Sunday 2 July 2023

ஜப்பானுக்கு வந்தேன் தொடர்ச்சி

 என் எஸ் பிரண்டியர் நாட்குறிப்புகள் 6

   

 

   ஹிட்டாச்சியில் எட்டாம் தேதி மதியம் சரக்கு கொடுப்பது நிறைவடைந்தது.ஆய்வாளர் ஏழாம்தேதி மதியம் வந்துவிட்டு இரவு புறப்பட்டு சென்றார். எட்டாம் தேதி மாலை ஐந்துமணிக்கு கப்பல் ஹிட்டாச்சியிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை ஐந்துமணிக்கு நெகுஷி(NEGESHI) சென்றடைந்தோம். 



 எட்டரை மணிக்கு பைலட் வரும்போது பேய் காற்றுடன் கடும்மழை பெய்துகொண்டிருந்தது.மழை சட்டைகளை அணிந்துகொண்டு பார்வர்ட் மற்றும் ஆப்டில் பணியாளர்கள் சென்றனர். ஹிட்டாச்சியில் புதிய காப்டனும்,காஸ் இஞ்சினியரும் வந்திருந்தனர்.

  கப்பல் கரையை நெருங்கும்போது காற்றும் மழையும் ஓய்ந்திருந்தது. கப்பலின் நடுப்பகுதியில் குழாய் பொருத்தப்படும் இடத்தில் அடையாள கொடியை கட்டிவைத்திருந்தோம்.சரக்கு குழாய் பொருந்தும் இடம் டெர்மினலின் குழாய்க்கு நேராக வந்ததை சச்சின் உறுதி செய்ததும்.முன்பும் பின்பும் எட்டு கயிறுகள் வீதம் கட்டப்பட்டு கப்பல் நிறுத்தபட்டபின் பைலட்இறங்கி சென்றார்.

   ஜப்பானிய கார்கோ மாஸ்டர் கப்பலின் ESD ( EMERGENCGY SHUTDOWN )சிஸ்டத்தை  சோதித்து,வால்வுகள் மூடும் நேரம் 22 to 26 வினாடிகளுக்குள் இருப்பதை உறுதி செய்தபின் டெர்மினலின் குழாய் கப்பலின் குழாயுடன் ஜப்பானிய பணியாளர்களால் பொருத்தப்பட்டது.

   எளிதில் தீ பிடித்துகொள்ளும் திரவ வாயு என்பதால் உச்சகட்ட  பாதுகாப்பு முறைமைகள் பின்பற்றபடுகிறது.அதையும் மீறி தீ பிடித்தால் ESD இயக்கப்ட்டு திரவாயு கப்பலிலிருந்து டெர்மினலுக்கு செல்லும் சரக்கு குழாய்களில் உள்ள வால்வுகள் மூடப்பட்டு.டெர்மினலின் குழாய் கப்பலின் குழாயிலிருந்து தானியங்கி முறையில் விடுவிக்கப்படும். கப்பலின் முன்,பின் பகுதியில் (fire wire) கடலிலிருந்து ஒரு மீட்டர் மேலே இறக்கப்பட்டு தயார் நிலையிலுள்ள இரும்பு வயர் மூலம் கப்பலை கடலுக்குள் இழுத்து செல்லும் அதிக விசையுடன் கூடிய படகு ஒன்றும் கப்பலுக்கருகில் தயாராக நின்றுகொண்டிருக்கும்.


ஜப்பான் நெகுஷி டெர்மினல்


என் எஸ் யுனைடெட் நிறுவனத்திலிருந்து நேற்று கப்பலுக்கு வந்த இருவருடன் மேலும் ஒருவர் இன்றும் வந்தார்.புதிதாக மூன்று ஜப்பானிய பணியாளர்களும் பயிற்சிக்காக பணியில் இணைந்தனர். 

  இங்கு மீதமிருந்த இருபத்தி ஆறாயிரம் டன் ப்ரோப்பேன் குழாய்கள் வழியாக சென்று கொண்டிருந்தது.புதிதாக வந்த காஸ் இஞ்சினியர் கிறிஸ்டோபர் ஸ்ரீரங்கத்தை சார்ந்தவர் அவரும் காலையில் பணிக்கு வந்திருந்தார். “ஸ்ரீரங்கம் கோயிலுக்கு போயிருக்கியளா தம்பி” எனக்கேட்டேன். “ஆம்” என்றார்.

 26ஆண்டுகளுக்கு முன்பு பெல் நிறுவனத்தில் பயிற்சியில் இருந்ததை சொல்லி அதனாலேயே  திருச்சிகாரங்க  எனக்கு நெருக்கமானவங்க ஆகி விடுகிறார்கள் என்றேன்.

   இங்கிருந்து அடுத்து செல்லும் துறைமுகம் இன்னும் உறுதியாகவில்லை.நாங்கள் மீண்டும் பனாமா வழியாக அமெரிக்கா செல்வதையே விரும்பினோம். ஒரு மாதம் நீண்ட பயணம்,பயண பாதையில் மெல்லிய குளிரே இருக்கும்,இம்முறை அமெரிக்கா சென்றால் ஆய்வுகள் எதுவும் இருக்க வாய்ப்பில்லாததால் கப்பல் காரர்களின் மனம் அதை விரும்ப காரணமாக இருந்தது.

 சவுதி அரேபியாவின் ரஸ்தநூரா மற்றும் யான்பு துறைமுகங்களுக்கு பயண நாட்கள் மற்றும் செலவாகும் எண்ணெய் எவ்வளவு என கேட்டு சரக்கை கையாளும் நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியது.

யான்பு செல்வதாக இருந்தால் சோமாலிய கொள்ளையர்கள் நடமாடும் அதிக ஆபத்துள்ள பாதையில் பயணிக்க வேண்டியிருப்பதோடு,வளைகுடாவில் கோடையின் உச்சம் இப்போது ஆளை கொல்லும் வெயில் அங்கே.2020 டிசம்பரில் யான்புவுக்கு செல்லும்போது எங்கள் கப்பலை தாக்கி கடல் கொள்ளையர்கள் ஏற முயற்சித்ததும்,2016 ஜூலையில் கத்தாரில்   அடித்த 49 டிகிரி வெப்பத்தில் இயந்திர 65 டிகிரிக்கு உயர்ந்து மயங்கிவிழுந்த சாங்கும் என் நினைவில் எழுந்ததால்.நானும் கப்பல் மீண்டும் அமெரிக்கா செல்ல வேண்டுமென்றே விரும்பினேன்.

 பத்தாம் தேதி மாலை சரக்கு தொட்டிகள் முழுவதும் காலியான பின் ஆவணங்கள் பரிமாறப்பட்டபின் ஜப்பானியர்கள் கப்பலுக்குள் வந்து குழாய்களை கழற்றி பாதுகாப்பாக டெர்மினலுக்குள் கொண்டு சென்றனர்.

 ஊருக்கு செல்லும் காப்டன்,காஸ் இஞ்சினியர்,முதன்மை இஞ்சினியர் கப்பல் முகவருடன் விடைபெற்றனர்.புதிதாய் வந்த முதன்மை இஞ்சினியரை இரவுணவின்போது சந்தித்தபோது “வணக்கம்”என்றேன் .

“நீங்களுமா”? 

 “ஆமா கன்னியாமரி ஸார் எனக்கு, உங்க ஊருக்கு நிறைய நேரம் வந்திருக்கேன்,அரபிந்தோ ஆசிரமம்,ஆரோவில் மற்றும் பாண்டிசேரி மாரிடைம் அகடமில கோர்ஸ் க்கு” என்றேன்.

 “பர்ஸ்ட் டைம் காஸ் பிட்டரா” 

“ஆமா”

 “கம்பனிக்கு புதுசா” எனக்கேட்டார்.

“2006 ல் கம்பெனில சேந்தேன் 2016 முதல் காஸ் கப்பலில் இருக்கேன்” என்றேன்.

“ஓ ரொம்ப வருசமா இருக்கீங்க,உங்க பேரே பாத்ததே இல்ல”என சிரித்து கைகுலுக்கினார் பாண்டியின் மஞ்சுநாதன்.

  இரவு எட்டு மணிக்கு பைலட் வந்தார்.போர்ட்சைடின் முன்பும் பின்பும் வந்த இரு விசைமிகுந்த படகுகள் (tug boats)தந்த கயிறுகளை கப்பலில் இணைத்தபின் கரையிலிருந்த கயிறுகள் விடுவிக்கப்பட்டபின் டக் போட்டுகள் கப்பலை இழுத்து திருப்பி கடலை நோக்கி உந்தி தள்ளியபின் தன்னை விடுவித்துகொண்டு சென்றது.

 மூன்று மைல்கல் விலகி பாதுகாப்பாக நங்கூரம் பாய்ச்சியபின் பைலட் ஏணி வழியாக இறங்கி படகில் ஏறிசென்றார்.

   அடுத்து செல்லும் துறைமுகம் உறுதியாகததால் இரவில் கப்பலை இங்கு நிறுத்த சொல்லியிருந்தார்கள்.காலை எட்டு மணிக்கு கப்பலுக்கு எண்ணெய் நிரப்புங்கள் பின்னர் சொல்கிறோம் எனும் தகவல் வந்தது.

  அமெரிக்கா போக வேண்டும் எனும் எண்ணத்திலேயே தூங்கி விழித்தபோது எண்ணெய் நிரப்பிக்கொண்டு சிங்கப்பூரை நோக்கி செல்லுங்கள் எனும் உத்தரவு கிடைத்தது. அறுநூற்றி நாற்பது மெட்ரிக் டன் எரி எண்ணையும் அத்தியாவசிய உணவு பொருட்களும்,கொஞ்சம் உதிரி பாகங்களும் ஏற்றி விட்டு ஜப்பானின் நெகுஷியிலிருந்து  ஞாயிறு பின் மதியம் புறப்பட்டோம்.

  இரு துறைமுகங்கள் மற்றும் ஞாயிறும் அனைவருக்கும் கடும் பணியாக இருந்ததால் திங்கள்கிழமையை ஞாயிறாக கருதி ஓய்வு எடுத்துகொள்ள காப்டன் சொன்னார்.

   போசன் யாதவ் சொன்னார் “ஷாகுல் ஜி சிங்கப்பூர் போகுதுன்னா கல்ப் போறது பக்கா,இடையில் சென் குப்தா “பேன் சூத் கர்மி போகுத் மிலேகா நஹி ஜானா சாஹியே” என்றார். (கெட்டவார்த்தைய சொல்லிப்பின் ரொம்ப சூடு இப்ப,அங்க போகாம இருக்கணும்)

சிங்கப்பூருக்கான பயண பாதையில் தென்சீன கடலை தொட்டபின் முதல் நாள் கடுமையான கடல் சீற்றம் இருந்ததால் கப்பல் ரோல்லிங்கில் ஆடிக்கொண்டே சென்றது.அன்றிரவே கடலம்மா தணிந்தாலும் அவ்வப்போது பேய் மழையும்,இருள் சூழ்ந்து,மேக கூட்டங்கள் கப்பலை சுற்றிக்கொண்டதால் நாங்கள் வந்து கொண்டிருக்கறோம் வழிவிடு,வழிவிடு என ஒலியை காற்று ஒலிப்பானால் ஒலிஎழுப்பிக்கொண்டே பயணித்தோம்.

  பெருமழை சில நாட்கள் தொடர்ந்தது.

நாஞ்சில் ஹமீது.

14 june 2023

sunitashahul@gmail.com

No comments:

Post a Comment