மருத்துவர் மாரிராஜிக்கு எனது இ சி ஜி யை அனுப்பி கொடுத்தேன். “ஷாகுல் ஜி கப்பலுக்கு போயிட்டு வாங்க, அப்புறமா நாமோ ஒரு டெஸ்ட் பண்ணி பாத்துகிடுவோம்” என்றார்.
2023 மே மாதம் ஏழாம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டு மும்பையில் இரு தினங்கள் தனிமைப்படுத்தல், அங்கிருந்து பனாமாவுக்கு பயணித்து அங்கே ஐந்து தினங்கள் விடுதியறையில் தனிமைப்படுத்தல். கோவிட் எச்சரிக்கைதான்.
கப்பலில் இருக்கும்போது சுனிதா ஒரு நாள் கேட்டாள் “என்ன சாப்ட்டியோ சாறே”. அன்று சனிக்கிழமை மாலை இரவுணவாக பீப் ஸ்டேக் உண்டிருந்ததை சொன்னேன். “பீப் எல்லாம் தின்னா ஒன்னும் பிரச்னையில்லையா”
“நான் நல்லாத்தான் இருக்கேன்” என்றேன்.
ஐந்தரை மாத பணிக்குப்பின் சூயஸ் கால்வாயில் இறங்கி பிரமிட் சுத்தி பார்த்துவிட்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி வீடு வந்து சேர்ந்தேன். அம்மாத இறுதியில் மருத்துவ தோழி மகேஸ்வரி இல்லம் வந்திருந்தார். அவருடைய ஜூனியர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்ள. டாக்டர் மகேஸ்வரி எனது இ சி ஜி யை பார்த்துவிட்டு “கை விரல்களை குவித்து மடக்கி இதயம் துடிப்பதை விளக்கினார்.
“உங்களுக்கு ஒரே ஒரு பீட் கொஞ்சம் குறைவா அடிக்கிது. ரொம்ப ரெயர் கேஸ். ஒண்ணுமில்ல உங்க இதயத்துக்கு” எனச் சொன்னார். சுனிதா என் முகத்தை பார்த்தாள். ஒண்ணுமில்ல என் ஷாகுலுக்கு எனும் நிம்மதி முகத்தில் தெரிந்தது.
2024 ஜனவரி மாதம் அழைத்து பிப்ரவரி முதல் வாரத்தில் எல் என் ஜி அலையன்ஸ் கப்பலுக்கு பணியில் இணைய வேண்டி கோரியது என் நிறுவனம். மருத்துவ பரிசோதனைக்கு செய்து அறிக்கையை உடனே தர வேண்டினார் அலுவலக உதவியாளர். ஜனவரி இருபதாம் தேதி அதிகாலை வடசெரியிலிருந்து தூத்துக்குடிக்கு பேருந்தில் சென்றேன். காலையில் அவித்த கருப்பட்டியும், துருவிய தேங்காயும் மிகக் கொஞ்சமாக எட்டுமணி வாக்கில் ஓடும் பஸ்ஸிலேயே சாப்பிட்டேன்.
இங்கே அருகில் வசிக்கும் மூத்த சகோதரி ஒருவர் இலக்கிய வாசகியும் கூட. வீட்டிற்கு வாங்க என எப்போதும் அழைத்துக்கொண்டே இருப்பார். அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன் மாலையில் உங்கள் இல்லம் வரலாமா? வீட்டில் இருப்பீர்களா என. கண்டிப்பாக வாருங்கள் வீட்டில்தான் இருப்பேன் என முகவரியும் தந்தார்கள்.
ஒன்பது மணிக்கு பாலாஜி மெடிக்கல் சென்று சேர்ந்துவிட்டேன். அன்று சனிக்கிழமை ஆதலால் மதியம் வரைதான் மருத்துவமனை இருக்கும் சீக்கிரமே வரச்சொல்லியிருந்தார்கள்.
அனைத்து சோதனைகளும் முடித்து மருத்துவரை சந்திக்க காத்திருந்தேன். என் பின்னால் வந்தவர்கள் சோதனைகள் முடித்து திரும்பி செல்வதை கண்டு உதவியாளரிடம் கேட்டேன். காத்திருக்க சொன்னார்கள். இங்கும் கண்ணாடி அணிந்த இளம்பெண் மருத்துவர். “ஸார் உங்க இ சி ஜி அப்நார்மல்னு இருக்கு. நீங்க கார்டியாலஜிஸ்ட்ட பார்த்து ஒப்பினியன் வாங்கி வரணும்” என்றார்.
“மே மாசம் உங்க சென்னை பாலாஜில மெடிக்கல் பண்ணுனேன், அப்பவும் இதே மாதிரி வந்தது கார்டியாலஜிஸ்ட்ட பாத்தேன், டெஸ்ட்ல எல்லாம் நார்மல்” என்றேன்.
“அந்த ரிபோர்ட்ஸ் இருக்கா”
சிம்ஸ் மருத்துவமனை அறிக்கையை கொண்டு போயிருந்தேன். பையிலிருந்து அதை எடுத்து கொடுத்தேன். அவர்களது தலைமை மருத்துவர் பாலாஜிக்கு அதை அனுப்பிக்கொடுத்துவிட்டு பதிலுக்காக காத்திருக்க சொன்னார்.
ஒரு மணிநேரம் கழித்து என்னை அழைத்து “இந்த டெஸ்ட் செய்து ஆறு மாதம் தாண்டிவிட்டது, நீங்க கார்டியாலஜிஸ்ட்ட பாத்து பிட் சர்டிபிகட் வாங்கி வாருங்கள்” எனச்சொல்லி தூத்துக்குடி எ வி எம் மருத்துவமனைக்கு தொலைபேசியில் அழைத்து எனக்கு டோக்கன் போடச் சொன்னார். மணி மதியம் ஒன்றாகியிருந்தது.
“அப்பாயிண்ட்மெண்ட் முடிந்து விட்டது, வேறு டாக்டர் இரண்டரை மணிக்கு மேல் வருவார்” என சொன்னதால் என்னை விரைந்து மருத்துவமனை போக சொன்னார்கள். மூன்று மணிக்கு முன் திரும்பி வரவும் அறிவுறுத்தினார் மருத்துவர் மீனா.
அங்கே ஜவுளிக்கடை நடத்தும் நண்பரை அழைத்து உதவி கேட்டேன். கடை ஊழியர் சுரேசை பைக்கில் அனுப்பி வைத்தார். எ வி எம் மருத்துவமனையின் வரேவேற்பறையில் பணம் கட்டியபின் மருத்துவரின் அறைக்குமுன் சென்று அங்கிருந்த உதவியாளர் பெண்ணிடம் விபரம் சொன்னேன்.
“உங்க முன்னால ரெண்டு டோக்கன் இருக்கு மூணாவதா நீங்க போலாம் டாக்டர் ரெண்டு மணிக்கு மேல வருவார்” என்றாள். சாப்பிட்டுவிட்டு வருகிறேன் என்றேன். இல்லை காத்திருங்கள் என சொல்லிவிட்டார். எனக்கு நல்ல பசி. மருந்தகம் சென்று பிளேட் வாங்கி கழிப்பறையில் மார்பின் முடிகளை சவரம் செய்ய சொன்னாள்.
மருத்துவரின் அறைமுன்பு காத்திருந்தேன். அங்கே செய்ய வேண்டிய சோதனைகளுக்கான பணம் குறைவாக இருந்ததால் சுனிதாவை அழைத்து சொன்னேன். “ஓ அதே பிரச்சனையா இப்பவும் , செரியா பாருங்க” என சொல்லிவிட்டு என் கணக்கில் பணத்தை அனுப்பினாள்.
மருத்துவரிடம் கடந்த முறை சோதனை செய்த அறிக்கைகளை காண்பித்தேன். கப்பலில் என்ன வேலை எவ்வளவு வருடங்களாக பணிபுரிகிறீர்கள் என கேட்டபின் முதலில் டிரட்மில் டெஸ்ட்டுக்கு அனுப்பினார். அதன்பின் “ஒரு எக்கோ எடுத்து பாத்துருவோம்” என்றார். அதற்கும் பணத்தை கட்டி ரசீதை கொடுத்தேன். எக்கோ டெஸ்டில் எனது இதயம் லப்டப் என துடிப்பதை கணினியில் பார்த்தேன்.
எல்லாம் நார்மல் என்றார் டாக்டர். “என்ன செய்யட்டும் டாக்டர் ஒவ்வொரு முறையும் இப்படி ஆகிறதே”
“ஒன்னும் செய்ய முடியாது, நீங்க வேலைக்கு போகும் முன் மெடிக்கல் டெஸ்ட் பண்ண உங்க கம்பனி சொல்லுது, இ சி ஜி அப்நார்மல் வருது, அதுனால நீங்க ஒவ்வொரு முறையும் இத செய்து ஆகணும்” என்றார்.
மெடிக்கல் சென்டர் என்னை அழைத்து “என்ன ஆச்சு? டாக்டர் போயிட்டாங்க. நீங்க கார்டியாலஜிஸ்ட்ட ரிப்போட்ட திங்ககிழம கொண்டு வாங்க” எனச் சொன்னாள்.
எனது சோதனை எல்லாம் முடிந்து பிட் சர்டிபிகேட் வாங்கும்போது மணி ஐந்தை தாண்டியிருந்தது. நண்பரின் ஜவுளி நிறுவனம் அருகில்தான் இருந்தது. நண்பர் நெடுநேரம் காத்திருந்துவிட்டு வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால் போய்விட்டார். நான் அவரது கடைக்கு சென்று எனது மருத்துவ அறிக்கையை திங்கள்கிழமை பாலாஜி மெடிக்கல் சென்டரில் கொடுக்க சொன்னேன்.
மருத்துவர் மீனா என் நிறுவனத்துக்கு அனுப்பிய மின்னஞ்சலை எனக்கும் பார்வர்ட் செய்திருந்தார். ஷாகுலின் இ சி ஜி அப்நார்மலாக இருப்பதால் கார்டியாலஜிஸ்ட்டிடம் அனுப்பியுள்ளோம். அங்கிருந்து பிட் சர்டிபிகேட் கிடைத்தபின்தான் அவரது மருத்துவ அறிக்கை தயாராகும் என எழுதியிருந்தது. அதற்கு உடனே கார்டியாலஜிஸ்ட்ட பிட் தந்துவிட்டார் என பதில் அனுப்பினேன்.
காலையில் வீட்டுக்கு வரச்சொன்ன சகோதரியை அழைத்து பேருந்து ஏறப்போகிறேன் என்றேன். ரெண்டுங்கெட்டான் நேரம். எனது பசிக்கு சாப்பிடும் உகந்த வேளை அல்ல அது. மாலை ஐந்து மணியை தாண்டியிருந்தது. இரண்டு கப் சுண்டலும் ஒரு சுக்கு காப்பியும் சாப்பிட்டபின் பேருந்தில் ஏறிக்கொண்டேன்.
சகோதரி சொன்ன இடத்துக்கு அருகில் இறங்கியதும் கல்லூரி படிக்கும் அவரது மகன் வந்து இல்லம் அழைத்து சென்றான். புதிதாய் கட்டிய பெரிய வீடு. முதல் முறையாக அவரது இல்லத்தில் பாதம் பதித்தேன். மகிழ்ச்சியுடன் வரவேற்று அமர சொல்லி குடிக்க தண்ணீர் தந்தார்கள். அங்கிருந்த வயதான இரு பெண்கள் தனது அம்மாவும், கணவரின் அம்மாவும் என அறிமுகப்படுத்தினார்.
“ஷாகுல் சாப்பிடுங்க தோசை ஊத்தி தாறேன்” என அன்பாய் கேட்டார். எனக்கும் நல்ல பசி. மக்ரிப் தொழுகைக்கான நேரம் கடந்திருந்தது. நான் தொழு வேண்டும் என்றேன். ஒளு செய்ய அறையை காண்பித்து சுத்தமான பாய் ஒன்றும் தந்தார்கள்.
தொழுகை முடித்து வந்தேன். வயதான பெண்கள் இருவரும் உள்ளறைக்கு போயிருந்தனர். சகோதரி சுண்டலும் சாயாவும் தந்தார். தோசை சாப்பிடும் முன் இது தேவையில்லையே என எண்ணினேன். எதுவும் சொல்லவில்லை. நீண்ட நேரமாக தோசை அவரது தோசை கல்லிலேயே ஒட்டி பிடித்துவிட்டது போல. பசியில் எதிர்பார்த்து காத்திருந்த நான் இனி தோசை கிடைக்காது எனும் எண்ணம் வந்ததும், “அக்கா நான் இறங்கட்டா” என கேட்டேன். சரி போயிட்டு வாங்க என்றார். பேருந்து நிலையம் வந்து ஆப்பமும் முட்டை கறியும் உண்டுவிட்டு நாகர்கோவில் செல்லும் பேருந்தில் ஏறினேன். மனதில் அவர்களது தோசை கல்லில் இருந்து ஏன் தோசை இளகவேயில்லை? எனும் எண்ணம் மட்டும் நாகர்கோவில் தொடர்ந்து வந்தது.
சுனிதாவின் சொற்கள் நினைவில் வந்தது “யாரு கூப்ட்டாலும் உடனே அங்க ஆஜர் ஆயிரணும்”.
நாஞ்சில் ஹமீது,
31-March-2025.
No comments:
Post a Comment