Monday 10 July 2023

என்னை அழைக்காதீர்கள்

 

     உறவுகளும்,நட்புகளும்  https://nanjilhameed.blogspot.com/2019/03/blog-post_10.htmlஎன ஒரு பதிவு எழுதியபோது அது முடிவுறவில்லை என எனக்கு தோன்றியது. அதன் இரண்டாம் பாகத்தை எழுதுவேன் என அப்போதே கேட்ட நண்பர்கள் பலரிடம் சொன்னேன்.இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது.

   நண்பர்கள் பலரும் என்னை பார்க்கும்போது வீட்டிற்கு வாங்க என அழைப்பதுண்டு.சிலர் நீங்க வந்தா என் வீட்டிலேயே தங்கிகொள்ளலாம் என அன்பாய் அழைப்பதும் உண்டு. சும்மா பார்மாலிட்டிக்காக என்னை அழைக்காதீர்கள்  அதை உண்மையான அன்பு என நம்பி உங்கள் இல்லங்களில் உண்டு,உறங்கி கதைபேச நான் வந்துவிடுவேன்.

  எந்த தயக்கமும் இல்லாத வெளிப்படையானவன் நான்.சகோதரிகள் சிலர் அழைப்பார்கள் வீட்டுக்கு வாங்க என.உங்கள் கணவன் அல்லது வீட்டில் உள்ளவர்கள் எப்படி என உங்களுக்குத்தான்  நன்றாக தெரியும். நான் அதிகாலையோ,இரவிலோ பையுடன் வீட்டிற்கு வந்து நின்றால் அய்யோ சும்மா ஒரு பேச்சுக்கு வீட்டுக்கு வான்னு கூப்பிட்டேன் அதுக்காக இப்படி வந்துவிடுவதா என உங்களுக்கு சங்கடமான நிலை வேண்டாம்.

    ஆண்,பெண் வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரிடமும் வெளிப்படையாக பேசும் இயல்பால் என்னை அழைப்பவர்களின் இல்லத்திற்கு நான் போய் வந்தபின் கணவன் மனைவி பிரச்னை. போனில் பேசுவதும் அப்படித்தான் எல்லாம் தெரிஞ்சவன் மாதிரி பேசிக்கொண்டே இருப்பேன்.ஏண்டா இவன்ட்ட நம்பர கொடுத்தோம் என சங்கடம் வேண்டாம் உங்களுக்கு.

  விஷயம் என்னவென்றால் எனக்கு யார் உண்மையாக அழைக்கிறார்கள்,யார் சும்மா பேச்சுக்காக  அழைக்கிறார்கள் என கண்டுபிடிக்க தெரியவில்லை.அதுதான் பிரச்னை.

  சிலர் அழைத்து அவர்கள் இருக்கும் ஊருக்கு செல்லும் முன் போனில் அழைத்து வருகிறேன் என சொல்லும்போது நான் இப்ப ஊர்ல இல்ல அடுத்தமுறை வாங்க என சொல்வதை நம்பி மறுமுறை அவ்வூருக்கு செல்லும் வாய்ப்புவரும்போது அழைக்கும்போதும் அதே பதில்.

 இம்முறை கப்பல் ஏறும் முன் என்னை அழைக்கும் ஒருவரின் இல்லம் செல்ல நினைத்தேன்.அவரது மனைவி கடந்த ஏழு ஆண்டுகளாக என்னுடன் நல்ல நட்பு. நான் சுனிதா குழந்தைகளுடன் ஆறு ஆண்டுகளுக்கு முன் அவர்களின் இல்லம் சென்று விருந்துண்டு வந்தோம்.

  கோவைக்கு அருகில் இருக்கும் ஊரில் வசிக்கும் அவர் வருடம் தோறும் நான் கோவை விஷ்ணுபுரம் விழாவுக்கு செல்வதை அறிந்து “ஷாகுல் ஜி வீட்டுக்கு வந்துட்டு போங்க” என அழைப்பார். விஷ்ணுபுரம் விழாவில் ஒரு ஹாய் சொல்லவே நேரம் இருக்கும் எங்கும் செல்ல இயலாது.

அந்த தோழியின் கணவர் என்னை தொடர்ந்து அழைப்பதால்.கடந்த ஏப்ரில் மாதம் கோவை செல்லும்முன்  அவருக்கு அழைத்தேன். “வரும் வாரம் வியாழன் அல்லது ஞாயிறு உங்கள் இல்லத்திற்கு வரமுடியும்,உங்களுக்கு எது வசதி” என கேட்டேன்.

“ ஷாகுல் ஜி நீங்க என் வீட்டுக்கு வருவது சந்தோஷம் உங்கள் விருப்பம்போல் எப்போது வேண்டுமென்றாலும் வாங்க”என அன்போடு அழைத்தார்.

 அதிகாலை ரயில் நிலையத்தில் காத்திருந்து என்னை அவரது காரில் அழைத்து சென்றார்.குளித்து அவருடன் இருந்து காலை உணவு உண்டதும்.படுத்து ரெஸ்ட் எடுங்க,வெளிய எங்கயாவது போணுமின்னா கார எடுத்துட்டு போங்க என கார் சாவியை தந்துவிட்டு,தன்னிடமிருந்த வேறொரு பெரிய காரில் அலுவலகம் சென்றுவிட்டார்.மாலை திரும்பி வந்து உண்டு கதைபேசி இரவை கழித்து மறுநாள் அதிகாலை நான் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து சென்று அனுப்பி வைத்தார்.இப்படி பல ஊர்களில் பாசமாய் உபசரிக்கும் நண்பர்கள் நிறைய இருக்கிறார்கள்.

 கடந்த ஜனவரியில் அமெரிக்க விசாவுக்காக மும்பை செல்ல வேண்டியிருந்தது. 97ஆம் ஆண்டு வேலை தேடி சென்றது முதல் தொடர்ந்து மும்பைக்கு சென்றுகொண்டே இருக்கிறேன்.மும்பையின் சந்து பொந்துகள் அனைத்தையும் நன்கறிவேன்.தங்குமிடமும் எனக்கு உண்டு இப்போதும் மும்பைக்கு வேலை தேடி செல்பவர்களை நான் தங்கியிருந்து வேலை தேடிய அறைக்கு அனுப்பி வைக்கிறேன்.

 புதிதாய் பழகிய நண்பர் ஒருவர் மும்பைக்கு வந்தா என் வீட்டுல தான் தங்கணும் என்றார். சரி என்றேன்.பயண தேதியை சொன்னபோது நான் மட்டும்தான் வீட்டில் இருக்கிறேன் வந்துவிடுங்கள்  என அன்பாய் அழைத்தார்.

 புறப்படும் இரு தினங்களுக்கு முன் அழைத்து குறிப்பிட்ட அந்த தேதியில் நான் வெளியூர் செல்கிறேன்.ஒரு நாள் மட்டும் தங்கிவிட்டு,மீதி நாட்களில் தங்க வேறு இடம் பார்த்துகொள்ளுங்கள் என்றார்.அலுவலக வேலையாக நீங்கள் தானே வெளியூர் செல்கீறீர்கள் வீடு அங்க தானே இருக்கும் சாவியை தந்து விட்டு போங்க என்றேன்.அது முடியாது நான் இல்லாத போது அன்னிய ஆளை வீட்டில் தங்க வைக்க முடியாது என்றார்.அவரது அலுவலகம் அந்த வீட்டிற்கு வாடகை கொடுக்கிறது.

  சகோதரா என அன்பாய் அழைத்தவருக்கு இப்போது அந்நியன் ஆகி விட்டேன்.

   இதில் யார் உண்மையாகவே அழைப்பது,யார் போலியாக அழைக்கிறார் என எனக்கு கண்டுபிடிக்க இயலவில்லை.எல்லோரையும் எளிதில் நம்பி விடுகிறேன்.

  அதனால் அன்னியர் உங்கள் வீட்டிற்கு,உங்கள் இடங்களுக்கு வருவதில் பிரச்னை இருப்பது உங்களுக்கு மட்டுமே தெரியும் அப்படியிருக்கையில் என்னை போன்றவர்களை வீட்டுக்கு வாங்க என அழைக்காதீர்கள்.இதனால் உண்மையாகவே அழைப்பவர்களையும் அது உண்மையா பொய்யா தெரியாமல் நான் முழிக்க வேண்டியுள்ளது.

  ஆசிரியர் ஜெயமோகனின் வாசகன் ஆன பின் உலகம் முழுவதும் தங்க இடமும்,உண்ண உணவும் தந்து உபசரிக்க உண்மையான அன்பால் அழைக்கும் நண்பர்கள் இப்போது நிறைய இருக்கிறார்கள்.

 அதனால் சும்மா பேச்சுக்காக,பார்க்கும்போது போலியாய் அழைப்பவர்கள் என்னை அழைக்காதீர்கள்.என்னால் போலிகளை அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை.

 சுனிதா சொல்வாள் “யாரு கூப்பிட்டாலும் அந்த வீட்டு அடுக்கள வர பெயிருவாரு” என .

நாஞ்சில் ஹமீது .

10 july 2023.


1 comment: