Wednesday 30 August 2023

எனது பத்தாம் வகுப்பு 4

 

   பாளையங்கோட்டை பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த எனது அண்ணன் மாஹீன் வார இறுதியில் மட்டுமே வீட்டுக்கு வருவான். எல்லா வாரமும் வருவதில்லை.வாரம் தோறும் வந்துவிட்டால் திரும்பிச்செல்ல பஸ்சுக்கு வாப்பா இருபது ரூபாய் கொடுப்பது கடினம்.அந்த வாரம் அண்ணன் வீட்டிற்கு  வந்திருந்தபோது தெரிந்துவிட்டது நான் இரவு டியுஷன் வகுப்புக்கு செல்லவில்லை என.வாப்பாவிடம் “இவன் டியுஷனுக்கு போவல்லையாம் ஸார் என்னய கண்டப்போம் சொன்னாரு”என்றான்.

வாப்பா “நாலு எழுத்து படிச்சா அவனுக்கு கொள்ளாம்,தல்லி,தல்லி பளுக்க வெச்சா பளுக்காது தானே பளுக்கதுதான் பளம்”என்றார். அண்ணன்,வாப்பா யார் சொல்வதையும் அப்போது கேட்பதில்லை. தினமும்  மாலை விளயாட்டுக்குப்பின் பள்ளியின் சத்துணவு கூட அடுமனையின் விறகடுப்பில் சாம்பலுக்கு கீழே அணையாமல் கிடக்கும் கங்கில் சாரதா கடையில் வாங்கிய கோல்ட் பிளேக் சிகரெட்டை பற்ற வைத்து நானும்,ஜோவும் ஊதுவோம்.இரவுகளில் வீட்டில் இருந்து படித்த நினைவே இல்லை.

  உம்மா வள்ளியாத்துக்கு பக்கெட் நிறைய துணிகளுடன் குளிக்க செல்லுபோதேல்லாம் சாரதா சொல்லி கொடுப்பாள். “உங்க மொவன் கூடுன சிக்ரேட்டாக்கும் வலிக்கான்”என.சாரதாவின் குரல் வீட்டில் எதிரொலிக்கும் சாப்பாடு தந்ததும் கோபத்தில் உம்மா சொல்வாள். “அடுத்தது போய் ஒரு பனாமாபில்ட்டர்  வலிசுட்டு வா”என.

   சில தினங்களுக்கு பிறகு காதர் “லே நூறு ரூவாய எடுத்த கள்ளன் யாருன்னு தெரிஞ்சது,அன்னைக்கி உம்மேல சந்தேக பட்டுட்டோம்”என மிக எளிதாக சொல்லிவிட்டு விலகி சென்றான். அப்போதும்,இப்போதும் அவனுக்கு தெரியவில்லை நாசரும்,காதருமால் தான் என் பத்தாம் வகுப்பு படிப்பு வீணானது என.

    பத்தாம் வகுப்பு அரசு தேர்வு 1991ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்   துவங்கியது.புனித ரமலானும் கூட. நோன்பிருந்ததாக நினைவில்லை ரமலான் பெருநாளுக்கு தைத்த புது சட்டையை பின் எப்போதும் பள்ளிக்கு அணிய முடியாது என அக்காவிடம் சொல்லிவிட்டு கடைசி பரீட்சையான வரலாறு பரீட்சைக்கு புது சட்டை அணிந்து சென்றேன். “அப்ப நீ பெருநாக்கு பழைய சட்டையயா போடுவா”என அக்கா கேட்டாள்.

  விடுமுறை நாட்கள் மிக,மிக ஜாலியாக கழிந்தது பகல் முழுவதும் வெயிலில் கிரிக்கெட் விளையாட்டு,மாலையில் மீண்டும்  பள்ளி மைதானத்தில் விளையாட்டு பின்னர் சின்னவிளை கடற்கரையில் குருசு பாறையில் அமர்ந்து சூரியன் கடலுக்குள் செல்வதை பார்ப்பது.இரவில் அந்தோனியார் கோயில் அருகில் உள்ள மணலில் படுத்துக்கொண்டு இருண்ட வானில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களை எண்ணி கதைகள் பேசுவது.

  மழை பெய்து பள்ளி மைதானத்தில் விளையாட முடியாத  மாலை வேளைகளில் பள்ளிகூடத்தை ஒட்டிய சொள்ளமாடன் கோயில் திண்ணையில்  அமர்ந்து கதைகள் பேசுவோம்.உலக பொருளாதராம்,விஞ்ஞானம்,அரசியல்,கல்விதுறை என மேதைகளை போல உரையாடல் நடக்கும். அருகில் அரிவாளுடன் நிற்கும் சொள்ள மாடனும் எங்கள் பேச்சை கேட்டுக்கொண்டிருப்பார்.

 சேக் மீரான் அமரவிளை தொழில்பயிற்சி நிலையத்தில் படித்துகொண்டிருந்தான்.இரணியல் வரை பஸ்ஸில் சென்று பின்னர் மும்பை செல்லும் ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸில் செல்லும் அனுபவங்களை சுவைபட செல்வதோடு தன்னுடன் பயிலும் மாணவன் ஒருவன் வெர்னியர் காலிப்பர் ஒன்றை நீண்ட நாட்களாக செய்வது பற்றியும் சொல்லிகொண்டிருப்பான். 

 நண்பர்கள் பத்தாம் வகுப்புக்குபின் என்ன படிக்க போகிறாய் என என்னிடம் கேட்டபோது நான் “ஐ டி ஐ படிப்பேன்” என்றேன். “அண்ணன் இஞ்சினியர் நீ ஐ டி ஐ யா” என சிங் கேட்டான் “உனக்க அண்ணன் உன்ன டிப்ளமோ பார்மஸி க்கு அனுப்பனும்னு சொல்லிட்டுருக்கான்”என ஷாகுல் என்னிடம்  சொன்னான்.

  கர்நாடகாவில் ஒரு பாரா மெடிக்கல் காலேஜில் டிப்ளமோ இன் பார்மஸி படிக்க வைக்க அண்ணன் எண்ணியிருந்தான்.ஆங்கிலத்தில் ஐம்பத்தியைந்து மதிப்பெண்கள் பெற்று மற்ற பாடங்களில் பாஸாகினால் பெங்களூர் கல்லூரியில் இடம் வாங்கிவிடலாம் என அவனது நண்பர்கள் சொல்லி எனக்கு தெரிந்தது.

 ஜூன் மாதம் ரிசல்ட் வரும் நாள் மாலை மீனாட்சிபுரம் மாலை மலர் அலுவலகத்தின் முன் நின்றுகொண்டிருந்த திரளில் நானும் நின்றுகொண்டிருந்தேன்.பேப்பர்  கட்டுகளுடன் வெளியே வந்த ஒருவர் குளத்து பஸ்ஸ்டாண்ட்க்கு போய் ஆசாரிபள்ளம் செல்லும் பஸ்ஸில் ஏறினார்.அந்த பேப்பர் ஏஜண்டை பின் தொடர்ந்து நானும் அதே பஸ்ஸில் ஏறினேன் ரிசல்ட் பார்க்கும் ஆவலில். எனக்கு ஒரு பேப்பரை விலைக்கு தர மறுத்துவிட்டார்.ஆசாரிபள்ளத்தில் அவர் இறங்கியபோது நானும் இறங்கினேன்.நாகர்கோவில் முதல் ஆசாரிபள்ளம் வரை ரிசல்ட் கைகளின் அருகில் இருந்தும் பார்க்க முடியவில்லை.

   ஆசாரிபள்ளம் ஐயப்பன் நியூஸ் எஜண்டில் முன்னால் நின்றுகொண்டிருந்தவர்களை விலக்கிகொண்டு உள்ளே சென்று ரிசல்ட் இருந்த மாலைமலர் செய்தித்தாளை கொடுத்தார். என்னை காட்டி “நாரோல்ல இருந்து கூட வாறன் இவனுக்கு ஒரு பேப்பரை குடுங்க” என சொன்னதால். எனக்கு ஒரு பத்திரிகை கிடைத்தது.பேப்பரை விரித்து ரிசல்ட் இருக்கும் பக்கத்தில் பார்த்தேன் எனது பதிவெண் இல்லை.

பத்தாம் வகுப்பு சான்றிதழ் 


மறு நாள் பள்ளிக்கு சென்று மதிப்பெண்ணை பார்த்தேன்.மூன்று பாடங்களில் தோல்வி.கடந்த டிசம்பரில் விஷ்ணுபுரம் விழாவுக்கு சென்றபோது முனைவர் சக்தி கிருஷ்ணனும்,சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் செந்திலும் பேச்சு வாக்கில் கேட்டனர். “என்ன படிச்சீங்க பாய்”என. 

“பத்தாங்கிளாஸ் பாஸாவல்ல”

“எந்த பாடத்துல பெயில்”

“இங்கிலீஷ்,மேத்ஸ்,சயின்ஸ்”

சக்தி கிருஷ்ணன் உரக்க சிரித்து “வேற என்ன பாடம் இருக்கு  அதான் இலக்கியம் பக்கம் வந்திருக்கீங்க” என்றார்.  

முற்றும் 

28-02-2023.

அடுத்து என்ன ஆனது எனும் உங்கள் ஆவல் எனக்கு புரிகிறது.வேறொரு பதிவில் இன்னும் விரிவாக சொல்கிறேன்.

எனது மகன் ஷாலிம் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று சத்யபாமா கல்லூரியில் சேர்த்துளான் 

No comments:

Post a Comment