Sunday 30 July 2023

கடல் சீற்றத்தில் சிக்கிதவித்த நாட்கள்

 என் எஸ் பிரண்டியர் நாட்குறிப்புகள் 9.

            நண்பர்களுக்கு கடந்த முறை சன்னி ஜாய் நாட்குறிப்புகள் எழுதும் போது தினமும் அல்லது மறுநாள் சுடச்சுட நாட்குறிப்புகள் வந்துகொண்டே இருந்தது. அப்போது தினசரி குறிப்புகளை எந்த அலங்காரமும் இல்லாமல் உள்ளதை உள்ளபடி சொல்லி சென்றேன்.அந்த தொடரில் கப்பலில் நடந்த பெரும் தீ விபத்து,சோமாலிய கொள்ளையர்களை எதிர்கொண்டது போன்ற பதிவுகளை படித்த நண்பர்கள் சிலர் பதறி விட்டனர்.

இம்முறை எட்டாவது பதிவை படித்த தோழி dr.தாமரை செல்வி “ஷாகுல் பத்திரமா இருங்க”என குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.மாமி ஒருவர் “மோனே என்ன வேல மக்களே இது வயித்துக்கு வேண்டி என்ன மெல்லாம் செய்ய வேண்டியிருக்கு” என கேட்டார். 

இப்போது வரும் பதிவுகளை படித்து யாரும் அஞ்சவேண்டாம்.பதிவுகள் ஒரு மாதம் தாமதித்தே வருகிறது.

.



               வளைகுடா நாடுகளில் கோடையில் வெப்பம் மிகக்கடுமையாக இருக்கும்.குவைத்,சிரியாவில் அதிக பட்சமாக ஐம்பத்தி இரண்டு பாகையும்,கத்தார்,துபாயில் நாற்பத்தி ஒன்பது பாகைவரையும்,ஈராக்,சவூதி போன்ற நாடுகளில் நாற்பத்தி ஆறு வரை வெப்பம் இருக்கும்.இங்கே சூரியனுக்கு கீழே பணிசெய்பவர்களுக்கு அதிகாலை ஐந்து மணிமுதல் பதினோரு மணி வரையும்,மாலை நான்கு முதல் ஆறு வரையும் பணிநேரம் மாற்றி விடுவது வழக்கம்.

     வெப்பத்தை நினைத்து உடல்எரிய தொடங்கிய வேளையில் கடலம்மா கொந்தளிக்க தொடங்கினாள்.காற்றின் வேகம் அறுபது மைல்களுக்கு மேல் வீசியது.கடலை ஒன்பது மீட்டர் வரை மேலெழுந்து அச்சுறுத்தியது.பதினாறு நாட்டிக்கல் மைலுக்கும் மேல் சென்றுகொண்டிருந்த கப்பல் ஏழு நாட்டிகல் மைலுக்கு கீழே வந்தது.

தங்கும் அறையில்


 அதிக பட்சமாக முப்பது டிகிரிவரை ரோல்லிங்கும் உயரமான அலையில் கப்பலின் முன் பகுதி உயர்ந்தபோது பிட்சிங்கும் அதனால் எழுந்த ஓசையும் யாரையும் தூங்காமல் தடுத்தது.அறையின் மின் விசிறி,நாற்காலி குளியலறையில் பக்கெட்,மாப்,திரைச்சீலை  அனைத்தையும் கயிறுகளால் இறுக்க கட்டி வைத்திருந்தேன்.

   கடல் கொள்ளையர்கள் தாக்க வாய்ப்புள்ள ஆபத்தான இடத்தை நெருங்குமிடத்திலிருந்து தினமும் காண்வாய்கள் போகிறது. பத்து முதல் பதினைந்து கப்பல்கள் வரை ஒரே சீரான வேகத்தில் செல்கையில் முன்னும்,பின்னும் பீரங்கிகளுடன் கடற்படை கப்பல்கள் பாதுகாப்பாக உடன் வரும்.ஆபத்தான பகுதியை கடந்தபின் கடற்படை கப்பல்கள் விலகி செல்லும்.ஜப்பான்,இந்தியா,சீன நாட்டு கடற்படைகள் இந்த இலவச சேவையை இந்த கடல் பயண தடத்தில் வழங்குகிறது.

  ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் இருந்தபோதும் காப்டன் காண்வாயில் இணைந்து செல்ல உத்தேசித்திருந்தார்.உரிய நேரத்தில் செல்லும் வகையில் கப்பலின் வேகத்தை கொஞ்சம் குறைத்திருந்தார்.கடலம்மா சீறி எழுந்ததில் காப்டனின் எல்லா கணக்குகளும் குழம்பி கப்பலின் வேகம் 6.5 வேகத்தில் குறைந்ததால் நினைத்துது போல காண்வாயை பிடிக்க முடியவில்லை.

  கடல் சீற்றத்தின் மறுநாளே சமையற்காரர் பணிக்கு வரவில்லை.ரத்த அழுத்தம் கூடி,தலைவலியுடன் அறையில் படுத்திருந்தார்.அறையில் போய் பார்த்தேன் கட்டிலில் அமர முடியாததால் சோபாவில் அமர்ந்து இருபுறமும் இரு தலையணைகளை வைத்து இறுக கட்டி அதன் நடுவில் பிள்ளையாரை போல அமர்ந்திருந்தார்.

 இஞ்சின் பிட்டர் ஹரேசும்,வல்சாடின் தண்டேலும்,மெஸ் மேனுடன் இணைந்து வெள்ளை சாதமும்,பருப்புகுழம்பும்,பீன்ஸ் கூட்டும் செய்திருந்தனர்.மாலையில் மூன்றாம் இஞ்சினியருடன் இணைந்து கோழி குழம்பும் சப்பாத்தியும் சுட்டு தந்தனர்.

  டெக் பணியாளர்களுக்கு குடியிருப்பில் சுத்தம் செய்யும் எளிய பணி வழங்கபட்டிருந்தது. சவூதி செல்வது உறுதியானதால் கம்ப்ரசர்களை இயக்கி சரக்கு தொட்டிகளை குளிர்விக்கும் பணியை தொடங்கியிருந்தோம்.சரக்கு தொட்டியின் சில வால்வுகளை,திறந்தும்,மூடவும் வேண்டி வந்தது.கடும் காற்றில் அலைகள் எழும்போது கப்பலின் முன் பகுதி நீருக்குள் மூழ்கி எழும் அளவு செல்லும்போது,அலைகள் நேராக சரக்கு தொட்டியில் பலமாக அடித்து செல்லும். 

 எழுபது வயதான முதன்மை அதிகாரி,என்னையும்,காஸ் இஞ்சினியரையும் ஒன்றாக இணைந்து சென்று கப்பலின் முன் பகுதியிலிருக்கும் சரக்கு தொட்டியின் வால்வை திறந்து,வேறொன்றை மூட சொன்னார்.அச்சமூட்டும் கடும் காற்று பேரோசையுன் வீசிகொண்டிருந்தது,குடியிருப்பை விட்டு வெளியே செல்வது ஆபத்தானது. தவிர்க்கவே இயலாததால் பிரிட்ஜில் அறிவித்துவிட்டு வெளியே சென்றோம்.

  எங்களுடன் முதன்மை அதிகாரியும் வந்தார்.குழாய்களுக்கு இடையில் புகுந்து ஒவ்வொரு கம்பியாக பிடித்து கவனமாக நடந்து கப்பலின் முன்னால் இருந்த ஒன்றாம் எண் சரக்குதொட்டியின் வால்வுகளை தேவையான அளவு அட்ஜஸ்ட் செய்தோம்.பெரிய அலையொன்று எழும்பி கப்பலுக்குள் வந்தபோது குழாய் ஒன்றை இருக்க கட்டிக்கொண்டு பத்திரமாக எதிர்கொண்டோம்.

  முதன்மை அதிகாரி நங்கூரம் கட்டி வைத்திருப்பதை பார்ப்பதற்காக மேலும் நகர்ந்து முன்னே சென்றார்.நான் ஒன்றாம் எண் சரக்கு தொட்டியை தாண்டி முன்னால் செல்லவே இல்லை.அது மிக ஆபத்தானது அலை அடிக்கும்போது மனிதனால் அதை எதிர்கொள்ள இயலாது.வயதான முதன்மை அதிகாரி முன்னால் செல்வதை கண்டு அவரை பாதுகாக்கும் நோக்கில் காஸ் இஞ்சினியரும் முன்னால் சென்றார்.நல்ல வேளையாக பேரலை எதுவும் எழவில்லை .

  மூவருமாக பத்திரமாக திரும்பி குடியிருப்புக்குள் வந்ததை பிரிட்ஜில் அறிவித்தோம்.இரவு கம்ப்ரசர் அறைக்கு ரௌண்ட்ஸ் க்கு செல்ல வேண்டாம் கட்டுபாட்டு அறையில் இருந்தே கவனித்து கொள்ளுங்கள் என்றார் முதன்மை இஞ்சினியர்.இரண்டாம் நாள் இரவும் துயிலின்றியே விடிந்தது.காலை இயந்திர அறையில் இரண்டாம் இஞ்சினியர் என்ன செய்ய போகிறாய் எனக்கேட்டார்.

 கம்ப்ரசர் அறைக்கு போய் வரவேண்டும்.நேற்றே போகவில்லை என்றேன். மூன்றாம் இஞ்சினியர் “இந்த கண்டிசன்ல எதுக்கு போணும் பொறவு பாத்துக்கோ”என்றார்.

  “ட்ரைன் குழாயின் எண்ணெய் கீழே கொட்டும் முன் அதை எடுத்துவிட வேண்டும்” என்றேன்.காலை கூட்டம் முடிந்ததும் இரண்டாம் இஞ்சினியர் உக்ரைனின் மேக்ஸ் “ஷாகுல் நீ ஜோக் பண்ணுறா என நினச்சேன்,வெளிய போகாத,நாளைக்கு பார்த்துகொள்ளலாம் இட்ஸ் நாட் ஸேப் டுடே” என்றார். 

  மோட்டார் மேன்  மும்பையின் அலெக்ஸ் “நேற்றே என்னால் முடியவில்லை ஓய்வு கொடு எனக்கேட்டேன் இரண்டாம் இஞ்சினியருக்கு அது புரியவே இல்லை” என்றான். வாந்தியும்,தலைவலியும் கூட ரெண்டு நாளா உறக்கம் இல்ல என வேறு சிலரும் சொல்லிகொண்டிருந்தனர்.

 நான் அலெக்சிடம்  “அவராக அப்படி ஓய்வு கொடுக்க முடியாது,முடிஞ்சத செய்,இல்லேன்னா எங்கயாவது ஓரமா போய் படு”என்றேன். காடேட் குமார் லேசான ஆட்டத்திலேயே தள்ளாடி வாந்தி எடுப்பான். கப்பல் பேரலைகளில் சிக்கி பேயாட்டம் போட்டு கொண்டிருந்தது.உண்டதும்,குடித்ததும் வாயுமிழ்ந்து கொண்டிருந்தான்.

உணவுக் கூடத்தில் 


    டெக் பணியாளர்கள் யாரும் கவலை கொள்ளும்படி உடல் நலம் பாதிக்கவில்லை.நான்கு நாட்கள் தொடர்ந்து கடும் கடல் சீற்றம் குறைந்து நாற்காலிகளில் அமர முடிந்தபோது.உணவு கூடத்தில் கடல் கொள்ளையர்கள் தாக்குதல் பற்றிய வர்ணனைகள்ஓடிக்கொண்டிருந்தது.நான்கு தினங்கள் கப்பலை அலைகள் புரட்டி போட்டுகொண்டிருந்ததால் யாருக்கும் கடல் கொள்ளையர்கள் பற்றிய நினைவே இல்லாமலிருந்தது.கடலம்மா சாந்தமானதும் சிலருக்கு கொள்ளையர்களின் அச்சுறுத்தல் நினைவுக்கு வந்தது.

   ஆபத்தான பகுதியை கடக்கும் வரை கடல் சீற்றமும் நீடித்திருக்கலாம் என் காப்டனிடம் சொன்னேன்.சிரித்துக்கொண்டே தலையாட்டினார்.கப்பல் செங்கடலில் நுழைந்தபோது கடும் வெப்பமும் தொடங்கியது.கப்பலின் குளிரூட்டி சரியாக வேலை செய்யாமல் அறையின் வெப்பம் இருபத்தி ஏழு டிகிரிக்கு உயர்ந்தது.குளியலறையில் மாலையில் குளிப்பதற்கான நீரை காலையிலேயே நிறைத்து வைக்க தொடங்கினேன்.சூவுதியை துறைமுகப்பை நெருங்கும்போது கப்பல் ஒருநாள் தாமதமாக வந்து சேர்ந்ததால் வேறு கப்பல் ஒன்று டெர்மினல் சென்று சரக்கு நிறைக்க தொடங்கியிருந்தது.எங்களை முப்பது மைல்கல் தள்ளி நங்கூரம் பாய்ச்சி நிற்க சொன்னார்கள் யான்பு துறைமுக அதிகாரிகள்.அதிகாலை நங்கூரமிட்டு காத்திருந்தோம்.

நாஞ்சில் ஹமீது.

02 july 2023.

sunitashahul@gmail.com

2 comments:

  1. கடல்பயணம் எம்மனோர்க்கு இயலாதென்பதறிந்தேன். (கதிரவன்)

    ReplyDelete
  2. உடன் பயணித்தது போன்ற நிறைவு உங்கள் எழுத்துகள் அண்ணா

    ReplyDelete