Wednesday 30 August 2023

எனது பத்தாம் வகுப்பு 2

 ஐந்தாம் வகுப்பு படிக்கையில் பள்ளிக்கு செல்வதே இல்லை ஆடை மாற்றி பள்ளிக்கு செல்லும் நேரம் நெருங்கும்போது வீட்டுக்கு வெளியே நின்று அழுதுகொண்டே நிற்பேன் பத்து மணி தாண்டியபின் உம்மா திட்டிக்கொண்டே வேலு கடைக்கு போய் நூறு சீனி வாங்கி வரச்சொல்வாள்.அப்படி வருடத்தில் பாதிநாட்கள் பள்ளி செல்லாததால் அடுத்த ஆண்டும்  ஐந்தாம் வகுப்பிலேயே படித்தேன்.

   பத்தாம் வகுப்பில் கணக்கு பாடத்துக்கு ஐயப்பன் பிள்ளை ஸார்.வேட்டி உடுத்து டப் டப் என  புல்லட்டில் வரும் சப்தம் தூரத்திலேயே கேட்கும்.வகுப்பிலேயே புரிய வைத்து கணக்கை போட சொல்வார்.பின்னர் வீட்டிலிருந்து இரு கணக்குகளை செய்து கொண்டு வர சொல்வார்.வாரத்தில் இருதினங்கள் கணக்குக்கு இரண்டு வகுப்புகள். அவர் பெரும்பாலும் முன்னரே பாடத்தை முடித்துவிடுவதால் இரண்டு கணக்கு வகுப்புகள் வரும் நாட்களில் இரண்டாம் வகுப்புக்கு எங்களை மைதானத்தில் விளையாட சொல்லுவார்.அவரது வகுப்பில் முப்பத்தியைந்து பேரில் இருபத்தியைந்து பேர் வரை கணக்கில் பாஸ்.

 ஐயப்பன் பிள்ளை ஸார் உடல் நலமில்லாமல் நெய்யூர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். வகுப்பு மாணவர்களாகிய நாங்கள் மேட்டடோர் வேனில் நெய்யூர் சென்று சாமுவேல் பிளாக்கில் மூநூற்றி ஐந்தாம் எண் அறையில் அவரை பார்த்துவிட்டு வந்தோம். அதன் பின் இரு ஆண்டுகள் அவரின் புல்லெட் சத்தம் பாபுஜி பள்ளியில் கேட்கவேயில்லை.கணக்கு பாடத்துக்கு பத்தாம் வகுப்பு ‘பி’ பிரிவு ஆசிரியை வந்தார்.மாணவர்களின் படிப்பும் கீழே போனது.

   அறிவியலுக்கு பேபி டீச்சர்,அதில் இயற்பியலுக்கு பாஸ்கர பிள்ளை அப்போது அவர் இளைஞர்.பேபி டீச்சர் எதனாலோ பள்ளிக்கு நீண்ட நாட்கள் வரவில்லை.அதனால் பன்னிரெண்டாம் வகுப்பில் தாவரவியல் பாடம் எடுத்த லில்லி டீச்சர் எங்களுக்கு அறிவியல் பாடம் எடுக்க வந்தார். வேதியலும்,விலங்கியலும் தெரியாத பாட்டனி டீச்சரால் அறிவியல் பாடத்தை எங்களுக்கு சொல்லி தர முடியவில்லை.

ஆங்கிலத்துக்கு  கேசவபிள்ளை புத்தகத்தை வாசித்து சொல்லிக்கொண்டே செல்வார். வரலாறு அசிரியர் அய்யாத்துரை வுகுப்புக்கு ஒரு நாளும் புத்தகத்தை கொண்டு வரவோ,எங்களிடம் வாங்கி பார்கவோ மாட்டார்.சாக்பீஸை கையில் வைத்துகொண்டு கரும்பலகையில் எழுதி சொல்லி தருவார்  மணி அடித்ததால் தான் தெரியும் நாற்பத்தியைந்து நிமிடம் முடிந்தது என.

   புத்தகத்தில் எதையும் அடையாள படுத்தமாட்டார். மறுநாள் முந்தைய நாள் பாடத்தில் கேள்விகளை கேட்பார்.அந்த கேள்வி புத்தகத்தில் இருக்கவே இருக்காது.இராண்டாம் உலக போருக்கு காரணமான செர்பிய இளவரசனை கொன்றது யார்?என கேட்பார். முதல் மதிப்பெண் எடுக்கும் பிபின் குமாருக்கு மட்டும் விடை தெரிந்தது. மற்ற அனைவருக்கும் பிரம்பால் கைகளில் முடிந்த மட்டும் முழு விசையையும் செலுத்தி அடிப்பார்.அடித்தபின் தோளை பிடித்து கொண்டு “என் கை வலிக்கிது படிச்சிட்டு வாருங்கல”என்பார். மறுநாள் அந்த முழு பாடத்தையும் பத்து முறை எழுதி கொண்டு வரவேண்டும்.

 எழுதவில்லை எனில் அது பத்தின் மடங்குகளில் அடுத்தடுத்த நாட்களில் அதிகரித்து கொண்டே செல்லும்.பின்னர் வகுப்பில் அமர அனுமதியில்லை வெளியே நின்று பாடங்களை கவனிக்கலாம் எழுதி முடியும்வரை. 

ஒருநாள்  கேள்வி ஒன்றுக்கு மிக விரிவான பதிலை முழுமையாக நான்  சொன்னேன்.அன்று அய்யாதுரை ஸார் சொன்னார் “உன்னால நல்லா படிக்க முடியும் நீ படிக்க மாட்டேங்கா,பத்தாம் கிளாஸ் படிக்கான்னு ஒறும இருக்கட்டு” என.

    மாதந்திர தமிழ் தேர்வில் ஒருநாள் அருகிலிருந்த நளினாட்சானுக்கு எனது பேப்பரை காட்டி கொடுத்தேன்.அன்று வகுப்பில் கண்காணிப்பளராக இருந்த பிடி (P E T) வாத்தியார் ராபின்சன் பார்த்துவிட்டார்.பரீட்சை முடிந்து வகுப்பறையை விட்டு வெளியேறுமுன் பேப்பரின் கடைசி பக்கத்தில் நான் காப்பியடித்ததாக எழுத சொன்னார்.வேறு வழியே இல்லாமல் எழுதினேன்.மிக விவராமாக தமிழ் டீச்சர் ஹெலன் பார்த்தால் தெரியாதவாறு எழுதிய பக்கத்தை பரீட்சை பேப்பரின் கடைசியில் வெளிப்புறமாக வைத்தேன்.கடைசிக்கு முந்தைய பக்கம் ஒன்றும் எழுதாமல் இருந்தால் டீச்சர் பார்க்கமாட்டார் என்ற நம்பிக்கை.

பரீட்சை பேப்பரை கொடுத்து விட்டு நைசாக வெளியே சென்றேன்  ராபின்சன் ஸார் என்னை அழைத்தார் எனது தந்திரம் அவரிடம் பலிக்கவில்லை என உணர்ந்தேன். குண்டூசியை கழற்றி கடைசி பேப்பரை திருப்பி ஹெலன் டீச்சர் பேப்பரை திருத்தும்போது கண்ணில் படும்படி வைத்துவிட்டார்.மறுநாள் காலை பள்ளிக்கு சென்று திறந்திருந்த ஆசிரியர்களின் ஓய்வு அறையில்  ஹெலன் டீச்சர் எங்களின் பரீட்சை பேப்பர் வைத்திருந்த கட்டில் இருந்து எனது பேப்பரை தேடிக்கொண்டிருக்கும் போது ஆறாம் வகுப்பு ஆசிரியர் ஜெயக்குமார் பார்த்துவிட்டார்.

   அவர் நடத்திய புலன் விசாரணையில் நான் வாய் திறக்கவில்லை போலீசில் ஒப்படைப்பேன் என பயமுறுத்தியதால் தப்பிக்க வழியே இல்லாமல் முழுக்கதையையும் ஒத்துக்கொண்டேன்.வீட்டிலிருந்து பெற்றோரை அழைத்து வந்து தலைமையாசிரியர் ரஞ்சிதத்தை பார்க்க வேண்டும் என சொன்னார்.

   அதன் பின் நான் சில நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை.உம்மா பள்ளிக்கு சென்று ஆசிரியர்களை சந்தித்து எனக்காக மன்னிப்பு கேட்டு இனிமேல் தவறேதும் செய்யமாட்டான் என உறுதியளித்துவிட்டு வந்தாள்.நான் வேறு பள்ளியில் அல்லது இதே பள்ளியில் அடுத்த வருசம் படிப்பேன் என்றேன்.பள்ளியின் தாளாளர் ராமச்சந்திரன் ஸார் என் வாப்பாவை பார்த்து “சாயிப்பே மொவன  ஸ்கூலுக்கு சொல்லிவிடும்,ஒரு வருஷம் வேஸ்ட் ஆயிரும்”என சொன்னார்.

   பின்னர் கூனி குறுகி பள்ளிக்கு சென்றேன்.ஹெலன் டீச்சர் வகுப்பறையில் என்னை எழுப்பி திருட்டு பையன் என சொன்னார்.தலை குனிந்து நின்றேன்.

மேலும் 

23-02-2023

No comments:

Post a Comment