என் என் ஜி அலையன்சில் பணியில் இணைவதற்காக மும்பை லண்டன் வழியாக ஜிப்ரேல்டர் வரை சென்று விடுதியில் காத்திருந்தோம். ஜிப்ரேல்டர் வழியாக நைஜீரியா செல்லும் கப்பலில் வேகத்தை குறைத்து ஓடும் கப்பலிலேயே எங்களை ஏற்றிவிடுவதாக திட்டம்.வேண்டிய உணவுப்பொருட்களையும் கப்பலில் அனுப்ப தயாராக இருந்தனர்.
மாலை ஆறு மணிக்கு நாங்கள் காத்திருந்தோம்.
கப்பலிலிருந்து நான் விடுவிக்கவேண்டிய தினேஷ் குறுஞ்செய்தி அனுப்பினார். கடும் காற்று காரணமாக ஜிப்ரேல்டர் துறைமுகம் மூடப்பட்டுள்ளது; கரையிலிருந்து படகு எதுவும் கடலுக்குள் வரஇயலாது; எனவே கப்பல் நைஜீரியாவை நோக்கிய பயணத்தை தொடர்கிறது என.
மூன்று தினங்கள் ஜிப்ரேல்டர் நகரை முழுமையாக சுற்றி பார்த்துவிட்டு லண்டன்–மும்பை வழியாக வீடு வந்து சேர்ந்தேன். மூன்று வாரங்களுக்குப்பின் தென்ஆப்ரிக்காவின் கேப் டவுனில் பின்னர் பணியில் இணைந்தேன். ஊருக்கு திரும்பி வந்ததில் அஜிதனின் திருமணத்தில் கலந்துகொள்ள முடிந்தது.
இம்முறை ஏழு மாதம் கப்பலில் பணி செய்தேன். என் இதயம் எனக்கு ஒன்றையும் சொல்லவில்லை. யோகபயிற்சிகள், ஆசனம், தியானம், ஐவேளை தொழுகையையும் மிக எளிதாக நிறைவேற்றினேன். அக்டோபர் ஒன்றாம் தேதி மலேசியாவில் இறங்கி வீட்டுக்கு வந்தேன். வீடு கட்டும் பணி கான்க்ரீட் முடிந்து இருந்தது. வீட்டை கட்டிப்பார் எனும் சொல்லுக்கு அர்த்தம் புரிந்த நாட்கள். மிகக்குறைவான தூக்கம். கால் மூட்டுக்களிலும், உடலிலும் மிக மெல்லிய வலி இருந்துகொண்டே இருந்தது. எனினும் நான்கு மணிநேரத்திற்கு தூக்கமில்லாத நாட்கள்.
நவம்பர் மாதம் வேறொரு நிறுவனம் அவசரமாக அழைத்தது. நவம்பர் பதினாறாம் தேதி கொச்சியில் மருத்துவ பரிசோதனைக்கு சென்றேன். இங்கே இசிஜி சோதனைக்கு முன் நானே சொல்லிவிட்டேன். “என் இசிஜி அப்நார்மலாக இருக்கும்” என.
கொஞ்சம் அதிமாகவே சோதனை செய்தார்கள். “குழப்பம் ஒந்தும் இல்லா” என்றவர் இசிஜி காகிதத்தை கையில் வைத்து உடனிருந்த நேழ்ஸ் சேச்சியிடம் கொடுத்து “ஒந்து நோக்கு” என்றார். “ஒரு பிர்ஷனுமும் இல்லா” என்றபோதும் டாக்டரிடம் காமித்து உறுதி செய்தபின் டிரட்மில்லில் ஓட விட்டு சோதனை செய்தார்கள். எல்லாம் நார்மல் நான் கப்பல் பணிக்கு ‘பிட்’ ஆக இருக்கிறேன் என சோதனை அறிக்கைகள் சொன்னது.
ஆனால் அந்த நிறுவனத்தில் பணியில் இணைய முடியாமல் போனது. வீடு பணி முடிந்து கிரகப்பிரேவசம் முடிந்த மூன்றாவது நாள் பாண்டியில் ஒரு வகுப்பு, மறுநாள் சென்னை பலாஜியில் மருத்துவ சோதனை. நாகர்கோவில்-பாண்டிக்கு குளிர்சாதன தூங்கும் வசதி கொண்ட பேருந்தில் சென்றதால் கொஞ்சம் தூங்கினேன். பாண்டியில் வகுப்பு முடிந்த அன்று மாலையே புறப்பட்டு சென்னையில் தாம்பரம் பார்வதிநகரில் வசிக்கும் நண்பர் அசோக் வீட்டில் இரவு தங்கிவிட்டு. காலையுணவாக சகோதரி சுஜாதா தந்த புட்டும் பயறும் உண்டுவிட்டு டி நகர் புறப்பட்டேன். அசோக் வீட்டில் நன்றாக தூங்கினேன்.
காலை எட்டு நாற்பதுக்கு பாலாஜி மெடிக்கல் சென்டரில் இறங்கியபோது எனக்கு முன்பே எட்டு பேர் காத்திருந்தனர் மருத்துவமனை திறப்பதற்காக. அன்று இரவே வீட்டுக்கு செல்ல ரயிலில் டிக்கட் முன்பதிவு செய்திருந்தேன். அடுத்த சில நாட்களில் எனது பயணம் இருப்பதாக என் நிறுவனம் சொல்லியிருந்தது. மதிய உணவிற்கு சகோதரி அமுதாவின் இல்லம் வருவதாக அழைத்து சொன்னேன்.
ஒன்பது மணிக்கு சோதனைகள் தொடங்கியது. எனது டிரட்மில் டெஸ்ட் மட்டும் நடக்கவில்லை. சோதனை முடித்த பெரும்பாலானோர் மருத்துவரை சந்திக்க காத்திருந்தோம். மணி பன்னிரெண்டை தாண்டியும் மருத்துவர் வரவில்லை. சகோதரி அமுதாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். நான் வர தாமதமாகும் நீங்கள் சாப்பிடுங்கள் என.
உங்கள் வேலை முடிந்து வாருங்கள் காத்திருக்கிறோம் என பதிலளித்தார். வழக்கமாக வரும் மருத்துவர் வராததால் பாலாஜியின் வேறு கிளையிலுள்ள மருத்துவர் சைதாபேட்டை டிராபிக்கில் சிக்கி டி நகர் வந்து சேர தாமதமாகி விட்டது.
நான்காவது ஆளாக மருத்துவரை சந்திக்க என்னை அழைத்தார்கள். பள்ளி மாணவியை போலிருந்த இளம்பெண் மருத்துவர் என்னிடம், “உங்க இசிஜி அப்நார்மல்” என்றதும் இம்முறை பதட்டமே இல்லை. கடந்த இரு ஆண்டுகளில் பாலாஜி சென்னை, தூத்துக்குடியில் செய்த மருத்துவ அறிக்கை, இதய நிபுணரை பார்த்த டெஸ்ட் ரிப்போட் அனைத்தையும் காண்பித்தேன். டிரட்மில் டெஸ்ட் செய்யுமாறு கோரினேன்.
காத்திருக்க சொன்னார். இசிஜி பேப்பர்களை கொண்டு வரச்சொல்லி பார்த்தார். யாருக்கோ போனில் பேசிவிட்டு, ஆறுமாதம் தாண்டி விட்டது நீங்கள் இதய மருத்துவரை பார்த்து என்றதும்...
ஒன்றரை மாதங்களுக்கு முன் கொச்சியில் செய்த மருத்துவ சோதனையில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை உங்கள் பாலாஜியில் செய்யும் சோதனை மட்டுமே இசிஜி பிரச்னையாக உள்ளது என்றேன்.
“அந்த ரிப்போட் இப்ப இருக்கா?”
மருத்துவரின் கையில் கொடுத்தேன். அதை போனில் புகைப்படம் எடுத்துவிட்டு மீதி சோதனைகளை முடித்து வெளியில் காத்திருக்க சொன்னார். பத்து நிமிடத்தில் டிரட்மில் சோதனைக்கு அழைத்தார்கள். பதினைந்து நிமிடம் ஓடினேன். என் இதயம் நன்றாக இருக்கிறது என கருவிகள் சொன்னது.
“ரிபோர்ட் ரெடிஆனதும் போன் பண்ணுவோம்,வந்து வாங்கிகுங்க” என்றார். மாம்பலத்திலிருந்து ரயிலில் எக்மோர் சென்று சகோதரி அமுதாவின் வீட்டிற்கு செல்லும்போது மணி இரண்டை தாண்டி விட்டது. மிக சரியாக அவர் வீட்டு வாயிலில் மணியை அழுத்தினேன். புன்னகையுடன் பாலாஜி சாரும், அமுதா அக்காவும் வரவேற்றார்கள். அமர்ந்ததும் ஒரு குவளை நீர் அருந்த தந்தார்கள் “ஷாகுல் எல்லாம் ரெடி அஞ்சி நிமிஷம் வட மட்டும் சூடா சுட்டுட்றேன், சாப்பிடலாம்” என்றார்.
தொழுகை நேரம் என்றேன் ஒரு அறையை தந்தார்கள். ஒளு செய்து வேட்டிக்கு மாறிக்கொண்டேன். என் வீட்டை போன்று உணரும்படி செய்தனர் பாலாஜியும்,அமுதா அக்காவும் தொழுகை முடிந்ததும். தலை வாழை இலையில் வெள்ளை சாதம், பருப்பு குழம்பு, சாம்பார், ரசம், தயிர், உருளைக்கிழங்கு பொரியல், வாழைக்காய் துவரன், அப்பளம், வடை எண்ணெய் சட்டியிலிருந்து நேராக இலைக்கு வந்தது. ஆவி பறக்க சாப்பிடும்போதே கேட்டேன் “அக்கா இன்னும் ஏதாவது இருந்தா சொல்லுங்க வயித்துல இடம் விடனுமுல்லா”
“ஷாகுல் பாயசம் உண்டு” மகிழ்ச்சியில் நன்றாக உணவுண்ட நாள் அது.வாழைப்பழம் தந்தார்கள். சாப்பிட முடியாது என்றதும் “பேக்ல வெச்சிகுங்க ராத்திரி ட்ரைன்ல போவும்போது சாப்பிடலாம்”. பதினாறாவது மாடியில் இருந்து தெரிந்த சென்னையை கொஞ்ச நேரம் பார்த்தேன்.
மாலை தொழுகையை முடித்துவிட்டு சென்னை புத்தக காட்சிக்கு செல்லும் திட்டம் இருந்ததால் டி நகர் சென்று எனது மருத்துவ அறிக்கையையும் வாங்கி கொள்ளலாம் என முடிவு செய்தோம். அமுதா அக்கா கூகிள்அக்கா சொல்லும் வழியை சொல்ல, சொல்ல பாலாஜி ஸார் காரோட்டினார். ஐந்து மணியை தாண்டி மிக தாமதமாக என் மருத்துவ அறிக்கையை தந்தார்கள் பாலாஜியில்.
![]() |
சென்னை புத்தக கண்காட்சியில் |
நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் புத்தக கண்காட்சிக்கு சென்றோம். இரவு எக்மோரிலிருந்து புறப்படும் அனந்தபுரியில் டிக்கட் முன்பதிவு செய்திருந்தேன். மிக சரியாகத்தான் ஒய் எம் சி ஏ புத்தக கண்காட்சியில் இருந்து புறப்பட்டோம். கார் நகரவே முடியாத அளவு டிராபிக். பாலாஜி நிதானமும்,பதட்டமுமாக காரோட்டினார். பத்து நிமிடங்கள் இருக்கும்போது குறுக்கு பாதையில் சென்றால் ரயிலை பிடித்து விடலாம் “ஷாகுல் பைய கைல ரெடியா வெச்சிகுங்க கார நிப்பட்டினதும் இறங்கி ஓடிருங்க” என்றார்.
நாங்கள் வந்த வழியில் மிக சரியாக சிக்னல் விழுந்தது. இருநூற்றி நாற்பது வினாடிகள் கழிந்து பச்சை விளக்கு எரிந்ததும் ஜேம்ஸ்பாண்ட் ஓட்டும் கார் போல கார் பறந்தது. எக்மோர் சென்று சேரும்போது ரயிலுக்கு ஒரு நிமிடம் இருந்தது. பைகளுடன் ஆறாவது பிளாட்பாரத்தில் நிற்கும் அனந்தபுரியை நோக்கி படிகளில் தாவியேறி, குதித்து இறங்கிகொண்டிருக்கும்போது ரயில் ஊளையிட்டது. விரைந்தோடி ரயிலை நெருங்கும்முன் ரயில் நகர தொடங்கியிருந்தது. ஏறிக்கொண்டேன்.
பத்து பெட்டிகள் தாண்டி எனது இருக்கையில் அமர்ந்தபின் அமுதா அக்காவிற்கு அழைத்தேன். என்னை அழைத்துசெல்ல காத்திருப்பதாக சொன்னார். நாளை காலை நாகர்கோவிலில் இருப்பேன் என்றேன்.
நாஞ்சில் ஹமீது,
08-april-2025 .
sunitashahul@gmail.com
No comments:
Post a Comment