Wednesday 30 August 2023

எனது பத்தாம் வகுப்பு 3

 அரையாண்டு தேர்வுக்குப்பின் பள்ளியில் பாடங்கள் அனைத்தும் முடிந்து பள்ளியில் ரிவிசன் தொடங்கியிருந்தது,ஜனவரி,பெப்ருவரி,மார்ச் மாதங்களில் காலாண்டு,அரையாண்டு,ஆண்டுஇறுதி தேர்வுகளை போல மூன்று தேர்வுகள் ஏப்ரல் மாதம் பத்தாம் வகுப்பு அரசு தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தி கொண்டிருந்தனர்.

   பள்ளிக்கு ஒரு நாளும் யாரும் விடுறை எடுக்க கூடாது. பத்து மணி வகுப்புக்கு பத்தாம் வுகுப்பு மாணவர்கள் ஒன்பதரை மணிக்கு வந்து வகுப்பறைக்குள் அமர்ந்து படிக்க வேண்டும் மதியம்  அரை மணிநேரம் மட்டுமே உணவு இடைவேளை.

  டியுசனில் இரவு வகுப்புகள் தொடங்கியது.இரவு ஏழு மணிமுதல் பத்து மணிவரை படிக்க வேண்டும். அதன் பின் வீட்டிற்கு செல்பவர்கள் செல்லலாம். அங்கேயே படுத்து தூங்கி காலையிலும் வீடு செல்லலாம்.அய்யாத்துரை ஸார்,ராஜேந்திரன் ஸார் அவ்வப்போது கண்காணித்து கொள்வார்கள்.

 முந்தைய ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் இரவு டியூஷனில் நன்றாக நன்றாக படிக்க முடியும் பயன்படுத்தி கொள்ளுங்கள் என சொல்லியிருந்தனர். இரவு பத்து மணிக்கு சில நேரம் கடைக்கு செல்வோம்.புஹாரி ஹோட்டல் அல்லது கடுப்பு மூத்தாப்பவின் கடையில் மாதவன்,பிரதீப்,ரமேஷ் என கூட்டாக சென்று தேயிலை குடித்து வருவோம்.

 ஒரு வாரத்திற்குப்பின் பிரதீப்பிடம் சொன்னேன் “ராத்திரி டியூஷன் நல்ல யூஸ் தான்,நேத்து இங்க்லீஷில் ஒரு எஸ் எ படித்து விட்டேன்”என்றேன். மாதவன் சொன்னான் “நானும் சோசியல்ல ரெண்டு பாடத்த படிச்சிட்டேன்,நம்மோ பாசாயிருவோம்”.

இரவு ஏழு மணிக்கு மேல் தான் டியுஷன் வகுப்புகள் என்பதால் மாலை நாலரை மணிக்கு பள்ளி முடிந்தபின் வீட்டுக்கு சென்று மீன் கறியும்,சோறும் சாப்பிட்டபின் ஐந்து மணிக்கு மேல் பள்ளி மைதானத்தில் விடையாட்டு.

பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆய்வு கூடத்தின் பின் பகுதி பெரிய மைதானம் சுற்றிலும் பெரிய மதில்சுவர்.மேற்கில் கடற்கரை செல்லும் பாதை,கிழக்கில் இந்திய அபூர்வ மணல் ஆலையின் துணை ஆலை,தெற்கு பகுதி மணல் மேடும்,சம்பகோரையும்,சிறு குட்டைகளும்,முள் செடிகளுமாக இருக்கும்.

   கிரிக்கெட்,கைபந்து,கால்பந்து,பூபந்து என ஏதாவது ஒரு விளையாட்டு நடந்துகொண்டே இருக்கும்.தலைவர் ஸ்ரீ ராமதாஸ்,மனோகரன் மாமா,கிஷோர்,மகேஷ்,ஸ்ரீகுமார்,பிரபு,பிரதீப்,ஷார்ஜா சையதலி,ஹாருன்,சபீக்,வேலுப்பிள்ளை,ஷோபன் லெப்ட்பாபு,ஜெய்லானி,ஷனாவாஸ்,பாரி அண்ணன்,பெரோஸ்,ஆஜம் என இருபது பேருக்கு மேல் தினமும் விளையாடுவோம்.

   தீடிரென,சையதலி,நாசர்,காதர்,பீர்முகமது,அலி என கும்பலாக பூப்பந்து விளையாட வந்தனர்.பின்னர் கால்பந்து மைதானத்தில் புகுந்தனர் அதனால் பல ஆண்டுகளாக விளையாடிகொண்டிருந்த எங்களுக்கு ஐந்து மணி தாண்டினால் ஆட்டத்தில் இடமில்லை.அணிக்கு பதினோரு வீரர் தவிர மற்றவர்கள் வெளியே.

   விளையாட்டுகளில் இடம் கிடைக்க நல்ல விளையாட்டுகாரனாக அல்லது  ஐந்துமணிக்கு முன்பாக மைதானத்தில் இருக்கவேண்டும்.கால்பந்து கிழிந்து புதிய கால்பந்து வாங்கியிருந்தோம் மைதானத்தில் விளையாட வீரர்கள் அதிகமானாதால் புதிய பந்துக்கு ஐந்து ரூபாய் தராதவர்கள் மைதானத்துக்கு வெளியே அமர்த்தப்பட்டனர்.விளையாட்டில் இடம் கிடைக்காதவர்கள் பார்வையாளர்களுடன் இருந்து சப்தம்எழுப்பி, கூவி வீரர்களை உற்சாக படுத்தலாம். 

எனக்கு பெரும்பாலும் விளையாட இடம் கிடைத்தது.அன்று விளையாடி முடித்ததும் காதர் மைதானத்துக்கு வெளியே கழற்றி வைத்திருந்த சட்டைப்பையிலிருந்த நூறு ரூபாயை காணவில்லை என தேடிகொண்டிருந்தான். நாங்கள் விளையாடும்போது மைதானத்தில் இருந்து பார்த்துகொண்டிருந்த யாரோ எடுத்திருக்கலாம் என விசாரித்துக்கொண்டிருந்தனர்.

  பெரோஸ் காதரிடம் என்னை காட்டி “இவன் சின்ன புள்ளைல எனக்க செருப்ப களவாண்டா” என்றான்.

 நான் அறியாமல் செய்த ஒரு பழைய பிழை அது.பெரோசின் வாப்பா  டாக்காவில் சென்ட் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.வருடத்தில் ரமலான் மற்றும் ஹஜ் பெருநாளுக்கு ஊருக்கு வருவார். தெருவில்  செழிப்பான குடும்பங்களில் ஒன்று அவர்களுடையது.பெரோஸின் வாப்பா பள்ளிக்கு தொழுகைக்கு செல்லும்போது தெரு முழுவதும் சென்ட் வாசனை நிறைந்து நிற்கும். தனது குழந்தைகளுக்கு புதுத்துணி,செருப்பு போன்ற வெளிநாட்டு பொருட்கள் நிரம்பிய பையுடன் தான் வீட்டுக்கு வருவார்.

எனக்கெல்லாம் அப்போது காலில் செருப்பு கிடையாது எட்டாம் வகுப்புக்குமேல் தான் ஏழு ரூபாய்க்கு ஒரு ரப்பர் செருப்பு வாப்பா வாங்கி தந்தார்.

  அப்போது  டாக்கா வீட்டு பிள்ளைகள் மின்னும் தங்க நிற புது செருப்புகள் அணிந்து பள்ளிக்கு தொழுகைக்கு வருவர்.பள்ளி வாசலுக்கு வெளியே கிடந்த செருப்புகளை இரு தினங்கள் பார்த்தேன்.மூன்றாம் நாள் இரவு இஷா தொழுதபின் சீக்கிரமே பள்ளியிலிருந்து வெளியேறி பெரோசின் பளபளக்கும் செருப்பை காலில் அணிந்து கொண்டு வீட்டுக்கு சென்றேன்.

  எனது அண்ணன் செருப்பை பார்த்து “இது எங்கயிருந்து கிடைச்சது” என கேட்டான்.

 “போஸ்ட் ஆபிஸ் அருகில் கிடந்தது” என்றேன்.

“இல்ல இவன் பொய் சொல்லான்  இது டாக்காக்க மொவனுவோ பள்ளிக்கு போட்டுட்டு வாறத கண்டுருக்கேன்”என்றான் வாப்பாவிடம்.

வாப்பா என்னை அழைத்து கொண்டு டாக்கா வீட்டுக்கு சென்று செருப்பை கொடுத்து வந்தோம்.

 இவன் மிந்தி என் செருப்பை களவாண்டான் என்ற பெரோசின் ஒற்றை சொல்லால் வீட்டுக்கு போய்விட்டு இரவு டியூசனுக்கு போக வேண்டுமென சென்றுகொண்டிருந்த என்னை காதரும்,நாசரும் பள்ளிவாசல் அருகில் மடக்கி பிடித்தனர். “நீதான் ருவாய எடுத்தா,நீதான் ருவாய எடுத்தா” என சொல்லிக்கொண்டே இருந்தனர்.இறுதியாக போலிஸ் ஸ்டேஷன் போவோம் என்றனர்.

 மூவருமாக போலிஸ் ஸ்டேசனுக்கு நடந்தோம் ஸ்கூலுக்கு அருகில் வந்ததும் மீண்டும் “எடுத்த நூறு ருபாயை தந்துவிடு” என மிரட்டினர். “போலீசில் போவோம்” என நானே அழைத்துக்கொண்டு சென்றேன்.அப்போதும் நான் செய்த தவறு நாசர்,காதருடன் போலிஸ் ஸ்டேஷன் வாசல் வரை சென்று திரும்பியது தான். இன்பெக்டரை பார்த்திருந்தால் அன்று வேறு மாதிரி நடந்திருக்குமோ என இப்போதும் எண்ணுவதுண்டு.

   ஏழரை மணி தாண்டி விட்டதால் அன்று இரவு டியூஷன் செல்ல முடியவில்லை. “ஒழுங்கா வாறவன் மட்டும் ராத்திரி படிக்க வந்தாபோதும்,இல்லேன்னா வராண்டாம்”என உறுதியாக சொல்லியிருந்தார் ஆசிரியர் அய்யாத்துரை.

அதனால் அதன் பின் பத்தாம் வகுப்பு தேர்வு முடியும்வரை இரவு வுகுப்புக்கு செல்லவேயில்லை.

மேலும் ....

27.02.2023.

No comments:

Post a Comment