Thursday, 24 April 2025

ஈஸ்டர்

   




    சைனாவின் பின்சாவ் துறைமுகத்திலிருந்து மார்ச் மாதம் இருபத்திமூன்றாம்  தேதி புறப்பட்டோம். கொரியாவில் ஒரு நாள் கப்பலை நிறுத்தி எண்ணெய் நிரப்பியபின் தொடங்கிய பயணம் இருபதாம் தேதி பனாமாவின் பால்போவா கடலில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினோம். இருபத்தி ஏழு நாட்களுக்குப்பின்.கப்பலின் இஞ்சின் நில்லாமல் தொடர்ந்து நெடுநாட்களுக்கு ஓடும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  ஈஸ்டர் தினமான ஞாயிறு தவிர்க்கவே முடியாத பணிநாள். மறுநாள் திங்கள்கிழமை பனாமா கால்வாயை கடந்தோம். எனவே இன்று இருபத்திஇரண்டாம் தேதி செவ்வாய்கிழமை ஈஸ்டர் கொண்டாத்ததை முடிவு செய்திருந்தனர்.பனாமா கால்வாய் கடக்கும் தினத்தில் அனைவரும் நீண்ட நேரம் பணியில் இருந்ததால் இன்று அனைவருக்கும் ஓய்வு அவசியப்பட்டது.

 கால்வாயை கடந்த அன்று மாலை எட்டுமணிக்கு தான் இரவுணவுக்கு சென்றேன். காப்டனின் மனைவி அப்போதே அலங்காரங்களை தொடங்கியிருந்தார்.வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் அறையப்பட்ட ஏசு மகான் ஞாயிறன்று உயிர்தெழுந்தார். அதையே உலகம் முழுவதும் ஈஸ்டர் தினமாக கொண்டாடுகிறார்கள். மோட்டர்மேன் லீமேன் மலைக்குள் புதைகப்பட்ட ஏசு கல்லை பெயர்த்து வெளியேறியதை விளக்கும் அலங்காரத்தை நான்கு நாட்களாக பணிக்குப்பின் இரவு ஒரு மணிவரை ஓய்வு நேரத்தில் செய்துமுடித்தார்.

   “தாயி வெரி டயர்ட் ஐ கான்ட் ஹெல்ப் யூ” என சொல்லிவிட்டு அறைக்கு சென்று விட்டேன். (மராத்தியில் தாயி என்றால் சகோதரி) பத்து மணிக்கு தூங்கி அதிகாலை நான்குக்கே விழித்துகொண்டேன். தொழுகையும்,பயிற்சிகளும் முடித்து அடுமனையில் சுக்கு காப்பி போட்டு குடித்தபின்.

 சமையல்காரர் “ஷாகுல் உன் உதவி வேண்டும் மதியம் பார்ட்டி” என்றார்.கம்ப்ரசர் அறைக்கு சென்று ரீடிங் எடுத்துவந்து லாக் புக் எழுதியபின். அடுமனையில் ஐக்கியமானேன்.காப்டனின் மனைவி மூன்றாம் அதிகாரி ஸ்ரீயுடன் இணைந்து உணவு மேஜையில் அலங்காரம் செய்யத்தொடங்கினார். இரு தினங்கள் கடும் பணியாக இருந்ததால் பணியாளர்கள் அனைவரும் ஓய்வில் இருந்தனர். காஸ் இஞ்சினியர், முதன்மை அதிகாரியுடன் சரக்கு தொட்டிகளில் சிறிதாக சரக்கை மாற்றும் வேலையை செய்ய தொடங்கினர்.இஞ்சின் ரூம் டீம் பதினோரு மணிவரை பணியில் இருந்தார்கள்.

  ராகுல் செய்து வைத்திருந்த கேக்கை முயல் வடிவில் வெட்ட சொன்னார் துருவி. காப்டன் அனைவருக்கும் சாக்லேட்களை தட்டில் அடுக்கினார். பீப் ரோஸ்ட்,பிட்ஸா,சால்மன் பிஷ்,இறால்,சிக்கன் டிக்கா,சிக்கன் லெமன் பிளேவர்ட்,சில்லி சிக்கன்,மட்டன் கறி,பன்றி இறைச்சியில் மூன்று வகை,மக்ரோனி பாஸ்தா,கார்லிக் ரைஸ்,பிஷ் கட்லெட்,பாயில்ட் சனா,காராமல் புட்டிங்,வெஜ் கட்லெட்,ஆனியன் புஜியா,சிஸர் சாலட் இன்னும் என்ன பெயர் என எனக்கு தெரியாத உணவுகள் பல வைத்திருந்தார். அவை எல்லாம் அவரது கண்டு பிடிப்புகளே.

  சிக்கன் சாசேஜ்களை வட்டமாக நறுக்கி வெங்காயமும்,மசாலா தூள்களும் சேர்த்து வதக்கியது, ப்ரோக்கலி,காரட் அவித்து உப்பும்,மிளகும் தூவியது, மசக்கிய உருளைக்கிழங்குடன் சோளம் சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி,கலக்கிய முட்டையில் அந்த உருண்டையை முக்கி மைதா மாவில் உருட்டி எண்ணையில் பொரித்தது,கோழிஇறைச்சியின் துண்டுகளை மைதாவில் முக்கி ஐஸ்வாட்டரில் முக்கி அதை முட்டையில் முக்கி,பொடித்த பிரட் தூளில் புரட்டி எண்ணையில் புரட்டியது  இதே போல் இன்னும் எட்டு வகையானவைகளை செய்தார்.அவரது மராத்தி உணவுகளாக இருக்கலாம். புழுங்கல் அரிசியில் ஆப்பம் செய்யும் எண்ணம் இருந்தது சுனிதாவிடம் கேட்டு வைத்திருந்தேன். “அடுப்பு கிடக்காது நான் பிசியா இருப்பேன் இல்லா,இன்னொரு நாள் செய்”என ராகுல் சொலிவிட்டார்.

   குடி பிரியர்களுக்கு கொண்டாட்டமான நாள். இரு குப்பி ஷாம்பியன் மற்றும் தாராளமாக பீர் வழங்கப்பட்டது. குடிக்காதவர்களுக்கு கோக் நான் கோக்,பெப்சியும்  குடிப்பதில்லை. 

   ஓய்வாக இருந்ததால் டெக்கில் கிரிக்கெட்  விளையாடினார்கள். பதினொன்றரை மணிக்கு நான் அறைக்கு வந்து குளித்து சட்டைகளை இஸ்த்ரி செய்து தயாராக இருந்தேன். 

  ஒரு மணிக்கு அனைவரும் மெஸ் ரூமில் கூடுமாறு மைக்கில் அறிவித்தார்கள். காப்டன் அனைவருக்கும் சாக்லேட் வழங்கி ஈஸ்டர் வாழ்த்துக்களை கூறினார். மெஸ் ரூமை அலங்கரித்த மேடம்,லீமன் அவர்களுக்கு உதவிய எத்திராஜ்,போசனுக்கும். காலைமுதல் சிறப்பு உணவுகளை செய்த அடுமனை பணியாளர் இருவருக்கும் நன்றி கூறினார். 


IRON MAN 


 அவரே ஷாம்பியனை உடைத்து தனது மனைவிக்கும்,குடிப்பவர்களுக்கும் கொடுத்தார். முதன்மை இஞ்சினியர் வேண்டா வெறுப்பாக கொஞ்சம் வாங்கிகொண்டார். அவர் கடந்த ஆண்டு ஐரோப்பாவில் நடந்த 3.8km நீச்சல்,180km சைக்கிள்,42.2kmஓட்டபந்தயத்தில் கலந்து கொண்டு முதாலவதாக வந்து அயன் மேன் (IRONMAN –COPENHAGEN) சாம்பியன். கப்பலில் தினமும் பத்து கிலோமீட்டர் க்கு டெக்கில் ஓடுவார். உணவில் மிக கவனமாக இருப்பார்.அவர்,நான் மற்றும் இர்ஷாத் மட்டுமே குடிக்காதவர்கள். ராஜேசின் சிறியதந்தை ஞாயிறன்று மும்பையில் இறந்துபோனதால் அவரும் குடிக்காமல் சைவமாக இருக்கிறார்.



காப்டனின் மனைவி  துருவி  துணியில் காரட்,முயல் பொம்மை,காகிதத்தில் குடில்கள் என அனைத்தும்   கப்பலில் பல நாட்களாக செய்திருந்தார். கடின உழைப்பில் தயார் செய்தவற்றை மேஜையில் பார்த்து,பார்த்து அடுக்கினார். “எப்டி இருக்கு,எப்டி இருக்கு” என கேட்பார். அலங்காரம் நிறைவு செய்து அவரும் ஆடை மாற்றி வந்தார். ரம்ஸான் பண்டிகையில் முகத்தில் பவுடர்,உதட்டு சாயம் பூசி வெண்ணிற ஆடையில் வந்தவரை “தாயி அளகா இருக்கீங்க” என்றேன். “அப்ப நேத்து நான் எப்டி இருந்தேன், மோர் பீயுட்டிபுல் என சொல்லுங்க ஷாகுல் ஜி” என்றார். 

  அது நினைவில் இருந்ததால் சைகையால் லுக்ஸ் குட் என மட்டும் சொல்லி விலகி கொண்டேன். காப்டன் நினைவுறுத்தினார் இன்று அனைவரும் உங்கள் பீங்கான் தட்டுகளில் சாப்பிட்டபின் நீங்களே கழுவி வைத்து விடுங்கள்.பேப்பர் பிளேட் மற்றும் பிளாஸ்டிக் கரண்டி உபயோகிப்பதை தவிர்ப்போம் என கடந்த மீட்டிங்கில் சொல்லியிருந்தார்.



 நான் கொஞ்சம் டைகர் இறால்கள், இரு துண்டு ப்ரௌனி,கொஞ்சம் பீப்,பாஸ்தா,காராமல் புட்டிங் சாப்பிட்டேன்.இன்றைக்கான கேம் தயாரானது.குலுக்கி எடுக்கும் துண்டு சீட்டில் வருவதை படமாக வரைதல். இரு அணியாக பிரிந்து,ஒவ்வொரு அணியிலிருந்தும் ஒருவர் வரைய மற்றவர்கள் அதை சரியாக சொல்ல வேண்டும் இரு நிமிடத்திற்குள்.

  லிக்குட் என்பதை தண்ணீர்,ஆவி   வரைந்து விளக்கிவிட்டார் இரண்டாம் இஞ்சினியர் . மெயில்மேன் எனக்கு வந்தது இரண்டு நிமிடத்துக்கு ஐந்து வினாடி இருக்கும்போது ராகுல் மிஸ்திரி போஸ்ட்மேன் எனச்சொன்னார் அதை எனக்கு தந்த காப்டனின் மனைவி துருவி ஒத்துக்கொள்ளவில்லை. அதிகாலையே எழுந்திருத்தால் தூக்கம் அழுத்தியது. எலுமிச்சை கலந்த சர்பத் ஒரு கப் கலக்கி குடித்துவிட்டு அறைக்கு சென்று தொழுதுவிட்டு தூங்கி விட்டேன். 

  மாலை மக்ரிப் தொழுகைக்கு முன் தான் எழுந்தேன். கம்பிரசர்கள் ஓடிக்கொண்டிருந்ததால் எட்டுமணிக்கு கீழே சென்றேன்.இரண்டாம் அதிகாரி மேலேறி வந்துகொன்ட்டிருந்தார். பன்னிரெண்டு முதல் நான்குவரை அவருக்கு பணி அதனால் நான் அவரை பார்க்கவேயில்லை.  “நாலு இருவதுக்கு தான் நான் மேல போனேன்,அதுக்கு பொறவு நான் வந்து எல்லாரையும் பாதுகத்துருக்கு,அப்பப்ப இப்டி கெட்டூகெதர் வேணும்” என்றார். மனமகிழ் அறையில் ஒரு குழு அமர்ந்து நன்னாத்தான் ஆடுறே ஒத்துக்கோ பாடலை ஹிந்தியில் ஓடவிட்டு பீர் குடித்துகொண்டிருந்தார்கள்.

   நான் ரவுண்ட்ஸ்க்கு சென்றேன்.காஸ் பிளாண்டில் சிறு ஒழுகல் அதை கண்டுபிக்க எனக்கு நெடுநேரமாகி விட்டது. ஒன்பது மணிக்கு மேல் கட்டுபாட்டு அறைக்கு வந்து லாக் புக்கில் எழுதிவிட்டு மாசாஜ் செயரில் அமருவதற்கு சென்றேன். பத்துமணிக்கு வழக்கமாக சீட்டு விளையாடும் குழு ஆட்டத்தை துவங்கியிருந்தது. காப்டனின் மனைவி,முதன்மை அதிகாரி காப்டன்,ஜூனியர் இஞ்சினியர்,மூன்றாம் அதிகாரி,சமையல்காரர்,பத்தி சாப் ,காஸ் இஞ்சினியர் என காப்டன் தாமதமாக வந்து இரண்டாம் ஆட்டத்தில் இணைந்தார்.



 கப்பலில் காப்டனின் மனைவி துருவி வந்தபின் அனைத்து பிறந்தநாட்களும் கேக் வெட்டி கொண்டட்டம் தான். விஷு,தமிழ் புத்தாண்டு,பைசாகி,அம்பேத்கர் ஜெயந்தி,அனுமன் ஜெயந்தி அனைத்திற்கும் அறிவிப்பு பலகையில் வாழ்த்து செய்தியை ஒட்டிவிடுகிறார். 



   பண்டிகைகள் எங்களுக்கு இப்போதுதான் தெரியவருகிறது.

அனைவருக்கும் ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்.

நாஞ்சில் ஹமீது,

22-april -2025.

No comments:

Post a Comment