Thursday, 11 May 2023

பணிக்கு திரும்புதல்

    என் எஸ் பிரன்டியர் நாட்குறிப்புகள் .

    இம்முறையும் அன்றாடம் நாட்குறிப்புகளை எழுதுவதாக உள்ளேன். எனது இந்த வலைப்பூவில் இணையம் இருக்கும்போது  மட்டுமே வலையேற்ற முடியும்.தினமும் டைரி குறிப்புகளை வாசிக்க விரும்புபவர்களுக்கு வாட்சப்பில் அனுப்பி தருவேன்.

        

                            

     மும்பை சத்ரபதி விமான நிலையத்தின்  KLM 878 மும்பை டூ ஆம்ஸ்டர்டாம் செல்லும் விமானத்திற்குள் செல்ல கேட் 72இன் முன் அமர்ந்திருக்கிறேன்.  கடந்த ஆண்டு டிசம்பர் மூன்றாம் தேதி சிங்கப்பூர் எனெர்ஜி  கப்பலிலிருந்து ஊருக்கு வந்தேன்.

     மூத்த மகன் ஸாலிம் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்ததால் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை விடுமுறை சொல்லியிருந்தேன்.மார்ச் மாதம் கம்பனியிலிருந்து அழைத்து மீண்டும் பணிக்கு வரச்சொன்னார்கள். ஏப்ரல் முதல் வாரத்துக்குப்பின் தான் வர முடியும்.எல் என் ஜி கப்பலுக்கு செல்ல விருப்பமில்லை கப்பலில் பதவிஉயர்வு எதிர்பார்க்கிறேன்.எனவே எல் பி ஜி கப்பலுக்கு அனுப்ப வேண்டினேன்.

     கப்பலுக்கு போய் ஏன் பதவிஉயர்வு? நானே பதவி உயர்வு தந்து அனுப்புகிறேன் என்றார் எனது அலுவலக மேலாளர் தர்சனா. “ஷாகுல் நீண்ட நாட்களாக எஞ்சின் பிட்டராக பணி செய்கிறாய் ஏன் பதவி உயர்வுக்கு பரிந்துரை கடிதம் எதுவும் வாங்கவில்லை” எனக்கேட்டார்.

      கடந்த கப்பலில் வாங்கியிருக்கிறேன் என்றேன். கணினி திரையில் எனது ரிப்போட்டை வாசித்து காட்டினார்.இதில் பரிந்துரை இல்லையே என்றார். முதல் மூன்று மாதம் என்னுடன் இருந்த முதன்மை இஞ்சினியர் ரோம்லியிடம் வாங்கிய ரிப்போர்ட் உள்ளது என்றேன்.அதை எனக்கு அனுப்பு என்றார். மின்னஞ்சல் செய்தேன்.

   ஏப்ரலுக்கு முன் பணிக்கு வரவேண்டும் என சொன்னபோது மகனின் பரீட்சை இருக்கிறது அதற்கு பின் தான் வருவேன் என்றேன். “மகன் என்ன படிக்கிறான்,அவனது பரீட்சை எப்போது முடியும்”

“ஏப்ரல் ஐந்தாம் தேதி என்றேன்.

“ஏப்ரல் ஏழாம் தேதி பணிக்கு வா”என அழைத்தார்.

“சரி”என்றேன்.

  மார்ச் இறுதியில் ரமலான் நோன்பு காலம் துவங்கியதால் சுனிதா ரமலான் முடிந்தபிறகு போனால் போதும் என கட்டளையிட்டாள்.மார்ச் இறுதியில் என் மேலாளர் தர்சனா என்னை அழைத்து பணியில் இணையும் தேதியை உறுதியாக சொல்ல சொன்னார்.ஏப்ரல் இருபத்தியைந்து என்றேன்.சில தினங்களுக்குப்பின் மீண்டும் என்னை அழைத்து “பதவி உயர்வுக்கு கோலாலம்பூர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன்.விரைவில் உறுதி செய்வார்கள்.உன்னால் காஸ் பிட்டராக பணி செய்ய முடியும் தானே” எனக்கேட்டார் .

“எஸ்” என்றேன்.

எல்லாம் உறுதியாகி மே மாதம் பன்னிரெண்டாம் தேதி பனாமா சென்று கப்பல் ஏற வேண்டும். மருத்துவ சோதனைக்கு செல்ல கடிதம் அனுப்பினார்.மே ஒன்றாம் தேதி சென்னையில் மருத்துவ சோதனைக்கு  சென்றேன். எக்ஸ் ரே,இரத்தம்,மூத்திரம்,கண்,பல்,இ ஸி ஜி சோதனை, கிட்னி,கல்லீரல் ஸ்கேன் முடித்து இறுதியாக மருத்துவரிடம் சென்றேன்.

    இளம் வயது பெண் மருத்துவர் ரத்த அழுத்தத்தை சோதித்தபின் “குடி,புகைக்கும் பழக்கம் உண்டா,சுகர்,பிரஷர் இருக்கிறதா,மருத்துகள் ஏதும் உட் கொள்கிறீர்களா” எனக்கேட்டார்.அனைத்துக்கும் இல்லை என்று சொன்னேன்.

         உங்களுடைய இ ஸி ஜி இதயத்தில் பிரச்சனை இருப்பதாக சொல்கிறது எனவே இதய நிபுணர் ஒருவரிடம் கருத்து கேட்டு கடிதம் வாங்கி வரவும்.அவர் ஏதாவது மருந்து எழுதி தந்தால் அந்த மருந்து சீட்டையும் கொண்டு வரவேண்டும் என்றார்.

   இன்று ஸ்கேன் செய்யும்போது எனது இடபக்க கிட்னியை அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பத்து முறைக்குமேல் மூச்சை இழுத்து நிறுத்த சொன்னார்கள்.பின்னர் வேறு ஒரு பெண் வந்து மூச்சை இழுக்க சொல்லி நிறுத்தியபின் கிட்னி அவர்களுக்கு தென்பட்டது.

 நாற்பது வயதை தாண்டியபின் திரட் மில்லில் ஓட விட்டு இ ஸி ஜி எடுப்பார்கள்.நீண்ட நடை,மலையேற்றம் பயிற்சி செய்யும் எனக்கு அது மிக எளிதானது.

  

            இம்முறை  இதய நிபுணரிடம் திரட் மில் சோதனை செய்ய சொல்லி அனுப்பினார். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என தெரிந்ததால் பதட்டம் ஏதும் இல்லை. விஷ்ணுபுரம் நண்பர் மருத்துவர்,பேராசிரியர் மாரிராஜை அழைத்தேன்.

   “கப்பல் காரரே வணக்கம்” என்றார்.விசயத்தை சொன்னேன்.எனது இ ஸி ஜியை போனில் அனுப்பச்சொல்லிவிட்டு எங்கே இருக்கீங்க என கேட்டபின் ஐந்து நிமிடத்தில் அழைப்பதாக சொன்னார். வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் இதய நிபுணரை சந்திக்க  ஏற்பாடு செய்தார்.


             அவர் சொன்னது போலவே ஐந்து நிமிடத்தில் அவரால் அது சாத்தியமாயிற்று.எனது இ ஸி ஜி யில் பிரச்னை ஏதும் இல்லை என்றார். வானம் கறுத்து லேசாக மழை பெய்துகொண்டிருந்தது. பெரு நகரின் நெருக்கமான சாலைகளில்  டி நகரிலிருந்து ஆட்டோவில் சென்று சிம்ஸ் மருத்துவமனையின் மூத்த இதய நிபுணர் மருத்துவர் பிராசாத்தை பார்த்தேன்.திரட் மில் டெஸ்டுக்கு அனுப்பினார்.

     

காலையில் ஏதும் சாப்பிடாததால் உணவுண்டு இரண்டு மணி நேரத்துக்குப்பின் டெஸ்ட் எடுப்பதாக சொன்னார்கள். எதிரிலிருந்த முனியாண்டி விலாஸில் பொரித்த அயில மீனுடன்,சாளை மீன் குழம்பு வைத்து சாப்பிட்டேன. எதிரில் அமர்ந்திருந்த குடும்பம் பொன்னியின் செல்வன் படம் பார்த்துவிட்டு வந்திருந்தார்கள். “படம் எப்படி இருக்கிறது” எனக்கேட்டேன்.“நல்லா இருக்கு சார்” என்றார்கள்.அருகிலிருந்த பள்ளிவாசலில் லுகர் (கடமையான மதிய வேளை தொழுகை) தொழுதுவிட்டு திரும்பி வந்ததும் என்னை அழைத்து பணம் கட்ட சொன்னார்கள்.

  திரட் மில் டெஸ்டுக்கு தயார்ஆகும் பொருட்டு மார்பிலிருந்த மயிர்களை மருத்துவமனை ஊழியர் சவரம் செய்து வழித்து சுத்தப்படுத்தியபின் இ ஸி ஜி கணினி திரையுடன் இணைக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட வயர்களின் முனையை மார்பில் ஒட்டவைத்தார் திரட் மில் சோதனை செய்யும் பெண்.அவளிடம் கேட்டேன் “இப்டி மாட்டுனதுமே பயந்துருவாங்களே”

“ஸார் டெஸ்டே வேண்டான்னு ஓடிரூவாங்க”என்றாள். கடந்த ஏழு வருசமா நான் கப்பலுக்கு போகும்போது இந்த டெஸ்ட் எனக்கு எடுக்கிறாங்க”என்றேன்.

 

               திரட் மில்லில் ஓடும்போதே மூன்று முறை ரத்த அழுத்தம் சோதித்தார்கள்.பத்து நிமிட டெஸ்டில் மூன்று முறை வேகத்தையும்,சாய்வையும் அதிகரித்தனர்.பின்னர் மருத்துவரை பார்த்தேன்.அருகிலிருந்த இளம் மருத்துவரிடம் எனது புதிய இ ஸி ஜி யை காண்பித்து பார்க்க சொன்னார்.


                   அவரும் புகை,குடி பழக்கம் உண்டா?தைராய்டு,சுகர்,பிரஷர் இருக்கிறதா என கேட்டார்.மூத்த மருத்துவரிடம் “எல்லாம் நார்மலா இருக்கா” எனக்கேட்டேன்.பிரச்சனை இருக்கு உங்க டாக்டர் அத சொல்வாங்க  என சொன்னார்.மீண்டும் டி நகர் பாலாஜி மருத்துவ மனைக்கு வரும்போது மணி ஐந்தாகியிருந்தது.


                  காலை ஒன்பது மணிக்கே வந்ததால் எதிர்பாராமல் வந்த டெஸ்ட்டுகளை முடித்துவிட்டு ஐந்து மணிக்கு  திரும்பி பாலாஜி மருத்துவமனைக்கு வர முடிந்தது.பாலாஜி மருத்துவமனை ஊழியர்கள் இருமுறை அழைத்து “ஸார் எப்ப வருவீங்க எனக்கேட்டனர்.

   

      மருத்துவர் எனக்காக காத்திருந்தார். சிம்ஸ் மருத்துவமனையின் ரிப்போட்டை வாங்கி பார்த்தபின் எனக்கான மருத்தவ சான்றிதழை தயார் செய்ய சொன்னார்.அவரிடம் கேட்டேன் “என்ன பிரச்னை” என.

   “ஒன்றும் இல்லையென” பதிலளித்தார். மருத்துவர் மாரிராஜை அழைத்து கூறினேன். பத்திரமாக போய் வாருங்கள் மனதில் குழப்பம் ஏதும் வேண்டாம்.அடுத்தமுறை இந்தியா வந்தபின் மீண்டும் பார்க்கலாம் என்றார்.


                      இரவில் சுனிதாவை அழைத்தேன். “அது ஏன் இப்ப அப்படி காட்டுது,மெடிக்கல் போறதுக்கு மின்ன நல்லா உறங்கி ரெஸ்ட் எடுத்துட்டு போணும்,இது எங்கயும் போய்ட்டு யாருக்க காறுலயாவது தொங்கிட்டு போய் மெடிக்கலுக்கு போனா” என சீறினாள்.மூன்று தினங்கள் கோவை அருகில் ஆனைகட்டியில்  நடந்த சிறுகதை பயிலரங்கத்தில் கலந்துவிட்டு சேலம் வரை வந்த நண்பர் பிரபாகரின் காரில் வந்து அங்கிருந்து அரசு பேருந்தில் சென்னைக்கு காலை ஆறு மணிக்கு வந்து சேர்ந்தேன். தாம்பரத்தில் வசிக்கும் நண்பர் அசோக்கின் வீட்டிலிருந்து குளித்து தயாராகி எட்டுமணிக்கு புறப்பட்டு சென்றேன்.


                    சுனிதா மீண்டும் “நீங்கோ இப்பவும் சின்ன புள்ள கிடையாது ஓறும இருக்கட்டு,அதுக்கு தகுந்தமாரி உடம்ப பேணி கிடுங்கோ”என்றாள். “அப்போ எனக்கு வயசாயிட்டுன்னு சொல்லுதியா”எனக்கேட்டேன். “அது மனசிலானா கொள்ளாம்” என்றாள்.


    அன்று மதியமே (ஞாயிற்றுக்கிழமை)ஏழாம் தேதி மும்பை செல்வதற்கான விமான டிக்கெட் வந்தது, புரியாமல் பார்துகொண்டிருக்கும்போதே மும்பையில் இரு தினங்கள் தனிமைபடுத்தலுக்கான விடுதி பதிவையும் எனது மும்பை அலுவலகம் அனுப்பியது.


   இருதினங்கள் மும்பையிலும் பின்னர் பனாமா சென்று அங்கும் மூன்று தினங்கள் தனிமை படுத்தலுக்குப்பின் பன்னிரெண்டாம் தேதி கப்பல் ஏற வேண்டும் என என்னுடன் கப்பலுக்கு வரும் மூன்றாம் இஞ்சினியர்  பிரம்பலி கொன்சால்வேஸ் சொன்னார்.


              சென்னையிலிருந்து வியாழன் காலை தான் வீட்டுக்கு வந்தேன்.பயணத்துக்கான ஆவணங்கள் மின்னஞ்சலில் வந்துகொண்டே இருந்தது அனைத்தையும் அனுப்பினேன்.இரு தினங்களில் தேவையான அனைத்தையும் வாங்கி பயண பையை தயார் செய்து,பாக்கியிருந்த சிறு வேலைகளையும் முடித்தேன்.என்னால் முடியாமல் போன வேலைகளை சுனிதா தான் பார்த்து கொள்ள வேண்டும்.அடுத்த ஏழு அல்லது எட்டு மாதங்களுக்கு அனைத்து பொறுப்புகளும் அவளுக்குத்தான்.

          


                              ஏழாம் தேதி காலை திருவனந்தபுரத்திலிருந்து ஒன்பது மணிக்கு விமானம் காலை மூன்று மணிக்கே விழித்து நான்கு மணிக்கு வீட்டிலிருந்து இறங்கினேன்.உம்மா என்னை முத்தி அல்லாஹ்வுடைய காவல் பத்திரமா போய் வா மோனே என வாழ்த்தி அனுப்பினாள். மகன் ஸாலிம் என்னை  வடசேரியிலிருந்து பஸ் ஏற்றி விட்டான்.


              என் தாய் பீமா வெள்ளிக்கிழமை மதியமே வீட்டிற்கு வந்துவிட்டாள்.சனிக்கிழமை மாலையில் சுனிதாவின் உடன் பிறப்புகள்,வாப்பா,உம்மா பிள்ளைகள் வந்து சென்றனர்.நண்பர் ஸாம் பிரின்ஸ் மனைவியுடன் இரவு வந்து எனது,பஸ்,விமான,கப்பல் பயணம் மற்றும் பணியில் இறைவன் துணையிருக்க வேண்டி மன்றாடினார்.

 

தம்பி ஜானகி 

                   காலை ஆறு மணிக்கு தம்பானூரில் இறங்கும்போது தம்பி ஜானகி அங்கே நின்றுகொண்டிருந்தார். அவரது இருசக்கர வாகனத்தில் விமான நிலையம் சென்றோம்.ஜானகி விமான நிலையத்தில் பணிபுரிவதால் அவருக்கு குறைந்த விலையில் கிடைக்கும் காபி அருந்திவிட்டு என்னை வழியனுப்பினார்.

   

ஏர் இந்தியா விமானம்

ஏர் இந்தியா விமானம் சீக்கிரமே புறப்பட்டது பதினோரு மணிக்கு மும்பையில் இறங்கினேன். மும்பை சக்காலா (ஜே பி நகர்)கோகினூர் காண்டினெண்டல் விடுதியின் ஓட்டுனர் இம்ரான் என்னை அழைத்து சென்றார்.

     

நட்ச்சத்திர விடுதியின் வரவேற்ப்பறையில்  மூன்றாம் இஞ்சினியர் பிரம்பலி காத்திருந்தார்.எங்களுடன் வரும் காப்டன் அருண் பிலிப் பத்து நிமிடத்தில் வந்தார். இரு தினங்கள் அறையில் இருந்தோம். திங்கள்கிழமை காலையே எனது மேலாளர் தர்சனா அழைத்து விசாரித்தார்.

விமான சீட்டு,பனாமா விசா மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களும் மின்னஞ்சலில் வந்தது. தேவையானதை காப்டன் பிலிப் அச்சு பிரதி எடுத்து தந்தார்.

   மும்பை-ஆம்ஸ்டர்டாம் வழியாக பனாமாவுக்கு பயணம்.இரவு பத்து மணிக்கு எங்களை அழைத்து செல்ல இம்ரான் காரில் வந்தார்.காப்டன் பிலிப் அரை மணிநேரம் முன்னதாக சென்றுவிட்டார்.


மும்பை விமான நிலையம்


மும்பை சத்ரபதி விமான நிலையத்தில் பெருங்கூட்டம் இருந்தது. நாங்கள் சீக்கிரமாகவே வந்துவிட்டதால் பயண பைகளை அளித்துவிட்டு பாதுகாப்பு,குடியிரிமை சோதனைகளை முடித்து விட்டு பதினொன்றரை மணிக்கு klm 878 விமானம் புறப்படும் வாயில் 72 இன் முன் அமர்ந்து கொண்டோம். அதிகாலை இரண்டு இருபதுக்கு விமானம் புறப்படும் நேரம் ஒன்பதரை மணி நேர பயணம் ஆம்டேர்டாமுக்கு.

 கடந்த இருமுறையும் கப்பலுக்கு புறப்படும்போது எனது விசா,இ மைகிரென்ட் கடவு சீட்டு எண் தவறாக அச்சிட்டபட்டிருந்தது.இம்முறை எந்த குழப்பமும் இல்லை.விமானத்தில் ஏறி விட்டால் ஒன்பதரை மணி நேர பயனத்திற்க்கு பின் ஆம்ஸ்டர்டாமில் இறங்கி விடலாம்.

 

ஷாகுல் ஹமீது,

09 may 2023.

Tuesday, 25 April 2023

இஃதிகாப் நாட்கள் 2

 


  

       கப்பலில் வேலை செய்யும் எனக்கு ஞாயிறுகளில் மதியத்திற்குமேல் ஓய்வு கிடைக்கும்.ஏதும் அவசர வேலை அல்லது கப்பல் துறைமுகத்தில் இல்லாமல் இருக்கவேண்டும். முழு நாள் ஓய்வு என்றால் ஒரு வித சோர்வை தரும்.எப்போதும் பரபரப்பாக எதையாவது செய்து கொண்டே இருப்பவர்களுக்கு வேலை இல்லை என்றால் “பைத்தியம் புடிச்சது போல இருக்கு”என சொல்ல கேட்டிருகிறேன். கப்பல்காரர்களுக்கு தண்டனை கொடுக்க நினைத்தால் வேலைக்கு வர வேண்டாம் அறையில் அமர்ந்துகொள் என சொன்னால் போதும்.

   எப்போதும் எதையாவது செய்துகொண்டே இருக்கும் நமக்கு சும்மா இருத்தல் கடினம் தான். என்னால் எங்கும் தொடர்ந்து அமர முடியாது.வேலை தேடி மும்பை சென்றபின் ஒரே வேலையில் அமராமல் இரண்டு வருடங்களில் மூன்று கம்பனிகள் மாறினேன்.இப்போது இருக்கும் கப்பல் பணியில் ஒவ்வொரு நாளும் ஒரு புது நாள் புதிய பிரச்சனைகளை சந்தித்தே ஆக வேண்டும்.ஏதும் பிரச்னை இல்லை என்றால் காலையில் எழுந்ததும் கழிப்பறை வேலை செய்யாது.அதை சரி செய்தபின் கழிப்பறை உபயோகிக்க முடியும் என்ற கட்டாயம்.அதனால் தான் பதினேழு ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் கப்பல் பணியில் நீடிக்கிறேன்.

    இஃதிகாப் இருக்கும்போது அடுத்த ஐந்து நிமிடத்தில் அல்லது ஒரு மணிநேரத்திற்குப்பின் அல்லது நாளை மறுநாள் இதை செய்தாக வேண்டும் என எதுவும் இல்லை. எனக்கு அது ஒரு பெரிய விடுதலையாக இருந்தது.செய்வதற்கு ஒன்றும் இல்லை.(no task,no target,no goal)

  அதிகாலை பஜர் தொழுகைக்குப்பின் ஆறு மணிக்கு தூங்கி பத்துக்குள் விழித்து குளித்து ஆடை மாற்றி வந்தால் தொழுகை,திக்ர்,குர்ஆன் ஓதுதல் வேறொன்றும் இல்லை. நாள் முழுவதும் இரவும்,பகலும் இறைவனின் இல்லத்தில் அமர்ந்திருந்து இறை வணக்கமும்,வழிபாடும்,இறைவனுக்கு நன்றி செலுத்துதலும்.நோன்பு ஆதலால் பகலில் உண்ணவும்,பருகவும் தேவையில்லை அதனால் சிறுநீர் கழிக்கவும்,கழிப்பறை செல்லும் தேவையும் மிகக்குறைவு.

நான்காம் நாள் அர்சத்,அனீஸ் என ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இருவர் இஃதிகாப் இருக்க வந்தனர்.முஸ்தபா சென்றுவிட்டான். மறுநாள் இர்பான் மூன்று தினங்கள் இருப்பதற்காக மீண்டும் வந்தான்.அன்றாடம் வேலை செய்து குடும்பத்தை நடத்தும் ரஹீம் மற்றும் தொழிலதிபர்கள் முஜிப்,பீர் முகம்மது ஒருநாள் இருப்பதாக சொல்லிவிட்டு வந்தனர்

      வடசேரி பள்ளி கனமூலம் சந்தை,வடசேரி பேருந்துநிலையத்தை ஒட்டியே இருக்கிறது. இஃதிகாப் இருக்கும் எங்களுக்கு காட்சிகளே இல்லை,யாரிடமும் பேசவும் கூடாது என்பதால் செவிவழி செய்தி ஏதும் மூளைக்கு செல்லவில்லை.இரண்டாயிரம் சதுர அடி பள்ளிவாசலுக்குள் இருந்த டிஜிட்டல் கடிகாரமும்,இமாம் குத்பா ஓதும் மெம்பர்  மட்டுமே காட்சி.நான் பெரும்பாலும் விழிகளை சந்திப்பதை தவிர்த்தேன்.திக்ர் மூலம் எளிதாக தியானத்துகுள் செல்ல முடிந்தது.

                        


   ரமலானின் கடைசி பத்தில் லைத்துல் கதிர் எனும் குர்ஆன் இறக்கப்பட்ட புனித இரவு வருகிறது.நபிகள் நாயகம் (ஸல்) கடைசி பத்தில் ஒற்றைபடையான நாளில் லைலத்துல் கதிர் இரவு வருகிறது அதை தேடிக்கொள்ளுங்கள் என்றார். லைலத்துல் கதிர் இரவில் நின்று வணங்கினால் எண்பத்து மூன்று ஆண்டுகள் வணங்கியதற்கு நிகர் என்பதால் ரமலானின் கடைசி பத்தில் லைலத்துல் கதிர் இரவை அடையும் பொருட்டு  பெரும்பாலான பள்ளிவாசால்களில் இரவு இரண்டு மணிக்கு தொழுகை நடைபெறுகிறது.

  ஆறாவது நாள் மாஹீன் ஹாஜியார் வந்து மூன்று தினங்கள் இருந்தார்.  என் இளைய மகன் சல்மான் ஏழாம் நாள் வந்து ஒருநாள் மட்டும் இஃதிகாப் இருந்து சென்றான். இஃதிகாப் இருந்து நன்றாக மனம் அமைதியடைந்திருந்தது. இருபத்திஏழாம் இரவு லைலத்துல் கதிர் இரவு என நம்பபடுவதால் அன்று மாலை மக்ரிப் தொழுகைக்குப்பின் உள்பள்ளி பூக்களால் அலங்கரிக்கபட்டு இரவு முழுவதும் தொழுகைக்காக தயார் ஆனது. பத்து மணிக்கு துவங்கிய இஷா தொழுகையை தொடர்ந்து தராவீஹ் தொழுகையும்,பயான்,தஸ்பீக் தொழுகை என நீண்ட இரவில் அன்று வழக்கத்துக்கு மாறாக சுமார் எழுநூறு பேர் வரை ஆண்களும்,பெண்களுமாக திரண்டுவிட்டனர்.பெரும்பாலானோர் புத்தாடை அணிந்து கொண்டாட்ட மனநிலையில் இருந்தனர்.மாலையில் பூக்களால் அலங்காரம் செய்யும்போதே அமைதி கலைந்துவிட்டது.மறுநாள் மதியத்திற்கு மேல் தான் மீண்டும் அமைதிக்குள் செல்ல முடிந்தது.

     இரண்டாவது நாளே உணர்ந்தேன் இஃதிகாப் இருப்பது ஒன்றும் கடினம் இல்லை என.மனம் அமைதியில் இருந்தது. ஆனால் இங்கே ஒரு காலம் இருந்தது அது நிகழ்காலம் மட்டுமே.பள்ளிவாசலில் ஐவேளை தொழுகைக்கும் பாங்கு சொல்லி நேரம் தவறாமல் தொழுகை நடப்பதால் காலம் இருப்பது தெரிந்தது. மருத்துவமலை போல் ஒரு உயரமான இடத்தில் தனிமையில் அமர்ந்தால் காலமின்மையில் சென்றிருக்கலாம்.

   எது தேவை என தெளிவாக புரிந்தது. குடியிருக்க ஒரு வீடு,உடை,உணவு மட்டுமே. மூத்த மகன் இவ்வாண்டு கல்லூரி செல்கிறான்,இளையவன் ஏழாம் வகுப்பு இருவருக்கும் நல்ல கல்வியை கொடுப்பது என் கடமை. அடுத்த பத்தாண்டுக்குள் அதற்கு பின் வாழ்வதற்கு தேவையான பொருளை வேகமாக சம்பாதித்து சேர்த்து விட்டு முடிந்தவரை வீட்டிலேயே தனிமையில் இருக்க எண்ணியுள்ளேன்.

 சூழ்நிலை அமையுமானால் மாதத்தில் ஒருநாள் (பிறை 13,14,15,16 ல் ஒரு நாள்) நோன்பிருந்து மொபைல் போனை ஆப் செய்துவிட்டு உலகிலிருந்து என்னை துண்டித்து கொண்டு திக்ர்ல் அமர போகிறேன்.வரும் காலங்களில் ரமலான் மாதத்தில் விடுமுறையில் இந்தியாவில் இருந்தால் இதுபோல் (இன்ஷா அல்லாஹ்) பத்து நாள் இஃதிகாப் இருப்பதாகவும் உள்ளேன். 

  இஃதிகாப் செல்லும்முன் சுனிதா சொன்னாள் “மொபைல் இல்லாம உங்களால இருக்க முடியாது,பத்து நாள் உங்களால இஃதிகாப் இருக்க முடியுமா:"எனவும் கேட்டாள். பத்து நாள் இஃதிகாப் இருந்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது சுனிதா மகிழ்ச்சியில் இருந்தாள்.முன்பே சொல்லியிருந்தாள் உங்களை ஒரு நாளாவது இஃதிகாப்புக்கு அனுப்ப வேண்டும் என எண்ணியிருந்ததாக.

  இறைவனுக்கு பின் சுனிதாவுக்குதான் நன்றி சொல்வேன்.என் இஃதிகாப் நாட்கள் முழுமையடைந்தது அவளால் தான் .வீட்டிலிருந்து எந்த செய்தியும் வரவில்லை.வீட்டை, மகன்களை கவனித்து கொண்டாள்.அதனால் தான் என்னால் முழுமையாக இஃதிகாப்பில் அமர முடிந்தது.

  முற்றும்.

  ஷாகுல் ஹமீது,

    25 april 2023.

Monday, 24 April 2023

இஃதிகாப் நாட்கள்



இஃதிகாப் இருப்பதற்காக பன்னிரெண்டாம் தேதி மாலை மக்ரிப் தொழுகைக்கு முன்பே வடசேரி பள்ளிவாசல் சென்றுவிட்டேன்.நோன்பு திறப்பதற்காக கூடத்தில் சென்றபோது மாஹீன் ஹாஜியார் “நீங்கோ பள்ளிக்குள்ள போயிருங்கோ”என்றார்.பேரீத்தம் பழம்,தர்பூசணி துண்டு,வாழைப்பழம் இருந்த தட்டுடன், ஒருகப் தண்ணீர்,சர்பத் எடுத்துவிட்டு பள்ளிக்குள் அமர்ந்து நோன்பு திறந்தோம்.

        



 அப்போதே இஃதிகாப்துவங்கிவிட்டது,தொழுகைக்குப்பின் நோன்பு கஞ்சி பள்ளிக்கு  உள்ளேயே எங்களுக்கு வழங்கப்பட்டது.கட்டிட பொறியியல் பட்டதாரி சுதீர் என்னுடன் பத்துநாள் இஃதிகாப் இருப்பதாக சொன்னான்.பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன் இர்பான் இன்று மட்டும் இருப்பேன் இரு தினங்களுக்குப்பின் மீண்டும் மூன்று தினங்கள் இஃதிகாப் இருக்க வருவேன் என்றான்.

   ஏழு நாற்பதுக்கு இஷா தொழுகைக்கு பாங்கு சொன்னபின் உளு* செய்து விட்டு இரண்டு ரக்காத் சுன்னத் தொழுதபின் திக்கிரில் அமர்ந்திருந்தேன்.எட்டேகாலுக்கு இஷா தொழுகைக்குப்பின் எட்டரைக்கு இருபது ரக்காத் தராவிஹ்* தொழுகை முடிந்து துவாவுக்குபின் மூன்று ரக்காத் வித்ர் தொழுகை பின்னர் அன்று தராவிஹ் தொழுகையில் ஓதிய குர் ஆன் சூராவிலிருந்து இமாம் பயான் சொன்னார்.பத்தே கால் மணிக்கு பள்ளிவாசல் காலியாகிவிட்டது.

  மோதினார் வாசல் கதவுகளின் சாவிகளை இர்பானிடம் கொடுத்து பூட்ட சொல்லிவிட்டு கடைசியாக பள்ளியை விட்டு வெளியேறினார்.இரண்டு இமாம்களும் பள்ளியின் மேலே இருந்த தங்கும் அறையில் தூங்க சென்றனர்.தொழுகை நடக்கும் உள் பள்ளியில்தான் இஃதிகாப் இருப்பவர்கள் தூங்க வேண்டும்.சுனிதா தந்துவிட்ட பாலை குடித்துவிட்டு மாடியில் சென்று உளு செய்துவிட்டு பள்ளிக்குள் வந்து இரண்டு ரக்காத் நபில் தொழுதபின் சிறிது நேரம் திக்கிரில் அமர்ந்திருந்தேன்.

  பதினோரு மணிக்குப்பின் படுத்துக்கொண்டேன் கால் பாதங்களையும்,கழுத்து,கைகளையும் கொசு அவ்வபோது கடித்துக்கொண்டே இருந்ததால் சரியான தூக்கம் இல்லை.அதிகாலை இரண்டு மணிக்கு முன்பாகவே விழித்து தயாரானேன்.இரண்டு மணிக்கே ஷமா ஷாகுல் ஹமீது,பள்ளி நிவாகிகளில் ஒருவரான பீர் முகம்மது,எழுபது வயதை கடந்த ஒருவர்,இன்னும் ஒரு இளைஞர் பள்ளிக்கு வந்துவிட்டனர்.

                               


  சரியாக இரண்டரை மணிக்கு தகஜத் தொழுகை துவங்கியது. மங்கிய வெளிச்சத்தில் மிக மெதுவாக தொழுத எட்டு ரக்காத் தொழுகை மூன்றரை மணிக்கு  முடிந்தது . பள்ளி நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட இருபதுபேருக்கு  அங்கே ஸகர் உணவு வழங்கபட்டது. இஃதிகாப் இருந்த எங்கள் மூவரை தனியாக ஒரு மேஜையில் அமரவைத்தனர்.எங்களிடம் பேசுவதை பெரும்பாலானோர் தவித்தனர்.

 ஸகர் உணவு உண்டபின் மீண்டும் உளு செய்து இரண்டு ரக்காத் நபில் தொழுதுவிட்டு திக்கிரில் அமர்ந்திருந்தேன் காலை நான்கு நாற்பதுக்கு ஸகர் முடிவு நேரம் கடைசியாக அரை கப் தண்ணீர் குடித்துவிட்டு தண்ணீர் பாட்டிலை காலி செய்து வைத்துக்கொண்டேன்.காலை ஐந்து மணிக்கு பஜர் தொழுகைக்கு பாங்கு சொன்னதும். மீண்டும் உளு செய்து இரண்டு ரக்காத் முன் சுன்னத் தொழுது அமர்ந்தேன்.ஐந்து இருபதுக்கு பஜர் தொழுது துவாவுக்குபின் மீண்டும் பள்ளிவாசலில் ஆளோளிந்தது.

   சிறிது நேரம் சும்மா அமர்ந்து விட்டு படுத்து கொண்டேன்.ஒன்பது மணிவரை நல்ல தூக்கம்.துயில் கலைந்து மாடிக்கு சென்று துணிகளை துவைத்து,குளித்து,உளு செய்து பத்துமணிக்கு பள்ளிக்குள் வந்துவிட்டேன்.இரண்டு ரக்காத் நபில், லுகா தொழுதபின்,குர்ஆன் தர்ஜுமா ஓத துவங்கினேன். பதினோரு மணிக்குமேல் அமல்களின் சிறப்பு எனும் நூல் (2010 ஆம் ஆண்டு வாங்கியது)வாசிக்க துவங்கினேன்.

   இஃதிகாப் பற்றியும்,திக்ர் மற்றும் குர்ஆன் ஓதுதல்,தொழுகை,ஸாகத்,நோன்பு ஆகியவற்றின் சிறப்பை கூறும் நூல் அது.பன்னிரண்டு இருபதுக்கு லுகர் தொழுகைக்கான பாங்கு முன் சுன்னத் இரண்டு ரக்காத் பர்ளானலுகர் நான்கு ரக்காத் பின்   சுன்னத் இரண்டு ரக்காத் தொழுகைக்குப்பின் மீண்டும் தர்ஜுமா ஓத துவங்கினேன்.

    இரண்டு மணிக்கு தூக்கம் அழுத்தியதால் சுதீரிடம் மூன்று மணிக்கு எழுப்பிவிட சொல்லிவிட்டு தூங்கிவிட்டேன்.தூங்கி விழித்தபின் பல் தேய்த்து உளு செய்து இரண்டு ரக்காத் நபில் தொழுதேன்.மூன்று இருபதுக்கு அஸர் தொழுகைக்கான பாங்கு சொன்னது முன் சுன்னத் இரண்டு ராக்கத்துக்குப்பின் பர்ள் நான்கு ரக்காத் தொழுகைக்குபின் இமாம் ஐந்து நிமிடம் பயான் சொன்னார். ஐந்தரை மணிவரை திக்கிரும்,தர்ஜுமாவும் ஓதியபின்.மாலையில் மீண்டும் ஒரு குளியல்.காலையில் துவைத்த துணிகளை மடித்து அடுக்கி வைத்துக்கொண்டேன்.

ஆறு மணிக்கு மேல் இமாம் தௌபா செய்து பள்ளியில் வேலை செய்யும் தன்னார்வலர்கள்,நோன்பு கஞ்சி,மற்றும் இப்தார் எனும் நோன்பு திறக்க தேவையான உணவுகளை வழங்கியவர் மற்றும் நோன்பாளிகள்,அல்லாதவர்கள்,உலக சமாதானத்துக்காக துவா செய்தார்.சரியாக ஆறரை மணிக்கு நோன்பு திறந்தோம். இஃதிகாப் இருந்த எங்களுக்கு நோன்பு திறக்க தேவையான பழம்,சர்பத் தண்ணீர் ஆகியவற்றை தனார்வலர் நபீஸ்,ரிபாத் உள்ளே கொண்டு வந்து தந்தனர்.

  மக்ரிப் தொழுகைக்குப்பின் எங்களுக்கான கஞ்சியை பள்ளிக்குள் கொண்டு வந்து தந்தனர்.பின்னர் இர்பான் வீட்டுக்கு சென்றார்.மக்ரிபுக்கு முன்பே முஸ்தபா எனும் எட்டாம் வகுப்பு மாணவன் இருதினங்கள் இஃதிகாப் இருப்பதற்காக எங்களுடன் வந்து சேர்ந்து கொண்டான். காலையில் இமாம் கேட்டார் “உள்ள கொசுக்கடி உண்டுமா” என. “கொசு வலை இருந்தா போட்டுகிடுங்கோ” என சொன்னார். இர்பானிடம் என் வீட்டிலிருந்து கொசுவலையை வாங்கி வர சொன்னேன். அவனே கொசுவலையையும்,எனக்கு குடிப்பதற்கான பாலையும் கொண்டு வந்தான்.

 வழக்கம்போல் இஷா,தராவிஹ் தொழுகை,பயான் முடிந்து பள்ளியில் ஆளோளிந்ததும் பதினோரு மணிக்கு கொசுவலையை கட்டி அதற்குள் படுத்து கொண்டேன். முஸ்தபாவும்,சுதீரும் வீட்டிலிருந்து வந்த இடியப்பம் முட்டைகறியை சாப்பிட்டுவிட்டு அமர்ந்து குர்ஆன் ஓத துவங்கினர்.இரவு ஒரு மணிக்கு கண்விழித்து பார்க்கும்போதும் அவர்கள் ஓதி கொண்டே இருந்தனர்.தகஜத்  தொழுகைக்காக இரவு இரண்டு மணிக்கு விழித்துகொண்டேன்.பள்ளிக்குள் இறை நேசர்களும்,அல்லாஹ்வின் நல்லாடியார்களும் வரத்தொடங்கினர்.

   பள்ளியில் வெள்ளிக்கிழமை ஜும்மா உரை,மற்றும் அனைத்து பயான்களிலும் இமாம்கள் பள்ளிக்குள் அமர்ந்திருப்பவர்களை இறை நேசர்களே,நல்லாடியார்களே என்றுதான் அழைக்கின்றனர்.

    https://nanjilhameed.blogspot.com/2023/04/blog-post.html

மேலும் ....

24 april 2023

ஷாகுல் ஹமீது.

Saturday, 8 April 2023

இஃதிகாஃப்

 

      

                                                                            இஃதிகாப்

இம்முறை விடுமுறையில் ஊருக்கு வந்த சில நாட்களிலேயே வடசேரி பள்ளிவாசலில் அதிகாலை பஜர் தொழுகைக்குப்பின் நடந்த பயானில் இஃதிகாப் பற்றி குர் ஆனில் உள்ள வசனத்தை இமாம் சொன்னார்கள். 



இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து(இஃதிகாஃபில்) இருக்கும்போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள். இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அதை (வரம்புகளை மீற) நெருங்காதீர்கள். இவ்வாறே (கட்டுப்பாட்டுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். (அல்குர்ஆன் 2:187)

   எனது மகன்கள் படிக்கும் பள்ளிக்கு அருகில் உள்ள நெசவாளர் காலனி பள்ளிவாசலிலும்

  இந்த பள்ளியில் இஃதிகாஃப் இருக்க விரும்புகிறேன் (நிய்யத் வைக்கிறேன்)என வாசகம் எழுதி வைத்திருப்பார்கள்.

                     

  இஃதிகாஃப் என்றால் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்காக இறை இல்லமான பள்ளியில் தங்கியிருப்பது, நோன்பு காலத்திலும் நோன்பு அல்லாத காலத்திலும் இஃதிகாஃப் இருக்கலாம். நோன்பு காலத்தில் இஃதிகாஃப் இருப்பது மிகச் சிறந்தது. நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் நோன்பு மாதத்தின் கடைசி பத்து நாட்களும் இஃதிகாஃப் இருப்பார்கள். மரணித்த வருடத்தில் இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். இஃதிகாஃப் இருப்பவர் குளிப்பது, மலஜலம் கழிப்பது போன்ற அவசியத் தேவைக்கின்றி பள்ளியை விட்டும் வெளியில் செல்லக்கூடாது, நோன்பின் கடைசிப்பத்தில்; இஃதிகாஃப் இருப்பதனால் லைலத்துல் கத்ரின்(குர் ஆன் இறக்கப்பட்ட நாள்) இரவை அடைந்து கொள்ளலாம். யாருக்கெல்லாம் இஃதிகாஃப் இருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றதோ, அவர்கள் சந்தர்பத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

 எனது தாயின் வாப்பா மீரான் பிள்ளை அப்பா பள்ளியில் இஃதிகாப்  இருக்கும்போது பார்த்திருக்கிறேன்.மூன்று தினங்கள் நோன்பிருந்து இஃதிகாப் இருந்தபின்னர் வண்டல் தர்காவிலிருந்து பீர் பானை எடுத்து ஒன்றரை கிலோமீட்டர் தூரமுள்ள பள்ளிக்கு வருவார்.

   யோக வகுப்புகளில் இருபத்தியிரண்டு வயதுவரை பிரம்மசரியம்,பின்னர் திருமணமாகி இல் வாழ்க்கையான கிரகஸ்தம்,நாற்பத்தியைந்து வயதில் வனபிரஸ்தம் அதாவது மகன் கல்வி கற்று முடித்து வேலைக்கு செல்ல தயாராகும் வயதில் தன்னை துறவுக்கு தயார்செய்யும் வகையில் காட்டுக்கு சென்று கற்பதும்  வீட்டுக்கு வருவதுமாக இருத்தல்.அறுபது வயதுக்குமேல் மகன் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பற்றும் நிலையயை அடைந்ததும் நிரந்தராமாக சந்நியாசம் செல்தல்.

  அக பயணம் செல்ல விரும்புபவர்களுக்கு இஃதிகாப் பேருருதவியாக இருக்கும்.இரு தினங்களுக்கு முன்பு தராவீஹ் தொழுகைக்குப்பின் இமாம் உங்களது கடமைகளை சீக்கிரமாக முடித்துவிட்டு ரமலானின் கடைசி பத்து நாட்கள் பள்ளியில் இஃதிகாப் இருக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

(ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருப்பார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.) (ஆதாரம்: புகாரி)

 

 இரவு தொழுகைக்குப்பின் வீட்டிற்கு வந்து இஃதிகாப்கிற்கு அழைப்பு விடுத்ததை சுனிதாவிடம் சொன்னேன். “நீங்கோ போங்கோ மூணு மாசாம இங்கேயே இருந்து ஸ்ட்ரெஸ் கூடிட்டு உங்களுக்கு” என்றாள்.

“என்னய ஏன் விரட்டா” எனக்கேட்டேன்.

  “அது நல்லது இல்லா” என்றாள்.

இஃதிகாப் விருப்பம் போல் ஒரு நாள் ,மூன்று நாள் அல்லது ஏழு நாட்களும் இருக்கலாம் என சொன்னேன்.

“நீங்கோ பத்து நாள் போங்கோ”   என சுனிதா சொன்னாள்.நானும் முடிவு செய்து விட்டேன் இந்த வருடம் இஃதிகாப் இருப்பது என.

இஃதிகாப் இருக்கும்போது ரமலான் நோன்பு காலம் ஆதலால் பசித்திரு,விழித்திரு,தனித்திரு என்பது சாத்தியம்தான்.

 இஃதிகாப் இருப்பவர்கள் வீட்டிற்கு செல்ல கூடாது,நோன்பு நோற்று பகலில் பசியுடன் இருந்து இரவில் தூங்காமல் தொழுகை வணக்க வழிபாடுகளில் ஈடு படவேண்டும்.தூங்கி விழித்துவிட்டால் வீண் பேச்சுக்கள் பேசாமல்,உடன் இஃதிகாப் இருப்பவர்களை தொந்தரவு செய்யாமல் தனிமையில் இறைவனை தியானிக்க வேண்டும்.

குறிப்பாக செயல்களை உதறிவிட்டு குர்ஆன் ஓதுதல் சிறப்பு. உலகியலிருந்து தன்னை விடுவித்து கொள்வதாகும்.வரும் செவ்வாய்க்கிழமை மாலை மக்ரிப் தொழுகைக்குப்பின் வடசேரி பள்ளிக்கு சென்று இஃதிகாப் இருக்க நான் தயாராகிவிட்டேன்.இந்த பத்து நாட்களும் உலக தொடர்புகளிலிருந்து என்னை விடுவித்து கொண்டு அக பயணத்திற்கு தயாராகி விட்டேன்.

முகநூல்,இன்ச்டக்ராமில் நான் இல்லை.போனில் வாட்ஸ்அப் மட்டும் பார்ப்பேன்.எனது போனை வீட்டில் சுனிதாவிடம் கொடுத்துவிட்டு தேவையான மிக குறைந்த துணிகளை மட்டும் எடுத்துக்கொண்டு செல்லவிருக்கிறேன்.

விரிக்க,படுக்க இரு போர்வைகள். இரு வேட்டி,சட்டைகள் ஒரு கைலி,ஒரு துண்டு,துவைக்கும் சோப்,தலைக்கு தேய்க்கும் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை மட்டும் எடுத்து செல்கிறேன்.

    


 விபாசன பயிற்சியில் பிறர் கண்களை பார்க்கவே கூடாது என நண்பர்கள் சொன்னார்கள். வடசேரி பள்ளி என் வீட்டிலிருந்து நடக்கும் தூரத்தில் தான் உள்ளது.வீட்டிற்கு வரமால் யாரையும் சந்திக்காமல் முழுமையாக செயல்களிலிருந்து என்னை விடுவித்து கொண்டு அகம் நோக்கி பயணிக்க இந்த இஃதிகாப் நாட்கள் எனக்கு உதவும் என நம்புகிறேன்.

   எனக்கு இந்த இஃதிகாப் நாட்களில் எந்த வேண்டுதலும்,சங்கற்பமும் இல்லை.இறையை வழிபடுதல் மட்டுமே.

 பெண்களும் பள்ளிவாசல்களில் வசதி இருக்கமானால் இஃதிகாஃப் இருக்கலாம்.அல்லது வீட்டில் தனியறையில் இஃதிகாஃப் இருக்கவேண்டும்.தனது குடும்ப கடமைகளை செய்துவிட்டு இஃதிகாஃப் எண்ணத்தோடு வீட்டில் தனியறையில் இருக்கலாம். வீட்டை விட்டு வெளியேசெல்லக்கூடாது.

  ஷாகுல் ஹமீது,

 08-april -2023.

https://www.dailythanthi.com/Others/Devotional/2019/08/29153253/God-consciously-Refuge-in-the-house-of-the-god.vpf

 

2) நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். (ஆதாரம்: புகாரி)

3) நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளான் மாதமும் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள். மரணித்த வருடத்திலே இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)

Monday, 27 March 2023

புகை(யை) விடுதல்

               


               “புள்ளா அக்கா இவனுக்க வாயில இருந்து பொக போனத கண்டேன்” என ரெவி மாமா கன்னத்தில் அறைந்து இழுத்துக்கொண்டு என் உம்மாவிடம் கூட்டிசென்றார்.


  “இவனும் உவைசும் கிட்ட,கிட்ட இருந்தானுவோ,யாருக்க வாயில இருந்து பொக போச்சின்னு தெரியல”என உடனே மாத்தி சொன்னார் ரெவி மாமா.


  “முளச்சி மூணு இல உடல அதுக்குள்ளே வீடி வலிக்கிதியா” என உம்மாவும் வீட்டுக்கு முன்னால் இருந்த வேப்பமரத்திலிருந்து ஒரு கம்பை ஒடித்து வலிக்கும்படி அடித்தாள்.


   அன்று என்னைவிட வயதில் மூத்த மாமா முறை உள்ள உவைஸ் அஞ்சு பூ பீடியை இழுத்துவிட்டு கடைசியாக எனக்கும் தந்தார் ஊதி பார் என.முறுக்கு பெத்தா எனப்படும் எனது வாப்பும்மா பீடி புகைப்பார் “லே மோனே கொஞ்சம் பத்தி தாலே”என பீடியை கையில் தரும்போதெல்லாம் வீட்டில் விறகடுப்பில் எரியும் தீயில் பீடியை பற்றவைத்துவிட்டு ஒரு இழுப்பு,இழுத்தபின்தான் கொடுப்பேன். உம்மாவோ,வாப்பவோ பார்த்துவிட்டால் “ஒழுங்கா பத்தல” என சொல்லி சமாளிப்பேன்.வீட்டுக்கு அருகில் மணல் கம்பெனி கெஸ்ட் ஹவுஸ் பக்கத்தில்  புல்டோசர் மூலம் மணல் அள்ளுகையில் மணல் குன்றுகளின் மேலிருந்த பனைமரங்களின் ஈராமான வேர்களை பிய்த்து பீடியாக ஊதியிருக்கிறோம்.தேங்காய் சவுரியை வெள்ளை தாளில் மடித்து சிகரெட்டாக.


   பின்னர் எட்டாம் வகுப்பு படிக்கையில் தினமும் மாலை ஒரு கோல்ட் பிளேக் சிகரெட்டை இரண்டு பேராக ஊதுவோம்.பத்தாம் வகுப்பு  அதற்கு பின் மணவை விஜயா,இரணியல்  ஹவ்வா தியேட்டரில் படம் பார்க்கும்போது காஜா பீடி புகைப்பது ஒரு சடங்கு.


 


   அப்போதே பாபுஜி பள்ளியின் அருகில் இருந்த நூலகத்தில் பாக்யா வார இதழில் டாக்டர் கிரிஜா மாதவன் எழுதும் மருத்துவ குறிப்புகளை வாசிப்பேன். புகைப்பதால்,மது அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமைகளை  தெரிந்துகொண்டேன்.


 தினமும் ஒரு ஒரு சிகரெட் புகைப்பது வாடிக்கையாகி விட்டது வெளிநாடுகளில் இருந்து விடுமுறைக்கு வருபவர்கள் கொண்டு வரும் ரோத்மேன்ஸ்,555 சிகெரெட்கள் அவர்களின் மருமகன்கள்,மச்சான்கள்,குட்டியாப்பாக்கள் மூலம் மாலை பள்ளி மைதானத்திலோ,கடற்கரையிலோ பாதியோ அபூர்வமாக முழுவதுமாகவோ கிடைக்கும்.


    நான் சிகரெட்டுக்கு அடிமை இல்லை என்னால் எப்போது வேண்டுமானாலும் நிறுத்த முடியும். காலை,மாலை டீ குடித்தவுடன் அல்லது சாப்பிட்டவுடன் நான் புகைப்பதில்லை என பெருமை பேசி அலைந்தேன்.


  பத்தாம் வகுப்புக்குபின் புகைப்பதை நிறுத்தினேன்.இரண்டு மாதம் தாக்குபிடித்தது.பின்னர்  ஒருமுறை ஓராண்டு வரை புகைப்பதை நிறுத்தியிருந்தேன்.


  நண்பர்களுடன் சேரும்போது “மக்கா ஒரு பப் இழு”என்றால் மீண்டும் தொடரும். பின்னர் திருச்சியில் ஓராண்டு தொழில் பழகுனர் பயிற்சியின் போதும் மும்பை சென்றபோதும் புகைப்பது தொடர்ந்தது.


  ரமலான் மாதங்களில் நோன்பு திறந்து உணவுண்டதும், அந்தோனியார் கோயில் அருகிலுள்ள மணலில் அமர்ந்து ஒரு வில்ல்ஸ் பில்டர் புகைத்தால் தான் உடலுக்கு தெம்பே வரும்.


 ரமலானில் ஒரு நாள் அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து சகர் உணவு உண்டபின் புகைக்க சிகரெட் கையில் இல்லை.அதிகாலை நான்கு நாற்பது  மணிக்கு உண்ணவும்,பருகவும் கடைசி நேரம்.சிகரெட் இல்லாமல் என்னால் முடியவேயில்லை.எனது கிராமத்தில் டீக்கடைகள் திறப்பது ஐந்து மணிக்குமேல் தான்.ரத்தமும்,உடல் செல்களும்,மூளையும் சிகரெட் வேண்டுமென்று கேட்டது.


   அந்த அவஸ்தையை தாங்க முடியவில்லை.பள்ளிவாசல் அருகிலிருந்த சுக்குகாப்பி பெத்தாவின் வீட்டுக்கு ஓடினேன்.கடையும் வீடும் ஒன்றாக இருக்கும். சகர் உண்டுவிட்டு படுத்திருந்தவர்களை எழுப்பி ஒரு வில்ல்ஸ் பில்டர் வாங்கி ஊதினேன்.ரத்தமும் மூளையும்,உடல் செல்களும் சாந்தமாயின.அப்போது உறுதியானது நான் சிகரெட்டுக்கு அடிமையாகிவிட்டேன் என.


 பள்ளி நாள்களில் நான் படித்து பிறருக்கு வகுப்பெடுத்த கட்டுரைகள் நினைவுக்கு வந்தது. சிகரெட்டில் நிகோடின்,டோபோக்கோ மட்டுமல்ல ஆயிரத்தி ஐநூறு பாய்சன்கள் உள்ளது. தேவையே இல்லாத போதையினால் மூளை சுறுசுறுப்படைந்து பழகிவிட்டதால் தான் மூளை சோர்வடையும்போது,நிகோடின்,டோபக்காவை கேட்கிறது.


 தினமும் பத்து சிகரெட் புகைப்பவர் ஓராண்டில் வீட்டிற்கு தேவையான சலவை இயந்திரம்,தொலைக்காட்சி பெட்டி இன்னபிற பொருட்கள் வாங்கும் தொகையை இழக்கின்றனர்.


   புகைப்பதை விட வேண்டுமென புத்தாண்டு தினத்தில் உறுதிமொழி எடுப்பபவர்கள் பலருக்கு  ரத்தமும்,உடல் செல்களும் மீண்டும் நிக்கோடின்,டோபோக்கோ மற்றும் இன்னபிற பாய்சன்களை கேட்கும்போது முடியாமல் மீண்டும் புகைப்பார்கள்.புகைப்பவரின் தலைமுடி மற்றும் உடலில் புகை நாற்றம் எப்போதும் இருக்கும்.நாவில் சுவையை உணரமுடியாமல் போகும்.


  புகைப்பதை நிறுத்தி ஐந்து ஆண்டுகள் கழிந்தபின் தான் ரத்ததிலிருந்தும்,உடலிலிருந்தும் முழுமையாக அதன் பாய்சன்ஸ்களும்,நாற்றமும் வெளியேறும்.


 புகைப்பதை நிறுத்தியபின் அதற்கு பதிலாக இளநீர் அருந்த வேண்டும்,காய்கறிகள் நிறைய சாப்பிடவேண்டும்,தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் என மருத்துவ குறிப்புகள் சொல்கிறது. புகைக்கும் நண்பர்களின் அருகில் செல்லாமல் இருப்பதுதான் மிக முக்கியம்.


 2000 வது ஆண்டில் மும்பைக்கு ரயிலில் செல்லும்போது சக பயணியான அசோக் நான் புகைப்பதை பார்த்துவிட்டு. “நான் இப்பதான் தம் அடிக்கத நிறுத்தினேன்,நீங்க வலிக்கத பாத்து ரெம்ப டெம்ட் ஆகுது, நான் சாயா குடிகத்துல,ஒரு மடக்கு சாயாவும்,ஒரு பப் இழுப்பேன்”என்றார்.


 மும்பை சென்றபின் கட்டிங் சாயா சொல்லிவிட்டு சிகரெட்டை பற்றவைப்பேன்.மாட்டுங்க அறையில் இருக்கும்போது சீட்டு விளையாடுவோம் ஒரு சிகரெட்டை பற்றவைத்தால் ஒரு ரவுண்டு சுற்றி வரும்.அறை நண்பர்கள் சிலருக்கு காலை கழிப்பறையில் அமர்ந்தால் சிகரெட் வேண்டும். “டாய்லட்ல உட்காந்து தம் அடிக்க கூடாது” என ஒரு சண்டையே நடக்கும்.


  காலையில் நுரையீரல் தூசிகளை வெளியேற்ற முயற்சிக்கும் அப்போது புகைப்பதால் தான் இருமல் வருகிறது. டாய்லெட்டில் அமர்ந்து புகைப்பதால் மலம் மேலும் இறுகி மலம் வெளியேறுவதை இன்னும் சிரமமாக்குகிறீர்கள் என விவாதம் நடந்த நடந்த நாட்கள் உண்டு.


எனக்கு  மனதில் எண்ணமிருந்தது திருமணதிற்கு முன்பாக புகைப்பதை விட்டு விடவேண்டும் என. 2003 ஆம் ஆண்டு கடுமையான புட் பாய்சன் ஆகி முடியாமல் மும்பை  அறையில் படுத்திருந்தேன்.நாள் முழுவதும் என்னை காணாததால் இரவு ஏழு மணிக்கு மேல் நண்பர்கள் ஷாஜியும்,சிங்கும் வந்தனர்.


  “லே தயாளி எங்கல போன” லேசான காய்ச்சலுடன் எழுந்திருக்கவே முடியாமல் படுத்திருந்த என்னை மருத்தவரிடம் அழைத்து சென்றனர்.


மருத்துவர் முகுந்தன் என்னை பரிசோதித்து விட்டு “நேற்று என்ன சாப்பிட்டாய்”எனக்கேட்டார்.


“சிக்கன் ப்ரை”என்றேன்.


 “அதான் புட் பாய்சன் ஆயிருக்கு” என சொல்லிவிட்டு.மருந்துகள் தந்தார்  ஓய்வெடுத்து கொள்ளுங்கள் தயிர் ஊற்றி வெள்ளை சாதம் மட்டும் பசித்தால் கொஞ்சம் சாப்பிடுங்கள். சிக்கன் சாப்பிட கூடாது” என கண்டிப்புடன் சொன்னார்.


  மறுநாள் காலை அறையின் கீழே இருந்த ராணி ஸ்டோரின் அருகில் தள்ளுவண்டி செல்வி அக்காவிடம் ஆறு ரூபாய்க்கு இரண்டு ஆப்பமும்,சாம்பாரும் வாங்கி சாப்பிட்டுவிட்டு ஷாஜியின் அறைக்கு சென்று படுத்துக்கொண்டேன்.


 விடுமுறை நாளான அன்று ஆறுபேர் வட்டமாக அமர்ந்து ரம்மி விளையாடுகையில் ஒரு சிகெரெட் அந்த வட்டத்தில் சுற்றி,சுற்றி வந்தது.அந்த புகை என்னையும் இழுத்தது.கட்டுபடுத்தி கொண்டேன்.மூன்றாவது நாளும் புகைக்கவில்லை.2003 ஆண்டு ஏப்ரல் மாதமே குவைத் சென்று ஈராக் சென்றேன்.உடன் வந்த பலரும் புகைப்பவர்கள்.


 அங்கிருந்து ஈராக் சென்றபின் உயரதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் ஆண்,பெண் பேதமில்லாமல் புகைகின்றனர்.பையிலிருந்து சிகரெட்டை வெளியே எடுத்ததும் நம்மிடம் நீட்டுவார்கள் “ஆர் யூ ஸ்மோக்”என.  திக்ரித் முகாமில் அழகிய பெண் ராணுவ வீராங்கனை ஒருத்தியுடன் உரையாடலின் இடையில் தங்க நிற பென்சன் ஹெட்ஜஸ் பாக்கெட்டை எடுத்து  சிகரெட்டை என்னிடம்  நீட்டினாள்.அவளிடம் நான் புகைப்பதில்லை என சொல்ல வெட்கமாயிருந்தது. நீட்டிய சிகரெட்டை வாயில் வைத்ததும் அவளே  லைட்டரால் பற்றவைத்தாள்.


அப்போது புகைப்பதை நிறுத்தி ஐந்து மாதங்கள் கடந்திருந்தது.புகையை நெஞ்சு கூட்டுக்குள் உள்ளிளுக்காமல் வாயில் எடுத்து  இருமுறை முறை ஊதினேன். என்னால் இயலவில்லை மிக விரும்பிய புகை இப்போது பிடிக்கவில்லை. அவளிடம் விடை பெற்று என்னுடன் பணிபுரிந்த கல்கத்தாவின் டோப்பசிடம் சிகரெட்டை கொடுத்துவிட்டு நகர்ந்துவிட்டேன்.  


பஸ்ஸிலோ,ரயிலிலோ சுற்றுபுறத்தில் எங்கோ யாரவது சிகரெட் பிடித்தால் உடனே அந்த புகை என் நாசியை எட்டி விடுகிறது.சிகரெட் புகை நெடி இப்போது ஒரு ஒவ்வாமையை தருகிறது.புகைப்பதை எப்படி நிறுத்தினாய் என கேட்பவர்களுக்கு ஒரே டிப்ஸ் தான்.கையில் இருக்கும் சிகரெட் பாக்கெட்டை என்னிடம் தந்துவிடு இப்போதே நீ நிறுத்தி விட்டாய் என்பேன். ஹி,ஹி நான் கொஞ்சம் கொஞ்சமாய் நிறுத்துவேன் என சொல்பவர்களால் ஆயுசுக்கும் முடியாது.


சிகரெட்டை நிறுத்த வேண்டும் என்ற விருப்பமும்,வைராக்கியமும் தான் தேவை. நடிகர் மோகன்லால் சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்தார் புகைப்பதை இன்று முதல் விட்டு விட்டேன் என.அப்படி பிறர் மத்தியில் அறிவிப்பதும் நல்ல பலனை தரும்.


இம்முறை நான் கொஞ்சம் வைராக்கியத்துடன் இருந்தேன் 2000 வது ஆண்டு மார்ச் மாதம் இருபதாம் தேதி அன்று முதல் நாட்களை எண்ண தொடங்கினேன். இன்று வரை 7308 நாட்கள் ஆகி விட்டது.


கப்பல் காரன்.


23-03-2023

Saturday, 25 March 2023

ரமலானில் ஒரு கெத்தெல் சாகிப்

 

                    .

    வடசேரி பள்ளிவாசலில் ஜும்மா தொழுதுவிட்டு வெளியே வரும்போது .

                      ஷமா ரெஸ்டாரன்ட் .

இன்ஷா அல்லாஹ் இவ்வாண்டு (2023) ரமலானில் ஸகர் உணவு  (அதிகாலை 3.30 முதல் 4.30 வரை) வடசேரி எம் எஸ் ரோட்டில் அமைந்துள்ள ஷமா ரெஸ்டாரன்ட்டில் வழங்கப்படும்.

                      பார்சல் கிடையாது

கட்டணம் செலுத்தி உணவு உட்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு.விருப்ப கட்டணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.


    கீழ்க்கண்ட எண்ணில் முன்பதிவு செய்து ஒத்துழைக்குமாறு வேண்டுகிறோம் என இரு மொபைல் எண்களுடன்   ஒரு நோட்டீஸ் தந்தார்கள். கடந்த  வருடமும்  இதுபோல் ஷமா ரெஸ்டாரன்ட் ஸகர் உணவு வழங்கும் செய்தி அறிந்து போய் பார்க்க வேண்டும் என எண்ணினேன்.

"அது இல்லாதவர்களுக்கான உணவு  நீங்க அதை சாப்பிடக்கூடாது " என சுனிதா தடுத்து விட்டாள்

இன்று அதிகாலை அங்கு சென்று உணவு உண்ண வேண்டும் என நினைத்தேன்.வழக்கம்போல் சுனிதா "நீங்க போவாண்டாம்" என்றாள்.  ஸகர் உணவுக்கு வருபவர்கள்  போனில் முன்பதிவு  செய்து உதவுங்கள் என குறிப்பிட்டிருந்ததால். அந்த எண்ணில் காலையில் அழைத்தேன். அழைப்பை ஏற்கவில்லை இரண்டாவது எண்ணில் அழைத்தபோது தற்போது உபயோகத்தில் இல்லை என வந்தது.பலமுறை விடாமல்  முயற்சித்த போது மாலையில் "அஸ்ஸலாமு அலைக்கும்" என குரல் கேட்டது.


"ஸகருக்கு ரெண்டு பேரு சாப்பிட வாறோம்" என்றேன்.

"வாங்கோ" என்றார்.

" கட எங்க இருக்கு"

" வடசேரி  திருநவேலி  ரோட்டுல"என பதில் கிடைத்தது.

இளைய மகன் சல்மானிடம் சொன்னேன்.

"ஷல்லு காலையிலே பெயிருவோம்" என.

                                    ஷமா ஷாகுல் ஹமீது 

அதிகாலை 4 மணிக்கு முன்பே ஷல்மானுடன் சென்று விட்டேன் ஷமா ரெஸ்டாரன்ட் நிறைந்து இருந்தது. முதலாளி ஷாகுல் ஹமீது கல்லாவில் அமர்ந்திருந்தார். ஐந்து நிமிட காத்திருப்புக்குப்பின் எங்களுக்கு இடம் கிடைத்தது. ஷமா  ஷாகுல் ஹமீதின் மகன்களும்,பேரன்களும் பம்பரம் போல் உணவு பரிமாறி கொண்டிருந்தனர்.

வெள்ளை சாதமும்,மீன் குழம்பும், பொரித்த மீனும்,ஒரு மோரிஸ்

பழமும் சாபிட்டோம்.

ரசமும், தயிரும் கூட வைத்திருந்தனர். தேவைபட்டோருக்கு சாயாவும் வழங்கினர்.

நான் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது கல்லாவில் இருந்த ஷாகுல் ஹமீது  என்னை அடையாளம் கண்டு கொண்டு புன்னகைத்து கையசைத்தார்.

 பல ஆண்டுகளாக தொடர்ந்து அவர் ரமலானில் ஸகர் உணவு வழங்குவதாக அறிந்தேன்.இவ்வாண்டு முதல் கட்டணம் செலுத்தி உணவு உண்ண விரும்புபவர்களுக்கு  விருப்ப கட்டணம் செலுத்தும் வகையில் ஒரு பெட்டியை கல்லாவில் வைத்திருந்தார்.

ஷல் மானிடம் 100₹ யை கொடுத்து பெட்டியில் போட சொன்னேன்.

ஷமா முதலாளி எனது பீர் முகம்மது மாமாவின் நண்பர் 35 ஆண்டுகளுக்கு முன்பு தனது குழைந்த்சுகளுடன் செருப்பு வாங்க வருவார்.

கடந்த 7 ஆண்டுகளாக வடசேரி பள்ளிவாசலில் தொழுகைக்கு செல்வதால் எப்போதும் அவரை பார்ப்பேன்.

என்னிடம் "டெய்லி வாங்கோ"என அழைத்தார்.

"பாக்க தான் வந்தேன், எப்டி  நடக்குன்னு"என சொல்லிவிட்டு விடைபெற்றேன்.

இளைஞர் இருவர் விருப்ப கட்டண பெட்டியில் பணம் போடுவதை பார்த்தேன்.

ஐந்தே காலுக்கு வடசேரி பள்ளிவாசலில் தொழுகைக்கு சென்ற போது ஷமா ரெஸ்டாரன்ட் குடும்பத்தினர் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பள்ளிவாசலில் நிறைந்து இருந்தனர்.ஷமா ஷாகுல் ஹமீது அவர்களுக்கு ஐந்து மகன்கன் அனைவருக்கும் திருமணமாகி  குழைந்தைகள் இருக்கிறது.

 


 

வெளியூர்களிலிருந்து தங்கி வேலை செய்பவர்கள்,பள்ளிவாசல் இமாம்கள்,மோதினார்கள்.கடைகளில் வேலைபார்க்கும் பணியாளர்கள் மற்றும் சூழல் காரணாமாக சமைக்க இயலாதவர்கள் நிறையபேர் நோன்பு வைக்க இங்கே இலவசமாக உணவு வழங்கபடுகிறது.இன்முகத்தோடு குடும்ப உறுப்பினர்களே பரிமாறுகிறார்கள்.

  இந்த சேவையை வேண்டியவர்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும்.ரமலானில் செய்யப்படும் நன்மைகளுக்கு கூலியை அல்லாஹ் பல மடங்காக திருப்பி தருவான்.நாகர்கோவில் கெத்தெல் சாகிப்பான ஷமா ஷாகுல் ஹமீது மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு இம்மையிலும்,மறுமையிலும் அல்லாஹ் நன்மையே செய்வானாக.

ஆமீன்.

  ஷாகுல் ஹமீது,

25-march-2023.