Thursday 31 August 2023

கப்பலின் உணவும்,என் வயிறும்.

      




             இஸ்லாமிய ஹதீசுகளில் உங்கள் வயிறை பாதுகாத்து கொள்ளுங்கள்,வயிறு சரியாக இருந்தால்,உடல் ஆரோக்கியமாக இருக்கும் என.

 நபிகள் நாயகம் அரை வயிறு உணவு,கால் வயிறு தண்ணீர்,கால் வயிறு காற்று என்பதே நல்ல உணவு பழக்கம் என்கிறார். சில கவளம் உணவே போதுமானது, பகிர்ந்துண்ணுங்கள்  என சொல்லுபோது இருவருக்கான உணவை மூவர் சாப்பிடலாம்,மூன்று பேருக்கான உணவை நால்வர் சாப்பிடலாம்,நால்வருக்கான .............என .

         என் பதிமூன்று வயது முதல் இருபது வயதுவரை மிக நன்றாக சாப்பிட்டது நினைவு இருக்கிறது. வீட்டில் உம்மா பித்தளை இட்லி குட்டுவத்தில் செய்யும் அந்த பெரிய இட்லி பத்திலிருந்து பதிமூன்று வரை சாப்பிடுவேன்.நான் சாப்பிட்டால் தால் சோத்து பானை காலியாகும்  என்பது உம்மாவின் சொல். 

 “வயித்துல கோளியும் குஞ்சுமால கிடக்கு, பெருந்தீத்தி தின்னு பேயா தேஞ்சி போறான்” இது வாப்பா.

வாப்பாவுடன்


  “சாம்பார்ல உள்ள மரக்கறி தீரணும்னா சாலமது தின்னாத்தான் தீரும், பானை,சட்டியில இருக்க எல்லாத்தையும் நீயே தின்னுட்டு போயிட்டியனா அவளுக்கு என்னல  குடுப்பா” பெத்த தாய் அப்படி கேட்டது ஆச்சரியம் தான்.

  பீர்முகம்மது மாமாவின் மனைவி மெஹர்பானு மாமி என்னை பார்த்து விட்டால் சோறு பொங்கும் பானையை மாற்றிவிடுவார்.மாமி சமைக்கும்  நெய் சோறு,கோழி குழம்பு,பருப்புக்கறி,நெம்மீன் ரோஸ்ட் ஆகியவற்றின் சுவையும் மணமும் இப்போதும் நாவிலும்,மூக்கிலும் இருக்கிறது.

   பத்தாம்வகுப்பு படிக்கையில் நண்பர்கள் சேர்ந்து காசு போட்டு பரோட்டா சாப்பிட போவோம்.ஆஜம் தான் சொன்னான். “ஆம்ப்லேட்ல மட்டன் சால்னாய ஊத்தி தின்னுபாரு” என. “நல்ல டேஸ்ட் லே” என சொல்லி தின்ற நாட்கள்.  உம்மா எப்போதாவது பத்து ரூபாய் தருவாள் சட்டி மண்ட கடையில் பத்து புறோட்டா ஆறு ரூபாய்,ஒரு மட்டன் மூன்று ரூபாய்  ஐம்பது காசு (அது பீப் கறி அப்போது அதை மட்டன் என்றே சொன்னார்கள்) பரோட்டாவை பிய்த்து போட்டு அதில் சால்னாவை ஊற்றி ஊற வைத்து சாப்பிடுவேன். முதல் மூன்று பரோட்டாவில் சட்டி மண்டை தரும் பீப் கறி தீர்ந்துவிடும். மேலும்மேலும் பத்து பரோட்டவுக்கும் சால்னா கேட்கும்போது. “கூட ஒரு மட்டன் வாங்கணும் சும்ம சால்னா கேக்கபிடாது” என கோபித்து கொண்டே மாட்டிறைச்சியின் எலும்புகள் போட்ட சால்னாவை தருவார். புறோட்டா சாப்பிட்டபின் பொடிநடையாய் பள்ளிவாசல் தாண்டி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி அருகிலுள்ள புது மாப்பிள்ளை கடையில் ஒரு கோல்ட் பிளேக் நாற்பத்தி ஐந்து பைசா,மீதி ஐந்து காசுக்கு புளிப்பு முட்டாய்.

  பாபுஜி பள்ளியில் அந்த வருடம் ஆண்டுவிழாவுக்கு மதிய சாப்பாடு போட்டார்கள். அதில் காக்கா விஜயகுமார்,வினு,நாணுகுட்டனுடன் அமர்ந்து போட்டி போட்டு சாப்பிட்டபின் என்னால்  எழ முடியவில்லை. கைகழுவும் தொட்டியருகே செல்லும்முன் வாயுமிழ்ந்ததும் நினைவில் இருக்கிறது.

சாப்பிடும்போது என் முன்னால் சட்டியோட கொண்டு கிட்ட வெச்சா காலி பண்ணிவிடுவேன் குறிப்பா காய்கறிகள். பக்கத்து தெரு பீர்முகம்மது மச்சானின் தங்கை திருமணம் முடிந்த மறுநாள் நானும்,சிக்கந்தரும் அங்கு போயிருந்தோம். “புள்ளா பீமா மாமிக்க மொவன் சாலமது வந்துருக்கான்” என மாமி சொல்ல மூத்த மைனி ஒரு முழு தட்டு கிண்ணத்தப்பதை கொண்டு வைத்து விட்டு சாயா எடுப்பதற்காக அடுக்களைக்கு சென்றார். சிக்கந்தர் பின்பு நண்பர்களிடம் சொன்னான்  “ஒரு பிளேட் கிண்ணத்தப்பத்த ஷாகுல் காலி பண்ணிட்டான்” என. 

     ஐடிஐ படிக்கையில் 47A தக்கலை பஸ் மனவாளக்குறிச்சி வந்து திரும்பும் அதில் ஏறுவதற்காக  பணிக்கர் கடை முன் காத்திருக்கையில் புத்தகத்தை விட கனமான சாப்பாடு பொதியை கண்டு  “சோத்து பார்சல கொண்டா எட போடுவோம்” என தராசில் வைத்து நிறுத்தார் முருகன் அண்ணன் ஒரு கிலோவுக்கு அறுபது கிராம் குறைவாக இருந்தது இலை,பேப்பர் கழித்து. உம்மா தந்து விடும் புளித்தண்ணியில் விரவிய சோறும், வெங்காயம்,பச்சைமிளகாய்,தக்காளி,மஞ்சள்தூள்,மிளகாய் தூள் போட்டு வதக்கி கடுகு,கறிவேப்பிலை போட்டு தாளித்தது அதில் இருக்கும் கூடவே ஒரு அவித்த முட்டையும்.

பஸ்ஸில் கல்லூரி செல்லும் பெண் பிள்ளைகள் கைக்கு அடக்கமான,சின்ன டப்பால பெரும்பாலும் ரெண்டு இட்லியும்,பொடியும்தான் இருக்கும்.

   வீட்டை விட்டு வெளியே சென்றபின்தான் தெரிந்தது.சாப்பாட்டின் அருமை.எங்களூரில் இஸ்லாமிய வீடுகளில் பொங்கல் என ஒரு மெனுவே இல்லை. ஆப்பம்,ஓறட்டி,இடியப்பம்,சுருளப்பம்,பாலாடை,ஒட்டாடை(மண் ஒட்டு கல்லில் செய்வது)தக்கிடி இப்படிதான். என் வீட்டில் இதெல்லாம் பெருநாட்களில் உம்மா செய்வாள். நான் வளர்ந்த நாட்களில் வாரத்தில் ஒன்றே இரண்டோ நாட்கள்தான் இட்லி அல்லது தோசை.பழங்கஞ்சி தினமும் உண்டு. 

திருச்சி பெல்லில் பயிற்சிக்காக சென்ற முதல்நாள் காலை வரிசையில் நின்றும் இட்லி கிடைக்கவில்லை.அந்த இடலியை விட்டெறிந்தால் மண்டை உடைவது உறுதி.அங்குள்ள தொழிலாளர்களுக்கு உணவு கூடத்தில் முன்னுரிமை பின்னர் தான் நாங்கள்.

இரண்டாவது நாள்,மூன்றாவது நாளும் இட்லி கிடைக்கவில்லை வேறு வழியே இல்லாமல் பொங்கல் வாங்கினேன் நான்காம் நாள்.ஆனால் கடமைக்காக அல்லாமல் அன்பு கலந்து சமைத்தால் பொங்கல் நல்ல உணவு என வேறு இடங்களில் பொங்கல் சாப்பிட்ட பின் தெரிந்தது.

மதிய உணவுக்கு  ஐம்பது காசுக்கான கூப்பனை காலையிலேயே பதிவு செய்துவிட வேண்டும்.மணிகண்டன்,கணேஷ்,தங்கமணியுடன் நானும் இரண்டு கூப்பன்கள் பதிவு செய்து மதியம் ரெண்டு பிளேட் சாப்பிடுபவர்கள்.அங்கு நான் கேட்ட ஆண்களின் பெயர்களே புதிதாக இருந்தது. ராஜமாணிக்கம்,கருப்பையா,சரவணன்,வீராசாமி,முனியாசாமி,பார்த்திபன்,செழியன்,செந்தில்குமரன் என. (ஐயப்பன்,முருகன்,விஜயகுமார்,சதீஷ் குமரேசன்,ரெவி,கெணேசன்,நெல்சன்,வில்சன்,ஜாஹிர் எங்களூர் பெயர்கள்).

   அங்கு விடுதியில் தங்கியிருக்கையில் சோறும் பருப்பும் சாம்பாரும் தருவார்கள். கொஞ்சம் அளவு சாப்பாடு என்றே சொல்லாம்.வாரத்தில் ஒருநாள் சப்பாத்தி ஐந்து வீதம் கிடைக்கும். மேஜையில் ஐந்து சப்பாத்தி வைத்த தட்டை வைத்துக்கொண்டே போவார்கள்.எனக்கு கடைசிதட்டாக இருந்தால் அதை மறைத்து காலுக்கு கீழே வைத்துவிடுவேன்.இரண்டாவதாக ஒரு தட்டு வைப்பார்கள் பத்து சப்பாத்தி தின்றால் தான் சாப்பிட்டதுபோல் இருக்கும்.

மும்பை

    பின்னர் மும்பை சென்றபுதிதில் பாலனின் பொங்கல் வீட்டு சாப்பாடு,பசி ருசியை அறிவதேயில்லை என உணர்ந்த நாட்கள்.பெரும்பாலும் கருணை கிழங்கு குழம்பு, வாரத்தில் இரு தினங்கள் இரவுணவில் அசைவம்  ஒரு நாள் முட்டை ஆம்ப்லேட் மற்றொருநாள் பொரித்த கருவாடு. 

நானிருந்த பயந்தரிலிருந்து இரண்டு ஸ்டேஷன் தாண்டி நாலாசொப்பாரா எனுமிடத்தில் உம்மாவின் மாமி மகன் (மெகர்பானு மாமியின் அண்ணன்) குட்டியாப்பா ஒருவர் இருந்தார். ஞாயிறு விடுமுறைக்கு சனிக்கிழமை இரவே சென்றுவிட்டு திங்கள்கிழமை காலை தான் திரும்புவேன். குட்டிம்மாவுக்கு கோட்டாரில் வீடு அந்த கைப்பக்குவம் சமையலில் நன்றாக தெரிந்தது. பாத்திமா குட்டிம்மாவின் உள்ளம் உணவின் சுவையிலும்,தட்டில் விளம்புபோதும் தெரியும். “ஊர்ல போய் குற சொல்லிரபிடாது”எனும் பயமும் உள்ளுக்குள் இருக்கும்.



 மும்பையில் கப்பலில் வேலை தேடும் நாட்களில்  மாட்டுங்க லேபர் கேம்ப்பில் அறையில் இருந்தேன்.அங்கிருந்து அந்தேரிக்கும்,சர்ச்கேட்,வீ டிக்கும் மின்சார ரயில் உண்டு. மும்பையில் எங்கும் எளிதாக சென்றுவிடலாம்.அறையில் தினமும் இரவு சமையல் உண்டு.மீன் குழம்பும்,சோறும். அப்போதுதான் குறைவான விலையில் சாப்பாடு கிடைக்கும் கடைகள் அனைத்தும் அறிமுகம். ராஹத் ஹோட்டலில் இரண்டு ரூபாய்க்கு மெல்லிய துணியைப்போல மெதுவான சப்பாத்தி கிடைக்கும். அறையின் எதிரில் தட்டுக்கடை ராணி அக்காவின் ஆப்பமும்,சாம்பாரும்,காலை உணவாக ஒரு ஆம்ப்லேட்டும் ஐந்து சிறு இட்லியும் ஸ்ரீ ராம் மெஸ்ஸில் சாப்பிட்டால் மாலைவரை தாக்குபிடிக்கும் மின்ட் ரோட்டின் அருகிலுள்ள இந்து ஹோட்டலில் இருபதுரூபாய்க்கு அன் லிமிடெட் சைவ சாப்பாடு,தீர,தீர தந்து கொண்டே இருப்பார்கள் அப்பளம்,மோர்,பீட்ரூட் கூட்டு,மாங்கா ஊறுகாய் என.




 டி என் ரோடு ஐசிஐசிஐ வங்கியின் எதிரிலுள்ள சேட்டா கடையில் திளுந்து வாழையிலை போட்டு மத்திசாளை சட்டி கறியுடன் கிடைக்கும் மதிய சாப்பாடு இருபது ரூபாய்க்கு.

 நட்சத்திர ஹோட்டல்களில் பணிபுரியும் நண்பர்கள் அறையிலிருந்தனர் அவர்கள் பேசும் உணவின் பெயரும்,சுவையும் நான் அதுவரை அறிந்திராதது.  கேட்டரிங் சர்வீசுக்கு செல்லும் நண்பர்கள் சில நேரம் சில சுவையான உணவுகளை கொண்டு வந்து தருவார்கள்.

   மேலும் .....

நாஞ்சில் ஹமீது,

27 aug 2020


  

No comments:

Post a Comment