Saturday, 19 April 2025

8. மலாக்கா கொள்ளையர்கள்

 

என் எஸ் பிரண்டியர் நாட்குறிப்புகள் 2025.

     

    கப்பலில் சரக்கு ஏற்ற போகும் துறைமுகம் எது என தெரிந்தபின். சரக்கு இறக்கும் துறைமுகம் எது என கப்பல்காரர்கள் மத்தியில் தினமும் ஒரு விவாதம் நடக்கும்.

   “தேக்கோ கத்தார் ல லோட் பண்ணுனா,ஜப்பான் தான் போவும்,இங்க உள்ள கார்கோ,நல்ல கார்கோ” என்பார் எத்திராஜ்.

  “இந்தோனேசியா கூட போலாம்” என்பார் சமையல்காரர் ராகுல் மிஸ்திரி.

   “ஏன் இந்தியா போக கூடாது, சென்னை, ஹல்தியா போகலாம்”என்றேன்.

 “ஐஞ்சி பைசா எங்க கூட கடக்கிதோ அங்க கார்கோவ குடுப்பான்” என்பார் ராஜேஷ்.

    சரக்கை கையாளும் நிறுவனம் எங்கு தேவையும் காசு அதிகமாக கிடைக்கிறதோ  அங்கே தான் விற்பனை செய்வார். அதிக பணம் கொடுக்க தயாராக இருப்பவர்களை தேடிக்கொண்டும் இருப்பார்கள்.

  நான்கைந்து  நாடுகளின் பெயர்களை சொல்லி எத்தனை நாள் ஆகும்,எவ்வளவு எரி எண்ணெய் செலவாகும் என்பன போன்ற கணக்குகளை சரக்கை கையாளும் நிறுவனம் கேட்கும்.

   பின்னர்தான் உறுதியாகும் சரக்கு இறக்க எங்கே செல்கிறோம் என.கத்தாரிலிருந்து புறப்பட்ட மறுநாள் தான் தைவானின் மைலியோவ் செல்லும் தகவல் உறுதியானது. அரபிக்கடலில் பயணித்து குளச்சல்,எனது கிராமமான  மனவாளக்குறிச்சி,முட்டம் வழியாக இந்திய பெருங்கடலில் பயணம்.

   கத்தாருக்கு போகும்போதும் இதே வழியாக சென்றோம் பதினைந்து நாளில் திரும்பி செல்கிறோம் அதே பயணப்பாதையில்.வீட்டிலிருந்து நூறு மைல்தொலைவில் சென்றுகொண்டிருந்தோம். முட்டம் அருகில் வரும்போது பிரிட்ஜில் சென்று ரேடாரில் பார்த்தேன். மிக அருகில்தான் வீடு இருக்கிறது எனும் எண்ணம். 

  துறைமுகத்தில் இருந்த இரு நாளும் பன்னிரெண்டு முதல் பதினைந்து மணிநேரம் வேலை. எனவே துறைமுகம் விட்டதும் ஓய்வுக்கு சென்றேன். மறுநாள் காலை பணிக்கு சென்றபோதும் முழு நாளும் ஓய்வெடுத்துக்கொள்ள சொன்னார் முதன்மை அதிகாரி.

   தைவானில் சரக்கு இறக்கியபின் ஆஸ்திரேலியா செல்வதற்கு சரக்கு நிறுவனம் சில தகவல்களை கேட்டது. ஆஸ்திரேலியா துறைமுகத்தில் அனைத்து பாதுகாப்பு முறைமைகளும், கப்பலின் இயந்திரங்களும் நூறு சதமானம் சரியாக இருக்க வேண்டும். மிக கண்டிப்பான அதிகாரிகள் அவர்கள். அதற்காக சில அளவுகள் எடுத்தல், எல்லாம் சரியாக இருக்கிறதா என நாங்கள் சோதிக்க தொடங்கினோம். குப்பை தொட்டிகளின் மூடிகள் இடைவெளியின்றி இருப்பது,ஈக்கள் மொய்க்காமல் சுத்தமாக இருப்பது  கட்டாயம். 

Garbage bins

Garbage area 


  எங்களிடம் இருந்த பெரிய குப்பைதொட்டிகளின் சிலவற்றில் மூடிகள் சரியாக இல்லை. சிலதை சரிசெய்தும்,புதிதாக சில மூடிகள் செய்யவும் உத்தரவு தந்தார் முதன்மை அதிகாரி. 




  நான்கு மில்லி மீட்டர் தடினமனுள்ள  இரும்பு பிளேட்டில் மூடிகளை செய்தேன். இயந்திர அறையில் காஸ் மூலம் வெட்டி,மெல்லிய பட்டையில் அதை சுற்றி வெல்டிங்கால் ஒட்டியபோது  இடைவெளியில்லாத மூடிகள் தயாரானது.

  இந்தியாவிற்கு அருகில் வந்து சிங்கப்பூர் மலேசியாவை தாண்டுவது வரை கடும் வெப்பமாக இருந்து. குப்பைதொட்டிகளின் மூடியை இயந்திர அறையில் செய்ததால் மூன்று தினங்கள் கடும் வெப்பத்திலிருந்து தப்பினேன்.

  சிங்கபூர் தாண்டி மலாக்கா நீரிணையில் செல்லும்போது காப்டன் அனைவருக்கும் பைரைசி(piracy watch) வாட்ச் வைத்திருந்தார். இங்கே இப்போதும் கொள்ளையர்கள் கப்பலுக்குள் புகுந்து திருடி செல்லும் சம்பவங்கள் நடக்கிறது. நான் இருப்பது vlgc(very large gas carrier) வகையை சார்ந்தது  கடல் மட்டத்திலிருந்து பன்னிரெண்டு மீட்டர் உயரத்தில் இருக்கும் இதில் ஏறுவது மிக கடினம். 

இந்த வகை கப்பலில் வந்தபிறகு வருடத்தில் பலமுறை இந்த மலாக்கா நீரிணையை கடக்கிறோம் ஆனால் இதில் கொள்ளையர்கள் வருவதற்கான  வாய்ப்பு குறைவு என்பதால் கேப்டன்கள் பைரைசி வாட்ச் வைப்பதில்லை.

  இம்முறை அனைவருக்கும் வாட்ச் வைத்திருந்தார். அனைத்து அதிகாரிகளுக்கும் பிரிட்ஜில் வாட்ச். இஞ்சினியர்கள் இயந்திர அறையில், மீதமிருந்த அடுமனை பணியாளர்,இஞ்சின் பிட்டர்,மோட்டார் மேன் ஆகியோருக்கு கப்பலின் பின் புறம்,போசன்,ஒ எஸ்சுக்கு கப்பலின் முன்பக்கம் என  காவல் காக்கும் வேலை.

  எனக்கு நள்ளிரவு பன்னிரெண்டு மணி முதல் அதிகாலை நான்கு மணிவரை இரவில் தூங்காமலே பன்னிரெண்டு மணிக்கு டெக்கில் சென்று காவலில் இருந்த லீமேனை விடுவித்தேன். டார்ச் லைட்,விசிலை கையில் தந்தார். கப்பலில் எந்த கதவுகளையும்  திறக்கக்கூடாது. பிரிட்ஜ் வழியாக சென்று, அதே வழியில் வரவேண்டும். பார்வேடில் இருந்த போசனை ஒ எஸ் இர்ஷாத் விடுவித்தார்.

 தண்ணீர் பாட்டில் பிளாஸ்கில் கறுப்பு டீயுடன் சென்றேன்.கப்பலின் பின்புறம் சிறு படகுகள் ஏதாவது வருகிறதா என பார்க்க வேண்டும், பதினைந்து நிமிடத்திற்கு ஒருமுறை ரேடியோவில் எல்லாம் சரியாக இருக்கிறது என சொல்ல வேண்டும். முழு நிலவு நாள் கடும் குளிரோ,வெப்பமோ,மழையோ இல்லை. மூன்றரை மணிக்கே நாம் கொள்ளையர்கள் நடமாடும் இடத்தை தாண்டி விட்டோம் இதோடு பைரைசி வாட்ச் முடிந்தது. 

   காவல் காக்கும் நாளுக்கு முன் நடந்த விவாத கூட்டத்தில் கொழும்புவின் ராஜிதா சொன்னார். “புல் மூன் டே என்ஜாய் அன்ட் டோன்ட் மிஸ் தி தீய்ஸ்”  புத்த மதத்தை சார்ந்தவர்களுக்கு ஒவ்வொரு முழுநிலவு நாளும் மிக முக்கியம். எல்லா மாதமும் முழுநிலவு நாளில் இலங்கையில் அரசு விடுமுறை .

  நான்கு மணிக்கு வரவேண்டிய மோட்டார்மேனை அழைக்க வேண்டாம் என்றார்  முதன்மை அதிகாரி. காப்டன் முழு இரவும் பணியிலிருந்து கள்ளன் வருவதை பார்த்துக்கொண்டிருந்தார்.

   “எனக்கு எதுக்கு நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு டூட்டி போட்டீங்க” என முதன்மை அதிகாரியிடம் கேட்டேன். “ஷாகுல் ஜி ஆளு பாத்து போட்டுருக்கேன். ராத்திரி ரெண்டு மணி கிரிடிக்கல் ஆன நேரம் அதாவது கள்ளன் வரக்கூடிய, அப்பதான் அலெர்ட் ஆ இருக்கணும், அந்நேரம் நானும் பிரிட்ஜில் இருப்பேன்,நாளைக்கி காலத்தே நீ வராண்டாம்,மத்தியானம் ஒரு மணிக்கி வந்தா போரும்” என்றார்.

  அதிகாலை அறைக்கு வந்து காலை பஜர் தொழுகைக்கான நேரம் வரை வரை காத்திருந்து தொழுதுவிட்டு அறையை முழுமையாக இருட்டாக்கிவிட்டு தூங்கினேன். பதினோன்றரை  மணிவரை நல்லுறக்கம். 

 குளித்து மதிய உணவுக்குப்பின் சென்றேன். கம்ப்ரசர் அறையில் அலாரம் சோதனை செய்ய காஸ் இஞ்சினியரும்,பத்தி சாபம் சென்றார்கள் நான் சரக்கு கட்டுபாட்டு அறையில் இருந்தேன்.அன்றைய நாள் எளிதாக முடிந்தது.

   பதினைந்து நாள் பயணம் செய்து தைவானுக்கு மார்ச் மாதம் பதினெட்டாம் தேதி மாலை வந்தோம். துறைமுகத்தில் கப்பல் அணைவது பற்றி தகவல்கள் ஏதும் இல்லை. ஆனால் கடுமையான கடல்சீற்றம் பேரலைகளும். கப்பலை நங்கூரம் பாய்ச்சி நிறுத்தஇயலாத நிலை எனவே இஞ்சினை நிறுத்தாமல் கப்பல் வட்டம்டித்துக்கொண்டே இருந்தது. 

   இருபத்தி ஒன்றாம் தேதி கப்பல் கரையணையும் தகவல் உறுதியானது.இரு தினங்களுக்கு மேல் (அறுபது மணிநேரம் ) கப்பலை நிறுத்தாமல் சுற்றிகொண்டே இருந்ததால் நூறு டன்களுக்கு மேல் எரிஎண்ணெய் செலவானது.

   மைலியாவ் வந்தபோது நங்கூரம் பாய்ச்சாமல் கப்பலை நிறுத்தினார்.கப்பல் கடுமையாக ஆடத்தொடங்கியது.காப்டன் அரை மணிநேரத்திலேயே இஞ்சினை இயக்க சொல்லி கப்பல் வட்டமடிக்க தொடங்கியது. 

 டெர்மினலில் பீயுட்டேன் -41.5 (மைனஸ் நாற்பத்தி ஒன்று புள்ளி ஐந்து)  வெப்பம் இருக்கவேண்டும் எனக்கேட்டார்கள். அந்த வெப்பநிலையை கொண்டு வர இயலவில்லை.மைனஸ் நாற்பத்தி  ஒரு டிகிரி தான் எங்களால் கொண்டு வர இயலவில்லை.

  

     இந்த கட்டுரை எழுதிய இன்று எங்கள் நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சலில் கடந்த மார்ச் மாதம் மலாக்கா நீரிணையில் 6 கப்பல்களில் கொள்ளையர்கள்  புகுந்து ஒரு கப்பலில் வெல்டிங் மெசின்,ஜெனரேட்டர் உதிரி பாகங்கள் என திருடி சென்றுள்ளனர் என எச்சரித்துள்ளது . 

 இது நடந்த நாளில் அதிகாலை இரண்டு மணிக்கும் நான்கு நாற்பதுக்கு முன்னும் தான் கொள்ளையர்கள் கப்பலுக்குள் புகுந்துள்ளனர்.

No comments:

Post a Comment