான சீட்டை தந்தார் காப்டன் கிம். ஒன்றாம் தேதி சிங்கப்பூர் கடலில் கப்பலுடன் அருகணைந்த  படகில் ஏறி நிலத்தில் பாதம் பதித்து மூன்றாம் தேதி ஊர் வந்து சேர்ந்தேன்.

 கப்பலிலிருந்து இறங்கும்போது எங்கள் கணக்கில் இருக்கும் பணம் முழுவதையும் கையில் தருவார்கள் அல்லது வங்கி கணக்கில் அனுப்பிவிடுவார்கள். இம்முறை காப்டன் கிம் என்னிடம் “ஷாகுல் உனக்கு ஆயிரத்தி முப்பத்தி எட்டு டாலர் பாக்கி, ஐநூறு கைல தாரேன்,மிச்சத்த பேங்குல அனுப்பேன்”என்றார்.

 கையில் வாங்கியது,போக மீதி தொகை ஐநூற்றி முப்பத்தெட்டு டாலரை வங்கியில் அனுப்புவதற்கான  படிவத்தில் கையொப்பமிட்டு கொடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

   வழக்கமாக வீடு வந்துசேரும் முன் பணம் வங்கியில் வந்துவிடும்.இம்முறை எனது பணம் வரவில்லை.ஏழாம் தேதி காப்டனுக்கு சம்பள பாக்கி வரவில்லை என எழுதினேன். கோலாலம்பூர் அலுவலகத்திற்கு சொல்லிட்டேன் என பதில் தந்தார்.

  பத்தாம் தேதி தாண்டியும் பணம் வராததால் சம்பள பாக்கிகான இரண்டாவது கடிதத்தை கப்பல் காப்டனுக்கு அனுப்பினேன். அவர் கோலாலம்பூருக்கு அனுப்பிய வங்கி படிவம் மற்றும் கடிதத்தை எனக்கு தந்துவிட்டு,இனிமேல்  மும்பையில் தொடர்புகொள் என கையை மலத்திவிட்டார்.

  தர்ஷனாவுக்கு எழுதினேன்.இரு தினங்களுக்குப்பின் என்னை  போனில் அழைத்து. “உன் சம்பளம் வரல்லல்ல வெள்ளிக்கிழமை வர பார்த்துவிட்டு,எனக்கு திங்கள் போன் பண்ணு”என்றார்.

 டிசம்பர்  23 ஆம் தேதி  புதன்கிழமை மீண்டும அழைத்தேன். “மலேசியா ஆபிஸுக்கு சொல்லியாச்சி,ரெண்டு நாள் கூட பாப்போம்”என்றார் தர்ஷனா.

 29 ஆம் தேதி எனது வங்கி அனுப்பிய மின்னஞ்சலில்  மலேசியாவிலிருந்து எனது நிறுவனம் 1038 டாலர்கள் அனுப்பிய தகவல் இருந்தது. அந்த தொகை  இந்திய ரூபாயாக மாற்றியபின் பின்னர்  கணக்கில் வரவு வைக்கப்படும். ஒரு மாதிற்கு பின் பணம் வந்துவிட்டது. 530 டாலருக்கு பதில்  1038 டாலர்  508 அதிகமாக.

. ஒரு மாதம் இழுத்தடித்ததற்கு போனஸ் போல. தர்ஷனாவை அழைத்தேன் “என் சம்பள பாக்கி வந்துவிட்டது,எதோ தவறு நடந்துள்ளது 508 டாலர் அதிகமாக வந்துள்ளது” என்றேன். சிரித்துவிட்டு “ஷாகுல் சென்ட் மீ மெயில் ஐ வில் பார்வர்ட் டு கே எல் ஆபிஸ்”என்றார்.

 இரவு எட்டுமணிக்கு 1038 டாலர் இந்திய ரூபாயாக மாற்றப்பட்டு எனது கணக்கில் வரவு வைக்கபட்ட தகவலை வங்கி உறுதி செய்தது.41,475 ரூபாய் அதிகமாக கிடைத்தது. இரவு பத்து மணிக்கு அதிகமாக வந்த பணத்தின் விபரத்தை வைத்து  தர்ஷனாவுக்கு மெயில் அனுப்பினேன்.அதன் பின் மனம் அமைதியாகி நிம்மதியான உறக்கம்.

   சுகி சிவம் இந்த நாள் இனிய நாள் தொடரில் பேசியதில் ஒருநாள்  சும்மா கிடைக்கிற காசு நமக்கு வேண்டாம். நான் சன் டிவியில் பேசுவதற்கு காசு வாங்கி கொண்டுதான் பேசுகிறேன்.உங்களுக்கு லாட்டரியில் பரிசு கிடைத்தால் வேண்டாம் என்று சொல்லுங்க என இருபத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன் பேசியதும் ஆழ் மனதில் பதிந்திருக்கிறது.

  நாம் வேலை செய்யும் பணம் நம்மிடம் இருந்தால் போதும் அதனால்  தான் சும்மா கிடைத்த 508 டாலரை உடனே திரும்ப அளிப்பதாக சொன்னேன்.எனக்கு கிடைக்கவேண்டிய இருபத்திநான்கு டாலரை ஏழரை மாதங்கள் போராடி பெற்றேன் .

  02december 2022.

sunitashahul@gmail.com 

Sunday, 2 October 2022

கடவு சீட்டு

 பாஸ்போர்ட் 

   கடவுச்சீட்டு தான் பாஸ்போர்ட்டின் தமிழ் சொல் என இலங்கை கடவுசீட்டில் தமிழில் எழுதியிருந்தபோது தான் தெரிந்தது.

 ஐ டி ஐ படித்து முடித்தபின் சையதலி அண்ணன்தான் சொன்னார் “தம்பி பாஸ்போட் எடுத்து வெய் ஏதாவது வாய்ப்பு கடச்சா அப்ராட் போயிரலாம்”என.அப்படியே ட்ரைவிங்கும் கற்றுகொள்ள சொன்னார். அது 1996ஆம் ஆண்டு  நாகர்கோவில் வேப்பமூடு ஜங்சனில் உள்ள வேப்பமரத்திற்கு எதிரில்  சொக்கலிங்கம் இரும்பு கடையை ஒட்டிய படிக்கட்டுகளில் ஏறி சென்று ஐயப்பா டிராவல்சில் பாஸ்போர்ட் விண்ணபித்தோம்.

  சையதலி அண்ணன் அவருடைய நண்பர்கள் சிலருக்கு அங்கு பாஸ்போர்ட் விண்ணபித்திருந்ததால் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் நபரை  தெரிந்திருந்தது.அவரே என்னுடைய விரங்களை கேட்டு பத்தாம் வகுப்பு சான்றிதழை வைத்து எனக்கும் பாஸ்போர்ட் படிவம் பூர்த்தி செய்து அனுப்பினார். ஐநூறு ரூபாய் கொடுத்துவிட்டு மீதி ஐம்பதை பாஸ்போர்ட் வாங்கும்போது தர சொன்னாள் அங்குள்ள பெண்மணி.

 மூன்று மாதங்களுக்குப்பின் அங்கு போய் எனது பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டேன். அது பத்து ஆண்டுகளுக்கு பின் காலாவதியாகும் என அச்சிடப்பட்டிருந்தது. மண்டல அலுவலகம்,திருச்சிராப்பள்ளி  அதை எனக்கு தந்தது.

 அதே ஆண்டு திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில்(BHEL) ஓராண்டுகாலம் பயிற்சியில் சேர்ந்தபோது நண்பர்கள் பலரும் திருச்சி மரக்கடை பாஸ்போர்ட் அலுவலகம் சென்று மூநூற்றிஐம்பது ரூபாய் செலுத்தி விண்ணபித்து வந்தனர்.

  பாஸ்போர்ட் கிடைத்து ஏழு ஆண்டுகளுக்குப்பின் 2003 ஆம் ஆண்டுதான் முதல் முறையாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.முதல் பயணம் குவைத் நாட்டிற்கு.அங்கிருந்து ஈராக் சென்றேன்.திக்ரித் சாதமின் அரண்மனையில் நான் தங்கியிருந்த குடியிருப்பு தீப்பிடித்தபோது எனது உடைமைகள்,சான்றிதழ்களுடன்  பாஸ்போர்ட்டும் தீயில் கருகி காணாமல் போனது.

 பாக்தாத் தூதரகம் நேரில் வந்து படிவங்களை பூர்த்திசெய்து மூன்று மாதங்களுக்குப்பின் புதிய பாஸ்போர்ட் தந்தனர். அது ஓராண்டுக்கு மட்டுமே என அச்சிடபட்டிருந்தது.

  ஊருக்கு வந்தபின் அந்த பாஸ்போட்டை புதுபிக்க திருச்சி சென்றேன்.அது 2005 ஆண்டு படிவம் பூர்த்தி செய்து தருகிறேன் என ஒருவர் என்னை அணுகினார்.ஐம்பது ரூபாய் கட்டணம் என்றார்.

“பதினைந்து ரூபாய் தருகிறேன்” என்றேன்.

“கட்டாது” என்றார்.

“நானும் படிச்சிருக்கேன் நானே எழுதிக்கிடேன்”என்றேன்.

விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தபின் பாக்தாத் அலுவலகத்திலிருந்து ஒப்புதல் வரவில்லை என தாமதமாகியது.நாகேர்கோவிலில் இருந்து திருச்சி அலுவலகத்தை தொடர்புகொள்வது சிரமமாக இருந்தது.பாக்தாத்தில் எனது நிறுவன அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் செய்து பாக்தாத் அலுவலகத்தை தொடர்பு கொண்டு என் பாஸ்போர்ட் புதுப்பித்தலில் உள்ள சிக்கலை சொல்லி விரைந்து ஒப்புதல் கடிதத்தை திருச்சிக்கு அனுப்ப கோரினேன்.

அதன் பின் போலீஸ் கிளியரன்ஸ் வரும் வரை காத்திருந்து சில மாதங்களுக்குப்பின் இறுதியாக எனது முதல் பாஸ்போர்ட்டின் காலாவதி 2006 ஆம் ஆண்டு என்பதால் மீண்டும் ஓராண்டுக்கு மட்டுமே கிடைத்தது.

 திருமணம் முடிந்து கப்பலுக்கு வேலை தேடும்போது பாஸ்போர்ட் ஓராண்டுக்குமேல் இருத்தல் அவசியம் என்பதால்.தட்கல் முறையில் மீண்டும் திருச்சி சென்று பாஸ்போர்ட் வின்னபித்தேன்.போலீஸ் கிளியரன்ஸ் இல்லை தட்கல் கிடைக்காது என்றார் அதிகாரி ஒருவர்.மண்டல பாஸ்போர்ட் அதிகாரியை பார்க்கவேண்டும் என எழுதி கொடுத்தேன்.சற்று நேரத்தில் அவரை சந்திக்க அனுமதி கிடைத்தது.அவர் என் ஆவணங்கள் பார்த்துவிட்டு போலீஸ் கிளியரன்ஸ் இருக்கிறது. உனது மனைவியின் பெயரை சேர்க்கவேண்டுமெனில் திருமண சான்றிதழ் வேண்டும் என்றார். 

 அன்றிரவே திருச்சியிலிருந்து நாகர்கோவில் வந்து சுனிதாவின் ஜமாத்தில் அவளது வாப்பா வாங்கி வைத்திருந்த திருமண சான்றிதழை பெற்றுக்கொண்டு மீண்டும் இரவு பயணித்து திருச்சி சென்று ஒரே நாளில் பாஸ்போர்ட் பெற்று வந்தேன்.மே முப்பதாம் தேதி 2005 இல்.

  2010ஆம் ஆண்டு சுனிதாவுக்கும்,மகன்களுக்கும் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன்.அப்போது மண்டல அலுவலகம் மதுரையிலும் துவங்கியிருந்தது.சுனிதாவின் உயர்கல்வி தகுதியை பார்த்துவிட்டு மதுரை அலுவலகத்திற்கு நேரில் வந்து எங்கும் பணியில் இல்லையென எழுதி தர சொன்னார்கள்.அதற்காக மதுரை போய் வந்தோம். சுனிதாவின் உப்பா ஒருவர் திருச்சியில் வசிக்கிறார். அவர் சொன்னார் “மக்ளே நான் இந்த ஊருக்கு வந்து முப்பது வருசத்துல ஊருல இருந்து எவ்ளோ வேரு இந்த பாஸ்போர்ட் ஆபீசுக்கு வந்து போயிருக்காவோ,இனி யாரும் இங்க வரண்டாம்”.பாஸ்போர்ட் அலுவலகம் வரும்போது சந்திக்க வரும் உறவினர்களை இனி காண முடியாது எனும் ஏக்கம் பேச்சில் தெரிந்தது.

  2014 ஆம் மீண்டும் எனது பாஸ்போர்ட் இணையத்தில் விண்ணப்பித்து விட்டு நேர் காணலுக்கு மதுரை  மண்டல பாஸ்போர்ட் அலுவலக கிளையான வண்ணாரபேட்டை,திருநெல்வேலியில் இருக்கும் டாடாவின் அலுவலகம் சென்றேன்.  அப்போது எனது வாப்பாவும் வந்திருந்தார்.அங்கிருந்த பாஸ்போர்ட் அதிகாரி வாப்பாவிடம் கனிவாக 

“எதுக்கு பாஸ்போர்ட் வேணும்”

“மரிக்குக்கு மின்ன ஒருக்க மெக்கா போணும்”

“பெரியவருக்கு எந்த ஊரு”

“மணவாளகுறிச்சி,கன்னியாமரி மாவாட்டம்”

“நல்ல ஊரா” எனக்கேட்டார்.

“ஆங் நல்ல ஊரு ஸார்”என வாப்பா சொல்லி பேச்சை தொடருமுன் நான் இடை மறித்தேன்.

அந்த அதிகாரி கையால் சைகை செய்து பேசாமல் இரு என்றார்.

ஆரம்ப கல்வியை கூட பூர்த்தி செய்யாத வாப்பவிடம் சான்றிதழ் ஏதும் இல்லாததால் படிக்காதவர் என விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தது.

  வாப்பா அதிகாரியிடம் மணவாளக்குறிச்சியில் “இல்மநைட்,மோனோசைட்,கார்டனட்,தோரியம்,ரூட்டேயில் எல்லாம் கிடைக்கும்”என்றபோது நான் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தேன் .

அதிகாரி சிரித்துக்கொண்டே வாப்பாவிடம் கேட்டார் “இதெல்லாம் எப்டி பெரியவருக்கு தெரியும்”

“அங்க இருக்க மணல் கம்பெனிலே இருவத்தி மூணு வருஷம் வேல பாத்து ரிட்டையர்ட்”என்றார்.

“புள்ளைகள் எத்தர உங்களுக்கு”

“அஞ்சி மக்கள் எனக்கு மூணு வேரு இஞ்சினியர்,இவன் கப்பல்ல வேல பாக்கான்,பொட்ட புள்ளையயும் கெட்டி குடுத்தாச்சி” என்றார் வாப்பா . 

அந்த அதிகாரி அசைந்து அமர்ந்துவிட்டு கண்ணாடியை கழற்றி மேஜையில் வைத்து விட்டு கரம் கூப்பி வணங்கிவிட்டு.என்னிடம் “பத்திரமா கூட்டிட்டு போ,அடுத்தது ‘சி’ கவுண்டர்ல கூப்பிடுவாங்க” என்றார்.ஒரு மாதத்திற்குள் பாஸ்போர்ட் வந்துவிட்டது.

 கொரோனா நோய் காலத்தில்.2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கப்பல் பணியில் இணைவதற்கு பிலிப்பைன்ஸ் விசா விண்ணபிக்க வேண்டி எனது பாஸ்போர்ட்டை தில்லி முகவருக்கு அனுப்பினேன்.

 சில தினங்களுக்குப்பின் மும்பையிலிருந்து எனது அலுவலக அதிகாரி அனிதா தாக்கூர் என்னை அழைத்து “உனது பாஸ்போர்ட் டாமேஜ் ஆக இருக்கிறது விசா கிடைப்பது கடினம்” என்றார்.

தில்லி முகவரை அழைத்து கேட்டேன். விசாவுக்கு அனுப்பியுள்ளேன் சில தினங்களில் தெரியும் என்றார்.

 அதே வாரத்தில் சுனிதாவுக்கும்,மகன்களுக்கும் பாஸ்போர்ட் வேண்டி இணையத்தில் நண்பரின் மகன் கோசல் ராமின் உதவியுடன் விண்ணப்பித்தேன்.இம்முறை நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அவர்களுக்கு நேர்காணல் நடந்து பத்து நாட்களுக்குள் பாஸ்போர்ட் வந்தது .

  நான் கப்பல் செல்லும்போது எனது பாஸ்போர்ட்டில் எந்த கிழிசலும் இல்லை. (2021)கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஊரு வந்தபின் எனது பாஸ்போர்ட்டை பார்த்தேன்.அதன் தையல் கால்பங்கு உதிர்ந்து இருந்தது.

 நவம்பர் மாதம் இரண்டாம் தேதி இரவு அமர்ந்து இணையத்தில் பாஸ்போர்ட் விண்ணபித்துக் கொண்டிருந்தேன். சுனிதா கேட்டாள் “உங்களுக்கு பாஸ்போர்ட் அப்ளே பண்ண தெரியுமா,எப்பவும் மினி சேச்சிட்ட தானே குடுப்பியோ”. 

“உனக்கும் புள்ளையளுக்கும் நான் தானே அப்ளே பண்ணினேன்” என்றேன் .

“அது கோசல் ராம் கூட இருந்தான் அப்ப,இருநூத்தும்பது ரூவா லாவத்துக்கு,பெரிய நட்டம் வந்திரபிடாது பாத்துகிடுங்கோ”என்றாள்.நாகர்கோவிலில் நவம்பர் இருபத்தியைந்தாம் தேதிக்குப்பின் தான் நேர்காணலுக்கு தேதி இருந்தது.அதனால் நான் நவம்பர் ஒன்பதாம் திருநெல்வேலியில் நேர்காணலுக்கு விண்ணபித்தேன்.

  நான் இணையத்தில் விண்ணபித்து பின்னர் பணமும் கட்டினேன்.நேர்காணலுக்கான நேரமும்,தேதியும் உறுதிசெய்யப்பட்ட தகவல் எனக்கு வரவில்லை.  அறுபது பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் ஆதலால் 2500 ருபாய் கட்டணம். மின்னஞ்சல்,எஸ் எம் எஸ் எதுவும் வரவில்லை.எதோ தவறாகிவிட்டது.

 சுனிதா சொன்னவை நினைவிற்கு வந்தது. “கொஞ்ச லாவாத்துக்கு வேண்டி பெரிய நட்டம் வந்துரபிடாது” என.எனது வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கபட்டிருந்தது.

மீண்டும் நெடுநேரம் தேடினேன். கட்டிய பணம் சென்று சேராமல் இடையில் எதோ ஆகியிருந்தது.அதையும் எப்படி சரி செய்ய வேண்டுமென அந்த தளத்திலேயே சொல்லியிருந்தார்கள்.

பின்னர் ஒன்பதாம் தேதி காலை 9.30  மணிக்கு எனக்கு நேர்காணலுக்கான உறுதி செய்யப்பட்ட குறுஞ்செய்தி வந்தது.

ஒன்பதாம் தேதி காலை ஏழரை மணிக்கு வடசேரியில் இருந்து குளிரூட்டப்பட்ட பேருந்தில்(எண்பது ரூபாய் கட்டணம்) ஏறி அமர்ந்தேன். பக்கத்து இருக்கையில் எனது ஊரை சார்ந்த  முபாராக் வந்து அமர்ந்தார் .

 திருநெல்வேலியை அடையும்முன் மூத்த எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு செய்தி அனுப்பி சந்திக்க முடியுமா எனக்கேட்டேன். பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து பழைய காலத்தில் நடக்கும் தூரம் தான்.ஆட்டோவில் ஐந்து நிமிடத்திற்குள் வந்துவிட முடியும் என்று விலாசமும்,நடந்து செல்லும் அடையாளங்களும் அனுப்பினார்.

  பேருந்து நிலையம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டிருந்ததால் பாளை பஸ் நிலையத்திற்கு வெளியில் இறங்கி பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு  நடந்து சென்றேன்.23 வது டோக்கேன் பெற்றுகொண்டு காத்திருந்தேன்.ஆவணங்கள் சரிபார்ப்பு,புகைப்படம் எடுத்தல்,மேலதிகாரியின் நேர்காணல் முடிந்து பழைய பாஸ்போர்ட் கான்சல் என முத்திரை பதிக்கபட்டு கையில் தந்தார்.நன்றி கூறி வெளியே வந்தேன். எல்லாம் நாற்பது நிமிடங்களில் முடிந்து வெளியே வரும்போது குறுஞ்செய்தி வந்தது file no.MD 2073……5921 is granted என.  

வண்ணதாசன் ஐயா அவர்களை இல்லம் சென்று சந்தித்துவிட்டு நாகர்கோவில் வந்து சுனிதாவின் வீட்டிற்கு சென்றேன்.சுனிதாவின் உடன்பிறப்புகளுக்கு மதிய விருந்து அங்கே.சுனிதாவும்,மகன்களும் காலையில் அங்கு சென்றிருந்தனர்.

 மாலை ஆறுமணிக்கு மீண்டும் குறுஞ்செய்தி MD2073….5921 Pssport NO.Z6308285 dispatched on 09/11/2021  and can be tracked using speed post tracking no. PP382238282 INPassportSP என.

  எனக்கு ஒரு நிமிடம் ஆச்சரியம் தாங்க முடியவில்லை.பாஸ்போர்ட் விண்ணபித்து விட்டு இன்னும் நான் வீடு போய் சேரவில்லை அதற்குள் அது விரைவு தாபலில் அனுப்பிய விபரம் எனக்கு வந்துவிட்டது. காலையில் பாஸ்போர்ட் கான்சல் என முத்திரை பதித்து தந்தார்கள் அன்று மாலையே எனக்கு புதிய பாஸ்போர்ட் தரப்பட்டுவிட்டது.

மறுநாள் காலை பத்துமணிக்கு வடசேரி காவல் நிலையத்திலிருந்து காவலர் நேசையன் அழைத்தார். “பாஸ்போர்ட் அப்ளே பண்ணுனியளா,என்குயரி வந்துருக்கு,மத்தியானம் ரெண்டு மணிக்கு ஸ்டேசனுக்கு வாருங்க,வரும்போ ஒரு போட்டோ,ஆதார் கார்ட் கொண்டுட்டு வரணும்”என்றார்.

  மதியம் பன்னிரண்டு மணிக்கு தபால்காரர் வீட்டுக்கு வந்து எனது பாஸ்போர்ட்டை தந்தார்.

 இதைவிட வேகமாக பாஸ்போர்ட் தரவே முடியாது.

ஷாகுல் ஹமீது ,

02 october 2022


Monday, 2 May 2022

கப்பலுக்கு புறப்பட்டேன்

 கப்பலுக்கு புறப்பட்டேன் (2022 SINGAPORE ENERGY)

   இம்முறை கப்பலுக்கு புறப்படும் முன் நிறைய தடைகள் இருந்ததால் எனது விடுமுறை மிக நீண்டு விட்டது. ஏழரை மாதங்கள் ஆகி விட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி ஊருக்கு வந்தேன் ஜனவரியில் மீண்டும் கப்பல் செல்ல விருப்பம் தெரிவித்து டிசம்பர் முதல் எனது கப்பல் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டு கொண்டே இருந்தேன்

  பிப்ரவரி எட்டாம் தேதி  tristar ruby எனும் கப்பலில் ஒப்புதல் வந்துள்ளது எனது மும்பை அலுவலகம் தகவல் சொன்னார்கள். அன்று அந்த கப்பல் கன்னியாகுமரி அருகில் சைனாவை நோக்கி சென்றுகொண்டிருந்தது.

  அந்த கப்பலின் ஆசியா வருகைக்காக காத்திருந்தேன்.மலேசியாவில் கப்பல் சரக்கு நிறைக்க வந்தபோது அங்கு எழு நாட்கள் கட்டாய தனிமைபடுத்தல் இருந்ததை கோலாலம்பூர் அலுவலகம் திட்டமிட தவறியதால் அப்போது செல்ல முடியவில்லை.பிப்ருவரி 25 ஆம் தேதி மும்பை அலுவலகம் மார்ச் பன்னிரெண்டாம் தேதி கப்பலில் சேர வேண்டும் மருத்துவ சோதனையை முடித்துவிட்டு 26ஆம் தேதி முதல் வீட்டு தனிமையில் இருக்க சொன்னார்கள்.

   மார்ச் மூன்றாம் தேதி காலை பத்துமணிக்குமேல் மும்பை அலுவலகம் என்னை போனில் அழைத்து ஜப்பான் செல்லும் முன் பத்து நாட்கள் விடுதியில் தனிமை படுத்தல் இருப்பதால் இன்று மாலையே தில்லி செல்ல வேண்டும். இரவு விமானம் தயாராகு என்றார்கள். விடுதியறை,விமான சீட்டு என மின்னஞ்சல்கள் வந்து கொண்டே இருந்தது .அவரசமாக பயணப்பையை தயார் செய்து தயாரானேன்.நண்பர் சுப்ரமணி என்னை திருவனந்தபுரம் விமானநிலையம் அழைத்து செல்ல வீட்டிற்கு வந்திருந்தார்.மாலை நான்கு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பும்போது போன் வந்தது தில்லி செல்வது ரத்தாகி விட்டது என. 

     மார்ச் பதினைந்தாம் தேதி மதியம் மும்பை அலுவலகத்திலிருந்து போன் “ஷாகுல் உன்னை சிங்கப்பூர் எனெர்ஜி எனும் கப்பலுக்கு மாற்றியுள்ளேன் இருபதாம் தேதி மலேசியாவில் கப்பலில் இணைய வேண்டும் தயாராகு என”

 இந்த கப்பலுக்கான ஆவணங்கள் மற்றும் மருத்துவ சான்றிதழ்கள் சில தயார் செய்யும்படி வேறு அலுவலர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல்கள்  எனக்கும் வந்து கொண்டே இருந்தது.மறுநாள் இந்த கப்பலுக்காக பணி ஒப்பந்தம் மற்றும் வேறு சில ஆவணங்கள் கையொப்பமிட்டு அனுப்பினேன்.

முந்தைய கப்பலில் இருந்த சமையல்காரர் டேவிஸ் இந்த கப்பலில் இருந்தார்.அவரை தொடர்பு கொண்டேன்.மலேசியாவில் ஏழு நாட்கள் விடுதியில் தனிமைபடுத்தலும் உள்ளது என்றார்.

 மறுநாள் முதல் எந்த தகவலும் இல்லை.டேவிஸ் கப்பல் மலேசியா செல்வது ரத்தாகி பனாமா செல்கிறது.மிக மெதுவாக செல்வதால் ஒரு மாதம் ஆகும் என்றார்.உத்தேசமாக கணக்கிட்டு பார்தேன் ஏப்ரல் பதினைந்தாம் தேதிக்கு முன் கப்பல் செல்வது வாய்ப்பே இல்லை.

    விடுமுறையில் இருக்கும்போது சம்பளம் கிடையாது என்பதால் கப்பல் காரனுக்கு பொருளாதாரம் கொஞ்சம் கடினம்தான். ஏப்ரலில் ராமலான் நோன்பு காலம் “நோம்பு முடிஞ்சி போனா போராதா”என சுனிதா கேட்டாள். “அது முடியாதுல்லா,இந்த கப்பலுக்கு பிளான் பண்ணி மெடிக்கல் முடிச்சாச்சி,இந்த சான்ச விட்டா பொறவு எவ்வளவு நாள் ஆவுமுன்னு தெரியாது”

மீண்டும் காத்திருந்தேன்.கடந்த பதினான்காம் தேதி மும்பை-பாரிஸ் வழியாக பனாமாவிற்கு விமான சீட்டும் ஆவணங்களும் வந்தது.பனாமா நாட்டிற்கு பலமுறை சென்றிருக்கிறேன் 2008,2012 ஆம் ஆண்டுகளில் இங்குள்ள பல்போவ மற்றும் மன்சினிலோ துறைமுகங்களுக்கு வருபோதேல்லாம் ஊர் சுற்றியிருக்கிறேன்.இங்கிருந்து இருமுறை இந்தியாவிற்கு பயணித்துள்ளேன்.நன்கு பழகிய ஊர் இது. நண்பன் மில்டனிடம் சொன்னேன்.அமெரிக்க விசா,ஐரோப்பிய கூட்டமைப்பு அல்லது கனடா விசா   இல்லாமல் பாரிஸ் வழி பயணிக்க மும்பையில் அனுமதிக்கமாட்டார்கள் என்றான்.


                        திருவனந்தபுரம்


 அன்று சனிக்கிழமை மாலை விமான சீட்டு அனுப்பி தந்த என அலுவலக அதிகாரியை அழைத்தேன்.விசாரித்துவிட்டு உறுதி செய்வதாக சொன்னார்.பதினைந்தே நிமிடத்தில் அழைத்தார். “நீ சொன்னது சரிதான் வேறு டிக்கெட் பார்த்துவிட்டு சொல்கிறேன்” என்றார்.

 மீண்டும் பதிமூன்றாம் தேதி மதியம் திருவனத்தபுரம்-மும்பை-துபாய்-இஸ்தான்புல் வழியாக பனாமவிற்கு புதிய விமான சீட்டு வந்தது.

பதிமூன்றாம் தேதி மதியம் பன்னிரெண்டரை மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து விமானம்.காலை ஏழரை மணிக்கு முன்பே சுனிதாவின் தாய்,சகோதரிகள் வீட்டிற்கு வந்திருந்தனர்.நண்பர் ஸாம் என பயணத்திற்காக கர்த்தரிடம் மன்றாடியபின் என்னை அவரது காரில் வடசேரியிலிருந்து பஸ் ஏற்றி விட்டார்.

 பனமா விசா மற்றும் காரண்டி லெட்டர் நான் திருவனந்தபுரம் நெருங்கும்முன் மெயிலில் வந்தது.விமானநிலையத்தில் பணிபுரியும் தம்பி ஜானகியிடம் அவற்றை நகல் எடுத்து வைக்க வேண்டினேன்.

  நண்பர் சுப்ரமணி காரில் வந்து என்னை அழைத்துசென்றார்.ஜானகியின் இல்லம் சென்று ஆவணங்கள் பெற்றுக்கொண்டு விமானம் ஏறினேன்.எனக்கான சிற்றுண்டி முன்பதிவு செய்யபட்டிருந்தது நோன்பு வைத்திருந்ததால் அருகிலிருந்த பெங்காலி இளம்பெண் அமியிடன் வாங்கிக்கொள்ள சொன்னேன். வேக வைக்காமல் நூடுல்ஸ் பாக்கெட்டை கேட்டு பைக்குள் வைத்தபின் “நன்றி” என்றாள்.

               
                             மும்பை

     

  விமானம் மும்பையில் தரையிறங்கியபின் பயண பைகளை எடுத்துகொண்டு அமியிடம் விடைபெற்று.பன்னாட்டு விமான நிலையத்திற்கு சென்றேன்.அக்பர் ட்ராவல்ஸ் அறுநூறு  ரூபாய் என்றார்கள்.அருகிலிருந்த  மற்றொரு சேவை இருநூற்று இருபத்திஐந்து ருபாய் குளிரூட்டி இல்லாமல் என்றார்கள்.அதில் பணம் செலுத்தி சென்றேன்.

எனது மும்பை அலுவலக அதிகாரி உனது காரண்டி லெட்டரில் தவறுதலாக பாரிஸ்-பனமா விமான விபரங்கள் அச்சிடப்பட்டுள்ளது.விரைவில் சரியான கடிதம் வந்ததும் அனுப்புகிறேன் என்றார்.

  மும்பை விமான நிலையத்தில் உம்ரா (மெக்கா)செல்லும் பயணிகள் அதிகமிருந்தனர். ஏர் இந்தியா கவுண்டரில் சென்றபோது எனது கப்பல் ஆவணங்கள் அனைத்தையும் அந்த பெண் கேட்டு சரிபார்த்தபின் தனது உயரதிகாரியிடம்கேட்டு உறுதி செய்த பின் என்னை அனுமதித்தாள்.

   அடுத்து குடியுரிமை அதிகாரியின் முன் நின்றேன்.எனது பழைய பாஸ்போர்டை கேட்டார்.அது கிழிந்து போனதால் புதியது மாற்றினேன் கொண்டு வரவில்லை என்றேன்.

 “உனது பனமா விசா பழைய பாஸ்போர்ட் எண்ணில் இருக்கிறது” என்றார். அதிர்ச்சியாக இருந்தது.மற்ற ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருப்பதை பார்த்துவிட்டு என்னை தனது உயரதிகாரியிடம் அழைத்துச்சென்றார்.

அவர் விபரங்களை கேட்டபின் “எத்தனை வருடங்களாக கப்பல் பணியில் இருக்குறீர்கள்”

   “பதினேழு  வருடங்கள்” என்றேன். 

“அங்கிருந்து உன்னை திருப்பி அனுப்பினால் நான் பொறுபேற்க முடியாது, நீ போக விரும்புகிறாயா”என கேட்டார்.

“அங்கெ பனாமா முகவர் பார்த்துகொள்வார்,ஏதும் பிரச்னை வராது” என்றேன்.

“போய் வா” என்றார் .



  மும்பை அலுவலக அதிகாரியை அழைத்து விபரம் சொன்னேன்.உடனே பனாமாவுக்கு மெயில் அனுப்புவதாக சொன்னார்.

  விமான நிலையத்தில் இருந்த தொழுகை கூடத்தில் தொழுதுவிட்டு காத்திருந்தேன்.உம்ரா செல்லும் பெண் பயணி ஒருவர் தந்த பேரீச்சை,வாழை பழத்துடன் கதிரணைந்தபின்  நோன்பு திறந்துவிட்டு அங்கேயே மக்ரிப் தொழுதுவிட்டு இட்லி வாங்கி சாப்பிட்டேன்.

நேரம் நெருங்கியிருந்தது.மும்பை நண்பர்கள் மற்றும் காட்சன் சாமுவேலுடன் பேசிவிட்டு விமானத்தில் ஏறிகொண்டேன்.சரியான நேரத்தில் எட்டரை மணிக்கு அந்தேரி கடலுக்குமேலே வட்டமடித்து விமானம் பறக்க தொடங்கியது.



      நான்கு மணி நேரத்தில் துபாய் விமான நிலையத்தில் வந்து சேர்ந்தேன்.அடுத்த விமானத்துக்கான போர்டிங் கார்டுகள் கிடைக்காதாதால் துர்கிஷ் ஏர்வேஸ் கவுண்டருக்கு சென்றேன்.காபூலிலிருந்து ஐரோப்பா செல்லும் பயணிகள் நிறையபேர் நின்றுகொண்டிருந்தனர்.


                    துபாய்



 என் முறை வந்தபோது துர்கிஷ் விமான ஊழியர் எனது ஆவணங்கள் அனைத்தையும் பார்த்தபின். “முன்பு பனாமா போயிருக்கிறாயா” எனக்கேட்டார்.

“நம்பர் ஆப் டைம்ஸ்” என்றேன்.

“வாட் நோ சீல் இன் பாஸ்போர்ட்”

“இட்ஸ் நியூ பாஸ்போர்ட்” என்றேன்.

“ஷோ மீ யுவர் ஓல்ட் பாஸ்போர்ட்”

“கொண்டுவரவில்லை” என்றேன்.

அவரது உயரதிகாரியை போனில் அழைத்து  பேசினார்.

என் முன்னாள் ஒருஇந்தியாவை சேர்ந்த பயணி பனாமா நாட்டிற்கு கப்பலில் சேர செல்வதாக கூறினார்.

என்னிடம் கொஞ்சம் காத்திரு போர்டிங் கார்ட்,பாஸ்போர்ட் பின்னர் தருகிறேன் என்றார் .

அரை மணி நேரத்திற்குப்பின் என்னை அழைத்து போனில் பேச சொன்னார்.மறுமுனையில் பேசியவர் “ஏன் துபாய் வழியாக பனாமா செல்கிறாய் என கேட்டுவிட்டு நீங்கள் தமிழா மலையாளமா?” என கேட்டபின் தமிழிலேயே பேசி எனது விபரங்களை தெரிந்தபின் பயணிக்க அனுமதித்தார்.

 அங்கே இருந்த காபி ஷாப்பில்  மசாலா சாயா கிடைக்கும் என எழுதியிருந்தது. கடையிலிருந்த லைலா எனும் ஆப்பிரிக்க பெண் சாயா நன்றாக இருக்கும் என்றாள்.சுவையான டீ அது சலாமும் நன்றியும் கூறி தொழுகைக்கான இடத்தை கேட்டறிந்தேன்.


                  நான்காவது விமானத்தில்


  அங்கேய இஷா தொழுதுவிட்டு துபாய் நேரப்படி நள்ளிரவு இரண்டுமணிக்கு இஸ்தான்புல் விமானத்தில் ஏறினேன்.அதிகாலை ஐந்துமணிக்கு துருக்கியின் இஸ்தான்புல் விமானநிலையத்தில் முதல் முறையாக இறங்கினேன்.அடுத்த விமானம் பத்துமணிக்கு,அதிகாலை தொழுகைய நிறைவேற்றியபின் பனாமா செல்லும் வாயிற் எண் எட்டுமணிக்கு மேல் அறிவிப்பதாக இருந்ததால் பயணிகள் காத்திருப்பு இருக்கை அருகில் தரையில் துண்டை விரித்து,பையை தலைக்கு வைத்து தூங்கினேன்.



 எட்டு மணிக்குமேல் எழுந்தபோது நல்ல பசி எனக்குகந்த உணவேதும் அங்கே இல்லை. சிக்கன் பிரஸ்ட் ஒன்று வாங்கி சாப்பிட்டுவிட்டு பனாமா செல்லும் விமானம் புறப்படும் நுழைவு வாயில் நோக்கி நடந்தேன்.கொஞ்சம் தூரம்தான் பத்து நிமிடங்களுக்கு மேலானது.

 போர்டிங் துவங்கவில்லை பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.அங்கும் பனாமா விசா மற்றும்  ஸீமேன் ஆவணங்கள் சரிபார்த்தபின் தான் விமானத்தில் ஏற அனுமதித்தார்கள்.எனது பயண பைகள் விமானத்தில் ஏறிவிட்டதா என உறுதி செய்துகொண்டேன்.

மொத்தம் பதினேழு மணி நேர பயணம் இடையில் கொலம்பியா நாட்டின் பகோட்ட எனும் ஊரில் ஒரு மணிநேரம் நின்று செல்லும் விமானம் அது.துர்கிஷ் பீப் காபப் மற்றும் ரைஸ் மிக சுவையாக இருந்தது.நல்ல கவனிப்பும் உணவுகளும் வழங்க பட்டது.


           பனாமா வில் 

  பனாமா நேரப்படி வியாழன் மாலை ஆறரை மணிக்கு 93வது  முறையாக நான் பயணித்த  விமானம் பத்திரமாக தரையிறங்கியது.அங்கே குடியிரிமை அதிகாரியின் முன் நிற்கையில் இந்தியாவிலிருந்து வேறு விமானத்தில் வந்த,கேரளாவின் ராமு குட்டியான்,கோவாவின் பெர்னாண்டஸ்,எனது விமானத்தில் வந்திருந்த மலேசிய,இந்தோனேசியா பணியாளர்களை கண்டேன்.




 குடியுரிமை அதிகாரியின் கையில் எனது புதிய பாஸ்போர்ட் என்னுடன் விசா நகல் இருந்ததால் எந்த சிக்கலுமின்றி எளிதாக வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டேன்.

 இரவு விடுதியறையில் தங்கிவிட்டு மறுநாள் காலை படகு மூலம் பசிபிக் கடலில் நின்றுகொண்டிருந்த சிங்கப்பூர் எனெர்ஜி எனும் கப்பலில் பணியில் இணைந்தேன் .

Tuesday, 1 February 2022

உம்மா 5

    

    எனக்கு மருந்து வாங்கி தந்த நண்பர் ஸாம் ப்ரின்ஸ் போனில் எனது உடல் நிலை குறித்து சொல்ல சொல்லியிருந்தார்.எனவே காலை,மாலை வேளைகளில் அவரை அழைத்து சொல்லிகொண்டிருந்தேன்.தெர்மோமீட்டர் ஒன்று வாங்கி அவ்வப்போது உடல் வெப்ப சோதனை செய்து பார்த்தேன்.ஒருமுறை 37.2 என வந்தது.

 ஏழரை மணிக்கே  இரவுணவாக சரிபா மாமி கொடுத்தனுப்பிய இட்லியில் இரண்டை மட்டும் சாப்பிட்டுவிட்டு பத்து மணி ஆகட்டும் என  வெளியில் காத்திருந்தேன்.உம்மாவுக்கு சுடுநீர் மற்றும் தேவையானவற்றை செய்துவிட்டு தூங்க சென்றேன்.

இன்றும்  சில நோயாளிகளை மருந்துகளை எழுதிகொடுத்து வீட்டுக்கு செல்ல மருத்துவர் அனுமதித்தார்.உம்மாவிடம் “உங்களுக்கு என்னாவாவது கஷ்டம் இருக்கா”

“லேசா சளி இருக்கு”

“ஒரு நாள் கூட இருந்து பாத்துட்டு போங்க,நாளைக்கு காலத்த பாஸ்டிங்ல பிளட் டெஸ்ட் பண்ணி பாத்துட்டு வீட்டுக்கு உடேன் உங்களை”என்றார் பெண் மருத்துவர்.

 மேற்கு வங்கத்தை சேர்ந்த ஸ்ரீ ராம் இங்கே பத்து நாட்களாக சிகிட்சை பெறுகிறான்.என்னிடம்  நான் நன்றாக இருக்கிறேன்.ஏன் என்னை வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை. எனக்கு வீட்டிற்கு  செல்ல வேண்டும் என தான் சொல்வதை மருத்துவர் வரும்போது சொல்ல சொன்னான்.

அன்று வார்டுக்கு வந்த மலையாளி  இளம் பெண்மருத்துவர் உடைந்த ஹிந்தியில் பேசினார்.ஸ்ரீ ராம் டிஸ்சார்ஜ் கேட்கிறான் என டாக்டரிடம் சொன்னேன். அவர் என்னிடம் “இவன்ற லங்க்ஸ்ல பிரஸ்ணம் உண்டு,அது கொண்டு இந்நல சி டி ஸ்கேன் எடுக்காம் பறஞ்சு” என ஸ்ரீ ராமின் ஸ்கேன் படத்தை என்னிடம் காட்டி இவனை வீட்டிற்கு செல்ல அனுமதிக்க முடியாது.இருபத்தி மூன்றே வயதான இவன் ஒருவேளை நிமோனியாவால் பாதிக்கபடும் வாய்ப்பு உள்ளது எனவே இன்னும் சில நாட்கள் இங்கே இருந்து மருந்துக்கள் எடுத்துகொள்ள வேண்டும் என்பதை அவனிடம் சொல்லி புரிய வைக்க சொன்னார்.

 ஸ்ரீ ராம் கையிலிருந்து காசு தீர்ந்துவிட்டது.இரண்டாயிரம் ரூபாய் இருந்ததில் நேற்று ஐநூறு ரூபாய் ஸ்கேன் எடுக்க செலவாகியது என புலம்பிகொண்டிருந்தான்.மூன்று ஆண்டுகளாக இங்கே பணி செய்யும் ஸ்ரீ ராம் சொந்த ஊருக்கு சென்று திரும்பியபின் செய்த சோதனையில் கொரோனா உறுதியாகியதால் இங்கே அனுமதிக்கபட்டுள்ளான்.மிகக்குறைந்த கூலி கொடுத்து ஸ்ரீ ராமின்  உழைப்பை உறுஞ்சிய அவன் முதலாளி அவன் உடல் நிலை குறித்து போனில் கூட விசாரிக்கவில்லை.

   இரவு  சரியான தூக்கமின்றி கழிந்தது.தலைவலி கொஞ்சம் குறைந்து,முதுகு தண்டுவட வலி அதிகமாகி லேசான காய்ச்சல் இருந்தது.அதிகாலை மூன்று மணிக்கு மேல் தூங்கி ஐந்துக்கு விழித்தேன்.இன்று குளிக்க வேண்டாம் என முடிவு செய்தேன்.சுடுநீரில் பல் தேய்த்து  கை, கால் கழுவி காலையிலேயே கட்டன் சாயாவில் அஞ்சால் அலுப்பு மருந்து போட்டு குடித்தபோது உடல் கொஞ்சம் தயாராகியது.

காலை ஆறு மணிக்கே  ரத்தப்பரிசோதனை செய்ய வந்த செவிலியர்  உம்மாவின் கைகளில் ஊசியால் குத்தி ரத்தம் உறிஞ்சி எடுத்துச்சென்றனர்.காலை பத்துமணிக்கு மருத்துவர் வந்தபோது நான்கு கர்ப்பிணி பெண்கள்,ஒன்பது மாத குழந்தை ஒன்று உட்பட ஒன்பது பேர் வீட்டுக்கு செல்ல எழுதி கொடுத்தார்.அதில் ஒரு கர்ப்பிணி பெண் மூன்று தினங்களுக்கு முன் ஆபத்தான நிலையில் தூக்கி வந்திருந்தார்கள்.அவர்கள் அனைவரும் சிரித்த முகத்துடன் டிஸ்சார்ஜ் ஷீட் வருவதற்காக காத்திருந்தனர்.மதியம் இரண்டு மணிக்குத்தான் நீங்கள் செல்ல முடியும் தகவல் சொன்னார்கள்.

மதியம் ஒருமணிக்கு பணிக்கு வந்த டார்வினின் மனைவியிடம் “உம்மாவுக்கு இன்னைக்கு டிஸ்சார்ஜ் சொல்லியாச்சா?” எனக்கேட்டேன்.உம்மாவின் ரிப்போட் சார்ட்டை பார்த்துவிட்டு

“பிளட் டெஸ்ட் ரிப்போர்ட் வரணும் அதுக்க பொறவுதான் உடுவாங்க அண்ணே”என்றாள்.

நான்கு மணிக்கு செவிலி என்னை அழைத்து “உம்மா இன்னைக்கு போலாம் மருந்து எழுதி தாரேன் அத பார்மசியில் வாங்கீட்டு வாங்க,அஞ்சு நாளக்கி இத தின்னணும் நாலு நாளு வீட்டுல கோரைன்டைன்ல இருக்கணும்” என்றாள்.

மருந்துகளை வாங்கி விட்டு மருத்துவமனை வாயிலுக்கு வெளியே சென்று ஆட்டோ பிடித்து வந்தேன்.உம்மாவை தம்பியின் வீட்டுக்கு  தனிமைப்படுத்தலுக்கு  அனுப்பி வைத்தேன்.கன்னியாகுமரி மாமா அழைத்தார் “உம்மா வீட்டுக்கு போயாச்சி”என்றேன். “அல்லாஹ் மிகப்பெரியவன்” என இறைவனுக்கு நன்றி கூறினார்.மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்கு செல்வது பெரும் நிம்மதியை தந்தது.

 மருத்துவ கல்லூரிக்கு வெளியே நடக்கும் சில வியாபாரங்களில் ஒன்று   சவப்பெட்டி விற்பனை கடை அது என்னை நின்று கவனிக்க செய்தது.




 

 சுனிதாவை போனில் அழைத்து “ரூம்ல இருந்து உங்களுக்கு வேண்டியத எடுத்துகிடுங்கோ எனக்கு அஞ்சு நாள் கோரன்டைன்”என்றேன்.வீட்டிற்கு சென்று அறையை பூட்டிகொண்டேன் தேவைப்படும்போது உணவு,கட்டன் சாயா,சுடுநீர் ஆகியவற்றை கதவைதிறந்து சுனிதா தந்தாள். மகன்களை கதவருகில் வர விடவேயில்லை.

 இரண்டாம் நாள் என்னால் நிற்கவோ,அமரவோ இயலவில்லை நாள் முழுவதும் படுத்தே இருந்தேன்.மூன்றாம்நாள் மாலையில் நலமடைந்து விட்டேன்.மறுநாள் காலை சுடுநீரில் குளித்து நலமாக இருந்தேன்.காலை உணவை தந்தபின் சுனிதா  “எனக்கு நல்லா களியல்ல,படுக்க போறேன் நீங்கோ சமச்சிருங்கோ” என்றாள்.நான் அறையை விட்டு வெளியே வந்தேன்.

  இளையவன் சல்மானிடம் “பிரிட்ஜில என்ன வெஜிடபிள் இருக்குன்னு பாரு ஒரு சாம்பாரும்,சோறும் வெப்போம்” என்றபோது அவன் சாம்பார் பிரியன் ஆதலால் உற்சாகமாகி விட்டான்.

      அறைக்குள் மின் விசிறியை போடாமல் படுத்திருந்த சுனிதா “இன்னக்கி மெனு நெத்திலி கருவாடு அவியல், நெத்தலிய எடுத்து வெந்நீல ஊற போட்டு மண்ணு போற வர நல்லா களுவணும்,வாளக்கா பிரிட்ஜில இருக்கு”என உத்தரவிட்டாள்.வீட்டில் எப்போதும் வீட்டுக்காரி நினைப்பது தான் நடக்கும்.

மூன்று கப் அரிசியை வடித்து எடுத்தேன்.தேங்காய் துருவி,மஞ்சள் பொடி,வத்தல் மிளகாய்,சின்ன வெங்காயம்,ஜீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து,மண் சட்டியில் கடுகு,கறிவேப்பிலை தாளித்து வாழைக்காய் சேர்த்து நெத்திலி அவியல் தயார் செய்தபின் ரசமும் வைத்து மகன்கள் இருவருக்கும் சாப்பாடு கொடுத்து நானும் சாப்பிட்டேன்.

  நான்கு மணிக்கு மேல் எழுந்த சுனிதா சாப்பிடும்போது “எல்லாம்  நல்லா இருக்கு,தேங்யூ” என்றாள்.தினமும் சமைப்பவளுக்கு தானே தெரியும் உணவின் உண்மை சுவை.

“பரவாயில்ல தேறிட்டேன்” என எனக்குள்ளிருந்தவன் சொன்னான் .

முற்றும்

Friday, 28 January 2022

உம்மா 4

     உம்மாவின் ஆதார் அட்டை விலாசத்தில் உள்ள வீட்டிற்கு சுகாதார மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் சென்று கொரோனா தொற்று பாதித்த வீடு எனும் ஸ்டிக்கர் ஒட்டி,கிருமி நாசினி தெளித்தால் காந்தாரிவிளை தெருவில் ஒரு பரபரப்பு. அதன் பின் தான் ஜாகிர் அண்ணனும் இன்னும் சிலரும் போனில் விசாரித்தனர்.

ஜாகிர் அண்ணனிடம் “உம்மா சும்ம இருக்கா,ஒன்னுமில்ல டெஸ்ட் பண்ணுனா பாசிட்டிவ்ன்னு வந்துட்டு அதான் இங்க கூட்டிட்டு வந்தேன் இன்னைக்கு காலத்த வார்டுக்குள்ளேயே உம்மா வாக்கிங் போனா”என்றேன்.

“லே தம்பி உம்மா மிந்தி ஒருக்க காய்ச்சல்ன்னு ஆசுபத்திரிக்கு போனா பாத்துக்கோ,டாக்டரு அட்மிட் பண்ணிருவோம்னு சொல்லி எழுதி குடுத்தாரு,இவா அங்க போனா அது கொரோனா வார்டுனு பாத்ததும்,கல்ப் பதறி டாக்டர்ட,வாப்பா மரிச்சிபோச்சி நான் நாளைக்கி வந்து அட்மிட் ஆவேன்னு சொல்லிட்டு ஓடி வந்தா இப்ப புடிச்சி போட்டுட்டானுவோ”என சொல்லி சிரித்தான்.

         நாங்கள் கன்னியாகுமரி மாமா எனச்சொல்லும் பீர் முகம்மது மாமா தினமும் காலை ,மாலை இரு வேளையும் போனில் விசாரித்தார்  “மருமொனே,உம்மாக்கு இப்ப எப்படி இருக்கு,அங்க வந்து பாக்க முடியாதே,நான் துவா செய்யேன் எல்லாம் செரியாவும்  அல்லாஹ் பெரியவன்” என்பார்.

   அன்றிரவும் எனக்கு சரியான தூக்கமின்றி கழிந்தது அதிகாலை விழிக்கையில் லேசான சளியும்,தொண்டை வலிப்பதுபோலவும் இருந்தது.இரவு காவலர் பணி மாறியபின்  உம்மாவுக்கு சாயா வாங்கி கொடுத்துவிட்டு குளத்திற்கு சென்று துணிகளை துவைத்து குளிக்கையில் தோன்றியது இன்று குளிப்பது தவறு என.காய்ச்சலுக்கான அறிகுறிகளை உடல் எனக்கு சொல்ல தொடங்கியது.

     வார்டுக்கு அருகிலேயே துணிகளை காயபோடும் கயிறை இரு மரங்களுக்கிடையில்  யாரோ கட்டியிருந்தார்கள்.துணிகளை காயப்போடும் போது காவலர் கேட்டார் “குளிச்சாச்சி போல”என. வார்டில் இருந்த இரு பெண்கள் “டெய்லி இங்க உள்ள சாம்பார சாப்பிட முடியல,எனக்கு ரெண்டு ஆப்பம்,என் புருசனுக்கு நாலு இடியப்பம் வாங்கித்தர முடியுமா” எனக்கேட்டாள்.ஆரல்வாய்மொழி ரோஸ்மேரி. முதலில் ரோஸ் மேரியின் அம்மா,அப்பாவுக்கு  தொற்று உடனிருந்து கவனித்து கொண்டதில்,ரோஸ்மேரிக்கும் தொற்று வந்து அனுமதிக்கபட்டார் வீட்டிற்கு போகலாம் என மருத்துவர் எழுதிகொடுப்பதற்கு முதல் நாள் ரோஸ்மேரியின் கணவர் கொரோனா வார்டுக்கு வந்து சேர்ந்தார்.

    மருத்துவமனை வாயிலுக்கு வெளியே மஞ்சு உணவகம் இருப்பதை பார்த்தேன்.அது ஒரு வீடு அங்கேயே சமைத்த சூடான ஆப்பமும்,கடலை கறியும் சாப்பிட்டுவிட்டு பார்சல்களும் வாங்கிகொண்டேன்.

  இளம் கர்பிணிகள் மூவர் அனுமதிக்க பட்டனர்.இரவில்  கொஞ்சம் அபாயகரமான நிலையில் ஒரு பெண் வந்து சேர்ந்தாள்.இருபத்தி மூன்றே வயதான அபர்ணா “தம்பி என் புருசன காணல்ல கொஞ்சம் பாருங்க” என்றாள்.

 அபர்ணாவின் வீட்டிற்கு வெளியே கொரோனா சோதனை நடந்து கொண்டிருந்தது வெளியே சப்தம் கேட்டு எட்டிப்பார்த்த அபர்ணாவை சோதித்த போது பாசிட்டிவ் இங்கே கூட்டி வந்துவிட்டார்கள். “நான் சும்ம இருந்தேன்.வெளிய எட்டி பாத்தத்துக்கு இங்க கொண்டு வந்திட்டவா”என்றாள்.

அவளது கணவனுக்கு சோதனையில் நோய் தொற்று இல்லை என வந்தது.பகல் முழுவதும் மனைவியை அருகிலிருந்து கவனித்து கொள்ளும் அவளது கணவன் இரவில் பனியில் அமர்ந்து மொபைல் போனில் நேரம் கடத்தியபின் போண் பேட்டரி தீர்ந்து அங்கேயே கண்ண்யர்ந்ந்து விட்டான்.ஐந்து மாத கர்ப்பிணியான அபர்ணாவுக்கு திருமணம் ஆகி ஆறு மாதம் ஆகிறது. 

      இன்று வெளியே அமர்ந்துகொண்டு வார்டுக்குள் போவதை தவிர்த்தேன்.லேசான தலைவலியும், முதுகு தண்டுவட வலியும் தொடங்கியது அமரவே முடியவில்லை.கட்டன் சாயாவில் ஒரு அஞ்சால் அலுப்பு மருந்து போட்டு குடித்தேன்.பதினோரு மணிக்கு ரொம்பவே முடியவில்லை. நண்பரை ஸாம் பிரின்சை அழைத்தேன். “ஸார் மூணு நாள் ஆண்டி பயோடிக்,வாங்கி தாரேன்,வண்டி ஓட்ட முடியுமா,இங்க வாங்க” என்றார்.

  மருத்துவ தோழியை அழைத்து என் உடல்நிலை பற்றி சொன்னேன். “ஒன்னும்   பயப்படாண்டாம்,இந்த மருந்துகள்  போதும் முடியாமல் ஆனால் மட்டும் சொல்லுங்க”என்றார்.

  மாலையில் அமரவே முடியவில்லை  நான் தொழுகையை நிறைவேற்றும் திண்ணையில் போய் பாய் விரித்து படுத்து கொண்டேன்.ஒரு மணிநேரம் தூங்கிய பின் கட்டன் சாயாவில் மீண்டும் ஒரு அலுப்பு மருந்து போட்டு குடித்தேன்.

 உம்மா என்னிடம் “உன்ன கொஞ்ச நேரமா காணல்ல”

“வெளிய இருந்தேன்”என்றேன் .

“நான் வாசல்ல வந்து பாத்தேன் உன்ன காணல்ல”

“சாயா குடிக்க போயிருப்பேன்”என்றேன் .

உம்மாவிடம் எனக்கு உடல் நலமில்லாமல் இருப்பதை சொல்லவேயில்லை.

இன்றும் வெளியில் அமர்திருந்த நேரம் துப்புரவு பணி செய்யும் சொர்ணாவிடம்  பேசிக்கொண்டிருந்தேன். எனது பணி, குடும்பம் பற்றி விசாரித்தாள் ‘தாயன்பு’ (https://nanjilhameed.blogspot.com/2016/08/blog-post_14.html)கதையை சொன்னேன். “ அதான் தள்ளக்க கிட்டஇருந்து விலவாம பாக்குது தம்பி”என அருகிலிருந்த ரேவதியிடம் சொன்னபின்  தன் கதையை சொன்னாள் சொர்ணா.

   “அவரு கொத்தனாரு,மிந்தி கேரளத்துக்கு சோலிக்கி பெய்ருவாரு,ஒரு மொவனும்,மொவளும் எனக்கு.அவரு வந்தாதான் கைல பைசா கிடைக்கும்,நான் ஏதாவது வேலக்கி போவேன்,ஒரு பாக்கெட் சேமியா வாங்கி மூணு நேரமும் கிண்டி குடுப்பேன்.அந்த புள்ளயளு ஒன்னும் சொல்லாம தின்னுட்டு படுத்துகிடும் பாத்துகிடுங்க,மீனு வாங்க பைசா இருக்காது,தக்காளியும்,புளியும் போட்டு ஒரு குளம்புபோல வெச்சி குடுப்பேன்”.

“புள்ளயளு இப்ப என்ன செய்யிது” எனக்கேட்டேன்.

மொவன் இஞ்சினியரு படிச்சிட்டு,அந்த காலேஜில இப்ப வேலக்கி போறான்,மொவ நேள்ஸ் படிச்சிருக்கா”

அருகிலிருந்த ரேவதி “அவுரு குடிக்காத்ததுனால கொள்ளாம்,புள்ளயள நல்ல நிலமைக்கி கொண்டு வர முடிஞ்சது”என்றாள்.

“அப்ப மொவன் வேலக்கி போனா சொர்ணாக்காக்கு ரெஸ்ட் கிடைக்கும் இல்லியா”

“மொவள ஒருத்தனுக்க கையில புடிச்சி குடுத்துட்டேன்னா நிம்மதியாயிரும்”

நான் கவனித்ததில் தாயில்லா குழைந்தைகள் கல்வியை கூட பூர்த்தி செய்வதில்லை.தந்தையில்லா பிள்ளைகள் படித்து,நல்ல நிலையை அடைகிறார்கள்.தாய் களின் தியாகம்,உழைப்பு,அவமானங்கள் அதன் பின்னால் இருக்கிறது.அம்மாக்கள் எப்போதும் உயர்வானவர்களே ......

மேலும்