புனித ரமலானில் ஒரு மாதம் நோன்பிருந்தபின் உடல் ஆரோக்கியம் மேம்படுவதை உணர முடியும். நிலத்தை விட்டு தூரமாக கடலில் பயணிப்பதால் காற்று மாசு அறவே இல்லை. இங்கிருக்கும் மனித முகங்கள் தவிர விரிந்த பெரும் கடல்பரப்பும் மேகங்கள் சூழ்ந்த வானமும். டி.வி, யூ டூப் பார்ப்பதில்லை. எனவே வேறு காட்சிகளே இல்லை. அதனால் பிற எண்ணங்களும் இல்லை. மனதிற்கினிய நண்பர்களுடன் போனில் உரையாடலும்,வாசிப்பும் மட்டுமே.
நோன்பு காலத்தில் நிறுத்திவைத்திருந்த எளிய முறை உடற்பயிற்சி, ஆசனம், காயகல்ப பயிற்சிகளை இதுல் பிதர் பெருநாள் முடிந்த மறுநாளே துவங்கினேன்.
ரமலான் துவங்கும்முன் என்னுடன் இணைந்து பயிற்சிகளை செய்து கொண்டிருந்த ராஜேஷ் வரவில்லை. பயணப்பாதை மிக கடுமையாக இருந்தது. குளிர் வேறு.
ரமலானில் சூரியன் மறைந்தபின் எளிய உணவுகளையே உட்கொண்டேன். வாய்ப்பு கிடைத்த நாட்களில் நானே கஞ்சி வைத்து குடித்தேன். கஞ்சி குடித்த நாட்களில் வயிறு இன்னும் சுகமாக இருந்தது. அதிகாலை நோன்பு வைக்க வெள்ளை சாதமும, பருப்பு குழம்பு, சாலடும். சில நாட்கள் மீன் கிடைக்கும். இருவேளை உணவு வயிற்றுக்கும் உடல் உள் உறுப்புகளுக்கும் ஓய்வை அளித்த நாட்கள்.
நோன்புக் கஞ்சி |
பகலில் உண்ணாமல் இருத்தால் உடல் எடையற்று இலகுவாக இருந்ததை உணர்ந்தேன். சுனிதாவிடம் சொன்னேன். “நோம்பு முடிஞ்ச பொறவு மத்தியான சாப்பாட உட்டுரலாம்னு நினக்கேன், பாடி ரொம்ப லேசா இருக்கு”.
அவள் “டெக்ல நல்ல காத்தடிக்கும் போவ வேண்டிய டெசிநனேசன மட்டும் கண்ணால பாத்தாபோரும் காத்து போவ வேண்டிய இடத்துக்கு கொண்டு உட்டுரும்” என்றாள்.
கப்பலில் உண்ணும் நேரம் மிக நல்லது. காலை உணவு ஏழு முப்பதுக்கு. எட்டு மணிக்கு பணி துவங்கும். பத்து மணிக்குதேநீர் இடைவேளை பன்னிரெண்டு மணிக்கு மணிஅடித்து மதிய உணவு தருவார்கள். இரவுணவு மாலை ஆறு மணிக்கு. துறைமுகம் மற்றும் அவசர பணிகள் இல்லாத நாட்கள் தவிர இந்நேரம் தவறுவதே இல்லை.
காலை உணவாக பால் கலந்து சீரியல்ஸ் உடன் இரண்டு முட்டை, மதியம்(பச்சை காய்கறி) சாலட், பெரும்பாலும் மீன் அல்லது கோழியிறைச்சி தவிர்த்து மட்டன், பீப் இருந்தால் மட்டும் கொஞ்சம் சாதமும் பருப்பு குழம்பும். இரவுணவாக ஒரு சப்பாத்தி அல்லது இரண்டு.
ஆறரை மணிக்கு இரவுணவு முடிந்தால் தேவைப்பட்டால் ஒரு சுலைமானி (கட்டன் சாயா). மறுநாள் காலை வரை எதுவும் உண்பதில்லை. மிட் நைட் மீல், நூடுல்ஸ் அறவே கிடையாது. “ஆறு மணிக்கே தின்னா ராத்திரி பசிக்காதா” என நண்பர்கள் கேட்பதுண்டு. ஞாயிறுகளில் மதியம் பிரியாணி போடுவார்கள். ஓய்வாக இருந்தால் காலை உணவு உண்பதில்லை. இரவிலும் தேவைப்பட்டால் மட்டுமே உண்பேன்.
நோன்புக்கு பின் ஒன்று உறுதியாகியது. பழக்கத்தால்தான் மூவேளை உண்கிறோம். மணி பார்த்து சாப்பிடுவதுதான் பழக்கம். பசித்துதான் சாப்பிட வேண்டும். காலையில் உண்டபின் பத்து மணி தேநீர் இடைவேளையில் மெஸ் மென் போடும் சாயா குடிக்கவில்லை. மதியம் சாலட் மற்றும் பழம் மட்டும் சாப்பிட்டேன். உடல் சோர்வேயில்லை. மாலை ஆறு மணிக்கு இரவுணவு.
உபவாசம் என்னும் உயர் மருந்து இயற்கை மருத்துவர் பாலாசுப்பிரமணியம் எழுதிய புத்தகம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வாசித்தேன். ஒவ்வொரு முறை நாம் உணவுண்ணும் போதும் அதை ஜீரணம் செய்ய அதிகப்படியான சக்தி உடலிலிருந்து செலவளிக்கப்படுகிறது. குறைவாக உண்பதும், இரவுணவை தவிர்ப்பதும் உபவாசம் என சொல்லியிருந்தார். நல்ல பிரியாணி அல்லது சத்யா உண்டபின் சோர்வும் தூக்கமும் வருவது அதனால் தான்.
நேற்று முன்தினம் மதியம் கொரியா கிம்ஞ்சி வைத்திருந்தார்கள். அதனால் சிறு குவளையில் கொஞ்சம் சாதமும், பொரித்த இரு மீன் துண்டுகளும், மீன் குழம்பும் சாப்பிட்டேன்.
இன்று காலை ஊற வைத்த பாதாம் நான்கு, மூன்று பேரீட்சை, மூன்று முந்திரி, இரண்டு அவித்த முட்டை மட்டும். இயந்திர அறையில் லேத் மிஷினில் முழுநாளும் பணி. காலை பத்து மணிக்கு ஒரு கட்டன் காப்பி சீனி கலந்து குடித்தேன். பின் பசியே இல்லை. மதியம் சாலடும், பப்பாளி பழத்துண்டுகள் மட்டும் இரண்டு. மூன்று மணி தேனீர் இடைவேளையில் தண்ணீர் மட்டும் குடித்தேன். இரவுணவுக்கு இரு கோதுமை பரோட்டாவும், பீப் கறியும். இன்று இரவு சுலைமானியும் குடிக்கவில்லை.
ரமலானுக்கு பின் எடை ஒன்று அல்லது ஒன்றரை கிலோ தான் குறைந்திருக்கும். கடந்த முப்பது ஆண்டுகளாக அறுபதுக்கும் அறுபத்தி நான்கு கிலோவுக்கும் இடையில் இருக்கிறேன். எதற்கும் மாத்திரை உண்பதே இல்லை.
இரு தினங்களுக்கு முன் சுனிதா “உச்சக்கி என்ன சாப்ட்டியோ” எனக்கேட்டபோது,
“சால்ட் பழம்” என்றேன்.
“சோறு தீத்தியே கிடையாதோ? இனி தேவாங்குதான் திரியாரு இவுரு, பொறந்த ஆறு மாசத்திலே சோறு தின்னதாக்கும், இங்க வேற என்ன புட் உண்டு, சோறு தான் பெலம், உச்சக்கி கொஞ்சமா சோறு தின்ன வேண்டியது தானே” என்றாள்.
எனது சமையல்காரர் ராகுல் மிஸ்திரி மதியம் உண்பதில்லை. அவர் என்னிடம் கொஞ்ச நாள்ல பழகிவிடும் நேரம் பார்த்து நாம் உண்ண தேவையில்லை என்றார்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
நாஞ்சில் ஹமீது,
09 april 2025
sunitashahul@gmailcom
No comments:
Post a Comment