Thursday, 10 April 2025

என் இதயம் - 1

கப்பல்காரர்களுக்கு பணியில் இணையும்முன் மருத்துவ பரிசோதனை கட்டாயம். இரத்தம், சிறுநீர் சோதனைக்கு எடுப்பார்கள். எக்ஸ் ரே, இ சி ஜி, கண்பார்வை மட்டுமில்லாது நிறக்குருடு (colour blindness), காது கேட்கும் திறன், சிறுநீரகத்தில் கல் இருப்பதை அறியும் அல்ட்ரா சோனிக் சோதனை ஆகியவையும் உண்டு. 


நாற்பதை தாண்டியபின் டிரட்மில் (treadmill) டெஸ்ட் கட்டாயம். நான்கு ஸ்டேஜ் கொண்ட டிரட்மில்லில் ஓடவிட்டு சோதனை செய்வார்கள். இதயம் எப்படி இருக்கிறது என்பதை அறிய. 


2023ம் ஆண்டு பணியில் இணையும்முன் மருத்துவ பரிசோதனைக்கு என் நிறுவனம் சொன்னபோது சென்னை செல்லும் வேலை இருந்ததால், அங்கே செய்துகொள்கிறேன் என்றேன்.

ஏப்ரல் மாத இறுதியில் அட்டப்பாடி மலை பிரேதசத்தில் ஒரு சிறுகதை பயிற்சி பட்டறை வகுப்பு ஒன்றை ஸீரோ டிகிரி பப்ளிகேஷன் நடத்தியது. அதில் கலந்துகொண்டு சேலம் வரை காரில் வந்து அங்கிருந்து பேருந்தில் சென்னைக்கு சென்றேன்.

நண்பர் அசோக் வீட்டில் குளியலும், காலை உணவும் உண்டபின் டி நகர் பாலாஜி மெடிக்கல் சென்டருக்கு சென்றேன். அனைத்து பரிசோதனைகளும் முடிந்தபின் மருத்துவரை சந்தித்தபோது எனது இ சி ஜி அப்நார்மல் ஆக இருப்பதால் ஒரு இதய மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெற்று அங்கேயே டிரட்மில் சோதனையும் செய்து அவர்கள் மருந்து ஏதாவது பரிந்துரைத்தால் மருத்துவரின் கையொப்பமிட்ட கடிதத்துடன் முத்திரையும் பதித்து வாங்கி வாருங்கள் அதன் பின்புதான் உங்கள் மருத்துவ சான்றிதழ் கிடைக்கும் என்றார் இளவயது பெண் மருத்துவர்.

சுனிதாவை அழைக்கவேயில்லை. என்ன ஆயிற்று என் இதயத்திற்கு என கொஞ்சம் அமைதியை இழந்தேன். அன்று மே ஒன்றாம் தேதி. பொது விடுமுறை நாள். விஷ்ணுபுரம் வட்டத்தை சார்ந்த நண்பர் மருத்துவர் மாரிராஜை அழைத்தேன். “ஷாகுல் இப்ப எங்க இருக்கீங்க” என கேட்டவர், ஐந்து நிமிடத்தில் வடபழனி சிம்ஸ் மருத்துவமனையின் மூத்த இதய நிபுணர் Dr.ஜி என் பிரசாத் அவர்களிடம் நேரம் வாங்கி தந்தார்.

டி நகரிலிருந்து ஆட்டோவில் சிம்ஸ் மருத்துவமனை போய் சேர்ந்தேன். பாலாஜி மெடிக்கல் தந்த கடிதத்தை கொடுத்தேன். சாப்பிடீர்களா என கேட்டவர், டிரட்மில் சோதனை செய்ய சாப்பிட்டு இரண்டு மணிநேரத்துக்கு பின் உரிய துணையுடன் வரவும் என சொன்னார். நண்பர் கே பி வினோத்தை அழைத்தேன். விஷயம் எதும் சொல்லாமல் வடபழனி வர இயலுமா எனக்கேட்டேன்.

கேபி வினோத் - 4 சீசன்ஸ் இயக்குநர்


அலுவலக மீட்டிங்கில் இருந்தார். தோழி கவிதாவை அழைத்தேன். அவர் அழைப்பை எடுக்கவில்லை. மருத்துவமனை ஊழியரிடம் பேசினேன். மருத்துவரிடம் பேசிவிட்டு சாப்பிட்டுவிட்டு வந்து இங்கே பதிவு செய்துவிட்டு காத்திருங்கள் என்றார்.

காத்திருந்த நேரம் கடினமானது. கப்பலுக்கு செல்லும்போது, ஒரு ஸ்ட்ரிப் பராசிட்டாமால், ஜண்டு பாம், காயத்திருமேனி தைலம், அஞ்சால் அலுப்பு மருந்து போன்றவை கொண்டு செல்வேன். அரிதாக மாத்திரை முழுங்கியிருக்கிறேன்.

கடந்த எட்டு ஆண்டுகளாக பாராசிட்டமால் மற்றும் ஜண்டு பாம் கொண்டு வருவதில்லை. நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். கோவிட் காலத்துக்குபின் ஆண்டி பயாடிக் மற்றும் கபசுரகுடிநீர் பொடியை சுமந்து கொண்டிருக்கிறேன். அதுவும் பிறருக்கு உதவும் பொருட்டுதான். திடீரென இதயத்திற்கு என்ன ஆயிருக்கும் என தோன்றும்போதே, ஒண்ணுமில்ல நீ நல்லா இருக்கா எனும் மறு எண்ணம்.

வடபழனியின் சிம்ஸ் மருத்துவமனை மிகப்பெரியதாக இருந்தது. இதய நோயாளிகள் நிறையபேர் பரிசோதனைக்காக காத்திருந்ததை கண்டேன். இரண்டு மணிநேரத்திற்கு பின் ஊழியர் ஒருவர் தனியறையில் மார்பின் மயிர்களை சவரம் செய்து களைந்தார்.

அங்கேயே மார்பு, மார்புக்கு கீழே, முதுகு என பன்னிரெண்டு இடங்களில் பசை கலந்த பட்டன் ஒன்றை ஒட்டியபின் அதனுடன் இணைந்த வயர் டிரட்மில் மற்றும் கணினியுடன் இணைக்கப்பட்டபின் சோதனை தொடங்கியது.

முதலில் வேக நடை. கொஞ்சம் கொஞ்சமாக வேகம் அதிகரிக்கும். நான்காவது ஸ்டேஜில் மலைமேல் ஏறுவதுபோல் கடினமானது. எப்போதும் நடைபயிற்சி, மருந்துவாழ்மலையில் ஏறுதல் என நான் இருப்பதால், இந்த சோதனை எனக்கு எளிதாக இருந்தது. இதயத்தில் ஒரு பிரச்னையும் இல்லை என்றால் மட்டுமே நான் பணிக்கு செல்ல முடியும். என் இதயத்திற்கு ஒன்றும் இல்லைதான். ஆனாலும் என்ன ஆயிற்று எனும் சிறு பதட்டம் ஆழ் உள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

டிரட்மில் சோதனை செய்த பெண்ணிடம் கேட்டேன் “இந்த வயர நெஞ்சில பொருத்தத்துலே, பயந்துருவாங்களே”

“ஆமா ஸார் அப்டி இந்த டெஸ்ட் பண்ணாம போறவங்க நிறையப்பேர் உண்டு” என்றாள்.

சோதனை முடிந்து மருத்துவரை சந்திக்க காத்திருந்தேன். “ஷாகுல் ஹமீது” என்று காதில் சப்தமாக கேட்டது. “ஸார், நீங்களா” என கேட்டுவிட்டு மருத்துவரின் அறைக்குள் போக சொன்னாள்.

டிரட்மில் சோதனையில் வந்த இ சி ஜி நகல் இளம் மருத்துவர் ஒருவர் கையில் இருந்தது. மூத்த மருத்துவர் பிரசாத் அவரிடம் “ஸீ திஸ் இ சி ஜி” எனச்சொல்ல அவர் அந்த கிராப் காகிதங்களால் புரட்டிக்கொண்டே இருந்தார். அதன் ஒரு பக்கத்தை சுட்டி காட்டி மூத்தவர் இளையவரிடம் மருத்துவ மொழியில் விளக்கம் கொடுத்தார்.

நான் மூத்தவரிடம் “டாக்டர் எதாவது பிரச்சனையா” எனக்கேட்டேன். “நத்திங், உங்க டாக்டர் அதைச்சொல்லுவாங்க” என்றார். எனக்கு மருந்துகள் ஏதும் தரவில்லை.

கப்பலில் பணிபுரிய தகுதியுடன் இருக்கிறார் என்ற சான்றிதழ் அவரது கையொப்பமிட்டு, முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து டி நகர் சென்று பாலாஜி மெடிக்கல் சென்டரில் அறிக்கையை கொடுத்தேன்.

மருத்துவர் “ஆல் ரைட் ரிப்போர்ட் வாங்கிகிடுங்க” என்றார்.

“ஹார்ட் டாக்டர் உங்களிடம் கேட்க சொன்னார் என்ன பிரச்னை என” கேட்டேன்.

“ஒண்ணுமில்ல” என சொல்லி சிறிய பற்கள் தெரிய சிரித்தாள். பதிலுக்கு நானும் சிரித்தேன்.

நான் கப்பல் கொண்டு செல்வதற்காக மருத்துவ அறிக்கையை என் கையில் தந்தார்கள். அதை மின்னஞ்சலில் என கப்பல் நிறுவனத்துக்கும் அனுப்புவார்கள். 






சகோதரி புவனாவின் கணவர் பாலா மதிய உணவுக்கு என்னை அழைத்திருந்தார். நாள் முழுவதும் மருத்தவமனையில் கழிந்தது. காலையிலேயே நண்பர் அசோக்கிடம் சொல்லிவிட்டு வந்திருந்தேன் இரவுணவுக்கு அனைவரும் ஒன்றாய் வெளியே செல்லலாம் என.

மாலையில் மிக தாமதமாக பாலாவை அழைத்தேன். கிண்டி ரயில் நிலையம் வந்தார். “வீட்டுக்கு வருகிறேன், ஆனால் பார்த்துவிட்டு உடனே தாம்பரம் செல்ல வேண்டும்” என்றேன்.

“நீங்க வறீங்கன்னு புவனா ரொம்ப எதிர்பார்த்து இருக்கா, வந்துட்டு உடனே போனா அவ ஏமாந்து போய்விடுவாள்” என்றார். அசோக்கை அழைத்து “டின்னர் நாளைக்கி வெச்சிகிடலாம்” என்றேன்.

சுனிதாவை அழைத்து விபரம் சொன்னேன். “எப்பவும் சின்ன புள்ள கிடையாது, மெடிக்கல் போறதுக்கு மின்ன நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு போணும்,  ராத்திரி எல்லாம் உறங்காம போனா, கொஞ்சமாவது தன்ன பேணிக்கிடாண்டாமா” எனச் சொன்னாள் 



மேலும் ...

நாஞ்சில் ஹமீது,

30 -03-2025.

No comments:

Post a Comment